செவ்வாய், 8 மார்ச், 2022

தாச்சித் தாத்தா ( 1 / 3 ) :: K G கௌதமன்

 

திருவீழிமிழலை. ஊரில் மேற்கிலிருந்து கிழக்கே ஓடும் அரசலாறு. தெற்கே தென்கரை.

அந்த தென்கரை ஊரில் நடக்கிறது நம் கதை.

கோடை விடுமுறை வந்துவிட்டது.

உள்ளூர் பள்ளிக்கூடங்களிலும், பக்கத்து பெரிய ஊர்களில் உள்ள பள்ளிக்கூடங்களிலும் படிக்கும் சிறுவர்களுக்கு விளையாட்டு காலம். அவர்கள் எல்லோருக்கும் கிடைத்த விளையாடும் திடல், அரசலாறு. கோடை காலம் ஆதலால் - ஆற்றில் மிகவும் குறைந்த அளவே தண்ணீர் ஓடும். சில இடங்களில் சிறு நீர்த்தேக்கங்கள் மட்டுமே காணப்படும். குடிப்பதற்கு தண்ணீர் எடுப்பதற்கு ஊர் மக்கள், ஆற்றில் ஆங்காங்கே ஊற்றுகள் தோண்டி வைத்திருப்பார்கள்.

ஆற்று மணலில் இறங்கி விளையாடும் சிறுவர்களுக்கு கண்ணாமூச்சி, உட்கார்ந்தா பிடிப்பியா / நின்னா பிடிப்பியா, கல்லா மண்ணா, ஓடிப்பிடிச்சி என்று பல விளையாட்டுகள்.

எல்லோருமே ஐந்து வயது முதல், பன்னிரெண்டு வயதுக்குள் இருக்கும் சிறுவர்கள், சிறுமிகள்.

கண்ணாமூச்சி ஆடுகின்ற சமயங்களில், கண்ணைப் பொத்திக்கொள்ள அவர்களுக்குக் கிடைத்த மரம், பெரிய மாமரம்

அதன் பக்கங்களில் சில காத்தாடி மரங்கள். காத்தாடி மரத்திற்கு அந்தப் பெயர் வரக் காரணம் என்ன என்றால், காற்று வீசுகின்ற நேரங்களில், அந்த மரத்திலிருந்து, இறக்கைகள் போன்ற அமைப்பு கொண்ட அதன் காய் உயரத்திலிருந்து கீழே விழும்போது இறக்கைகள் சுழல அழகாக மெதுவாக விழும்.



சிறுவர்கள் அங்கே விளையாடிக்கொண்டிருக்கும்போது, காற்றடிக்கும் நேரத்தில், மேலேயிருந்து சுழன்றுகொண்டே மெதுவாக கீழே விழும் காத்தாடிக் காயை எந்த சிறுவனாவது பார்த்துவிட்டால், “ யே.. ய் .. காத்தாடி விழுதுடா “ என்று உற்சாகமாக குரல் கொடுப்பான். அவ்வளவுதான் - எல்லா சிறுவர், சிறுமியரும், அந்தக் காத்தாடிக் காய் சுழன்று சுழன்று கீழே விழும் வரை அதைப் பார்த்து, உற்சாகமாகக் கைதட்டி மகிழ்வார்கள்.

கண்ணாமூச்சி ஆடும்பொழுது, மாமரத்தில் கண் பொத்த சென்ற மங்களம், “ ஐயோ - எறும்பு - “ என்று பயந்து அலறினாள். “ நான் இந்த மரத்தில் கண் பொத்திக்க மாட்டேன் - அந்த மேடையில் அந்தப் பக்கம் பார்த்து உட்கார்ந்து கண்ணைப் பொத்திக் கொள்கிறேன், நீங்கள் எல்லோரும் ஒளிந்து கொண்டபின் வந்து தேடிப் பிடிக்கிறேன்என்றாள்.

