சனி, 5 மார்ச், 2022

முள்ளங்கி மருத்துவம் + நான் படிச்ச கதை

 

 

உக்ரைன் ரஷ்யா போர் நடக்கும் சூழ்நிலையில், பத்திரிகைகள் எல்லாவற்றிலும் போர் செய்திகள் மட்டுமே நிரம்பி உள்ளன. எங்கு தேடினாலும் - போர், உ பி தேர்தல், மேயர் & துணை மேயர் + கிரிக்கெட் செய்திகள்தான் எனவே --  --  அடுத்த வாரம் வரை பொறுத்திருந்து பார்ப்போம்! 

==== 


= = = =



====================================================================================================================


நான் படிச்ச கதை

- ஜெயக்குமார் சந்திரசேகர் - 

============================================= 

அறிஞர் அண்ணா பற்றி எ பி வாசகர் எல்லோருக்கும் தெரியும். அவரது அரசியலுக்கு அப்பால் அவர் ஒரு சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் என்பதும் தெரியும். நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், திரைக்கதைகள் என்று நிறைய எழுதியிருக்கிறார். அவரது செவ்வாழை என்ற சிறுகதை மிகவும் பிரபலமான ஒன்று. இன்று நாம் பார்க்கப்போவது கொக்கரக்கோ என்ற ஒரு சிறுகதை. 

இந்தக்கதை 1934ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் வெளிவந்தது. அரசியல் மற்றும் அவரது சமூகக் கண்ணோட்டங்கள் கலப்பில்லாதது. சிறுகதை இலக்கணங்கள் பொருந்திய ஒரு மரபுச் சிறுகதை எனலாம். 

கதையாசிரியர் நேரில் சொல்லுவது போன்ற உரைநடை. பாத்திரங்கள் இருவரே, சுந்தரம், சங்கரன். சங்கரனை எப்போதோ அவனால் மறக்கப்பட்ட ஒரு நண்பன் சுந்தரம் சந்திக்கிறான். பேச்சு சுந்தரத்தின் வேலை பற்றித் திரும்புகிறது. சுந்தரம், தான் ஒரு பத்திரிகை ஆசிரியன் எனவும் அப்பத்திரிக்கையின் பெயர் “கொக்கரகோ “ என்று கூறுகிறான்.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. சுந்தரம் டிப்டி கலெக்டராக இருப்பதாகச் சொன்னால் கூட நான் நம்பத் தயார். ஆனால் பத்திரிகாசிரியராக இருப்பதாகச் சொன்ன போது கொஞ்சங்கூட நம்ப முடியவே இல்லை

இப்படியாகத்தான் புளுகு மூட்டை அவிழ்ந்து நெல்லிக்காய்களைப் போல் சிதறுகிறது. கதையை வாசிக்கும் அனைவருக்கும் இது புரியும். பலரும் பல அல்டாப் அண்ணாசாமிகளைப் பற்றி எழுதியுள்ளனர். ஆனால் அந்தக் கால கட்டத்திற்கு ஏற்றாற்போல் ஒரு எதிர்பார்க்காத முடிவை ஆசிரியர் வைக்கிறார். கதையை ஆசிரியர் கதைக்க வேண்டி கொஞ்சம் இழுத்துக் கொண்டு போகிறார் என்று சொல்லலாம்.

எனவே பொறுமை உள்ளவர்கள் 5 நிமிடம் ஒதுக்கிக் கீழே உள்ள கதையை முழுதும் படிக்கலாம். அப்படி இல்லாதவர்கள் நேரே பச்சை நிறத்தில் உள்ள பத்திகளை மட்டும் படித்துக் கதைச் சுருக்கம் மற்றும் முடிவைத் தெரிந்து கொள்ளலாம். 

 

5. 'கொக்கரகோ'

 

ஒருநாள் மாலை. நான் கடற்கரை முன்பு கண்மூடி மௌனியாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். கண் மூடுவதும், மௌனியாவதும், கனவு காண்பதும் சகஜந்தானே!

"வைஸ்ராயைப் பார்த்தாயோ, இல்லையோ?" என்று கேட்டுக் கொண்டே யாரோ என் முதுகில் ஒரு தட்டுத் தட்டவே, கண்விழித்துத் திரும்பிப் பார்த்தேன். பல மாதங்களாக என் கண்களில் தென்படாதிருந்த என் நண்பன் சுந்தரம் சிரித்துக்கொண்டே நின்றான். 

"இல்லை, சுந்தரம். நீ பார்த்தாயோ?" என்று நான் வினவினேன்.

"அவர் என்னைப் பார்க்காமல் கூட இருப்பாரா? போனவாரத்தில் கூட 'வீரர் வில்லிங்டன்' என்று முதல் தரமான தலையங்கமொன்று எழுதினேனே, தெரியாதா?" என்றான்.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. சுந்தரம் டிப்டி கலெக்டராக இருப்பதாகச் சொன்னால் கூட நான் நம்பத் தயார். ஆனால் பத்திரிகாசிரியராக இருப்பதாகச் சொன்ன போது கொஞ்சங்கூட நம்ப முடியவே இல்லை.

