வியாழன், 14 செப்டம்பர், 2023

ஹல்லோ மை டியர் ராங் நம்பர்...

 உங்களுக்கு தவறான எண் அழைப்பு..  அதாங்க ராங் நம்பர் கால் வந்தால் என்ன செய்வீர்கள்?  பெரும்பாலும் 'நீங்கள் தேடும் ஆள் நான் இல்லை' என்று சொல்லி உடனே வைத்து விடுவீர்கள்.  சில சமயம் மறுபடி மறுபடி அதே நபர் உங்களை தொந்தரவு செய்யவும் கூடும்.  சில சமயம் நம்பாமல் இருக்கவும் கூடும் (என் அனுபவங்களில் ஒன்று..  முன்னர் எழுதி இருக்கிறேன்)

சில பிஸினஸ் கால்கள் தொந்தரவு செய்யும்போது சிலர் இஸ்த்து இஸ்த்து..  அதாங்க இழுத்து இழுத்து விளையாடுவதும் உண்டு.  ஹிஹிஹி... நானும் விளையாடி இருக்கிறேன், பதிவும் போட்டு சொல்லியிருக்கிறேன்.

பையனுக்கு பெண் தேடும் அனுபவங்களை வைத்து நிறைய எழுதலாம்.  விதம் விதமான, வித்தியாசமான சுவாரஸ்யமான எரிச்சலூட்டும், அலுப்பூட்டும் கோபப்படுத்தும் சிரிக்க வைக்கும்,  என்று நவரசங்களிலும் அனுபவங்கள் உண்டு.  அதுவும் ஒவ்வொரு சாம்பாரிலும், மன்னிக்கவும் ரசத்திலும் ஒன்றல்ல ரெண்டல்ல அதற்கும் மேற்பட்ட அனுபவங்களே உண்டு.   

கீழே உள்ளது மேலே சொன்ன வகைகளில் எந்த வகை என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஒன்றரை வருடங்களாய் (கால அளவு மாற்றப்பட்டுள்ளது) பேசிப்பேசி பல இடங்களில் நேரடியாக சுய அறிமுகத்துக்கு வந்து விடுவது வழக்கமாகி இருந்தது.

"ஹலோ..."

"ஹலோ..."

"குப்புசாமிங்களா?"  (பெயர் மாற்றப்பட்டுள்ளது!)

"ஹலோ..."

"ஹலோ...  கேக்குதுங்களா?  குப்புசாமிங்களா?" 

"ஹலோ.."

"ஹலோ...  ஹலோ...  கேக்குதுங்களா?  குப்புசாமிங்களா?  ஹலோ...  ஹலோ..." 

"நீங்க யாரு?"

"கல்யாண விஷயமா பேசணும்.."

"யார் கல்யாணம்?"

"என் பெரிய பையனுக்கு அலையன்ஸ் பார்க்கறோம்.." 

"சரி..."

"அவன் இன்னார் அண்ட் சொன்னார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கம்பெனியில் வேலை பார்க்கிறான்...  மல்ட்டி அனலைசர், டீம் லீடராய் இருக்கிறான்" (வேலை மாற்றப்பட்டுள்ளது)

"சந்தோஷம்..  ஆனா..."

"அஞ்சு லட்சம் சம்பளம்...  (சம்பளம் மாற்றப்பட்டுளளது)"

"இருங்க...   உங்களுக்கு யார் இந்த நம்பர் கொடுத்தார்?"

"மேட்ரிமோனியலில் இருந்தது..."

"நான் ரியல் எஸ்டேட் செய்கிறேன்.."

"சரி.." (நீ என்ன செய்தால் என்ன..  பெண் பற்றிய விவரங்கள்தானே எங்களுக்கு வேண்டும்? - மைண்ட் வாய்ஸ்)

"எந்த மேட்ரிமோனியல்?"

"மாய் மங்களா" (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

"நான் கொடுக்கவே இல்லையே..."

"அப்படியா..  (மனதுக்குள் சங்கடம்..  பெண் பற்றி சொல்வாரா மாட்டாரா..  கொடுப்பாரா மாட்டாரா..  ஒருவேளை திருமணம் ஆகிவிட்டதோ..  அதையாவது சொல்லலாமே..)..  யு ஸீ ஸார்..  நாம் வேறெங்காவது நம் பற்றிய டீட்டெயில்ஸ் கொடுத்தால் கூட யாராவது எடுத்து பல இடங்களில் ஷேர் செய்து விடுகிறார்கள்..."

"ஆனால் நான் எங்கேயுமே கொடுக்கவே இல்லையே..."

"பொண்ணுக்கு கல்யாணம் ஆகிட்டதுங்களா..."

"பொண்ணா?  நான் நம்பரே கொடுக்கவில்லை என்கிறேன்...."

"பின்னே எப்படி..?"

"அதுதான் பார்க்கிறேன்.  ஃபோன் நம்பரை சரியா பார்த்தீர்களா?"

"பார்த்துதானே டயல் செய்தேன்.. " 

எனக்கும் சந்தேகம் இப்போதுதான் வந்தது.  உரையாடலை ஸ்பீக்கரில் போட்டு விட்டு, விவரங்களைத் தேடி, செல்லை புரட்டினேன்.  அவர் குரல் தொடர்ந்தது...)  

"அப்படியே கொடுத்தாலும் நானும் பெண் வேண்டும் என்றுதானே கொடுப்பேன்..  எனக்கெதற்கு உங்கள் மகன்?  ஆனால்..."

