செவ்வாய், 31 மார்ச், 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை- பூந்தூறல் - துரை செல்வராஜூ 



பூந்தூறல்


துரை செல்வராஜூ 

========


இன்னும் மழை விட்டபாடில்லை...

'' சனிக்கிழமை புடிச்சது .. சட்டுன்னு விடாது.. ந்னு சொல்லுவாங்க!...
இன்னிக்கு திங்கக்கிழமை... மழை நிக்கிற வழியா இல்லை...
இப்படி பொத்துக்கிட்டு ஊத்துனா ஏழை பாழைங்க என்னா செய்வாங்க!... ''

- என்று யோசித்தவாறு பழைய போர்வைக்குள் முடங்கிக் கிடந்த வேம்பையன் சட்டென எழுந்தான்...

வாசல் பக்கமாக உட்கார்ந்து முருங்கைக் கீரையை ஆய்ந்து கொண்டிருந்த ராசாத்தி நிமிர்ந்து பார்த்தாள்...

'' தொரை... முழிச்சாச்சா!.. போங்க.... போயி வாயக் கொப்புளிச்சுட்டு வாங்க!..  வரகாப்பி போட்டுத் தாரேன்... "

'' இந்நேரத்தில ஏது இது முருங்கக் கீரை?... ''

'' கொல்லையில இருந்த முருங்க மரம் முறிஞ்சி விழுந்திடுச்சாம்...
தனம் கொண்டாந்து கீரை கொடுத்துட்டுப் போறா!.. ''

'' அப்போ இன்னைக்கு இந்தத் தெருவுல எல்லார் வீட்டிலயும் முருங்கக் கீர குழம்பு..ன்னு சொல்லு!... ''

கட..கட... என்று சிரித்தான் வேம்பையன்...

'' அப்பனாட்டமே சிரிக்கிறான்.. பாரு!... '' - மனதிற்குள் எண்ணம் ஓடியது...

அவனுக்கும் இருவத்து மூணு  வயசாச்சு... மாடு மாதிரி உழைக்கிறான்...
இன்னிக்கு மூ
ணு நாளாத்தான் வீட்டுக்குள்ள முடங்கிட்டான்..

அதுவும் இந்த மழையாலத் தான்!...   இல்லேன்னா அவம்பாட்டுக்கு சாமிநாத கொத்தனாரோட வேலைக்குப் போயிருப்பான்!...

என்னமோ அந்த மனுசனுக்கு இந்தப் பயலைப் புடிச்சிப் போச்சு...   கரணையையும் மட்டப் பலகையும் இவன் கையில கொடுத்துட்டு
வேலையப் பாருடா..ன்னுட்டார்...

சுத்து வட்டாரத்துல பெரிய பேரு சாமிநாத கொத்தனாருக்கு..  அவரு கூட நல்ல முத்து ஆசாரி... துணைக்கு கொல்லு பட்டறை கலிய மூர்த்தி..

இவுங்க மூ
ணு பேரும் சேந்து ஒரு வீட்டுக்கு மனை முகூர்த்தம் போட்டா வேலை நின்னு பேசும்... அரமனை மாதிரி வீடு... நூறு வருசத்துக்கு அசைக்க முடியாது.... ம்பாங்க!...

அப்படியாக்கொண்ட ஆளுங்க கிட்ட இவன் கையாளு ஆயிட்டான்...னா அது பெரிய விசயந்தான்!...

'' யம்மா!... ''

'' என்னடா?... ''

கொண்டா வர காப்பிய!... - பல் துலக்கி முகம் துடைத்தபடி வந்தான்..

'' இந்தா... சக்கர வள்ளிக் கிழங்கு அவிச்சிருக்கேன்... இத ரெண்டு வாய்
தின்னுட்டு அப்பறமா வர காப்பியக் குடி!... '' - என்றாள் ராசாத்தி...

'' ஏம்மா?.. மழை எப்பம்மா விடும்?... ''

'' ஏன்டா?... ''

'' அந்தப் புள்ளையப் போய் பார்த்துட்டு வரணும்!.. ''

'' எந்தப் புள்ளைடா?.. ''

'' அதான் கும்மோணம் மார்க்கெட்டுல மூட்டை எடுக்குறார்....ல அவரோட மக... பவுனு!.. ''

ஒரு நிமிடம் ராசாத்தியின் புருவங்கள் சுருங்கி விரிந்தன...

'' நீ ஏன்டா அந்தப் புள்ளைய பார்க்கணும்?... ''

'' பாவம்...மா.. அந்தப் புள்ளை... அன்னைக்கு சாந்துச் சட்டி எடுத்துக்கிட்டு சாரத்தில வர்றப்ப சறுக்கி விழுந்துட்டா!... ''

'' அடடா... இங்க தான் இருக்குறோம்... நமக்கு சேதி தெரியலை பாரு!... ''
- ராசாத்தி வருத்தப்பட்டாள்...

'' கணுக்கால்...ல நரம்பு பிசகிடுச்சாம்... என்ன ஆச்சோ...தெரியலை!... ''

'' பாவம் ஏழைப்பட்ட சனங்க!... ''

'' அது இருக்கட்டும்... நானுங் கேள்விப்பட்டேன்...  அந்த விஷயம் முடிவே ஆயிடிச்சாமா?... ''

'' நீ என்னம்மா?... ஊருக்கே தெரிஞ்ச விசயம் உனக்கு தெரியலை...ங்கறே!... ''

'' இல்லடா... ஒருநேரம் அவன் மனசு மாறி வந்திருப்பானோ..ன்னு தான்.... ''

'' அதெல்லாம் கை மீறிப் போச்சு.. பஞ்சாயத்துல வச்சி முள்ளு முறிச்சுப் போட்டுட்டான்!.... ''

'' என்னமோ அந்தப் புள்ளையோட தலையெழுத்து...  இந்த மாதிரி அநியாயத்தை எல்லாம் அந்தப் படைவெட்டி மாரி கேக்க மாட்டேங்குறாளே!...''

'' சரி.. சரி.. வாம்மா... மழை விட்ட மாதிரி இருக்கு...  சீக்கிரமா போய்ட்டு வந்துடுவோம்!... ''

'' நா... எதுக்குடா?.. ''

'' நல்லாருக்கே.. கதை.... பொம்பளைப் புள்ளை இருக்குற வீட்டுக்கு
நான் மட்டும் போறதா?... ''

'' ஏன் டா உங்கூட வேலை செய்யிற சித்தாளு தானேடா!... ''

'' அதெல்லாம் வேற... நீ கிளம்பு...  ஆமா.. நேத்து வைச்சியே மீன் கொழம்பு அது இருக்குதா?... ''

'' இருக்கே!... ''

'' அதை எடுத்துக்கிட்டு வா!. அதுங்க ஊட்டுல சமைச்சதுங்களோ என்னமோ?.. ''

'' நான் அதை மத்தியானத்துக்கு... ன்னுல்ல வைச்சிருக்கேன்...''

'' இந்தாத் தான் முருங்கக் கீரை இருக்குல்ல... அது போதும்!... ''

'' அடேய்... அரி ஓம்.. ன்னு ஒருத்தங்க வூட்டுக்குப் போறோம்..  கவுச்சியெல்லாம் கொண்டு போகக் கூடாது...டா!... ''

'' அப்போ முதல்ல.. இந்த வள்ளிக் கிழங்கைக் கொடு..  அப்புறமா மீன் குழம்பைக் கொடு!... ''

துடியாய் நின்றான் வேம்பையன்...  அவனுடைய நேரம் அடித்து ஊற்றிக் கொண்டிருந்த மழையும் சற்று ஓய்ந்திருந்தது..