 "தலையங்கம் யார் எழுதினது?" என்று நான் வினவினேன்.

 "அரெரே! சமாசாரமே தெரியாதா?" என்று பீடிகை போட்டுக் கொண்டு, சுந்தரம் தன் சுயசரிதையைத் தொடங்கினான். அதற்குள் எனக்கு அறிமுகமான ஒரு பேர்வழி அவ்வழியே போக, நான் அவருக்கு ஒரு சலாம் போட்டுக் கொஞ்சம் பற்களை வெளியே காட்டினேன்.

 "யார் அந்த ஆசாமி?" என்று கேட்டான் சுந்தரம். 

"கரன்சி ஆபீசில் 600 ரூபாய் சம்பளத்திலிருக்கிறார். அவர் பெரிய பேர்வழி" என்றேன். 

"உஷ்! இவர்களைப் பார்த்தாலே எனக்குப் பிடிப்பதில்லை" என்று கூறிக் கொண்டே, அந்த உத்தியோகஸ்தர் போன திக்கை நோக்கிச் சுந்தரம் காறி உமிழ்ந்தான். 

"கொடுத்து வைத்த ஆசாமிகள் ! அந்தக் காலத்திலே சுலபமாக அகப்பட்ட வேலையின் பயனாக இன்று கொழுத்த சம்பளம் வாங்குகிறார்கள். இந்தக் காலத்திலே வேலை ஏது? வெட்டி ஏது? இருக்கும் பணத்தையும் படிப்பிற்கு அர்ப்பணம் செய்து விட்டு, வரட்டு நிலம் முரட்டு மனைவியுடன் காலட் க்ஷேபம் செய்வது எவ்விதம் என்ற கவலை எனக்கு உண்டாயிற்று. வெகுநேரம் வேதனைப்பட்டுக் கடைசியில் பத்திரி காசிரியர் ஆகலாம் என்று தீர்மானித்தேன்." 

சுந்தரம் இந்த இடத்தில் தன் சரிதத்தைச் சற்று நிறுத்தி விட்டுக் கொஞ்சம் பொடி போட்டுக் கொண்டான். அவன் திடீரென்று எப்படி மேதாவியானான் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். மறுபடி ஆரம்பித்தான் கதையை. 

"எவ்வளவோ பத்திரிகைகள் ! எங்கே திரும்பினாலும் பத்திரிகைகள். இருந்தாலும் என் பத்திரிகையின் பெயரைக் கேட்டாலுமே போதும். உன்னால் அதை வாங்காமலிருக்க முடியாது. நல்ல சுபதினமாகப் பார்த்து அதை ஆரம்பித்தேன். தாளின் தலையிலே ஒரு சேவல்! அதன் வாயினின் றும் வருகிறது 'கொக்கரகோ' என்னும் சப்தம். அதுவே பத்திரிகைக்கும் பெயர். சப்தச் சுவை ஒரு பக்கம் கிடக்கட்டும். அதில் வெளியாகும் விஷயங்களின் பொருட்சுவையின் நயத்தை என்னால் சொல்ல முடியாது." 

"சுந்தரம், ஒரு கேள்வி. அது என்ன, மாதப் பத்திரிகையா .... வாரப் பத்திரிகையா, அல்லது தினசரியா?" என்று நான் கேட்டேன். 

"அதை நான் ஏன் கூற வேண்டும்? விஷயம் முழுவதையும் கேட்டு விட்டுப் பிறகு நீயே சொல்லு. மற்றப் பத்திரிகை ஆசாமிகளைப்போல, ரிசர்வ பாங்கி மசோதா, வெள்ளைக் காகிதத் திட்டம், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், சாஸ்திரியார் சாசனம் என்றெல்லாம் நான் எழுதுவது கிடையாது. 'கொக்கரகோ' வில் வெளிவரும் முக்கியமான விஷயங்கள் என்னவென்றால், திடுக்கிடும் சம்பவங்கள், ஆவேசத்தை தரக்கூடிய ஆச்சரிய மர்மங்கள், விநோத விசித்திரங்கள் தாம். ஆனால் ஓரொரு சமயம் பல சிக்கலான பிரச்னைகளைப்பற்றிக் கூட நான் விவாதிப்பதுண்டு. 

"உதாரணமாக மனிதனுக்கு ஒரு தலை போதுமா?" என்ற தலைப்பின் கீழ் ஒரு ரசமான கட்டுரை எழுதியிருந்தேன். இவ்விஷயமாக இதுவரை ஒருவரும் கவனியாது இருப்பது சுத்தப் பிசகென்றும், அறிவுள்ளோர் இதன் உண்மையை தெரிந்து கொண்டு, பாமரருக்குக் கூற வேண்டுமென்றும், ரெவரண்டு ராம்சிமித் பிரசங்கம் செய்ததாக எழுதிவிட்டேன். அவ்வளவுதான். அந்த வாரம் பூராவும் அதைப்பற்றி விருத்தி உரைகளும், வியாக்கியானங்களும், ஆராய்ச்சிகளும் 'கொக்கரகோ' வில் வெளிவந்தன. பிறகு ..." 

"ஆமாம் சுந்தரம், ராம்சிமித் யார்?" என்று நான் கேட்டேன். 