"அப்போ உங்களுக்கு மகள் யாரும் இல்லைன்னு...  ஆனால்?  ஆனால்ன்னு என்னவோ சொல்ல வந்தீங்களே..  சொல்லுங்க.."

"ஆனால் அதற்கும் என் மனைவி சம்மதம் வேணும்ல...   எனக்கு ஒரே ஒரு மகன்தான்..  நாலாவது படிக்கிறான்...  யு ஸீ மிஸ்டர்...  இவ்வளவு பேசியுமா இது ராங் நம்பர்னு தெரியலை?"

அதே சமயம் என் கைகள் செல்லில் அந்த நம்பரை எடுத்து விட்டிருக்க,  கடைசி இரண்டு எண்களை புரட்டி முன்பின்னாக டயலியிருக்கிறேன் என்று தெரிந்தது..  அதைக் காட்டிக்கொள்ள ரோஷமாக இருந்தது...  

"நீங்களாவது முதலிலேயே சொல்லி இருக்கலாமே..."

"எங்கே சொல்ல விட்டீங்க...  இன்னும் அட்ரஸ் மட்டும்தான் சொல்லவில்லை" - நல்லவேளை!

"ஸாரி ஸார்..  ஏதாவது நம்பரை தப்பு தப்பா கொடுத்திடறாங்க..  அவஸ்தைப் பட வேண்டியதாயிருக்கு..  வச்சுடறேன்."

வைக்கும் முன் "நீங்க சரியா பார்க்கலைன்னு சொல்லுங்க" என்று எதிர்முனை சொன்னது என் காதில் விழவில்லை!

'இப்படித்தானே நீ இஸ்த்து இஸ்த்து பேசி விளையாடியபோது அந்தந்த எதிர்முனைக்கு இருந்திருக்கும்' என்கிற எண்ணம் என் மனதில் எழவில்லை!!

நானாவது திரும்பத்திரும்ப அந்த எதிர்முனை தொந்தரவு செய்தால்தான் இப்படி செய்வேன்.  இவர் முதல் முறையிலேயே இப்படி இழுத்து விட்டார்.

சரி..  விடுங்க...   அடுத்த நம்பர் என்ன...   9.....8.....4....




==================================================================================================

மேலே இருக்கும் வியாசத்தை திடீர் என ஏற்பட்ட கதைப் பஞ்சத்தால் செவ்வாயில் போட ஒரு கதை அமைப்பில் புதிதாய் எழுதி வைத்திருந்தேன்.  இப்போது அடுத்த ஆறேழு வாரங்களுக்கு கவலை இல்லை என்பதால் டிங்கரிங் செய்ததை நீக்கி  வியாழன் பதிவாய் மாற்றி விட்டேன்!


இந்த வாரம் பொக்கிஷம் இப்படி ஆங்காங்கே துண்டு துண்டாய் வரும்!  சிறு மாற்றம்!

====================================================================================================

மூன்று நாட்களுக்கு முன் பதினொன்றாம் தேதி பாரதியாரின் நினைவு நாள் கடந்து போனது...



மேலே உள்ள அர்ஜுனன் யானை பற்றிய விவரத்துக்கு திரு காலச்சக்கரம் நரசிம்மாவும் இன்னொரு அன்பரும் திருத்தம் சொல்லி இருந்தார்கள்.  யானை கிருஷ்ணராஜ வோடேயாரால் வழங்கப்பட்டது என்றும் வேறு பெயர் என்றும்...

======================================================================================================

நியூஸ் ரூம் 
பானுமதி வெங்கடேஸ்வரன் 


செய்திகள் 14.9.2023

உலக அளவில் தேங்காய் உற்பத்தியில் இந்தியா முதலிடம்.

பாங்காக்கிலிருந்து சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 55 மலைப்பாம்பு கள் உட்பட 78 வன விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் சந்திரன், செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டத்திற்கு இந்திய வம்சாவளியினரான ஷாக்ட்ரியா தலைவராகியுள்ளார்.

அதிகரிக்கும் குடும்ப வன்முறை. தம்பதிகள் பிரிய செல்போன்கள் முக்கிய காரணமாக விளங்குகின்றன. உயர்நீதிமன்றம் வருத்தம்.

கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தபடியே கல்வி பயின்ற மாணவர்கள் முறையான வகுப்புகள் தொடங்கி பள்ளி செல்ல துவங்கிய பிறகு தாங்கள் அடிப்படையில் மிகவும் பின்தங்கி இருப்பதை உணர்ந்திருக்கிறார்கள். இதன் பயனாக பெங்களூர் டியூஷன் சென்டர்கள் நிரம்பி வழிகின்றனவாம்.

இயற்கை நீர்நிலைகளில் விநாயகர் சிலை ரைப்பை தவிர்க்க தீர்ப்பாயம் உத்தரவு.

கார்களில் பயணிப்பவர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து எம்.1 ரக கார்களில் ஆறு ஏர் பேகுகள்(air bags) கட்டாயமாக்கப்படும் எனும் திட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம்.

====================================================================================================


இறைவன் 
மனிதனைப் படைத்தானாம் 
இறைவனைப் படைத்த 
மனிதர்கள் 
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் 

உணவுக்கும் உடைக்கும் 
மாற்று கண்டுபிடித்து 
பழகியவர்கள் 
எல்லோரும் தொழும் இறைவனிலும் 
அலுப்புக்கொண்டு 
மாற்று கண்டுபிடிக்கிறார்கள்.
இறைவன் 
மனிதனைப் படைத்தான் 
மாற்றங்கள் தேடி 
அலுத்துப்போன மனிதன் 
இறைவனை
 புதிது புதிதாக 
படைக்கத்தொடங்கினான் 

==================================================================================================

எது நடுநிலை?   வேதாளக் கேள்வி...