அன்றிலிருந்து மாமரத்து மேடை அவர்களுக்கு தாச்சி ஆனது. ஒளிந்துகொண்டவர்கள், கண் பொத்திக்கொண்டவர் வந்து பிடிப்பதற்குள், தாச்சியைத் தொட்டுவிட்டால், அப்படித் தொட்டவர்கள் - அடுத்த ஆட்டத்தில் மீண்டும் ஒளிந்துகொள்ளலாம். தாச்சியைத் தொடுவதற்கு முன் கண் பொத்திக்கொண்டவரின் கையில் அகப்பட்டுவிட்டால் அவர்தான் அடுத்து கண் பொத்திக்கொள்ளவேண்டும்.

***  ***

இவர்களின் விளையாட்டு இப்படி சென்று கொண்டிருந்த சில நாட்கள் கழித்து ஆற்றங்கரைக்கு விளையாட வந்த குழந்தைகளின் கண்களில் பட்டார் அந்த தாத்தா. குழந்தைகளின் கண்பொத்திமேடை மீது அமர்ந்திருந்தார். நீல சட்டை, வெண்மையான கேசம், தாடி, அருகே ஒரு மஞ்சள் பை.

சிறுவர் பட்டாளத்தின் ரூல்ஸ் ராகவன் (எல்லா விளையாட்டுக்கும் ரூல்ஸ் சொல்லுவதால் அவனுக்கு ரூல்ஸ் ராகவன் என்று பெயர் வந்துவிட்டது!) பெரியவர் அருகே சென்றான். “ தாத்தா - நீங்க ஒரு ஓரமா உக்காருங்க, நாங்க இங்கே கண்ணாமூச்சி விளையாட்டு ஆட கண் பொத்திக்கணும் என்றான்.

பெரியவர் ஒன்றும் பேசவில்லை. ஒரு புன்முறுவல். அவ்வளவுதான்.

சரிதான் - இவருக்குக் காது கேட்காது போலிருக்குஎன்று நினைத்த ராகவன், இன்னும் அருகே சென்று, தான் சொன்னதை இன்னும் சத்தமாகச் சொன்னான்,

பெரியவர் மீண்டும் புன்முறுவலுடன் - ‘ விளையாடுங்கஎன்பது போல சைகை காட்டினார். கண் பொத்திக்கொள்பவர் தன் அருகிலேயே அமர்ந்து பொத்திக்கொள்ளலாம் என்பது போல சைகை செய்தார். மேலும், அவருடைய மஞ்சள் பையிலிருந்து ஒரு கடலை மிட்டாய் எடுத்து, அதை ராகவனுக்குக் கொடுத்தார். 

சிறுவர்களுக்கு  மிகவும் சந்தோஷம். உற்சாகமாக ஒவ்வொருவராக அவரருகே வந்து ஆளுக்கொரு கடலை மிட்டாய் வாங்கி சுவைத்து மகிழ்ந்தனர்.

கண் பொத்திக்கொள்ள வருகின்ற சிறுவன் / சிறுமியோ அல்லது தாச்சியை தொட வருகின்றவர்களோ தாத்தாவைத் தொட்டு அவர் தருகின்ற மிட்டாய் சுவைப்பது என்று இரண்டு நாளில் வழக்கமாகிவிட்டது.

ஒருநாள் கடலை மிட்டாய் - அடுத்த நாள் கமர்க்கட் - பிறகு வேறொன்று என்று தாத்தா இலவசங்கள் தொடர்ந்தன.

அங்கு விளையாடிய சிறுவர்களில் முதலில் எப்போதும் ஆற்றங்கரைக்கு வருகின்ற வேலு, தாச்சித் தாத்தா அக்கரையிலிருந்து (திருவீழிமிழலை) வருகிறார் என்பதைத் தெரிந்துகொண்டு, தன்னுடன் விளையாடும் மற்றவர்களுக்கும் சொன்னான். 

(தொடரும்)


104 கருத்துகள்:

  1. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு..

    வாழ்க குறள் நெறி.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க நலம்.. வாழ்க தமிழ்..

      வாங்க துரை செல்வராஜூ ஸார்..   வணக்கம்.

      நீக்கு
  3. ஓ!..

    முக்கனி போல மூன்று வாரங்கள்!..

    வாழ்க.. வளர்க...

