செவ்வாய், 19 செப்டம்பர், 2023

நெடுங்கதை : ரயிலோடும் வீதி 3/5 - மூலத்திருநாள் பரசுராம்.

ரயிலோடும் வீதி-3

- மூலத் திருநாள் பரசுராம் -

முந்தைய பகுதிகள்  :    2


ஞ்சீவியின் மேலதிகாரி ஜேம்ஸ். ஆங்கிலேயர். என்ஜினீயர்.‘தொரை ரொம்ப நல்ல மனுஷர்’ என்பான் சஞ்சீவி. (ஆங்கில அதிகாரிகளை ‘துரை’ என்று அழைக்கும் வழக்கம் அப்போது நிலவியது). சில அந்தரங்கமான பணிகளைச் செய்துகொடுப்பதற்கு அவனைத்தான் நம்பியிருந்தார்.  ஜேம்ஸ். அவற்றில் ஒன்று, நல்ல காரமான சுருட்டு தயாரித்துக் கொடுப்பது.

பீடி, சுருட்டு தயாரிக்கும் தொழில் இராணிப்பேட்டையில் பல தலைமுறைகளாக நடந்துவந்தது. ஏழை மற்றும் கீழ்-நடுத்தரப் பெண்களுக்கு அதுதான் சோறு போட்டது. பீடி இலைகளும் சுற்றுவதற்கான நூலும் லேபிள்களும் வீட்டிற்கே வந்துவிடும். முறத்தில் இலைகளை வைத்துக்கொண்டு, தரம் பிரித்து, சுருட்டி, லேபிள் ஓட்டும் கைப்பக்குவம் அந்தப் பெண்களுக்கு மட்டுமன்றி, வீட்டிலிருந்த சிறுவர்களுக்கும் பழகியிருந்தது. சஞ்சீவியும் அப்படிக் கற்றுக்கொண்டவன் தான்.

ஜேம்ஸ் துரைக்கு எப்படிப்பட்ட புகையிலை மிகவும் பிடிக்கும் என்று அவன் வேலைக்குச் சேர்ந்த இரண்டே வாரங்களில் தெரிந்துகொண்டுவிட்டான். அதை நேர்த்தியாகச் சுருட்டி, ஒட்டியது தெரியாமல் ஒட்டும் விதத்தையும் கற்றுக்கொண்டான். அத்துடன் அவர் சுருட்டு புகைக்கும் நேரத்தையும் அவன் சரியாகப் புரிந்துகொண்டதால், துரைக்கும் அவனுக்கும் ஒரு இதமான பந்தம் ஏற்பட்டுவிட்டது.

அதற்காக அவன் காலதாமதமாக வேலைக்கு வந்தால் அனுமதிப்பார் என்றோ, தொழிலில் கவனமின்றி இருந்தால் பொறுத்துக்கொள்வார் என்றோ அர்த்தமில்லை. கடமை என்று வந்துவிட்டால் அவர் கண்ணில் நெருப்புப்பொறி பறக்கும்.

“சஞ்சீவி, கம் ஹியர்” என்றார் ஜேம்ஸ்.

கடிதத்தை அவசரமாக பேண்ட் பாக்கெட்டில் வைத்தபடி விரைந்து சென்று அவர் முன்னால் நின்றான் சஞ்சீவி.“யெஸ் சார், ப்ளீஸ் சார்!” என்று அவர் முகத்தை நோக்கினான்.

வழக்கத்தை விட அவருடைய முகம் சற்றுக் கோபமாக இருப்பதாகத் தோன்றியது.

பல வருடங்களாக இதே ஊரில் இருந்ததால் தொரைக்குத் தமிழில் பேசுவதில் கஷ்டம் இருக்கவில்லை. அவர் தவறாகப் பேசினாலும் எதிர்க்கவோ திருத்தவோ யாருக்குத் துணிச்சல் உண்டு?

“சஞ்சீவி! இந்த ஊரில் பிஞ்சி என்று ஒரு வில்லேஜ் இருக்கிறதா?”

