புதன், 7 ஜூலை, 2021

உணவுப் புத்தகங்கள் ஏராளமாக விற்பதன் காரணம்?

 

நெல்லைத்தமிழன் : 

1. தமிழில் புத்தகங்கள் நாவல்கள் படிப்பது குறைந்துவிட்டது என்று புலம்பும் எழுத்தாளர்கள், ஏன் சக எழுத்தாளர்களையோ அல்லது அவர்களின் படைப்புகளையோ எள்ளி நகையாடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்?

$ புலம்பல்கள் அவரவர் வருமானம் குறைவது குறித்தா இல்லை அவரவர் திறமை மேலுள்ள நம்பிக்கை குறித்தா?

# அடுத்தவர் வெற்றியைத் தாங்க இயலாதது கலை இலக்கிய உலக மரபு. 

& யாரை எள்ளி நகையாடுகிறார்களோ அவர்களின் படைப்புகள் அதிகம் வாங்கப்படுவது காரணமாக இருக்குமோ? 

2. புத்தகம் மட்டும், வாங்கிப் படித்தபிறகு பிறருக்குக் கொடுக்கும் மனம் நமக்கு இல்லாததன் காரணம் என்ன?

$ கற்ற பின் நிற்க அதற்குத் தக என்று கடைப்பிடிக்கும் நீங்கள் தன்னைப்போல் பிறரையும் நினைப்பவர் என்று தெரிகிறது.

# திரும்ப வராது என்ற அச்சம்தான். 

& உங்க கேள்வியைக் கொஞ்சம் திருப்பிப் போட்டுப் படித்தால், விலை கொடுத்து புத்தகம் வாங்குபவர்கள், அதை மற்றவர்களுக்கு கொடுக்கமாட்டார்கள்; ஓ சி யில் கிடைத்த புத்தகங்களை தாராளமாக மற்றவர்களுக்குக் கொடுப்பார்கள் என்று சொல்ல வருகிறீர்கள் என்று தோன்றுகிறது. 

3. கவிதைப் புத்தகங்கள் ஏராளமாக வெளிவருவதன் காரணம், அவற்றை எழுதுவது, அதிலும் வசன கவிதையாக, மிகச் சுலபம் என்பதாலா?

$ என்னைப் பொறுத்த வரை கர்ப்பூர வாசனை.

# மடக்கி எழுதினால் கவிதை என்றாகிவிட்டது.  இவற்றைக் காசு கொடுத்து யார் வாங்குகிறார்கள் என்பதுதான் மர்மம். 

& கவிதைப் புத்தகங்களை நான் ஓ சி யில் கிடைத்தால் கூட படிப்பதில்லை. என்னைக் கவர்ந்த ஒரே கவிதைப் புத்தகம் பாரதியார் கவிதைகள். இந்த நாள் கவிஞர்கள் புத்தகங்களை அவரின் நண்பர்கள் குழாம் மட்டும்தான் வாங்குவார்கள் என்று நினைக்கிறேன். 

4. உணவுப் புத்தகங்கள் ஏராளமாக விற்பதன் காரணம், சமைக்கச் சொல்லிக்கொடுக்கும் உறவினர்கள் (மூத்தவர்கள்) நம்முடன் இல்லாத்தாலா?

$ முதல் கேள்வியில் புலம்புவர்கள் எழுதியதைவிட சுவை மிகுதியாக இருப்பதால் இருக்கும்.

# யாரையாவது கேட்டு சமைப்பதற்குக் கூச்சம் காரணமாக இருக்கலாம்.

& மூத்தவர்கள் சமையல் போர் அடித்ததால் - புதுமையாக ஏதாவது சமைக்க உணவுப் புத்தகங்கள் வாங்கப்படுகின்றனவோ? 

5. சென்ற நூற்றாண்டில் (18) இல்லாதிருந்த காபி டீக்கு தபிழர்கள் அடிமையானது எவ்வாறு?

$ அதற்கு முந்திய நூற்றாண்டில் இல்லாத புத்தகங்கள் இப்போது பேசுபொருள்.

300 ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர் மிளகாய், வெங்காயம் இன்னும் பல காய்களை பார்த்ததில்லை.

பின்னே தக்காளி ரசம் எனக்கு தினமும் வேண்டும்...என்போர்..

# புகையிலை மாதிரி இவையும் அடிக்ஷன். 

& தமிழர்கள் மட்டுமா? 