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  5. எபியில் இந்த 'கேட்டு வாங்கிப் போடும் கதை'ப் பகுதியின் ஆரம்பமே ஒரு சுவாரஸ்யமான கதை.

    இதில் நீங்களும் ஒரு கதை எழுதிக் கலந்து கொண்டதில் ரொம்பவும் மகிழ்ச்சி.

    மாலை வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்..  உங்களிடம் அசடு வழிந்தேன்   அதில் தொடங்கியது!  மெதுவாய் வாருங்கள்.

      நீக்கு
    2. ஹி ஹி -- யாரும் கேட்காமலேயே எல்லோரையும் போட்டு வாங்கும் கதை!!

      நீக்கு
  6. ஸ்ரீராம்! உங்களின் வாசிப்பு ஆர்வமாகவே அந்த நிகழ்வுகள் என் மன்சில் படிஞிருக்கின்றன. தயவு செய்து வேறு விதமாக எண்ணாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. ஜாலியான மூடில் சொன்னது.  எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது என்பது போல இதற்கும் காரணம் இருந்திருக்கிறது.  முதலில் அசடு வழிந்த கதை.  அப்புறம் அசலை வாங்கிய கதை.   அப்படியே கே வா போ க ஆரம்பிக்க முடிந்தது.

      நீக்கு
    2. எத்தனை வருஷத்திற்கு முந்தைய தூங்காத நினைவுகள்? எபி -- வாசகர், அதில் எழுதுவோர் பிணைப்பு அற்புதமானது! ...,

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் காலை/மாலை/மதிய வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இந்திய மாணவ/மாணவியர் அனைவரும் போர் நடைபெறும் இடங்களில் இருந்து முற்றிலும் தொல்லை இல்லாமல் நீங்கி நம் நாட்டுக்கு/அவரவர் ஊருக்குப் பிரச்னைகள் இல்லாமல் வந்து சேரப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  10. கதை மிக அருமை.

    //ஆற்று மணலில் இறங்கி விளையாடும் சிறுவர்களுக்கு கண்ணாமூச்சி, உட்கார்ந்தா பிடிப்பியா / நின்னா பிடிப்பியா, கல்லா மண்ணா, ஓடிப்பிடிச்சி என்று பல விளையாட்டுகள்.//
    அனைவருக்கும் தங்கள் இளமைகால நினைவுகள் வரும்.

    தாத்தா, சிறுவர்கள் விளையாட்டு, காத்தாடி விழுதல் படம் எல்லாம் அருமையாக வரைந்து இருக்கிறார். கதையும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை+சஷ்டி+கிருத்திகை மூன்றும் சேர்ந்த விசேஷமான சிறப்பு நாள் எனவும் ஏழு வருடங்களுக்கு ஒரு முறையே இப்படி அமையும் எனவும் நேற்றிலிருந்து வாட்சப்பில் வந்து கொண்டே இருக்கிறது. இன்று அதிகாலையில் காஞ்சி மடம் சார்பிலும் இந்தச் செய்தி வந்துள்ளது. இந்த நாளில் மால்முருகனைத் துதித்து அனைவரும் எல்லா நலன்களும் பெறவும் பிரார்த்தனைகள். இன்று சிறப்பு விரதம் இருப்போருக்கும் அனைத்தும் நல்லபடியாக நடந்திடப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  12. திருவீழிமிழலை என் புக்ககத்து ஊரான கருவிலி என்னும் சற்குணேஸ்வரபுரத்துக்குக் கிழக்கே நேரே கோடு போட்டால் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இங்குள்ள உயரமான மேட்டில் ஏறிப் பார்த்தால் கோயில் கோபுரம் முன்னெல்லாம் தெரியும் என்பார்கள். ஆனாலும் நாங்க இந்தக் கோயில் சென்றது2010 ஆம் ஆண்டிலோ என்னமோ! அரிசிலாற்றங்கரையின் வர்ணனையைப் பார்த்ததும் நான் கல்யாணம் ஆகி வந்தப்போ அரிசிலாற்றில் கோடை நாட்களின் வெண்மணல் பரப்பும் சுத்தமும் நினைவில் வந்து மோதுகிறது. இப்போதோ? வறண்டு ஆங்காங்கே ஆகாயத்தாமரைச் செடிகள் முளைத்துப் புதர் மண்டிக்கிடக்கிறது. ஊற்றுத் தோண்டிக் கிடைக்கும் கொஞ்ச ஜலமும் சாக்கடை நீர் போல நிறம். ஆங்காங்கே மணல் அள்ளிச் சென்ற பள்ளங்கள். மொத்தத்தில் யுத்தகளத்தில் கன்னாபின்னவெட அடிபட்டுப் படுத்திருக்கும் அல்லது வேற்று மனிதர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டிருக்கும் ஓர் பெண் போல் இருக்கிறது. மனதை வேதனைப்படுத்தும் விஷயம்.