சுந்தரம் கதை சொல்லும் உற்சாகத்தில் என் கேள்வியைக் கவனிக்கவேயில்லை. மேலே சொல்லிக் கொண்டே போனான். 

"மறுவாரம் மன்னிக்கவும்" என்ற தலைப்பின் கீழ், "ராம்சிமித் மனிதனுக்கு ஒரு தலை போதுமா?" என்ற பிரச்னையைக் கிளப்பவே இல்லையென்றும், 'மனிதனுக்கு இருக்கும் ஒரு தலையே போதும். இதை அறிவுள்ளோர் கவனித்துப் பொது மக்களுக்குக் கூறுவது நலம்' என்று மட்டுமே அவர் கூறினதாகவும் வெளியிட்டு, தப்பாகச் செய்தி அனுப்பின நிரூபரை வேலையை விட்டு விலக்கி விட்டதாகக் 'கொக்கரகோ'வில் பிரசுரம் செய்தேன்." 

எனக்குச் சிரிப்பு பொங்கிற்று. சுந்தரம் அவ்வளவு சாமர்த்தியமாகக் காரியங்களைச் செய்வான் என்று நான் எதிர்பார்க்கவே யில்லை. 

"பேஷ்! பேஷ்!" என்று சொல்லிக் கொண்டே, அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தேன். 'தட்டுவது பிறகு ஆகட்டும் சங்கரா! விஷயத்தைக் கேள்' என்று சுந்தரம் கதையை மேலே சொல்லத் தொடங்கினான். 

"தத்தி விளையாடி, குழந்தைப் பருவத்தைக் கடந்து, 'கொக்கரகோ' வாலிபப் பருவத்தை யடைந்தது. பல்லாயிரக் கணக்கான ஜனங்கள் 'கொக்கரகோ'வைப் பார்க்காமல் தூங்குவதில்லை. நானும் விநோத விஷயங்களை வெளியிட்ட வண்ணமாகவே இருந்தேன். அதற்காக நான் செய்த யுக்திகள் எவ்வளவு ! ஒரு தினம் விந்தையான விஷயம் ஒன்றும் அகப்படவில்லை. ஒரு பக்கங்கூட அச்சாகவில்லை. மணியோ மூன்று, நான்கு என்று வளர்ந்து கொண்டே சென்றது. ஐந்து மணிக்கெல்லாம் பத்திரிகை அச்சடித்தாக வேண்டும். என் நிலையில் நீ இருந்தால் என்ன செய்திருப்பாய்?" என்று சுந்தரம் கேட்டான். ஆனால் நல்ல காலமாக என் பதில் வருமுன்னமேயே தன் சரிதத்தை ஓட்டினான். 

"கேள் சங்கரா! சுற்றி வளைத்துப் பார்த்தேன். திடீரென்று ஒரு யுக்தி கிளம்பிற்று. எடுத்தேன் பேனாவை. 'ஹிட்லர் பட்லரானால்?' என்று கேள்வி ஒன்று கிளப்பினேன். மறுதினம் எனது சித்திரக்காரரைக் கொண்டு, ஹிட்லருக்குப் பட்லர் வேஷம் போட்டு, அவர் ஐரோப்பாவிற்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு போவது போலவும், சாப்பாட்டுப் பண்டங்கள், துப்பாக்கி, பாம், புகை முதலியவைகளோடும், ஒரு படம் பிரசுரம் செய்தேன். 

"விற்பனை பலத்தது. 32 பி. ஏக்களை நிருபர்களாகவும் பார்சல் குமாஸ்தாக்களாகவும் வைத்துக் கொண்டேன். நீயும் வருவதானால் 33 பி.ஏக்களுக்கு நான் தலைவனாக்குவேன். என் மனைவி மரகதம் பெண்கள் பகுதியை வெகு திறமையாக நடத்திக் கொண்டு வந்தாள். ஓர் அழகிய சிறிய பங்களாவை விலைக்கு வாங்கி அதில் குடியேறினேன். அடுத்த பங்களாவில், கார்த்திகேயன் அடியார் கூட்டத் தலைவரும், கங்காணிகள் சங்கத்துப் பொக்கிஷதாரருமான ஸ்ரீமான் கருணப்பிள்ளை, தன் மனைவி கமலாம்பிகையுடன் கூடி வசித்து வந்தார். பலமுறை நான் அவரை அணுகி, 'என் பத்திரிகையைப்பற்றி உம் அபிப்பிராயம் என்ன? அதற்கு ஏதாவது விஷயம் தரக் கூடாதோ?' என்று கேட்டுக் கேட்டு என் பாடு போதுமென்றாகி விட்டது. எத்தனையோ பெரிய ஆசாமிகள் விஷயதானம் செய்திருக்கிறார்கள். இந்தக் கருணைப் பிள்ளைக்கு மட்டும் ஏன் கடுகளவு கருணையாவது இருக்கக்கூடாதென்று எண்ணி ஏங்கினேன். ஆனால் விட்டேனா ஆசாமியை! மரகதமும் நானும் கலந்து யோசித்து அவரைத் தண்டிக்க ஓர் ஏற்பாடு செய்தோம். 

