வியாழன், 26 ஆகஸ்ட், 2021

உடம்பில் குறையில்லே..  ஆனா உணவு செல்லல்லே..

 ஸ்ரீ..   நண்பரின் சார்பாக வந்து அறிமுகமானவர்.  எனக்கும் நண்பனானார்.    அவர் முழுப்பெயர் ஸ்ரீராஜா.  சுருக்கமாக ஸ்ரீ.   தேவையானபோது சொன்னால் காபிப்பொடி வாங்கி வந்துவிடுவார்.   அதுதான் போன வாரம் முழுக்க காபிக் கதை!

என்னை சிலபேர் ஸ்ரீ என்று சுருக்கமாக அழைப்பார்கள்.  எனவே இந்த பெயர்ப்பொருத்தம் முதல்முறையே மனதுக்குள் அமர்ந்து அவர் எனக்கு நெருக்கமாகி விட்டார்!  30 வயது இளைஞர்தான்.  அடிக்கடி என்னை வந்து பார்ப்பார்.  நான் இருக்கும் இடத்துக்கு அருகில் வந்தாலே ஒருநடை என்னையும் வந்து பார்த்து விட்டுப் போய்விடுவார். 

இந்த காபிப்பொடி வாங்கும் விஷயமாக ஒருமுறை அவருக்கு போன் செய்தால் எடுக்கவில்லை.  காபிப்பொடிக்கு வேறு ஏற்பாடு செய்துகொண்டேன் என்றாலும், இவன் ஃபோனை எடுக்காதது மனதில் இருந்து கொண்டே இருந்தது.  அப்புறம் பலமுறை  செய்தும் எடுக்கவில்லை.    மூன்று மாதங்கள் தொடர்பில்லாமல் போனான்.  சட்டென ஒருமைக்கு மாறிவிட்டேன் என்று யோசிக்க வேண்டாம்.  நெருக்கமானவனை அவர் இவர் என்று எழுதினால் எழுத வரமாட்டேன் என்கிறது!

சமீபத்தில் ஒருநாள் அவனே பேசினான்.  அவன் பெயரைப் பார்த்ததுமே சட்டென எடுத்தேன்.  "ஸார் ..  கூப்பிட்டுருந்தீங்களே..  ஏதும் விஷயமா ஸார்?"   

"இல்லப்பா... காபிப்பொடிக்குதான் போன் செய்தேன்.    என்னப்பா ஆச்சு?  எங்கே போனே..   ஃபோனையே எடுக்கவில்லை?" என்று கேட்டதும், 

"நான் பொழைச்சதே பெரிய விஷயம் சார்" என்றான்.  

என்னை நேரில் வந்து பார்ப்பதாகச் சொன்னான்.  அப்போது விஷயங்களை சொல்வதாய்ச் சொன்னான்.  அந்த நிலையிலும் காபிப்பொடி வாங்கித்தர முடியாமல் போனதற்கு வருத்தப்பட்டான்.  

"அடேய்..   அதுவா பெரிய விஷயம்...  பொழைச்சதே பெரிய விஷயம்கறே..  இப்படி பேசுறியே..  நேர்ல வா பேசுவோம்?"  என்றேன்.

ஏதாவது விபத்தா என்று கேட்டால் இல்லையென்கிறான்.  கொரோனாவா என்றால் இல்லவே இல்லை என்கிறான்.   உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவு என்னவாய் இருக்கும் என்று மண்டை குடைந்தது.

உடனே வரவில்லை.  ஒரு வாரம் கழித்துதான் வந்தான்.  மற்ற விஷயங்களில் லேசாக மறந்திருந்த நேரம்.
 
நேரில் வந்து அவன் சொன்ன விஷயங்கள்.   கேட்கத் திகைப்பாக இருந்தது.