ஆனந்த விகடனில் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர்  மதன். கார்ட்டூனிஸ்டாக நுழைந்து, எஸ். பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், விகடன் குழும இதழ்களின் இணை ஆசிரியராக உயர்ந்தவர் மதன். அந்த பத்திரிகைகளில் மதன் எழுதிய தொடர்கள், கேள்வி பதில்கள் அவரை கார்ட்டூனிஸ்டிலிருந்து 
எழுத்தாளராக உயர்த்தின.

ஆனால் ஒரு கட்டத்தில், விகடனுக்கு வெளியிலும் பணியாற்ற முனைந்தார் மதன். அன்றைக்கு விஜய் மல்லையா நிர்வாகத்தில் இருந்த விஜய் டிவியில் இவர் நிகழ்ச்சிகள் செய்தார். மேலும் சினிமா படங்களுக்கும் வசனம் எழுத ஆரம்பித்தார். இந் நிலையில் விகடன் நிர்வாகத்துக்கும் அவருக்கும் பிரச்சனை வெடிக்க, ‘golden hand shake’ என்ற முறையில் விகடனை மதன் சுமூகமாகவே பிரிந்தார். ஆனாலும் மதனின் கார்ட்டூன்கள் மற்றும் கேள்வி பதில் பகுதி மட்டும் தொடர்ந்து இடம்பெறும் என விகடன் அறிவித்திருந்தது. இந்த நிலையில், 2.5.2012 விகட னில் மதன் கேள்வி பதில்கள் பகுதியில் வெளியான ஒரு புகைப்படம் விகடனிலிருந்தே மதனை வெளியேற்றியது.  அந்தக் கேள்வியும் அதற்கு மதன் பதிலும்: 

கேள்வி: உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கி 
வைத்தது யார்?

பதில்: ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக் கொள்கிறீர்கள். காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல் தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக் கொண்டான். பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்பு ‘எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதே’ என்பதை விளக்க, குப்புறப்படுத்தான். பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் (‘பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. ‘நான் உனக்கு அடங்கிப் போகிறேன்!’ என்கிற ஓர் அர்த்தம்தான் அதற்கு உண்டு! 

மேற்கண்ட கேள்வி- பதி லுக்குப் பொருத்தமாக, இன்றைய முதல்வர் ஜெயலலிதா காலில், ஒரு அமைச்சர் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடும் படம் இடம் பெற்றிருந்தது. இந்தப் படத்துக்கு எதிர்ப்பு
தெரிவித்து விகடன் நிர்வாக இயக்குனருக்கு மதன் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், “பல ஆண்டுகளாக விகடனில் நான் எழுதி வரும் ‘ஹாய் மதன்’ பகுதியில் வரும் என் பதில்கள் பொது அறிவு பற்றியது என்பது தங்களுக்குத் தெரியும். ஆயிரக்கணக்கான விகடன் வாசகர்கள்- வரலாறு, விஞ்ஞானம், மருத்துவம், மனித இயல், விலங்கியல் சம்பந்தப்பட்ட கேள்விகளைத்தான் எனக்கு எழுதி அனுப்புகிறார்கள். அரசியலையும் சினிமாவையும் நான் அநேகமாகத் தொடுவதில்லை. 2.5.2012 இதழில் ‘காலில் விழுந்து வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthro pology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை 
ஆரம்பித்திருக்கக் கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன்.

ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் 
ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது.

ஆதிகாலத்திய சம்பிரதாயம் பற்றிய பொது அறிவுப் பதில் தான். அதுவேயன்றி, குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய பதிலே அல்ல அது! ஜெயா டி.வியில் நான் சினிமா விமர்சனம் செய்து வருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் 
வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக் கொள்ளமாட்டார்களா? என்னிடம் ஜெயா டி.வியின் தலைமை அது பற்றி விளக்கம் கேட்டால், ‘அந்த புகைப்படம் வெளி வந்ததற்கு நான் காரணமல்ல’ என்று இதன் பின்னணியை விவரமாக விளக்க வேண்டி வராதா? அந்த தர்ம சங்கடம் எனக்குத் தேவைதானா? முப்பதாண்டு காலம் விகடன் நிறுவனத்துக்காக உழைத்த எனக்கு இப்படியொரு பிரச்னையை ஏற்படுத்துவது நேர்மையான, 
நியாயமான செயல்தானா என்பதை தாங்கள் சிந்திக்க வேண்டும். முக்கியமான பிரச்சனைகள் எத்தனையோ சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டு, அவரைச் சந்தித்து, நான் செய்யாத தவறுக்கு விளக்கம் தந்து 
கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்துவது முறையா என்று சிந்திக்க வேண்டுகிறேன். …வரும் இதழிலேயே ‘புகைப் படங்கள், லே- அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது 
வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை 
வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறியிருந்தார் மதன் தனது கடிதத்தில்.

