புதன், 28 செப்டம்பர், 2022

ஒரு சிற்பத்தையோ ஓவியத்தையோ ஆபாசம் என்று எதைவைத்துச் சொல்வது?

 

கீதா சாம்பசிவம் : 

1. கல்யாணங்கள்/விழாக்கள்/பிறந்த நாள் / மற்ற விசேஷங்களுக்குப் பரிசு கொடுப்பவர்கள் இப்போதெல்லாம் தாராளமாகச் செலவு செய்கிறார்களா?

# ஆம். நிறையவே நல்ல பரிசுகள் அல்லது பெருந்தொகை  பரிசு கொடுக்கிறார்கள். உள்ளன்போடு கொடுப்பதும்,  செல்வாக்கு மிக்க யாருக்கோ அவர் மனம் குளிரட்டும் என்று கொடுப்பதும் இருக்கிறது.  திருமணம் அல்லாத ஒரு நிகழ்ச்சியில் லட்ச ரூபாய்க்கு மேல் அன்பளிப்பு வசூல் ஆனது குறித்து வியந்திருக்கிறேன்.

& செய்கிறார்கள். 

2. இன்னமும் 100 ரூ கொடுப்பவர்கள் இருக்காங்களா?

என் கல்யாணத்தில் 5 ரூபாய்/10 ரூபாயெல்லாம் கொடுத்தாங்க. ஆனால் அப்போ அவற்றின் மதிப்பே வேறே; இப்போ 50/100 ரூபாய்க்கே மதிப்பு இல்லை.

# சிறு தொகை பரிசாகக் கொடுப்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள்.  காரணம் பல இருக்கும்.

3. ஈகை என்பது இங்கே என்ன அர்த்தத்தில் சொல்லப்படுகிறது? சாதாரணமாக அனைவருக்கும் கொடுப்பதா? அல்லது தேவைப்பட்டவர்களுக்குத் தேவைப்பட்ட நேரத்தில் கொடுப்பதா?

#  ஈகை என்றால் தேவைப் பட்டவர்களுக்குக்  கொடுப்பது என்றுதான் நான் நினைக்கிறேன்.

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து.

மு. வரதராசன் உரை : வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.

4. முழுக்க முழுக்க நம் உதவியைப் பெற்றுக்கொண்டு வாழ்பவர்கள்/வாழ்ந்தவர்கள் பின்னால் நம்மையே தூற்றுவதின் காரணம் என்ன?

# அது நமக்கும், நாம் உதவி செய்ப்பவர்களுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.  உண்மை அல்லது நியாயம் சில சமயம் நம்மிடம் சில சமயம் அவர்களிடம் இருக்கும்.

நெல்லைத்தமிழன் : 

ஒரு சிற்பத்தையோ ஓவியத்தையோ ஆபாசம் என்று எதைவைத்துச் சொல்வது? கலைப்படைப்பில் ஆபாசம் கண்ணுக்குத் தெரிந்தால், அது நம் குறை அல்லவா?  (இந்தக் கேள்விக்கு ஏற்ற படங்கள் சிலவற்றை அனுப்புவேன். கௌதமன் சார் அவற்றை வெளியிடமாட்டார். கேட்டால் வாசகர்கள் பதறி விடுவார்கள், எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்பார். அது சரி.. அதுபற்றி வாசகர்கள் என்ன நினைக்கறீங்க?)

# ரொம்ப சுருக்கமாக பதில் சொல்கிறேன். கலைப் படைப்பில் பெரும்பாலும் பெண் அரை ஆடை ஓவியம் / சிற்பம் ஏன் இடம்பெறுகிறது ?

& (" இதுபற்றி வாசகர்கள் என்ன நினைக்கறீங்க?)

= = = = = = =

எங்கள் கேள்விகள் : 

1) நீங்கள் முதன் முதலில் வளர்த்த செடி எது? எந்த வயதில்? 

2) அம்மா / அப்பா / தாத்தா / பாட்டி / நண்பர் - இவர்களில் யார் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வீர்கள்? ஏன்? 

3) சப்பாத்தி அல்லது பூரிக்கு உங்களுக்குப் பிடித்த side dish எது? 

= = = = =

படம் பார்த்து கருத்து எழுதுங்க :

1) 


2) 

3)   

= = = = 

74 கருத்துகள்:

  1. பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
    நன்மை பயக்கும் எனின்..