ஸ்ரீக்கு திடீரென தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்பட்டிருந்திருக்கிறது.  அதனுடன் கடுமையான வாந்தியும்.  வழக்கமான கைவைத்தியங்கள், மாத்திரைகள் சாப்பிட்டு பயனளிக்காததால் மருத்துவரை நாடி இருந்திருக்கிறான்.  அவர் ஏதோ ஸ்ட்ராங் டோஸ் மாத்திரை கொடுக்க தற்காலிகமாக சரியாக ஆகி இருக்கிறது.

பிரசவித்திருந்த மனைவியையும், பிறந்த குழந்தையையும் பார்க்க ஊருக்குச் சென்ற இடத்தில் மறுபடி வயிற்று வலி தலை காட்டி, படுத்தி இருக்கிறது.  இங்கு வாங்கிச் சாப்பிட்ட எந்த மாத்திரையும் பயனளிக்காததால் அங்கிருந்த மருத்துவமனை செல்ல, அவர்கள் அவனை அட்மிட் செய்து சோதித்திருக்கிறார்கள்.  இதில் கொரோனா சோதனைகள் வேறு..  நல்லவேளை நெகட்டிவ் என்று வந்திருந்திருக்கிறது.

அவர்கள் மருத்துவமனையிலிருந்த உபகரணங்கள் அனைத்தையும் உபயோகித்துப் பார்த்து விட்டார்கள்.

சகல பரிசோதனைகள், எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, சளி. சிறுநீர்,   கல்ச்சர் என்று எல்லா சோதனைகளும் செய்தும் மருத்துவர்களால் என்ன என்று சொல்ல முடியவில்லை.  காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை.  ஏனென்றால் குறை என்று சொல்ல ஒன்றுமே இல்லை!  

எது சாப்பிட்டாலும் வயிற்றில் நிற்காமல் / சேராமல் வாந்தி...   வாந்தி..  வாந்தி...  வயிற்றில் வலி.. வலி.. வலி...  உணவில்லாததால் ட்ரிப்ஸ் ஏற, கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழக்கத்தொடங்கி, போகப்போக ரொம்ப சீரியஸ் ஆகி கோமா நிலைக்குச் சென்று விட்டான் ஸ்ரீ.

இந்த நேரத்தில்தான் நான் ஃபோன் செய்து பார்த்திருக்கிறேன் என்று பின்னர் தெரிந்தது.

மருத்துவர்கள் "எல்லா டெஸ்ட்டும் செய்தாச்சு.. ..   நீங்கள் இந்த ரிஸல்ட்ஸ் எல்லாவற்றையும் சென்னைக்கு கொண்டு போய்க் கூட காட்டுங்கள்.  மருத்துவ ரீதியாய் இவருக்கு ஒன்றும் இல்லை.." என்று சொல்லி இருக்கிறார்கள். 

'எ(த்)தைத் தின்றால் பித்தம் தெளியும்' நிலைதான்..  உடம்பில் கோளாறு ஒன்றுமில்லை.  ஆனால் சாப்பிடுவது எதுவும் ஒட்டவில்லை,  வலி வேறு...  நினைவும் சரியாய் வரவில்லை.

கிட்டத்தட்ட முடிவு நெருங்கி விட்டதாய் நினைக்கத்தொடங்கி பதட்டம், கவலை என்று கஷ்டப்பட்டிருக்கிறார்கள் உறவினர்கள்.

அப்பா, அம்மா, மனைவி மற்றும் உறவினர்கள் கையைப் பிசைந்துகொண்டு என்ன செய்ய என்று நின்றிருக்க, 

ஒரு நாள்.. 

========================================================================================================

ஹிஹிஹி...   பொக்கிஷத்தை இப்படியும் பகிரலாம்!

ஆசைக்கு எப்பவும் அளவில்லே
அதை அடக்கி வைக்கும் பக்குவமும்
நமக்கில்லே
எதிர்பார்ப்ப்பு இல்லாம வாழ்க்கையில்லே
அது இல்லாம இருக்க சாத்தியமாவதுமில்லே
நினைப்பது எல்லாம் நடப்பதுமில்லே
நடக்காட்டி மனசுக்கு நிம்மதி இல்லே
நிம்மதியாய் இருக்க வழி 
இல்லாது இல்லே
இதோ இருக்கு தமிழ்வாணன் 
சொன்ன சொல்லே!