மதன் கேள்வி- விகடனின் அதிரடி பதில்… இந்தக் கடிதத்துக்கு விளக்கம் அளித்து அதன் ஆசிரியர் கொடுத்துள்ள விளக்கமான பதில் இது…மதன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடிகளுக்கும்
நிர்பந்தங்களுக்கும் அவர் 
சமீபகாலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

‘ஹாய் மதன்’ பகுதியில் வாசகர்கள் கேட்ட கேள்வியிலோ, மதன் அளித்த பதிலிலோ நேரடி வார்த்தைகளில் இடம் பெறாத- அதே சமயம், அந்தக் கேள்வி- பதிலுக்கு மேலும் வலிமையும் சுவாரஸ்யமும் சேர்க்கக்கூடிய படங்களை இதற்கு முன் ஏராளமான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் குழு சேர்த்துள்ளது. அப்போதெல்லாம், எந்தக் காரணங்களைக் காட்டியும் ஒரு போதும் எந்த ஆட்சேபமும் அவர் தெரிவித்ததே இல்லை.

அதேபோல், ‘இது பொது அறிவுப் பகுதி மட்டுமே’ என்று இப்போது மதன் குறிப்பிடும் ‘ஹாய் மதன்’ பகுதியில் அரசியல் மற்றும் சினிமா பற்றிய நேரடியான, காரசாரமான பதில்களை அவர் தொடர்ந்து இதழ் தவறாமல் அளித்திருப்பதை வாசகர்களும் நன்கு அறிவார்கள். இப்போது திடீரெனத் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்வதற்கான காரணம், அவருடைய கடிதத்திலேயே உள்ளது. நடுநிலை இல்லை… இதையெல்லாம் பார்க்கும்போது… தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், ‘ஹாய் மதன்’ பகுதியை மட்டும் அல்ல… கார்ட்டூன்களையும் கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது.

குறிப்பிட்ட ஒரு தரப்பைப்பற்றிய நியாயமான விமர்சனங்களையோ, புகைப்படங்களையோ தவிர்த்துவிட்டு… செய்திகளையும் கருத்துக்களையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்றே விகடன் கருதுகிறது. எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி- பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று 
கூறினார் விகடன் ஆசிரியர்.

இதன் மூலம் விகடனில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த மதன், முற்றாக நீக்கப்பட்டார்.

நன்றி – ஆனந்தன் பி. ஆனந்தன், முகநூல்

இணையத்தில் இருந்து எடுத்தது  நன்றி R கந்தசாமி ஸார்.

================================================================================================

இப்படி கட்டத்துக்குள் போட்டால் ஜோக் என்றுதான் அர்த்தம்.

டூ ஸ்மார்ட்...  ஸோ ச்வீட்...

"முன்னால எல்லாம் ரயில்வே ஸ்டேஷன் போனால் கூலிகள் என்று ஒரு இனத்தைப் பார்த்திருப்பீர்கள்...    இப்போது இல்லை...  ஏனென்று யோசித்துப் பாருங்கள்...  முதல் காரணம் பெட்டிகளில் சக்கரம் வைத்து வந்ததும், பின்னர் தள்ளு வண்டிகள் வந்து விட்டதும்தான் காரணம்.."  இப்படி சமீபத்தில் யாரோ பேசக் கேட்டேன்.  விஞானக் கண்டுபிடிப்புகள் எப்படி ஒரு சாரார் பிழைப்பை காலி செய்கின்றன பாருங்கள் என்பது அவர் பேச்சின் சாராம்சம்.

என்ன அர்த்தமோ...  என்ன அனர்த்தமோ....  நேக்கு ஒண்ணும் புரியலை கேட்டேளா?

75 கருத்துகள்:

  1. செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க
    செய்யாமை யானும் கெடும்..

    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  2. ராங் நம்பரை சேமித்துக் கொண்டீர்களா? அடுத்த முறை ஹலோ மை டியர் ராங் நம்பர் என்று கடலை போடலாம்.

    //விநாயகர் சிலை இரைப்பை// கரைப்பு?

    கவிதையை பற்றி : ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் ஓரெழுத்து தான் வித்தியாசம். இந்த சனாதன தர்க்கத்திற்கு இடையில் புது கரடியை புகுத்தாதீர்கள்.

    பொக்கிஷங்கள் பரவா இல்லை ரகம்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் நீளமாய் போன் பேசவே எனக்கு பிடிக்காது JKC சார்..  இப்போல்லாம் போனே கடுப்பா இருக்கு!

      நீங்கள் சொன்னதும் இரைப்பை கரைப்பாய் மாற்றி விட்டு கிளம்பி விட்டேன்!  மறுபடி இப்போதுதான் நேரம் கிடைத்தது!

      கவிதை.  புதுக்கரடியை நான்தான் புகுத்த வேண்டுமா என்ன..  அவரவர் நடப்புகளை மறைக்க புதுப்புது பிரச்சனைகளாக கிளப்பிக் கொண்டே இருக்கிறார்கள்!

      நீக்கு
  3. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. ஆக ஒரே மேட்டரை செவ்வாய்க்கும் உபயோகித்தாயிற்று:
    வியாழனுக்கும் உபயோகித்தாயிற்று.
    கம்முனு இருக்கறது தானே! நான் சொல்ல நினைத்ததை நீங்களே சொல்லி விட்டால் எப்படி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லையே...   செவ்வாயில் உபயோகிக்க எடுத்து வைத்து, அப்புறம் இங்கேயே போட்டு விட்டேன் என்றுதானே சொல்லியிருக்கிறேன்?

