வியாழன், 15 ஏப்ரல், 2021

ஃபோனில் வந்த மிரட்டல்கள்.

சென்ற மாதம் என் அலைபேசியில் அடிக்கடி ஒரு அழைப்பு வந்தது.  தெரியாத எண்ணிலிருந்து வந்ததது..  ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து வந்தது.  

அட்டெண்ட் செய்ததும் தினமும் ஒரே குரல்தான் வரும்.

"ஹெதாய்து"

"ஆங்?"

  "ஹெதாய்து" 

"என்னது?  யாரு?"

"ஹெதாய்து" 

"ராங் நம்பர்.  வைங்கப்பா..."

"ராங் நம்பரு?"

"---------------------"

  "ஹெதாய்து"  

"------------------"

ஃபோன் வைக்கப்படும்.  

ஆரம்பித்த உடனே கட் செய்தாலும் உடனே மறுபடி அதே நம்பரிலிருந்து அழைப்பு வரும்.  சற்றே மிரட்டலாக மறுபடி " ஹெதாய்து"  

ஒருமுறை பொறுமையிழந்து "யாருங்க நீங்க?  என்ன பாஷை பேசறீங்க?  என்ன வேணும் உங்களுக்கு?"  என்று கேட்டேன்.  

"என்ன பாஷையா?  என்ன வேணுமா?  நம்ம லீடர் அங்கே இருப்பார்...   அவர்ட்ட ஃபோனைக் கொடப்பா.."  என்றது எதிர் முனை.  அருகிலிருந்து இரண்டு மூன்றுபேர் சிரிக்கும் குரல் கேட்டது.

"அப்படி யாரும் இல்லை...  ராங் நம்பர்..."

"அட..   போனை நம்ம லீடர்ட்ட கொடப்பா..."

எனக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது.  ஆஹா...  ஏதோ தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொண்டு விட்டேனோ...  என்னையும் அவர்கள் க்ரூப்பில் ஒருவன் என்று நினைத்து விட்டார்களோ...  அவர்கள் பேசுவது கன்னடம் என்றும் புரிந்தது.  மௌனமாகவே இருந்தேன்.    நெல்லை, கேஜிஜி, ஜி எம் பி, கீதா ரெங்கன், ராமலக்ஷ்மி என்று எல்லோரும் பெங்களூருவில்தானே இருக்கிறார்கள்!  அவர்களிடம் சொல்லி இவனை...!

ட்ரூ காலரில் சிவராமன், பெங்களூரு என்று காட்டியது!

மறுபடி மறுபடி அவர்கள் லீடரிடம் ஃபோனைக் கொடுக்கச் சொல்லி எனக்கு கட்டளைகள் வந்து கொண்டே இருக்க, நான் போனைக் கட் செய்யவும் இல்லை.  மௌனமாகவே இருந்தேன்.  

அப்புறம் வைத்து விட்டார்கள்.  அந்த நம்பருக்கு ஹெதாய்து என்று பெயரிட்டு எடுக்காமலேயே இருந்தேன்.  கட் செய்தால் மறுபடி வருகிறது என்பதால் எடுப்பதில்லை.  அடித்து ஓயும்.  சில நாட்கள் அந்தத் தொந்தரவு இருந்தது.  அப்புறம் சரியான நம்பர் கண்டு பிடித்து விட்டார்கள் போல...  என்னைத் தொந்தரவு செய்யவில்லை!  அல்லது அந்த லீடர் வேறு மாநிலத்துக்கு இடம் மாறி விட்டார் போல!

தேர்தலுக்குமுன்  பத்து நாட்களாக என் இன்னொரு சிம்முக்கு கால் வரத்தொடங்கியது.   இது வேறு.  ஒரு பிரபல அரசியல் கட்சியின் பெயர் சொல்லி அதன் தேர்தல் அலுவலகத்திலிருந்து பேசுவதாகச் சொன்னார்கள்.  சொன்னார்கள் என்ன, சொன்னார் ஒரு பெண்.  

என்னடா, நமக்கு வந்த சோதனை..   கட்சியிலிருந்து எல்லாம் நம்மைக் கூப்பிடுகிறார்கள் என்று யோசனை வந்ததது.

"என்ன வேணும் சொல்லுங்க..."

"எத்தனை பூத் வைக்கப் போறீங்க..   இன்னும் நீங்க கணக்கு கொடுக்கலை"

"இல்லீங்க..   நீங்க ஏதோ தப்பான நம்பருக்குப் பேசுகிறீர்கள்.."

"9..............8 தானே இது?   உங்கள் பெயர் ஸ்ரீராம்தானே?"

அரண்டு போனேன்.  "ஆமாம்.  நம்பரும் பெயரும் சரிதான்.  நான் எந்தக் கட்சியிலும் இல்லை.  நான் பெயர் தரவும் இல்லை" என்று சொல்லி போனைக் கட் செய்தேன்.

அன்றே மறுபடி இரண்டு முறை போன் வந்தது.  நிலைமையைச் சொன்னேன்.

இது இரண்டு மூன்று நாள் தொடர, ஒரு நாள் வேறொரு பெண் குரல் பேசியது.  அந்தக் குரல் 'ஏதோ தவறு நடந்திருக்கிறது' என்று சொல்லி, டேட்டா பேஸிலிருந்து நம்பரை எடுப்பதாககச் சொல்லி போனை வைத்தது.

என் நிம்மதிப் பெருமூச்சுக்கு ஆயுள் 24 மணி நேரம்.

அடுத்த நாள் மறுபடி போன்.  இந்த முறை அதட்டலாய் ஒரு ஆண் குரல். 

எனக்கு பொறுப்பில்லை என்று கண்டித்தது.  அழாக்குறையாக என் நிலைமையை மறுபடி சொன்னேன்.      'எங்கிருந்து பேசுகிறீர்கள்?' என்றேன்.  '......................' ருந்து பேசுகிறேன்' என்றார். ஏழெட்டு நாட்களாய் தொடர்ந்து வரும் அழைப்புகள் பற்றியும் சொல்லி விசனப்பட்டேன்.  உபரியாய் "நானும் உங்க கட்சிதான்...  உங்களுக்குதான் வோட்டு...  ஆனால் எனக்கு வோட்டு போட மட்டும்தான் தெரியும்" என்றும்  சொன்னேன்.

அவர் உடனே மகிழ்ந்து தான் ஒரு லாயர் என்றும், ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என்றும் சொல்லி, 'உண்மையில் இந்த உங்கள் பெயர் மட்டும் உறுதி செய்யப்படாமல் இருப்பதாய்'த் தெரிவித்தார்.  'எப்படி என் அலைபேசி எண், என் பெயர், என் அனுமதி இல்லாமல் எனக்குத் தெரியாமல் உங்களிடம் வந்திருக்கிறது?' என்று கேட்டேன்.  'தெரியவில்லை, ஆனால் இனி உங்களுக்கு அழைப்பு வராது' என்று உறுதி அளித்தவர், டேட்டா பேஸிலிருந்து 'இதோ உங்கள் பெயரை  எடுத்து விட்டேன்' என்றார்.  

'சென்ற முறையும் ஒரு பெண் இப்படிதான் சொன்னார்' என்றேன்.

கவலைப்படவேண்டாம் என்றவர், என் வீட்டில் எத்தனை வோட்டு என்று கேட்டார். 7 என்றேன்.  "எல்லோரையும் ------   சின்னத்திலேயே போடச் சொல்லுங்கள்.  உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்" என்று போனை வைத்தார்.  

அப்பாடி..   அதன் பிறகு போன் வரவில்லை.  அதாவது அந்த எண்ணிலிருந்து அந்தக் கட்சி அழைப்பு வரவில்லை!

நிம்மதி!

====================================================================================================

இப்படி ஒரு துணையோ, நபரோ எல்லோர் வாழ்விலும் அமைவதில்லை!



முடிந்து விட்ட உரையாடலோ
இனிதான் 
தொடங்கவேண்டுமோ..
மௌனமாக இருந்தாலும்
ஏதோ ஒரு 
பகிர்தல் 
இருந்துகொண்டுதான்
இருந்தது அங்கே





====================================================================================================

செப்டம்பர் 67 கணையாழி இருக்கா?  நான் வைத்தீஸ்வரன் எழுதிய சிருஷ்டி படிக்க வேண்டும்.  

=================================================================================================

தினமலர் சொல்கிறார்கள் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் வந்த பகிர்வு...



கணவரின் அனைத்து விஷயங்களுக்கும் தோள் கொடுத்து, வெற்றி பாதைக்கு வழிவகுத்த, மறைந்த கன்னியாகுமரி எம்.பி., வசந்தகுமாரின் மனைவி தமிழ்ச்செல்வி: 

"என் கணவருக்கு சொந்த ஊர், கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம்; எனக்கு, தென்காசி அருகே உள்ள ஆலங்குளம். அப்பா ஓரியண்ட் எம்.எஸ்.மணி; ஆயில் மில் வைச்சிருந்தார். மூணு பெண், மூணு ஆண் என, பிறந்த குடும்பத்தில், நான் மூத்த வாரிசு. பட்டப்படிப்பு படிச்சிருக்கேன். 

