வியாழன், 18 ஆகஸ்ட், 2022

சின்னப்புறா ஒன்று..

 சந்தோஷமோ, துக்கமோ, வருத்தமோ எதுவும் நிரந்தரம் இல்லைதான்.  என் வருத்தம் சட்டென 24 மணிநேரத்தில் குறைந்தது எனக்கே ஆச்சர்யம்தான்..

சில நாட்களாகவே எங்கள் பால்கனியில் புறா வந்து செல்வது வழக்கமாக இருந்தது.  வாஷிங் மெஷின் போட சென்றாலோ, துணி காயப்போட போனாலோ சட்டென மறைவிலிருந்து வெளிப்பட்டு நம்மீது உரசியபடி வெளியே பறக்கும்.  கம்பித் தடுப்பு போட்டிருந்தாலும் நல்லபெரிய இடைவெளிகள் என்பதால் சுலபமாக உள்ளே வந்து சென்று கொண்டிருந்தன.  எங்கள் ஏரியாவில் புறாக்கள் அதிகம்,.

அதனால் ஏற்படும் நாற்றமும், அது ஏற்படுத்தும் திடீர் திடுக்கிடல்களும் பாஸை அலர்ஜியுற வைத்தன.  போதாக்குறைக்கு மீனா புருஷன் வதந்தி வேறு அவரை பயமுறுத்தியது.  

எனக்கா,  இருமல் பாடாய் படுத்திக் கொண்டிருப்பது போனஸ் பயமுறுத்தல்.  நெட் போட்டு விடலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  அந்த நீண்ட நாள் கோரிக்கையை சென்ற வாரம் நிறைவேற்றப் புகுந்தபோது...

வந்தவர்கள் அங்கிருந்த Rackகின் மேல் ஏறிப் பார்த்து, ஒரு கூட்டை எடுத்து வெளியில் வைத்தார்கள்.  நாற்றம்!  அதனுள் உடையாத சிறு முட்டை ஒன்றுடன் ஒரு சின்னஞ்சிறு புறாக்குஞ்சு ஒன்று அமர்ந்திருந்தது.  எனக்கு திடுக்கிட்டு போனது.

எனக்கு அடிக்கடி கேட்டு கேட்டு மனதில் படிந்து விட்ட வசனங்கள் "நான் யார் குடியையும் கெடுக்கவில்லை,  யார் கூட்டையும் கலைக்கவில்லை, யார் திங்கற சோத்துலயும் மண் அள்ளிப் போடவில்லை..  எனக்கேன் இந்தக் கஷ்டம்?"

இப்படி ஒரு கூட்டைக் கலைப்பேன் என்று எதிரே பார்க்கவில்லை.  நம்புங்கள்..  கண் கலங்கி விட்டது.  அந்தக் குஞ்சுப் புறா என்ன அநாதரவாக பார்ப்பது போலிருந்தது.  அதன் தலையில் கைவைத்து தடவினால் விரல்களின் மீது அலகை டக்டக்டக்டக்கென வைத்து அலைபாய்ந்ததது.


நெட்டர் யோசனைப்படி அதை ஒரு ஷூ டப்பாவில் வைத்து மொட்டை மாடியில் வைத்து காத்திருந்தேன். காக்கா கொத்தாமல் பார்த்திருந்தேன்.  புறாத்தாயின் வருகைக்காக ஒளிந்து நின்று காத்திருந்தேன். 




வந்து பார்த்த ஒரு புறாவும் இதை லட்சியயம் செய்யாமல் அங்கிருந்த வொயரை இழுத்துப் பார்த்து சோதித்தது.  எங்கோ கூடு கட்டிக் கொண்டிருக்கிறது போலும்...  'போய்ச் சொல்லேன் இதன் தாயிடம் அல்லது உன் குழுவிடம், நம் இனத்துக் குட்டி ஒன்று அனாதரவாய் வெயிலில் தவிக்கிறது என்று...'

இரண்டு மணி நேரம் ஆகியும் தாய் வரவில்லை.  'வெயில் தாளாதே குட்டி பாப்பா' என்று உள்ளே கொண்டு வந்து வைத்து மாலை நான்கு மணிக்கு மேல் மறுபடி முயற்சித்தேன்.  



'பத்திரமாக நிழலில் இருந்து வந்தோம், அவ்வப்போது அம்மா வந்து பார்த்துக் கொண்டாள், இப்போது ஒரு ராட்சசன் எட்டி எட்டி பார்க்கிறான், போட்டோவாய் எடுக்கிறான், கொண்டு வந்து மலையுச்சி மாதிரி ஒரு இடத்தில வைத்திருக்கிறானே' என்கிற பீதியும், குழப்பமும் குஞ்சுப்புறாவிடம் தெரிந்த மாதிரி பிரமை.

பறவைக்காதலராம் கோமதி அக்காவுக்கு ஃபோனைப் போட்டு விவரம் சொல்லி விவரம் கேட்டேன்.   அவர் சொன்ன விவரங்கள் நம்பிக்கை அளிப்பதாய் இல்லை.  புறாக்குஞ்சின் புகைப்படம் அனுப்பி வைத்தேன்.  இறைவன் காக்கட்டும் என்று பதில் அனுப்பினார்.

வாசனையை வைத்து வரத்தெரியாத, பொறுப்பில்லாத தாய்ப்புறாவின் மேல் கோபம் வந்ததது.'என்ன அம்மா புறா இது..   தேட வேண்டாமா, வந்து காக்க வேண்டாமா?

இங்க் பில்லர் தேடி, கிடைக்காமல் போகவே பஞ்சை பாலில் நனைத்து புகட்டிப் பார்த்தேன்.  விவரமில்லாத புறாக்குஞ்சு அதை நிராகரித்தது. இரவாகிக் கொண்டிருக்க, காலை முதல் அது ஆகாரமில்லாமல் இருக்கிறதே என்று கவலையானேன்.

கோமதி அக்கா புறாக்குஞ்சுக்கு ஆகாரம் கொடுப்பது பற்றிய யூடியூப் வீடியோ அனுப்பி இருந்தார்.  இத்தனூண்டு புறா அலகைப் பிரித்து கடலைகளை ஒவ்வொன்றாய் உள்ளே போட்டு மூடினார் அதில் ஒருவர்.  கம்பை (தானியம்ங்க) கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே போட்டார்.  சிரிஞ்சில் நீரெடுத்து புகட்டினார்.