      நீக்கு
  5. உ ராஜாஜி ஜோக் அட்டகாசம்.
    இவர் ஜோக்குகள் அந்நாளில் பிரசித்தம்.

    பதிலளிநீக்கு
  6. அது கேள்வி இல்லேனா இந்தக் கேள்விக்காவது பதில் சொல்லுங்க:

    அந்த ஜோக்கை எழுதியவரும், படம் போட்டவரும் ஒருவரேவா?

    பதிலளிநீக்கு
  7. ஏன் இந்த ஓரவஞ்சனை?

    'ஸ்'க்கு 'ச்' போட்டால் இரண்டுக்கும் போடணும்.

    அது என்ன 'டூ.ஸ்மார்ட்.. ஸோ ச்வீட்'?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னர் ​ச்வீட் என்று சொல்லும் மாமி ஒருவர் பிரபலம்!

      நீக்கு
  8. என்னா? ஸ் க்கு ச் போடணுமா?

    இதென்ன மூன்றாம் சுழியா? எங்கள் பிளாக் சார்!!

    பதிலளிநீக்கு
  9. //கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தபடியே கல்வி பயின்ற ..

    மெள்ள உணர்ந்து வருகிறார்கள். வருகிறோம். இது ஒரு உலகளவிலான capability crisisல் வந்து நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (அச்சத்துடன்).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதன் பின்விளைவுகளை இன்னும் நாம் (உலகம்) முழுமையாக உணரத் தொடங்கவில்லை என்று சொல்ல வருகிறீர்களா? சில சுலப சாத்தியங்களை அறிமுகப்படுத்திய காலம் கூட!

      நீக்கு
  10. பத்தாம் வகுப்பிலிருந்து கல்லூரி வரை உலகலவினான மாணவர் கூட்டம்.. கொஞ்சம் கலக்கமாகவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் பாஸ்.. படிக்கத் தேவை இல்லை பரீட்சை எழுத வேண்டாம் நிலை தொடங்கிய காலம்.

      நீக்கு
  11. இந்திய (பாரதம்) அளவில் தேங்காய் உற்பத்தியில்
    ------------ மாநிலம் முதலிடம் என்று செய்தி போட்டால் தானே ஒன்றிய காலத்தில் முக்கியத்வம் பெறும்?

    பதிலளிநீக்கு
  12. வாரிசுகள் தகுதியில்லாமல் பொறுப்புக்கு வரும்போதோ இல்லை, தகுதி வாய்ந்தவரைக் கடுப்படிக்கும் நிலைக்கு வரும்போதோ இல்லை, தான் உரிமையாளன் என்ற அகந்தையைக் காண்பிக்கும்போதோ வரும் பிரச்சனைகள்தாம் மதனுக்கு வந்தன. ஆசிரியர் பாலசுப்ரமணியத்தால் மகனை விட்டுக்கொடுக்க முடியவில்லை. விளைவு, ஓரு நல்ல பத்திரிகை முரசொலியாக மாறிப்போனது மட்டுமல்லாமல், பெருமை இழந்து நிற்கிறது.

    அரசியலிலும் இதற்கு உதாரணங்கள் கண் முன் உண்டு. நான் பஹ்ரைனில் வேலை பார்த்த கம்பெனியிலும் இப்படி நடந்து கம்பெனி நொடித்துப்போகும் நிலைக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பிரச்னை ப்ரபஞ்சனுக்கு வேறு வகையில் குமுதத்தில் வந்தது!

      நீக்கு
  13. வாரிசுகள் தகுதியில்லாமல் பொறுப்புக்கு வரும்போதோ இல்லை, தகுதி வாய்ந்தவரைக் கடுப்படிக்கும் நிலைக்கு வரும்போதோ இல்லை, தான் உரிமையாளன் என்ற அகந்தையைக் காண்பிக்கும்போதோ வரும் பிரச்சனைகள்தாம் மதனுக்கு வந்தன. ஆசிரியர் பாலசுப்ரமணியத்தால் மகனை விட்டுக்கொடுக்க முடியவில்லை. விளைவு, ஓரு நல்ல பத்திரிகை முரசொலியாக மாறிப்போனது மட்டுமல்லாமல், பெருமை இழந்து நிற்கிறது.

    அரசியலிலும் இதற்கு உதாரணங்கள் கண் முன் உண்டு. நான் பஹ்ரைனில் வேலை பார்த்த கம்பெனியிலும் இப்படி நடந்து கம்பெனி நொடித்துப்போகும் நிலைக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத்தாளர்களை / திறமையானவர்களை ஒரு பத்திரிகையோடு கட்டிப்போட முடியுமா? நியாயமா?

      நீக்கு
    2. அந்தப் பத்திரிகை வளர்த்து, பெரிய பொசிஷன், நல்ல சம்பளம் மரியாதை கொடுத்திருந்தால், கட்டிப்போடத்தான் நினைக்கும். தந்தில வேலை பார்த்துக்கிட்டு, தினமலருக்கு எக்ஸ்க்ளூஸிவ் செய்திகளை பாஸ் பண்ணமுடியுமா?

      நீக்கு
    3. நிருபர் வேலை போன்றவற்றை இங்கு உள்ள முடியாது. ஆனால் செய்திகளை வெவ்வேறு தளங்களுக்கு தருபவர்களுக்கு இருக்கிறார்கள்.

      நீக்கு
    4. சொல்ல முடியாது!!! உள்ள முடியாது இல்லை!