இருந்தாலும் அந்த பழைய சாக்கை கூம்பாக மடித்து தலையில் போட்டுக் கொண்டான்...

மிச்சமிருந்த சக்கரை வள்ளிக் கிழங்கை ரெண்டையும் மேல் துண்டில் முடிந்து கொண்டான்..

'' யம்மா நீ.. அந்த ஓலை முட்டானை தலையில கவுத்துக்கோ!... ''

தாயும் மகனும் கதவை இழுத்துச் சாத்தி விட்டு புறப்பட்டார்கள்... ராசாத்தியின் கையில் பித்தளை தூக்கு வாளி.. அதற்குள் மீன் குழம்பு...

இப்படியே இலுப்பைத் தோப்புக்குள் நுழைஞ்சு அஞ்சு நிமிசம் நடந்தால்
பனையடிக் கொல்லை.. அந்தக் கொல்லையில் தான் அந்த ஏழைப் பெண்ணின் வீடு...

மூனு பக்கமும் நாலடிச் சுவர்... வாசல் அடைப்புக்கு மூங்கில் தட்டி...
முட்டுக் கொடுத்த கூரை... .. வாசலை ஒட்டி ஒரு அடி உசரத்துக்கு மேடை
திண்ணை மாதிரி...

பெரிய அளவிலான குடிசை... அவ்வளவு தான்...




மூனு மாசத்து முன்னால தான் வந்தாள்...

அவளோட கஷ்டம் ஊருக்கே தெரியும்...  சாமிநாத கொத்தனார் தான் அழைச்சுக்கிட்டு வந்து விட்டார்...

மாநிறமா இருப்பா:.. நல்ல சுருள்முடி.. எடுப்பான முகம்...  ஆனாலும் கண்ணுக்குள்ள தீராத சோகம்...

முதல் நாள் கருப்பாயிக் கிட்ட சொல்லி விட்டான்...

''தொட்டியில தண்ணி எடுத்து ஊத்தி செங்கல் எல்லாத்தையும் நல்லா நனைச்சு வைக்கணும்....  அதான் அந்தப் பொண்ணுக்கு வேலை... ன்னு...

அதுக்கப்புறம் அவளே எல்லாத்தையும் புரிஞ்சு கிட்டு செஞ்சா...

அப்படி இப்படி அசந்த நேரத்துல கூட  யாரோடயும் பேசாம தனியாத் தான் உக்காந்திருப்பா...

பத்து மணிக்கு வடையும் டீயும் வரும்... அப்பவும் சரி...  உச்சிப் பொழுதுக்கு கஞ்சி குடிக்கிறப்பவும் சரி...  சிவனே..ன்னு தனியாத் தான் உக்காந்து இருப்பா..  அது ஊர் வாய்ல விழாம தப்பிக்கிறதுக்காகக் கூட இருக்கலாம்...

கூட வேலை செய்யிற பொம்பளை ஆளுங்க எடக்கு மடக்கா ஏதாவது பேசி சிரிப்பைக் கிளப்பி விட்டாக் கூட அவ முகத்துல இருந்து சிரிப்பு வராது...




வேம்பையன் மேல சாரத்துல நின்னுக்கிட்டு செங்கல் வாங்குவான்...
கீழே இருந்து சித்தாளுங்க கல்லு வீசுவாங்க.... ஒரு கல்மிஷம் இருக்காது..

ஆனா இந்தப் புள்ளையப் பார்க்குறப்ப மட்டும் மனசு தடுமாறும்...

பொழுது எறங்கறப்போ எல்லாரும் போயி ஓட்டை வாய்க்கால்..ல
குளிச்சிட்டு வந்ததும் காய்ச்சின நல்லெண்ணெய் கொடுப்பாங்க...
கை காலெல்லாம் பூசிக்கிறதுக்கு..

அப்போ தான் சுண்ணாம்பு காரம் விட்டுப் போகும்...

அதைக் கூட சிரட்டையில வாங்கிக்கிட்டு ஒரு ஓரமாப் போய் கை கால்..
மேலெல்லாம் தடவிக்குவா...

இப்படியாகப்பட்ட புள்ளைக்குத் தான் சாமி கஷ்டத்தைக் கொடுத்துருக்கு...ன்னா என்னத்தைச் சொல்றது?..

'' யம்மா.. அந்த வீடுதான்!.. ''

தளக்... தளக்... - என்று எங்கு பார்த்தாலும் நீரும் சேறும்...

'' அந்தா தான் அவங்க அம்மா நிக்கிறாங்க...ல்ல!... ''

வேம்பையன் அடையாளம் காட்டினான்...

'' நல்லா இருக்காளா உம்மக!... சாரத்துல இருந்து விழுந்துட்டாளாமே!... ''

'' வாங்க.. வாங்க!... ஏதோ இருக்குறா....  ஆவூருக்குப் போய் சுளுக்கு வழிச்சு விட்டுருக்கு!..   வைத்தியரு எண்ணைத் துணி சுத்தி விட்டுருக்காரு...  இன்னும் வீக்கம் தான் வடியலை... ''

'' வடியும்.. வடியும்... கவலைப் படாதீங்க... ''

அதற்குள் மறுபடியும் மழைத் தூறல் ஆரம்பித்தது....

'' வாங்க ஊட்டுக்குள்ளே... மழை வந்துடுச்சு...''

''இருக்கட்டும்...'' - என்றபடி அந்தக் குடிசையின் உள்ளே நுழைந்த ராசாத்தி ...
வெளியே நின்று கொண்டிருந்த வேம்பையனைப் பார்த்து

'' நீயும் உள்ளே வாடா!... '' - என்றாள்...

'' நீ பார்த்து பேசிட்டு வாம்மா!... ''

'' ஏன் டா... அந்தப் புள்ளயப் பார்க்கணும்.. ந்னு குதியா குதிச்சே...  இங்க வந்து ஊட்டுக்குள்ள வர மாட்டேங்கறே!..  வா... வந்து ரெண்டு வார்த்தை கேளு.. நல்லாருக்கியா..ந்னு!... ''

சமயம் பார்த்து மழையும் வலுத்தது.. வேறு வழியின்றி அந்தக் குடிசையின் உள்ளே நுழைந்தான் வேம்பையன்..

குடிசை முழுதும் ஓதம் காத்துக் கிடந்தது...

வேட்டியைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்த பவுனு மெல்ல எழுந்து உட்கார்ந்தாள்...

அந்தத் தலையணையை அப்புறமாகத் தள்ளி வைத்தாள்...

'' இரும்மா.. இரு... '' - என்றபடி ராசாத்தி அவள் அருகே அமர்ந்து ஆதரவாக தோளைத் தொட்டாள்...

வேலைக்கு வரும் போது சேலை கட்டி மேலுக்கு பழைய சட்டை ஒன்றை போட்டுக் கொண்டு வருபவள் -

இப்போது பாவாடை தாவணியில் இருக்கிறாள்... பாவாடை தாவணியில் இன்னும் அழகு கொஞ்சியது...