மூன்றுமே என்னிடம் அப்போது இல்லை.  நாளை அலுவலகத்திலிருந்து வரும்போது இவைகளை வாங்கி வந்துவிட வேண்டும் என்று முடிவு செய்தேன்.  'நாம்தான் வளர்க்க வேண்டி இருக்கும்' என்றேன்.  'வீட்டுக்குள் விடாமல் வெளியில் வைத்தே வளர்க்க வேண்டும்' என்றார் பாஸ். 'ஒரு பெண்புறா கண்ணீரில்' என்று மெல்லிய குரலில் பாடினார்,  

இரவுகளில் சாதாரணமாக மூடி வைக்கும் மொட்டை மாடிக் கதவை திறந்து வைத்து, ஷூ டப்பாவை  மாடிப்படி வளைவில் வைத்தேன்.  படுத்தேன், நிம்மதியின்றி புரண்டு புரண்டு ஒருவழியாய் அரைகுறையாய் உறங்கினேன்.

கனவில், வளர்ந்த ஒரு அன்பான பாசமான புறா தோளில் அமர்ந்திருக்க அங்குமிங்கும் சுற்றி வந்தேன்.  என்னை விட்டு பிரிய மறுத்தது அது.  நான் சொன்னதை எல்லாம் கேட்டது.

காலை வழக்கம்போல நாலரைக்கு எழுந்து காபியெல்லாம் போட்டுக் குடித்தபின் திடீரென அதன் நினைவு வர, திறந்து பார்த்தால்......

மொட்டை மாடிககதவு மூடி இருக்க, புறாக்குஞ்சு இருந்த இடம் வெற்றிடமாக இருந்தது.

என்ன ஆச்சு?  எங்கே போச்சு?

இந்தக் கேள்விகளுக்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை.  பிளாக்கிலிருந்த மற்ற ஐந்து வீட்டுக் காரர்களுக்கும் தெரியவில்லை.  பக்கத்து வீட்டுக்காரர்தான், 'எப்போதும் மூடிதானே இருக்கும், யாரோ அறியாமல் திறந்து வைத்திருக்கிறார்கள்' என்று கதவை இரவு மூடி விட்டு வந்தாராம்.  அப்போது புறாக்குஞ்சு இருந்ததாம்.

எங்கள் ஏரியாவில் பூனையை நான் பார்த்ததில்லை.  நாயும் உள்ளே வராது,.  கோமதி அக்கா ஆந்தையிடம் ஜாக்கிரதையாயிருக்கச் சொல்லி இருந்தார்.  நான் பார்த்து எங்கள் ஏரியாவில் அதுவும் கண்ணில் பட்டதில்லை.  

பூனை பிடித்திருந்தாலும் அது சாப்பிடாது, கழுத்தைத் திருகிப் போட்டுவிட்டு போய்விடும் என்றார் ஒரு நண்பர் இரக்கமே இல்லாமல்.   சுற்றுப்புறங்களில் அப்படி எந்த விபரீதமும் கண்ணில் படவில்லை.

காலை புறா என்ன ஆச்சு என்று கேட்ட கோமதி அக்காவுக்கு விவரம் சொன்னேன்.  'கடவுள் காப்பாற்றி இருப்பார்.  கவலை விடுங்கள் என்றார்.  

கடவுளே, அதன் விதியை என்ன செய்தாய்?  நான் காரணமானேனே...  பாவக்கணக்கில் எனக்கும் பங்குண்டா?

ஆனால், முதல்நாள் இருந்த கலக்கமும் கவலையும் மறுநாள் குறைந்திருந்தது என்பது தெரிந்தது.  'மனித ஜாதியில் துயரம் யாவுமே மனிதனால் வந்த நோயடா' என்று டி எம் எஸ் குரல் மனதில் ஓடியது...   அதன் முதல் வரி தெரியுமோ?

=======================================================================================================================

உணவு சாப்பிடும் முறை பற்றி விவரிக்கும், 'டயட்டீஷியன்' கற்பகம்: விடுமுறைகளும், விசேஷங்களும், விருந்துகளும் நம் வாழ்வோடு ஒன்றியவை.


விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில், ஒருவேளைக்கு பலமான விருந்து சாப்பிட்டு விட்டு, அடுத்த நாள் பட்டினி கிடப்பதை, தொடர்ந்து பின்பற்றுவது சரியான பழக்கமல்ல.இந்த பழக்கத்தால், 'அசிடிட்டி' எனப்படும், வயிற்றில் அமிலம் சுரக்கும் பிரச்னை வரும். ஒருவேளை பலமாக சாப்பிட்டு விட்டதாக உணர்ந்தால், அடுத்த வேளைக்கு குறைவான உணவு சாப்பிடலாம். உதாரணத்துக்கு, மதியத்துக்கு சாம்பார், கூட்டு, பொரியல், ஸ்வீட் என, முழு சாப்பாடு அல்லது பிரியாணியோ சாப்பிட்டால், மாலையில் எதையும் சாப்பிடாமல், இரவு சூப் அல்லது பழம் மட்டும் சாப்பிடலாம். இப்படி செய்தால் மறுநாள் காலை எழுந்திருக்கும் போது, புளித்த ஏப்பம், வயிற்று எரிச்சல் போன்றவை இருக்காது.நம்முடைய ஒவ்வொரு வேளை உணவுமே, சரிவிகிதமாக இருக்க வேண்டும். இரவு நேர பார்ட்டி, விருந்துக்குப் போவதாக இருந்தால், அன்றைய தினம் காலை மற்றும் மதியத்துக்கு, மிதமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இரவு உணவை முடித்த பின், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சரியான நேரத்துக்கு துாங்க வேண்டும். இரவில் தாமதமாக சாப்பிட்டு, தாமதமாக துாங்க சென்றால், 'அசிடிட்டி' பிரச்னை வரும். விருந்தும் சரி, விரதமிருப்பதும் சரி அளவோடு இருக்க வேண்டும். ஒரே வேளையில், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, இன்சுலின் ஹார்மோனை துாண்டும். அதன் விளைவாக உணவு கொழுப்பாக மாற்றப்படும். விருப்பமான உணவுகளை வாரத்தில் ஒருநாள் சாப்பிட்டுக் கொள்ளலாம். அதுவும் அளவோடு...!


==============================================================================================================================


ரசனையான புகைப்படங்கள்.


குப்பையோ கையிலே..   தொட்டியோ கீழே..   குறுக்கு வழி..  சுருக்கு வழி!


பார்த்து..  இடிச்சுக்காம பறங்கப்பா...

=================================================================================================================================


ச்சும்மா ஜாலிக்கு....


"எல்லோரும் வட்டமா நின்னு குனிஞ்சு நில்லுங்க...   ஹீரோ யார் மேல கர்சீப்பை போடுகிறாரோ அந்தப் பெண்ணை அவருக்குப் பிடித்திருக்கிறது என்று அர்த்தம்!"

இந்த ஒப்பந்தத்துக்கு இந்தக் காலத்தில் எதிர்ப்பு வரும்.


