புதன், 10 ஜூலை, 2024

அடுத்த ஜன்மத்திலும் என்னவரே என் கணவராக வாய்க்கவேண்டும் !

 

கே. சக்ரபாணி  சென்னை 28: 

ஒரு தொகுதியில்  நிற்கும் வேட்பாளர் ஒருவர் ஒரு கோவிலுக்குச் சென்று,  தான் தேர்தலில் ஜெயிக்கவேண்டும்  என வேண்டிக்கொள்கிறார்  அதே கோவிலுக்குச் சென்று அதே தெய்வத்திடம்  அவரை எதிர்த்து. போட்டியிடுபவரும்,  தான் ஜெயிக்கவேண்டும் என வேண்டுகிறார். 

கடவுள் என்ன செய்வார்? 

# இரண்டு பேரும் வெவ்வேறு முறையில் " இது எனது வெற்றி " என்று கொண்டாடும்படியாக வாக்கு எண்ணிக்கையை சரி செய்து விடுவார். பா ஜ க காங். இரண்டு கட்சிகளும் மகிழ்ச்சி அடையும்படி தேர்தல் முடிவுகள் வந்ததை கவனிக்கவில்லையா ?

& முதலில் வந்து வேண்டிக்கொண்ட  நல்லவருக்கு அவர் வேண்டியபடி அமைய வழி செய்வார்! அதாவது, முதலில் வந்து வேண்டியவர் நல்லவர் இல்லை என்றால், இரண்டாவதாக  வந்தவர் வெற்றி பெறுவார். ஏனென்றால் அவர்தானே முதலில் வந்த நல்லவர்! 

போலீஸ்காரர்கள் ஸ்ட்ரைக் செய்தால்  மாமூல் வாழ்க்கை பாதிக்கப்படுமா?

# மாமூல் அற்ற வாழ்க்கை சிலரை பாதிக்கும்; பலரை மகிழ்விக்கும்.

& மாமூல் வாழ்க்கை தொடரவேண்டும் என்று நினைப்பவர்கள், ஸ்டிரைக் செய்யமாட்டார்கள்! 

யாரேனும் திருமணநாள் அன்று அடுத்த ஜென்மத்திலும் இவரே மனைவியாக வரவேண்டும் என்றோ இவரே கணவராக வரவேண்டும் என்றோ வேண்டிக்கொண்டிருப்பார்களா?

# அப்படி விரும்பும் அளவுக்கு பரஸ்பரம் அன்பு செய்வோர்கள் இருக்க இயலாது என்று ஏன்‌ நினைக்கிறீர்கள் ?

& ஒரு கதை ஞாபகம் வருகிறது! 

பூமியில் உள்ள மனைவிகள் பெரும்பாலோர், கடுமையான விரதங்கள் கடைப்பிடித்து, ' அடுத்த ஜன்மத்திலும் இந்த ஜன்மத்தில் உள்ள கணவரே மீண்டும் கணவராக வாய்க்கவேண்டும் ' என்று வேண்டிக்கொண்டார்களாம். கணவர்களோ - கடவுளிடம், 'வேண்டாமையா இந்த இம்சை' என்று   வேண்டிக்கொண்டார்களாம்! 

பாவ புண்ணியங்களை கணக்கு வைத்துக்கொள்ளும் சித்ரகுப்தனும், மறு பிறவியை தீர்மானிக்கும் குப்தசித்திரனும்(!) பிரம்மனிடம் சென்று, 'இந்த சிக்கலை எப்படித் தீர்ப்பது?' என்று கேட்டார்களாம்! 

அதற்கு பிரம்மா - ஒரு வழி சொன்னாராம். 

அதன்படி, குப்தசித்திரன் -  விரதமிருந்து வேண்டிக்கொண்ட ஒவ்வொரு மனைவியின் கனவிலும் தோன்றி, ' உங்கள் வேண்டுதலுக்கு பிரம்மா ஒப்புக்கொண்டுவிட்டார்; நீங்கள் வேண்டிக்கொண்டபடி இந்த ஜன்மத்தில் உங்கள் கணவராக இருப்பவரே, அடுத்த ஜன்மத்திலும் உங்கள் கணவராக இருப்பார். ஆனால் உங்கள் கணவர் வேண்டிக்கொண்டது ஒன்றும் உள்ளது. அது, 'அடுத்த ஜன்மத்திலும், எனக்கு இந்த ஜன்மத்து அம்மாவே, அம்மாவாக வாய்க்கவேண்டும்' என்பது. அதன்படி, உங்களுக்கு இப்போது இருக்கும் மாமியாரே அடுத்த ஜன்மத்திலும் மாமியாராக இருப்பார்' என்று கூறினார். 