மிகவும் பணிவோடு, “ஆமாங்க தொரை! நம்ம சந்திரன் கூட அங்கிருந்துதான் வருகிறான்” என்றான் சஞ்சீவி.

“குட்! இன்னும் யார் யார் அங்க இருந்து வருதோ, அல்லாரையும் கூப்ட்டு என்னை வந்து பாக்கச் சொல்லு.  நாலு மணிக்கு இங்க வரணும். ஓகே?” என்று எழுந்தார் ஜேம்ஸ்.

சஞ்சீவிக்கு அந்தத் திடீர்க் கூட்டத்தின் நோக்கம் புரிபடவில்லை  புரிந்துகொள்ளும் அவசியமும் அவனுக்கில்லையே! “தேங்க்யூ தொரை சார்! .. “ என்று மெல்ல நடக்க முயன்றான். அதற்குள் ‘உஷ்’ என்று ஓசையெழுப்பி அவனை அழைத்த ஜேம்ஸ், “ஃபாக்டரி மேனேஜரை இப்பவே வரச்சொல்லு” என்றார்.

"யெஸ் ஸார்" என்று சொல்லியபடி சஞ்சீவி வேகமாக நகர்ந்தபோது அவன் பேண்ட் பாக்கெட்டில் துருத்திக் கொண்டிருந்த கடிதம், ஜேம்ஸ் துரையின் டைப்பிஸ்ட்டான முதிர்கன்னி கமலா டேவிட் டேபிள் மீது போய் விழுந்தது அவனுக்குத் தெரியாது. துணுக்குற்ற கமலாவின் கண்களில் அதிலிருந்த "ஐ லவ் யூ" வாசகம் மின்னல் போல் பளிச்சிட்டதையோ, அதனால் அக்கடிதத்தை அவள் ரகசியமாகத் தன் பர்சுக்குள் வைத்து மூடியதையோ யாரும் தெரிந்து கொள்ளவில்லை.

***

பெங்களூரில் பிரிட்டிஷ் இராணுவத்தின் ஒரு படைப்பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆங்கில அதிகாரி டேவிட். அவர் வீட்டில் தங்கி, சமையல் முதல் துப்புரவு வரை எல்லா வேலைகளிலும் உதவியாளராக இருந்தவள் கமலாவின் தாயார். படிப்பு வாசனை இல்லாதவள்.

மிலிட்டரி ஒழுங்கு முறையால் செழுமைப்படுத்தப் பட்டிருந்த டேவிட் துரையின் உடல் அழகில் அவள் மயங்கியதில் வியப்பில்லை. இந்தியாவில் சிறிது காலம் வசித்த டேவிட்டின் மனைவி, இந்நாட்டின் வெப்பமான பருவநிலை ஒத்துக்கொள்ளாமல் இங்கிலாந்திற்கே திரும்பிவிட்டது அவளுக்கு அதிர்ஷ்டமான வாய்ப்பாக அமைந்துவிட்டது. அவர்களுக்குப் பிறந்தவள் தான் கமலா.

இந்தியக் கருப்பும் பிரிட்டிஷ் வெளுப்பும் கலந்த அழகுப் பதுமையாக வளர்ந்தாள் கமலா. அவள் தன்னுடைய மகள் என்று அங்கீகரித்து, ‘கமலா டேவிட்’ என்ற பெயரில் அவளைப் பள்ளியில் சேர்த்தார் டேவிட். அவருடைய மரணத்திற்குப் பிறகு அவருடைய உயிலின்படி கமலாவுக்குக் கணிசமான சொத்துக்கள் கிடைத்தன. பள்ளி இறுதி வரை படித்திருந்ததால், ஆங்கிலேயரின் நிறுவனமான பாரி கம்பெனியில் அவளுக்கு டைப்பிஸ்ட் வேலை கிடைப்பதில் சிரமம் இருக்கவில்லை. தன் வயதான தாயுடன் இராணிப்பேட்டைக்குக் குடிவந்தாள் கமலா.