"ஏற்பாட்டின்படி கமலாம்பிகையை என் மனைவி சிநேகம் செய்து கொண்டாள். ஒரு தினம் இருவரும் வழக்கம் போல் சந்தித்து வம்பளந்து கொண்டிருந்தனர். இருந்தாற் போலிருந்து மரகதம் விழுந்து விழுந்து சிரித்தாள். கமலாம்பி கையின் முகத்தில் அசடு தட்டிற்று. 'ஏன் சிரிக்கிறாய்? காரணத்தைச் சொல்லிவிட்டுச் சிரிக்கக் கூடாதோ?' என்று கெஞ்சினாள். மரகதம் சிரிப்பை நிறுத்திவிட்டு, ஒன்றுமில்லை என் வீட்டுக்காரர் என்னிடம் அதிக அன்புள்ளவர். நான் சொல்வதைத் தட்டுவதே கிடையாது. நேற்று நான் வேண்டுமென்றே அவருடைய அன்பைச் சோதிக்க எண்ணி, ஒரு பாவாடையைக் கட்டிக் கொண்டு நடனம் செய்யச் சொன்னேன். அவரும் தடை சொல்லாது ஆடினார். ரொம்ப தமாஷாக இருந்தது. அதை நினைத்துக் கொண்டுதான் சிரிக்கிறேன்' என்று கூறினார்.

 "அன்று மாலை நான் ஆபீசிற்குச் செல்லாது, கருணைப் பிள்ளை வீட்டுத் தோட்டத்தில் காமிராவுடன் ஒளிந்து கொண்டிருந்தேன். அவரும் அவர் மனைவியும் தோட்டத்திற்கு வந்தனர்.

"இது என்ன முட்டாள் தனம்! ஆசையிருந்தால் ஆட வேண்டுமா?" என்று பிள்ளை கேட்டார். கமலாம்பிகை கண்களைப் பிசைந்து கொண்டே 'ஆமாம். ஆடு என்றால் ஆடத்தான் வேண்டும். பாடு என்றால் பாடத்தான் வேண்டும்; பக்கத்து வீட்டு ஆசிரியர் முட்டாளா? அவருடைய மனைவி அவரை ஆடச் சொன்னாள். அவர் ஆடினார். கொடுத்து வைத்த புண்யவதிகளுக்கு மனங்கோணாது நடக்கும் புருஷர்கள் வாய்க்கிறார்கள்' என்று கூறிக் கொண்டே விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்.

"சரி" என்று சொல்லிக் கருணைப் பிள்ளை ஒரு பாவாடை தரித்து வந்து நடனம் செய்தார். 

"நடனம் மிக அற்புதமாக இருந்தது. கருத்துப் பெருத்த உருவம், உருண்டைத் தொந்தி, மொட்டைத் தலை - நடனம் நன்றாகத்தானே இருந்திருக்கும்! நான் மறைந்திருந்து அவர் ஆடியதைப் போட்டோ பிடித்துக் கொண்டு பிறகு அவர் எதிரில் திடீரென்று வந்தேன். 

"பரத நாட்டியத்தைப் பற்றித் தங்கள் அபிப்பிராயம் என்ன?" என்று நான் கேட்டேன். ஆள் அப்படியே ஸ்தம்பித்துப் போய்விட்டார். அன்றைய 'கொக்கரகோ'வில் ---- 

கருணைப்பிள்ளை நர்த்தனம்

பரதநாட்டியம் ஒரு பழங்கலை 

என்று தலைப்புப்போட்டு, கருணைப்பிள்ளையின் போட்டோவையும் பிரசுரம் செய்தேன். அன்று   என்னமோ எனக்கு ஒரு விந்தையான ஆசை ஏற்பட்டது. நமது பத்திரிகையை நாமே விற்க வேண்டுமென்று தோன்றிற்று. 

உடனே மாறு வேடம் பூண்டு, பிராட்வே முனையில் நின்று கொண்டு, 'கொக்கரகோ - காலணா' என்று கூவிக் கூவி விற்றேன்." 

"சுந்தரம் ! நிறுத்து, நிறுத்து. உன் சரிதம் கிடக்கட்டும்; அந்த மாதிரிப் பத்திரிகையை நான் பார்த்ததேயில்லையே, கேள்விப்பட்டது கூட இல்லையே" என்று நான் கேட்டேன். 

"நீ எப்படி பார்த்திருக்க முடியும்? இந்த ஊரில் போட்டால்தானே, உனக்குத் தெரியப் போகிறது?' என்றான் சுந்தரம். 

"இந்த ஊரில் போடவில்லையா? எந்த ஊரில் போடுகிறாய்?' ' என்று நான் வினவினேன். 

"உங்களுக்குத் தெரியாதா கீழ்ப்பாக்கம் பத்திரிகாசிரியரை?" என்று பின்னால் ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். ஒரு போலீஸ்காரன் என் நண்பன் கரத்தைப் பற்றிக் கொண்டான். என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு அவனை இழுத்துக் கொண்டு போனான். 