ராஜேஷ்கன்னா அமர்ந்திருக்கும் காரை, காரின் கண்ணாடியை லிப்ஸ்டிக் உதடுகளால் முத்தமிட்டனர் அந்தக் கால மும்பை பெண் ரசிகைகள்.  இந்தப் பெண்ணைப் பாருங்கள்..  எங்கே ராஜேஷ்கன்னா தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி விடுவாரோ,  "தலையில் கர்சீஃப்பைப் போட்டு விடுவாரோ"  என்று இடி விழுந்தது போல நடுங்குகிறார்.  படம் அஜ்நபி!

=============================================================================================================


வீழ்வேன் என்று நினைத்தாயோ 
கட்டாந்தரை ஆனாலும் 
கவலையில்லாமல் காலூன்றுவேன் 
பரம்பரையைக் காக்க 
தரையையும் துளையிட்டு 
மண்ணில் வேர்விட்டு 
பரந்து வியாபிப்பேன் 

வேரைத் தாங்கும் விழுதுகள் 
விழுதுகளைக் காக்கும் வேர்கள் 

================================================================================================================

லட்சியவாதத் தமிளன்...


========================================================================================================

"வணக்கங்க...  என்ன ஜோக்ஸ் போட்டாலும் அவ்வளவா ரசிக்கலைன்னுதான் சொல்றீங்களாம்..    அதனால இந்த வாரம் ஜோக்ஸ் வேணாம்னு சொல்லச் சொன்னார்.  அதை சொல்ல என்னை அனுப்பியிருக்காருங்க..   வேறு விஷயம் ஒண்ணுமில்லீங்க..."


=====================================================================================================

113 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா வாங்க கமலா அக்கா... வணக்கம். வணக்கம். பிரார்த்திப்போம். பிரார்த்திப்போம்!!

      நீக்கு
    2. ஹா.ஹா.ஹா. இரு முறைக்கு பதில் இரு தடவையா? காலை அவசரத்தில் முதலில் அடித்த கமெண்ட் செல்லவில்லை எனச் சொன்னது. மறுபடியும் முயற்சித்த போது "உங்கள் கருத்து வெளியிடுகிறது" என்றது. இப்போது பார்த்தால் இரண்டுமே வந்துள்ளது. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  3. புறாக்குஞ்சு பற்றிய உங்கள் கவலை கவிஞனின் கவலை. எழுத்தாளர்களுக்கே வாய்த்த மனதின் குரல். கோமதி அரசு குரலில் கடவுள் உங்கள் மன பாரத்திற்கு மருந்து தடவியிருக்கிறார் என்று மனப்பூரவமாக நம்புகிறேன். இனி அடுத்த வேலையில் கவனம் செல்லும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவி ஸார்.  ஆச்சர்யம் நீண்ட இடைவெளிக்குப் பின்னான உங்கள் வருகை.

      நீக்கு
  4. இனிமேலாவது புறாக்கூட்டைக் கலைக்காமல் இருங்கள்! உங்களுக்குச் சொந்த வீடு இருக்கிறது. அதுகளுக்கு ஏது? அடிக்கடி நிறையப் புறாக்கள் வரும் இடமானால், அதைப் புறாக்களுக்கே கொடுத்து விட்டு நீங்கள் வேறிடம் பார்க்கலாமே! 'புறாக்காவலன்' என்ற பட்டப்பெயரையும் பெறலாமே! (என்று சொல்லத் தோன்றுகிறது. அடிக்க வருவீர்களே!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வார்தையைப் படிக்கும்போதே திக்கென இருக்கிறது.  அப்போ நான்தான் குற்றவாளியா?  

      எங்கள் ஏரியாவில் மக்கள் குடியிராத நிறைய வீடுகள் உள்ளன.  அந்த வீடுகளின் பால்கனிக்களில் புறாக்கள்  கூடு கட்டி, குஞ்சு பொரித்து அடைக்காது சுற்றி வந்து சந்தோஷமாக குடியிருக்கின்றன!

      நீக்கு
    2. முதல் வார்த்தை அல்ல, வரி.

      நீக்கு
    3. பெரும்பாலும் எல்லாவகை மருத்துவர்களும் தாங்கள் நம்புவதை பிறருக்குப் பரிந்துரைப்பதற்காக இருப்பவர்கள் போன்றே எனக்குத் தோன்றும்.

      பல் வரிசை சரியில்லாத டெண்டிஸ்ட்டுகள், obesity-யைப் பேணிக் காப்பதற்காகவே பிறவி எடுத்தது போலிருக்கும் டயட்டீஷியன்கள் என்று நிறைய பார்த்து அது தொடர்பாக கதையெழுத கற்பனை சிறகடித்தது உண்டு.

      நீக்கு
    4. அவரவர் தொழில்களில் அவரவர் முனைப்பாக இருக்கிறார்கள்!

      :))

      நீக்கு
  5. மாடிப்படிகளில் ஏறி இறங்குவது இதயத்துக்கு நல்லதாம். அதுவும் குனிந்து குப்பை பொறுக்கி உரிய இடத்தில் அதைச் சேர்ப்பது முதுகுத் தண்டுவடம் இறைஞ்சி நம்மிடம் கோரிக்கை வைப்பதாம்.
    தெருச் சாலைகளில் சின்ன ஒரு காகிதத்துண்டு கூட பறக்காத நாட்டிலிருந்து
    வியந்து இதை நினைத்துப் பார்ப்பது மனசை ஆசுவாசப்படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசல் பெருக்கி மெழுகுவது முதல் நமது அன்றாட வேலைகளே நல்ல உடற்பயிற்சிகள்தான் இல்லையா ஜீவி ஸார்?

      நீக்கு
  6. முதல்வரி
    //அண்ணன் என்னடா தம்பி என்னடா
    அவசரமான உலகத்திலே//

    புறா இன்புற்று வாழ இறைவன் துணை புரியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது பாடலின் முதல் வரி ஜி... இந்த வரிக்கு முதல்வரி வேறு... அது இன்றைய பதிவுக்கு பொருத்ததான வரி!

      நீக்கு
    2. வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்
      வருந்தவில்லையே தாயடா...

      நீக்கு
  7. இரண்டாவது படத்தைப் பார்த்த பொழுது என்னை மறந்தேன். பறவைக் கூட்டம் போன்ற வானவூர்திக் கூட்ட ஒழுங்கமைப்பின் அழகே அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அதுதான் என்னையும் கவர்ந்து, இங்கு பகிர வைத்தது!

      நீக்கு
  8. முல்லைக்கு தேர் கொடுத்த பாரியைப் போல்...
    புறாவுக்கு பால்கனியையாவது கொடுத்து இருக்கலாமே ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா.. பால்கனி உள்ள அறை வயதான என் மாமியார் இருக்கும் அறை. அவர் பயப்படுகிறாரே...