ஆலங்குளம் ஊர்ல வைச்சு தான், என்னை பெண் பார்க்க வந்தாங்க. சென்னையில், காமராஜர் வீடு பக்கத்துல உள்ள, கல்யாண மண்டபத்துல தான் எனக்கும், அவருக்கும் கல்யாணம் நடந்துச்சு. எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே, சென்னையில் முதல் வசந்த் அண்ட் கோ கிளையை அவர் துவக்கி, தொழிலில் வெற்றிக்கொடி நாட்ட துவங்கியிருந்தார். 

கல்யாணம் ஆன புதுசுலேயே, 'என்னோட உழைப்பும், நேர்மையும் என் வெற்றிக்கு வழிவகுக்கும்; அதுக்கு, நீ பல தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கும்'ன்னு சொன்னாரு. 

அதன்பின், குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பிலும், குடும்ப நிர்வாகத்தை கவனிப்பதிலும், எல்லா உறவுகளையும் அனுசரித்தும் வாழ பழகிக் கொண்டேன்.

எப்பவும், 'பிசினஸ் பிசினஸ்னே பிசியா' இருப்பாரு. அனைத்து கிளைகளிலும் வேலை பார்க்கும் எங்கள் ஊழியர்களை தெரிந்து வைத்திருப்பார்; அவங்களோட நல்லது, கெட்டதுகளில் பங்கேற்று, உதவி செய்வார்.

சம்பாதிப்பதில் ஒரு பகுதியை ஏழை, எளிய மக்களுக்கு செலவிட்டு வந்தார். 

எல்லா தேர்தல்களிலும் கணவருக்கு உதவியாக கூடவே இருந்தேன். எம்.பி., ஆகணும்கிறது அவரோட நெடுநாள் ஆசை. கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும், ரொம்ப சந்தோஷம் அடைஞ்சாங்க. காமராஜர் மக்களுக்கு தொண்டு செய்ததைப் போல, தொண்டு செய்யணும்ன்னு சொல்லுவாரு. 

அவர்கிட்டே, முடியும்ங்கிற வார்த்தை தான் வாயிலேர்ந்து வரும். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப்போடவே மாட்டார்; ஒரு காரியத்தில் இறங்கினால் அதை முடிக்காமல் விட மாட்டார்.

எங்களுக்குள் பெரிய அளவில் மனஸ்தாபம் ஏற்பட்டதில்லை. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்து வந்தோம்.
வீட்டில் உள்ள நல்லது கெட்டதுகளை கூடுமானவரை நானே சமாளித்து விடுவேன். 

41 ஆண்டு வாழ்க்கையில், அவர் ஒரு முறை கூட கடிந்து பேசியது இல்லை. பிசினஸ் நெருக்கடிக்கு மத்தியிலும், அவர் குடும்பத்துக்கு தேவையான நேரம் ஒதுக்கி, எல்லாரையும் மகிழ்ச்சியா வைச்சிருந்தாரு.

கொரோனா காலத்துலயும் அவருக்கு மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியதைப் பார்த்த போது, அவர் செய்த சேவையை புரிந்துக் கொள்ள முடிந்தது!  



============================================================================================================  


தினமலரில் பிப்ரவரி மாதம் வந்த சுவாரஸ்யமான கட்டுரை.

நாடகத் துறையில் ஜாம்பவானாக திகழந்தவர் 'நாடக காவலர்' ஆர்.எஸ்.மனோகர். இவரின் நாடகங்களில் மேடை அமைப்பு பிரமாண்டமாகவும் மந்திர, தந்திரக் காட்சிகள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும்.வித்தியாசமாகவும் தத்ரூபமாகவும், செட் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் அவரது நாடகங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

சினிமாவில் புகழ்பெற்றாலும் நாடகத்தின் மீது தனி ஈடுபாடு உடையவர்.சினிமாவில் இருந்த போதே 1954ல் 'நேஷனல் தியேட்டர்ஸ்' நிறுவனத்தை ஆரம்பித்து பல்வேறு சமூக நாடகங்களை அரங்கேற்றினார். அவற்றின் வெற்றியை தொடர்ந்து பிரமாண்டமான புராண கதை நாடகங்களை நடத்தினார்.இலங்கேஸ்வரன், நரகாசுரன், சூரபத்மன், துரியோதனன் உள்ளிட்ட புராண காலத்து எதிர்மறைக் கதாபாத்திரங்களிடம் உள்ள, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் பற்றிய கதைகள் மட்டுமின்றி, சாணக்கியர் சபதம், சிசுபாலன், திருநாவுக்கரசர் போன்றவர்களின் கதைகள் என 30க்கும் மேற்பட்ட கதைகளை, 8000திற்கும் மேற்பட்ட முறை நாடகமாக மேடை ஏற்றியவர் மனோகர்.

மனோகரின் நாடகக்குழுவில் 34 ஆண்டுகளாக, 5000திற்கும் மேற்பட்ட நாடகங்களுக்கு மேடை நிர்வாக பொறுப்பாளராக இருந்தவர் ஆர்.நாகராஜன்.அவர் கூறியதாவது:ஆர்.எஸ்.மனோகரின் நாடகக்குழுவில் 1974ல் சேர்ந்தேன். மேக்கப், உடை, செட்டிங், மந்திர தந்திரகாட்சி அமைப்பு போன்றவற்றுக்காக, 26 பேர் பணியாற்றினர். அவர்களை நிர்வகிக்கும் பணியை செய்தேன்.ஒரு நாடகம், அரங்கேற்றத்திற்கு முன்பு, ஒன்றரை மாதம், இரவு பகலாக ஒத்திகை நடக்கும்.கடைசி 15 நாள், மேக்கப், உடை, இசை, லைட்டிங், செட், தந்திர காட்சி போன்றவைகளுடன் ஒத்திகை நடக்கும். அப்போது, காட்சிக்கு இடையே துரிதமாக மேடை அமைப்பு, உடை மாற்றுதல் போன்ற பயிற்சிகளை கொடுப்பார்.

மேடை அமைப்பிற்கு நேரம் அதிகமாகும் சமயங்களில், அதற்கேற்ப கதையுடன் கூடிய காமெடி காட்சி வைப்பார். அவரது நாடகங்களில், காமெடி காட்சி வருகிறது என்றால் அடுத்து மிகப்பெரிய செட் அல்லது தந்திர காட்சி வரப்போகிறது என அர்த்தம்.நாடகம் போடும் இடங்களுக்கு, மூன்று லாரி நிறைய மேடை அமைப்பு பொருட்கள் எடுத்து செல்வோம். வெளிமாநிலங்களுக்கு ரயிலிலும், வெளி நாடுகளுக்கு கப்பலிலும் மேடை அமைப்பு பொருட்களை எடுத்து செல்வோம்.

மனோகர் சினிமாவில் இருந்த போது, சூப்பர் ஸ்டார்களாக இருந்த எம்.ஜி.ஆர்., - சிவாஜி இருவருமே நாடகத்திலும் ஆர்வமாக இருந்தவர்கள். மனோகரின் நாடகங்களை இருவரும் நேரில் பார்த்து பாராட்டுவதும் வழக்கமானதுதான். ஒரு முறை, நாடகத்துக்கு எம்.ஜி.ஆர்., வந்திருந்த போது, அவருக்கு முன்வரிசையில் பெரிய பிரம்பு நாற்காலி போடப்பட்டிருந்தது.

'பின்னால் இருக்கும் பார்வையாளர்களுக்கு, மேடை சரியாக தெரியாது. அதை எடுத்து விடுங்கள்' எனக் கூறி, சாதாரண நாற்காலியில் அமர்ந்து நாடகம் பார்த்தார்.'மனோகரை நம்பி, 60 குடும்பங்கள் உள்ளன' என எங்கள் நாடகக்குழு குறித்து, எம்.ஜி.ஆர்., கூறுவது வழக்கம். மனோகரின் நாடகங்களால் கவரப்பட்டு அவருக்கு 'நாடக காவலர்' என்ற பட்டம் கொடுத்து பாராட்டினார்.அரசியலுக்கு அப்பாற்பட்டவர் மனோகர்.