6. சமையல் பிறர் செய்து கொடுத்தால் தேவாமிருதம் - ஆனால் நாமே செய்து சாப்பிடுவது அவ்வளவு சிலாக்கியமாக இருப்பதில்லை. அது ஏன்?

$ எதிர் பார்ப்பு.. 

# சமையல் செய்பவர்களுக்கு பிறர் சாப்பிட்டு ப் பாராட்டினால்தான் மகிழ்ச்சி. 

& என்னைப் பொருத்தவரை எனக்கு என் சமையலும் பிடிக்கும், மற்றவர்களின் சமையலும் பிடிக்கும். 

7. ரசிகர்களுக்கு மனமகிழ்ச்சியை உண்டாக்கினாலும், நடிகைகள் வாழ்வு பெரும்பாலும் சோகமயமாகவே ஆகிவிடுவதன் காரணம் என்ன?

# எளிதில் உணர்ச்சி வசப்படுவதும் "ஆசையை" அடக்க இயலாமையும் போலிப்புகழ்ச்சிகளை கண்மூடித்தனமாக ஏற்கும் சுபாவமும் அவர்களை நிதானமிழக்கச் செய்கின்றன. விளைவு தாங்கொணாத துயரம்.

8. கோவில்ல பண்ணும் உணவு (காண்டிராக்டர் செய்தபோதும்) எதனால் ச்ரேஷ்டமாக நாம் எண்ணுகிறோம்?  

# வடக்கே வாசலில் விற்கும் பண்டங்கள் நைவேத்தியமாக ஏற்கப்படுவது சகஜம். 

இறைவனுக்குக் "காண்பிக்கப் பட்ட" எதுவும் உயர்வாகக் கருதப்படுவது பக்தியின் வெளிப்பாடு. 

அதில் சுத்தம் ஆசாரம் சிரத்தை ஆகியவற்றைச் சேர்த்தல் சிறந்தவர்க்குச் சிறப்பாகச் செய்யும் பாங்கு.

 = = = =

பின் வரும் படங்களைப் பார்த்து, உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று கருத்துரையுங்கள் : 

1) 


2) 


3) 


= = = = 


89 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும்.

    அது சரி... கீசா மேடம் இன்னும் எழுந்துகொண்டிருக்க மாட்டாங்க. இல்லைனா தனியா வந்து பயப்பட்டிருப்பாங்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னிக்குச் சீக்கிரமாத் தான் வந்தேன். ஒரு சில/பல வேலைகள் இருந்தன இணையம் மூலம் செய்ய. அதை முடித்துக் கொண்டு வந்தேன்.

      நீக்கு
    2. வந்தவர்கள் வாழ்க! மற்றவர்கள் வருக.

      நீக்கு
  2. 3. முதலை வந்தால் என்னைக் கவ்வுமா இல்லை அவளையா?
    1. எல்லாம் பச்சை நிறத்தில் இருக்கணும் என்பதற்காக, பால் கறக்க காளையாகிய என்னை இழுத்துக்கொண்டு போகிறாளே... ஐயோ பாவம்.
    2. ரெண்டு பேரும் சீரியலைப் பார்த்து வருத்தமா இருக்கோம். இப்போ போய் புகைப்படம் எடுக்கிறாரே

    பதிலளிநீக்கு
  3. சமையல் பிறர் செய்துகொடுத்தால்...- நாம் சமைக்கும்போது, அதற்கான வேலைகள் என்றெல்லாம் டயர்டு ஆகிடுவோம். எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு சாப்பிட உட்காரும்போது பலதிலும் சூடு குறைந்திருக்கும். ஆனா, அக்கடான்னு வேற வேலை செய்துட்டு, வேளைக்கு பிறர் சமைத்துப் போடும்போது இன்னும் ரசித்துச் சாப்பிட முடியும். இதற்கு பெரும்பாலும் விதி விலக்காக அமைவது, நான் செய்யும் இனிப்புகள்தாம்.