      நீக்கு
  9. ரொம்பவும் உயரத்தில் போனால் ஒன்றுமில்லை. அதுவே நிறையத் தாழ்ந்து ஜன்னலோர ஸீட் கிடைத்து மேகக் கூட்டத்தின் மேல் உச்சியில் வானவூர்தி பறக்கும் கண் கொள்ளா காட்சி என்னை பரவசத்தில் ஆழ்த்தியதுண்டு. எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா!
    உன்னை நமஸ்கரிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது ஒரே உள்நாட்டு விமானப் பயணத்திலும் எனக்கு அந்த அதிருஷ்டம் வாய்க்கவில்லை!

      நீக்கு
    2. வாங்க ஜீவி அண்ணா ரொம்ப நாளா காணலை...

      உங்கள் வரிகளை அப்படியே டிட்டோ செய்கிறேன். நானும் பரவசமடைந்திருக்கிறேன் இதற்காகவே ஜன்னல் இருக்கை பெற்றுக் கொண்டுவிடுவேன். சைடில் தெரியுமே ஏதோ படத்தில் எல்லாம் காட்டுவது போல் பஞ்சு பொதிக்கூட்டம், ஆங்காங்கே இந்திர லோலம் போல....ஹையோ நான் ரொம்ப ரொம்ப ரசித்ததுண்டு,. இந்த அனுபவமும் என் சிறு வயது அனுபவமும் கலந்து கட்டிய ஒரு கதை யை கௌ அண்ணா கொடுத்த கதைக்கருவில் நம்ம ஏரியாவில் ஒரு கதை எழுதினேன்...

      கீதா

      நீக்கு
    3. நினைவில் நிறுத்தியிருப்பதற்கு நன்றி, சகோதரி.

      நீக்கு
  10. அனைவருக்கும் ரொம்ப நாட்கள் கழிச்சுக் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள்/பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  11. புறாக்கள் இப்படித்தான் விட்டுட்டுப் போயிடும்போல! எனக்குத் தெரிஞ்சு சிட்டுக்குருவிகள் ஒரு குஞ்சு கீழே விழுந்தால் கூட அதைக் கவனிக்கறதில்லை. அதைக் கவனிச்சிருக்கேன். அந்தக் கீழே விழுந்த குஞ்சை எடுத்துக் காப்பாற்றியும் அது உயிர் பிழைக்கலை. நாங்களும் அம்மா விட்டுட்டுப் போனக் கிளிக் குஞ்சு/ மீன் கொத்தினு எடுத்துச் சிசுருஷைகள் செய்து கவனிச்சுக் கொண்டோம். சில நாட்கள் கழிச்சுத் தானே பறந்து விட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் இங்கே நிலைமை வேற ஆச்சே.. உள்ளே சௌக்யமாக வளர்ந்துகொண்டிருந்த குஞ்சை நானல்லவா வெளியில் எடுத்து விட்டேன்!

      நீக்கு
    2. ஆமாம் கீதாக்கா எங்கள் வீட்டிலும் நாங்கள், என் மகன், மைத்துனர் எல்லோருக்கும் அனுபவம் உண்டு. அணில் குஞ்சு, புறாக்குஞ்சு, ஆமை, பூனை, காக்கை, குருவிக் குஞ்சு !

      கீதா

      நீக்கு
    3. ஆனால் இதற்கெல்லாம் என் பாஸ் சொன்ன வாதத்த்தை பதிவில் சேர்க்கவில்லை.  யாராவது கமெண்ட்டில் அதைச் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன்.  இதுவரை இல்லை.  அது என்ன என்று பின்னர் சொல்கிறேன்!

      நீக்கு
    4. நீங்களே சொல்லிடுங்க ஶ்ரீராம்.

      நீக்கு
    5. இப்போ சொல்லவா?  அடுத்த பதிவுல துணுக்காய் சேர்த்துடவா?!!

      நீக்கு
  12. இந்தப் புறாக்குஞ்சும் பத்திரமாய் இருக்கும்னு நம்பறேன். எங்க வீட்டில் சமையலறை ஜன்னலில் கூடு கட்டிக் குடி இருந்தன. குஞ்சு பெரிதானதும் போய்விட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கும் அபப்டி நடந்திருந்தால் நிம்மதியாய் இருந்திருக்கும்!

      நீக்கு
  13. லட்சியவாதத் தமிளனின் லட்சியம் அருமை. ஜோக் இல்லைனு சொல்பவரைப் பார்த்தால் பெப்சி உமா மாதிரி இருக்கு! அவர்தானா? ஆலமரத்தைப் பார்க்கும்போதெல்லாம் பிள்ளையாருக்கு அர்ச்சனை பண்ண இலைகளைப் பொறுக்கத் தோன்றுகிறது இப்போல்லாம்.

    பதிலளிநீக்கு
  14. குப்பை போட இப்படியும் ஒரு வழியா? விமானங்கள் இப்படிப் பறப்பது எந்த நாட்டிலே? ராஜேஷ் கன்னாவும் சரி, அந்தப் பெண்ணும் சரி நல்லாவே இல்லை. எப்படி நடிக்க வந்தாங்கனு நினைக்கத் தோன்றும் படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ராஜேஷ் கன்னாவும் சரி, அந்தப் பெண்ணும் சரி நல்லாவே இல்லை. //

      ஆ... ராஜேஷ்கன்னா நன்றாய் இல்லை என்று சொல்லும் முதல் ஆள்!

      நீக்கு
  15. குரு வாரம்..

    கொடுப்பனவும்கொள்வனவும்
    குவியல் குவியலாய்!..

    அன்பின் வணக்கங்களுடன்..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க நலம்.  நலமே விளையட்டும்.  வாங்க துரை செல்வராஜூ ஸார்..  வணக்கம்.

      நீக்கு
  16. வாராது வந்த மாமணிகளாக -

    ஜீவி அண்ணா
    கமலாஹரிஹரன்..

    அப்புறம்..
    அனுஷ்!...

    அனைவருக்கும் நல்வரவு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்புறம் பழைய அனுஷ்

      நீக்கு
    2. பழசோ புதுசோ
      அனுஷ் - அனுஷ் தான்!..

      நீக்கு
    3. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

      /வாராது வந்த மாமணிகளாக -

      ஜீவி அண்ணா
      கமலாஹரிஹரன். /

      இதோ.. இன்று நான் வந்து விட்டேனே.. நடுவில் இரண்டு தினங்களாக முழுவதுமாகவே வலைத்தளம் வர இயலவில்லை. வீட்டில் நிறைய பேருக்கென சமையல் சாப்பாடு வேலைகள் சரியாக உள்ளது. மற்றபடி அதற்கு முன் காலையில் இல்லாவிடினும் இரவுக்குள் பதிவுகளுக்கு வந்து படித்து கருத்துக்கள் தந்து விடுவேன். இனி எப்போதும் போல் காலையில் வரும் நேரங்களும் விரைவில் வந்து விடுமென நம்புகிறேன்.

      தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. ஹாஹாஹா நான் கீழே சொல்லிட்டு இங்க வந்தா பெயரில்லா நெல்லை சொல்லிட்டாரே பழைய அனுஷ்!!!னு!!!

      கீதா

      நீக்கு
    5. அப்பாடி...   அனுஷ்னு சொன்னீங்களே... கீதா அக்கா பெப்சி உமா மாதிரி இருக்குன்னு சொல்லி இருந்தாங்க!

      நீக்கு
    6. சொன்னால் என்ன? அதான் அனுஷ் கோவிச்சுண்டு சென்னைப் பக்கமே வரமாட்டேனுட்டாங்களா? :)

      நீக்கு
    7. அனுஷ் எங்கே...   பெப்ஸி உமா எங்கே...    அதுதான் வருத்தமாயிருச்சு!!!!!  நாயன்தாரா இன்னமும் இந்த வயசுலயும் ம் கவர்ச்சி ஹீரோயினா நடிச்சுக்கிட்டிருக்காங்க...  ஹூம்..

      நீக்கு
    8. நன்றி, தம்பி. இனி முடிந்த பொழுதெல்லாம் வரலாம் என்றிருக்கிறேன்.

      நீக்கு
  17. புறாவின் புராணம் நெகிழ்ச்சி..

    நல்லதோ கெட்டதோ கடவுள் அருள் உடன் இருக்கட்டும்..

    பதிலளிநீக்கு
  18. இதுக்குத்தான் ஶ்ரீராமின் வியாழன் பதிவை எதிர்பார்ப்பது.

    ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான, மற்றவர்கள் யோசிக்கத் தூண்டும் அல்லது பகிர்ந்துகொள்ளத்தூண்டும் டாபிக். என் மனதில் இருந்த நிகழ்வும்கூட. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இதுக்குத்தான் ஶ்ரீராமின் வியாழன் பதிவை எதிர்பார்ப்பது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான, மற்றவர்கள் யோசிக்கத் தூண்டும் அல்லது பகிர்ந்துகொள்ளத்தூண்டும் டாபிக். //

      ஆஹா... நன்றி! இது அவசரமாக நேற்றிரவு எழுதியது!

      நீக்கு
  19. பையன் அறையில் இரண்டு வருடங்கள் முன்பு ஸ்டாண்ட் பை ஏசி நிறுவினபோது, அதன் பாக்சை (ஸ்ப்ளிட் ஏசி) சிறிய ஷாஃப்டில் வைக்க முயன்றபோது அங்கு புறாவின் கூடு முட்டையோடு. புறாவைப் பிடித்து வெளியே விட்டுவிட்டார். நான் மைட்டையோடு கூடிய கூட்டை, பாதுகாப்பாக மாஸ்டர் பெட்ரூம் பாத்ரூம் ஷாஃப்டில் (அது இன்னும் பெரிது) வைக்கச்சொன்னேன். எந்தப் புறாவும் வராமல் முட்டை வீணானது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருபக்கம் நான் மட்டும் இதைச் செய்யவில்லை என்று தோன்றுகிறது.  இன்னொரு பக்கம் எபப்டியும் நாமும் செய்துவிட்டோமே என்றும் தோன்றுகிறது.

      நீக்கு
  20. மாஸ்டர் பெட்ரூம் பாத்ரூம் ஷாஃப்டை ஒரு வருடத்துக்கு முன் சுத்தம் செய்து தந்தார்கள் (அனைத்து ஃப்ளாட்களுக்கும்-குடியிருப்பவர்கள் மட்டும்). எனக்கு மேலே இருக்கும் flat interior ஆரம்பித்தவுடன் அதன் வழியாக புறாக்கள் என் ஷாப்டை ஆக்கிரமித்துக்கொண்டு ரொம்பவே அசுத்தப்படுத்திவிட்டது. திறந்துபார்த்தால் மூன்று புறாக்கள், முட்டைகள், குஞ்சுகள் என இருக்கின்றன. மேலே உள்ள ஓட்டையை அடைக்க 2000ரூ செலவாகும். இந்த புறாக் குடும்பம் அழிவுபடும். மனைவி அங்கிருந்து வரும் நாற்றத்தைக் குறை சொல்லுகிறாள். மீனா கணவன் கதையும் பயமுறுத்துகிறது. என்ன பண்ணுவது என்ற யோசனை. புறாக் குஞ்சு முட்டை, அதன் குடும்ப அழிவு தவிர்க்கமுடியாது. யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த புறாக்குடும்பத்தை வெளியில் வைத்து பாதுகாக்கலாம்.  நான் அப்படிதான் நினைத்தேன்.  ஒரே ஒரு குஞ்சு மட்டும் மாட்டியதுதான் சிரமமானது.

      நீக்கு
  21. எங்கள் டவர் சிறியது. 145 flatsதான் (18 மாடி). நிறைய ஜெயின்ஸ். புதிதாக வரும் ஏழு டவர்களும் 30 மாடிகள்.

    புறாக்கள் எப்படி இறக்கும்? நான் கவனித்த வரையில் இரு வகைகளில் இறக்கின்றன. மிகவும் வயதாகி சிறகுகள் சிதைவுற்று, யாரைப்பற்றியும் கவலைப்படாமல் நடமாடி அங்கேயே இறக்கும் (பாதை, புல்வெளி, வளாக ரோடு). இன்னொரு முறை, உச்சியிலிருந்து தரையை நோக்கி நோஸ் டைவ் செய்து தற்கொலை செய்துகொள்ளுதல். விழுந்து காயங்கள் பட்டு தட்டுத் தடுமாறி செடிகளுக்கு இடையில் சென்று இறக்கும். நீன் இருமுறை இந்த நிகழ்வைக் கண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. தனி வீடுகளில் வருவதை விட அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்குத்தான் வருகின்றன. ஏனென்றால் அவற்றிற்கு அங்குதான் நிறைய இடங்கள் அகப்படும். பால்கனி அது இது என்று. பேசாமல் அடுக்குமாடிக் கட்ட்டும் ரியல்ஸ்டர்ஸ் வளாகத்துக்குள் ஓரமாக லால்பாகில் இருப்பது போல் ஒரு புறா வீடு கட்டி சுற்றிலும் கொஞ்சம் புல்வெளி (எப்படியும் வளாகத்துக்குள் புல்வெளி வைக்கிறாங்களே!! விட்டால் !!!!!!!எல்லாம் அங்கு ஒதுங்கிக் கொள்ளும். மரங்களையும் அவைகளுக்கான இடங்களையும் அழித்துத்தானே நாம் வீடுகள் கட்டுகிறோம் அப்ப அதுங்களுக்கு ஒரு இருப்பிடம் நாம் அமைத்துக் கொடுக்கலாமே என்ற எண்ணத்தில்...