மந்திர, தந்திர காட்சிகள்

நாகராஜன் கூறியதாவது:தந்திர காட்சிகள், ஆர்.எஸ்.மனோகர் நாடகத்தின் சிறப்பு. கதாபாத்திரங்கள், வானத்தில் பறப்பது, அம்புகள் பறந்து வந்து மோதி தீ பற்றி எரிவது போன்ற காட்சிகள் அதிசயமாக இருக்கும். பாறை, வான்மண்டலங்கள், சூரியன் வெடிப்பது, யானை துதிக்கையை ஆட்டியவாறு நடந்து வந்து மாலை இடுவது, பாம்பு படம் எடுத்து ஆடுவது போன்றவை எந்த வித எலக்ட்ரானிக்ஸ் கருவிகளும் பயன்படுத்தாமல் செய்தோம். நாடகங்களில்,

மேடைக்கு பின்புறம் உள்ள திரைச்சீலை, 22 அடி அகலம், 13 அடி உயரம் தான் இருக்கும். நாங்கள் இரு பக்கவாட்டிலும், 5 அடி அளவு என துாண்களுக்கு இடைவெளி விட்டு, திரைச்சீலை அமைப்போம். அது, 30 அடி அகலத்திற்கு, செட் அமைத்தது போல் பார்வையாளர்களுக்கு பிரமாண்டமாக தெரியும். 'டிராமாஸ்கோப்' என்ற இந்த தொழில்நுட்பத்தை மனோகர் மட்டும் தான் பயன்படுத்தினார்.அதே போல் மேடையில் மைக் வைத்திருப்பதே தெரியாத அளவிற்கு, 'ஸ்டிரியோபோனிக்' தொழில்நுட்பத்தை பயன்படுத்துவார்.

மேடையின் தரையில், பார்வைக்கு தென்படாத வகையில் குறைந்த உயரத்திலும், மேடைக்கு மேலே தொங்கும் வகையிலும், மைக் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் வசனங்கள் தெளிவாக கேட்கும்.நரகாசுரன் நாடகத்தில் வான்மண்டலத்தில் பறப்பது போன்ற காட்சியில், ஆர்.எஸ்.மனோகர் நடித்து கொண்டிருந்த போது மேலே இருந்து கிழே விழுந்து கழுத்தில் அடிபட்டு விபத்து ஏற்பட்டது.

அதே போல், திருப்பூரில் நாடகம் தொடங்கும் முன் காற்று, மழையால் மேடை முற்றிலும் சரிந்து விபத்து ஏற்பட்டது. பொருட்கள் எடுத்து செல்லும் போது, இரு முறை விபத்தில் லாரி கவிழ்ந்து, பல பொருட்கள் சேதமடைந்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

வெற்றி பெற்ற இலங்கேஸ்வரன்

இலங்கேஸ்வரன் நாடகத்தில் சீதையை ராவணன் மகள் என கதையில் வைத்திருந்தார், மனோகர். முதலில் அந்த நாடகம் சரியாக போகவில்லை. ஆனால், இலங்கையில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.அந்த கதையை காஞ்சி பெரியவரிடம் சென்று காட்டினார். அவர், 'இதில் தவறு ஏதும் இல்லை' என கூறியதுடன் ஆசிர்வாதம் செய்தார். அதன் பின் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு இடங்களிலும் அந்த நாடகம் மிகப் பெரிய வெற்றி பெற்று அதிக முறை நடந்த நாடகம் என்ற பெயர் பெற்றது.

===================================================================================================

இப்படிக் கூட ஒரு நிலை இருந்தது!



ஜோக்கா(ம்) இது!?



====================================================================================================



புத்தகம் வாங்கி வைத்ததும் எனக்கு சந்தேகம்...  முழுமையாக என்று போட்டிருப்பது சரியா?  பகுதி 1 என்று போட்டிருப்பபது சரியா?  பொருளடக்கத்தில் பகுதி 1, 2 என்று இருக்குமா என்று பார்த்தால் அப்படியும் இல்லை!  எனில், பகுதி 2 புத்தகம் இருக்கிறதா?  அப்புறம் ஏன் முழுமையாக என்று போடவேண்டும்?





==========================================================================================================

143 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா  .  .வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    புத்தாண்டு நல்லபடியாக ஆரம்பித்திருக்கிறது.
    வீட்டில் ஒரு முக்கிய நபருக்கு
    இன்று பிறந்த நாள். புத்தாண்டு ,பிறந்த நாள்
    என்று செய்திகளும் தொலைபேசி வாழ்த்துகளும்
    வந்து நாளைக் கலகலப்பாக்கின.
    இறைவன் எல்லோரையும் சுகமாகப் பாதுகாக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா..  வணக்கம்.   முக்கிய நபருக்கு பிறந்தநாளா?   எங்கள் வாழ்த்துகளை சொல்லிடுங்க..

      நீக்கு
  3. தரை வழி ஃபோனில் தான் இந்தத் தொந்தரவுகள்
    இருந்தன. மொபைல் ஃபோனிலுமா??
    அடப்பாவமே .

    மிக மிகக் கஷ்டம்மா. எப்படியோ சமாளித்திருக்கிறீர்கள்.
    மேடம் இருக்கும் போது , ஒரு நம்பர் வித்தியாசத்தில் வீட்டு
    நம்பர்.

    தோட்டமா???????? அம்மா இருக்காங்களா,
    கார்டனுங்களா. வணக்கம் மா::)))))))))))
    இப்படி வேடிக்கை 7,8 மாதங்கள் தொடர்ந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொபைலென்ன...  தரை வழியென்ன..  எலலவற்றிலும் ஒரே தொந்தரவு!   ஹா..  ஹா..  ஹா..  உங்களுக்கும் தொந்தரவு வந்திருக்கிறதா?

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய உங்கள் முதல் கட்டுரை போல் அனைவருக்கும் இந்த அனுபவம் உண்டு என நினைக்கிறேன். எங்களுக்கும் இதுபோல் ஒரு சில வருடங்களுக்கு முன் ஏற்பட்டது. ஒரு பெண் சற்று முரட்டுக் குரலில் எங்கள் கைப்பேசிக்கு தொடர்பு கொண்டு, அவரின் யாரோ ஒரு உறவை பற்றி கூறி "பணம் முழுமையும் எப்போ தரப்போறே" என்று என்னென்வோ கூறி, திட்டியபடி இருப்பார். நாங்கள் ராங் நம்பர் என நூறு தடவை சொன்னாலும், அவளின் பல நம்பரை மாற்றியபடி எங்கள் கைப்பேசிக்கு தொடர்பு வைத்தபடி இருக்கவும், எங்களுக்கு எங்கள் கைப்பேசிக்கு வேறு யாரிடமிருந்து கால் வந்தாலும் "திக்" கென்று இருக்கும். நாங்களும் அவள் ஃபோன் நம்பருக்கெல்லாம் "பைத்தியம்" என்றுதான் பெயராக்கம் செய்து வைத்திருந்தோம். அதனால் அதை கூடிய வரை எடுப்பதேயில்லை. பல மாதங்களாக இந்த தொந்தரவு. பிறகு ஒரு நாள் என் மகனின் நண்பருக்கு உறவான காவல் துறையில் பெரிய பதவியிலிருந்தும் ஒரு உறவை குறிப்பிட்டுச் சொல்லி "அவரிடம் சொல்லவா?" என்று கேட்ட பின்தான் அந்த ஃபோன் கால் ஒரு முடிவுக்கு வந்தது. எதற்கும் உதவும் ஃபோனினால் இத்தனை தொந்தரவுகளும் இருக்கின்றன. என்னசெய்வது? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      நீங்களும் உங்கள் அலைபேசி அவஸ்தைகளை நல்ல நகைச்சுவையாக எழுதி உள்ளீர்கள். சாமர்த்தியமாக பேசி சமாளித்திருக்கிறீர்கள். எங்கள் அனுபவத்தின் பதிலுமே ஒரு சிறு கட்டுரை ஆகி விட்டது. இனியாகிலும் அனைவருக்கும் இந்த தொந்தரவுகள் வராமலிருக்க பிரார்த்தித்துக் கொள்வோம்.

      நீக்கு
    2. கமலா அக்கா...   எங்கள் லேண்ட்லைன் தொலைபேசிக்கு இதுமாதிரி மிரட்டல் அழைப்பு ஒன்று வந்துள்ளது.  எங்கள் அலுவலகத்தில் உடன்வேலை செய்த நண்பர் ஒருவர் எங்கேயோ கடன் வாங்கிவிட்டு, ரெபரென்ஸ் நம்பராகி என் தொலைபேசி எண்ணைக் கொடுத்திருக்க, எனக்கு அதனால் அந்த தொல்லை...   அம்மம்மா...  நேரில் வந்து பாருங்கள் என்று கத்தி இருக்கிறேன்.  

      நீக்கு
  5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலம் வாழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    கவிதை நன்றாக உள்ளது. உண்மைதான்.. மெளன பகிர்தலிலும் ஒரு நிறைவுதான். ரசித்தேன்.

    தினமலர் சொல்கிறார்கள் பகுதியில் எம்.பி வசந்தகுமார் அவர்களைப்பற்றி அவர் மனைவி சொன்னது நன்றாக உள்ளது. ஒரு நல்ல கணவன் மனைவியின் பரஸ்பர புரிந்துணர்வு படிக்கும் போதே நன்றாக உள்ளது. நேற்று விஜய் டிவியிலும் அவர் பிறந்தநாள் வாழ்த்துக்களை குறிப்பிட்டார்கள்.

