திங்கள், 9 ஆகஸ்ட், 2021

'திங்க'க்கிழமை :  பருப்பு தேங்காய் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

 இது என்னடா பருப்புத் தேங்காய் என்று குழம்பிவிடாதீர்கள்.  எதையேனும் வறுத்து, வெல்லப் பாகில் போட்டு கலந்து, அதனை கூம்பு மாதிரி உள்ள அச்சில் போட்டு, ஆறின பிறகு வெளியில் எடுத்தால் அதுதான் பருப்புத் தேங்காய்.   

நானும் நிறைய விசேஷங்களில் மணையில் இந்த பருப்புத் தேங்காயைப் பார்த்து ஆசைப்பட்டிருக்கேன். எங்க வீட்டு விசேஷத்துலயே (வேற என்ன. என் கல்யாணத்துலயே) அந்த பருப்புத் தேங்காய் எங்க போச்சுன்னு தெரியலை. என் மனைவி சொல்றா, உங்க ஆத்துக்குத்தான் அது வந்ததே என்கிறாள். அப்போ என் கவனம் பருப்புத் தேங்காய், சீர் பட்சணங்களிலா இருந்திருக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது சரியாகத்தான் இருக்கும்.


சென்னைக்கு வந்த பிறகு, ஏதாவது கேடரர் கிட்ட பருப்புத் தேங்காய் மட்டும் பண்ணச் சொல்லி வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்து, சிலரைத் தொடர்பு கொண்டேன். அப்படி நங்கநல்லூர்லயும் திருவல்லிக்கேணிலயும் ஒரு கேடரரைப் பிடித்தேன். என் மனைவியோ, இதுல என்ன ஆசை? மனோகரமோ, நிலக்கடலையை பாகில் கலந்தோ, இல்லை முந்திரி, கடலைப்பருப்பு என்று எதைவேணும்னாலும் உபயோகித்து செய்துடலாமே. எதுக்கு கூம்பு வடிவத்துல பருப்புத் தேங்காய் என்று வாங்கி சாப்பிடணும் என்றாள்.  நானோ,  என் அனுபவத்தின் மூலமாகத்தான் கற்றுக்கொள்ளணும் என்று நினைப்பவன். மனைவியின் அட்வைஸை சட்னு கேட்டுக்கமாட்டேன். ஹாஹா. 


எனக்கு நங்கநல்லூர்ல ஒரு விசேஷத்துக்குப் போக வேண்டி இருந்தது. அதனால நங்கநல்லூர் கேடரர்கிட்ட மனோகரம் பருப்புத் தேங்காயும், பூந்தி பருப்புத் தேங்காயும் செய்துதரச் சொன்னேன்.  அவர் நல்லா செய்து தரலை. கொடுத்த காசு வேஸ்ட். அப்புறம்தான், இது என்ன கம்பசூத்திரமா என்று நினைத்து, நான் பெங்களூரில் செய்தேன். முதல் தடவையே நன்றாக வந்துவிட்டது. அப்புறம் உறவினர் ஒருவரின் விசேஷத்துக்குச் செய்துகொடுத்தேன். அப்புறம் மற்ற உறவினர்களுக்கும் செய்துகொடுத்திருக்கிறேன்.


இப்போ இதன் செய்முறை.


அதற்கு முன்பு, மனோகரம் எப்படிச் செய்யறதுன்னு போன வார திங்கக் கிழமை பதிவைப் பார்த்துவிடுங்கள்.


தேவையானவை

 

கூம்பு வடிவ பருப்புத் தேங்காய்க்கான அச்சு (என் கல்யாணத்துக்குக் கொடுத்திருந்தாங்க. உங்களுக்கும் திருமணத்தின்போது கொடுத்திருக்கலாம்)

Bபட்டர் பேப்பர்.

தட்டில் கொஞ்சம் பரப்பிய அரிசி மாவு


எந்த பருப்புத் தேங்காய் செய்யப்போகிறோமோ அதற்கான பொருள் தயாரா இருக்கணும்.



செய்முறை


1. நான் மனோகரம் பருப்புத்தேங்காய் செய்தேன். அதற்கு அச்சில் பிழிந்து, பொரித்து, ஆறின பிறகு உடைத்துவைத்துக்கொண்டேன். 1 இஞ்சுக்கும் குறைவாக இருக்கும்படி ஒடித்துக்கொள்ளணும்.  நிலக்கடலைல செய்யணும்னா, நன்கு வறுத்து தோல் நீக்கி எடுத்துக்கணும். கடலைப்பருப்பில் என்றால், அதனை நன்கு வாசனை வரும்படி வறுத்துக்கொள்ளணும்.  பூந்தில செய்யணும்னா, லட்டு பிடிப்பதற்கு முந்தின ஸ்டேஜ் வரை செய்து பூந்தியைbத் தயார் செய்துக்கணும். இதுபோல பொட்டுக்கடலை, முந்திரி, பாதாம் போன்றவற்றிலும் செய்யலாம்.


2. கூம்பு வடிவ அச்சில், உட்பக்கம் Bபட்டர் பேப்பரை மளிகைக் கடை பார்சலைப் போலச் சுருட்டி உள்ளே வைக்கணும். உட்பக்கம் முழுவதும், விளிம்பின் வெளிப்புறம் வரை Bபட்டர் பேப்பர் மூடியிருக்கும் (படத்தைப் பாருங்கள்). 