      கீதா

      நீக்கு
    2. இதெல்லாம் வேலைக்கு ஆகாது. நீர் நிலையின் ஓரங்கள், அரசு இடங்களை ஆக்கிரமிக்கிறாங்கன்னு ஒதுக்குப் புறமா வீடு கட்டிக்கொடுத்தா, அங்க போனவங்க தவிர, புது ஆட்கள் மீண்டும் இடத்தை ஆக்கிரமிக்க வருவதுபோல, அங்க ஒரு செட் புறாக்கூட்டம், வீடுகளில் புறாக்கூட்டம் என்று ஆகிவிடும்

      நீக்கு
    3. புறாக்கள் ஏன் தற்கொலை முடிவை எடுக்கின்றன?  ஜோடிப்புறா மறைவு காரணம் என்று சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    4. கீதா..  அதற்கொரு இடம் என்று இப்படியான கேட்டட் கம்யூனிட்டி அபார்ட்மெண்ட் வகையறாக்களில் ஏற்படுத்தினால் அவை அங்கு மட்டுமே தங்கும் என்று சொல்ல முடியுமா?

      நீக்கு
    5. Geetha Sambasivam18 ஆகஸ்ட், 2022 அன்று பிற்பகல் 5:58
      ஹையோ! பதினெட்டு மாடிக்கெல்லாம் தண்ணீர் பிரச்னை இல்லாமல் வருதா? மின்சாரம் இருக்குமா? அல்லது ஜெனரேட்டர் போடுவாங்களா? எங்க உறவினர் ஒருத்தர் 20 மாடி கொண்டு அடுக்கு மாடிக் குடியிருப்பில் பதினேழாம் மாடியில் குடியிருப்பு வாங்கிட்டுத் தண்ணீர் கிடைக்காமல், மின்சாரமும் அடிக்கடி போவதால் அவதிப் படறாங்க. பத்து மாடி வரைதான் தண்ணீர் வருமாம். மின்சாரம் அந்தப் பகுதியில் (கி.க.சா) அடிக்கடி போயிடுமாம்.

      நீக்கு
    6. இங்கே பிரெஸ்டிஜ் க்ரூப் வீடுகள் பதினேழு பதினெட்டு மாடிகள் கொண்டவை.  ஒவ்வொரு கம்முனாட்டியிலும் ஆயிரக்கணக்கான வீடுகள்.  லாரியில் தண்ணீர் சப்ளை என்று சொன்னார்கள்.  2015 வெள்ள சமயத்தில் அங்கு மட்டும் ஜெனெரேட்டர் வைத்து கரண்ட் பிரச்னை இல்லாமல் பார்த்துக் கொண்டார்களாம்.

      நீக்கு
    7. //அதற்கொரு இடம் என்று இப்படியான கேட்டட் கம்யூனிட்டி அபார்ட்மெண்ட் வகையறாக்களில் ஏற்படுத்தினால் // - இங்க, 40க்கு 40 அடில ஒரு பெரிய இடம், தண்ணீர் வசதி, நாய்களைக் கொண்டுவருபவர்கள் உட்கார இடம் என்றெல்லாம், செல்லங்களுக்கு காலைக்கடனுக்கு அழகிய இடம் இருக்கு. வளர்க்கறவங்க, அவங்களோ அல்லது அவங்க வீட்டு வேலைக்காரங்களோ நாயை அங்க கூட்டிட்டுப் போவாங்க. சிலர் வளாகத்தைச் சுற்றி வாக்கிங்கும் கூட்டிட்டுப்போவாங்க. சில, கண்ட இடத்துல போய்வைக்கும், அதனை எடுத்துப் போட வளர்க்கறவங்க தயாரா வருவாங்க. (ஒன் பாத்ரூம் ஒண்ணும் பண்ணமுடியாது). அதனால, தனி இடம் எல்லாம் நம் மனச் சமாதானத்துக்குத்தான்

      நீக்கு
    8. //பதினெட்டு மாடிக்கெல்லாம் தண்ணீர் பிரச்னை இல்லாமல் வருதா? மின்சாரம் இருக்குமா? // - சொல்லிக் கண் வச்சுட்டா என்ன பண்ணறது? எங்களுக்கு அளவுக்கு அதிகமாகவே தண்ணீர் வருது. எப்போதுமே தண்ணீர் பிரச்சனை இருந்ததில்லை கடந்த 2 3/4 வருடங்களில். மின்சாரம் போனாலும் அரை நிமிடங்களில் ஜெனெரேட்டர் மூலம் வந்துவிடும். வை ஃபைக்கு மாத்திரம் யூபிஎஸ் வைத்துள்ளோம். இன்னும் பத்து வருடங்களில் 2500 குடும்பங்கள் இந்த வளாகத்தில் இருக்கும். அப்போவும் பிரச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன் (எங்களுக்குப் போகத்தானே அம்மா மண்டபத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுவோம்... என்ன சொல்றீங்க?)

      நீக்கு
  22. புறா குஞ்சு பற்றிய தங்களின் கவலை தங்களின் மனித நேயத்தை, பாசத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே.. எந்த உயிரும் நம்மால் ஒரு சிரமத்தை அனுபவிக்கக் கூடாது என்று நினைப்பேன்.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  23. பாத்து. புறாக்கூட்டை கலைத்ததற்கு PETA காரங்க கேஸ் போட்டுரப் போறாங்க.

    பிளேன் படம் சரியில்லை. தரைக்குப் பக்கத்தில் பறக்கும் பிளேன் சைஸ் சரியாக இல்லை. மேலும்  ஒவ்வொரு பிளேனும் பறக்கும் வேகத்தில் வித்தியாசம் உள்ளவை. இது aircraft  மியூசியம் படத்தை crop செய்து ஒட்ட வைத்தது போல் தோன்றுகிறது. 

    //வேரைத் தாங்கும் விழுதுகள்
     விழுதுகளைக் காக்கும் வேர்கள் //

    மரத்தைத் தாங்கும் வேர்கள்.
    கிளையைத் தாங்கும் மரங்கள்.
    இலையை  தாங்கும் கிளைகள்

    ஒன்றில்லாமல் மற்றொன்று
    உருவாகுமா?
     உயிரில்லாமல்
    இவை யாவும்
    ஒன்றாகுமா?

    நூறு என்பதை ஆட்டோவில் எழுதியிருப்பது சரியில்லை.

    கடைசி படம் நேற்று விட்டுப் போன கவர்ச்சிப் (கவுச்சி) படம்?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிளேன் படம் லாஜிக் பார்க்காமல் ரசிப்பதற்கு மட்டுமே! 
      புறாக்கூட்டை கலைத்தது என்கிற வரியே தூக்கிப் போடுகிறது!

      //நூறு என்பதை ஆட்டோவில் எழுதியிருப்பது சரியில்லை.//

      எழுதியது நானில்லை.  அப்படி எழுதியவரைதான் அடையாளம் காட்டி இருக்கிறேன்.  அவரின் கருத்தையும் சேர்த்தே....