    புகழ் பெற்ற நாடக கலைஞர் ஆர். எஸ் மனோகரின் நாடக கலை வளர்ச்சிகளை பற்றி தெரிந்து கொண்டேன். சினிமாவிலும் அவர் நடிப்பு நன்றாக இருக்கும். சிலரின் புகழ் என்றும் எங்கும் மங்குவதில்லை.

    ஜோக் நன்றாக உள்ளது. அந்த காலத்தில், தண்ணீர் கூட தாயோ, சகோதரியோ, மகளோ, மனைவியோதான் எடுத்து தர வேண்டும். காலம் அப்படி. அதற்கேற்ற ஜோக்.

    புத்தகம் பற்றிய சந்தேகம் எனக்கும் வருகிறது. விரிவாக படித்த உங்களுக்கு தீர்ந்து விட்டதா என அடுத்த கதம்பத்தில் குறிப்பிடவும். இன்றைய கதம்பம் அனைத்தும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையை ரசித்ததற்கும், ஒவ்வொன்றையும் படித்துக் கருத்து சொல்லி இருப்பதற்கும் நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  7. தம்பதிகளின் ஒற்றுமை சொல்லப்பட்டிருக்கும் அழகு
    மிக இனிமை. வாழ்த்துகள் ஸ்ரீராம்.
    கூடவே வாழ்ந்தவருடைய மௌனத்தையும்
    புரிந்து கொள்வது வெகு இயல்பே. பரஸ்பர மரியாதையும் அன்பும்
    இருந்தால் அதிர்ஷ்டம்.

    பதிலளிநீக்கு
  8. வசந்த அண்ட் கோ உரிமையாளரைப் பற்றி அவர் மனைவி பகிர்ந்திருக்கும்
    நேர்மையான வாசகங்கள்.
    மனதைத் தொட்டன.
    மகத்தான புரிதல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  முதல் கவிதைக்கும் இந்தச் செய்திக்கும் கொஞ்சம் பொருந்திப் போகிறதோ...

      நீக்கு
  9. போன் தொந்தரவு ரொம்ப தமாஷாக இருந்தது. வடிவேலு காமெடியுடன் ஒப்பிடலாம். 

    கவிதை சிந்திக்க வைக்கிறது. உண்மையில் வயதானவுடன் தான் துணையின் அருமை புரிகிறது. 

    சீனப்பல்: அந்தக்காலத்தில் (சிறிமாவோ காலத்தில்) பல் மருத்துவர்கள் பலரும் சீனர்கள் ஆக இருந்தார்கள். JVP (ஆயுத புரட்சி) தொடங்கிய காலம் அது. அப்போது பிடுங்கப்பட்ட பல் இன்னும் முளைக்கவில்லை. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JC ஸார்..  சீனா இப்போது இந்தியாவுக்குத் தோலை தர, அதே ஸ்ரீலங்காவிடம் நெருக்கமாக இருக்கிறியாது!  கவிதையை ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  10. ஸ்ரீலங்கா கார்ட்டூன் மிக சிறப்பு.

    ஜோக்கில் இருக்கும் கணவரைப் போல நேரிலேயே
    பார்த்திருக்கிறேன்.

    அது அந்தக் காலம் என்றும் சொல்ல முடியாது.
    இப்பொழுதும் இருக்கிறார்கள்:_)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் புரியவில்லைம்மா...  முழுவதும் பார்த்தபின் தெரியும்.

      நீக்கு
    2. ஜோக்கில் இருக்கும் கணவர் நிறைய இடங்களில் இருக்கிறார்கள்!   ஹா..  ஹா..  ஹா...   நன்றி ம்மா.

      நீக்கு
  11. முழுமையாக என்று போட்டிருக்கும்
    புத்தகம் முழுமையாகவும் இருக்கலாம் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் புரியவில்லைம்மா...  முழுவதும் பார்த்தபின் தெரியும்.

      நீக்கு
  12. ராங் நம்பர் அழைப்புகள் சில நேரங்களில் இப்படித் தொடர்ந்து தொந்திரவு செய்வதுண்டு. நம்பரை ப்ளாக் செய்து பார்க்கலாம்.

    கவிதை மிக அருமை.

    /வசந்தகுமாரின் மனைவி தமிழ்ச்செல்வி:/ உழைப்பால் உயர்ந்தவரைப் பற்றிய சிறப்பான பகிர்வு.

    ஆ.எஸ். மனோகர் நாடகத் துறையில் கோலோச்சியவர்.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்,  நம்பரை பிளாக் செய்யலாம்.  ஆனால் ஏனோ செய்யவில்லை!

      நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
    2. //நம்பரை பிளாக் செய்யலாம். ஆனால் ஏனோ செய்யவில்லை!

      இங்கேதான் கதை ஒளிந்திருக்குது.

      நீக்கு
  13. அவர்கள் ஏழு ஓட்டையும் எந்த சின்னத்துக்கு போடச்சொன்னார்கள் ?

    போன் தொல்லையிலிருந்து விடுபட்டதும் "அப்பாடி" என்று சொன்னால் போனால் பேசியவர் எடப்பாடி என்று எடுத்துக் கொள்ளலாமா ?

    திரு. வசந்தகுமார் அவர்கள் உழைப்பாளிகளுக்கு முன்னோடி.

    ஆர். எஸ். மனோகர் நாடக கலையை வளர்த்தவர்களில் இவரும் ஒருவர்.

    இவருக்கு குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் எந்தக் கட்சி சார்பில் பேசினார்களோ, அதன் சின்னத்தில்தான் போடச்சொன்னார்கள் ஜி.

      அம்மாடி என்று சொல்லி இருந்தால்?

      மனோகருக்கு வாரிசுகள் இல்லையா?  ஓ...

      நன்றி ஜி.

      நீக்கு
    2. //அம்மாடி என்று சொல்லி இருந்தால் ?//

      அப்ப எடப்பாடியேதான்.

      நீக்கு
  14. ஃபோன் தொல்லைகள் - ஹாஹா... எனக்கும் இப்படிச் சில அனுபவங்கள் உண்டு. எனது பக்கத்தில் முன்னர் எழுதி இருக்கிறேன்.

    வசந்தகுமார் - நல்லதொரு பகிர்வு.

    நாடகம் குறித்த தகவல்கள் நன்று.

    பதிவின் பகுதிகள் அனைத்தும் சிறப்பு. தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருக்குமே இந்த அனுபவங்கள் இருக்கும்..

      நன்றி வெங்கட்.

      நீக்கு
  15. தேர்தலுக்கு சிலநாட்கள் முன்பு, தொடர்ந்து எனக்கு உத்திரப்பிரதேசத்திலிருந்து போன் கால் வந்துகொண்டே இருந்தது, ஹஸன் என்ற காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி (தமிழகத்தில் அவர் நிற்கிறார்). யார் யாருக்கு என்ன என்ன தொடர்புகளோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா...  ஹா,...   எனக்குப் பரவாயில்லை.  தமிழகத்திலிருந்தே வந்தது!

      நீக்கு
  16. வசந்தகுமார் அவர்களின் உழைப்பு பிரமிக்கத் தக்கது...

    ஃபோன் தொல்லை சிரமம் தான்...

    பதிலளிநீக்கு
  17. நாடகக் காவலரின் பேட்டிகள், அவரைப்பற்றிய செய்திகள் நிறையப் படித்ததுண்டு. அனால் அவரது நாடகம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை. நான் பார்த்த ஒரே நாடகம் எஸ்.வி.சேகருடையது (ஓசி டிக்கெட், 88ல்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் மெரினா நாடகம், எஸ் வி சேகர் நாடகம்,பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
    2. மனோகர்,மெரீனா, கிரேஸி மோகன், காத்தாடி ராமமூர்த்தி, டி.வி.வரதராஜன், பூவராக மூர்த்தி போன்ற பல குழுக்களின் நாடகங்களை பார்த்து ரசித்திருக்கிறேன்.

      நீக்கு
    3. மற்றவை வண்ணச்சுடராக கேட்டிருக்கிறோம். சுஜாதா எழுதி பூர்ணம் தியேட்டர்ஸ் அரங்கேற்றிய கடவுள் வந்திருந்தார், டாக்டர் நரேந்திரநாத்தின் வினோத வழக்கு,ஞானியின் பரீட்சார்த்த நாடகங்கள் போன்றவற்றை பார்க்க ஆசைப்பட்டதுண்டு.

      நீக்கு
    4. அநேகமாக மனோஹர் தவிர்த்து மற்றவர்களின் நாடகங்கள் நிறையவே பார்த்திருக்கோம். இது குறித்து முன்னரே சொன்ன நினைவும் இருக்கு. மனோஹர் நாடகங்கள் தூர்தர்ஷன் தயவில் சென்னைத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கோம். சாணக்கிய சபதம், மற்றும் இன்னொரு நாடகம். இப்போக் கூட அத்திமலைத் தேவன் படிக்கையில் சாணக்கியன் சபதம் போட்ட இடம் வரும்போது நந்தர்கள் நினைவு, பேரரசனுக்கு மண் பாத்திரத்தில் தண்ணீர் கொடுப்பது போன்றவை நினைவில் வந்தன.