"சங்கர் ! வைஸ்ராய் ஏதோ பேச வேண்டுமென்று கூப்பிட்டனுப்பி இருக்கிறார். நான் போய்விட்டு நாளை மாலை உன்னைப் பார்க்கிறேன். இன்றைய 'கொக்கர கோ'வை அவசியம் படி' ' என்று கூறினான் சுந்தரம்.

# # # 

பரிதாபம் ! என் நண்பன் சுந்தரம், இரண்டு தரம் வார மும்முறைப் பத்திரிகை நடத்தித் தோல்வியடைந்து, பிறகு மாதமிருமுறைப் பத்திரிகை போட்டு மூளை இழந்து, கடைசியில் பைத்தியக்காரனாகிக் கீழ்ப்பாக்கத்தில் வசித்து வரும் விஷயம் எனக்குப் பிறகே தெரிய வந்தது. 

கதையை இங்கு அறிமுகம் செய்ததின் நோக்கம் கதை ஆசிரியர், கதையின் நடை, வெளி வந்த காலம், அன்றைய பழக்க வழக்கங்கள் போன்ற சிறு விஷயங்களையும் ரசிக்கவே!!!. மேலும் எ பி வாசகர்கள் இக்கதையை படித்திருக்க மாட்டார்கள் என்பதாலும்தான்,  ---------------- ஒரு சும்மாவும் கூட சேர்த்துக்கொள்ளுங்க. 

ஊசிக்குறிப்பு. 

கீழ்ப்பாக்கம் பத்திரிகாசிரியர் ஒருவர் இருந்தார். குமுதம் ஆசிரியர். ஆனால் குமுதம் 1934 இல் ஆரம்பிக்கப் படவில்லை. 

 


66 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவும், வாழ்த்துகளும். அனைவர் வாழ்க்கையிலும் நிம்மதி மேலோங்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்திப்போம். வாங்க கீதா அக்கா. வணக்கம்.

      நீக்கு
  2. இந்த ரோபோத் தொந்திரவு மறுபடி/மறுபடி! என்ன இன்னிக்கு யாரையும் காணோம்? செய்திகளே இல்லைனா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கெல்லாம் ரோபோ தொந்தரவு ஒரு தளத்தில் ஓரிரண்டு நாட்கள்தான் இருக்கும்!

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எங்கே போனாலும் ரோபோ வருதே. உங்க தளம், துரையோடது, வெங்கட்டோடது, வல்லியோட தளம்! :(

      நீக்கு
  3. முள்ளங்கி உடம்புக்கு நல்லது தான். ஆனால் இப்போ அவருக்குத் தைராய்ட் இருப்பதால் சாப்பிடத் தடை. வாங்கறதே இல்லை. அதே போல் நீரிழிவு நோயாளிகள் திராக்ஷைப் பழமும் சாப்பிடக் கூடாது என்கின்றனரே! பப்பாளி, கொய்யா, மாதுளை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சில பழங்கள் தான் சாப்பிடலாம். அன்னாசி சிலர் சாப்பிடலாம் என்றும் பலர் சாப்பிடக் கூடாது என்றும் சொல்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாறுபட்ட கருத்துகளை அள்ளி அள்ளி  வழங்குவார்கள்!  முள்ளங்கி எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  சமயங்களில் அப்படியே (உப்பு தொட்டு) சாப்பிடுவேன்!!!

      நீக்கு
    2. உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துப் பிழிந்து எலுமிச்சம்பழம் பிழிந்து, கடுகு, ப.மி. தாளித்து சாலடாகச் சாப்பிட்டாலும் நன்றாகவே இருக்கும். இன்னிக்கு வாழைத்தண்டு+காரட் போட்டு சாலட்.

      நீக்கு
    3. பலாப்பழம், இனிப்புகூடிய மாம்பழம் தவிர்த்து ஏனைய பழங்கள் சாப்பிடலாம் என்கிறார்கள் . பழங்களிலுள்ள இனிப்பு நீரிழிவை பெரிதா
      க பாதிக்காது என்கிறார்கள்.

      தைராயிட் நோயாளிகள் முட்டைகோஸ் சாப்பிடுவதை தவிருங்கள் என்கிறார்கள் இங்கு.

      நீக்கு
    4. ஆமாம், பழங்களை ஒதுக்க வேண்டாம் என்றே சொல்கின்றனர். என் கணவருக்குத் தைராயிட் இருப்பதால் நாங்கள் முட்டைக்கோஸ், முள்ளங்கி, காலிஃப்ளவர், ப்ராக்கோலி, பீட்ரூட், டர்னிப், நூல்கோல் ஆகியவை வாங்குவதே இல்லை. :(

      நீக்கு
  4. பாஸிடிவ் செய்திகளுக்கு பஞ்சமா? அடப்பாவமே!
    அண்ணாதுரையின் கதை அருமை! ஒரளவு யூகிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
  5. முள்ளங்கி மருத்துவ குணம் கொண்டது ஆனால் பெரும்பாலும் மக்கள் விரும்புவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலருக்கு அதன் காரம், மணம் (!) பிடிக்காத குணம் !!