3. டங்கு பத (அப்பீன்னா, பாகை தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட்டால், டங் என்று சப்தம் வரும். உடனே பாகை உருட்ட முடியும்) வெல்லப் பாகை வைத்துவிட்டு, அதனை மனோகரத்தின் (அல்லது மற்ற பருப்புகளில்) கொட்டி, நன்கு கலக்கவும். 


4. சூட்டோடு சூடாக ஸ்பூன் மூலமாக எடுத்து கூம்பு வடிவ அச்சில் நிரப்பவும். கையில் நெய்யோ அல்லது அரிசி மாவோ தொட்டுக்கொண்டு நன்கு அழுத்தவும்.  முதல் முறை போடும்போது, சிறிதாக உடைத்த பகுதியைப் போடணும்.


5. அச்சில் முழுவதும் நிரம்பிய பிறகு நன்கு அழுத்தி, அப்படியே ஆற வைத்துவிடவும். ஆற ஆற, அது நன்கு இறுகிக்கொள்ளும்.


6. கடைசியில், வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பட்டர் பேப்பரை இழுத்தால், கூம்பு முழுவதும் வெளியில் வந்துவிடும். பட்டர் பேப்பரைக் கிழித்து எடுத்துவிட்டால் கூம்பு வடிவ பருப்புத் தேங்காய் ரெடியாக இருக்கும்.


அது சரி.. தட்டில் பரப்பிய அரிசி மாவு எதற்கு என்று கேட்பவர்களுக்கு...  அவசரத்தில் மனோகரம் நிரப்பிய கூம்பை வைக்கணும்னா, இந்தத் தட்டில் வைத்துவிடலாம். அது மெதுவா ஆறிக்கிட்டிருக்கும். மாவு போடலைனா, தட்டோட ஒட்டிக்கொள்ளும்.








விசேஷத்துல இதனை மணையில் வைப்பார்கள்.  இது ஒருவேளை பிள்ளையாரை மனதில் வைத்துக்கொண்டு வைக்கிறார்களோ? அதற்கு பூவெல்லாம் சூட்டி, அந்தத் தட்டுலயே வெற்றிலை பாக்கு பழம் வைத்திருந்தாங்க (என் வேலை பருப்புத் தேங்காய் தயார் செய்தது மட்டும்தான்).  இந்தக் கேள்விக்கெல்லாம் கீதா சாம்பசிவம் மேடம் வந்து பதில் சொன்னால்தான் உண்டு.  அனுபவஸ்தர்களுக்குத்தானே (அதாவது அவங்க ரொம்பப் பெரியவங்க) இதெல்லாம் தெரியும். என்ன நான் சொல்வது?

69 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம்.

      நீக்கு
    2. இன்றுதான் நல்ல இனிப்பு ஒன்று தி பதிவில் வெளியிட்டிருக்காங்களே... இந்த நாள் இனிமையான நாளாக அமைவதில் என்ன சந்தேகம் கமலா ஹரிஹரன் மேடம்.

      இன்று ஸ்ரீ மாலோலக் கண்ணன் அவர்கள் நடத்தும் வகுப்பு கேன்சல் ஆனதால் காலையிலேயே வரமுடிந்தது.

      நீக்கு
    3. நானும் பேரன்களும் தினமும் சொல்கிறோம் அவரது வீடியோக்கள் தான் எங்களுக்கு குரு.

      நீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    என்றும் ஆரோக்கியத்துடன் வாழ இறை அருள்
    கிடைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான விழாக்களை அலங்கரிக்கும் பருபுத் தேங்காயை மணையில் வைத்த
    அன்பு நெல்லைத் தமிழனுக்கு
    மனம் நிறை வாழ்த்துகள்.

    அந்தப் பருப்புத் தேங்காய் கூடென்னவோ
    வீட்டில் இருக்கிறது இந்த இனிப்பை செய்ததில்லை.
    பார்க்கவே நாவூறும் படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வல்லிம்மா.... அதில் கடலைப்பருப்பு பருப்புத் தேங்காய் செய்ய ஆசை வந்துவிட்டது.

      நங்கநல்லூர் காரரிடம், கடலைப்பருப்பு பருப்புத் தேங்காய் செய்வதில்லையா என்று கேட்டேன்.. இதெல்லாம் யார் சார் கேட்கறாங்க. பலருக்கும் பல் கிடையாது. பொட்டுக்கடலைல சிலர் கேட்பார்கள் என்றார்.

      நீக்கு
  4. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

    ஆகா.. திங்களுக்கு திங்கள் உங்கள் சமையல் ரெசிபிகளை ஒரே இனிமைதான்... இன்றைய மனோகர பருப்பு தேங்காய் செய்முறைகள் படங்கள் எல்லாமே அருமையாக உள்ளது.என்னிடமும் இந்த ப. தே. கூடுகள் உள்ளது. நீங்கள் சொல்வது போல ப.தேங்காய் மாதிரி எதை வைத்து செய்தாலும், உடைத்துதானே சாப்பிட இயலும். அதனால் தங்கள் மனைவி சொன்னது சரிதான் என்பது என் அபிப்பிராயமும்.:)