      நீக்கு
  24. புறாக் குஞ்சு பாவ்ம்...என்னாச்சோ அதுக்கு? ஸ்ரீராம் எந்த பறவையையும் மனிதன் வாடை அதில் தெரிந்துவிட்டால் அம்மா வராது என்பது தான் நான் அறிந்த விஷயம்....நல்லபடியாக அது எங்கேனும் இருந்தால் நலல்து

    உங்கள் தவிப்பு புரிந்தது.

    மற்றவற்றிற்குப் பின்னர் வருகிறென்/பங்க்ளூரில் லால்பாகில் புறா வீடு இருக்கு இனி அங்கு இருந்து இங்க வீடு இலவசம்னு சொல்லி அனுப்பிடுங்க!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அக்கா சொல்வதுபோல அந்த ஜீவனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியாமல் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது கீதா.

      நீக்கு
  25. வணக்கம் சகோதரரே

    புறா கதை மனதை வருந்த வைத்தது. பாவம் ஒரு இரவில் இருட்டோடு இருட்டாக அது எங்கே சென்றதோ? அன்றைய தினத்தில் உங்கள் மனதின் வேதனைகளை நானும் புரிந்து கொண்டேன். கூட்டைக் கலைத்தல் பாவந்தான். ஆனால் என்ன செய்வது? இது நாமறியாமல் தானவே நடந்து முடிந்து விடுவது. இதற்கான நல்லது, நல்லவையில்லாதது இரண்டுக்குமே "அவனே" காரணம். அதனால் நமக்கு வரும் கவலைகளை "அவனிடமே" ஒப்படைக்க வேண்டியதுதான்.

    அது என்னவோ... உங்கள் வியாழன் முதல் பகுதிக்கும், எனக்கும் எப்படியோ ஒரு லிங்க் வந்து விடுகிறது. போன பிறவியில் நீங்களும், நானும் உண்மையிலேயே ஒரு தாய் வயிற்று பிள்ளைகளோ என்னவோ. அதன் தொடர்பு வாசனை காரணமாக என் மனதில் வரும் எண்ணங்கள் பதிவுகளாக. வரும் முன் உங்கள் வியாழன்களிலும் முதல் இடத்தை பெற்று விடுகின்றன. இன்று உங்கள் புறா இடத்தில் நான் எங்கள் வீட்டில் வந்த மைனாவைப் பற்றி பதிவாக எழுத நினைத்திருந்தேன். கதம்பத்தில் மிகுதியையும் படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணனே காட்டினான்
      கண்ணனே சாற்றினான்
      கண்ணனே கொலை செய்கின்றான்

      வரிகள் நினைவுக்கு வருகின்றன.

      //உங்கள் வியாழன் முதல் பகுதிக்கும், எனக்கும் எப்படியோ ஒரு லிங்க் வந்து விடுகிறது. போன பிறவியில் நீங்களும், நானும் உண்மையிலேயே ஒரு தாய் வயிற்று பிள்ளைகளோ என்னவோ. //

      அதுதான் இப்போது உடன் பிறவா சொந்தங்களானோம்.  நீங்கள் சொல்லி இருக்கும் ஒற்றுமை ஆச்சர்யபப்டுத்துகிறது.

      நீக்கு
  26. 'மனித ஜாதியில் துயரம் யாவுமே மனிதனால் வந்த நோயடா'//

    ரொம்ப ரொம்ப சரி....பாட்டின் தொடக்கம் அண்ணன் என்னடா தம்பி என்னடா - அட! கீதா சொல்லிட்டாங்களேன்னு நினைச்சுடாதீங்க ஸ்ரீராம்....கூகுள் உதவியது!!! ஹாஹாஹாஹா இல்லாட்டா கீதாவுக்கு தெரிஞ்சுடுமாக்கும்!!!! அதுவும் இடையில் உள்ள வரிகள் கொடுத்துக் கேட்டால்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்பவே புகழ்பெற்ற பாடல் என்பதால் கூகுள் செய்யாமலேயே அறியலாம் கீதா.  அதே சமயம் பாடலின் ஆரம்ப வரியை கேட்கவில்லை நான்.  இந்த வரியின் முதல் வரி..   

      "வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதிலும் வருந்தவில்லையே தாயடா...   மனித ஜாதியில் துயரம் யாவுமே மனிதனால் வந்த நோயடா..."

      கண்ணதாசன்.

      நீக்கு
  27. கற்பகம் அவர்கள் சொல்லியிருப்பதை அப்படியே டிட்டோ பின்பற்றுகிறேன். ஆனால் ஒன்றே ஒன்று இரவு என்ன விருந்து என்றாலும் முழுவதும் சாப்பிடுவதில்லை. 8 மணிக்குப் பிறகுதான் சாப்பாடு சாப்பிட முடியும் (அதாவது விருந்துகளில் கல்யாணங்களில்) என்றால் - 8 மணி என்றால் 9 கூட ஆகிவிடும் என்பதால், கூடியவரையிலும் தவிர்த்துவிடுவேன் ஆனால் சர்க்கரைவியாதிக்கான மாத்திரை எடுக்கணுமே என்பதால் வேறு வழியில்லாமல் கொஞ்சமாய் தயிர்சாதம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள்லாம், விருந்து கொடுப்பவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்ற எண்ணம் எனக்கு வருகிறது. அவர் பாவம், ஒரு இலைக்கு 450 ரூபாய் அழணும். நீங்க 20 ரூபாய்க்கு தயிர்சாதம் ஊறுகாய் சாப்பிட்டுட்டு வந்துடுவீங்க. பேசாம நான் கேடரர்களை எம்ப்ளாய் பண்ணும்போது, 200 இலை, 450 ரூபாய், 100 இலை 40 ரூபாய் தயிர்சாதம் ஆட்கள் என்று சொல்லிடலாமோ?

      நீக்கு
    2. கண்டதைச் சாப்பிட்டு வயிறு டம்மென்றிருந்தால் நம்மால்தான் இதைச் சாப்பிட முடியும்/  இப்போதெல்லாம் எனக்கு இப்படி அடிக்கடி நேரிடுகிறது.  கடந்தைச் சாப்பிடாமலேயே வயிறு டம்மென்று இருந்து படுத்துகிறது!

      நீக்கு
    3. விருந்துக்குப் போகும்போது நான் Unienzyme Forte இரண்டு மாத்திரை போட்டுக் கொண்டு போய்விடுவேன் நெல்லை..   எடையும் ருசிக்க / ரசிக்க தவறுவதில்லை!

      நீக்கு
  28. புறாக் குஞ்சு நல்லபடியாக இருக்க வேண்டும்... _/\_

    ║║╔╗─╔╦──╔╦─╔╦
    ║║║║║║╬╗╔╬╬╗║║
    ║╚╬╝║║║║╚═╝╝║║
    ╚═╝─╚══╝

    பதிலளிநீக்கு
  29. கவிதை வரிகள் அருமை...