================================================================================================

மதுரை: முற்கால பாண்டியர்களின் நீர் மேலாண்மை நுட்பம் :
நீர் மேலாண்மையில் முற்கால பாண்டிய மன்னர்கள் சிறந்து விளங்கியதாக தொல்லியல் அறிஞர் வெ.வேதாசலம் தெரிவித்தார்.
கூத்தியார்குண்டு மற்றும் நிலையூர் கண்மாயில் சமீபத்தில் பாரம்பரிய நடைபயண நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது நிலையூர் கண்மாய் குறித்து தொல்லியல் அறிஞர் வெ. வேதாசலம் கூறியது:
நீர்நிலைகளை உருவாக்கு வதிலும், அவற்றைப் பேணுவதிலும் முற்கால பாண்டியர்கள் ஆற்றிய பணி மகத்தானது. மதுரை மாவட்டத்தின் மிகப் பெரிய கண்மாயாகத் திகழ்ந்த நிலையூர் ஏரி, பாண்டிய மன்னர் பராந்தக வீரநாராயணன் என்பவரின் (கி.பி. 866 முதல் –கி.பி.910 வரை) ஆட்சிக் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது.
முற்காலத்தில் ‘நாட் டாற்றுக்கால்’ என்றழைக்கப்பட்ட அந்தக் கால்வாயே, தற்போது நிலையூர் கால்வாய் என்றழைக்கப்படுகிறது. இக்கால்வாயின் மூலம் நிலையூர் உள்பட ஆறு கண்மாய்கள் தண்ணீரைப் பெறுகின்றன. மேலும், பாசனத்துக்காக நிலையூர் கண்மாயில் உள்ள மடையிலிருந்து தண்ணீர் வெளியேறும் கண், மடைத் தொட்டியிலிருந்து நிலங்களுக்கு நீர் பிரிக்கும் முறை ஆகியன பண்டைய தமிழர்களின் நுட்பமான நீர் மேலாண்மைக்கு அரிய சான்றாக விளங்குகின்றன என்றார் அவர்.
கூத்தியார்குண்டு கிராமம் குறித்து, முனைவர் ரா. வெங்கட்ராமன் பேசியது: கிருஷ்ணதேவராயரின் பிரதிநிதியாக மதுரையில் ஆட்சி புரிந்தவர் திருமலை நாயக்கர். இவரது தளபதியாக பல போர்களில் வெற்றிவாகை சூடிய தளவாய் ராமசுப்பையன் பிறந்த ஊர்தான் கூத்தியார்குண்டு.
பாண்டிய மன்னர்களின் அரண்மனையில் ஆடல்புரியும் மகளிருக்காக, இவ்வூரில் உள்ள நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.
ஆகவே, இந்த ஊர் கூத்தியார்குண்டு எனவும், அதற்கு முன் வேதங்களை கற்றுத் தேர்ந்த அந்தணர்களுக்கு இவ்வூர் தானமாக வழங்கப்பட்டதால், சதுர்வேதிமங்கலம் எனவும் அழைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சுமார் 200 பேர் இந்தப் பயணத்தில் கலந்து கொண்டனர்.
- தி இந்து - 15=1=2014

========================================================================================================  

நெருங்கினால் விலகுகிறார்கள் 
விலகினால் நெருங்குகிறார்கள் 
மாறாத தூரங்கள் 

நடக்க முடியாத பாதைகளில் 
கடக்க முடியாத தூரங்கள் 
நெருங்கி வருவதேயில்லை 
சில உறவுகள்.

==============================================================================================

மதன்....




நமக்கு மட்டுமா மதன் ஜோக்ஸ் பிடிக்கிறது?  கரையானுக்கும்தான்!


53 கருத்துகள்:

  1. வியாழன் தொடர்கதை? வெங்கட் அவர்களின் பிரதிபலிப்போ?

