சனி, 26 மார்ச், 2022

பா செ + நான் படிச்ச புத்தகங்கள்

 

பேருண்டாசனத்தில் 6 வயது சிறுமி உலக சாதனை:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 6 வயது தேஜாஸ்ரீ 2 ஆண்டுகளாக யோகா பயிற்சி பெற்று வருகிறார். தலை கவிழ்ந்து படுத்தபடி, ஒரு நிமிடத்தில், 38 முறை கால்களை தலைக்கு முன் கொண்டு வரும், கண்டபேருண்டாசனம் செய்து உலக சாதனை படைத்தார். இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஆவம்சம் வேர்ல்ட் ரெக்கார்டு அமைப்புகள் சிறுமியின் சாதனையை பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.

= = = = =


= = = = 


= = = =


= = = =

====================================================================================================================


நான் படிச்ச புத்தகங்கள்

ஜீவி 

--------------------------------------------------------------


சா. கந்தசாமி 

'கல்பனா' என்றொரு மாத இதழ்  வெளிவந்தது பலருக்குத் தெரிந்திருக்காது.  ஜெயகாந்தன் தான் ஆசிரியர்.  அந்த இதழில் வெளிவந்த மாத நாவல் தான் 'ஏரிக் கரையில்..'.   சிறு பத்திரிகைகளிலேயே அதிகம் எழுதிய சா. கந்தசாமி அவர்கள் எழுதியது.  எப்பொழுதோ வாசித்தது. போன வாரம் பழைய புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்த பொழுது கண்ணில் பட்டு மீள் வாசிப்பின் விளைவு இந்தப் பகிர்வு ஆயிற்று.


"..... அப்போது இவனுக்குவயது ஆறோ, ஏழோ.  தினம் தினம் சண்டை. அப்பாவும் தாத்தாவும் மாறி மாறி கத்துவார்கள்.  கத்தி ஓய்ந்ததும் தடியை எடுத்துக் கொள்வார்கள்.  அம்மா, அப்பாவை இழுத்துக் கொண்டு உள்ளே போவாள். ஓரோர் சமயம் அப்பா, அம்மாவைப் பிடித்துத் தள்ளி விட்டு தாத்தாவோடு சண்டைக்குப் போவார். இவன் விழிகள் பிதுங்க வேடிக்கை பார்ப்பான்.

ஒரு நாள் அந்தி கருக்கும் போது கூச்சல்.  பாப்பா வீட்டில் கிராமபோன் கேட்டுக் கொண்டிருந்த அழகு வெளியே ஓடி வந்தான். அப்பாவை விட தாத்தா பெரிதாகக் கத்திக் கொண்டிருந்தார்.  அவர் குரல் உச்சத்தில் கரகரத்தது.  " அவ உனக்கு அம்மா மாதிரியடா. .."

அப்பா சிரித்தார்.

"தேவடியா மவனே சிரிக்கிறே?"

"போடா கிழவா..". அப்பா ஓரடி முன்னே எடுத்து வைத்தார் 

" என்னடா சொன்னே?" தாத்தா எம்பி அப்பா முகத்தில் அடித்தார்.

மகா முரடன் என்று பெயரெடுத்த இவன் அப்பா முதல் அடி விழுந்ததும் திகைத்துப் போனவர் போல நின்றார். அவர் நிற்க நிற்க கிழவருக்கு வெறி ஏறியது. காலில் கிடந்த செருப்பைக் கழற்றி அடித்தார். தன்னடிக்கு மகன் பதிலடி கொடுக்காமல்  போகவே, திடீரென்று பயந்து பின் வாங்கி நடுத்தெருவில் நின்று கொண்டு பெரிதாக அலறினார்.  அவர் கூச்சல் சகிக்க முடியாததாக இருந்தது.

"கிழவா, இன்னமே கத்தினா கொன்னுடுவேன்"

'தாத்தா மூன்றாம் தாரமாக கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்த பிறகு அப்பாவுக்கு சுத்தமாகப் பிடிக்காமல் போயிற்று. .' என்று பேரன் அழகு நினைப்பில் கதை போகிறது. 

தந்தையிடம் மகன் அழகுக்கு நேர்ந்ததும் அதே தான்.  மகனின் முகச்சாயலில் அப்படியே தன் அப்பனைக் காணும் தந்தை. அப்படி காணும் நேரங்களிலெலாம் அவரது ரெளத்திரம் எல்லை மீறிப் போகும்.  தாத்தாவின் பெயரே பேரனுக்கும் பெயரானது இன்னும் எரிச்சலைக் கூட்டியது.


அழகு புல்டோசர் டிரைவர்: அரசாங்க வேலை.  ஏரிக்கரையை உடைப்பதற்காக புல்டோசருடன் இவன் இளமைப் பருவம் முழுதும் கழிந்த அன்னவாசலுக்கு வந்திருக்கிறான். அந்த ஏரியின் தென்கரையில் அன்னவாசல் ஊர் இருக்கிறது. ஒரு காலத்தில் பளிங்கு நீரை அலைஅலையய்ச் சுமந்து வயிறு பெருத்திருந்த இந்த ஏரி இப்பொழுது வரண்டு வற்றிக் கிடக்கிறது. இந்த ஏரிக்கரையை உடைப்பதற்காகத் தான் புல்டோசர்,  புல்டோசர் டிரைவர் அழகு, அரசாங்க அலுவலக ஆட்கள், ஆபிஸர்கள் என்று ஒரு படையே திரண்டிருக்கிறது. வரண்டு போன ஏரியை சீர் படுத்தி ஜனங்களுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டுமென்கிற அரசாங்க ஏற்பாட்டிற்காகத் திரண்டிருக்கும் படை!  இங்கு கூட ஒன்றை அழித்துத் தான் இன்னொன்று என்கிற நமக்கே பழக்கமாகிப் போன திட்டமிடுதல் தான்!