    பதிலளிநீக்கு
  13. திரு கௌதமன் அவர்களின் இந்தக்கதையின் போக்கு இன்னமும் புரிபடவில்லை. மூன்று வாரங்கள் வரப்போவதால் காத்திருக்கேன். குழந்தைகள் விளையாட்டின் "தாச்சித்தாத்தா" போல் முகநூல் நண்பர் டிஆர்சி அவர்களை அவர் பேத்தி சஹானா "டாய்சித் தாத்தா" என்பாள்.டீஆர்சித் தாத்தா என்பதை அவள் மழலையில் "டாய்சித் தாத்தா" ஆகிவிட்டார். அது நினைவில் வந்தது.

    பதிலளிநீக்கு
  14. அடுத்து ஶ்ரீராம் எழுதப் போகும் கதைக்குக் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  15. இந்தக் காத்தாடிக்காய் பற்றிக் கேள்விப் பட்டதே இல்லை. நம்மவரைக் கேட்டால் அவருக்கும் தெரியலை என்கிறார். !!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா!! வெங்கட் நாகராஜ் கூட அவருடைய பழைய பதிவு ஒன்றில் இது பற்றி எழுதியுள்ளார்.

      நீக்கு
  16. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    ஆரோக்யம் நிறை வாழ்வு தொடர இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  17. காத்தாடி மரம். ஹாரி பாட்டர் கதையில் வரும்ஹாக்கி பந்து போல இருக்கிறது.
    நல்ல வரைதல் .
    நானும் இந்த மரம் பற்றிக் கேள்விப்பட்டதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வாரக் கதைப் பகுதியின் இறுதியில், காத்தாடிக்காய் பற்றிய காணொளி ஒன்று இணைத்துவிடுகிறேன். அப்பொழுது எல்லோரும் அது பற்றி தெரிந்துகொள்ளலாம்.

      நீக்கு
  18. படங்கள் எல்லாம் சிறப்பாக வரைந்திருக்கும் திரு கேஜிஜி அவர்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் படங்களில் எல்லாம் ஓர் ஓரத்தில் அநேகமாக வலப்பக்க ஓரத்தில் வில்/அம்புக்குறி வரைந்து கையெழுத்திடுகிறீர்கள். இதன் தனிப்பட்ட பொருள் ஏதானும் இருக்கா?

      நீக்கு
    2. ஓஹோ, எங்க குஞ்சுலுவும். எனக்கு லக்னம் தனுர் லக்னம். :))))) ராசி உலகே அறிந்ததாச்சே! :)))))

      நீக்கு
  19. சீக்கிரமே முடிந்து விட்ட ஆரம்பம்.
    படங்கள் ஜோர்.
    தாய்ச்சி தாத்தாவின் கதை அறிய ஆவல்.
    குழந்தைகளின் விளையாட்டு வர்ணனைகள்

    நம் நினைவுகளையும் அழைத்து வருகின்றன.