      நீக்கு
  14. நமஸ்காரம்... ரொம்ப நல்லது. நீங்க வாட்சப்புக்கு மேட்ரிமோனியல் நம்பர் அல்லது பையன் விவரங்களை அனுப்புங்க. நான் உடனே ரெஸ்பான்ட் பண்ணறேன் என்பதுதான் என் ஸ்டான்டர்ட் பதில். வெகு அபூர்வமாக, அந்தப் பக்கம் உள்ளவர் சென்சிபிள் என்று தெரிந்தால் நன்கு உரையாடுவேன். சரிவராது என்று எதிர்மறையாக்க் கூறாமல் காரணங்களோடு, அவர் அடுத்து என்ன செய்யலாம் என்றும் சொல்லுவேன்.

    கொடுக்கும் தகவல்கள் சந்தேகமாக இருந்தாலோ தெளிவில்லை என்றாலோ கூப்பிட்டுக் கேட்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதம் விதமான அணுகுமுறைகள் நெல்லை..  சிலருக்கு உடனே வெற்றி கிடைக்கிறது.  சிலருக்கு தள்ளிப் போகிறது.  சிலருக்கு மிகவும்...

      நீக்கு
  15. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஒரு சாரார் தொழிலைப் போக்கடிக்கின்றன என்பது உண்மைதான். நாம போர்ட்டர்களிடம் எவ்வளவு அடாவடியைப் பார்த்திருப்கோம். இதுபோலவே ஆட்டோ கார் டிரைவர்களின் அராஜகங்கள் ஊஊபர் ஓலா போன்றவற்றால் ஒடுங்க ஆரம்பித்தன. தொழில் போனவர்கள் வேறு ஒரு தொழிலுக்குத் தன்னை மாற்றிக்கொள்வர். அடாவடிக்கார்ர்கள், புதிய தொழில், மெதடிலும் தங்கள் கோர முகத்தைக் காண்பிப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது எல்லாவற்றுக்குமே பொருந்தும் நிலை.  இப்போது மால்களிலும் மற்ற தியேட்டர்களிலும் நடைபெறும் கொள்ளைகள் சீக்கிரம் முடிவுக்கு வரும் நாள் வரட்டும்!

      நீக்கு
  16. மதன் பற்றிய செய்தி அறியாதது.
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  17. ஆவின் பால் டிஸ்டிரிபியூட்டர்கள் 86களில் ஆடிய ஆட்டங்கள் நினைவுக்கு வருகிறது.

    அதேசமயம் மிக அருமையான, ஏழ்மையிலும் செம்மையான பெருங்களத்தூர் போஸ்ட்மேன் என் நினைவுக்கு வருகிறார். இப்படிப்பட்ட நல்லுள்ளங்கள் காலமாற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடாதே என்றும் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போஸ்ட்மேன் நிகழ்வு எனக்கு நினைவுக்கு வரமாட்டேன் என்கிறதே....

      நீக்கு
  18. அலைபேசி உரையாடல் சிற(ரி)ப்பு

    எனது அனுபவம் ஒன்றை பதிவிறக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    கவிதை அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள அனுபவத்துக்கும் காத்திருக்கிறேன். நன்றி ஜி.

      நீக்கு
  19. தவறான எண் அழைப்பிற்கு, ஒரே ஒரு குறள் கேட்பேன்...!

    பதிலளிநீக்கு
  20. சந்தேகம் பிறந்து விட்டால்
    சத்தியமும் பலிப்பதில்லை...

    சத்தியத்தைக் காப்பவரும்
    சாட்சி சொல்ல வருவதில்லை...

    வழக்கும் முடியவில்லை
    மனிதரின் தீர்ப்பும் இல்லை...

    மனிதனை மறந்து விட்டு
    வாழ்பவன் இறைவன் இல்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கிறான் என்று சிலரும், இல்லை என்று சிலரும் இரண்டிலும் பாதிப்பாதி நம்பிக்கையாய் சிலரும் இருக்கிறார்கள்!

      நீக்கு
  21. மதனுடைய பிரச்னைகள் இப்போது எதற்கு?..

    பதிலளிநீக்கு
  22. கவியின் பேரன்னா லிப்ஸ்டிக் வேற போட்டுக்கணுமா !

    பதிலளிநீக்கு
  23. உ.ராஜாஜி ஜி! எங்கேய்யா ஆளயே காணோம்...

    பதிலளிநீக்கு
  24. பொக்கிஷத்தில் முதலில் உள்ளதைப் படிக்கவே முடியலை. மற்றவை பரவாயில்லை ரகம். தொலைபேசி உரையாட்ல் பற்றி உங்கள் கட்டுரையில் நம்மவர் இப்படித்தான் எல்லா விபரங்களையும் சேகரித்துக் கொண்டே விடுவார். நான் தொலைபேசி எண்ணைப் பார்த்த உடனேயோ அல்லது பேச ஆரம்பிச்சதுமே புரிஞ்சுடும். வைச்சுடுவேன். என்றாலும் இதை வைத்துப் பல கதைகள் எழுதலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'லேட்டாயிதுச்சுன்னா ஏன்னு ஒரு கேள்வியா'ன்னு அவன் கேட்க, 'ஏன் என்பது கேள்வி இல்லையா' என்பது அவள் பதில்!

      நீக்கு
  25. மதன் பற்றி வந்தக் குறிப்பிட்ட விகடனைப் படித்த நினைவு உள்ளது. ஆனந்த விகடனில் சம்பளமும் நிறையக் கிடைக்கும். இதே போல் வெளியேற்றமும் அடிக்கடி நடக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விகடனில் சம்பளம் அதிகம் என்பதும் ஒரு செய்திதான்!