புல்டோசரின் டாப் கியர் சரியில்லை; போட்டால் நழுவுகிறது.  டாப்கியர் போடாமல் வேலை செய்ய முடியாது..... அடுத்த நாள் அரசாங்க பெருமக்கள் வந்து ஏரிக்கரை உடைக்கப்படுவதை ஆரம்பித்து வைக்க இருக்கிறார்கள்!..  

இறுதியில் ஏரிக்கரை எப்படி உடைபட்டது என்பது தான் கதை.  இந்தக் கதையை நடத்திக் கொண்டு வந்து இடை இடையே அழகு  நினைத்துப் பார்ப்பது மாதிரி அவன் வாழ்க்கைக் கதையைச் சொல்வது நாவலாகியிருக்கிறது..

ஒரு கதையைச் சொல்கிற மாதிரி ஆரம்பித்து அதிலிருந்து கிளை பிரிந்து கிளை பிரிந்து நிறையக் கதைகளைச் சொல்வது தான் சா. கந்தசாமி அவர்களின் பாணி. சொல்ல ஆரம்பிக்கும் கதையும் சரி, அதனின்று வெளிப்படும் வேறு வேறு கதைகளும் சரி எல்லாமும் வெற்றுக் கதை பண்ணும் கற்பனை கதைகளிலிருந்து வேறு பட்டு, நடக்கின்ற நிகழ்வுகளைத் தொட்டு இருப்பது தான் இவரது கதையல்லாத கதைகளின் புதுமைச் சிறப்பு.

'சா. கந்தசாமியின் எழுத்தோவியங்கள்' என்று ஒரு நூலும் இப்பொழுது
வாசிக்கக் கிடைத்ததில் இரட்டிப்பு சந்தோஷமாயிற்று.  'அந்திமழை' என்ற இணைய இதழுக்காக வாரந்தோறும் இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
ஏறத்தாழ முப்பத்தாறு கட்டுரைகள். அவற்றில் இலக்கிய சண்டைகளைப் பற்றி ஒன்று. எல்லா நாடுகளிலும் இலக்கியவாதிகள் இலக்கியத்தின் பெயராலேயே சண்டையிட்டு வந்ததும் அந்த சண்டைகளில் சொந்த லாபம் இல்லையென்றும் இலக்கியத்தின் 'தரம்' என்று தாங்கள் நம்பிய தரத்திற்காகவே இந்த எழுதுகோல் சண்டை என்று சா.க.  சொல்வார்.

இராமலிங்க சுவாமிகளின் 'திருவருட்பா'வை 'மருட்பா' என்று யாழ்பாணம் ஆறுமுக நாவலர் 'சண்டை'யிட்டது பற்றி, புதுமைப்பித்தன் அவர் காலத்துப் பிரபலமான கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியுடன் காகிதப்போர் புரிந்தது பற்றி,  தற்கால தமிழ் வசனம் என்னும் நூலை எழுதிய அருணாசலம்,  புதுமைப்பித்தனின் பெயரை அந்த நூலில் சேர்க்காததற்காக கவிதை எழுதியே 'சண்டை' போட்டது பற்றி --- என்று நிறைய இலக்கிய சண்டைகள் பற்றித் தெரிய வருகிறது.

இதில் பிரபல இலக்கிய விமர்சகர் க.நா. சுப்பிரமணியத்திற்கும் சி.சு.செல்லப்பாவிற்குமான சண்டை ரொம்ப விசேஷமானது.  'முக்கியமான இலக்கியவாதிகள் என்று தான் கணித்திருக்கும் நா.பிச்சமூர்த்தி,  பி.எஸ்.ராமையா ஆகியோர் மீது  க.நா.சு. விமர்சனம் வைத்த பொழுது அது சி.சு. செல்லப்பாவை வெகுவாக பாதித்து விட்டது.  இறுதி வரை க.நா சு.வை எதிர்த்து அவர் சண்டையிட்டு வந்தார்.   க.நா.சு. இறந்த பிறகும் கூட செல்லப்பா தன் சண்டையை விட்டபாடில்லை.  அது தான் இலக்கியத்தின் சிறப்பு. க.நா சு. காலமான பின்பும் அவர் கருத்துக்கள் உள்ளன. எனவே சண்டையை கருத்துக்கள் மீது தொடர்வது சாத்தியமாகிறது' என்கிறார் சா.கந்தசாமி.

1970-களில் பிரபலமான சண்டைக்காரர் வெங்கட் சாமிநாதனாம்.  'இவர் தீவிரமான இலக்கியவாதி. இலக்கியம் என்பது பன்முகம் கொண்டது என்று நம்புபவர்.  தன்னோடு தன் கருத்துக்களோடு முரண்படுகிறவர்களை எதிர்த்து சண்டையிடுவதில்  வெ. சா. சமர்த்தர்.  தான் சேர்த்த பணத்தைப் போட்டு வெங்கட் சாமிநாதன்,  'இலக்கிய ஊழல்' என்று ஒரு புத்தகம் போட்டார்.  ஆறுமுக நாவலருக்குப் பிறகு இலக்கிய சண்டைக்காக புத்தகம் போட்டவர் இவர் தான்' என்கிறார் சா.கந்தசாமி.