    பதிலளிநீக்கு
  4. புத்தகங்கள் ஓசியோ, விலை கொடுத்து வாங்கினதோ இல்லை பைண்டு பண்ணினதோ... பெரும்பாலும் அடுத்தவங்களுக்குக் கொடுக்க மாட்டாங்க. காரணம் சரியாத் தெரியலை

    பதிலளிநீக்கு
  5. கேள்வி பதில்கள் சிக்க வைத்தன

    ஆடு மேயப்பார்க்கிறது.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  7. நெல்லையைத் தவிர்த்து யாருமே கேள்விகள் கேட்கலை போல! புத்தகங்களை நாம் பொக்கிஷமாய் நினைப்பதால் தான் யாருக்கும் கொடுக்க மனசு வரதில்லை. நானும் முன்னெல்லாம் கொடுக்க மாட்டேன். பின்னர் ஏற்பட்ட சூழ்நிலைகளில் பலவற்றை தானம் செய்ய நேர்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த முறை தானம் செய்யும் பொழுது என்னை கூப்பிடவும்.

      நீக்கு
    2. இல்லாவிட்டாலும் நெல்லையும், நானும்தான் அலுக்காமல் கேள்விகள் கேட்கிறோம். சமீப காலங்களில் நீங்களும் கேட்கிறீர்கள். ஏஞ்சல் எப்போதாவது வந்து கேள்விக் கணைகளை தொடுத்து விட்டு செல்வார்.

      நீக்கு
    3. சென்ற வாரம் நான் சில கேள்விகள் எழுதி வைத்தேன், நெல்லை நிறைய கேள்விகள் அனுப்பி விட்டதால் அவற்றை அடுத்த வாரத்திற்கு ரிசர்வ் செய்து விட்டேன்.

      நீக்கு
    4. நானும் சென்ற வாரம் கேட்க நினைச்சுப் பின்னர் மறந்துட்டேன். திங்களன்று நினைவில் வந்தது. ரொம்ப லேட்னு விட்டுட்டேன்.

      நீக்கு
  8. சமையல் பிறர் செய்தாலும் நன்றாக இருந்தால் தான் சாப்பிடப் பிடிக்கும். அந்த வகையில் என் தம்பி மனைவி சமையல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். கல்லிடைக்குறிச்சி ஊர். அந்தத் திருநெல்வேலி மணம் சமையலில் மணக்கும். முக்கியமாய் அவியல், எரிசேரி, பொரிச்ச குழம்பு போன்றவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நன்றாக இருந்தால்தான்//- நன்றாக இருப்பது முக்கியம்தான். இருந்தாலும், நீங்க கோவிலுக்கெல்லாம் போயிட்டு வீடு திரும்பும்போது, ஒரு மோர் சாதமும் வறுமிளகாயும் ஒரு தட்டுல கொடுத்தா அது எப்படி, நீங்களே எல்லாவற்றையும் போட்டுக்கொள்வது எப்படி?

      எனக்கு எப்போதும் உணவு ருசியாக இருக்கணும். சமீப காலங்களில்தான் உப்பு குறைவாக இருந்தால் ஒன்றும் சொல்வதில்லை. காரம் அதிகமாகிவிட்டால் மட்டும், குறையாகச் சொல்லுவேன்.

      நீக்கு
    2. நாங்க கல்யாணம் ஆன புதுசிலே தேனம்பாக்கத்துக்கு மஹாப்பெரியவாளைப் பார்த்துட்டுக் குளக்கரை ஒன்றில் உட்கார்ந்திருந்தோம். எல்லோருக்கும் சாப்பாடு போட்டிருக்காங்க. எங்களுக்குத் தெரியலை. பின்னர் மறுபடி பெரியவாளைப் பார்த்துவிட்டு விடைபெறலாம்னு வந்தால் ஓர் பெரியவர் எங்களிடம் எங்கே இருந்தீங்க இத்தனை நேரம்னு கேட்டார். பின்னர் சாப்பிடலையேனு கேட்டுட்டு இருந்த சாதத்தில் தயிர்விட்டுப் பிசைந்து மோர்மிளகாய் வறுத்து அதில் சேர்த்து ஓர் மந்தார இலையில் வைத்துக் கொடுத்தார். தேவாமிர்தம் என்றால் அது தான். ஆகவே சந்தர்ப்ப, சூழ்நிலை, கொடுப்பவர்களைப் பொறுத்தது சாப்பாடு எல்லாம். நானே தான் பல வருஷங்களாகத் தினமும் போட்டுக் கொண்டு சாப்பிடறேன். பள்ளி நாட்களில் இருந்தே! அதன் பின்னர் கல்யாணம் ஆன பின்னரும், அப்போதும்/இப்போதும்/எப்போதும். பிறந்த வீட்டுக்கோ வேறே எங்காவதோ விருந்தினராகச் சென்றால் மட்டுமே பிறர் போட்டுச் சாப்பிடுவது!