ஆனால் 35 வயதான போதும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஏனோ அவளுக்கு ஏற்படவில்லை. இந்தியா சுதந்திரம் அடைவதை எதிர்பார்த்து இராணிப்பேட்டையில் இருந்த ஆங்கிலேயர்கள் பலரும் தங்கள் நாடுகளுக்குத் திரும்பிக்கொண்டு இருந்ததால், ஆங்கிலோ இந்தியப் பெண்ணான கமலாவுக்கு சரியான ஆங்கில ஆண்மகன் கிடைக்கவில்லை. இந்திய ஆண்களோ அவளுடைய அழகுக்கு முன்னால் தன்னம்பிக்கையற்றுப் போனார்கள். குறைந்தபட்சம் ஐ லவ் யூ சொல்ல முயன்ற நண்பர்கள் கூட அவளுக்கு இல்லை.

இரவு முழுவதும் கமலா உறங்கவேயில்லை. எழுதியவனின் பெயரோ ஊரோ கடிதத்தில் இல்லாததால், யார் அதை எழுதியிருக்க முடியும் என்று தெரியவில்லை. கடிதத்தை நேரில் கொடுக்காமல், டேபிள்மீது போட்டுவிட்டவன் நிச்சயம் தன்னம்பிக்கை இல்லாத இந்தியனாகத்தான் இருக்கவேண்டும் என்று அவளுக்குக் கோபம் வந்தது.  கடிதத்தின் முன்பக்கம் நீளமாக எழுதியிருந்ததை அவளால் படிக்க முடியவில்லை. காரணம் அவள் பள்ளியில் தமிழ் படிக்கவில்லை. மேலோட்டமாகத்தான் தமிழ் எழுத்துக்கள் அவளுக்குத் தெரியும்.

பொழுது விடியும்போதுதான் அவளுக்குத் தன் டேபிளை உரசுவதுபோல் சஞ்சீவி வேகமாகப் போனது மனக்கண்ணில் தோன்றி மறைந்தது. சஞ்சீவியை அவளுக்கு நன்றாகத் தெரியும். ஜேம்ஸ் தொரைக்கு அடியாள் மாதிரி. நல்ல உடல்கட்டு. அவன்தான் 'ஐ லவ் யூ' சொல்ல வருகிறானோ?  அவன் பேச்சிலரா, திருமணம் ஆனவனா? வீடு வாசல் நிலபுலம் உள்ளவனா?

இருக்கட்டும், நாளை காலை கம்பெனிக்குப்போனதும் சமயம் பார்த்து அவனைச் சோதிக்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

அதே சமயம், டேவிட் மாதிரி ஒரு மிலிட்டரி அதிகாரிக்குப் பிறந்த தனக்கு, ஒரு சாதாரணத் தொழிலாளி மீதா இப்படி ஏக்கம் வரவேண்டும் என்று தன்மீதே அவளுக்குக் கழிவிரக்கம் ஏற்படவும் தவறவில்லை.

***

ன்று ஜேம்ஸ் துரையால் அழைக்கப்பட்ட அவசரக் கூட்டத்தில் பிஞ்சி மற்றும் அருகிலிருந்த கிராமத்தில் வசித்த பாரி கம்பெனி ஊழியர்கள் சுமார் இருபது முப்பது பேர் கலந்துகொண்டார்கள். எல்லாருமே ‘ஒர்க்கர்ஸ்’ என்ற பிரிவில் வருபவர்கள்தான். அதனால் ஜேம்சுக்கு உள்ளூர சந்தோஷமே. காரணம், தான் இழுத்த இழுப்புக்கு அவர்களால் மறுப்புச் சொல்ல முடியாது.

தனக்குத் தெரிந்த தமிழில் ஜேம்ஸ் பேசியதன் சுருக்கம் இதுதான்:

நமது கம்பெனி இந்த ஊரில் பல்லாண்டுகளாகத் தொழில் செய்துவருகிறது.  சுமார் ஐந்நூறு பேர் இங்குப் பணியாற்றிவருகிறார்கள். சம்பளம், போனஸ், மருத்துவ உதவி, வீடுகட்டக் கடன் - என்று பலவகையிலும் அவர்களுக்குக் கம்பெனி துணையாக இருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடையவுள்ள எதிர்காலத்தில் கம்பெனி மேலும் பல நல்ல காரியங்களை இந்த ஊருக்குச் செய்ய விரும்புகிறது. “அதற்குத் துணிச்சலும் உழைப்பும் மிக்க சிலபேர் எனக்கு வேண்டும். உங்களில் யார் தயாராக இருக்கிறீர்கள்?” என்று கேட்டார் ஜேம்ஸ்.