      நீக்கு
  26. அலைபேசி ...ஹா....ஹா.

    ஜோக்ஸ் அனைத்தும் ரசனை.

    பதிலளிநீக்கு
  27. அர்த்தம் அனர்த்தம் :: The difference of implied meaning and literary meaning. ex: அவன் ஒரு அறுவை. படம் அவன் ஒரு கத்தியுடன் நிற்பது.

    Jayakumar​

    பதிலளிநீக்கு
  28. ஹலோ மை டியர் ராங்க் நம்பர் !! ஆ எனக்கும் ரெண்டு மூன்று வந்து அதுல ஒன்று பதிவு எழுதியிருந்தேன்...

    இன்னொன்றும் இருக்கு...உங்க மேட்டர் என்னன்னு பார்த்து வரேன்..

    ஹாஹாஹா பல கால்கள் இந்த ஹலோக்களிலேயே முடிஞ்சுருது கேக்குதா கேக்குதான்னு சொல்லியே....ஹையோ அதை ஏன் கேக்கறீங்க துலயும் என் காது வேற...!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  29. வைக்கும் முன் "நீங்க சரியா பார்க்கலைன்னு சொல்லுங்க" என்று எதிர்முனை சொன்னது என் காதில் விழவில்லை!//

    ஹாஹாஹாஹா நாமளும் முன்ன விளையாடியிருக்கோம்ல!!!! ஹாஹாஹா எப்படி எல்லாமோ டிட் ஃபார் டாட்...ஹாஹாஹா

    அடுத்த முறை நம்பர் பார்த்து அடிங்க ஸ்ரீராம்....நானும் இப்படி மாட்டிக் கொண்டது உண்டு.

    நல்ல காலம் நீங்க மாமிகள் யாரிடமும் சிக்கலை!!!

    அழகா எழுதியிருக்கீங்க ஸ்ரீராம். பல இடங்களில் ரசித்தேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமிகளில் ஸ்ட்ரிக்ட்டான மாமியும் உண்டு, வழிசல் மாமியும் உண்டு! பேசியிருக்கிறேன்! எப்ப்பவுமே நம்பர் பார்த்து அடிப்பதுதான்... எப்பவாவது இப்படி..!

      நீக்கு
  30. டிங்கரிங்க் கதை ஜோக்... அனுபவங்களும் நினைவுக்கு வந்திருக்கும் தானே ஸ்ரீராம்? .அதாவது நேரடியா இல்லைனாலும் வேற ஏதாச்சும் காரணம் சொல்லி...மழுப்பி இல்லைனா ஒன்னுமே சொல்லாம ...என்னவோ..ம்ம்ம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்ல வர்றது எனக்குப் புரியலை. ஆனால் நான் சொல்லி இருப்பதை தவறா புரிந்து கொண்டிருக்கிறீர்களா என்று நினைக்கிறேன்! மேலே சொல்லியுள்ள டெலிபோன் உரையாடலைதான் டிங்கரிங் செய்து கதையாக்கி இருந்தேன். செவ்வாய்க்கு ஆறேழு வாரத்துக்கு மேட்டர் கிடைத்ததால் செய்த டிங்கரிங்குகளை நீக்கி வியாழனிலேயே இதோ இன்றே போடு விட்டேன் என்று சொல்ல முயன்றிருக்கிறேன்!

      நீக்கு
  31. இறைவன்
    மனிதனைப் படைத்தானாம்
    இறைவனைப் படைத்த
    மனிதர்கள்
    சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் //

    ஸ்ரீராம்!!!!! ரொம்ப ரொம்ப ரொம்ப ரசித்தேன்!!

    தொடரும் வலப்பக்க வரிகள் க்ளாஸ்! ரொம்பப் பிடித்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  32. மதன் விஷயம் முன்பு எங்கோ எதிலோ வாசித்த நினைவு.....

    உ ராஜாஜி ஜோக்....செம

    மற்ற பொக்கிஷங்களும் ஓகே

    ஓட்டம்....வேலைகள் என்பதால்

    கீதா

    பதிலளிநீக்கு
  33. ராங் நம்பர் கால் எடுப்பதே இல்லை.
    தெரியாத நம்பரை எடுப்பது இல்லை.
    அப்படி தெரியாமல் எடுத்து விட்டாலும் எதிர்பக்கம் குரலை கேட்டவுடன் வைத்து விடுவேன்.
    நீங்கள் நிறைய நேரம் உரையாடி விட்டீர்களே!
    நீங்கள் நினைத்த மாதிரி கதை ஆக்கலாம் தான்.

    //மாற்றங்கள் தேடி
    அலுத்துப்போன மனிதன்
    இறைவனை
    புதிது புதிதாக
    படைக்கத்தொடங்கினான் //

    புதிது புதிதாக படைத்த கடவுளால் மன நிறைவு கிடைத்தால் சரி.

    பொக்கிஷபகிர்வுகள் அந்த அந்த பகிர்வுகளுக்கு பொருத்தமாக இடம் பெற்று இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா... ராங் கால் போட்டது நாமும்தான். அவர் அல்ல! தவறாய் டயல் செய்தது நான்! வியாழனுக்கு எழுதி வைத்திருந்ததை செவ்வாய்க்கு கதை இல்லை என்றவுடன் கதை மாதிரி வடிவத்தில் மாற்றி வைத்திருந்தேன். செவ்வாய்க்கு இப்போது கதை இருப்பதால் கதை வடிவத்தை பழையபடி மாற்றி வியாழனிலேயே வெளியிட்டுவிட்டேன்.

      நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  34. இந்த ரோங் நம்பர் உரையாடல் உண்மையிலேயே நடந்ததோ? இல்லை ஜோக்குக்காக எழுதியிருக்கிறீங்களோ? ஏனெனில் நம்ப முடியவில்லை, ஒரு வசனத்தோடேயே விளங்கியிருக்குமே அவருக்கு, இவ்ளோ தூரம் நீட்டியிருக்கத் தேவையில்லை என்றே நினைக்க தோணுது, ஏனெனில் பேச வந்த விடயம் ஒரு பெறிய பயபக்தியோடு பேசப்பட வேண்டிய திருமண விசயம் எல்லோ...

    பல ரோங் கோல் களாலால்தான் எவ்ளோ குடும்பங்களே அழிஞ்சிருப்பது பல ஊடக வாயிலாகவும் கேள்விப்படுறேன் இந்தியாவில் நடப்பதுதான் சொல்கிறேன்.

    கனடாவில், பல வருடங்களுக்கு முன்பு எனக்கும் ஒரு ரோங் கோல் வந்துது மாமி வீட்டு லாண்ட் லைனில், தெரியாமல் எடுத்து பேசினால், என்ன என்னை இப்படி மறந்திட்டீங்களே எனக் கேட்கிறார் ஒரு ஆண், எனக்கு பயங்கர ஜோக்காக இருந்துது... திரும்ப திரும்ப பூத்தில் இருந்து காசு போட்டுக் கூப்பிட்டார்... பின்பு போயிட்டார்...

    என் பெயர் என்ன எனக் கேட்டேன், அதற்கு சமாளிச்சார்ர்... உங்கள் பெயரை நான் மறப்பேனா, மறக்கக்கூடிய பெயரா .. இப்படி எல்லாம் ஹையோ ஆண்டவா... ஏன் தான் மக்கள் இப்படி இருக்கிறார்களோ..

    அது எங்கட மாமா ஏதோ பேப்பர் அட் கொடுத்திருந்தாராம் அப்போ நம்பர் போட்டிருக்கிறார், கஸ்டகாலம் அப்போ நாங்கள் அங்கு போயிருந்தபோது, நான் ரிசீவ் பண்ணிட்டேன், இல்ல கணவரின் சிஸ்டர் ரிசீவ் பண்ணினா, தமிழில் கதைத்ததால் என்னைத்தான் ஆரோ உறவினர் தேடுகிறார்கள்போலும் என நினைச்சு என்னிடம் தந்தா ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  35. இறைவன் மனிதன் பற்றிய கவிதை??.. நன்றாகத்தான் இருகிறது...

    கட்டம் போட்ட ஜோக் இல், வாணி வரைந்த பெண்ணின் அழகு சாமுத்திரிகா லட்சணப்படி சூப்ப்ராக இருக்கிறது... ஒரு பெண்ணால்தான் ஒரு பெண்ணை இப்படி அழகாக வரைய முடியுமோ:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  36. //விஞானக் கண்டுபிடிப்புகள் எப்படி ஒரு சாரார் பிழைப்பை காலி செய்கின்றன பாருங்கள் என்பது அவர் பேச்சின் சாராம்சம்.///

    உண்மைதான், ஆனாலும் கூலிகள் என்போர் எப்பவும் கூலிகளாக இருக்க முடியாதுதானே, விஞ்ஞான வளர்ச்சியால அவர்களின் பிள்ளைகள் முன்னேறி இருக்கலாம், இப்போ பிள்ளைகள் படிச்சதும், பெற்றோரை இப்படி வேலைகளுக்குப் போக அனுமதிப்பதில்லை...

    ஊருக்குப் போனபோது சில சம்பவம் பார்த்தேன், அதை இங்கே சொல்வது சரியில்லை... உண்மை என்னவெனில், இப்போ எல்லோரும் சரிசமன் எனும் நிலைக்கு வந்து கொண்டிருக்கிறோம்.. அது நல்ல விசயம் தானே.

    கொமெடி வீடியோக்கள்தான் யூ ரியூப்பில் ஒரே பார்ப்பேன்/போம்... 2 நாட்களுக்கு முன்புதான் ஒரு விவேக் கொமெடி..

    சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வருவார் விவேக், அப்போ அவரின் கேள் பிரெண்ட்..., சாப்பிட்டு விட்டு எதையோ நிலத்தில் எறிவார்.. பேப்பரை.
    அப்போ விவேக் கத்துவார்... சிங்கப்பூரில் இப்படி இல்லை, இங்கே எதுக்கு கீழே போடுகிறாய் என, அதற்கு அப்பெண் சொல்வார், இதனைப் பொறுக்கி எடை போட்டு விற்று பல குடும்பங்கள் உயிர் வாழுது தெரியுமோ என ஹா ஹா ஹா.

    இம்முறை இலங்கை போனபோது, கச்சான் வாங்கிச் சாப்பிட்டு சாப்பிட்டு கோதுகளை நிலத்தில் போட்டேன், கை கூசியது இருப்பினும் அப்படி நிலத்தில் வீசி வீசிச் சாப்பிடுவது, இளமைக்காலத்தையும், ஒரு சுகந்திரமாக இருப்பதைப்போலவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!