      நீக்கு
  6. இந்த சனிக்கிழமை பதிவு சப்பென்று இருக்கிறது. "நான் படிச்ச கதை" உட்பட.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அப்படி நினைக்கவில்லை ஜெஸி சார். வழக்கம் போல மதியத்திற்கு மேல் வந்து விளக்கமாகச் சொல்கிறேன்.

      நீக்கு
    2. என்னுடைய அறிமுக விமரிசனங்களை எடுத்து கொண்டீர்கனால் ஒவ்வொன்றிலும் ஒரு வித்தியாசமான கண்ணோட்டம் தென்படும். 

      உதாரணமாக கொலவெறி கதையில் ஒரு ஒன் லைன் எப்படி ஒரு சிறுகதையாகிறது  என்பது காண்பிக்கப்படும். இரண்டாவதாக கம்ப்யூட்டர் சிறுகதையில் சிறுகதை காபியாய்  உருவகப்படுத்தி காபியை எப்படி ருசிப்பது என்பது விவரிக்கப்பட்டிருக்கும். மூன்றாவது பாச்சி கதையை ஒரு டாக்குமெண்டரி (குறும்படம்)  என்ற கண்ணோட்டத்தில் விமரிசித்திருப்பேன். நான்காவது நகுலன் கதையில் நவீனத்துவம் எப்படி கையாளப்படுகிறது என்பதும் குழந்தையின் புரிதலைப் பற்றியும் விமரிசித்திருப்பேன். 

      ஆனால் இன்றைய விமரிசனம் ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் எழுகிய கட்டுரை போன்று உள்ளதே தவிர, ஒரு சிறப்பம்சத்தையும் வெளிக்கொணரவில்லை. இதுவே எனது சுய விமரிசனம். 

      நீக்கு
    3. விமர்சனம் என்பது வேறு.

      அண்ணாவின் கதையை அப்படியே எடுத்த்ப் போட்டு விட்டு விமரிசனம் என்கிறீர்களே?

      நீக்கு
    4. அதைத்தான் நானும் சொல்கிறேன் ​

      நீக்கு
    5. ஒரு விஷயத்தைப் படிக்கிறோம். அதை நம் எழுத்தில் சொல்கிற மாதிரி எபி வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். அவ்வளவே.
      அப்படிச் சொல்வதற்கு ஒரு பயிற்சிக் களமமைத்து எபி புண்னியம் கட்டிக் கொள்கிறது. எல்லாரும் பங்கு கொண்டால் அழகாக இருக்கும்.

      நீக்கு
    6. எபி ஆசிரியர் குழுவிற்கு:

      இது வரை இந்தப் பகுதியில் வெளிவந்துள்ள கட்டுரைகளின்
      தலைப்பையும் எழுதியவரின் பெயரையும் குறிப்பிட்டு ஒரு பட்டியலைத் தரமுடியுமா, ஸ்ரீராம்?.

      இது இனி எழுதப் போகிறவர்களுக்கும்
      அதே தலைப்பு வந்து விடாதவாறு பார்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

      நன்றி.

      நீக்கு
    7. KGG,

      எழுதியதை அப்பப்பவே மறந்து விடுவதால் மேற்கொண்டு இந்தப் பகுதிக்கு எழுத அப்படியான பட்டியல் எனக்கும் உதவியாக இருக்கும்,

      நீக்கு
    8. ஹி ஹி நானும் படிப்பதை அப்பப்பவே மறந்துவிடுவேன்!

      நீக்கு
    9. மின்நிலா புத்தகத்தில் - பொருளடக்கம் பகுதியிலேயே நான் படிச்ச கதை ஒவ்வொரு வாரமும், யார் எழுதியது என்ற விவரத்துடன் வருகிறது. அதைப் பார்த்து
      விவரம் தெரிந்துகொள்ளலாம்.

      நீக்கு
    10. 'நான் படிச்ச கதை' ஆரம்பம் மின்நிலா 65 ஆவது வார இதழில். எல்லா மின்நிலா இதழ்களும், " மின்நிலா " facebook மற்றும் whatsapp & telegram குழுவில் பதிவேற்றம் செய்திருக்கிறோம்.
      பேஸ்புக் : https://www.facebook.com/groups/3069843546440715
      வாட்ஸ் அப் : https://chat.whatsapp.com/BmH70yzWRzTEuXW0Xeh1wh
      telegram : https://t.me/nila4u

      நீக்கு
    11. இதை பட்டியலாகக் கொடுப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம்? காரணத்தைச் சொன்ன பிறகும் என்ன சங்கடம்? எதையாவது மறைக்க முயற்சிக்கிறீர்களா?

      நீக்கு
    12. எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நான் திரட்டுவதை விட, வாசகர்கள் அவரவர்களுக்கு வேண்டியதை அவரவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்பதற்காகவே புத்தக வடிவில் பல தளங்களிலும் வெளியிடுகிறோம். அதிலிருந்தும் எடுத்துக்கொடு என்று என்னைக் கேட்டால் - நான் என்ன செய்வது? வார இறுதி நாட்கள் எல்லாமே எனக்கு மின்நிலா தயாரிப்பு, அடுத்த புதன் பதிவு தயார் செய்தல் என்று பிசி நேரம்.