'சண்டையிடுவது மனிதனின் சுபாவத்தில் உள்ளது.  அது ஆதி அனாதி குணம்.  இலக்கியவாதிகள், எழுதத் தெரிந்தவர்கள் சண்டையை முன்னெடுத்துச் செல்கிறார்கள். இலக்கியத்தில் சண்டை என்பது தவிர்க்க முடியாதது.  சிலர் எழுதிச் சண்டையிடுகிறார்கள்;  அது தைரியசாலிகள் செய்வது.  கோழைகள் மனதிற்குள்ளேயே சண்டையிடுகிறார்கள். அதை விட கோழைகள் மற்றவர்கள் சண்டையிடுவதை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

'சண்டை என்பது சாமான்ய சொல்லாய் இருப்பதால் சர்ச்சை என்று ஒரு படி மேலே தூக்கி வைத்து விடுகிறார்கள்.  சண்டையின் மேலான சொல் 'போர்' தான். இலக்கியத்தில் சண்டை என்ற சொல் அதிகம் இல்லை. சண்டை நிஜம்.
அது காலம் காலமாக நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.  இலக்கிய சண்டை என்பது ஆள் சார்ந்தது இல்லை; அது தான் முக்கியம்' என்று இந்தக் கட்டுரையை சா.கந்தசாமி முடித்து வைப்பது அற்புதம்.

தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யர் அவர்களைப் பற்றிய ஒரு நினைவும் இக்கட்டுரைத் தொடரில் 'ஆசிரியர் - மாணவர் உறவைச் சொல்வதின் தொடர்பாக வாசித்த பொழுது நெகிழ்ச்சியாக இருந்தது.

பேராசிரியர் தெ.பொ. மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு ஜீவக சிந்தாமணி பதிப்பு ஆராய்ச்சிக்காகத் தேவைப்படுகிறது.  பல நூலகங்களில் தேடுகிறார். 1883--ல் உ.வே.சா. பதிப்பித்தது அது.  கால ஓட்டத்தில் எங்கே தேடியும் கிடைத்தபாடில்லை.  பேராசிரியர் வையாபுரி பிள்ளையிடம் சென்று தெ.பொ.மீ.  கேட்கிறார். அவரிடமும் அந்தப் பதிப்பு இல்லை.  'உ.வே. சாமிநாதையரிடமே கேட்டுப் பாருங்கள். கிடைக்கலாம்' என்கிறார், வையாபுரி பிள்ளை.

உ.வே.சா.வின் திருவல்லிக்கேணி அலுவலகத்திற்கு சென்று அவரைப் பார்க்கிறார் தெ.பொ.மீ.    தன் தேவையைச் சொல்கிறார். அதற்கு ஐயர், "நான் ஜீவக சிந்தாமணியை மறு பதிப்பு போட ஏற்பாடு செய்து வருகிறேன்.  அதற்கு பழைய பதிப்பில் குறிப்புகள் எழுதி உள்ளேன். மறுபதிப்புக்கு அவை தேவைப்படுகின்றன. மூன்று மாதங்களுக்குள் புதுப்பதிப்பும் வந்து விடும்" என்கிறார்.

தேடி வந்த நூல் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்கிற ஏக்கத்துடன் ஐயரிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பத் தயாராகிறார் தெ.பொ.மீ.   அப்போது "தம்பி பெயர் என்ன?" என்று வந்தவரின் பெயரைத் தெரிந்து கொளவதற்காகக் கேட்கிறார் உ.வே.சா.

"மீனாட்சிசுந்தரம்.." என்று சொல்கிறார் தெ.பொ.மீ.

உ.வே.சா.வின் முகத்தில் பளீரென்று ஒரு புன்னகை பளிச்சிடுகிறது. "என் ஆசிரியரின் பெயரைக் கொண்டிருக்கிறீர்கள்.  உங்களுக்கு இல்லை என்று எப்படிச் சொல்வது?" என்று உள்ளே சென்று தனது குறிப்புகளுடனான முதல் பதிப்பைக் கொண்டு வந்து கொடுக்கிறார் ஐயரவர்கள்.

இது தான் ஆசிரியர் -- மாணவர் என்ற அடிப்படையிலான உறவின் அடையாளம் என்று கட்டுரையை அழகாக முடிக்கிறார் சா.கந்தசாமி அவர்கள்.

சீர்காழி தாண்டி பூம்புகார் அருகிலிருக்கும் ஊர் திருச்சாய்க்காடு. இயற்கையின் வரமாய் அந்தப் பகுதியையே ரட்சிக்கும் வனத்தை நிலைக்களனாய் கொண்டு  இயற்கை செல்வங்கள் தனிமனிதர் கைக்கொண்டு எப்படி சிக்கிச் சின்னா பின்னமாகின்றன என்பதைச் சொல்ல வந்த கதையாய் தம் இளம் வயது படைப்பாய் 'சாயாவனம்' நாவலை உருவாக்கியிருக்கிறார் சா.க. அவர்கள்.  நாவலில் சாயாவனம் புளியந்தோப்பாய் உருக்கொண்டிருக்கிறது.  சகோதரி கோமதி அரசு அவர்கள் திருச்சாய்க்காடு பகுதி பற்றி நன்கு அறிந்தவர் என்பது நினைவுக்கு வருகிறது.

சாயாவனத்திற்கும், விசாரணைக் கமிஷன் என்ற நாவலுக்குமாக சா. கந்தசாமி அவர்கள் இரண்டு சாகித்ய அகாதமி விருதுகளைப் பெற்றவர். பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள் இவர் படைப்புகளாக வெளிவந்திருக்கினறன.