    பொக்கிஷம் "ஆசைக்கு எப்பவும் அளவில்லே" பட்டுக்கோட்டையார்? தத்துவம் நிரம்பி வழிகிறது. நன்றாக உள்ளது. அத்தனைக்கும் ஆசைப்படு என்ற உபதேசமும் நினைவில் வந்தது.

    //நெருங்கினால் விலகுகிறார்கள் விலகினால் நெருங்குகிறார்கள் //

    நெருங்கினால் விலகுவதும் விலகினால் நெருங்குவதும் மனைவியே! 

    பாதை என்பதே நடப்பதற்குத்தான். 
    தூரம் என்பதே கடப்பது கடினம் என்று சொல்லத்தான்.
    ஆகவே நெருங்கி வராத உறவினர்களை நாம் தான் நெருங்க முயற்சிக்க வேண்டும். 

    கூத்தியார்குண்டு தங்களுடைய பூர்வீகம்?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயக்குமார் சந்திரசேகர் சார்...

      //வியாழன் தொடர்கதை? வெங்கட் அவர்களின் பிரதிபலிப்போ?/

      இல்லை.. முன்பே பலமுறை இப்படி எழுதி இருக்கிறேன்!

      பொக்கிஷம் பகுதியை பேஸ்புக்கில் வெளியிடும்போது படம் மட்டும் வெளியிட்டால் அது அரசியல் பதிவாக மாற்றி விடுவார்கள் சில பின்னூட்டதாரர்கள்! எனவே அப்படி வம்பில் மாட்டிக் கொளலாதிருக்க இந்த வரிகளை சேர்த்துப் பகிர்ந்தேன். ஏனென்றால் தேர்தலுக்குமுன் இதே போல தமிழ்வாணன் கட்டுரை ஒன்றைப் பதிவிட்டிருந்தேன்!

      //நெருங்கினால் விலகுவதும் விலகினால் நெருங்குவதும் மனைவியே! //

      ஹா ஹா ஹா அவருக்கும் அது பொருந்தும். ஆனால் மனைவியை நாம் அறிவோம்.

      கூத்தியார்குண்டு என் பூர்வீகமா என்று கேட்கும் அளவு எது இருக்கிறது என்று அறிய ஆவல். ஆனால் பதில், இல்லை என்பதே. பூர்வீகம் தஞ்சை மாவட்டம் என்று சொல்லலாம். இப்போது அதற்கெல்லாம் அர்த்தமில்லை!

      நீக்கு
  2. அன்பு ஸ்ரீராம்,
    நற்காலை வணக்கம்.
    என்றும் எல்லா நாட்களும் நன்மையே கிடைக்க
    இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்திப்போம் அம்மா...  வாங்க வணக்க்கம்.  கமலா அக்கா மூச்சுப்பிடிப்பால் அவதிப் படுகிறார்.  அவருக்கும் விரைவில் குணமாக பிரார்த்திப்போம்.

      நீக்கு
    2. அடப்பாவமே. அதுதான் அவரைக் காண முடியவில்லையா.

      மருந்து எடுத்துக் கொள்கிறாரா.
      நல்ல உள்ளம் சீக்கிரமே சரியாக வேண்டும். இறைவன்
      கருணை செய்யட்டும். ரொம்ப வலிக்குமே அப்பா.

      நீக்கு
    3. ஆம் அம்மா.   ஆயுர்வேத மருந்துகள் எடுக்கிறார்.  அவரும் கீதா அக்காவும் பழைய உற்சாகத்துடன் பதிவுகளில் பங்கெடுப்பபதை பார்க்கக் காத்திருக்கிறோம்.

      நீக்கு
    4. சகோ கமலா ஹரிஹரன் அவர்கள் பூரண நலமடைய எமது பிரார்த்தனைகளும்கூடி....

      நீக்கு
    5. கமலா ஹரிஹரன் அவர்கள் நலமடைய எல்லோருடனும் நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

      நீக்கு
    6. கீதா சாம்பசிவம் அவர்களும் பூரணநலம் பெற வேண்டும் இறை அருளால்.