    வாழ்க குறள் நெறி..

    பதிலளிநீக்கு
  2. புத்தொளியாகிய புதன்!..

    அன்பின் வணக்கங்களுடன்..

    எங்கெங்கும் நலமே வாழ்க!..

    பதிலளிநீக்கு
  3. இன்றைய பதிவுக்கான பொருள் -

    அந்த குறட்பாவினுள் பொதிந்து கிடக்கின்றது..

    பதிலளிநீக்கு
  4. கல்யாணங்கள்/விழாக்கள்/பிறந்த நாள் / மற்ற விசேஷங்களுக்குப் பரிசு கொடுப்பவர்கள் இப்போதெல்லாம் தாராளமாகச் செலவு செய்கிறார்களா?

    செய்வதில்லை என்றே தோன்றுகிறது. முன்பை விட அதிகமாக இப்போதெல்லாம் "அன்பளிப்பு கண்டிப்பாக வேண்டாம்" என்று அழைப்பிதழில் காணப்படுகிறது. சமீபத்தில் நான் கலந்து கொண்ட நண்பரின் மகள் திருமணத்தில் அன்பளிப்புக்கு பதில் முதியவர் இல்லம், அனாதை குழந்தைகள் இல்லம், ஆதரவற்ற விலங்குகள் இல்லம் என்று ஆன்லைன் விவரம் தந்து ஏதாவது ஒன்றுக்கு நன்கொடை அளிக்கச் சொல்லியிருந்தார்கள். ஒரு மாதம் பொறுத்து என் வீட்டு விருந்துக்கு வந்த தம்பதியரிடம் நவீன அன்பளிப்பு பற்றி விசாரித்தேன். "பத்து ரூவா கூட நன்கொடை வரலே அங்கிள்.. நாங்களே கடைசில ஆளுக்கு ஆயிரம்னு நன்கொடை கொடுத்தோம்" என்றார்கள்.

    - மந

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடப்பாவமே... நாம் மட்டும் தண்ணீர் கலந்தால் தெரியயவா போகிறது என்று ஒரு சொம்பு பால் விடச்சொன்ன இடத்தில தண்ணீர் விட்ட மக்கள் நினைவு வருகிறது!!! நன்றி மந..

      நீக்கு
  5. முழுக்க முழுக்க நம் உதவியைப் பெற்றுக்கொண்டு வாழ்பவர்கள்/வாழ்ந்தவர்கள் பின்னால் நம்மையே தூற்றுவதின் காரணம் என்ன?

    நேரம்.

    -மந

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களது மனோபாவம்! சோறு கிடைக்குமிடம் சொர்க்கம்!

      நீக்கு
  6. ஒரு சிற்பத்தையோ ஓவியத்தையோ ஆபாசம் என்று எதைவைத்துச் சொல்வது? கலைப்படைப்பில் ஆபாசம் கண்ணுக்குத் தெரிந்தால், அது நம் குறை அல்லவா?

    ஆபாசம் கண்ணுக்குத் தெரிவதில்லை. மனதுக்குத் தெரிவது.
    ஆபாசம் என்றைக்கும் கலையாவது இல்லை எனலாம்.

    (ஆமா.. ஆபாசக்கலைன்றாங்களே அது இன்னா சார்?)

    -மந

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாயைக்கண்டால் கல்லக்காணோம் கல்லைக்கண்டால் நாயைக்காணோம் மாதிரியோ... அது சரி.. ம ந என்கிற பெயரில் வரும் நண்பர் யார் என்று தெரிந்து கொள்ள ஆவல்!

      நீக்கு
  7. இருக்கட்டும்..

    ஆபாசம் என்பது எந்த மொழி?..

    தமிழில் அதற்குச் சரியான சொல் எது?..

    பதிலளிநீக்கு
  8. இறைவனது படைப்பை ஆபாசம் என்று சொல்வதற்கு நாம் யார்?..

    உண்மையில் ஆபாசம் என்று எதுவும் இல்லை.. அவரவர் அறிவதைப் பொறுத்தே எல்லாமும்..

    கலசம் நிறைய நீர் இருந்தாலும் அது கும்பம் என்றாவதில்லை.. மாவிலையும் தேங்காயும் வைக்கப்பட்ட பிறகே பூரண கும்பம் என்னும் உயர் நிலையை அடைகின்றது..
    ( அதைப் போலத் தான் ஆடையும் அலங்காரமும்..)