    " நீ செல்லும் புகுந்த வீட்டில் உன் குடும்பத்துடன் ஒற்றுமையாக இருந்து வாழ்ந்தால், உன் மேன்மை, சிறப்பு, புகழ், அனைத்தும் பெருகி இந்த கூம்பு (கூடு) மாதிரி வானளாவியபடி என்றுமே உயர்ந்து இருப்பாய்" என்று சொல்லாமல் சொல்லி மணப்பெண்ணுக்கு அறிவுறுத்துவதற்காக இந்த கூடுகள் திருமணத்தில் அந்த காலத்திலிருந்தே வழக்கத்தில் வந்திருக்கிறதோ என்னவோ...? (இது என் தாழ்மையான எண்ணங்கள்.) சம்பிரதாயப்படி வேறு பல கருத்துக்கள் இருக்க கூடும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      எங்கள் வீட்டில் உறவுகள் வந்திருப்பதால் இரண்டு நாட்களாக என்னால் வலைப்பக்கம் வர இயலவில்லை. இன்று திங்கள் பதிவில் வழக்கமான ஆர்வத்தில் எட்டிப்பார்த்து, சகோதரர் நெ. தமிழர் அவர்களின் ப. தேங்காய் இனிப்பின் இனிமையில் கவரப்பட்டு கருத்திட்டுள்ளேன். அருமையான செய்முறையை தந்த நெ. தமிழருக்கு மீண்டும் என் நன்றிகள். பிறகு வருகிறேன். நன்றி அனைவருக்கும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... இங்க வருபவர்களில் எத்தனை பேர், வீட்டில் இதனைச் செய்திருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள ஆசை (பானுமதி வெங்கடேச்வரன், கீதா சாம்பசிவம் மேடம், நீங்க, ஒருவேளை காமாட்சியம்மா, வல்லிம்மா சந்தேகம்-அவங்க வீட்டுல செய்துதர ஆட்கள்லாம் போட்டிருப்பாங்க, கோமதி அரசு மேடம்? ...

      நீக்கு
    3. பருப்புத் தேங்காய் ஷேப்பின் காரணம் - ரசித்தேன்.... கீதா சாம்பசிவம் மேடம் வேறு காரணங்கள் கூறக்கூடும்.

      இன்றுதான் அமாவாசை இல்லையே..அதனால் வரும் வாய்ப்பு உண்டு

      நீக்கு
    4. ஒவ்வொரு வருடமும் கார்த்திகைக்கு நெல் பொரியில்  பருப்புத் தேங்காய் செய்வதுண்டு.  கல்யாணமோ கார்திகையோ என்னும் சொல்லாடல் இருப்பதால் கார்த்திகைக்கு பருப்புத்தேங்காய் அவசியம் செய்ய வேண்டும் என்பார்கள். அதை கையாலேயே கூம்பு வடிவத்திற்கு செய்து விடுவேன். இந்த பருப்புத்தேங்காய் ஜோடியில் ஒன்று மாப்பிள்ளை, மறைத்து பெண் என்பதால் ஒன்று பெரியதாகவும் இன்னொன்று அதைவிட சிறியதாகவும் இருக்க வேண்டும் என்பது ஐதீகம். 

      நீக்கு
    5. அட... பெரிது சிறிது... இதுவரை தெரியாதது. ஆனால் கூம்பு என்னவோ ஒரே சைஸில்தான் இருக்கிறது.

      நெல்பொரியில் பருப்புத் தேங்காய்... சவக் சவக்னு ஆயிடாதோ.. அதற்குப் பதில், அரிசியைப் பொரித்துச் செய்வார்களே (சட்னு பெயர் மறந்துடுது).. அது நன்றாக இருக்குமோ?

      நீக்கு
    6. ஆமா இல்ல, பருப்புத் தேங்காய் ஒன்று பெரிதாகவும் மற்றது சிறிதாகவும் தான் இருக்கும். நேற்று ரொம்ப நாழி உட்கார முடியலை என்பதால் விரிவாக எழுதலை. :(

      நீக்கு
  5. என் கல்யாணத்துக்கும் கூம்பு கொடுத்திருந்தார்கள்தான்.  ஆஹா..  அதை அலட்சியமாக எங்கோ தொலைத்து விட்டேனே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மனைவி அதை (இரண்டு கூம்புகள்) பத்திரமாக வைத்திருந்தார். 20 வருடங்களுக்கு முன்னால் கேட்டிருந்தால், அதெல்லாம் எதுக்கு என்று சொல்லியிருப்பேன். இப்போது ரொம்பவே உபயோகமாக இருக்கிறது.

      நீக்கு
  6. கூம்பின் உள்ளே பட்டர் பேப்பரைச் சுற்றிய அழகும்,
    அதற்கப்புறம் சொல்லி இருக்கும்
    முறைகளும் மிக மிக அருமை.

    மனோகரம் செய்து விட்டால் பிறகு சூட்டோடு சூடாக
    நிரப்பி விடுவதைப் பார்க்கிறேன்.
    இவ்வளவு விளக்கமாகச் சொல்லி இருக்கும் நெ. தவுக்கும்
    அவர் மனைவிக்கும் பாராட்டுகள்.