      நீக்கு
    7. விரைவில் கமலா ஹரிஹரன் ஜி பூரண குணம் அடைந்து, நிறைந்த பின்னூட்டங்களும் பதிவுகளும் எழுதணும்... அட்் இப்போதுதான் தோன்றுகிறது.. தி பதிவில் பார்க்கவில்லையே என..

      கீதா சாம்பசிவம் மேடமும் முழுமையாக குணமாகி காலையில் முதல்வராக வரும் அளவு விரைவில் உடல்நலம் பெறவும் ப்ரார்த்தனைகள்.

      நீக்கு
    8. முதல்வராக வரட்டும் நல்ல அரசியல் தெளிவு உள்ளவர்தான்.

      நீக்கு
    9. ஹாஹாஹா! கில்லர்ஜி! கலக்கறீங்க!


      @நெல்லை, ஶ்ரீராம், வல்லி, கோமதி, அனைவருக்கும் நன்றி. கமலாவுக்கும் உடம்பு சரியில்லை என்பதை இப்போத் தான் பார்த்தேன். அவங்களுக்கும் விரைவில் குணமாகப் பிரார்த்திக்கிறோம்.

      நீக்கு
  3. காப்பிப்பொடி கொடுத்த ஸ்ரீ இப்பொழுது நல்ல நலத்துடன் இருக்க வேண்டும். திகில் செய்தி நல்லதாக அடுத்த வாரம் பார்க்கிறேன் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது பூரண நலத்துடன் இருக்கிறார் அம்மா.  அவன் சொன்ன சம்பவங்களைதானே எழுதுகிறேன்.

      நீக்கு
    2. ஆமாம். பா .நன்றாகவே இருக்கட்டும்.
      உடம்பு சரியில்லை என்று சொன்னால்
      மனம் பதறுகிறதும்மா.
      ஏற்கனவே கீதாம்மா பற்றிக் கவலை. இப்போ
      கமலா சேர்ந்து கொண்டுவிட்டார்.
      எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

      நீக்கு
    3. என்னவோ போங்க! சரியான இடத்தில் சஸ்பென்ஸ் வைச்சுட்டீங்க!

      வல்லி, விரைவில் முழுவதும் சரியாகும் என நம்புவோம்.

      நீக்கு
  4. மதுரைக் கண்மாய்கள் எவ்வளவு பெரிதாக இருக்கும்.
    பலவற்றை இப்போது காணோம்.
    அதில் ஒன்று திருப்பரங்குன்றம் கண்மாய்.

    மதுரை பாண்டியர்களைப் பற்றிய நல்ல செய்திக்கு நன்றி.
    நிலையூர் கால்வாய் இப்பொழுது செழிப்பாக
    இருக்கிறது என்று நம்புகிறேன்.
    முதல் சதுர்வேதி மங்கலம் பற்றி காஞ்சிப் பெரிய மஹான் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன் .
    அது சோழ நாடு.
    இது பாண்டிய நாட்டுச் சதுர்வேதி மங்கலம்
    போல இருக்கு.நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீர் நிலை பற்றிய கட்டுரை சில வருடங்கள் பழசு அம்மா.  ஆனாலும் நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்.  இப்போதும் அந்த நிலைதானே?

      நீக்கு
    2. ஆமாம், கண்மாய்கள் எல்லாம் காணாமல் போய் பல வருடங்கள் ஆகிவிட்டன. அதிலும் மாடக்குளம் கண்மாயும் அங்கே விளையும் கத்திரிக்காயும், அந்தக் கருப்பனுக்குத் தான் தெரியும், எல்லாம் எங்கே போச்சு என்பது!

      நீக்கு
  5. உங்கள் கவிதை சொல்வது நிஜம் தான்.
    சில உறவுகள் ஒட்டுவதில்லை.
    என்ன செய்யலாம். பிடித்து ஒட்ட வைக்க முடியாதே:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கடக்க முடியாத தூரங்கள்
      நெருங்கி வருவதேயில்லை
      சில உறவுகள்.// ஆமாம், சில உறவுகள் இப்போதும் அப்படித்தான்.