      நீக்கு
    13. மேலும் எதை நான் மறைக்கவேண்டும்!! எல்லாமே திறந்த புத்தகங்களாக உள்ளனவே!!

      நீக்கு
    14. என்னைப் பொறுத்த வரை எனக்கு இதில் சிரமங்கள் இருக்கின்றன.வயது மூப்பும் உடல் சிரமங்களும் முக்கிய காரணம். அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

      என் எதிரபார்ப்பு இந்த விவரத்தை ஒரு பட்டியலாக எபியில் வெளியிட வேண்டும் என்பது.

      அதை எப்பொழுது செய்வீர்களோ தெரியாது.

      செய்ய வேண்டும் அவ்வளவு தான்.

      நீக்கு
    15. அடுத்த சனிக்கிழமை இதே பகுதியில் வெளியிடுங்களேன்.

      நீக்கு
  7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  8. முள்ளங்கி மிகவும் பிடித்தமானது... சாறு எடுத்து சிறிது உப்பும் மிளகுத் தூளும் கலந்து குடிக்கலாம்..

    என்ன... கொஞ்சம் கரகர என்று இருக்கும்.. ஆனால் மிகவும் நல்லதாயிற்றே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாறெடுத்து சாப்பிட்டதில்லை. ஆனால் சாம்பார், கறி செய்தால் பிடிக்கும்.

      நீக்கு
  9. கட்டமைக்கப்பட்ட மாய பிம்பம்..
    தெரிந்தே பொய்களை முன் வைத்து மக்களை மடையர்கள் ஆக்கிய சாதுர்யம்.. இதில் தமிழை நன்றாக எழுதினால் என்ன.. எழுதாவிட்டால் என்ன ?..

    வேண்டாம்..

    அதிகமாகப் பேசி மனதை வருத்திக் கொள்ள விரும்பவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதிகமாகப் பேசி மனதை வருத்திக் கொள்ள விரும்பவில்லை..//

      அதே.. அதே..

      நீக்கு
    2. உண்மை. யாருக்குமே தமிழ் இலக்கிய வரலாறு தெரியாது. கண்களை மூடிக்கொண்டு பிராமணர்கள் யாரையும் தமிழ்/சம்ஸ்கிருதம் படிக்க விடவில்லை. மற்ற ஜாதியினர் படிப்பதைத் தடுத்தார்கள் என்பார்கள். ஆனால் உ.வே.சாமிநாத ஐயர், என்னும் பிராமணரின் குரு மஹா வித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை என்பவரே ஆவார் என்பதை வசதியாக மறந்துவிடுவார்கள். அந்தக் காலத்தில் அனைத்து ஆதீனகர்த்தாக்களும் தமிழில் வித்வான் பட்டம் பெற்றவர்கள். சம்ஸ்கிருதமும் அறிவார்கள். இவர்களைப் பற்றி நான் மரபு விக்கியில் (மின் தமிழ்க் குழுமத்தில் இருந்தப்போ) எழுதி வைத்திருக்கேன். இப்போ அங்கே போகவே முடியலை. இல்லைனால் எடுத்துப் போடலாம்.

      நீக்கு
    3. நல்லது.
      இது பற்றிய நிகழ்வொன்றை இந்தப் பகுதியில் நினைவு கொள்கிறேன்.

      நீக்கு
    4. https://geethasmbsvm6.blogspot.com/2011/11/blog-post.html// இந்தச் சுட்டியில் தாயுமானவரில் இருந்து ஆரம்பித்துப் பல சிவனடியார்களையும் பற்றிப் படிக்கலாம். அதில் ஒரு சிலர் தவிர்த்து மற்றவர்கள் பிராமணர் அல்லாதோரே!

      நீக்கு
    5. ஹை! ஹையாஹை! அந்த ஐடியில் இருந்து கருத்துப் போடறச்சே ரோபோவே வரலை. அப்போ தினம் தினம் வரும் ஐடியிலிருந்து போட்டால் தான் ரோபோ வந்து நீ யார்னு கேட்கும் போல! :)))))

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. வைத்திய குறிப்பு , படித்த கதை எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  12. உடல் ஆரோக்கியத்திற்கான குறிப்புகளைக் கண்டேன். சிறுகதை சிறப்பு.

    பதிலளிநீக்கு
  13. முள்ளங்கி கிரேப்ஸ் குறிப்புகள் நன்று.

    பதிலளிநீக்கு
  14. நெல்லை எங்கே இருக்கார்? இணையம் இல்லாத இடங்களிலா?

    பதிலளிநீக்கு
  15. அண்ணாவின் அச்சேறிய முதல் சிறுகதை இது. அன்னாட்களில் அவர் கொண்டிருந்த செளமியன் என்ற புனைப்பெயரில் இந்தக் கதையை எழுதியுள்ளார்.