    நமது புராணங்களின் படி உயர்ந்த நல்லுணர்வுகளுடன் படைக்கப்பட்டவர்கள் நாம்...

    ஆளாளுக்குக் கருத்து சொன்னதனால் அலங்கோலமாகி விட்டது..

    வாலிழந்த நரிகளால் எல்லாமும்
    கெட்டது..

    புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனில் - எந்த நிலையும் அழகு தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னமும் வெளிசுற்றிலேயே இருக்கிறீர்கள். உள்சுற்றில் வந்தால் கொஞ்சம் எனக்குத் தெளியலாம்!

      நீக்கு
  9. ஆணாதிக்க உலகு என்பதால் படைப்பில் பெண்கள் அதிகமாக இடம் பெறுகின்றனர்.

    படைப்பில் ஆபாசம் இல்லை. நம் கண்களில்தான். நம் கோயிலில் இருக்கும் பெண் சிற்பங்கள் நமக்கு அவ்வளவு ஆபாசபாகத் தெரியாத்தன் காரணம் நாம் அதனைப் பொருட்படுத்தாமல் கடந்துவிடுவதுதான். ஆனால் வெளிநாட்டுச் சிற்பங்கள் நம் கண்ணை உறுத்துவது நம் க்யூரியாசிட்டியால் (பிரித்தே வளர்க்கப்பட்டதால்)

    வெளிநாட்டில் (கிரேக்க ரோமானிய) ஆண் சிலைக்கும் ஆடை பெரும்பாலும் இல்லை. வாடிகன் சர்ச்சில் இப்படிப்பட்ட சிலைகள் வரிசைகட்டி நின்றன. 16?ம் 17ம் நூற்றாண்டில்தான் அப்போது போப்பாக இருந்தவர், அந்தப் பகுதியை (அங்கு பெண் சிலை இல்லை) மாத்திரம் உடைக்கச் சொன்னார். அதன் பிறகு வந்தவர்கள் அப்படி உடைத்தது அசிங்கமாக்க் கண்ணை உறுத்துகிறது என்பதால், அதன் மீது ஆலிலை(அல்லது இலை) சிற்பம் செய்து ஒட்ட வைத்தனர்.

    அரச மகளிர் மற்றும் பலர் நிர்வாண ஓவியங்களை ;தங்கள்), ஓவியரை வைத்து வரைந்து சுவரில் மாட்டிவைத்துக் கொண்டனர். எகிப்திய சிற்பங்களில் பெரும்பாலும் நிர்வாணம் இல்லை. இந்தியச் சிற்பங்களில் அனேகமாக உண்டு

    நான் எழுதுவதற்கு, நான் எடுத்த படங்களை ஆதாரமாக அனுப்பினால் (நூறுகளில்), வெளியிடத் தயங்குவார்கள் எங்கள் பிளாக்கில் (வெளியிட மாட்டார்கள்). ஆனால் இந்தியச் சிற்பங்களை நாம் நின்று பார்க்காமல் இப்போதும் கடந்துதான் செல்கிறோம், நம்மிடம் ரசனைக்குறைவு இருப்பதால்.

    பதிலளிநீக்கு
  10. உயிர் நண்பன் (அபூர்வமாக அமையும்) உண்மையைப் பூச்சு இல்லாமல் நமக்கு பட் என்று படும்படிச் சொல்லுவான். அவன் நோக்கம் நம் நன்மையை ஒட்டி இருக்கும்.

    நாம் பெரும்பாலும் தவறு செய்வது வீட்டிற்குத் தெரியாத பதின்ம வயதில். அதனைச் சரி செய்ய நண்பனால்தான் முடியும். ஏனென்றால் அவன் நம் ஜெனரேஷன், நம்மோடு நம் காலத்தில் வாழ்பவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Means, உனக்கு என்னா தெரியும், வந்துடுச்சுப்பா பெரிசு... என்பதெல்லாம் அவனிடம் கிடையாது