    எங்கள் திருமணத்துக்குக் கொடுத்த பருப்புத் தேங்காயையும் நாங்கள் ருசி
    பார்க்கவில்லை.
    அதே மாதிரி நொக்கல் பட்சணத்தையும் சாப்பிடவில்லை!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நொக்கல்மீது எனக்கு ரொம்பவே ஆசை வல்லிம்மா. அப்போ, 9 வருடங்களுக்கு முன்பு, அதன் ருசி நாக்கில் தங்கியிருந்ததே தவிர, எப்படி அதனைச் செய்யணும் என்று தெரியாது. பஹ்ரைனில்தான் எதுவுமே சல்லிசாச்சே. ஒரு கிலோ நல்ல முந்திரிப் பருப்புகளை, எனக்குத் தெரிந்த உத்திரப்பிரதேச ஸ்வீட்வாலா (ராஜாபாதர் என்று நினைவு)விடம் கொடுத்து, எனக்கு நொக்கல் செய்துதரச் சொன்னேன். எப்படி இருக்கும் என்றெல்லாம் ரொம்பவே விளக்கினேன்.

      அவரும் பண்ணித் தந்தார்... நொக்கலில் முக்கிய விஷயமே, முந்திரிப்பருப்பை கொஞ்சம் வறுக்கணும், பிறகுதான் சர்க்கரைப் பாகில் (முற்றிய) போட்டுப் பிரட்டணும் (அதாவது இலுப்புச் சட்டியை ஆட்டி பாகு முந்திரியின் முழுவதுமாக பரவச் செய்யணும்). ஆனால் அவர் முந்திரியை வறுக்கவில்லை. அதனால் என்ன.. புதுவித ஸ்வீட்டாக இருந்தது.

      நம்ம ஊரில், கலர்களும் சேர்த்து, இரு நிறங்களில் செய்வார்கள்.

      நீக்கு
    2. இப்போல்லாம் பாரம்பர்ய பட்சணங்கள் செய்ய, சமையல்காரருக்கும் தெரிவதில்லை (அதான் எனக்கு நங்கநல்லூர்காரர் செய்துதந்த மனோகரத்திலேயே பொதுவான சமையல்காரர்களின் திறமை தெரிந்துவிட்டது). அதைச் சாப்பிட ஆட்களும் இல்லை. எல்லாரும் பாசந்தி, ரசமலாய் என்று சென்றுவிட்டார்கள்

      நீக்கு
    3. நிஜமாகவா மா? பத்து வருடங்கள் முன் பேரன் ஆயுஷ் ஹோமத்துக்குச் செய்து தந்தாரே கண்ணன் என்பவர். அதற்கு முன் அவர் அப்பா செய்வார். நான் கேட்டுப் பார்ககிறேன்.

      நீக்கு
    4. சுஸ்வாதில் மனோகரம் பருப்புத்தேங்காய் ஆர்டர் கொடுத்தால் இப்படி கூம்பு வடிவத்தில் அடைக்காமல் உதிரியாக இருக்கும் மனோகரத்தை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு அதை கூம்பில் போட்டுக் கொடுப்பார்கள். சுஸ்வாதின் மனோகரம் காரமேல் ஃபிளேவரில் இருக்கும். ஒவ்வொரு துண்டு மனோகரத்திலும் யாரோ பாகை பிரஷ் வைத்து தீட்டியது போல பாகு ஈவனாக ஸ்ப்ரெட் ஆகியிருக்கும். மிஷினில் கலப்பார்களோ என்னவோ?   

      நீக்கு
    5. நானும் நிறைய தடவை ஸுஸ்வாதில் மனோகரம் வாங்கியிருக்கிறேன். திருநெல்வேலி மனோகரம் என்ற பெயரில் அவர்கள் கொடுப்பார்கள். எனக்கென்னவோ அது ஜீனி, வெல்லம்..இன்னபிற சேர்ந்த கலவையோ என்று சந்தேகம் வரும்.

      89லேயே, யோசித்திருந்தால், பேசாமல் நல்ல இனிப்புக் கடை ஒன்று ஆரம்பித்து கல்லா கட்டியிருக்கலாம். என்ன ஒன்று... நமக்கு இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் பிறந்திருந்தால், நம் காலத்திற்கு அப்புறம் கடைA, கடைB என்று பிரிந்து வியாபாரம் செய்வார்கள். ஹாஹா

      நீக்கு
    6. திருநெல்வேலிப் பக்கம் மனோஹரம் அரை அடுக்கு என்னும் அண்டாவில் வைப்பார்கள். அது நிறைய மனோஹரம் பாகு செலுத்தி வைத்துவிட்டு நட்ட நடுவே இரண்டு கூம்பு வடிவத்தில் பிடித்து வைப்பார்கள். அவை சிறிதாகவே இருக்கும். உதிரியாக எடுத்துக் கொடுப்பார்கள். கூம்பு வடிவங்களைப் பின்னர் பெண் வீட்டிற்கும், பிள்ளை வீட்டிற்கும் எடுத்துப்பாங்கனு நினைவு. என் பெரியப்பா பெண்/தம்பி மனைவி/மாமிகள் எல்லோருமே திருநெல்வேலிப்பக்கம் என்பதால் பருப்புத் தேங்காய் அதிலும் மனோஹரம் இப்படித்தான் வைப்பார்கள். கூட்டில் அடைத்து வைப்பது அங்கே மட்டம். இளக்காரமாக நினைப்பார்கள். இப்போல்லாம் மாறி இருக்கலாம்.