நிறைய சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். சிற்பக்கலை பற்றி ஆய்வுகள் செய்திருக்கிறார்.  ஓவியக் கலையிலும் ஆர்வம் கொண்டவர்.  தமிழின் உரைநடைக்கான படிப்படியான வளர்ச்சி பற்றிய இவரது கருத்துக்கள் மிகுந்த கவனம் கொள்ளத்தக்கவை.  ஆவணப் படங்கள் எடுப்பதில் நாட்டம் கொண்ட இவர் ஜெயகாந்தன் பற்றி எடுத்த ஆவணப்படம் அந்தக் காலத்தில் மிகவும் பேசப்பட்ட ஒன்று.  சுடுமண் சிற்பங்கள் பற்றி விஷயத் தெளிவு கொண்ட இவர் அதுபற்றி எடுத்த ஆவணப் படங்களும் குறிப்பிடத்தக்கவை.  இவையே வழக்கமான தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டவராக இவரைத் தோற்றம் கொள்ளச் செய்கின்றன.

= = = =

67 கருத்துகள்:

  1. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு..

    குறள் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  3. சிறுமியின் யோகா வேகம் பிரமிப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை/மதிய வணக்கம். எங்கே! நான் மதிய வணக்கம் சொல்ல ஆரம்பிச்சதும் நெல்லை வருவதே இல்லை. :)

    இப்போப் பத்து நாட்களாகத் தொலைக்காட்சிச் செய்திகள்.தினசரி செய்திகளில் இந்தச் சிறுமி தான். அருமையாக உடலை வளைத்து ரப்பர் போல் வைத்திருக்கிறார். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா.. வணக்கம்.   தொலைகாட்சி அதிகம் பார்ப்பதில்லை.  அவ்வப்போதுஓடிட்டி தளங்களில் சில பாடங்கள் பார்ப்பதோடு சரி.  நேற்று கூட அச்சம் மேடம் நாணம் என்கிற கலாச்சார சீரழிவுப் படம் பார்த்து நொந்தேன்.

      இன்று முதல் ஐ பி ல் வேறு..

      நீக்கு
    2. நான்தான் நீங்க காலை மாலை மதிய வணக்கம் சொல்லி முடிக்கும்வரை, அதாவது எட்டு மணி வரை காத்திருக்கேனே

      நீக்கு
    3. ம்ம்ம்ம் நானும் எனக்கு மொபைலில் ஜியோ மூலம் வந்திருக்கும் டிஸ்னி ஹாட் ஸ்டாரை ஆக்டிவேட் பண்ணிக் கொள்ளணும்னு நினைக்கிறேன். என்னமோ முடியறதில்லை. போன ஒரு வருஷமும் வீணாகப் போச்சு. ஆனால் படங்கள் எல்லாம் பார்ப்பேனா! தெரியலை. பார்ப்போம்.

      நீக்கு
    4. ஹாஹாஹா! நெல்லை! சமாளிப்ஸ்!

      நீக்கு
    5. எல்லாப் படங்களும் பார்க்க முடியாது.  மனதுக்கு  தோன்றிய மற்றும் சில பிரபல படங்கள் பார்ப்பதுண்டு.  என்னிடம் அமேசான் ப்ரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லைவ் மற்றும் நெட்ப்ளிக்ஸ் வைத்திருக்கிறோம்.  மகன்கள் உபயம்!

      நீக்கு
    6. இதனை OTT வைத்திருப்பவர் ஸ்மார்ட் டிவி வைத்திருக்கிறீர்களா? நேரடியாக பெரிய திரையில் காணலாமே.

      நீக்கு
    7. ஆம்.  அப்படிதான் பார்க்கிறேன்.  இன்று நான் 83 பார்க்கக் கூடும்!

      நீக்கு
    8. 83 விமரிசனம் படிச்சேன். நாங்க அப்போ அம்பத்தூரில் தான் இருந்தோம். வீடு கட்டின புதுசு. விறுவிறுப்பாகப் பார்த்த கிரிக்கெட் மாட்ச் அது! திக் திக் திக் எனத் துடித்த அந்தக் கடைசி ஓவர்! பையரும், பெண்ணும் ஆடிக் குதிச்சதை இன்னிக்கும்/என்னிக்கும் மறக்க முடியாதது. இப்போதைய வீரர்கள் ஆடுவதை அதிகம் கவனித்தது இல்லை. என்னோட கிரிக்கெட் பார்க்கும் ஆவல் கடந்த பத்து வருஷங்களாகப் போயே போச்சு! சொல்லப் போனால் கிரிக்கெட்டே இப்போல்லாம் மறந்து போச்சு.பார்க்க உட்காருவதே இல்லை. குழந்தைகள் தனித்தனியாய்ப் போனதும் இதெல்லாமும் மறந்தே போச்சு! :)))))

      நீக்கு
    9. நான் மதுரையில் இருந்தேன்.  இந்தியா வெற்றிபெற்று விட்டது என்று கமெண்ட்ரி கேட்டு ரோட்டுக்கு ஓடிவந்து யாராவது கண்ணில் படுகிறார்களா என்று பார்த்த நினைவு இருக்கிறது.  அந்நேரம் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளக் கூட ஆள் இல்லை எனக்கு!