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். எந்த மாதிரி வேலையைத் தரப்போகிறார் ஜேம்ஸ் துரை?

சிலர் தயங்கித் தயங்கிக் கேட்டார்கள். ஜேம்ஸ் சிரித்துக்கொண்டார்.

“நான் ரெடி! எந்த வேலையா இருந்தாலும் தொரை சொல்லிட்டா நான் செஞ்சு முடிக்கத் தயார்!” என்று வேகமாக முன்னால் வந்தான் சந்திரன்.  “ஆனால் இதற்குச் சம்பளம் கிடைக்காது! முழுக்க முழுக்க சமூக சேவைதான்!  புரிந்ததா?” என்று அவனை உற்றுநோக்கினார் ஜேம்ஸ். அனைவரும் அவனை எச்சரிக்கையோடு பார்த்தார்கள்.

முகத்தில் உற்சாகமும் புன்முறுவலும் ததும்பிய சந்திரனோ, “எனக்கு சமூக சேவை ரொம்பப் பிடிக்கும் தொரை!” என்று அவருக்கு மிக அருகில் வந்தான்.

“குட்! இப்படிப்பட்ட ஆசாமிதான் எனக்கு வேண்டும்” என்று அவனுடன் கைகுலுக்கிய ஜேம்ஸ், “இன்னும் சிலரை நீதான் கண்டுபிடித்து உன்னுடன் ‘டீம்’ சேர்த்துக்கொள்ள வேண்டும்.கூடிய சீக்கிரம் உங்களுக்கு என்ன வேலை என்று கூறுவேன். அதுவரை பொறுத்திருங்கள்” என்று எழுந்தார்.  “நீங்கள் போகலாம்.”

அனைவரும் தங்கள் பணியிடங்களுக்குத் திரும்பினார்கள்.  சந்திரனுக்கு அன்றைய வேலை முடிந்துவிட்டதால் அப்படியே நேராக சைக்கிள் ஸ்டாண்டை நோக்கி நடந்தான்.

அங்குத் தயாராகக் காத்திருந்தான் சஞ்சீவி. “மீட்டிங்கில் என்ன பேசினார் ஜேம்ஸ் தொரை?” என்று கேட்டான்.

“பெருசா ஒண்ணுமில்ல. எப்படியும் ஒனக்குத்தானே மொதல்ல தெரியப் போகிறது? தொரைக்கு சுருட்டு மடிப்பவன் நீயா நானா?” என்றான் சந்திரன் கேலியாக.

“அப்டியே இருக்கட்டும். ஆனா ஒன்கிட்ட ஒரு முக்கிய விஷயம் பேசணும்” என்று அவனை கம்பெனியின் வெளிகேட்டிற்கு அருகில் இருந்த நாயர் டீக்கடைக்கு அழைத்துப் போனான் சஞ்சீவி.

“வாங்க சாரே” என்று இவர்களைக் கண்டதும் நாயர் இரண்டு கோப்பைகளில் சூடான தேநீரைக் கொண்டுவந்து வைத்தார்.

சஞ்சீவி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, “நான் சொல்றேன்னு வருத்தப்படக் கூடாது. பொம்பளைங்களுக்கு நாம்ப தான் பாதுகாப்பா இருக்கணும்” என்றான்.

சந்திரன் தேநீரைக் குடித்து முடித்துவிட்டு, “என்ன சொல்றேப்பா?” என்றான் புரியாமல்.