      நீக்கு
    7. வாங்க கீசா மேடம்... நல்ல நினைவு. யாரேனும் அரை அடுக்கில் மனோஹரம் கொடுத்தால் நல்லாத்தான் இருக்கும்.

      நீக்கு
  7. இப்போல்லாம் சீர் பட்சணங்கள் என்ற கான்சப்ட் இருக்கிறதா? என் சிறுவயதில் (என் திருமணத்தின்போதும்) மைசூர் பாக்கு, 1/3 செங்கல் சைஸுக்கு இருக்கும். அப்பம், முருக்கு போன்றவையும் அதீத சைஸில் இருக்கும்.

    அது சரி..இப்போ செய்வதற்கும் ஆட்கள் இல்லை... சாப்பிடுவதற்கும் யாருக்கும் உடம்பு (டயபடீஸ் இல்லாத) இல்லை போலிருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீர் பக்ஷணங்கள் உண்டு என்றாலும் எல்லாமே காடரர் பொறுப்பு. சுமாராகத் தான் இருக்கும். என் கல்யாணத்தில் எல்லாம் வீட்டிலேயே அடுப்புப் போட்டு இரண்டு, மூன்று மாமிகள் பண்ணினார்கள். தலை தீபாவளி, சீமந்தம்னு எல்லாத்துக்கும் அப்படித் தான்.

      நீக்கு
    2. இந்த 'காடரர்கள்' மாதிரி ஒரு அநியாயமான க்ரூப்பை நான் பார்த்ததில்லை (பெரும்பாலானவர்கள்). அவங்க வாழ்க்கைல அடிமட்டத்துல இருந்து வந்தவங்கள் என்பதால், எல்லாவற்றிர்க்கும் ஸ்பூன், ஒரு இஞ்ச் உயரமுள்ள கப் (ரசம், கீர்னு ஒரு சமாச்சாரம் எல்லாத்துக்கும்), போதும் போதாதற்கு பெரிசா, தீஞ்சுபோன வாழப்பழம் சீனி வைப்பதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. அவங்க வைக்கும் இனிப்புகளெல்லாம், கடை இனிப்பு சைஸ்ல மூன்றில் ஒரு பகுதிதான்.

      இப்படிச் செய்து செய்துதான் அவங்க கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கறாங்க.

      நீக்கு
  8. உண்மை தான். கடைசியாக நான் 2004 இல் பார்ததேன். மா. பாட்டி. , வீட்டு படசணமாகவே இதை எல்லாம் செய்வார். என் கல்யாண பட்சணங்கள் எல்லாம் அவரும் அத்தை மாமிகளுமாகச் செய்தார்கள்.ஒரு மைசூர்பாகு நாலு பேர் சாப்பிடலாம். நான் சொல்வது 55 வருடங்கள் முன்.:). லட்சியமே செய்ய மாட்டோம்.:(

    பதிலளிநீக்கு
  9. @ஶ்ரீராம்.நொக்கல் என்பது முந்திரிப்பருப்பை வறுத்து சர்ககரைப் பாகில் முக்கி எடுப்பது. மிக சுவையாக இருக்கும். கீதா மா வரப் பார்ததே நாட்களாகிறது. அவர் வண்ணமாகச் சொல்வார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், வல்லி சொல்வது சரியே! மைசூர்ப்பாகு.பர்பி போன்றவற்றில் எல்லாம் பருப்புத்தேங்காய் உண்டு. சர்க்கரை சேர்த்துப் பண்ணுவார்கள்.

      நீக்கு
  10. ///கூம்பு வடிவ பருப்புத் தேங்காய்க்கான அச்சு (என் கல்யாணத்துக்குக் கொடுத்திருந்தாங்க. உங்களுக்கும் திருமணத்தின்போது கொடுத்திருக்கலாம்)//

    அப்படியா திருமணத்தின் போது தருவார்களா? எனக்கு தராமால் சென்னையில் உள்ள ரிஜிஸ்டரர் ஏமாற்றிவிட்டார்... அடுத்த தடவை சென்னை வரும் போது அந்த ரிஜிட்ரரை பார்த்து கேட்கணும் அதற்கு அந்த பாவி பயல் உயிரோட இருக்கனும் அவர் இல்லைனா நீங்க சொன்ன ஸ்வீட்டை என்னால பண்ணி சாப்பிட முடியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்க்கும்.... அந்த ரெஜிஸ்டிராரைப் பார்த்து இதனைக் கேட்கும்போதே, திருமணத்துக்கான உடைகள், பாத்திரங்கள், நகைகள் போன்றவையும் ஏன் தரவில்லை என்று கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள். முடிந்தால் திருமண மாலைக்கான செலவுகளையும் கேட்டுப் பெறுங்கள் மதுரைத்தமிழன்.

      நல்லவேளை உங்களுடையது காதல் திருமணம். அரேஞ்ச்ட் மேரியேஜ் என்றிருந்தால், தமிழகத்தையே கேட்டிருப்பீர்கள் போலிருக்கிறதே

      நீக்கு
  11. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  12. நேத்திக்கு கண்ணுக்கழகா பதிவு - பூஞ்செடிகளோட...

    கூட்டத்தைக் காணோம்!...

    இன்னிக்கு நெலமை வேற...
    காலைலய கடைத்தெரு கமகமன்னு இருக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று முழுவதுமே நான் ரொம்பவே பிஸியாகிட்டேன்.... பதிவைப் பார்த்தேன்.