      நீக்கு
  5. புதினா அடிக்கடி வாங்கிக் கொத்துமல்லி விதை, சோம்பு, இஞ்சி சேர்த்து அரைத்து எலுமிச்சம்பழம் பிழிஞ்சுக் கொஞ்சம் போல் கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை போட்டு அடிக்கடி குடிப்போம். வயிற்றுப் பிரச்னைகள் சரியாகும்.
    கோவைக்காய் பயன்படுத்துவதே இல்லை. முன்னெல்லாம் குழந்தைகளுக்கு இதில் கலந்த சாதம் பண்ணிக் கொடுக்க வாங்கி இருக்கேன். இப்போல்லாம் வாங்குவதே இல்லை. ஏலக்காய் வைத்தியம் எப்போதும் உண்டு. வெண்டைக்காய் முற்றினால் பிடிக்கிறதே இல்லை. மாங்கொட்டைப் பருப்பை அரைத்து மிளகு குழம்பு போல் பண்ணி வைத்துக் கொண்டு அடிக்கடி அதை விட்டுக் கொண்டு சாப்பிடுகிறோம். இதே போல் கருகப்பிலையையும் அரைத்து வைத்துக் கொள்வதும் உண்டு. இளந்தளிர் மாங்காயை நறுக்கி உப்புப் போட்டுக் காய வைத்துக் கொண்டு மாந்தளிர் வற்றலும் வைச்சிருக்கோம். எப்போவானும் குழம்பு பண்ணுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அல்லது நாங்கள் இதெல்லாம் படிக்கிறேனே அல்லது தெரிந்துகொள்கிறோமே தவிர செய்து பார்க்கும் சுறுசுறுப்பு இருப்பதில்லை!!

      நீக்கு
    2. புதினா சுரசம் வாரம் ஒரு நாள் கட்டாயம் இருக்கும். அதையும் மீறித்தான் சில சமயங்களில் வயிற்றுக்கோளாறு வருகிறது. அது வெளிச்சாப்பாடு கொஞ்சம் இருந்தாலும் உடனே வந்துடும். வயிறு வெளிச்சாப்பாடைக் காட்டிக் கொடுத்துவிடும். :(

      நீக்கு
    3. வெளி சாப்பாடு என்பதை சேர்த்து எழுதியதில் நான் அதை வெளிச்சப்பாடு என்று படித்து இது என்னடா ஏதோ மலையாள வார்த்தை எல்லாம் சொல்கிறார்களே என்று பார்த்தேன்.

      நான் வெளியில் சாப்பிட்டாலும் டிஃபன் வகையறாதான் சாப்பிடுவேன்.  மீல்ஸ் பக்கம் ஒதுக்குவதில்லை.  சாதத்தில் சுண்ணாம்பு சேர்ப்பார்கள் என்று பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள்!  மேலும் இந்தக் கடையில் வாங்கினாலும் சாம்பார், ரசம் கறி ஒரே மாதிரி சுவை என்கிற மனப்பிரமை வேறு!

      நீக்கு
    4. வெளிச் சாப்பாடு ஒரு மாறுதலுக்கு நன்றாக இருக்கும். சமீபத்தைய அடையார் சங்கீதா சாப்பாடு போல. யாத்திரையில் ணாதம் குழம்பு, கூட்டு, கரேமது, பாயசம் என்றெல்லாம் தொடர்ந்து சாப்பிட்டு சாத்த்தின் மீதான ஆர்வம் குறைந்துவிட்டது. பெங்களூரிலும் எப்பவாவது ஐயர் மெஸ் சாப்பாடு.

      நீக்கு
    5. எனக்கு எங்களோட ஆரம்பகாலக் காட்டரர் தவிர்த்து மத்தவங்க சாப்பாடு ஒத்துக் கொள்வதே இல்லை. ஆகவே எப்போவானும் முடியலைனா அவர் கிட்டேத் தான் வாங்கறோம். நாங்க வாங்கற அன்னிக்குப் பார்த்து பீட்ரூட் கூட்டு, முட்டைக்கோஸ் கறி அல்லது வெள்ளரிக்காய்க் கூட்டுனு போடுவார். கூட்டுன்னா எப்போவும் புளி விட்ட கூட்டுத்தான்! :( பொரிச்ச கூட்டே தெரியறதில்லை. :(

      நீக்கு
    6. ஒருமுறை நீங்கள் அவருக்கு பொரிச்ச கூட்டு செஞ்சு கொடுத்து இதுமாதிரியும் இனி செய்யவும்னு சொல்லிடுங்க..!!

      நீக்கு
    7. சொல்லிட்டேனே!சொல்லிட்டேன்! :))))))

      நீக்கு
  6. இப்போ 2 நாட்கள் முன்னர் மணத்தக்காளி வாங்கி வற்றலுக்கு மோரும், உப்பும் சேர்த்து ஊற வைத்தேனோ இல்லையோ 2,3 நாட்களாக வெயிலே வரலை! :)))))) இன்னிக்காவது காய வைக்கணும். சூரியனார் மனசு வைக்கணும். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த முறை கொஞ்சமே கொஞ்சம் மிளகாய் வாங்கி ஊறவைத்து காயவைத்ததோடு சரி..

      நீக்கு
    2. அவரவருக்கு மழை எப்படா பெய்யும், பூமி கைளிரும் என்ற ஆதங்கம் இருக்கு. நானே உங்களுக்கு போன் பண்ணி வடாமுக்கு முன்னேற்பாடுகளைச் செய்யுங்கள், நீங்கள் பாடியில் உலர்த்தப்போகும்போமு மழை வந்துவிடும் என்று ஐடியா கொடுக்கலாம்னு நினைத்திருந்தேன்.

      30 ரூபாய் கொடுத்து மணத்தக்காளி பாக்கெட் வாங்குவதை விட்டுவிட்டு இவங்களே அதைத் தயார் பண்றாங்களாமே

      நீக்கு
    3. ஹாஹாஹா, நெல்லை! சும்மா எப்போவானும் மணத்தக்காளியைப் பார்ப்பவர்களுக்கு 30 ரூபாய்க்குக் கடைகளில் கிடைக்கும் நூறு கிராம்/மிஞ்சினால் கால் கிலோ போதும். நாங்க வறுத்துச் சாப்பிடுவோம். கஞ்சிக்குத் தொட்டுக்கச் சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், மோர் மிளகாய் வறுத்துத் தொட்டுப்போம். சாப்பாட்டிற்கும் சில சமயம் மாறுதலாக வறுத்துத் தொட்டுக் கொள்வோம். இவை எல்லாவற்றையும் வறுத்துக் கொண்டு நெய்யில் வேப்பம்பூவையும் வறுத்துக் கொண்டு சுக்குப் பொடி, பெருங்காயத்தோடு பொடி செய்து சூடாகச் சாதத்தில் போட்டுக் கொண்டு நெய் ஊற்றிச் சாப்பிடுவோம். வயிற்றுக் கோளாறுகள், வாய் அருவருப்பு எல்லாம் சரியாகும். அநேகமாக வாரம் ஒரு நாளாவது இதெல்லாம் பண்ணிப்போம்.