      நீக்கு
  11. ஈகை... தேவைப்படுபவர்களுக்கோ, அல்லது நம் gratitudeஐக் காண்பிக்கவோ செய்யப்படுவது. ஐயம் - பெரியவர்களுக்கு, நம்மைவிட உசந்தவர்களுக்கு-வயது தடை அல்ல. சிறியவராகவும் இருக்கலாம், செய்யப்படுவது. இதில் பொருளை வைத்துள்ள நம் கை தாழ்ந்திருக்க வேண்டும். பெற்றுக்கொள்பவர் எடுத்துக்கொள்ள வேண்டும். அவரின் ஆசி நமக்குக் கிட்டும். பிச்சை- வறியவர்களுக்கு, நம்மைவிடத் தாழ்ந்தவர்களுக்கு -அறிவில் செல்வத்தில், அளிப்பது. நம் கை உயர்ந்திருக்கும், வாங்குபவர் கை தாழ்ந்திருக்கும்.

    ஆண்டாள், நாம் எல்லோரும், ஐயமும், பிச்சையும் ஆகும்தனையும்-நம்மால் முடிந்த அளவு செய்யவேண்டும் என்கிறாள்.

    பதிலளிநீக்கு
  12. பூரி - ஆலு வெங் போட்ட இயல்பான மசாலா. இதில் பட்டாணிக்கு வேலை இல்லை. சப்பாத்திக்கு வட இந்திய தொடுகை அல்லது வெங் இல்லாத dhதால் எனப்படும் பாசிப்பருப்பு கூட்டு.

    பதிலளிநீக்கு
  13. உள்ளன்போடு கொடுப்பது..... அப்படீல்ஙாம் இருக்காது. நாலு பேர் ஒரு வேளைச் சாப்பாடு, அவங்க இது கொடுத்தாங்க.. என்றெல்லாம் கணக்குப்போட்டுக் கொடுப்பது. உன்னிடமிருந்தும் நான் அதிகமாகப் பெறவில்லை, என்னிடமிருந்தும் அதிகமாக்க் கொடுக்கலை நிலைமைதான். நெருங்கிய உறவிலும் கடமை மற்றும் கிட்டத்தட்ட அப்படித்தான்.

    பதிலளிநீக்கு
  14. எல்லாமும் படிச்சேன். மற்றக் கருத்துகளுக்குப் பின்னர் தான் வரணும். இன்னிக்கு வீட்டு வேலை செய்யும் பெண் திடீரென விடுமுறை எடுத்துட்டாங்க. வேலைகளைக் கவனிக்கணும். :)

    பதிலளிநீக்கு
  15. ஆபாசம். -- பாலுணர்வைத் தூண்டும் எதுவும். ரஸாபாஸம் என்ற வடமொழியின் திரிபு. ரஸிக்கக்கூடியதற்கு விலக்கு. இதற்கான உபயோகிக்கும் தமிழ்ச்சொல் இல்லை

    பதிலளிநீக்கு
  16. ஒருத்தர் தன் வீட்டு விசேஷத்திற்கு என்ன அன்பளிப்பு செய்தார்களோ அதற்குக் குறையாமல் தானும் செய்து விடுவது பலரின் இயல்பான பழக்கமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  17. 1) நீங்கள் முதன் முதலில் வளர்த்த செடி எது? எந்த வயதில்? 

    ஒன்றும் இல்லை. நான் பிறந்து வளர்ந்தது முழுவதும் போர்சன்களில், அரசு  அடுக்கு மாடி குடியிருப்புகளில்.  சொந்த வீடு ஆனதுக்கு அப்புறம் தான் செடிகள் வைக்க ஆரம்பித்தோம். வளர்க்க ஆசைப்பட்டு சொந்த ஊராகிய கடலூரில் (பூ விவசாயம் நிறைந்த ஊர்) இருந்து கொண்டு வந்து கொடி மல்லிகையை நட்டு வீட்டின் பால்கனியில் படர விட்டு வளர்த்தோம். செடி வளர்ந்தாலும் பூக்கள் மட்டும் மிக மிக குறைவு. மண் வளம் அப்படி. 

    2) அம்மா / அப்பா / தாத்தா / பாட்டி / நண்பர் - இவர்களில் யார் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வீர்கள்? ஏன்? 

    விவரம் புரியும் வயது வந்தபோது தாத்தா பாட்டி யாரும் இல்லை. அப்பா அம்மாவின் கண்ட்ரோலில் தான். ஆகவே அம்மா சொல்படி வாழ்ந்தேன். என் நண்பர்கள் நல்ல நண்பர்கள். கேட்டால் ஒழிய அறிவுரை சொல்ல மாட்டார்கள்.  மற்றபடி செய்திகளில் பொய்  சொல்வது இல்லை. 