அப்படியே அள்ளிக் கொள்ளலாம்.. போலிருந்தது வேம்பையனுக்கு...

'' ரொம்பவா வீங்கியிருக்கு?.. '' - ஆதரவாக ராசத்தி கேட்டாள்...

'' இல்லே!.. '' - என்றபடி பாவாடையை மெல்ல உயர்த்தி கணுக்காலைக் காட்டினாள்...  கொஞ்சம் வீங்கித் தான் இருந்தது...

'' படைவெட்டி மாரியம்மனுக்கு நேந்துக்கிட்டு வீக்கத்துல மஞ்சப் பத்து
போடுங்க...ஒ ண்ணேகால் ரூவா முடிஞ்சு வை..  எல்லாம் அவ சரியாக்குவா!... ''

அவளை நேருக்கு நேர் பார்க்க இயலாமல் சங்கடப்பட்டான் வேம்பையன்...

'' வந்தது வந்தீங்க!.. ஒரு வாய் கஞ்சி குடிங்களேன்!... ''  - என்றாள் பவுனின் அம்மா...

'' குறுணைக் கஞ்சி... இப்போ தான் இறக்குனேன்...  கூதலுக்கு இதமா இருக்கும்... ''

'' எடுத்து வந்து கொடும்மா!... '' - பவுனின் விழிகள் பேசின...

புன்னகை மாறாத முகத்துடன் பவுனின் அம்மா ரெண்டு அலுமினிய குவளைகளில் கஞ்சியை ஊற்றிக் கொண்டு வர - தான் கொண்டு வந்திருந்த வள்ளிக் கிழங்குகளை அவளிடம் கொடுத்தாள் ராசாத்தி...

'' ரொம்பவும் மெனக்கெட்டு இருக்கீங்க.. சாதி சனமாட்டம்!... ''

'' மனுசனுக்கு மனுசன் ஒத்தாசை தானே!... '' - என்றபடி தூக்கு வாளியையும் கொடுத்தாள்...

'' இதென்ன!?.... '' - ஆச்சர்யம் தாளமுடியவில்லை - பவுனின் அம்மாவுக்கு..
இப்படியும் அன்பு காட்டுகிறார்களே என்று....

'' மீனு...ன்னா  பவுனுக்கு உசிராமே... வேம்பு சொன்னான்...  போன வாரம் ஓட்டை வாய்க்கால்.. ல மீன் புடிச்சு கொடுத்தாளாமே பவுனு... நன்றி மறக்கலாமா!... ''

முழங்காலில் முகம் பதித்திருந்த பவுனு சிரித்துக் கொண்டாள்...

'' என்ன செய்யிறது... பேரு மாதிரி மனசும் பவுனு தான்...  தலையெழுத்து...ல்ல தகரமாப் போச்சு... ''

'' ஒரு கடுவன் கிட்டே எம்பவுனைக் கொடுத்துட்டோம்..  என்னென்ன ஆக்கினை எல்லாம் பண்ணியிருக்கான்... பாவி... ''

'' எங்களுக்குத் தெரியாமப் போச்சு!...  குடிகாரப் பய... இன்னொரு தொடுப்பும் இருக்குதாம்...  வயசுப் பையன் இருக்குறாங்க... மாரியாத்தா மன்னிக்கணும்...  வெறி புடிச்ச பய மாரெல்லாம் கீறி வச்சிருக்கான்!... ''

'' வருத்தப்படாதீங்க... மாரியாயி அவனை சும்மா விடமாட்டா!... ''

'' அவனுக்கும் நமக்கும் முள்ளு முறிச்சப்புறம் அவன் எப்படிப்போனா என்ன!.. ''

'' என்னமோ எங்க ஊட்டு மனுசன் இந்த வயசிலயும் மூட்டை தூக்கிப் போட்டுட்டு நாலு காசு கொண்டு வர்றாரு... அத வச்சி பொழப்பு ஓடுது... ''

'' பவுனுக்கு அடிபட்டதும் கொத்தனார் ஐயா தான் வந்து அம்பது ரூபா செலவுக்குக் கொடுத்துட்டுப் போனாரு... ''

'' மனுசங்க ரேகை எத்தனை நாளைக்கு?..  எப்போ நெளியும்.. எப்போ வளையும் ..ன்னு யார் சொல்ல முடியும்?... ''

'' கூட ஒரு பொறப்பு இல்லாம ஒத்தப் பூவா அவளும் பூத்துட்டா!..  எத்தனை நாளைக்கு நாங்க இப்பிடியே இருக்க முடியும்!...
யாராவது ஒரு நல்ல சீவன் வந்து இவள ஏந்திக்காதா...ன்னு இருக்கு...
இவ - வாயத் தெறந்து ஒன்னும் சொல்ல மாட்டேங்குறா!... ''

கண்ணைத் துடைத்துக் கொண்டாள் பவுனைப் பெற்றவள்...

'' நீங்களே இப்படி கண்ணு கலங்குனா..  பவுனுக்கு யாரு வந்து ஆறுதல் சொல்றது?..  கவலைப் படாதீங்க... நல்ல நேரம் தன்னால வரும்...
சரி.. மழை விட்ட மாதிரி இருக்கு நாங்க புறப்படுறோம்...  பவுனு தைரியமா இருக்கணும்.. என்ன!... ''

'' உடம்பைப் பார்த்துக்க பவுனு!...'' - என்றபடி எழுந்தான் வேம்பையன்...

ஏறெடுத்து நோக்கி - '' ம்!.. '' - என்றாள் பவுனு..

பூந்தூறலுடன் இளங்காற்று விளையாடிக் கொண்டிருக்க அவர்களையும் அறியாமல் பவுனு மனதில் ஆசையை விதைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார்கள் - தாயும் மகனும்...

'' நல்ல புள்ளையாத் தான் இருக்கிறா... என்னமோ தலையெழுத்து..
காவேரியில முங்கிக் குளிச்சா கர்மம் எல்லாம் தொலைஞ்சிடாதா!..
ஏதோ கொரங்குக் கிட்ட இருந்து தப்பிச்சாளே.. அதுவரைக்கும் சந்தோசம்...  எம் மனசுக்குப் புடிச்சிருக்கு... ஆனா இந்தப் பய என்ன சொல்றானோ?... ''

ராசாத்தி இப்படி நினைத்த வேளையில் - வேம்பையன் - தன் மனதில் இப்படி எண்ணிக் கொண்டிருந்தான்...

'' அம்மாவை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேணும்..  கொத்தனார் ஐயாக்கிட்ட நல்ல நாள் பார்க்கச் சொல்லணும்... ''

'' நல்லதா ஒரு பாய்... ரெண்டு தலகாணி வாங்கணும்... ரெண்டு பேரும் போர்த்திக்கிற மாதிரி ஒரு போர்வை வாங்கணும்...  பவுனுக்கு பாவாடை தாவணியோட அரைக்கை சட்டையும் வாங்கணும்.. ''.

'' மறக்காம தொட்டிக் கயிறும் விளையாட்டு பொம்மையும் வாங்கணும்!... ''

கலியாணம் முடிஞ்ச கையோட படைவெட்டி மாரியம்மனுக்கு பூசை வச்சிடணும்..''



ஃஃஃ

97 கருத்துகள்:

  1. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்...

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. இன்று எனது கதையைப் பதிவு செய்த ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் அன்பின் நல்வரவு...