      உணவுப் பதிவுக்கு கொஞ்சம் ஆட்கள் அதிகம்தான், புதன், வியாழன் பக்கத்துல நெருங்க முடியாவிட்டாலும்.

      நீக்கு
  13. பகுதி தேங்காயை உடைத்து அனுப்பினால் மதிப்பெண் போட வசதியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி.... அப்படித் தருவதற்கும் ஒரு காலம் வராமலா போயிடும்

      நீக்கு
  14. அருமை... சிறு சிறு குறிப்புகளில் கவனம் இருக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  16. மலரும் நினைவுகளுடன் பருப்பு தேங்காய் செய்முறை அருமை.
    படங்கள் எல்லாம் அழகு.
    இப்போது முந்திரி, பாதாம் முதலிய வற்றிலும் செய்கிறார்கள்தான்.

    செய்முறை குறிப்புகள் மிக அருமையாக படி படியாக கவனமாக செய்ய வேண்டியது எல்லாம் சொல்லியது மிக அருமை.

    எங்கள் சஷ்டியப்த பூர்த்தி விழாவிற்கு என் தங்க்கை பூந்தியால் பருப்பு தேங்காய் செய்து கொண்டு வந்தாள்.
    தஞ்சாவூர் பருப்பு தேங்காய் கூடு வாங்கி அதில் அடைத்து செய்து கொண்டு வந்தாள்.

    நான் அதை கொலுவிற்கு வைத்து இருந்தேன் அந்த கூட்டை . மகனிடம் கொடுத்தேன். அவன் அதை சுவற்றில் மாட்டி வைத்து இருக்கிறான். ஒரு நாள் படம் எடுத்து போடுகிறேன் பதிவில்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பஹ்ரைன்ல, பாதாம் பருப்பு ரொம்ப ரொம்ப சல்லிசு விலை. (தொலி எடுத்ததும் கிடைக்கும்). அப்போது இதெல்லாம் நான் கத்துக்கலை.

      பூந்தி - இதை நாங்க குஞ்சாலாடுன்னு சொல்லுவோம். ருசியான குஞ்சாலாடு சாப்பிட்டு எவ்வளவோ காலமாகிறது. கடையிலிருந்து வாங்கித்தான் சமீபத்தில் சாப்பிட்டேன் (ஸ்ரீரங்கம் அஸ்வின்ஸ்ல, அப்புறம் நாயுடு கடைல-அங்க கொஞ்சம் பெரிய சைஸா இருக்கும்... ஆனால் கும்பகோணம் முராரில சூப்பரா இருந்தது) முன்பெல்லாம் டிரெடிஷனல் விசேஷ சமையல் செய்பவர்கள், திருமணம் போன்ற விசேஷங்களில் அருமையாகச் செய்வார்கள். இப்போ குறுக்குவழிகள் நிறைய வந்துவிட்டதால் (க்ளூகோஸ் சிரப்பை மேலே தடவிப் பிடிப்பது என்பது போல), ருசி குறைந்துவிட்டது.

      நீக்கு
    2. கூட்டை படம் எடுத்துப் போடுங்கள். அமெரிக்காவில் பேரனுக்கு ஏதாவது நீங்கள் பண்ணித் தருகிறீர்களா?

      நீக்கு
    3. முந்திரிப்பருப்புப் பருப்புத் தேங்காய் அந்தக் காலத்திலேயே உண்டே! ஒரிஜினல் துப்பறியும் சாம்புவிலே முந்திரிப்பருப்புப் பருப்புத் தேங்காய்க்குள் சங்கிலியை ஒளித்து வைத்ததும் அதை பருப்புத் தேங்காய் மேல் ஆசை கொண்ட சாம்பு யதேச்சையாக எடுத்ததும் பின்னர் அது கீழே விழுந்து உடைந்து சங்கிலி வெளியே வந்ததும், சாம்பு விஷயம் தெரிந்து கொண்டு தான் பருப்புத் தேங்காய் மேல் கண்ணை வைத்ததாகவும் எழுதி இருப்பார். இது பற்றிய ஓர் துப்பறிதலே வரும்.

      நீக்கு
    4. பொதுவாய்த் தலை தீபாவளி, சாந்தி கல்யாணம் போன்றவற்றிற்கு முந்திரிப்பருப்புப் பருப்புத் தேங்காய் தான். என் கல்யாணம், பெண் கல்யாணங்களில் எல்லாம் வைத்தோம். ஆனால் இவற்றிற்கெல்லாம் சர்க்கரை தான். அஸ்கா சர்க்கரை. வெல்லம் போடுவதில்லை. பாதாம் பருப்புத் தேங்காய்க்கும், பூந்திப் பருப்புத் தேங்காய்க்கும் சர்க்கரை தான். கடலைப்பருப்பை வறுத்துப் பருப்புத் தேங்காய் பண்ணினதில்லை. ஆகவே அது பற்றித் தெரியலை.