      நீக்கு
    4. அதோடு இல்லாமல் மகள், மருமகள், தம்பி மனைவினு எல்லோருக்கும் வற்றல் போட்டும் கொடுப்பேன்.

      நீக்கு
    5. நெல்லை, நல்லவேளை நினைவூட்டினீங்களே! குழம்பு வடாமே இல்லை! போடலாம்னு இருக்கேன்! இப்போ நினைச்சேனா பாருங்க, உடனே மேகம் மூடிக் கொண்டிருக்கு இங்கே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    6. குழம்பு வடாம் எல்லாம் சாப்பிட்டு யுகாந்திரமாச்சு!

      நீக்கு
    7. வர வாரம் போடலாமானு யோசனை. மாடிக்குப் போய்க் காய வேண்டாம். பெரிய தட்டில் போட்டுட்டு ரங்க்ஸ் கிட்டேக் கொடுத்துட்டால் மாடியில் போய் வைச்சுடுவார். பார்ப்போம். அவருக்கும் இப்போ முன் மாதிரி மாடி எல்லாம் ஏற முடியலை. :(

      நீக்கு
    8. எங்கள் வீட்டுக்குள்ளேயே ஒரு ஓபன் டெரஸ் இருக்கிறது.  இருப்பினும்...

      நீக்கு
    9. இங்கேயும் இருக்கு ஶ்ரீராம். ஆனால் குறிப்பிட்ட நேரம் தான் வெயில் வரும். அதுவே முன்னால் இருந்த குடியிருப்புன்னா மத்தியானம் 12 மணியில் இருந்து சாயந்திரம் 4 மணி வரை வெயில் காயும்.

      நீக்கு
  7. சா கந்தசாமி அவர்களின் நூல் அறிமுகம் மற்றும் அவரைப் பற்றிய குறிப்பு சிறப்பாக வந்திருக்கிறது. அழகுவின் தாத்தா சண்டை பகுதி தவிர.

    உவெசா நிகழ்வு படித்ததுதான். தெபொமீ புத்தகத்தைத் திரும்பக் கொடுத்தாரா?

    பதிலளிநீக்கு
  8. சா.கந்தசாமியின் "சாயாவனம்" வாசகர் வட்டம் வெளியீடாக வந்தப்போவே படிச்சிருக்கேன். அப்போல்லாம் புத்தகம் வெளியிடும் முன்னர் ஒரு காப்பி வாசகர் வட்டம் கோபால் அவர்கள் மதிப்பீடு செய்ய வேண்டிச் சித்தப்பாவுக்குக் கொடுப்பார். அப்போ வாசிச்சது தான் வாசவேஸ்வரம், நடந்தாய் வாழி காவேரி!, சாயாவனம் போன்ற சில புத்தகங்கள். சா.கந்தசாமி எடுத்த சித்தப்பா பற்றிய டாகுமென்ட்ரியை அடிக்கடி பொதிகையில் போடுவார்கள்.
    வெங்கட் சாமிநாதன் சிறந்த திரைப்பட விமரிசகர் கூட. மின் தமிழ்க் குழுமத்தில் இருந்தப்போ நல்ல பழக்கம். அவருடைய விமரிசனக் கட்டுரைகளைப் பகுதி வாரியாகப் பிரித்து மின் தமிழில் "மரபு விக்கி"யில் நான் தான் சேர்த்து வந்தேன். அவருக்கும் என்னைப் போல் ஜிவாஜியைப் பிடிக்காது. ஹிஹிஹிஹி, கிண்டல் நிறையப் பண்ணுவார். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சா. கந்தசாமி அருமையான எழுத்தாளர். 2017-சென்னை புத்தகக் காட்சியில் அவரைப் பார்க்க நேர்ந்தது. (அப்போது மனுஷையும் உயிர்மையில் பார்த்துக் கொஞ்சம் பேசினேன்!). கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள் - சிறுகதை படித்திருக்கிறேன். சாயாவனம் படித்ததில்லை.

      ஓ..உங்களுக்கு வெ.சா.வுடன் பழக்கம் இருந்ததா? தமிழின் அருமையான கலை, இலக்கிய விமர்சகர். நிறைய வெளிமொழிப் படைப்புகளையும் படித்தவர்.

      நீக்கு
    2. நல்லதொரு விமரிசகர் என்றாலும் பலருடைய விரோதமும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் பல எழுத்தாளர்களுக்கு அவரைப் பிடிக்காது. அதே போல் நடிகர்களிலும். குழுமத்திலும் அவருக்கு வரும் சந்தேகங்களை விளக்கவெனத் தனியாகச் சொல்லிப் புரிய வைக்கணும். பகுதி பிரிக்கையில் அவரைக் கேட்டால் சொல்லத் தெரியாது. நாமாகத் தான் பார்த்துச் செய்யணும். பின்னர் சரியா வந்திருக்கு என்று சொல்வார். திரைப்பட இயக்குநர் சித்ராலயா ஶ்ரீதரைக் கண்டாலே பிடிக்காது. நானோ நேர் எதிர். ஶ்ரீதர் படம் எனில் விடாமல் பார்க்கணும்னு நினைப்பேன். :)))) அவர் ஶ்ரீதர் பற்றி/சில திரைப்படங்கள் பற்றி எழுதியவை எல்லாம் மரபு விக்கியில் இருக்கும்.