    அன்பின் மழை தூறிக் கொண்டிருக்கிறது..
    ஆனந்தமாய் நனைய வாருங்கள்...

    பதிலளிநீக்கு
  4. கதைக் களத்தினை சிறப்பிப்பதற்கு
    இரண்டு படங்களை இணைத்த ஸ்ரீராம் அவர்களது அன்பினுக்கு மகிழ்ச்சி...

    வேம்பையனும் பவுனும் நன்றி கூறுகிறார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இரண்டு படங்களை இணைத்த ஸ்ரீராம் //

      ஓ படங்கள் இணைச்சது ஸ்ரீராமோ?:)) இணைச்சவரைத்தான் தேடிக் கொண்டு இருந்தேன்:))

      நீக்கு
  5. காலை வணக்கம் அனைவருக்கும். மிக அருமையான கதை. துரை செல்வராஜு சாருக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் நெல்லை..   வாங்க...

      நீக்கு
    2. அன்பின் நெல்லை அவர்களுக்கு நல்வரவு...

      இளஞ்சாரல் நேரத்தில் அருந்தும் தேநீர் போல தங்களது கருத்து..

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  6. எளிய மனிதர்களின் வாழ்க்கை... ஒரே சாதி போலத் தெரியாவிட்டாலும் திருமணம் நடந்துவிடும் என்ற நம்பிக்கையோடே கதை முடிகிறது. கிராமத்துச் சூழலில் கதையைப் படித்த திருப்தி.

    குடிசை முழுதும் ஓதம் காத்துக் கிடந்தது - தட்டச்சுப் பிழையா? புரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓதம் என்றால் ஈரம்....

      மழைக் காலத்தில் மண் குடிசைகளுக்குள் தரையின் ஈரம் இப்படிச் சொல்லப்படும்...

      ஓட்டு வீடுகளில் சுவற்றில் ஈரம் கசியும்...

      தஞ்சை வட்டாரத்தில் இப்படியான ஈரக் கசிவு - ஓதம் எனப்படும்...

      வாழைக் கன்றுகளின் வேர்ப் பகுதியைச் சுற்றியுள்ள ஈரமும் ஓதம் எனப்படும்...

      திருவையாற்றை அடுத்துள்ள
      திருச்சோற்றுத்துறை இறைவனுக்கு
      ஓதவனேஸ்வரர் என்று திருப்பெயர்...

      நீக்கு
    2. அன்பு முரளிமா. ஓதம் என்றால் தரை ,மழையினால்
      ஈரத்துடன் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

      நீக்கு
    3. நன்றி. இப்போதுதான் ஓதம் என்பதற்கு குளிர் என்றொரு அர்த்தம் இருப்பதை அறிகிறேன்.

      பக்தி இலக்கியத்தில்,

      "ஓதக் கடலின் ஒளி முத்தின் ஆரமும்" என்று வரும். அதில் அலையடிக்கின்ற (அதனால் பெரிதாகிய) பெரிய கடலின் என்றுதான் 'ஓதக் கடலின்' என்பதற்கு அர்த்தமாக வரும்.

      ஊதற்காற்று என்றுதான் கேள்விப்பட்டிருப்பதால் சந்தேகம் வந்தது.

      நீக்கு
    4. "ஓதம்" காக்கிறது என்பது மதுரை மாவட்டத்திலும் வழக்குச் சொல்! அப்பா அடிக்கடி சொல்லுவார். நெல்லைக்குத் தெரியலை! எப்படியோ பவுனுக்கும் ஒரு நல்ல வாழ்வு கிடைப்பதில் மகிழ்ச்சி.

      நீக்கு
    5. கிராமத்து மழையில் நனைந்து கொண்டே பக்கத்து வீட்டு நிகழ்வுகளைப் பார்ப்பது போன்ற உணர்வு.

      நீக்கு
    6. ///Geetha Sambasivam31 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 12:13
      "ஓதம்" காக்கிறது என்பது மதுரை மாவட்டத்திலும் வழக்குச் சொல்! அப்பா அடிக்கடி சொல்லுவார். நெல்லைக்குத் தெரியலை!///

      ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ் நெல்லைத்தமிழன் புரொஃபிஷருக்கு டமில் தெரியல்ல.. ஹையோ இதை இப்போ காவேரிக் அக்ரையில போய் நிண்டு சத்தமாக் கத்தப்ப்போறேன்ன் ஹா ஹா ஹா...

      நீக்கு
    7. //அன்பு முரளிமா. ஓதம் என்றால் தரை ,மழையினால்
      ஈரத்துடன் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.//

      ஆஆஆஆஆ வல்லிம்மா அப்போ ஓதம் எனில்.. சில்லென இருக்கிறது எனும் அர்த்தம் போலும்... ஆஹா இனிப் பேசலாம்.. “அஞ்சுவின் முகமெல்லாம் ஓதமாக இருக்கிறது” ஹா ஹா ஹா..

      நீக்கு
    8. ஆமாம் அன்பு அதிரா, வெய்யில் அடித்ததும்,இரண்டு மூன்று நாட்கள் சென்று இதமாகிவிடும்.
      அதிராவின் பேச்சு ''கனியக் கனிய மழலை பேசும் கண்மணீ '' பாடல் நினைவுக்கு வருகிறது!!!

      நீக்கு
    9. //அஞ்சுவின் முகமெல்லாம் ஓதமாக இருக்கிறது// - கொரோனா சமயத்தில் அடுத்தவர்களைத் தொடுவதே க்ரைம். அதிலும் முகத்தைத் தொடுவது பெரிய க்ரைம். ஸ்காத்லாந்துக்கு இப்போ போலீஸை அனுப்பறேன். வீட்டிலயே இருங்க. போலீஸ், நீங்க வெளிய போயிருந்தீங்கன்னா வெயிட் பண்ணுவது கஷ்டம்.

      நீக்கு
    10. ///
      அதிராவின் பேச்சு ''கனியக் கனிய மழலை பேசும் கண்மணீ '' பாடல் நினைவுக்கு வருகிறது!!!////

      ஹையோ வைரவா லாபிங் புத்தாவே இந்த நேரம் பார்த்து அஞ்சு இங்கின இல்லையே.... அவ வரமாட்டா... அவ வரவே மாட்டா இதை எல்லாம் படிக்க கர்ர்ர்ர்ர்ர்:)...

      ஹா ஹா ஹா நன்றி வல்லிம்மா நன்றி....🙏

      நீக்கு
    11. கர்ர்ர்ர்ர்ர் நெ தமிழன்:)... நான் எங்கே தொட்டேன்ன்ன்... எல்லாம் 4 அடி தள்ளி நிண்டே பார்த்தேனாக்கும்:)... அதுக்குள்ள பொலீசூ அது இது என ஒரு மழலை பேசும் பிஞ்சுப் பிள்ளையை மிரட்டிக்கொண்டு:).... ஹா ஹா ஹா ஹையோ நெ தமிழன் துரத்துறார்ர்ர்ர்:) வல்லிம்மாஆ பீஸ் சேவ் மீஈஈஈஈ:)...

      நீக்கு
  7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    இனிய கதை. அன்பு துரையின் மனம் கருணை ஊற்று. கதைகள் மண்வாசனையோடு ஈரம் வடிய
    அவர் உள்ளத்தில் தோன்றிக்கொண்டே இருக்கின்றன.