      நீக்கு
    5. //சாந்தி கல்யாணம் போன்றவற்றிற்கு முந்திரிப்பருப்புப் பருப்புத் தேங்காய் தான்.// கீதா சாம்பசிவம் மேடம்.... இது என்ன அநியாயமான வழக்கம். சாந்தி கல்யாணத்துக்கு பருப்புத் தேங்காயா? கொஞ்சம் விட்டால் மறுநாள் செய்யப்போகும் கீரை மசியலுக்கு கீரையை ஆஞ்சுதாங்கன்னு நாலு கீரைக் கட்டையும், நாளை வாழைப்பூ பருப்புசிலி செய்யலாம்னு இருக்கோம்... 5 வாழைப்பூவை வச்சிருக்கோம்னு, ரூமுக்குள்ள வச்சிடுவாங்க போலிருக்கே.

      நீக்கு
    6. வாங்க கீசா மேடம்... துப்பறியும் சாம்பு என் நினைவிலும் இருக்கிறார். ஒருவேளை எல்லோருக்கும் தெரிந்ததாக இருக்கட்டும் என்று முந்திரி பருப்புத் தேங்காய்னு உபயோகித்தாரோ என்னவோ.... Anyway, முந்திரிப் பருப்பு (அண்டிப் பருப்பு) நம்ம ஊர் சமாச்சாரம்தான்.

      நீக்கு
    7. சரியாப் போச்சு போங்க! உங்க கல்யாணத்தில் சாந்திக்கல்யாணத்துக்குப் பருப்புத்தேங்காயே வைக்கலையா? என்ன போங்க! எங்க குடும்பங்களில் அது கட்டாயம். வைச்சே ஆகணும். என் கல்யாணத்தில் பெப்பர்மின்ட் பருப்புத்தேங்காய்னு புது மாதிரியா இருக்கட்டும்னு பண்ணிட்டு ரங்க்ஸ் வீட்டிலே மு.ப. வைக்கலைனு வருத்தம். இஃகி, இஃகி,இஃகி! எங்க பெண் கல்யாணத்திலே பிள்ளை கல்யாணத்திலே எல்லாம் மு.ப. தான்.

      நீக்கு
    8. மாமனார் இருந்திருந்தால் நிச்சயம் இப்போ கேட்டிருப்பேன்...அப்போ வைக்கலையே... இப்போ பண்ணித் தாங்கன்னு ஹாஹா (அப்போவே வைத்தோமே... உங்க அம்மாதான் உள்ள வைக்க வேண்டாம்னு, வாங்கிவைத்துக்கொண்டார் என்பதுபோலச் சொல்லிட்டார்னா வெரிஃபை பண்ண அம்மாவும் இல்லை)

      நீக்கு
  17. //(அதாவது அவங்க ரொம்பப் பெரியவங்க)// அநியாயமா இல்லையோ! சந்தடி சாக்கில் என்னைப் பெரியவங்கனு சொல்றது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிச் சொன்னா, நான் 'அவங்களை'விட சின்னவள்தான் என்று யாரையேனும் கோத்துவிடுவீங்களோ என்ற எதிர்பார்ப்புதான். ஹாஹா

      நீக்கு
  18. பருப்புத் தேங்காயைக் கூட்டில் அடைக்கையில் தயிர் மத்தில் நெய்யைத் தடவி விட்டு அதன் உதவியோடு அடைப்போம். மற்றவற்றை அப்படியே கூட்டில் விடலாம், மைசூர்ப்பாகு, பர்பி, முந்திரிப்பருப்பு போன்றவற்றை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாது.... மைசூர்பாக், பர்பிலாம் பருப்புத் தேங்காயாகவா? கேட்கவே கர்ண கடூரமாக இருக்கிறதே

      நீக்கு
    2. உங்களுக்கு தெரியாவிட்டால் கர்ண கடூரம் என்பதா? இதை நான் இனிமையாக கண்டிக்கிறேன். மைசூர் பாக், தேங்காய் பர்ஃபி மட்டுமல்ல எங்கள் அம்மா பெப்பெர்மிண்ட் பருப்புத்தேங்காய் கூட செய்வார். மிகவும் சிறு சிறு உருண்டை பெப்பெர்மிண்ட், பிஸ்கெட் போட்டு செய்யப்படும் அது மிகவும் நன்றாக இருக்கும், சர்க்கரை பாகில்தான் செய்ய வேண்டும்.  

      நீக்கு
    3. வாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம்.

      பாரம்பர்யம் பாரம்பர்யம் என்று சொல்லிக்கிட்டே, அதைவிட்டு கால மாறுதல்கள்ல விலகி விலகிச் சென்று, பிறகு பாரம்பர்யம் போயிடுச்சே என்று பலர் புலம்புகிறார்கள்.

      இனி, பிட்சா பருப்புத் தேங்காய், பிள்ளையார் கொழுக்கட்டை பருப்புத் தேங்காய், சீயன் பருப்புத் தேங்காய், எள்ளுருண்டை பருப்புத் தேங்காய் என்று ஆரம்பித்துவிடுவார்கள் போலிருக்கிறது.