      நீக்கு
    3. "ஜி"வாஜி கணேசனின் "ராஜராஜ சோழன்" நடையை அவர் கிண்டல் செய்திருப்பார். :))))) ஜிவாஜி ரசிகர்கள் கோபிப்பார்கள்.

      நீக்கு
  9. செல்வி தேஜஸ்வியின்
    கண்ட பேருண்டாசன செய்தியும் காணொளியும் பிரமிப்பு..

    பாராட்டுகள்... நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  10. மருத்துவக் குறிப்புகள் சிறப்பு..

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    ஆரோக்யம் நிறை வாழ்வு
    அனைவருக்கும் கிடைக்கட்டும்.

    நற்செய்திகளும் வீட்டு மருந்துகள்
    குறிப்புகளும் அருமை. புதினா,ஏலக்காய் குறிப்பு அருமை மா.
    நன்றி. மீண்டும் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்திப்போம் அம்மா.. வாங்க வணக்கம்.

      நன்றி.

      நீக்கு
  12. ஜீவி சார், சா.கந்தசாமியை இங்கு கொண்டுவந்து விட்டதற்கு நன்றி. மேலும் பேசுவோம்.

    பதிலளிநீக்கு
  13. ..அது காலம் காலமாக நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இலக்கிய சண்டை என்பது ஆள் சார்ந்தது இல்லை; அது தான் முக்கியம்' என்று இந்தக் கட்டுரையை சா.கந்தசாமி முடித்து வைப்பது அற்புதம்.//

    சா. கந்தசாமி தெளிவாக சொல்லியிருக்கிறார். அந்தக்காலத்தில் இலக்கிய சித்தாங்களின், முரண்பாடுகளின் கைகலப்புகள், இலக்கியவாதிகளிடையே வார்த்தை குஸ்திகளில்போய் முடிந்திருக்கின்றன. படைப்புகளின் மீதான காரசார விமர்சனங்களாகவும் சில உருவெடுத்தன. அது இலக்கியம், படைப்பு மீது எழுந்த வாதங்கள், சில சமயம் விதண்டாவாதங்களானதால்(!), சண்டை, சச்சரவானதால், இலக்கிய வாசகர்களுக்கு பெரும் விருந்தாகவும் அமைந்தன. மேலும் தரமான, கூர்மையான படைப்புகள் வெளியாகின. தமிழ் சிலிர்த்தெழுந்தது, செழித்து ஓங்கியது.

    இப்போதெல்லாம் படைப்பை விமர்சிக்கிறேன் பேர்வழி என தனிமனித தூஷணையில் இறங்கிவிடுகிறார்கள். நல்லா மாட்டிக்கிட்டான்.. கிழிச்சிறுவோம்.. என்கிற மன வக்கிரம். வன்மத்தைத் தூண்டும் வார்த்தைப் பிரயோகங்கள் தாராளமாக பொதுவெளியில் வந்து விழுகின்றன. தங்களுக்கென ‘அஜெண்டா’ வைத்துக்கொண்டு அலையும் ‘குழு’க்களின் அபத்தக் காட்சிகள் வேறு. தமிழ் துவள்கிறது. மரவட்டைபோல் சுருண்டுகொள்கிறது...


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லி இருப்பது சரியே. இலக்கியச் சண்டையை ஆள் சார்ந்து எனப் பொருள் படுத்திக் கொள்வதால் தான் சண்டை தரம் தாழ்ந்து விடுகிறது.

      நீக்கு
  14. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  15. "நான் படிச்ச கதை" யை மற்றவர்களுக்கு, குறிப்பாக எனக்கு விட்டுவிட்டு "நான் படித்த புத்தகங்கள்" என்று புது பகுதியை ஜீவி ஐயா துடங்கியுள்ளார். நன்று, நன்றி. 

    புகைப்படம் ஜீவி ஐயாவுடையது அல்லவே என்று ஐயம் தோன்றியது. பின்னர் ஜெயகாந்தன் என்று நினைத்து உண்மையில் சா. கந்தசாமியுடையது என்பது பின்னர் தான் தெரிந்தது.  படத்தின் கீழ் பெயர் எழுதியிருக்கலாம்.
     
    //ஒரு கதையைச் சொல்கிற மாதிரி ஆரம்பித்து அதிலிருந்து கிளை பிரிந்து கிளை பிரிந்து நிறையக் கதைகளைச் சொல்வது தான் சா. கந்தசாமி அவர்களின் பாணி.//

    மஹாபாரதம் போன்று? 

    //சொல்ல ஆரம்பிக்கும் கதையும் சரி, அதனின்று வெளிப்படும் வேறு வேறு கதைகளும் சரி எல்லாமும் வெற்றுக் கதை பண்ணும் கற்பனை கதைகளிலிருந்து வேறு பட்டு, நடக்கின்ற நிகழ்வுகளைத் தொட்டு இருப்பது தான் இவரது கதையல்லாத கதைகளின் புதுமைச் சிறப்பு.//
    சொல்லாடல் வியக்கக் வைக்கிறது. அதுவும் "கதையல்லாத கதை" என்ற விவரணம்.