     3) சப்பாத்தி அல்லது பூரிக்கு உங்களுக்குப் பிடித்த side dish எது?

     சப்பாத்திக்கு குருமா, தக்காளி தொக்கு, சாம்பார். பூரிக்கு கிழங்கு மசாலா (பச்சைமிளகாய் வெங்காயம் சேர்த்து)

     Jayakumar

    பதிலளிநீக்கு
  18. இன்றைய ஒரு கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு எந்த அளவு செலவாகிறது என்று நினைக்கிறீர்கள்?
    உத்தேசமாக;
    கேட்டரிங் 3 லட்சம்
    போட்டோ ஆல்பம் விடியோ 2 லட்சம்
    மண்டபம் 2 லட்சம்
    தாம்பூல பைகள், மேடை அலங்காரம், மின்சாரம் வகையில் 1 லட்சம்.
    (புத்தாடை, ஆபரணங்கள்,
    போன்ற நம் வழக்கமான சொந்த நலனுக்கான மற்றும் இன்னும் சில கணக்கில்
    வராது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுல ஏதேனும் அர்த்தம் இருக்கா? கேட்டரிங் 3 லட்சம், மண்டபம் 2 லட்சம், நிச்சய வேஸ்டான போட்டோ ஆல்பம் வீடியோ 2 லட்சம். Actually மண்டபம் 4 லட்சம், கேட்டரிங் 7 லட்சம், போட்டோ ஆல்பம் 2-3 லட்சம், மற்ற செலவுகள் (assets இல்லை) 5 லட்சம் என்று பணத்தை வீசி எறிவது சரியா? பழைய காலத்தில் சொந்தங்கள் ஒருவர் வீட்டில் ஒன்று சேர்ந்தனர். இது ஊர் கூடும் திருவிழாவாக இருந்தது. இப்போது வெட்டிச் செலவு. அதிலும் ரிசப்ஷன் மற்றும் அது தொடர்பான செலவுகள்...

      நாகரீகம் கருதி அதிகமாக எழுதுவதைத் தவிர்க்கிறேன்.

      செலவழிக்கும் காசை, அனாதை இல்லத்துக்கோ இல்லை தேவைப்படுபவர்களுக்கோ கொடுத்தால் எவ்வளவு நல்லது? பிறந்ததன் பயனும் திருமணத்திற்காக நல்லுள்ளங்களின் ஆசியும் கிடைக்கும்.

      நீக்கு
    2. இன்றைய கல்யாணங்களில் கல்யாணச் சத்திரத்துக்கு வெறும் 2 லட்சம், காடரிங்கிற்கு 3 லட்சம் மட்டுமா? கடவுளே! 2016 டிசம்பரில் எங்க உறவினர் பெண் கல்யாணத்தில் சத்திரத்துக்கு மட்டும் இரண்டு நாள் வாடகை (கல்யாணம் ஆன அன்னிக்கேக் காலி செய்தாச்சு) பத்து லட்சம். சாப்பாட்டுக்கும் எட்டு லட்சமோ என்னமோ ஆனது. அதில் முதல் நாள் மாலை ரிசப்ஷன் சாப்பாடு மட்டும் ஐந்து லட்சத்துக்குக் குறையாமல் ஆனது. ஆயிரம் பேரோ என்னமோ கணக்குச் சொன்னாங்க! :( இப்போ சென்ற நவம்பரில்நடந்த ஒரு கல்யாணத்தில் அதை விடவும் கூடுதலாகச் செலவு. அதிலும் ஃபோட்டோ செஷன் எல்லாம் இருந்ததால் அவங்களுக்கு மட்டும் ஐந்து லட்சத்தைத் தாண்டி விட்டது என்று பேசிக் கொண்டனர்.

      நீக்கு
    3. //அடுத்த புதன் கேள்வியா?//
      இல்லை ஸார். விசேஷங்களுக்கு அன்பளிப்பு பற்றி பேச்சு வந்ததால் இதையும் சொல்ல நேர்ந்தது.

      நீக்கு
  19. ரசனையான கேள்வி -பதில்கள் இரசித்தேன் ஜி

    பதிலளிநீக்கு
  20. @ கௌதமன்..