    ஆறு இருக்கும் ஊரில் குடி இருப்பதும் ஒரு ஆனந்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் முன்னெல்லாம் அப்படித் தான்/இப்போவும் சிலசமயங்கள் கனவு கண்டு கொண்டிருந்தேன். ஆனால் கல்யாணம் ஆகிப் புக்ககம் வந்ததும் ஒரு இரண்டு, மூன்று நாட்கள் கழிச்சு மெதுவாக என் நாத்தனார் ஒருவரிடம் ஆற்றங்கரை வரைக்கும் நடந்துட்டு வருவோமா எனக் கேட்டப்போ ஹோ வென எல்லோரும் சிரிப்பு. பின்னர் சொன்னாங்க. நான் அப்படியெல்லாம் போகக் கூடாதாம்/போகவும் முடியாதாம். அதோடு அவங்கல்லாம் ஆற்றங்கரை வரைக்கும் நடந்து விட்டு அங்கே உட்கார்ந்துட்டு வரதிலே என்ன இருக்கு? கால் தான் வலிக்கும்னு சொல்லிட்டாங்க. நம்ம ரங்க்ஸாவது அழைச்சுப் போவாரோனு நினைச்சால் அவரும் ஊரில் எல்லோரும் சிரிப்பாங்கனு சொல்லிட்டார். ஏமாற்றமோ ஏமாற்றம் போங்க! :(

      நீக்கு
    2. மதுரையில் பேச்சியம்மன் படித்துறை, புட்டுத்தோப்பு எனப் போவோம். ஸ்வாமி, மீனாக்ஷியுடன் அங்கே வருவார். அதிலும் புட்டுத்திருவிழா அன்று ஒரே அமர்க்களப்படும். அதைத் தவிர்த்து இருக்கவே இருக்கு அழகர் ஆற்றில் இறங்கறச்சே ஊரே இறங்கும்.

      நீக்கு
    3. சுவாரஸ்யமான தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
    4. //சீக்கிரமே முடிந்து விட்ட ஆரம்பம்.//

      ஆரம்பம் எப்படி முடிவாகும். ஆரம்பம் போனால் தானே  முடிவு வரும். முடிவு என்று சொன்னால் ஒழிய முடிவு வருவதில்லை. ஒரே கண்பியூஷன்.

      Jayakumar

      நீக்கு
    5. முதல் பகுதி சுருக்கமாக முடிந்து விட்டது என்று சொன்னேன்
      ஜி. கதையை மேலும் கேட்கும் ஆர்வத்தில்,
      அடடா முதல் பகுதி சீக்கிரம் தொடரும் போட்டாரே
      என்று தோன்றியது.

      நீக்கு
  20. வரும் எல்லா மகளிருக்கும் அகில உலக மங்கையர் தின வாழ்த்துகள்.
    நலமே பெறுவோம்.

    பதிலளிநீக்கு
  21. அரசலாற்று மணலில் விளையாடியதெல்லாம் அற்புதம்.. அப்போது வயது 7 அல்ல்து 8..

    முன்பு எபியில் எழுதிய மூங்கில் பாலம் கூட திருவீழிமிழலை கதை தான்..

    பதிலளிநீக்கு
  22. அனைவருக்கும் காலை வணக்கம். எ.பி.யின் தோழிகளுக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ❤️🙏😊

    பதிலளிநீக்கு
  23. தாத்தாவோடு தொடர்கிறது கதை நானும் தொடர்கிறேன்... அல்லது தொடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  24. அன்பின் ஸ்ரீராம்..
    நேரம் இருப்பின் மின்னஞ்சலைக் கவனிக்கவும்..
    நன்றி..

    பதிலளிநீக்கு
  25. //மெதுவாக கீழே விழும் காத்தாடிக் காயை// - இது எங்கள் பாடப்புத்தகத்தில் வந்திருக்கிறது. நானும் இதனை பூலாங்குறிச்சியில் பார்த்திருக்கிறேன். அதனை வைத்து விளையாடியுமிருக்கிறேன். (75ல்)

    பதிலளிநீக்கு
  26. கதையை ஒட்டாமல் ஓரிரண்டு வரிகள் எழுதுவது தான் வழக்கமாக இருக்கிறது. அந்த சாமர்த்தியம் நமக்கு இருக்கிறதா என்று பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  27. ஓவியம் என்றால் கால் விரல்கள், கை விரல்கள் போன்றவற்றை வரைவது தான் ரொம்ப சிரமமாமே! அப்படியா, கேஜிஜி?