      நீக்கு
  6. கரையான் என்றாலே
    காகிதங்களுக்கு நோய் தான். காகிதம் மட்டுமா!!

    கரையான் அரித்தாலும் நகைச்சுவை மாறவில்லை.
    மதன் ஜோக்ஸ் என்றும் மகிழ்ச்சி தரும்.
    என்ன ஒரு கற்பனை. ரங்குடு சூப்பர்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதன் ஜோக்ஸுக்கு கேட்கவேண்டுமா?!!   கரையான் அரித்த இடம் பாதிக்கவில்லை!  நெருங்கி, பக்கமாக வந்திருக்கிறது!!! 

      நீக்கு
  7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  8. தங்களது நண்பர் ஸ்ரீ அவர்கள் நலமடைந்ததில் மகிழ்ச்சி.
    பிறகு நடந்தவைகளை அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு
  9. திருமதி.கமலாவும் திருமதி.கீதாவும் முழு நலத்துடன் இங்கு திரும்பி பழையபடி சுவாரஸ்யமான பின்னூட்டங்களை எழுத வேண்டும். அவர்கள் நலமுடன் இருக்க பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. சிறப்பான கதம்பம்! தமிழ்வாணன் கருத்தை ஒட்டி எழுதிய சிறு கவிதை அருமை! மதனின் ஜோக்ஸ், முக்கியமாக அவரது கேலிச்சித்திரங்கள் என்றும் போல மிக மிக அருமை!

    பதிலளிநீக்கு
  11. முக்கியமான இடத்தில் தொடரும் போட்டுக் கடுப்பேற்றலாமா?

    மதன் நகைச்சுவைகள் மிக அருமை. திறமைசாலி... வைகோ நிலை ஏற்பட்டது வருத்தம்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... ஏதோ கொஞ்சமாவது சுவாரஸ்யமாய் இருந்தால் சரி.

      நீக்கு
  12. திருமதி கீதா சாம்பசிவம், திருமதி கமலா ஹரிஹரன் -இருவரது உடல்நலமும் சீக்கிரம் சீரடையப் ப்ரார்த்தனைகள்.

    கூடவே, கண்ணில் படாது எங்கோ ஒளிந்திருக்கும் திருமதிகள் கீதா ரெங்கன், அதிரா (முன்னாடி தற்போதைய பட்டத்தை நிரப்பிக்கொள்ளவும்), ஏஞ்சலின் ஆகியோரும் விரைவில் திரும்பி, பின்னூட்ட இடங்களை வேகவேகமாக நிரப்புவார்களாக!

    பதிலளிநீக்கு
  13. ஸ்ரீமதி கீதாக்கா அவர்களும், ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்களும் விரைவில் உடல் நலம் பெற்று முன்பு போல் நலமுடன் விளங்குவதற்கு வேண்டிக் கொள்வோம்...

    பதிலளிநீக்கு
  14. அனைவரும் நலம் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். கீதாம்மாவும், கமலாம்மாவும் விரைவில் உடல் நலம் பெற வேண்டுகின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ஏகாந்தன், துரை, வானம்பாடி ஆகியோருக்கு நன்றி.

      நீக்கு
  15. இன்றைய கதம்பம் அருமை. தங்கள் நண்பர் உடல் நலம் சிறக்கட்டும். அடுத்தவாரம் அவருக்கு என்னவாயிற்று என்று சொல்லுங்கள். மதன் ஜோக்ஸ் எப்பொழுதும் போல அருமை. கவிதை வாழ்க்கை பயணத்தை நினைவுபடுத்துகிறது. உறவுகள் நெருங்காமல், தூரமாகாமலும், தேவையான உதவிகள் நாம் செய்து தேவையான இடைவெளியில் இருப்பதே சிறப்பு!

    பதிலளிநீக்கு
  16. நான் பெரிய பின்னூட்டம் கொடுத்தேன் அது என்ன ஆச்சு என்று தெரியவில்லை.