    நல்ல மழையையும்,
    கரைய வைக்கும் மனதையும் ஒன்று சேர்த்து நல்ல திருமணம்
    நடக்க வைக்கிறார்.. வியக்க வைக்கும் ஓவியம் போல உரையாடல்.
    நன்மை விரும்பும் இரு அன்னையர். பெருந்தன்மை
    கொண்ட நல்ல பெண்மணி,மகனுக்கு
    மணம் முடிக்கும் அழகு உருக வைக்கிறது.

    அடி நாதமாக ஓடும் கிராம சாலை.
    அதிசயித்துக் கொண்டே இருக்கிறேன். மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியம்மா...
      தங்களது கருத்துரை மனதை நெகிழ்த்துகிறது..

      கருத்துரைக்கும் அன்பின் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அனைவருக்கும் காலை வணக்கம். துரை சாரின் கதையைப் படிக்கும் பொழுதெல்லாம் நம்மைச்சுற்றி எத்தனை நல்ல மனிதர்கள்! என்னும் சந்தோஷம் பெருகும். வேம்பையனின் நல்ல விருப்பங்களை அந்த படைவெட்டி மாரியம்மன் நிறைவேற்றுவாள். வாழிய நலம். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...

      நம்மைச் சுற்றி நல்ல மனிதர்கள்..
      அவர்களே என் மனதில் பிரகாசிக்கின்றார்கள்!...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    2. படைவெட்டி மாரியம்மன் தான் படவேட்டம்மன் என்னும் பெயரில் விளங்குகிறாளோ?

      நீக்கு
    3. அக்கா அவர்களுக்கு நல்வரவு..

      படைவீடு என்பது தான் படவேடு என்றாகி படவேட்டு அம்மன் எனப்படுகிறாள்...

      படை வீட்டில் (பாசறை) தங்கியிருந்த நேரத்தில் வீரர்களால் வணங்கப்பட்டவள்..

      ஆனால்
      படைவெட்டி மாரியம்மன் என்ப்படுபவள் வீரர்களோடு வீரர்களாக படைக்குள் புகுந்து
      எதிரிகளை வெட்டியவள்...

      எனவே படை வெட்டி மாரியம்மன்...

      கும்பகோணத்தில் அவள் சந்நிதி பிரசித்தம்..

      நீக்கு
    4. கும்பகோணம் படைவெட்டி மாரியம்மனைப்பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். விளக்கத்துக்கு நன்றி

      நீக்கு
    5. கும்பகோணம் மடத்துத் தெரு மாரியம்மன் தான் படைவெட்டி மாரியம்மனா? போயிருக்கோம் அடிக்கடி. என்றாலும் படைவெட்டி என்பதன் விளக்கம் இப்போத் தான் தெரிந்து கொண்டேன்.

      நீக்கு
  10. கதை அழகிய பூங்காற்றாக வீசியது

    சரியான இடங்களில் மழை வருவதும், நிற்பதும் அழகு ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் எல்லாம் அருமை.
      நானும் நினைத்தேன் தேவகோட்டை ஜி போல.
      மழையும் பவுனுக்கும், வேம்பையனுக்கும் மறக்க முடியாத பசுமையான நினைவுகளை கொடுக்கும்.

      நீக்கு
    2. அன்பின் ஜி...

      // சரியான இடங்களில் மழை வருவதும் நிற்பதும்..///

      குறும்புக்கார மழை போலிருக்கிறது....

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. கதை படித்து முடித்தவுடன் மனதில் ஆறுதல்.வேம்பையனின் அன்பால் பவுனு இனி மகிழ்ச்சியாக இருப்பாள்.
    வேம்பையனின் அம்மா ராசாத்தியும் அன்பு உள்ளம் நிறைந்தவர் அப்புறம் மகிழ்ச்சிக்கு கேட்க வேண்டுமா? சித்திரையில் கல்யாணம்.

    படைவெட்டி மாரியம்மன் நடத்தி கொடுப்பாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கும்பகோணத்தில் படைவெட்டி மாரியம்மன் பிரசித்தியானவள்...

      யானையடி ஐயனார் கோயிலுக்கும் காவிரி தென் கரைக்கும் இடையில் இருப்பவள்...

      வேம்பையன் பவுன் இவர்களன்றி
      அனைவருக்கும் நல்வாழ்வு அளிப்பவள்...

      நீக்கு
  12. நிறைவான கதைக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  13. இனிய காலை வணக்கம்.

    கிராமிய மணம் கமழும் நல்ல கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா...

      நீக்கு
  15. துரை அண்ணா ஆஆஆஆஆஆஅ வாவ்!!! ஹையோ என்ன சொல்ல...வார்த்தைகள் இல்லை. அட்டகாசமான அருமையான கதை. எழுத்து நடை எல்லாம் செம...அதுவும் முடிவு ஆஹா ஆஹா...எனக்கு இப்படி முடிப்பது மிகவும் பிடித்த ஒன்று. அம்மா மனதிற்குள் நினைக்க...மகன் அவன் மனதிற்குள் நினைக்க...முடிவு மிக அழகான முடிவு என்று எண்ணி எப்படி அண்ணா இப்படி அழகா எழுதி முடிக்கறீங்கன்னு கேட்க வைக்கிறது. கதைக்களம் எழுத்து எல்லாமே...

    கதையை வாசித்து முடித்ததும் டக்குனு இந்தப் பாடல் மனதில் தோன்றியது

    //தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல..
    திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல..
    வந்து வந்து போகுதம்மா , எண்ணமெல்லாம் வண்ணமம்மா..
    எண்ணங்களுக்கு ஏத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா..//

    இருவரின் (மூவரின்) எண்ணங்களுக்கு ஏத்தபடி வண்ணமயமாக ஆக வேண்டும்.

    துரை அண்ணா பாராட்டுகள்! வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...

      இப்படியான பாராட்டுரைகள் முந்தைய கதைகள் சிலவற்றுக்குக் கிடைக்க வில்லையே - என்றிருக்கிறது...

      அன்பின் வாழ்த்திரைகளுக்கும் பாராட்டுரைகளுக்கும் நன்றி...

      நீக்கு
  16. கதைக்கேற்ப படங்கள் அனைத்தும் அருமை.
    அருமையான கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  17. அருமையான கதை பொருளாதார ரீதியாக கீழ்த்தட்டில்இருக்கும் மேன்மக்களின் குணநலனை சொல்லிப் போனவிதம் அருமை.வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      // கீழ்த்தட்டில் இருக்கும் மேன்மக்களின் குண நலனை..//

      கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  18. ஆஆஆஆஆஆஆ இன்று துரை அண்ணன் கதையேதான்.. நினைச்சேன், ஆனாப் பாருங்கோ கொரொனா நேரத்திலயும் அதிரா நினைக்கிறதெல்லாம் கரீட்டா நடக்குதே....:))

    பதிலளிநீக்கு
  19. //'' சனிக்கிழமை புடிச்சது .. சட்டுன்னு விடாது.. ந்னு சொல்லுவாங்க!..//
    இது எனக்குப் புதிசு...

    //பஞ்சாயத்துல வச்சி முள்ளு முறிச்சுப் போட்டுட்டான்!.... ''//

    ஓ இப்படிச் செய்தால் விவாகரத்தோ அக்காலத்தில..