அவ்வளவுதான்! மறுநாள் மனைவிகள் எல்லோரும் கோவிலுக்குப் போய் கடவுளிடம், ' நாங்கள் கேட்ட வரம் எல்லாவற்றையும் - எச்சை தொட்டு அழிச்சுடுங்க! ' என்று சொல்லி, ஓடிவிட்டனராம்! 

நெல்லைத்தமிழன் : 

மதச்சார்பின்மை என்பதற்கு உண்மையான அர்த்தம் என்ன?    

# தெரிந்தும் கேட்கப் படும் வினா ??  எந்த ஒரு மதத்துக்கும் சார்ந்திராத‌ நிலை.

& சில தலைவர்களுக்கு - மதச்சார்பின்மை என்றால், மாற்று மதத்தினரைக் கொண்டாடுதல்; தன் மதத்தினரை கேலி செய்தல்! 

அடுக்குமாடிக் குடியிருப்புகளால் உண்டாகும் பெரிய தீமை என்ன? பெரிய நன்மை என்ன?   

# நன்மை‌ : கூடி வாழ்வது தரும் பாதுகாப்பு. சுற்றுச் சுவருக்குள்ளே காவலர்கள் கண்காணிப்பில் குழந்தைகள்‌ விளையாடுவதிலுள்ள பாதுகாப்பு, மின்சார, நீர் வசதி பராமரிப்புக்குத் தொழில் தெரிந்தோர் வழியான சேவை இத்யாதி.

தீமை. கூடி வாழும் மனப்பக்குவமில்லாதவர்களின் சகவாசம். நிர்வாக ஊழல்.‌

உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்பது உண்மைதான், ஆனால் புறாக்கள் பால்கனியில் உட்கார்ந்து அந்த இடத்தை தினமும் அசுத்தம் செய்வதைப் பார்த்தால் எரிச்சலா இருக்கு. என்ன செய்யலாம்?

# புறாக்கள் நுழையவியலாத கயிற்று வலைகளை நாங்கள் பயன் படுத்துகிறோம்.‌

தோல்வி நிச்சயம் என்று தெரிந்தும் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயேச்சைகள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?

# அவர்களுக்கு பெரிய கட்சிகள் " ஓட்டு‌ பிரிக்க‌ தட்சிணை " தருவதுண்டு‌ என்கிறார்கள்.‌

= = = = = = = = =

சென்ற புதன்கிழமை  நான் கேட்ட நான்கு கேள்விகளுக்கும் ஒருவர் கூட பதில் எழுதவில்லை! 

அதனால் உங்க பேச்சு இந்த வாரம் "கா" 

= = = = = = = = = = = 

KGG பக்கம். 

ஒரு வழியாக எழுத்துத் தேர்வு முடித்த பின், வீடு வந்து சேர்ந்தேன். 

வீட்டில் யாரும் இல்லை.  அண்ணன் அலுவலகம் சென்றுவிட்டார்; அண்ணியும், தங்கையும் பள்ளிக்கூடம் சென்றுவிட்டனர் ! ( ஒருவர் ஆசிரியை; மற்றவர் மாணவி!) 

எழுத்துத் தேர்வு பற்றி அப்பாவுக்கு ஒரு போஸ்ட் கார்டில் விலாவாரியாக எழுதி போஸ்ட் செய்தேன். 

சென்னையில், நான் அடைந்த முதல் அதிர்ச்சி - மக்கள், மற்றவர்கள் யாருக்குமே மரியாதை(!) கொடுத்து பேசுவதில்லை! 

" நீ என்னப்பா சொல்றே! " 

" நீ அங்கே போய் வந்தியா " 

பக்கத்து போர்சனில் குடியிருந்த ஒரு தம்பதியினரில் மனைவி, கணவரிடம், " சாப்பிட வரியா ?" என்று கேட்டார். 

நாகையில் இருந்தவரை, மற்றவர்களை, மரியாதையாக, " ஐயா " என்று கூப்பிட்டுப் பழக்கம். 

சென்னையில் யாரையாவது " ஐயா" என்று சொல்லிவிட்டால் - அவர்களுக்கு பயங்கர கோபம் வந்துவிடும்! 

" ஐயா , பியா, வாய்யா போய்யாவென்றெல்லாம் மரியாதை இல்லாமல் பேசாதே " என்பார்கள்!