    ஸ்ரீராஜா அவர்கள் இப்போது நலமாக இருப்பது மனதுக்கு மகிழ்ச்சி. என்ன உடம்புக்கு ஏன் இப்படி கஷ்டபட்டார்கள் என்பதை அடுத்த பதிவில் படிக்க காத்து இருக்க வேண்டும்.

    தமிழ்வாணன் அவர்கள் கருத்துக்கு மேலே உள்ளது உங்கள் சிந்தனையா?
    நன்றாக இருக்கிறது.

    //மதுரை: முற்கால பாண்டியர்களின் நீர் மேலாண்மை நுட்பம் :
    நீர் மேலாண்மையில் முற்கால பாண்டிய மன்னர்கள் சிறந்து விளங்கியதாக தொல்லியல் அறிஞர் வெ.வேதாசலம் தெரிவித்தார்.//

    அருமை.

    பசுமை நடையின் பயணமோ? 2017ல் அவர்களுடன் இணைந்து நிறைய இடங்கள் நாங்கள் இருவரும் சென்று வந்த நினைவுகள் வருகிறது.

    உறவுகள் கவிதை அருமை.

    மதன் அவர்கள் நகைச்சுவை துணுக்குகள் அருமை.
    கதம்பம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பயணம் பற்றிப் படிச்சதும் உங்களைத் தான் நினைச்சேன் கோமதி. பசுமைப் பயணம் என்றே எனக்கும் தோன்றியது.

      நீக்கு
  17. திருமதி கீதா சாம்பசிவம்,திருமதி கமலா ஹரிஹரன் இருவரும் நலமாகி வர வேண்டுகிறேன்.

    மதன் ஜோக்ஸ் சூப்பர்.

    நண்பர் ஸ்ரீ நலமின்றி இருந்த கதை தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    கடந்த பத்து பதினைந்து நாட்களாக, மனக்கவலைகளுடன், வலியுடன் இரவிலும் தூக்கமின்றி போராடும் நான் இன்றிலிருந்து மனதின் பலத்திற்காக இங்கு வர வேண்டுமென நினைத்தேன். ஆனால் நேற்றிரவும் தூக்கமில்லாததால் உடல் சோர்வுகள் இன்றும் தொடர்ந்து விட்டன.

    உங்கள் நண்பர் ஸ்ரீ அவர்கள் பூரண குணமடைந்த செய்தி மகிழ்வை தருகிறது. எந்நாளும் நலமுடன் அவர் இனிது வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    மற்ற செய்திகளும்,தங்கள் அழகான கவிதையும், ரசிக்க வைத்த மதன் ஜோக்ஸ்களும் மிக அருமையாக கதம்பத்தை நிறைவு செய்திருக்கின்றன.

    என் உடல் நலத்திற்காக உங்கள் பிரார்த்தனைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் உங்கள் வலி சரியாகிப் பூரண குணம் அடையப் பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      தங்கள் அன்பான பிரார்த்தனைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும். நீங்களும் பூரண நலம் பெற்று பழைய இயல்பு வாழ்வை தொடங்க நானும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  19. வணக்கம் சகோதர சகோதரிகளே..

    இன்று என்/எங்கள் (நான் மற்றும் கீதா சாம்பசிவம் சகோதரி) நலத்திற்காக நீங்கள் அனைவரும் உளமாற வேண்டிக் கொண்ட, உங்கள் அன்பான பிரார்த்தனைகளுக்கு என் அன்பான நன்றிகள். உங்கள் பிரார்த்தனைகளில் நான் விரைவில் நலம் பெற்று விடுவேன்.