      நீக்கு
    3. இப்போதெல்லாம் தினசரிப் பதிவுகளிலேயே சமையல் விஷயம் அதிகமாய் இடம் பெறுவதன் காரணம் என்ன?
      சமையலைத் துச்சமாக நினைத்துப் பேசும் புதுயுகப் பெண்கள் பற்றிய உங்கள் கருத்து என்ன?
      சமைப்பவர்களின் எண்ண ஓட்டங்கள் மூலம் அதைச் சாப்பிடுபவர்களின் மனோநிலை அமையும் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?

      நீக்கு
    4. எழுத்தாளர்களை மானசிக குருவாக ஏற்றுக்கொள்ளும் வழக்கம் உண்டா?
      உங்களுடைய முக்கியமான முடிவுகள் பற்றி நீங்கள் குருவாக மதிக்கும் எழுத்தாளரிடம் கலந்து ஆலோசிப்பீர்களா?
      உங்கள் அபிமான எழுத்தாளர் எழுதிய/எழுதும் எல்லாவற்றையும் ரசிப்பீர்களா? அதில் குற்றம்/குறை கண்டால் விமரிசிப்பீர்களா?

      நீக்கு
  9. அந்தப் பெண் ஆட்டை இழுத்துக் கொண்டு போகிறாளா என்ன? கன்னுக்குட்டி தானே! எதையோ காய வைத்ததைத் தின்னுடுத்துப் போல. கோபமாய் இழுத்துக் கட்டப் போகிறாள் போல!

    பதிலளிநீக்கு
  10. ஸ்ட்ராலர்லேயே குழந்தையை உட்கார வைத்திருக்காங்க. வெளியே ஏதேனும் திரைப்படம் பார்க்க வந்திருப்பாஙகளோ? அதிலே ஏதோ பயமான காட்சியைப் பார்த்துட்டுக் குழந்தை அழுகிறதோ? அந்த அம்மா (அம்மா தானே?) முகத்தில் திகிலைப் பார்த்தால் அப்படித் தான் தோணுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை,இல்லை, தப்பாச் சொல்லிட்டேன். அந்த அம்மா தூங்கறாங்க போல, குழந்தை அழுவது கூடத் தெரியாமல்! அவங்க தான் நிமிர்ந்தே பார்க்கலையே! கண்களை மூடிட்டு இருக்காங்களே!

      நீக்கு
  11. அது என்ன? புலிகளின் இரட்டைப் பிறவியா? ஏன் நெல்லை இதைப் பற்றி எதுவும் சொல்லலை? எனக்கு மட்டுமா தெரியுது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை சொல்லியிருக்கார். இரண்டு புலிகளும் கணவன் மனைவி என்ற அர்த்தத்தில்.

      நீக்கு
    2. அப்ப்பா... நான் மட்டும்தான் மனப்பாடம் பண்ணுவதுபோல பதிவை முழுமையாகப் படிப்பதில்லைனு நினைத்தேன்.. துணைக்கு ஒரு பெரியவரும் இருக்கார்...ஹாஹாஹா

      நீக்கு
    3. பதிவிலே நீங்க எங்கே புலியைப் பத்திச் சொல்லி இருக்கீங்க? உங்க பின்னூட்டத்திலே சொல்லி இருக்கீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

      நீக்கு
    4. படங்கள் நெல்லை அனுப்பியவை அல்ல. kgg சேர்த்தவை.

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  14. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    நலமே வாழ்க..

    பதிலளிநீக்கு
  15. ஐந்தாவது கேள்விக்கான விடைகள் அருமை...

    பதிலளிநீக்கு
  16. சமையலுக்கான புத்தகங்களும் குழாய் காணொளிகளும் பெருகுவதற்கு - இன்றைய தலைமுறைக்கு சுடு தண்ணீர் வைப்பது எப்படி என்பது தெரியாதது தான் காரணம்..

    பதிலளிநீக்கு
  17. நெல்லைத் தமிழன் அவர்கள் கேல்விகளும், பதில்களும் அருமை.