    இலக்கிய சர்ச்சைகள் இல்லையேல் இலக்கிய பரவல் இல்லை என்பது இலக்கிய படைப்பாளர்களின் நம்பிக்கை. அது என்றும்  எப்போதும் குழாயடி சண்டைகள் போல அவ்வப்போது பிரபலமாகும். அதுவே அவர்களுடைய இலக்கிய படைப்புகளுக்கு ஒரு விளம்பரம் என்பது என்னுடைய அனுமானம்.  //இலக்கிய சண்டை என்பது ஆள் சார்ந்தது இல்லை; அது தான் முக்கியம்' என்று இந்தக் கட்டுரையை சா.கந்தசாமி முடித்து வைப்பது அற்புதம்.//

    மொத்தத்தில் எங்கள் பிளாகையும் ஒரு இலக்கிய வட்டத்தில் கொண்டுவந்து விட்டீர்கள், இக்கட்டுரையின் மூலம். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படத்தின் கீழ் பெயர் எழுதியிருக்கலாம்.//

      ஆச்சு!

      //எங்கள் பிளாகையும் ஒரு இலக்கிய வட்டத்தில் கொண்டுவந்து விட்டீர்கள், இக்கட்டுரையின் மூலம். //

      ஏற்கெனவே இலக்கியக் கரையோரம் உலவிக்கொண்டிருப்பதுதானே...!

      நீக்கு
    2. இலக்கியம் என்றால் என்ன? அதை எப்படி வரையறுப்பீர்கள்? (புதன் கேள்வியாகவும் வைச்சுக்கலாமே!)

      நீக்கு
  16. செய்திகள் அருமை... கோவக்காய் இனிப்பனவர்க்கும் நல்லதாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்வார்கள். ஆனால் நாங்க கயா சென்றபோது எங்களுக்குப் புரோகிதம் செய்ய வந்திருந்த கர்நாடகா புரோகிதர் கோவைக்காயை விடச் சொன்னார். நம்மவருக்கும் குஷி தான். அவருக்குப் பிடிக்காத காய் கோவைக்காய், சௌசௌ, பீட்ரூட் போன்றவை. :))))

      நீக்கு
  17. சிறுமியின் சாதனைக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
    மற்றவை பயனுள்ள செய்திகள், நன்றி.

    பதிலளிநீக்கு
  18. ஜீவி சார் படித்த புத்தகம் விமர்சனம், நூல் ஆசிரியர் பற்றி சொன்னது ஆசிரியரை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.

    எழுத்தாளர்களை பற்றி அவர் தளத்தில் பகிர்ந்து கொண்ட போது சா. கந்தசாமி அவர்கள் த 20 வயதில் எழுதிய புகழ் பெற்ற நாவல் "சாயாவனம் " பற்றி சொல்லி இருந்தார். சாயாவனம் திருவெண்காட்டில் இருக்கும் போது அடிக்கடி சாயாவனம் கோவிலுக்கு போவோம் என்று சொன்னதை நினைவு வைத்து எனக்கு திருச்சாய்காடு தெரியும் என்று சொல்லி இருப்பது மகிழ்ச்சி.
    பாடல் பெற்ற தலம்.

    பதிலளிநீக்கு
  19. யோகாசனச்சிறுமி வியக்க வைக்கிறாள் பாராட்டுகள் வாழ்த்துகள்!

    இயற்கை மருத்துவக் குறிப்புகளில் பல செய்வதுண்டு. கோவைக்காய் இங்கு மெனுவில் அடிக்கடி உண்டு. கோவைக்காய் சாதம், கர்நாடகா ஸ்டைல் கறி என்று....

    முற்றிய வெண்டையைக் கூட நான் களைவதில்லை. சும்மாவேனும் துண்டங்களாகப் போட்டு கொதிக்க விட்டு குழம்பில் சேர்த்துவிடுவதுண்டு. சூப் செய்ததில்லை நோட்டட்!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. ஜீவி அண்ணாவின் ஆழமான வாசிப்புக் கருத்துகளுடனான அழகான அறிமுகம். சாயாவனம் தரவிறக்கி வைத்திருந்தேன். போயே போச்...மீண்டுமெ டுத்து வைத்திருக்கிறேன். கொஞ்சம் வாசிக்கத் தொடங்கினேன் புத்தகம் பற்றி அறிந்ததும் வாசிக்கத் தோன்றி எடுத்தேன்.

    இலக்கியச் சண்டைகள் எப்போதுமே சகஜம் போல. ஆனால் அப்போது இலக்கியத் தரம் சார்ந்திருந்திருக்கிறது, ஆள் சார்ந்தது இல்லை என்பது வரை அப்படியானவை நல்ல விஷயம் தான் ஆரோக்கியமானது எனலாம்.

    ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ஆள் சார்ந்ததும் ஆகியது என்று தோன்றுகிறது கூடவே நல்ல விளம்பரமும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. சிறுமியின் யோகாசன சாதனை வியக்க வைப்பதோடு கவலையும் கொள்ள வைக்கிறது. ஏனென்றால் இது ஆபத்தை விளைவிக்கலாம். யோகாசன தந்தை பொறுத்த வரை ஆசனங்களை இத்தனை முறைதான் செய்ய வேண்டும் என்னும் நியதி உண்டு.

    பதிலளிநீக்கு
  22. சா.கந்தசாமி அவர்களின் சாகாவரம் படித்திருக்கிறேன். ஜு.வி.சாரின் நல்ல முயற்சிக்கு மற்றவர்களும் கை கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  23. @ஸ்ரீராம்: நீங்களும் பார்த்தீர்களா அந்த கண்றாவி 'அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு'படத்தை?

    பதிலளிநீக்கு
  24. பாஸிட்டிவ் செய்திகள் அனைத்தும் நன்று. ஜீவி ஐயா அறிமுகம் செய்திருக்கும் சா கந்தசாமி அவர்களின் புத்தகங்களை படித்ததில்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!