      நீக்கு
    5. டெலிவிஷனில் பார்ப்பது வேறு.  நான் நேரில் பார்பபதைச் சொல்கிறேன்.  வண்ணச்சுடர் என்றால் நானும் கேட்டிருக்கிறேன்.  அதைத்தவிர எஸ் வி சேகர் நாடகங்களை வண்ணக்கோலங்களாக டீவியில் பார்த்திருக்கிறேன்!

      நீக்கு
    6. மேடை நாடகங்கள் குறித்துத் தான் முதலில் சொல்லி இருக்கேன். எஸ்.வி.எஸ்., மெரினா, சோ, காத்தாடி போன்றோரின் நாடகங்கள் பல பார்த்திருக்கேன்.

      நீக்கு
    7. மனோகரின் நாடகங்களின் தொழில் நுட்பம் அந்த நாட்களிலேயே உலகத்தரம். இலங்கேஸ்வரன் அல்லது விசுவாமித்திரன் (?) நாடகம்.. வாணி மகால் அல்லது நாரத கானசபா என்று நினைக்கிறேன்.. அண்டம் அதிரும் பொழுது பார்வையாளர்கள் அமர்ந்திருந்த நாற்காலிகள் லேசாக அதிரும் புயல் வீசும் பொழுது அரங்கத்தில் காற்று அதிகமாக வீசும் தந்திரங்கள் செய்திருந்தார்.. மனோகர் நாடகங்களுக்கான டிகெட் விலை அதிகமாக இருந்தது.

      நீக்கு
    8. இந்தத் தொழில் நுட்பத்தை சில தியேட்டர்க்காரர்கள் பின்னர் தங்கள் தியேட்டரில் கொண்டுவந்தார்கள் என்று நினைக்கிறேன்!

      நீக்கு
    9. கடவுள் வந்திருந்தார் பார்த்திருக்கிறேன். சப்பென்றிருந்தது.

      நீக்கு
    10. பார்த்த அனுபவங்களில் படு மோசம் எஸ்விசே நாடகங்கள்.

      நீக்கு
    11. //கடவுள் வந்திருந்தார் பார்த்திருக்கிறேன். சப்பென்றிருந்தது./

      படிப்பது போலிருக்காது பார்க்கும் அனுபவம்,

      நீக்கு
  18. வசந்தகுமாருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கக் கூடியவர்கள் வி.ஜி.பன்னீர்தாஸ் என்று நினைக்கிறேன். தவணை முறை என்பதில் கொடிகட்டிப் பறந்தவர் அவர்.

    இப்போதெல்லாம் ஏகப்பட்ட விளம்பரங்கள், எல்லாத் தொலைக்காட்சியிலும் (முன்பு வசந்த் தொலைக்காட்சில மட்டும்தான் விளம்பரம் வரும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம்.  இதில் எல்லம் விஜிபித்தானே முன்னோடி.

      நீக்கு
  19. சதாசிவ பண்டாரத்தார் எழுதிய புத்தகங்களை வாய்ப்பிருந்தால் வாங்கணும். உள்ள என்ன என்ன டாபிக் என்றும் போட்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். அப்புறம் படம் எடுத்தே போடுகிறேன் நெல்லை.  சோழர்கள் பற்றிய குறிப்புகள்.

      நீக்கு
    2. சதாசிவ பண்டாரத்தார் என்ற பெயருக்கே வாங்கலாம். படிக்கிறோமோ இல்லையோ.

      நீக்கு
  20. அடையாளம் தெரியா அழைப்புகள் என்றும் தொல்லைதான்

    பதிலளிநீக்கு
  21. எங்களுக்குப் பலரிடமிருந்தும் அழைப்புகள் வரும். ஐசிஐசிஐ, ஹெல்த்கேர், மோதிலால் ஓஸ்வால், சில வங்கிகள், இன்ஷூரன்ஸ் கம்பெனிகள், பெரிய ஓட்டல்கள், இப்படி வரும். வங்கிகள் பணம் தரேன்னு ஆசை காட்டும். ஹெல்த்கேர் எல்லாம் பணம் பிடுங்கப் பார்க்கும். மோதிலால் ஓஸ்வால் எங்களிடம் இல்லாத ஷேர்களைப் பற்றிக் கேட்பாங்க. எங்களுக்கும் அதுக்கும் வெகு தூரம்னு சொன்னாலும் கேட்பதே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிப் பார்த்தால் எனக்கு அடிக்கடி ஸ்டார் ஹெல்த்கேரிலிருந்து மிக அடிக்கடி போன் வரும்!  பிசினஸ் இலலாத விஷயமாய் இப்படி சொந்த விஷயமாய் வந்த இரண்டு போன்கால்கள் இவை.

      நீக்கு
  22. சதாசிவ பண்டாரத்தார் புத்தகம் விறுவிறுப்பாகவும், நன்றாக சுவாரசியமாகவும் இருக்கும். இருந்தாலும் நீங்கள் பேராசிரியர்/தொல்லியல் அறிஞர் திரு நாகசாமி அவர்கள் எழுதின வரலாற்றுப் புத்தகங்களைப் படியுங்கள். அதிலும் ராமானுஜர் பற்றி அவர் எழுதி இருப்பது கட்டாயமாய்ப் படிக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தகத்தின் பெயர் சொல்லுங்கள்.

      நீக்கு
    2. Ramanuja! The Myth! or The Myth and True! சுட்டி என்னிடம் இருந்தது. இப்போது கிடைக்கலை. நான் சிதம்பர ரகசியம் எழுதும்போது கோவிந்த ராஜப் பெருமாள் பற்றிய தகவல்களுக்குப் பயன்பட்டது. அப்போத் தான் உல(க்)கையின் "தசாவதாரம்" திரைப்படமும் வந்திருந்த நினைவு. என்னோட ஆன்மிகப் பயணம் வலைப்பக்கம் ஒரே அல்லோலகல்லோலமாக இருக்கும் அப்போல்லாம்.

      நீக்கு
    3. கிடைக்கிறதா, பார்க்கிறேன்.

      நீக்கு
  23. வசந்தகுமார் பற்றி அவர் மனைவி சொல்லி இருப்பது நெகிழ வைக்கிறது. உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே மனைவியை அழைத்துக் குடிநீர் கேட்பது எங்க வீட்டில் எல்லாம் சகஜம். லான்ட்லைன் தொலைபேசிக்கு முன்னால் அம்பத்தூரில் இருக்கையில் விசித்திரமான அழைப்புக்கள் எல்லாம் வரும். அதை எல்லாம் பதிவாகவும் எழுதினேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே மனைவியை அழைத்துக் குடிநீர் கேட்பது எங்க வீட்டில் எல்லாம் சகஜம்.// அதே அதே. ஃப்ரிட்ஜீக்கு வெகு அருகில் உட்கார்ந்து கொண்டு தண்ணீர் கேட்பார். நான் கை வேலையை விட்டு விட்டு வந்து தண்ணீர் எடுத்துத்தர வேண்டும்.

      நீக்கு
    2. மனைவி எப்போப்்பாத்தாலும் உட்கார்ந்துகொண்டு டிவி சீரியல் பார்ப்பது, கணிணியில் பதிவு பார்ப்பது எழுதுவதுன்னு இருந்தால் ஹெல்த் பிரச்சனைகள் வந்து கஷ்டப்படுவா. அப்புறம் நாம கரண்டி பிடிக்கும் நிலை ஆயிடும் என்று மனைவியின் உடல்நலனில் அக்கறை கொண்டு வீட்டுக்குள், காசு வாங்காமல் நடைப்பயிற்சி கொடுக்கிறார் என்ற பாசிடிவ் சிந்தனை ஏன் இந்தப் பெண்களுக்கு வரமாட்டேன் என்கிறது?

      நீக்கு
    3. நெல்லையாரே, இங்கே தலைகீழ்! டிவி சீரியல் பார்ப்பது அவர் தான். நான் காலை ஓய்வு நேரத்தில் வேறே வேலைகள் இல்லை என்றால் மட்டுமே கணினிக்கு வருவேன். மற்றபடி மத்தியானம் இரண்டு மணி அல்லது ஒன்றரை மணியிலிருந்து ஓய்வு நேரத்தில்/வேலைகள் இல்லாதப்போப் பதிவு பார்ப்பது எல்லாம்!

      நீக்கு
    4. அதுலயும் நான் பாசிடிவ் ஆகத்தான் பார்க்கிறேன். டி.வியை சும்மா வச்சிருந்தால் மனைவி சீரியல் பார்க்க ஆரம்பித்து அந்த அப்சஷன் வந்துடக்கூடாதே, நமக்கு கண்ணுக்கு பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை, மனைவி நல்லா இருக்கணும் என்கிற நல்லெண்ணத்தை நான் பார்க்கிறேன். ஹாஹா

      (On a serious note, I respect your time allocation. I wanted to follow that)

      நீக்கு
    5. //அதே அதே. ஃப்ரிட்ஜீக்கு வெகு அருகில் உட்கார்ந்து கொண்டு தண்ணீர் கேட்பார்.//

      சமீபத்தில் ஜோஜி என்றொரு மலையாளப்படம் தெரியாத்தனமா பார்த்துதொலைத்தேன்.  அதில் இதுமாதிரி ஒரு காட்சி வந்தது!