    பதிலளிநீக்கு
  28. ஆத்தாடி! காத்தாடிக் காய் தான் ஹீரோ போலிருக்கு!

    பதிலளிநீக்கு
  29. திருவீழிமிழலை. ஹப்பாடி..

    'ழ'கரத் தகராறுகாரர்களுக்கு சரியான எக்ஸஸைஸ் போலிருக்கே! :))

    பதிலளிநீக்கு
  30. தாத்தாவின் அறிமுகம் ரொம்ப இயல்பாக இருக்கிறது, கேஜிஜி!
    கதை சொல்லும் பாங்கும் அருமை!
    இந்தத் திறமையல்லாம் இத்தனை நாள் எங்கே வைச்சிருந்தீங்கன்னு தெரிலேயே! அடிக்கடி எழுத வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலைதானே? நன்றி.

      நீக்கு
  31. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  32. தாத்தாப்பூச்சி என்போம் சிறுவயது கிராமவெளியில் துரத்திக்கொண்டே.. நினைவுக்கு வந்து ஆடுகிறது!

    அது சரி, ஷிவ் சேனா சண்டைக்கு வரவில்லையா? அவர்களது சின்னத்தை கேஜிஜி ஏன் எடுத்துக்கொண்டார், ஒரு வார்த்தை அவர்களிடம் கேட்காமல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாத்தாப்பூச்சி! ஓ! இப்போப் புரியுது. அம்பத்தூரில் கூட நிறையவே வரும். நிறையப் பார்த்து அந்த வயசிலும் அதைப் பிடிக்க ஓடி இருக்கேன்,குழந்தைகளுக்குக் காட்டவென்று பிடிக்க ஓடுவேன். காத்தாடிக்காய்னாப் புரியலை. :)))))))

      நீக்கு
    2. தாத்தா பூச்சி வேறு; இது வேறு. அடுத்த வார இறுதி காணொளி காண்க.

      நீக்கு
    3. ஓஹோ! ஆவலுடன் காத்திருக்கேன். நன்றி.

      நீக்கு
  33. காலட்சேபம் துவக்கம் சுவாரசியமாக இருக்கிறது. 

    இந்த காத்தாடி காய் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். இங்கு எனது வீட்டிற்கு பக்கத்தில் கோயிலில் இந்த  மரம் உள்ளது. ஆபிஸ் போக பஸ்ஸுக்கு போகும் போது கொஞ்சம் எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொள்வேன். ஆபிஸில் கோடிங் வராத சமயத்தில் ஒன்று இரண்டை பறக்க விட்டு வேடிக்கை பார்த்தால் ஞானோதயம் வந்து விடும். 

    பதிலளிநீக்கு
  34. தனி அறை உண்டு. மற்றவர்கள் சில சமயம் என்னை பார்த்து வட்டு என்பார்கள். கீதா ரங்கன் விளக்கக்கூடும். 

    பதிலளிநீக்கு
  35. கௌ அண்ணா, கதையும் படங்களும் சூப்பர்.

    கதையில் சொல்லப்பட்டிருக்கும் விளையாட்டுகள் சிறு வயதை நினைவூட்டியது. அருமையான காலகட்டம் அது. 5, 6 ஆம் வகுப்பு வரை.

    கதையின் ஓட்டம் புரிகிறது. தாச்சி தாத்தாவைப் பற்றி...தாத்தாவுக்கும் அந்தக் குழந்தைகளுக்குமான நட்பும் உறவும்...என்று நகரும் என்று தோன்றுகிறது...சுவாரசியம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. எழுதும்போது எனக்கும் சின்ன வயதில் நானும் என் அண்ணனும் எங்கள் கிராமம் மற்றும் சுத்துப்பட்டி கிராமங்களுக்குச் சென்று விடுமுறை நாட்களைக் கழித்தது ஞாபகம் வந்தது.