    //குடிசை முழுதும் ஓதம் காத்துக் கிடந்தது...//
    ஓதம் என்றால் என்ன துரை அண்ணன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓதம் என்றால் ஈரம் ...

      மழைக் காலத்தில் குடிசை வீடுகள் நசநச என்று இருக்கும்....

      நீக்கு
    2. அண்ணன் தம்பி தங்கைகளுக்குள் வெட்டு குத்து என்றால் இன்னும் பயங்கரம்...

      திருகு கள்ளியை ( பால் வடியும் கள்ளி) வெட்டிப் போடுவார்கள்....

      அத்தோடு உறவு முறிந்து போகும்....

      நீக்கு
  20. //காவேரியில முங்கிக் குளிச்சா கர்மம் எல்லாம் தொலைஞ்சிடாதா!..//

    ஹா ஹா ஹா இதுக்காகத்தானே சிலபேரை காவேரியில தள்ளத் துடிக்கிறேன் மாட்டவே மாட்டினமாமே:))..

    அமைதியான முறையில கல்யாணம் வரை வந்துவிட்டது.. ஆனா பவுனு ச்ச்ச்சும்மா பார்க்குது சிரிக்குதே தவிர.. பவுணு ஒண்ணுமே சொல்லக்காணம்.. அதனால பவுணு மனசில என்ன இருக்கோ என நேக்குப் பக்குப் பக்கெண்ணுது.....:)). பவுணு மனசில என்ன இருக்கோ?:)).. இந்த வேம்புப்பையனைக் கொஞ்சம் எதுக்கும் ஒரு தூது அனுப்பி பவுனிடம் முடிவு கேட்டுவிட்டுத் துள்ளச் சொல்லுங்கோ துரை அண்ணன்:).

    சில பெண்களை உங்களுக்குத் தெரியாது:), நல்ல அன்பாக பாசமாக இருப்பினம், சிரித்தும் பேசுவார்கள் ஆனா அது காதலாகிடாது.. அது அவர்களிடம் இருக்கும் நல்ல குணம், பவுணும் அப்படித்தானோ என எண்ணத் தோணுது.. இவிங்க மீன் குழம்பும் சக்கரை வள்ளிக்கிழங்கும் குடுத்தால் பவுணு மயங்கிடுமோ?:)).. என்னா நினைப்பு கதாசிரியருக்கு ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /அப்படித்தானோ என எண்ணத் தோணுது.. // - என்னத்தை கதை படிச்சீங்களோ... அந்தப் பெண் தவறானவரிடமிருந்து தப்பித்திருக்கிறாள். ஒரு நல்லவனைக் கண்டிருக்கிறாள். அவந்தான் நல்ல கொழு கொம்பாக இருப்பான் என்று அவள் மனசுக்குத் தெரிவதை கதாசிரியர் சரியாக நம்மைப் புரிந்துகொள்ளும்படி அமைத்திருக்கிறார்.

      இப்பவும் இவுகளுக்கு சந்தேகம் வருதாம்...

      பெண் மனசு என்னவென்று ஆம்பளைக்குத் தெரியும்
      அது பொம்பளைக்குத் தெரியா..

      என்ற பாடலைக் கேட்டதில்லை போலிருக்கு.

      நீக்கு
    2. //பூந்தூறலுடன் இளங்காற்று விளையாடிக் கொண்டிருக்க அவர்களையும் அறியாமல் பவுனு மனதில் ஆசையை விதைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார்கள் - தாயும் மகனும்...//

      இந்த வரியை படிக்கவில்லையா அதிரா?
      பவுனு மனதில் ஆசையை விதைத்து விட்டு இன்னுமா புரியலை பவுனுக்கு சம்மதம் என்று.

      நீக்கு
    3. //கூட ஒரு பொறப்பு இல்லாம ஒத்தப் பூவா அவளும் பூத்துட்டா!.. எத்தனை நாளைக்கு நாங்க இப்பிடியே இருக்க முடியும்!...
      யாராவது ஒரு நல்ல சீவன் வந்து இவள ஏந்திக்காதா...ன்னு இருக்கு...
      இவ - வாயத் தெறந்து ஒன்னும் சொல்ல மாட்டேங்குறா!... //''

      பவுனின் அம்மாவும் நல்ல சீவன் வந்து இவள் ஏந்திக்காதா ன்னூ இருக்கு என்று தன் நினைப்பை சொல்கிறார்/
      அந்த நல்ல சீவன் கூட ஒரு பொறப்பு இல்லாம ஒத்தப் பூவா அவளும் பூத்துட்டா!.. எத்தனை நாளைக்கு நாங்க இப்பிடியே இருக்க முடியும்!...
      யாராவது ஒரு நல்ல சீவன் வந்து இவள ஏந்திக்காதா...ன்னு இருக்கு...

      பவுனு அம்மா சொல்கிறார் அந்த நல்ல சீவன் தான் வேம்பையன்

      நீக்கு
    4. //கூட ஒரு பொறப்பு இல்லாம ஒத்தப் பூவா அவளும் பூத்துட்டா!.. எத்தனை நாளைக்கு நாங்க இப்பிடியே இருக்க முடியும்!...
      யாராவது ஒரு நல்ல சீவன் வந்து இவள ஏந்திக்காதா...ன்னு இருக்கு...
      இவ - வாயத் தெறந்து ஒன்னும் சொல்ல மாட்டேங்குறா!... //''

      யாராவது ஒரு நல்ல சீவன் வந்து இவள ஏந்திக்காதா...ன்னு இருக்கு...

      பவுனு அம்மா சொல்கிறார் அந்த நல்ல சீவன் தான் வேம்பையன்

      நீக்கு
    5. @ நெ தமிழன்
      ///
      பெண் மனசு என்னவென்று ஆம்பளைக்குத் தெரியும்
      அது பொம்பளைக்குத் தெரியா..//

      இது எப்ப தொடக்கமாக்கும் இந்த வசனம் எல்லாம் பேசத் தொடங்கியிருக்கிறார்ர்:)).
      நேற்றுவரை பெண் மனதை அறிய முடியல்லியே எனத்தானே சொல்லிக் கொண்டிருந்தார் ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      ஒருவேளை கொரொனா லீவில ஒரு கிழமை வீட்டில நின்றதால அறிஞ்சிட்டாரோ:)) இருக்கலாம் நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))..

      இருந்தாலும் ஒரு பெண்ணாக இருந்து சே..சே.. மழலைக் கண்மணியாக இருந்து[பிளீஸ் இந்தாங்கோ மோர் குடிச்சிட்டு மீதியைக் கொண்டினியூ:))]... இதைச் சொல்லப்படாது:)) இருப்பினும் ஜொள்றேன்ன்ன்:)).. ச்சும்மா கற்பனையில எல்லாம் கதாசிரியர் சொல்லிட்டார்ர் பவுணுக்கும் விருப்பம் என எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவுக்கு வராமல்:) எதுக்கும் அலசி ஆராஅய்ஞ்சு முடிவுக்கு வாங்கோ:))..