    எங்கள் அம்மா பைண்ட் செய்து வைத்து இருந்த புத்தகங்கள் நிறைய இரவல் கொடுத்து திரும்பி வரவில்லை.
    கோலநோட்டுக்கள் போட்டு விட்டு தருகிறேன் என்று வாங்கி போவார்கள் திரும்ப தர மாட்டார்கள்.

    என்னிடமும் கதை புத்தகங்கள் வாங்கி போனவர்கள் திரும்ப தரவில்லை.மாயவரம் நூலகத்திற்கு நிறைய புத்தகங்கள் கொடுத்து விட்டு வந்தோம்.

    கணவர் 10 மாதங்களுக்கு முன்பு கூட நிறைய புது புத்தகங்கள் வாங்கினார்கள்.

    மொழியியல் படிப்பு படித்த போது வாங்கிய புத்தகங்களை அவர்கள் சித்தப்பா மகன் படிக்கும் போது அவ்ருக்கு உதவும் என்று கொடுத்து விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  18. குழந்தைக்கு பசி, அம்மாவோ நிதானமாக உணவை ஆற வைத்துக் கொண்டிருக்கிறார். குழந்தை அழாமல் என்ன செய்யும்?

    பதிலளிநீக்கு
  19. புலிகளுக்கும் கூட தெரிந்திருக்கிறது சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது என்று.

    பதிலளிநீக்கு
  20. புத்தகங்கள் சேமிப்பு, அதை இழக்க யாருக்கு மனம் வரும். ஆனால் சமீப காலத்தில் அந்த மன நிலையை மாற்றிக் கொண்டு விட்டேன். புத்தகங்கள் படித்து முடித்ததும் யாருக்காவது கொடுத்து விடுகிறேன்.
    புதிதாக புத்தகங்கள் வாங்கிக் கூடாது என்று நினைத்தேன். மகள், "உன் பிறந்த நாளுக்கு என்ன வேணும்?" என்று கேட்டதும்,"ஜெயமோகனின் ஏதாவது ஒரு புத்தகம்" என்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஜெய மோகனின் புத்தகம்// - புதுத் தலையணை வாங்கும் உத்தேசமில்லையா

      நீக்கு
    2. ஒருவர் நமக்கு நண்பரா இல்லையா என்பது அவர் நமக்கு ஜெயமோகன் புத்தகம் பரிசாகவோ தானமாகவோ தருவதிலிருந்து தெரிந்து விடும்.

      நீக்கு
    3. ஹாஹாஹாஹாஹா! அப்பாதுரை! :))))))))

      நீக்கு
  21. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    நோயில்லா வாழ்வு அனைவருக்கும் கிடைக்கட்டும்.
    சுவாரஸ்யமான கேள்விகளும் பதில்களும்.

    சமையல் புத்தகங்கள் மீனாட்சி அம்மாளுக்குப் பிறகு வாங்கவில்லை.

    எல்லோருக்கும் புது சமையல் அறிய ஆசை இருப்பதால் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. புத்தகங்களைக் கொடுத்து ஏமாந்தது போதும்.
    இனிக் கொடுப்பதாயில்லை:)
    கரையான்கள் விட்டு வைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  23. வெயில் காலம் பசுமை குறைந்து இருப்பதால், தன் ஆடையில் பச்சை வண்ணம் கன்றுகுட்டி நீர் அருந்து பாத்திரம் எல்லாம் பச்சை வண்ணத்தில் இருப்பது போல் அமைத்து கொண்டார் போல!

    குழந்தை பசியில் ராகம் போட்டு பாடுகிறது சிறந்த இசை கலைஞ்ர் போல !
    அம்மா உணவு கலந்து கொண்டு இருக்கிறார் தூக்க கலக்கத்துடன்.

    புலிகள் நீர் அருந்துகிறது மான்கள் நீர் அருந்தியது போல இல்லாமல் நீர் நிறைய இருக்கிறது இருபுலிகளும் ஒருவருக்கு வேண்டும் மற்றவர் என்று நடிக்க வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  24. பச்சை அம்மன் அழைத்துச் செல்லும்
    கன்று வர விருப்பமில்லாமல் நடக்கிறது.
    இரு புலிகள்?

    காட்சிப் பிழையோ.

    பதிலளிநீக்கு
  25. குழந்தை அம்மா சீன் பழக்கமானது.
    அதுக்குப் பசி முற்றும் வரை
    காத்திருந்து அவசரமாக உணவு கலந்தால் அது கத்துகிறது.
    பாவம் குழந்தை.