      நீக்கு
    6. //அப்புறம் நாம கரண்டி பிடிக்கும் நிலை ஆயிடும் என்று மனைவியின் உடல்நலனில் அக்கறை கொண்டு வீட்டுக்குள், காசு வாங்காமல் நடைப்பயிற்சி கொடுக்கிறார் என்ற பாசிடிவ் சிந்தனை ஏன் இந்தப் பெண்களுக்கு வரமாட்டேன் என்கிறது?/

      ஹா...  ஹா...  ஹா...

      நீக்கு
  24. சாப்பிடப் போறேன். பீர்க்கங்காய்த் துவையல், வெள்ளரிக்காய்ப் பச்சடி, மிளகு ரசம், வாழைக்காய் வதக்கல். தொட்டுக்க மாவடு/துண்டம் மாங்காய்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான் மெனு சொல்லி விட்டீர்கள்!  எங்கள் இல்லத்தில் மிளகு ரசம் உண்டு.  கோவைக்காய் பொரியல்.  வெண்டை சாம்பார்!

      நீக்கு
    2. எங்கள் வீட்டில் போளி, மாங்காய் பச்சடி உட்பட எல்லாம் இருப்பதால் இன்று நோ சமையல் டே!ஜாலி! என்று சொல்ல முடியவில்லை, துணை தேவதை வராததால் சிங்கில் குவிந்திருக்கும் பாத்திரங்களை கழுவ வேண்டும்.
      எங்கள் குடியிருப்பில் கோவிட் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அங்கு செகண்ட் டோஸ் கோவி ஷீல்ட் போட்டுக் கொண்டிருக்கிறேன்.

      நீக்கு
    3. எங்கள் வீட்டில் எனக்கு, சேவை, நான் பண்ணின புளிசேரி, பொரித்த அப்பளம். கிலோ 10 ரூபாய்க்கு கிடைக்குதேன்னு வாங்கி, திருவித் தந்து, அதை வைத்து மனைவி பண்ணின கேரட் அல்வா .

      பெரும்பாலும் எங்கள் வீட்டில் நான் சொல்லும் மெனுதான். எதுக்கு மத்தவங்க, இன்றைக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சு கஷ்டப்படணும் என்பதால் (பா..பாசிடிவ் சிந்தனை..... நெகடிவா நினைப்பவங்க ஆணாதிக்கம்னு சொல்லிடப் போறாங்க).

      நீக்கு
    4. நான் நேற்று விநியோகம் செய்ததால் எதுவும் மிஞ்சவில்லை. பண்ணினதே கணக்காகத் தான் பண்ணி இருந்தேன். அதோடு மாங்காய்ப் பச்சடியை எல்லாம் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதில்லை. கொஞ்சம் போல் மிச்சம் இருந்ததை வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்துட்டேன். எங்க வீட்டில் தினம் மெனு அவர் சொல்வது தான்! இன்னிக்குக் கூட மெனுவை மாற்றப் பார்த்தார். பீர்க்கங்காய்ப் பிட்லை, வாழைக்காய் வதக்கல் அல்லது கொத்தவரைக்காய்க் கறி, ரசம் என! நான் தான் பிடிவாதமாக 3 நாட்களாய்த் தொடர்ந்து சாம்பார். இன்னிக்கு நோ சாம்பார் தினம்னு சொல்லிட்டேன். ஒருவழியா ஒத்துண்டார்.

      நீக்கு
    5. போளி மாங்காய் பச்சடி இன்னமுமா மீதி இருக்கிறது?  இன்றும், அடுத்த இரண்டு  நாட்களும் இங்கும் பாஸ்தான் எல்லா வேலையும்!

      நீக்கு
    6. //பெரும்பாலும் எங்கள் வீட்டில் நான் சொல்லும் மெனுதான். //

      நான் இந்த சங்கடத்தில் மாட்டிக் கொள்வதில்லை!  என்ன வருகிறதோ அதுதான்.  கொஞ்சம் சஸ்பென்சாக இருந்தால் அதுவே குட்டி சுவாரஸ்யம்!

      நீக்கு
    7. //கொஞ்சம் போல் மிச்சம் இருந்ததை வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்துட்டேன். எங்க வீட்டில் தினம் மெனு அவர் சொல்வது தான்! //


      தினமலர் செய்தி போடுவது போல அர்த்தமே மாறவில்லை?!!

      நீக்கு
    8. ஒரு சின்ன மாங்காயின் ஒரு பக்கத்தைத் தோல் சீவிப் பொடியாக நறுக்கி மாங்காய்ப் பச்சடி! மற்ற பாகங்களைத் துண்டம் மாங்காய் ஊறுகாயாகப் போட்டாச்சு! அந்த மாங்காய்ப் பச்சடியே செலவாகவில்லை. :)

      நீக்கு
    9. //தினமலர் செய்தி போடுவது போல அர்த்தமே மாறவில்லை?!!// ஆமா இல்ல? ஆனால் தினம் காலை நான் காய்கள் தேர்வு செய்கையில் அவங்க வீடு பெருக்கித் துடைத்துக் கொண்டிருப்பாங்க! நடுவில் புகுந்து கருத்துக் கண்ணம்மாவாகக் கருத்துச் சொல்லுவதும் உண்டு. எனக்குத் தான் கோபம் வரும். :))))) அதனால் இப்போல்லாம் காலம்பரவே கேட்டு வைச்சுடறேன். அவங்க வேலைக்கு வருவதற்குள் காய்கள் நறுக்குதல் முடியணும். இல்லைனா பின்னர் நறுக்குவேன்.

      நீக்கு
    10. அப்போ நிஜமாவே அப்படித்தானா?!!!

      நீக்கு
    11. இப்போல்லாம் குறைத்திருக்கேன். பேச்சையும் குறைக்கும்படி மறைமுகமாகச் சொல்லி இருக்கேன். நான் பேசவே மாட்டேன். ஆகவே தொந்திரவு கொஞ்சம் இல்லை நிறையவே குறைச்சல்!

      நீக்கு
    12. அட்டகாச மெனு. நெய் உண்டா?

      நீக்கு
    13. என்னோட மெனுவில் பீர்க்கங்காய்த் துவையலோடு நல்லெண்ணெய் தான். ஶ்ரீராம் தான் வெண்டைக்காய் சாம்பாருக்கு நெய் விட்டுக் கொண்டிருப்பார்.

      நீக்கு
    14. அப்படியா?  எனக்கு சாம்பாருக்கு நெய் விட்டுக்கப் பிடிக்காது.  ஏற்கெனவே காரம் தெரியாது.  நெய்யும் விட்டுக் கொண்டால்...!

      நீக்கு
  25. இன்றைய கதம்பம் வழக்கத்தை விட அருமை..

    பதிலளிநீக்கு
  26. கைக்கு அருகிலுள்ள தண்ணீர்க் குவளையை எடுத்துத் தருவதற்கும் ஆட்கள் வைத்திருக்கின்றார்கள் - மாதாந்திர சம்பளம் கொடுத்து!..

    பதிலளிநீக்கு
  27. ராங் கால்கள் இங்கு வரவில்லை. மஸ்கட்டில் இருந்த பொழுது ஒருவன் ஃபோன் செய்து அசிங்கமாக பேசுவான். அவன் யார் என்று என் கணவர் கண்டு பிடித்து மிரட்டியதும் நிறுத்தினான்.
    எங்கள் உறவில் ஒரு பெண்மணி ராங் நம்பர்களோடெல்லாம் நட்பாகி விடுவார். ஹலோ மை டியர் ராங் நம்பர் பாடல் நினைவுக்கு வருகிறதா? ஹாஹா! ஆனால் அந்த மாதிரி இல்லை, இவருக்கு போன்செய்த ராங் நம்பர் ஒரு டாக்டரைத் தொடர்பு கொள்ள விரும்புகிறார் என்றால் இவர்,"ஏன் அவரை கன்சல்ட் செய்கிறீர்கள்? அவருக்கு பதிலாக இவரைப் பாருங்கள்" என்றுஅதற்கான ஆலோசனைகளை வழங்க ஆரம்பித்து விடுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா..   சுவாரஸ்யமான தகவல்கள்.

      நீக்கு
    2. ஹையோ! இதை நானும் முன்னரே சொல்லி இருக்கணும். நம்மவர் இருக்காரே! தவறான தொலைபேசி அழைப்பு எனத் தெரிந்தாலும் விட மாட்டார். பேசிப் பேசி வெறுப்பேத்தி அவங்களா வைக்கும்வரை தொண தொண! எனக்கோ கோபமாய் வரும். நான் தொலைபேசியை எடுத்தால் எடுத்த உடனே தவறான அழைப்பு எனத் தெரிந்ததும் எதுவுமே பேசாமல் தொலைபேசி அழைப்பைத் துண்டித்து விடுவேன்.