      முடிஞ்சால் ஒரு பஸ், உள்ளே சீட் எல்லாம் 4 அடி இடைவெளியில இருக்கிறமாதிரி புக் பண்ணுங்கோ:).. எல்லோரும் பவுணு வீட்டுக்குப் போயிடலாம்ம்:)).. நேரில கேட்டிடலாம்:))... நா ஒண்ணும் வாணாம் ஜொள்ளலியே:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    6. ///இந்த வரியை படிக்கவில்லையா அதிரா?
      பவுனு மனதில் ஆசையை விதைத்து விட்டு இன்னுமா புரியலை பவுனுக்கு சம்மதம் என்று.//

      ஹா ஹா ஹா கோமதி அக்கா, அதுவும் கதாசிரியரின் கற்பனையே தவிர பவுனு வாயே திறக்கலியே:)).. அப்பூடியெனில் அந்தப் பார்வையில் காதல் தெரிஞ்சது, கண்களால் வேம்பைப் பார்த்து பிரியாவிடை சொன்னா எண்டெல்லோ சொல்லியிருப்பார்ர்:)) ஹா ஹா ஹா என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊ:))

      நீக்கு
    7. //யாராவது ஒரு நல்ல சீவன் வந்து இவள ஏந்திக்காதா...ன்னு இருக்கு...

      பவுனு அம்மா சொல்கிறார் அந்த நல்ல சீவன் தான் வேம்பையன்///

      ஆவ்வ்வ் கோமதி அக்கா எல்லோருக்கும் பிடிச்சிருக்குதுதான் இருப்பினும், மெயின் கரெக்ட்டர் வாய் திறந்து சொல்லோணும் எல்லோ:))..

      ஹையோ கோமதி அக்கா சீரியஸ் ஆகிடபோறாவே.. கோமதி அக்கா நான் வம்புச் சண்டை வளர்க்கிறேன்ன்:).. நீங்கள் சொல்வது சரி.

      நீக்கு
    8. பவுனு ..

      அமைதியாகவே இருந்து பழக்கப்பட்ட பெண்....

      பொறுமையாய் கஷ்டங்களைக் கடந்தவள்..

      சட்டென சந்தோஷ ஆரவாரம் செய்ய இயலாது அவளால்...

      அந்த சின்னப் புன்னகையையே
      தன்னைக் கவர்ந்த வேம்பையனுக்குக் காணிக்கை ஆக்கி விட்டாள்...

      அதை வேம்புவின் அம்மாவும் புரிந்து கொண்டார்.. வேம்புவும் தெரிந்து கொண்டான்...

      அதற்கு மேல் கதாசிரியனுக்கு என்ன வேலை அங்கே!..

      நீக்கு
  21. கதை முழுவதும் சூப்பர் வசனங்கள், அப்படியே ரசிக்கும்படி எழுதிட்டீங்க துரை அண்ணன், அருமை.

    ... நீங்க மழைக்காக சொன்னவற்றை, நான் ஆரம்பம் படிச்சு, கொரொனாவுக்கு கதை எழுதிட்டார் போலும் என நினைச்சிட்டேன்.. ஏன் தெரியுமோ, நேற்றே நினைச்சேன், இன்று துரை அண்ணன் கதையாக இருக்கும், இந்தக் கொரொனாவை வச்சும் கதை எழுதச் சொல்லோணும் எண்டு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிராவின் அன்பான கருத்துரைகளுக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      கொரானாவை வைத்து ஒரு கதையா!...

      எழுதி விட்டால் போகிறது!...

      நீக்கு
    2. அன்பின் ஜீவி ஐயா அவர்களைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்...

      நீக்கு
  22. எபியில் துரைராஜின் கதை என்றதும் தாண்டிபோக முடியவில்லை எப்படித்தான்மனித மனங்களைப் படிக்கிராறோ கதை மாந்தர்கள் எல்லோரும் நல்லவரே இல்லை இவருக்கு நல்லதுதான் தென்படுமோ வெவ்வேறு கதக்களன்கள் அசத்துகிறார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      >>> எப்படித்தான் மனித மனங்களைப் படிக்கிறாரோ.. கதை மாந்தர்கள் எல்லோரும் நல்லவரே.. இல்லை.. இவருக்கு நல்லதுதான் தென்படுமோ... <<<

      கிராமத்தில் வாழ்ந்த நாட்களை மனதுக்குக் கொண்டு வந்தால் இனிய நினைவுகள் ஒவ்வொன்றாய் புலப்படுகின்றன..

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  23. @ துரை ராஜு: கதை சொல்லும் திறன் நாளுக்குநாள் உங்களுக்குள் வளர்ந்துவருவதாகத் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  24. பதில்கள்
    1. அன்பின் ஏகாந்தன்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  25. துரை ஐயாவின் கை பட்டு கதை வழுக்கிக் கொண்டு ஓடுது. மனம் நிறைந்த முடிவு. ஆனா, அதான் முடிவுன்னு தெரிஞ்சிண்டே படிக்கிறது தான் ஒரு இடைஞ்சலா இருக்கு. அந்த முடிவுக்கு எதிர் திசையில், எதிர் நினைப்பில் கதையைக் கொண்டு போய் அந்த முடிவை பரிந்துரைக்கும் பொழுது இன்னும் வாசிக்கறவங்க குஷி கூடியிருக்குமோ?.. 'இல்லை'ன்னு ஆகிப்போனதை 'இந்தா'ன்னு கொடுத்தாத் தான் உலக வழக்கில் சந்தோஷத்திற்கு ஒரு அர்த்தம் இருக்குன்னு ஆகிப்போச்சு. என்ன செய்யறது?..

    கதையை எழுதினவர் தான் சொல்லணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா உங்களை இன்னும் காணவில்லையே என்று இப்போதி தான் எழுதினேன்...

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி...

      நீக்கு
    2. இந்தக் கதை அப்பாவிப் பெண் ஒருத்தியினுடையது என்பதால் எதிர் திசையில் நகர்த்த வில்லை...

      இல்லை என்று ஆகிப் போனதை
      இந்தா.. என்று வாரிக் கொடுக்கும் வேளையில் குறுக்காக ஒரு தூசு கூட வரக்கூடாதே....

      வேம்பையனின் சின்ன விசாரிப்பு..
      அதுதானே பவுனுக்குக் கிடைத்த பொக்கிஷம்...

      பவுனின் மனசைச் சொல்லாமல் எப்படி என்று அங்கே அதிரா கொடி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்..

      வேம்பும் பவுனும் நன்றாக இருக்கட்டும்...

      நீக்கு
  26. இன்று எனது கதைக்கு அனைவரும் அளித்த கருத்துரைகள் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது..

    மிகவும் உற்சாகமாக இருக்கிறது...

    அதிராவின் கருத்துரைகளை அடித்து விளையாடிய ஸ்ரீமதி கோமதிஅரசு அவர்களுக்கும் அன்பின் நெல்லை அவர்களுக்கும் நன்றி...

    மீண்டும் வேறொரு கதைக் களத்தில் மகிழ்ச்சியுடன் சந்திப்போம்.. வணக்கம்..

    பதிலளிநீக்கு
  27. வழக்கமா நடக்கறது தான் இந்தக் கதையிலும் நடந்ததையும் சொல்லியாகணும்.

    'அந்த ஓலை முட்டானை தலைலே கவுத்துக்கோ'.. முன்னே பின்னே ஓலை முட்டான்னா என்னன்னு தெரியாதவங்களுக்கும் வார்த்தை அமைப்பில் தெரிஞ்சிக்கற மாதிரி ஒரு எழுத்துத் திறமை.. இது மாதிரி கிராம வழக்கில் உபயோகப்படுத்தற பல வார்த்தைகளை இது வரை படிச்ச கதைகள்லே பார்த்திருக்கிறேன். இது பத்தி சொல்லணும்ன்னு நெனைச்சிப்பேன். மறந்துடுவேன். இப்ப சொல்லிட்டேன்.
    நன்றி, ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓலை முட்டான்...