    பதிலளிநீக்கு
  26. சமையல் புத்தகங்கள் அதிகம் விற்பதற்கு வீட்டில் கற்றுக் கொடுக்க பெரியவர்கள் இல்லாதது மட்டுமே காரணமல்ல. திட்டாமல், ஏகடியம் பேசாமல் பெரியவர்கள் கற்றுக் கொடுப்பார்களா? மேலும் சமையல் நன்றாக வந்தால் புகழை அபகரிக்கும் பெரியவர்கள், சொதப்பினால், "நான் சரியாகத்தான் சொன்னேன், இவள் எப்படி செய்தாலோ?" என்று நழுவிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறதே..? இந்த பிரச்சினை எல்லாம் சமையல் கலை புத்தகங்களில் கிடையாதே..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பெண்ணுக்கு பஹ்ரைனில் இருக்கும்போது சமையல் கத்துத்தருகிறேன் என ஆரம்பித்தேன். பிறகு அவ சொல்லிட்டா, உங்களால கத்துத்தர முடியாது, யூ ஆர அ டூயர் என்று சொல்லிட்டா

      நீக்கு
  27. சமையல் புத்தகங்களை கூட யாரும் வாங்குவதில்லை... எல்லாம் 'யூ' தான்..

    பதிலளிநீக்கு
  28. அனைவருக்கும் முகம் மலர காலை வணக்கங்கள்! தொற்று முழுதும் நீங்கி மக்கள் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் .

    பதிலளிநீக்கு
  29. புத்தகங்கள் கொடுத்தால் மீண்டும் நம் கைக்கு வருவதில்லை என்பதே காரணம். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் பொழுது என்னுடைய "Literary Criticism" புத்தகத்தை என்னுடன் படித்த தோழியிடம் கொடுத்தேன். அவள் reference க்காக எங்கள் துறை ஆசிரியரிடம் கொடுக்க, அது என் கைக்கு வரவே இல்லை. அதில் எல்லாவற்றிலும் குறிப்பெழுதி வைத்திருந்தேன். என் பொக்கிஷம் போன்ற அந்த புத்தகத்தை தொலைத்தது வருத்தமே. பின் இன்னொரு தோழியிடம் எனது "பார்த்திபன் கனவு" புத்தகத்தை கொடுத்து அதுவும் வரவில்லை.அதனால் தவறாக நினைத்தாலும் பரவாயில்லை என்று யாருக்கும் புத்தகங்களை இரவல் கொடுப்பதில்லை...நானும் வாங்குவதில்லை. முன்பெல்லாம் library சென்றால் கூட வீடு அருகில் தான் என்பதால், அங்கேயே படித்துவிட்டு வருவேன். வீட்டிற்கு மட்டும் கொண்டுவரவே மாட்டேன்.

    பதிலளிநீக்கு
  30. நான் சமையல் புத்தகம் படித்ததில்லை. வீட்டில் அம்மா, பாட்டி, மாமியார் சொல்லிக் கொடுத்ததுதான். இப்பொழுது தான் சில மாதங்களாக குழந்தைகள் தங்கள் தோழிகள் சொல்லி என்னை "மெட்ராஸ் சமையல்" பார்த்து கட்லெட், ஸ்மைலி, சாட் வகைகள் செய்துதர சொல்லுகின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்து பாத்தோமே. கட்லெட் நன்றாக வந்தது. தேவையான பொருட்களில் கார்ன் பவுடர் வீட்டில் இல்லை. பிள்ளைகள் செய்த தொல்லையில் சென்ற லாக் டவுனில் நானும், என் மாமியாரும் ஸ்மைலி செய்தோம்.அதற்கு கோபம் வந்து எண்ணெயில் தனி தனியாய் உதிர்ந்து போனது!

      நீக்கு
  31. என்னுடைய கமெண்ட்ஸ்:
    1) பச்சை வண்ண ஆடையைப் பார்த்து 'புல்' என்று மயங்கிவிட்டதோ அந்த கால்நடை?
    2) " அம்மா - இப்படி என்னை ஓடவிடாமல் சிறை செய்து - உப்புமா கொடுக்கிறாயே - இது நியாயமா?"
    3) புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது - ஆனால் தாகம் எடுத்தால் தண்ணி குடிக்கும்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!