" ஏம்பா அப்படி சொல்றே? " என்று கேட்டால் - " உம் அப்படித்தான் மரியாதையா பேசவேண்டும் " என்பார்கள்! 

"கடவுளே! என்னை இந்த சென்னை மரியாதை வழிக்கு தயார் செய்து வை அப்பா " என்று வேண்டிக்கொண்டேன். 

கடவுள் என்னிடம் " சரி போ - எல்லாத்தையும் பாத்துக்கறேன் - நீ பேஜார் படாம, ஜகா வாங்காம  போ" என்றார். சென்னைக் கடவுள் போலிருக்கு! 

வந்து சேர்ந்த சில நாட்களில், சென்னையில் நான் கண்ட மற்றுமொரு விஷயம், சென்னையில் பிறந்து வளர்ந்த எல்லோருமே மிக வேகமாக பேசுவார்கள்! அவர்கள் பேசுவது என்ன என்று கண்டுபிடிப்பதே மிகவும் கஷ்டமாக இருக்கும்! 

கிராமப் பகுதிகளிலும், நாகை போன்ற ஊர்களிலும் வளர்ந்த எனக்கு வேகமாக பேசுபவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள சிறிது நேரம் ஆகும். 

கொஞ்சம் யோசனை செய்தாலும், எதிரில் உள்ளவர், " ஐயே - இன்னா இம்புட்டு ரோசனை செய்யறே !" என்று கேட்பார்கள்! 

***** 

என் ஊரில் முடி வெட்டிக்கொள்ளச் சென்றால், ஆஸ்தான கடை - சம்முவம் - என்னைக் கேட்காமலேயே முடி வெட்டிவிடுவார். அதோடு பாட்டும் பாடுவார். " சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு சும்மா சும்மா கூவுது!" 

சிறுவயதில் முடி வெட்டிக்கொள்ள இரண்டு அணா. (பன்னிரெண்டு பைசா) 

சில வருடங்கள் கழித்து அவர் பதினைந்து, இருபது என்றெல்லாம் மாற்றி கடைசியில் இருபத்தைந்து பைசாவில் வந்து நின்றார். 

அப்புறம் பாலிடெக்னிக் நாட்களில் ஐம்பது பைசா (ஒரு ரூபாய்?) கொடுத்த நினைவு!  

சென்னையில் முதன்முதலாக புரசைவாக்கத்தில் - மதார் ஷா - பக்கத்தில் உள்ள சலூனுக்கு முடி வெட்டிக்கொள்ளச்  சென்றேன். 

அந்த அனுபவம் - அடுத்த வாரம்! 

= = = = = = = =

56 கருத்துகள்:

  1. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண்ணென்ப வாழும் உயிர்க்கு..

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம்
    வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. பாவம் அந்த அக்கா... ஏன் இவ்ளோ பதற்றமா ஓடி வர்றாங்க?...


    இதே மருமக மறு ஜென்மத்துலயும் வேணும் ன்னு முண்டகக்கண்ணி அம்மன் கோயில் ல வெரதம் ஆரம்பிச்சுருக்காங்களாம்!...

    அப்போ கொழுந்தியா கனவு காத்தோட போய்டுச்சா கோவாலு?...

    பதிலளிநீக்கு
  6. பொதுவா நாம நினைப்பதுபோல தமிழின் மரியாதை வார்த்தைகள் தெலுங்கு மொழி மற்றும் மலையாளிகளுக்குக் கிடையாது (சாதாரண மனிதர்களிடத்தில்). சென்னை வழி வழியாக தெலுங்கு மக்கள் அதிகமாக வாழ்ந்ததால் ங்க என்ற பதமே இருக்காது.

    மலையாளி தமிழில் பேசினாலும் இதே கதைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்...

      குவைத்தில் இப்படியான அனுபவம் தான்..

      நீக்கு
    2. சென்னை என்றில்லை..

      குவைத்திலும் இப்படியான அனுபவம் தான்..

      நீக்கு
    3. சரிதான். பக்கத்துப் போர்ஷனில் குடியிருந்த இரண்டு மலையாள நண்பர்கள், " நீ என்னா பரையரே சாரு " என்பார்கள்!

      நீக்கு
  7. ஒருமையிலேயே பேசுகின்றனர் என்று கேரளீயர்கள் சிலரிடம் பழகுவதை தவிர்த்திருக்கின்றேன்..

    நமது நாட்டில் கள்ளக் குடியேறிகளான வங்க தேசிகளிடமும் இதே கதை தான்...