    // தமிழில் ' புறவிலக்கெழில்//

    நான் தமிழில் கேட்டேன்!..
    - :)

    பதிலளிநீக்கு
  21. /புறவிலக்கெழில்/

    இதை ஷென்னைச் ஷெண்டமிழ் எப்படிச் சொல்லும்?..

    பதிலளிநீக்கு
  22. புறவிலக்கெழில் - அருமையான தமிழ் வார்த்தை. தெரிந்ததுதான். ஆனால் உபயோகத்தில் இல்லை.

    புறத்தை விலக்கினால் அகம். அந்த அழகைக் காண்பிப்பது, புறவிலக்கெழில். இதற்குப் பதில், அகவெழில் அல்லது உடலெழில் என்ற்ம் குறிப்பிடலாம். ஆனா பாருங்க... ஆபாசம்தான் சரியான வார்த்தை.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் நன்றாக உள்ளது. கருத்துரைகளும் நன்றாக உள்ளன.

    பிறந்த வீட்டில் இருக்கும் போது தோட்டத்தில் நிறைய செடி கொடிகள் நானும், எங்கள் அண்ணா, பாட்டியுமாக வளர்த்திருக்கிறோம். அதில் என் பங்கும் நிறைய இருக்கும். திருமணமாகி சென்னை வந்த பின் அந்த வாய்ப்புகள் குறைந்து விட்டன.

    வீட்டிலுள்ள பெரியவர்கள் சொல்வதை கேட்டு நடக்கும் பழக்கம் இன்றளவும் இருக்கிறது. அதன்படிதான் இதுவரை நடந்து வந்திருக்கிறேன். ஆனால் அப்படிபட்ட எண்ணங்களினால், இப்போது நாம் சொல்வதை அவ்வாறு இல்லையாயினும், ஒரளவிற்காவது நம் வீட்டிலுள்ளவர்கள் (இளைய தலைமுறைகள்) கேட்டு நடக்க தயங்குகிறார்களே என்ற அலைபாயும் மனது உருவாகி விட்டதோ என்ற வீண் விசாரமும் வருகிறது. (தேவைதானா இந்தபதில் என கேள்வி கேட்ட நீங்களும் இப்போது சிந்திக்கக் கூடும்:)) ஹா ஹா ஹா)

    சப்பாத்தி, பூரிக்கு அதற்கேற்ற துணைகள் இருந்தால் நன்றாக இருக்கும். இல்லாத பட்சத்தில் வெறும் பால் விட்டு நான் சாப்பிட்டு விடுவேன்.

    படங்கள் அருமை. என்னதான் குழந்தைகள் தாங்களும் பெரியவர்களாக இருக்க வேண்டுமென அடம் பிடித்தாலும், அவர்களுக்கு ஒவ்வாத வேலைகளை அவர்களிடம் திணிப்பது முறையல்ல என்பது என் கருத்து.

    பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  24. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  25. கேள்விகளும் , பதில்களும் நன்றாக இருக்கிறது.
    முதன் முதலில் வாடாமல்லி பூச்செடியை வழியில் கண்டு எடுத்து வந்து வளர்த்து இருக்கிறேன். பள்ளி சென்று விட்டு செடியை வீட்டுக்கு கொண்டு வந்த போது தெருவில் உள்ளதை எடுக்ககூடாது என்று அம்மாவிடம் திட்டு வாங்கினேன். அம்மாவிடம் பாவம் யார் தண்ணீர் ஊற்றுவார்கள் அதுதான் எடுத்து வந்தேன் என்று சொன்னேன். இனி இப்படி எடுத்து வரக்கூடாது என்று சொன்னார்கள்.

    அப்புறம் நிறை செடிகள் தொட்டியில் வளர்த்தோம்.

    பெரியவர்கள் சொன்னதை ஏன் எதற்கு என்று கேட்காமல் ஏற்றுக் கொண்ட காலம் அது. இருந்தாலும் அடம் பிடித்து விருப்பங்களை அம்மா, அப்பாவிடம் பெற்றுக் கொண்டதும் உண்டு.