      நீக்கு
  36. சொல்லிச் சென்ற விதம் அழகாக இருக்கிறது கௌ அண்ணா. கதையை வாசித்து தாத்தா அறிமுகம் ஆனதுமே இந்தத் தாத்தாவுடன் எனக்கும் ஒரு நட்பு ஏற்பட்டு விட்டது!!!!! தாத்தா ஈர்க்கிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  37. இந்த மரம் - காத்தாடி மரம்/காய் திருவனந்தபுரத்தில் இருந்த போது கண்டதுண்டு. அதன் பின் கண்ணில் படவில்லை. மகனுக்கு அதைக் காட்டி பாரு இயற்கையான பாராசூட் என்று சொல்லியதுண்டு. அது போலவே பஞ்சு காய் வெடித்து பஞ்சு சிறிய சிறிய துகளாக மிக அழகாகப் பறக்கும்...அதையும் மகனுக்குக் காட்டி இயற்க பாராசூட் என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  38. இந்தக் காத்தாடிக் காயினால் தாத்தாவுக்கும் குழந்தைகளுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டு ...ஆ கடைசி எப்படி முடியப் போகிறதோ என்று இப்பவே..

    கீதா

    பதிலளிநீக்கு
  39. கதை இயல்பான நடையில் கண் முன்னே காட்சிகள் தோன்றுவது போன்றான நடையில் செல்கிறது. படங்களும் அதற்கு ஏற்றாற்போல்.

    காற்றாடி மரம்னு தான் கேரளத்திலும் சொல்வது. இங்கும் உண்டு.

    தலைப்பு வித்தியாசமாக உள்ளது. தாச்சி என்றால் குழந்தைகளிடம் தாச்சிக்கோ என்று படுத்துக் கொள்வதற்கு ஒரு சில குடும்பங்களில் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

    தாத்தாவைப் பற்றி ஆவலுடன் தொடர்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே "தாய்ச்சி" என்னும் சொல்லே சுருக்கமாகத் "தாச்சி" என ஆகியிருக்கிறது. தாய்ச்சி என்றால் தாய்ப்பால் அளிக்கும் பெண்ணையும் குறிக்கும். அதே சமயம் விளையாட்டில் தலைவனாக இருப்பவரையும் குறிக்கும். தாய்ச்சியின் பொருள் அகராதிப்படி முலம். இந்த வழக்குக்குத் தாய்ச்சி இவன் தான் 2. Origin, moving spirit; விளையாட்டில் தொடவேண்டுமிடம் 5. Appointed place to be touched in a game; விளையாட்டில் தலைமையாள். 4. Leader of a party in a game.. இந்தக் கதையில் இதன் பொருள் இது தான்.

      நீக்கு
    2. கண்ணாமூச்சி விளையாட்டில் தாய்ச்சியைத் தொடுவதில்தான் போட்டியே. விளையாடியது எல்லாம் ஞாபகம் வந்தது. அருமையாகப் படங்களும். நான் கடைசியாக வருவதால் விளக்கங்கள் படித்து விடுகிறேன். கதை அருமை. நான் சொல்வது பதில் கிடைக்காது. ரஸித்துப் படித்தேன். அருமையான ஆரம்பம். அன்புடன்

      நீக்கு
    3. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  40. ஆறும் ஊரும் என கிராமத்துக்கு இட்டுச்செல்கிறது .நமதுஊரில் ஆறு இல்லை கடல்தான்.எனக்கு ஆறு இருக்கும் ஊர் பிடிக்கும். சிறுவர்களின் விளையாட்டு பெரியவர் என அந்தக் காலத்துக்கு போய் வந்தோம். தொடர்வோம்....

    பதிலளிநீக்கு
  41. சிறு வயது விளையாட்டுகள், தாத்தாவின் அறிமுகம் எல்லாம் சுவை! காத்தாடிக்காய் பர்பிள் நிறத்தில் தானே இருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காயாத இளம் காய் அந்த நிறத்தில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  42. சிறு வயது நினைவுகள் மனதில் வலம் வருகின்றன

    பதிலளிநீக்கு
  43. காத்தாடி காய் - அய்யர் மலை பயணத்தில் பார்த்து இருக்கிறேன். என் பதிவில் எழுதியும் இருந்தேன்.

    கதை ஸ்வாரசியமாக ஆரம்பித்து இருக்கிறது. வரும் பகுதிகளை படிக்கும் ஆவலுடன் நானும்.....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!