சஞ்சீவி இருவரின் தேநீருக்கும் தானே பணம் கொடுத்துவிட்டு, “போகப்போகப் புரியும். நாளைக்கு வெள்ளிக்கிழமை தானே? சந்தைக்குப் போவோமில்லையா?  அப்ப வெளக்கமாச் சொல்றேன்” என்று தன் சைக்கிளில் ஏறிக்கொண்டான்.

சந்திரனோ அன்றைய கூட்டத்தில் ஜேம்ஸ்துரை தன்னிடம் பேசியதைத் தன் மனைவி கிருஷ்ணவேணியிடம் உடனே சொல்லிவிடவேண்டும் என்று சைக்கிளில் விரைந்தான்.  சந்தோஷத்தால் அவள் முகம் எப்படி மலரும் என்று கற்பனைசெய்துகொண்டான். சஞ்சீவி பேசிய எதுவும் அவன் மனதில் பதியவேயில்லை.

(தொடரும்)

26 கருத்துகள்:

  1. கதையில் கடிதம் ஒவ்வொரு கையாக மாறி பரபரப்பு கூடுகிறது.

    //அருகில் இருந்த நாயர் டீக்கடைக்கு அழைத்துப் போனான் சஞ்சீவி//

    அப்பொழுதே மலையாளிகள் இப்படி பரவி வாழ்ந்ததை சூசகமாக அறிந்து கொள்ள முடிகிறது.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. கதை வேகம் எடுத்திருக்கின்றது..

    தொடர்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  5. கடிதம் யாரிடம் எல்லாம் போகிறது! கடிதம் ஏற்படுத்தும் நினைப்புகள்
    என்று அடுத்து யார் கைக்கு போகும் ? என்ன நடக்கும் ? என்ற ஆவலை தூண்டுகிறது கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசிவரை அந்தக் கடிதத்தை யாராவது முழுமையாக படிப்பார்களா?

      நீக்கு
  6. அடுத்து கதை காண தொடர்கிறோம்..... ...

    பதிலளிநீக்கு
  7. விறுவிறுப்பாகப் போகிறதே கதை! யார் இந்த எழுத்தாளர்? இதுதான் இவரது முதல் கதையா? அப்படித் தெரியவில்லையே! எப்போது இந்த இரகசியத்தை விடுவிப்பீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறுத்தார் பூமியாள்வார்! அவரே வந்து பதில் சொல்வாரோ என்று நான் கூட எதிர்பார்த்தேன்! கேட்க வேண்டும்.

      நீக்கு
  8. அருமையாகப் போகிறது கதை. கடிதம் பல கைகள் மாறீ ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாகப் புரிஞ்சுக்கறாங்க. யாரும் முழுசாக் கடிதத்தைப் படிக்கலை.

    பதிலளிநீக்கு
  9. எழுத்தாளர் யார்னு யோசிச்சு யோசிச்சு யோசிச்சு! இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டுபிடிக்க முடியவில்லையா? நமக்கெல்லாம் புதிய எழுத்தாளராய் இருப்பாரோ என்னவோ..

      நீக்கு
  10. கடிதத்தை யாருமே சரியா வாசிக்கலை...கம்யூனிக்கேஷன் கேப்....அதனால் தொடரும் சஸ்பென்ஸ்..

    இப்போது கடிதம் மறுநாள் அலுவலகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. முதல் நாள் கவிதா, கிருஷ்ண வேணி கடிதத்துடன் சென்றதும் தேடியிருப்பாள் தானே தன் அத்தை மகன் வருங்கால கணவனின் கடிதத்தை அவள் தேட மாட்டாளா? அப்பகுதி அவள் தேடியது தன் தோழிகளிடம் கேட்டது என்று இனி அங்கு பெண்களுக்குள் என்ன ஆச்சு என்பது வரும் என்று நினைக்கிறேன். மீதியை ராத்திரி பேசலாம் என்று கிளம்பிய கவிதா அப்புறம் தோழிகளைச் சந்திக்கவில்லையோ? அதெல்லாம் இனிதான் தெரியும் என்று தோன்றுகிறது. எழுத்தாளர் இப்படிச் சிறிய சஸ்பென்ஸ் வைப்பதில் மன்னர் தான்!

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!