    இந்த மாதிரி அக்கறையுடனான ஒரு பாசமான குடும்பத்தை தந்த எ.பிக்கும் நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். என் அன்பு சகோதர, சகோதரிகளான உங்கள் அனைவரின் அன்புள்ளங்களுக்கு மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 🙏.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், இணைய நண்பர்களின் அன்பு அளவிட முடியாத அளவுக்குப் பெரியது என்பதைக் கடந்த பதினாறு வருடங்களாக நானும் உணர்ந்து வருகிறேன். சொந்தங்களில் சிலர் எனக்கு மூட்டையே கட்டிவிட்டார்கள். அப்படி இருந்தும் விடாமல் தொடர்ந்து போராடிக் கொண்டு இப்போது கொஞ்சம் முன்னேற்றம் அடைந்திருக்கிறேன். மருத்துவர் இப்போது தினம் நடந்து பழகச் சொல்லி இருக்கார். அவ்வப்போது சமையலில் மாமா உதவியுடன் ஏதேனும் செய்கிறேன். (சமையல் மாமி ஊரில் இல்லை.) இரவுக்கு சாதம் வைத்துக் கொண்டு விடுகிறோம். அல்லது உப்புமா மாதிரி ஏதேனும் பண்ணிக்கிறோம். நாட்கள் ஓடுகின்றன. கிச்சாப்பயல் பிறந்த நாளைக்குள் எழுந்துக்கணும்னு பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    2. உண்மைதான் சகோதரி. நட்புறவுகளின் அன்பான கூட்டுப் பிராத்தனைகள் நமக்கு பாதி மருத்துவத்திற்கு சமம். அனைவருக்கும் என் நன்றிகளை நான் மீண்டும் தெரியபடுத்திக் கொள்கிறேன்.

      தங்கள் கால்வலி சற்று குறைந்து சிறிது நடக்க ஆரம்பித்து இருப்பது கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறது. உடல் நலத்தை கவனித்துக் கொள்ளவும். சமையல் மாமி ஊரிலிருந்து திரும்பி வரும் வரை கொஞ்ச நாட்களுக்கு வேறு எங்காவது சமையலுக்கு ஏற்பாடு செய்தபடி தங்கள் உடல் நிலையை கவனித்து கொள்ளலாமே ..! கால் வலியோடு மறுபடியும் செய்ய ஆரம்பிப்பது கடினம் அல்லவா? கிருஷ்ண ஜெயந்திக்கு கண்டிப்பாக உங்கள் கால்வலியை நன்றாக குணப்படுத்தி அவன் பிறந்த நாளை நீங்கள் சிறப்பாக கொண்டாடி விடும்படி செய்து விடுவான் ஸ்ரீகிருஷ்ணன். நானும் என் அல்சரால் உண்டான வலிகளை குறைந்து, வயிறு, நெஞ்சு, முதுகு உபாதைகளை அவன் அன்றைய தினத்திற்குள் குறைத்து விடுவான் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். சர்வம் அவன் அருள்தான். அவனன்றி ஒர் அணுவும் அசையாது. நன்றி.

      நீக்கு
  20. ஸ்ரீ உடல் நலம் பெற்று திரும்பியது அறிந்து மகிழ்ச்சி. என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    //தொடர் - வெங்கட் பிரதிபலிப்போ?// ஹாஹா... அப்படி எல்லாம் இருக்காது. எ.பி. எனக்கு முன்னோடி.

    கீதாம்மா, கமலா ஹரிஹரன் ஜி ஆகியோர் உடல் நலம் பெற எனது பிரார்த்தனைகள். கீதாஜி, அதிரா என பலர் பதிவுலகத்திலிருந்து விலகி இருப்பதும் சூழல் காரணமாகவே என்பதால், காத்திருப்போம். அவர்களும் பதிவுலகத்திற்கு மீண்டும் வர வேண்டும் என்பதே என்னுடைய ஆசையும்.

    ரெங்குடு, மதன் ஜோக்ஸ் கலக்கல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      உங்களது அன்பான பிரார்த்தனைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் பதிவுகளுக்கும் விரைவில் தொடர்ந்து வர விரும்புகிறேன். உங்களது நிறைய பதிவுகள் என் உடல் நல கோளாறுகளில் படிக்க இயலாமல் விடுபட்டு போய் விட்டன. இனி நடப்பவை நல்லதாக நடக்கட்டும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  21. மிகவும் அருமை,., நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!