      நீக்கு
    3. நானும் அப்படிச் செய்திருக்கிறேன்.  முன்னர் பதிவும் போட்டிருக்கிறேனே...!

      நீக்கு
  28. மனோகர் நாடகங்களில் நான் சூரபத்மன் மற்றும் மாலிகாபூர் பார்த்திருக்கிறேன். சூரபத்மனில் குகை திறப்பது போன்ற காட்சிகள் பிரமிப்பை தந்தன. மாலி காபூரில் தந்திரக் காட்சிகள் குறைவு. திருச்சி பிஷப் ஹீபர் ஹைஸ்கூல் க்ரெளண்டில் நடந்தது. அப்போது அந்தப்பள்ளி தெப்பக்குளத்தில் இருந்தது. அங்குதான் District sports நடக்கும். காம்ப்ளிமெண்ட் டிக்கெட் என்பதால் முன்வரிசையில் உட்கார்ந்து பார்க்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோகர் நாடகம் பார்க்க எனக்கு நிறைய ஆசை கிருந்தது.  வாய்ப்பு அமையவே இல்லை.

      நீக்கு
  29. வித்தியாசமாக ஒரே ஒரு பின்னூட்டத்தையாவது பார்க்க ஆசை.
    அப்பாத்துரைக்கு ஃபோன் போட்டு வரச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதையாவது நீங்கள் கொடுத்திருக்கலாம் ஜீவி சார்... இன்றைய பதிவில் ஸ்கோப் இருக்கு

      நீக்கு
    2. ஏன், இதுவே வித்தியாசமான பின்னூட்டம்தானே...!

      நீக்கு
    3. வித்தியாசமான பின்னூட்டம் எனில் இதில் இல்லாத ஏதோ ஒன்றைப் பத்தித் தான் சொல்ல வேண்டி இருக்கும். அப்பாதுரை அம்பேரிக்கா போயிட்டாரா? அப்படி எனில் தூங்கிட்டு இருப்பார். அதிகாலை மூன்றரை மணி இருக்கும்.

      நீக்கு
    4. அப்பாதுரை எப்பவோ அமெரிக்கா போயாச்சு!

      அவர் இந்தப் பதிவுக்கு இன்னும் இரண்டு வாரம் கழித்து வரக்கூடும்!

      நீக்கு
    5. ஹாஹாஹா! ஆமாம். என் கதைக்கு இப்போத் தான் கருத்துச் சொல்லி இருந்தார். வாட்சப்பில் கொடுத்திருக்கார். :)))))

      நீக்கு
    6. பிளாக்கில் ஒன்றும் வரவில்லையே?

      நீக்கு
    7. நான் அதை எடுத்துப் போடவில்லை. கிட்டத்தட்ட "சாட்டிங்" செய்தார். ஆகவே நான் பதில் சொல்லிட்டு விட்டுட்டேன்.

      நீக்கு
    8. எடுத்துப் போடலாமில்லையா? தொடர்ச்சி கே.வா.போ.கதையா வருமில்லையா? அதுக்கு உபயோகமாக்கூட இருக்கலாமில்லையா?

      நீக்கு
    9. அப்படித் தான் நானும் நினைச்சேன், ஸ்ரீராம்.

      நீக்கு
    10. நெல்லை! சேலம் பொருட்காட்சி திருவிழா, நாடங்களுக்கு அந்தக்காலத்தில் பெயர் போனது. மனோகரின் இலங்கேஸ்வனும்,சாணக்கிய சபதமும் பார்த்திருக்கேன். எம்ஜி ஆர் இன்பக்கனவு நாடகம் போடுவார்.
      எம்.ஆர்.ராதா கதை தனி. அவர் போட்ட நாடகத்தை தடை பண்ணிட்டாங்கனா, வேறே பெயர்லே அதுவே அடுத்த நாள் அரங்கேறும். ஒரு நியூஸ் கையிலே எடுத்திண்டு மேடைக்கு வந்தார்ன்னா அந்தந்த நேரத்தது நியூஸ்லாம் ஜில்லுனு நாடகக் காட்சிகளாயிடும்!

      நீக்கு
  30. // நம்ம லீடர் அங்கே இருப்பார்...   அவர்ட்ட ஃபோனைக் கொடப்பா.."  என்றது எதிர் முனை.  //
    ஆமா லீடர்த்தான் பேசறேன் உடனே 10 பார்சல் மசால்தோசையும் 30 இட்லியும் சூடா  கொண்டான்னு சொல்லியிருக்கணும் :)))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா..  ஹா...   நான் ரொம்ப அப்பாவியா காட்டிகிட்டேன்.

      நீக்கு
  31. ராங் காலுக்கெல்லாம் நான் இப்போ அசருவதில்லை ..ஒருமுறை ஆக்சிடன்ட் க்ளெய்ம்ன்னு சொல்லி ரொம்ப தொல்லை .நான் என்ன செஞ்சேன் தெரியுமா :) ஆமா ஆக்சிடன்ட் நடந்துச்சு நான் பயணம் செஞ்சது விமானத்தில் :) தெரியாம அட்லாண்டிக் ஓஷன்ல இறக்கிட்டேன் :) பிளேனுக்கு சேதாரம் எவ்ளோ பணம் தருவீங்கன்னு கேட்டேன் :) அதோட அந்த நம்பர் வருவத்தில்லை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரை தமிழனும் ஜெயக்குமார் சாரும் சொல்வது போல் செய்யுங்க .நானும் என்னுடைய மொபைலில் call பிளாக்கர் ஆப் வச்சிருக்கேன்.மொபைலில் தேவையற்ற அழைப்பு வர்ரதில்லை .எனக்கு வருவது லேன்ட் லைன் கால்ஸ் தான் .அதிலும் with held நம்பர் எங்க போன் ஏற்காது . 

      நீக்கு
    2. மதுரைத்தமிழனா?  இருங்க மேலே போய் கமெண்ட் பார்க்கிறேன்!  மெயில் பாக்ஸுக்கு வராவிட்டால் கவனமில்லாமல் போய்விடுகிறது!

      நீக்கு
  32. ..சீதையை ராவணன் மகள் என கதையில் வைத்திருந்தார், மனோகர்.//

    அப்ப அனுமன்? கும்பகர்ணன் மகனாமா! நாடகம் போடுவதாக ஒரு நாடகமாடி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஞ்சிப்பெரியவா ஆட்சேபிக்கவில்லை என்று கேள்வி.

      நீக்கு
    2. இது பற்றி அதாவது சீதைக்கு ராவணன் அப்பாவா என்பதற்கு நான் எழுதி இருக்கும் "கதை கதையாம் காரணமாம்!" தொடரில் விரிவாக எழுதி இருப்பேன்.அத்யாத்ம ராமாயணம், துளசி ராமாயணம் படி சீதை வேதவதி என்ற பெயரில் ஓர் ரிஷியின் பெண்ணாக இருக்கையில் ராவணன் அவளை அனுபவிக்க ஆசை கொண்டு தொந்திரவு செய்ய வேதவதி நெருப்பில் வீழ்கிறாள். விருப்பமின்றி எந்தப் பெண்ணை ராவணன் தொட்டாலும் அவன் தலை சுக்குநூறாக வெடிக்கும் என்றும் சாபம் கொடுப்பதோடு அல்லாமல் அடுத்த பிறவியில் ராவணனை அழிக்க அவனுக்கே பெண்ணாகப் பிறப்பதாகவும், ஜோசியர் மூலம் இந்தப் பெண்ணால் இலங்கைக்கும் தன் அரசுக்கும் ஆபத்து என்பதைத் தெரிந்து கொண்ட ராவணனும், மண்டோதரியும், (சிலர் ராவணன் மட்டும் என்பார்கள்) குழந்தையை ஓர் பெட்டியில் வைத்து சமுத்திரத்தில் விட்டதாகவும். அந்தப் பெட்டி தான் மிதந்து, மிதந்து ஜனக்புரிக்கு வந்து சேர்ந்ததாகவும் சொல்லுவார்கள். இந்த ராமாயணங்களில் ராவணன் கடத்துவதும் உண்மையான சீதை அல்ல. அவள் பூமாதேவியிடம் பாதுகாப்பாக இருப்பாள். கடத்தப்படுவது மாய சீதை! அக்னியில் ப்ரவேசம் செய்த மாய சீதை மறைந்து உண்மையான சீதை அக்னியிலிருந்து வருவாள் என்றும் அவற்றில் சொல்லப்பட்டிருக்கும். இன்னும் ஜைன ராமாயணம் வேறே இருக்கு. முழுசாப் படிக்கலை இன்னமும். தட்டிப் போய்க்கொண்டே இருக்கு!

      நீக்கு
    3. //பிறப்பதாகவும்,//" சொல்லி இருப்பாள்". //விடுபட்ட வார்த்தை!