      ஆமாம்.. அந்தக் காலத்தில் காசு செலவில்லாத குடை...

      தென்னை ஓலை கொண்டு அருமையாக பின்னியிருப்பார்கள்...

      கனமழையையும் காற்றையும் தாங்கும்...

      அன்றைய கிராமத்து வீடுகளில் கண்டிப்பாக இருக்கும்..

      இன்றைக்கு அதையெல்லாம் பார்க்க முடிவதில்லை...

      நீக்கு
    2. நம்மவர் அடிக்கடி சொல்வார். இந்தத் தென்னை ஓலைமுட்டான் பற்றி. கருவிலியில் இருந்து விஷ்ணுபுரம் பள்ளிக்குப் போகையில் மழைநாட்களில் இதான் குடை என்பார். கூடுதல் தகவலாக இதை எல்லாம் என் மாமனார், கணவர், அவரின் பெரிய தம்பி ஆகியோர் தாங்களே பின்னிக்கொள்வார்கள். எங்க வீட்டு கிரஹப்ரவேசம், எங்க பையர் பூணூல் ஆகியவற்றுக்குப் பந்தல் அலங்காரம் எல்லாம் மாமனாரும் கணவரின் பெரிய தம்பியுமே செய்தார்கள்.

      நீக்கு
    3. அக்கா அவர்களின் வருகையும்
      ஓலை முட்டான் பற்றிய மலரும் நினைவுகளும் அருமை...
      செலவில்லாத ஓலைக் குடை அது அந்தக் காலத்தில்...

      நானெல்லாம் ஓலை முட்டானுடன் நடந்திருக்கிறேன்...

      நீக்கு

  28. எங்களுடைய Covid 19 டெஸ்ட் ரிசல்ட் இப்போதுதான் வந்தது. கடவுளின் அருளால் நெக்ட்டிவ் என்று வந்து இருக்கிறது காட் இஸ் கிரேட் அவ்வளவுதான் சொல்லுவேன்.... எங்கள் குடும்பத்திற்காக் பிராத்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்தி பார்த்ததும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது மதுரை தமிழன் சகோதரரே.இனி கவலையில்லை. இனி தைரியமாக உங்கள் குடும்பத்தினர் உடல் நலம் முழுமையாகப் பெற்று தேறி வர என்னுடைய பிரார்த்தனைகளும்... கடவுளின் அருள் நம் எல்லோருக்கும் இது போல் என்றும் நிலைத்து இருக்கவும் மனமாற பிரார்த்தனைகள் செய்கிறேன்.

      நீக்கு
    2. மதுரைத் தமிழன் அவர்களுக்கு...

      தெய்வம் துணையிருக்கும்..
      எதற்கும் அஞ்ச வேண்டாம்...

      தாங்களும் தங்களது குடும்பத்தினரும்
      உடல் நல்னும் மன நலனும் பெற்று விளங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறோம்....

      நீக்கு
    3. உங்கள் தகவல் மிகுந்த மன மகிழ்ச்சியைத் தருகிறது மதுரை...   நலத்துடனும் வளத்துடனும் இருக்க ஆண்டவன் அருளட்டும்.

      நீக்கு
    4. Covid 19 டெஸ்ட் நெகடிவ் ஆனது இன்றைய காலையின் பாஸிட்டிவ் செய்தி.
      இறையருள் உண்டு எல்லோருக்கும், எப்போதும் - நம்பினாலும், நம்பாவிட்டாலும். வேண்டினாலும், வேண்டாவிட்டாலும்.

      நீக்கு
    5. இறையருள் என்றென்றும் துணை நிற்கும் மதுரைத் தமிழரே. நலம் பெற்று வாழ வாழ்த்துகிறோம். எதற்கும் தனிமையிலேயே சில நாட்கள் இருந்து விடுங்கள். உடல் பலஹீனமாக இருக்கும் அல்லவா?

      நீக்கு
  29. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    அருமையான கதை. வேம்பைய்யனின் தங்க மனதுக்கு ஏற்ற பவுனு. இருவரும் ஒருவரை யொருவர் விரும்புவதை நாசூக்காக காட்டிக் கொள்ளும் இடங்கள் அருமை. இருவரின் அம்மாக்களுக்கும் கூட ஒத்த மனது. இது போல் அனைவருக்கும் அமைவது கஸ்டம்.

    கிராமத்தின் மண் வாசனையோடு கலந்த மழையின் வாசமுமாக தங்களின் எழுத்தும் மணம் வீசி கதையை இறுதி வரை கட்டிப் போட்டது. கதையை எப்போதும் இறுதியில் சுபமாக முடிக்கும் போது, தங்களின் நல்ல மனதும் அந்த அருமையான மணத்தை நுகர்வோருக்கெல்லாம் சிறப்பித்து காட்டுகிறது. கதை அருமை சகோதரரே. இன்று தாமதமாக வந்தமைக்கு வருந்துகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  30. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

    நேரம் கடந்து வந்தால் என்ன!?....

    அன்புடன் கருத்துரை வழங்கி உற்சாகப்படுத்திய தங்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  31. அன்பின் தீஜ் துரை,தாங்களும் தங்களது குடும்பத்தினரும்
    உடல் நலனும் மன நலனும் பெற்று விளங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறோம்....

    பதிலளிநீக்கு
  32. ’ஓதம்’, ’ஓலை முட்டான்’ போன்ற வார்த்தைகளை முதன் முதலாகக் கேள்விப்படுகிறேன். புதுக்கோட்டைப் பகுதி கிராமங்களில் தரை ’ஈரிச்சு’ப்போயிருக்கு என்பார்கள். ஓலைமுட்டானை ’கொடல மட்டை’ என அழைப்பார்கள். அடைமழை காலத்தில் கொடலமட்டையைத் தலையில் போட்டுக்கொண்டு கிராமத்துப் பயல்களோடு வயல் வரப்புகளில் வழுக்காமல் டான்ஸ் ஆடிய காலம் நினைவில்.
    கூடவே, ‘கொட்டற மழையில இப்படிச் சுத்திட்டு வர்றியே.. ஒடம்புக்கு வந்தா யார் டாக்டர்கிட்ட ஓடுறது, மருந்து வாங்கறது, இதுக்குல்லாமா காசு இருக்கு.. அறிவு வேண்டாம்?’ என்று அம்மா பதறிக் கத்திய காலமும் நிழலாடுகிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குட்லை மட்டை....
      இது மழைக்கு...

      இதிலேயே பை போலவும் கூடை போலவும் செய்து விற்பார்கள்...

      அது சந்தைக் கடை சாமான்களுக்கு....

      இவற்றுக்கான மூலப் பொருள்கள்
      கற்றாழை மடல், நார், தென்னை ஓலை முதலாவையே...

      நீக்கு
  33. மதுரை தமிழன் குடும்பத்தினர் நலம் அறிந்து மகிழ்ச்சி. அனைவரும் நலமாக இருக்க வேண்டுவோம்.
    கிராமத்து நிழலில் மழை சாரலுடன் கதையும் இனிதே நகர்ந்து செல்கிறது இனிய முடிவும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதேவி ..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!