    பதிலளிநீக்கு
  16. இது அண்ணா அவர்கள் எழுதிய கதை என்று சொன்னால் தான் தெரியும்.
    அந்த அளவுக்கு அண்ணாவின் பிற்கால எழுத்து நடையிலிருந்து முற்றிலும் வேறு பட்டிருக்கிறது. ஆனந்த விகடனுக்கு ஏற்ற நகைச்சுவை கலந்த எழுத்தைக் கொண்டதாக கதையை அமைத்ததிருப்பதில் அண்ணா முழு வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  17. அண்ணாவின் இதே எழுத்து நடை தான் ஆனந்த விகடனின் செல்வாக்கு வாய்ந்த நடையாக பல காலம் இருந்தது. கிட்டத்தட்ட ஜெயகாந்தன் ஆனந்த விகடனில் எழுயும் வரை.

    இந்தக் கதை வெளிவந்த காலத்தில் தான் தேவன் ஆ வி.யில் துணை ஆசிரியராக பணியில் சேர்ந்தார் என்பது சுவையான செய்தி.

    பதிலளிநீக்கு
  18. ** ஜெயகாந்தன் ஆனந்த விகடனில் எழுதும் வரை.

    பதிலளிநீக்கு
  19. அவ்வளவு காலத்துக்கு முன்பாகவே அண்ணா எவ்வளவு அருமையாக உரையாடலில் கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் என்று நினைக்கையில் வியப்பாகத் தான் இருக்கிறது. உரையாடல் வரும் இடங்களில் வாசிப்பவருக்கு மிகத் தெளிவாகப் புரியும்படி அதற்கேற்பவான குறியீடுகள் ("....") எல்லாம் கனக்கச்சிதம். இன்றைய எழுத்தாளர்கள் கூட தடுமாறும் எழ்த்தாற்றல்கள் இவை.

    பதிலளிநீக்கு
  20. ஜீவி அய்யா அவர்களுக்கு,
    ஆனந்த விகடனில் வெளியான அண்ணாவின் கதை என்பதால் தான் இந்தக் கதையை இங்கே எடுத்து வெளியிட்டேன். நீங்கள் கதையைப் பற்றி கூறிய விவரங்கள் யாவும் எனக்கு தெரியாதவை. இப்போது தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி. உங்கள் பின்னூட்டம் உற்சாகமளிக்கிறது.

     Jayakumar

    பதிலளிநீக்கு
  21. செளமியன் என்ற வார்த்தை எந்த மொழி சார்ந்தது என்பதை எபி வாசகர்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். செளமியன் என்ற பெயருக்கான அர்த்தத்தையும்.

    காதலுக்கும், அழகுக்குமான கிரேக்க தேவதை வீனஸின் பெயரையும் அவர் புனைப்பெயராகக் கொண்டிருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணாதுரை பிறந்தது சௌமிய ஆண்டு (தமிழ்) என்பதால், சௌமியன் என்ற புனை பெயர் வைத்துக்கொண்டார்.

      நீக்கு
  22. இந்தக் கதை வெளியாகும் பொழுது அண்ணாவிற்கு 25 வயதிருக்கலாம். அந்த இளம் வயதில் எழுதுவதற்கும் ஒரு பத்திரிகை ஆரம்பித்தால் அது எப்படியிருக்க வேண்டும் என்பதிலும் இந்த இளைஞருக்கும் எவ்வளவு கனவுகள் பாருங்கள்!.

    ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து படம் பிடித்தாற் போல விவரிக்கும் அழகே அழகு!

    பத்திரிகைக்கான இலச்சினையும் அந்த சேவல் வாய் திறந்து கொக்கரகோ என்று சப்தமிடுவது போல பத்திரிகையின் பெயரைப் போட வேண்டும் என்ற கற்பனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

    நான் கூட இப்படியெல்லாம் கனவு கண்டிருக்கிறேன். அச்சு அசலாக எழுதுகோலைப் பிடித்தவனின் மன ஓட்டங்களை வார்த்தைகளாய் பிரதிபலித்த அண்ணா எனக்கு மிகவும்
    பிடித்துப் போனார்.

    பதிலளிநீக்கு
  23. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  24. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அனைத்தையும் அடக்கிவிட்டார் எழுத்தாளர் க நா சு. அருமையான கதை. // க.நா.சு. எங்கே இருந்து வந்தார்??????????????????????

      நீக்கு
    2. ஹையோ தெரியாமல் வேறு ஒரு கருத்து வந்துவிட்டது காப்பி பேஸ்ட் பண்ணும் போது...நேற்று வேலைப்பளு, குழப்பம்.....துளசியிடமும் வேறு ஒன்றிற்குக் கருத்து வாங்கி வைத்திருந்தேன் வேர்டில் சேமித்து வைத்திருந்தேன்...அது எல்லாம் மிக்ஸ் ஆகி கலந்து கட்டி வந்துவிட்டது....மனம் பலவித சிந்தனைகள் குழப்பத்தில்...ஒரு நிலையில் இல்லை...எடுத்துவிட்டேன் கீதாக்கா..

      அந்தக் கருத்துகளைத் தேடி எடுத்துப் போட வேண்டும்....

      எபிக்கும் ஸாரி கருத்து தவறாக வந்தமைக்கு....ஜெகெ அண்ணாவுக்கும் சாரி

      கீதா

      நீக்கு
  25. மருத்துவக் குறிப்புகள் நன்று. கதை வாசித்த நினைவு.....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!