    சப்பாத்திக்கு காய்கள் இருந்தால் குருமா, பாசிப்பருப்பு தக்காளி குழம்பு, வெளியில் போகும் போது எடுத்து போக தக்காளி, வெங்காயம் காரப்பொடி போட்ட வதக்கல். (தொக்கு)
    மதியம் செய்த சாம்பார், வெங்காயம், தக்காளி சீனி போட்ட கலவை இருந்தாலும் நன்றாக இருக்கும்.

    பூரிக்கு உருளை கிழங்குமசாலா தான்.

    பதிலளிநீக்கு
  26. நான் முதலில்வளர்த்த செடி துளசி தான் ஒரு பெயின்ட் டப்பாவில் அடியில் துளை போட்டு மணலெல்லாம் போட்டு வைச்சுக்கொடுத்தார் நம்ம ரங்க்ஸ். அதுவும் வீட்டின் சுற்றுச் சுவரின் மேலே வைச்சிருந்தோம். அப்போல்லாம் மாமியாருக்குத் துளசி வழிபாடு செய்வதே பிடிக்காது ஆகவே தெரியாமல் வைச்சிருந்தோம். அவங்க கவனிக்காத நேரமாப் பார்த்து அவசரம் அவசரமாகச் செய்த நினைவெல்லாம் வருது. பின்னர் பத்து வருடங்களில் அவங்களே துளசி வழிபாடு பண்ண ஆரம்பிச்சுட்டாங்க என்றாலும் வீட்டில் துளசிமாடம் கட்டக் கூடாது என்று கடுமையாக எதிர்ப்பு. அது கட்டும்போது எங்க பெண்ணிற்குக் கல்யாணம் ஆகிப் பேத்தியும் பிறந்துவிட்டாள். :))))))

    பதிலளிநீக்கு
  27. சப்பாத்திக்கு ஊறுகாய் இருந்தால் கூடப் போதும். இப்போவும் ஒரு சிலகூட்டுகள் பண்ணினாலோ, தால் பண்ணினாலோ கொஞ்சமாகப் போட்டுக் கொண்டு மஞ்சள் ஊறுகாய் தொட்டுப்பேன். தேப்லா, பராந்தா போன்றவை ஊறுகாயோடு ஒத்துப் போனாலும் அந்த ஊறுகாயும் நன்றாக இருக்கணும். பூரிக்கு எங்க அம்மா பண்ணும் பாம்பே சட்னி தான். இந்தத் திங்கக் கிழமை பதிவு ஆரம்பிச்ச புதுசிலே கௌதமன் சார் என்னிடம் கேட்டு நான் அதை எழுதிக் கொடுத்த நினைவும் இருக்கு.

    பதிலளிநீக்கு
  28. நல்ல கேள்வி பதில்கள் கலையில் ஆபாசம் என்பது எமது மனவோட்டத்தில்தான்.

    முதல் முதல் எனது ஏழு வயதில் நாட்டிய மரம் நாலுமணிப்பூ , சின்ன வெங்காயம்.
    சப்பாத்திக்கு பன்னீர் கறி, கார இடி சம்பல் . பூரிக்கு கிழங்கு காரக் கறி, இடி சம்பல் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காய்ந்த மிளகாய் , உளுந்தம்பருப்பு எண்ணெயில் வறுத்து எடுத்து உப்பு சேர்த்து உரலில் இடித்து இத்துடன் சின்ன வெங்காயம், கறிவேற்பிலை சேர்த்து இடித்து, தேங்காய் துருவல் கலந்து இடித்து எடுப்பது இடிசம்பல் மிளகாய் காரம் அவரவர் விருப்பம்.
      இறுதியில் சிலர் எலுமிச்சம் சாறு சேர்ப்பார்கள்.

      நீக்கு
  29. எங்களுக்கெல்லாம் வீட்டில் கூடக்குடி இருந்த மாமா/மாமி எல்லாம் உபதேசம் செய்வார்கள். கேட்டுக் கொண்டிருக்கோம். அப்பாவோ அம்மாவோ ஏன் சொல்றீங்க என்றெல்லாம் கேட்டதே இல்லை. ஆனால் இப்போல்லாம் சொந்தப் பேரன்/பேத்தி என்றால் கூட மேலும் கீழும் பார்த்துட்டுத் தான் சொல்லணும். பிள்ளை/பெண்/மாப்பிள்ளை/மருமகள் ஆகியோருக்குப் பிடிக்குமோ/பிடிக்காதோ எனத் தோணும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!