      நீக்கு
    4. நீங்கள் சொல்லி இருக்கும் தகவல்கள் படித்த நினைவு இருக்கிறது.  நான் உங்களிடம் ராமாயணம் பற்றி ஒரு சந்தேகம் கேட்டிருந்தேன்.  இன்னும் பதில் சொல்லவில்லை.  ராவணனின் மரணப்படுக்கையில் ராமன் அவனிடம் சென்று அறிவுரை கேட்டதாக புராணம் உண்டா?

      நீக்கு
    5. ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ, மன்னிக்கவும் ஶ்ரீராம். சுத்தமாய் மறந்துட்டேன். இன்னிக்குச் சாப்பாடு ஆனதும் தேடிப் பார்க்கிறேன்.

      நீக்கு
    6. //https://sivamgss.blogspot.com/2008/07/71.html
      https://sivamgss.blogspot.com/2008/07/72.html// இந்த இரு அத்தியாயங்களையும் பாருங்கள் ஶ்ரீராம். வால்மீகியை ஒட்டியே எழுதப் பட்டவை! ராவணன் அப்படி எல்லாம் எதுவும் சொல்லவில்லை என்பது தெளிவாகும். வாலி தான் மரணப்படுக்கையில் இருக்கையில் ஶ்ரீராமனையும் கேள்விகள் கேட்டு சுக்ரீவனுக்கும்/தாரைக்கும் அறிவுரைகள் எல்லாம் சொல்லி விட்டுப் பின்னர் செத்துப் போவான்.

      நீக்கு
    7. https://sivamgss.blogspot.com/2008/05/36_06.html

      https://sivamgss.blogspot.com/2008/05/blog-post.html வாலி வதம் பற்றிய பதிவுகள்.

      நீக்கு
  33. கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக்கொடு.. என சிரித்த முகத்தோடு சொல்லும் கணவன். என்னே அவள் பாக்யம்!

    பதிலளிநீக்கு
  34. //எத்தனை பூத் வைக்கப் போறீங்க.. இன்னும் நீங்க கணக்கு கொடுக்கலை"///

    ஸ்ரீராமபிரானிடமே பூத் வைக்க போன் பண்ணுறாங்களா? அப்படின்னா
    எந்த கட்சி என்று எனக்கு புரிந்துவிட்டது. ஹீஹீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா... ஹா...   மேலே கில்லர்ஜி வேற மாதிரி சொல்லி இருக்கார் பாருங்க...

      நீக்கு
  35. எனது போனில் ஸ்டோர் பண்ணி வைத்திருக்கும் நம்பர் தவிர வேறு எந்த நம்பரில் இருந்து வந்தாலும் எடுப்பதில்லை அதுமட்டுமல்ல அப்படி வரும் நம்பரை உடனடியாக ப்ளாக் செய்துவிடுவேன். அதுமட்டுமல்ல எனது போன் இன்னொருவரின் பெயரில்தான் ரிஜஸ்டர் செய்யப்பட்டு இருக்கிறது எனது பெயரிலே பதிவு பண்ணவில்லை எனது குடும்பத்தாரோ நண்பர்களோ தங்கள் போனை மறந்துவிட்டு அல்லது தஒலைத்துவிட்டு அவசரத்தில் வேறு போனில் இருந்து கூப்பிட்டு நான் எடுக்கவில்லை என்றால் அவரது பெயரை குறிப்பிட்டு டெக்ஸ்ட் பண்ன சொல்லி இருக்கிறேன்

    நான் போனில் அதிகம் பேசுவது இல்லை... போனை அந்தகாலத்தில் அவசரத்திற்கு உபயோகிக்கும் தந்தி போலவே உபயோக்கின்றேன் எனக்கு நண்பர்களிடமோ உறவினர்களிடமோ நேரில் பார்த்து பேசி மகிழத்தான் ஆசையே தவிர போனில் பேச அல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில காரணங்களுக்கு வேண்டி தெரியாத எண்களிலிருந்து வரும் போனை நான் அட்டென்ட் செய்யவேண்டிய நிலை மதுரை..   நிறைய கால்கள் தானே ஸ்பாம் என்றும் விளம்பரம் என்றும் போட்டுக்கொண்டே வந்துவிடும்.

      நீக்கு
  36. மொபைல் போன்களில் DND (do not disturb) என்ற வசதி 1909 என்ற நம்பரில் உள்ளது. இது வர்த்தக ரீதியான அழைப்புகளை தடை செய்யும். அதே போல் ஆண்ட்ராய்டு போன்களில் call blocking facility உண்டு. இதில் குறிப்பிட்ட நம்பர்களில் இருந்து வரும் அழைப்புகள் தானாக drop ஆகிவிடும். கூகிள் ஆண்டவர் துணையுடன் இன்ஸ்டால் செய்யுங்கள்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலும் 'ஆப்'கள் பக்கமே நான் போவதில்லை.  எனினும் இதை நான் பார்க்கிறேன் JC ஸார்.

      நீக்கு
  37. மனோகர்ன்னா தபால் இலாகாலேயோ இரயில்வேலேயோ வேலை செஞ்ச நினைவு. கைதி கண்ணாயிரம் இவரை நினைச்சாலே தப்பாம நினைவுக்கு வரும். இவர் அப்பாவுக்கு ராசிபுரம். இயற் பெயர் லஷ்மி நரசிம்மன். நாயகரா நடிக்க வேண்டியவர் வில்லனானார். பக்கா ஜெண்டில்மேன். நாடக தத்ரூப காட்சிகளுக்காக ரொம்பவும் சிரமப் பட்டிருக்கார். நிறைய செலவு பண்மியிருக்கார். நாடக ஸ்கிர்ப்ட்டுக்காக நிறைய மெனக்கெட்டிருக்கார். அதுக்காக ஆதாரங்கள் எல்லாம் தேடி அலஞ்சவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜீவி ஸார்...   படிச்சிருக்கேன்.

      நீக்கு
    2. மனோகரின் அக்கா கணவர் அத்திம்பேர் ஹோசூரில் ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூரில் மானேஜராக இருந்தார். ஆனால் நாங்க ஹோசூரில் இருக்கும்போதெல்லாம் மனோகர் அங்கே வந்ததாய்த் தெரியலை, ஃபோட்டோக்கள் இருக்கும். இவங்களுக்கும் குழந்தைகள் இல்லை.

      நீக்கு
    3. இந்தத் தகவலை நான் அறியேன்!

      நீக்கு
    4. ஹாஹாஹா, அறுபதுகளின் கடைசியில் இருந்தோம். என் அண்ணாவுக்கு முதல் போஸ்டிங் ஹோசூர் தான். ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூரில் இவருக்குக் கீழே தான் வேலை பார்த்தார். குடும்ப நண்பர்.

      நீக்கு
  38. எனக்கு மிஸ்டு கால் மாதிரி தினம் ரெண்டு வெவ்வேறு நேரத்லே வரும். ஒரே ரிங் தான். கட்டாயிடும். அப்புறம் ஒழிந்த நேரத்தில் அதை ப்ளாக் பண்ணிடுவேன். எத்தனை தடவை பண்ணினாலும் சூரபத்மன் கொய்த தலை திரும்ப வர்ற மாதிரி இன்னொரு புது நம்பர்லேந்து வரும். இப்போலாம் சரித்தான் போன்னு அதுவும் பழக்கமாயிடுத்து..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரங்கள் நிறைய வரும்.  அதுவும் ஒரே சமயத்தில் என் போனுக்கும்  என் மனைவி போனுக்கும் கடைசி எண் மட்டும் வித்தியாசப்பட்டு ஒரே விளம்பரம் வரும்!

      நீக்கு
  39. சிரிமாவோ பார்ப்பதற்கு என் பாட்டியைப் போல இருக்கிறாரே?

    பதிலளிநீக்கு
  40. கதம்பம் நன்றாக இருக்கிறது.
    ராங்கால் எப்படி எல்லாம் பயமுறுத்தல்
    //ஏதோ ஒரு பகிர்தல் இருந்து கொண்டுதான் இருக்கும்.//
    உண்மை, இருவருக்கும் இடையில் ஒரு பகிர்வு இருந்து கொண்டுதான் இருக்கும்.

    திரு.வசந்தகுமார் மனைவி சொன்னது சரிதான் கொரோனா காலத்திலும் இறுதி ஊர்வலத்தில் அவ்வளவு கூட்டம் இருந்தது.

    திரு.மனோகர் பற்றிய கட்டுரை முன்பே படித்து இருக்கிறேன், மீண்டும் படித்தேன்.
    //ஜோக்கா(ம்) இது!?//

    முன்பு இப்படித்தான். சில அம்மாக்கள்(அந்தக் கால) சொல்வது என் மகன் குடத்திலிருந்து தண்ணீர் சாய்த்து குடித்து பழக்கமில்லை என்று. இப்போது உள்ளவர்கள் நிறைய உதவிகள் செய்கிறார்கள் மனைவிக்கு.
    அனுபம், கவிதை, செய்திகள் மற்றும் பொக்கிஷபகிர்வு என்று கதம்பம் அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!