    ஆல‌ம் விழுதுகள் போல்
    உறவு ஆயிரம் வந்தும் என்ன...?
    வேர் என நீ இருந்தாய் -
    அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்...

    நீ = இந்த வாரம் ஜோக்ஸ் வேணாம்னு சொன்னவர்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...

      எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல் நீங்கள் சொல்லி இருப்பது DD.

      நீக்கு
  30. "டயட்டீஷியன்கள்" சொல்வது மனதிற்கு தெரிகிறது... நாக்கிற்கு புரிய வேண்டுமே...!

    பதிலளிநீக்கு
  31. குப்பை ஐடியா க்கான படம் நல்லாருக்கு. குப்பை வழுக்கிக் கொண்டு போய்விடுமோ?!!!! ட்ரை குப்பைனா ஓகே,,,தள்ளி விடணுமோ? மக்கும் குப்பைனா எங்கயாவ்து ஒட்டிக்கொண்டால் நாறுமே!! பூச்சி வருமே

    பார்த்துஇடிச்சுக்காம போங்கப்பா!!! ஹாஹஹா நல்ல ரசனையா இருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் ரசிப்பதற்கு மட்டும்தான்!  ஆராயக்கூடாது!

      நீக்கு
  32. விழுதுகள் - கவிதை செம. ரொம்ப ரசித்தேன் ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  33. தமிளன்!!// ஹாஹாஹா இது நிறைய இடத்துல பார்க்க நேரிடுகிறது ஸ்ரீராம். கொடுமை

    அதே போலத்தான் ஒரு சிலரைத் தவிர யுட்யூப், டிவி எல்லாத்துலயும் பேசற தமிழ் சகிக்கலை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்க்கொலையை மட்டுமா பார்த்தீங்க...  கருத்தை கண்டிக்கலையா?  ச்சே..  கண்டுக்கலையா?

      நீக்கு
  34. ஹாஹாஹா அனுஷ்!!! பழைய ஃபோட்டோன்னு நம்ம நெல்லை சொல்லிருப்பாரே....இருங்க மேல போய்ப் பார்க்கறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லிட்டாரே... ஆனா பெப்சி உமா கமெண்டுக்கு அது பரவாயில்லை!

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். அது டப்பா? ஶ்ரீராம், அனுஷ் இனிமேலே சென்னைப்பக்கமே வரப் போவதில்லையாம். தமிழ்ப்படங்களிலும் நடிக்கப் போவதில்லையாம்! :)))))

      நீக்கு
    3. /அனுஷ் இனிமேலே சென்னைப்பக்கமே வரப் போவதில்லையாம். // எல்லாம் ஆர்யாவின் புண்ணியம். அவர் படத்தோடுதானே அனுஷின் கேரியரே பாதிக்கப்பட்டுவிட்டது

      நீக்கு
  35. புறாவின் செய்தி மனதுக்கு கஷ்டம் தான். புறாகுஞ்சு பத்திரமாக எங்கோ இருப்பதாக நினைத்துக் கொள்வோம். அதற்கு எதுவும் துன்பம் நேர்ந்து கண்ணால் பார்த்து இருந்தால் மனது மிகவும் கஷ்டபடும். நினைவுகளில் வந்து மனதை கஷ்டப்படுத்தும்.

    இப்போது அது எங்கோ உயிர் வாழ்ந்து கொண்டு இருப்பதாய் நினைத்து நிம்மதியாக இருங்கள். படைத்தவன் பார்த்துக் கொள்வான்.

    உங்கள் யாருக்கும் தொந்திரவு கொடுக்க கூடாது என்று போய் விட்டது போலும். கிளி, குருவி, அணில் தேன் சிட்டு, பெண் குயில் எல்லாம் எங்கள் வீட்டுக்கு வந்து பறந்து போய் இருக்கிறது.

    எல்லாம் நம்மிடம் இவ்வளவு நாள் இருக்க வேண்டும் என்பது இறைவனின் விருப்பம் போலும்.

    பதிலளிநீக்கு
  36. ரசனையான புகைப்படங்கள்.
    உங்கள் கவிதையும் ஆலமரத்தின் படமும் அருமை.

    உணவு சாப்பிடும் முறை பற்றி கற்பகம் அவர்கள் சொன்னது அருமை.
    அனுஷ் படம் பொருத்தமாக இருக்கிறது. அழகான அனுஷ்.

    பதிலளிநீக்கு
  37. புறாவின் விதி இறைவனின் தீர்ப்பு. நீங்கள் எவ்வளவோ முயற்சி எடுத்திருக்கிறீர்கள் எங்கோ வாழும் என்று நம்பிக்கை கொள்வோம்.

    அழகிய அனுஷ் படம் :)

    பதிலளிநீக்கு
  38. (வேற்றுப் பார்வை)

    வேர்களே கால்கள்
    விழுதுகளே கைகள்
    நடக்க கால்கள்
    பிடிக்க கைகள்
    அது அதற்கு அவைகள்
    என்றிருக்கும் படைப்பில்
    காலுக்கும் கைக்கும்
    வேறுபாடு பார்ப்போருண்டோ?
    இருப்பினும்
    காலால் எத்தக்கூடாது தான்
    கையால் அறையக்கூடாது தான்.
    கருடன் சொன்னது
    நினைவில் நிழலாய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பார்வையில் அப்படி.. நித்தம் இந்தக் காட்சியைப் பார்க்கும் என் பார்வையில் அந்த மரம் பரவாதபடி விழுதுகளை வளர வளர குறைத்து, வெட்டி, அது தரையில் லேசில் பதிந்து விடாதபடிக்கு சிமென்டில் தரையெடுத்து...

      நீக்கு
  39. நூறே ஒன்றாய்
    ஒன்றே நூறாய்
    கல்யாணத்திற்கு
    பின்னான காதலை
    இலட்சியத் தமிழன்
    சொல்லும் அழகே அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலட்சியத்தை இதில் வைக்கிறார் அவர்!!! ஆனாலும் கொஞ்சம் தமிழ் படித்திருக்கலாம்!

      நீக்கு
  40. 'நுறூ'விதமா தமிள எளுதி, பேசி இப்படி ஒரு சித்திரவதையா மொழிக்கு..

    மேல இப்படின்னா.. கீழே பொண்ணோட மானத்த வாங்கும் கொடுமை.. அதுவும் ஆங்கிலத்தில :
    Sowmiya For Hire

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா...  ஹா...   இப்படியா எழுதுவார்கள்?!!  பெயிண்டர் கிடைத்த இடத்தில் கிடைத்ததை எழுதி விட்டார்!

      நீக்கு
  41. புறாக் குஞ்சு பத்திரமாகச் சென்றிருக்கும் என நம்புவோம்.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!