      நீக்கு
    4. நெல்லை, உங்களுக்குப் பாரம்பரிய வழக்கமே தெரியலை. பர்பி பருப்புத்தேங்காய், மைசூர்ப்பாகுப் பருப்புத் தேங்காய், பால் கேக்கில் பருப்புத் தேங்காய் எல்லாமும் உண்டு. மாப்பிள்ளைப் பருப்புத் தேங்காய்க்கு இவற்றில் ஏதேனும் ஒன்று செய்து பெண், மாப்பிள்ளைக்குக் கொடுப்பார்கள். என் அண்ணா கல்யாணத்தில் எனக்கு/மற்ற பெரியப்பா பெண்களுக்கு எல்லோருக்கும் மைசூர்ப்பாகுப் பருப்புத்தேங்காய் கொடுத்தாங்க. தம்பி கல்யாணத்தில் பூந்திப் பருப்புத் தேங்காய். அதன் பின்னர் பெரியப்பா பிள்ளை கல்யாணத்தில் பர்பி பருப்புத் தேங்காய். அண்ணா பையர் கல்யாணத்தில் மன்னிஆசீர்வாதப் பருப்புத் தேங்காயையே கொடுத்துட்டாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது ஐந்தும் பொட்டுக்கடலை. :) ஆளுக்கு ஒண்ணுனு கொடுத்துட்டாங்க. அண்ணா பெண் கல்யாணத்திலும் அப்படியே!

      நீக்கு
    5. இதெல்லாம் நான் கேள்விப்பட்டதோ இல்லை பார்த்ததோ கிடையாது. ரொம்ப வருடங்கள் எந்த விசேஷங்களிலும் கலந்துகொள்ள முடியாமல், வெளிநாட்டிலேயே இருந்ததினால் இருக்கலாம்.

      அதனால் என்ன...உங்க வீட்டு விசேஷத்தில் நான் கலந்துகொள்ளும்போது என்ன பருப்புத் தேங்காய் வைக்கிறார்கள் என்றும் பார்த்துக்கொள்கிறேன்.

      நீக்கு
  19. நெ.த. பள்ளியில் படித்த பொழுது 1. அசோகர் சாலையின் ஓரங்களில் மரங்களை நட்டார்.2. அசோகர் சாலையின் இரண்டு ஓரங்களிலும் மரங்களை நட்டார்.3. அசோகர் சாலையின் இரண்டு ஓரங்களிலும் நிழல் தரும் மரங்களை நட்டார்.என்று ஒரே பாயிண்ட்டை வளைத்து வளைத்து எழுதியிருப்பார் என்று தோன்றுகிறது. சென்ற வாரம் மனோகரம் உருண்டை, இந்த வாரம் அதே மகோகரம் பருப்புத் தேங்காயா? ஜமாயுங்கள்! பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. விரைவில் உங்கள் மகளின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு பருப்புத்தேங்காய் செய்யும் வாய்ப்பு வரட்டும்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 4. மரங்கள் அடுத்து அடுத்து அமைந்திருந்தன. 5. பெரிய மரங்கள் வைத்ததால் நிறைய பேர் வெயிலின்போது ஒதுங்க சௌகரியமாக இருந்தது.... ஹாஹா.

      எம்.எஸ்.ஸியில் என் ப்ரொஃபசர், யூனி எக்ஸாம்ல, கேள்விகளெல்லாம் விட்டுடக் கூடாது. கொஞ்சம் தெரியலைனாலும் என்னவாவது எழுதணும். அப்போதான் ஒருவேளை பார்டரில் இருந்தால் (அப்போ பாஸ் பண்ண 13 மதிப்பெண்கள் எடுக்கணும்) 1/2 மார்க் 1 மார்க் போட்டு பாஸ் பண்ணிடுவாங்க என்று சொல்லியிருந்தார். அந்த ப்ரொஃபசரின் ஒரு இண்டர்னல் எக்ஸாம்ல இதே வேலையைக் காண்பித்து 3/4 பக்கம் எழுதியிருந்தேன். அவர்... "Gas... கதை விடாதே" என்று எழுதி மதிப்பெண் கொடுக்கலை.

      அது சரி..அடுத்த வாரம் ரொம்பவே சுலபமானது..இதெல்லாம் ஒரு பதிவா என்று நீங்கள் கமெண்ட் போடாமல் இருந்தால் சரிதான். ஹாஹா

      நல்லதே நடக்கட்டும் பா.வெ. மேடம்...

      நீக்கு
  20. looks awesome! goodness, you ARE talented nellai!

    Bhanumathy comment super!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அப்பாதுரை சார்...நன்றி.

      இதோ பாருங்க... நாமெல்லாம் தமிழர்களாக்கும். ஒருத்தன் ஏணியில் ஒரு படி ஏறிவிட்டால், இரண்டு படி கீழே இழுத்துவிடுவோமாக்கும். ஹாஹா.

      நான் மனோகரம் வேறு, பருப்புத் தேங்காய் செய்முறை வேறு என்பதால் இரண்டாக எழுதினேன். கடலைப்பருப்பு பருப்புத் தேங்காய் செய்திருக்கலாம். என்னவோ அதனைச் செய்யலை.

      நீக்கு
  21. படமும் செய்முறையும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  22. விசேஷங்கள் அனைத்திலும் முக்கியப் பங்கு இதற்கு உண்டாயிற்றே! எனக்கும் பிடித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தில்லி வெங்கட். இன்றுதான் உங்க கருத்தைக் கவனித்தேன்.

      இது தமிழ்நாட்டுக்கே உரியது. கர்னாடகாவிலெல்லாம், பொட்டுக்கடலை, நிலக்கடலை, வேறு என்னவோ உருண்டை ரவை மாதிரி.. இதிலெல்லாம் கூம்பு பிடிக்கறாங்க. எனக்கு ரசிப்பதில்லை.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!