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. ஒரு கேள்விக்கு பதில் என்று ஒரு கதையையும் அந்தக் கதைக்கு ஒரு பெண் படமும் போட உங்களால் தான் முடியும். புது கேள்வியாளர் சக்ரபாணிக்கு நல்வரவ
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி. சக்ரபாணி என் அ லே அலுவலக நண்பர்.

      நீக்கு
  10. கோயிலுக்கு அயோக்கியனும் சென்று வணங்கி வந்து தேர்தலில் அமோக வெற்றி பெற்று இருப்பவர்கள் ஏராளம் ஜி

    பணம்தான் வெற்றியை தீர்மானிக்கிறது.

    விதியை எழுதும் வல்லமை கிஷோர் குமாரிடம் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யார் அந்த கிஷோர் குமார்?

      நீக்கு
    2. தமிழகத்தில் அரசியல் கணிப்புகளை துள்ளியமாக நிகழ்த்திக் காட்டியவர்.

      நீக்கு
    3. கிஷோர் குமார் = ரூப் தேரா மஸ்தானா ; பிரசாந்த் கிஷோர் = 358 கோடிக்கு தி மு க வெற்றி பெற சூத்திரம் அமைத்தவர்!

      நீக்கு
    4. மன்னிக்கவும் பெயரை தவறாக சொல்லி விட்டேன்.

      நீக்கு
    5. அதனால் என்ன! வாசகர்களுக்குப் புரிந்திருக்கும். கவலை வேண்டாம்!

      நீக்கு
  11. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    கதை - ஆஹா... என்ன ஒரு ஓட்டம் ஓடியிருக்கிறார் (படத்தில்!)

    கேள்வி பதில்களும், இந்த வார கே.ஜி.ஜி. பக்கமும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  12. மாமியார் அடுத்த ஜன்மத்திலும் மாமியார் சிரித்துவிட்டேன். பெண் ஓடும் படம் சூப்பர் நன்றாக தெரிவாக்கி பட்டுள்ளார்.

    மரியாதை வார்த்தை இடத்துக்கு இடம் மாறுபடும். எங்கள் நாட்டில் "வா "என்று பிறந்த குழந்தையைக் கூட கூப்பிட மாட்டோம் ஒருமையில் அழைப்பதில்லை வாருங்கள் தான்.

    பதிலளிநீக்கு
  13. நன்றி திரு. கே. ஜி. ஜி. அவர்களே.
    கணவன் மனைவி கேள்விக்கு பதில். மாமியாரில்
    போய் முடிந்து விட்டதே.




    பதிலளிநீக்கு
  14. சக்ரபாணி ஸாரின் முதல் கேள்வி - பாவங்க கடவுள்! அவருக்கு இதெல்லாமா வேலை? ரெண்டாவது வாக்கு போடுறவங்க மக்களாச்சே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்குத்தான் இந்த அரசியல்வாதிகளை வேற வழியில்லாம பார்க்கணுமா இருக்கு கடவுளுக்கு எதுக்குங்க இந்த லோக அரசியல்? ஹாஹாஹா

      அவருக்கு தேவலோக அரசியலே பெரும்பாடா இருக்கும் அப்படித்தானே புராணங்கள்ல வாசிக்கிறோம்!

      கீதா

      நீக்கு
  15. நெல்லையின் கேள்வி - நீங்க எந்த வகையான அடுக்குமாடிக் குடியிருப்பைச் சொல்றீங்கன்னு குறிப்பிடலையே. பல வகை இருக்கே. அதைப் பொருத்துதான் நன்மை தீமை சொல்லமுடியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் பல வகையா? 4 மாடி, 10 மாடி, 32 மாடி, பல மாடிக் கட்டடங்கள் சேர்ந்த குடியிருப்பு இந்த மாதிரியா? எதுவா இருந்தாலும் தனிவீடு அல்லது அடுக்கு மாடிக் குடியிருப்பு இதுக்குதான் ஒப்பீடு

      நீக்கு
  16. கௌ அண்ணா கடவுளுக்கு அல்லா மொழியும் ஸ்லாங்கும் தெரிஞ்சுருக்கணுமாக்கும்!! இல்லைனா பேஜாருதான்.
    பக்
    நான் இந்தியாவின் தென்முனையிலிருந்து கல்யாணம் ஆகி சென்னை வந்தப்ப ....சென்னை பாஷை புரிய ரொம்ப கஷ்டமாக இருந்தது. அப்ப வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர் குந்து, பக்கீட்டு, இப்படி நிறைய வார்த்தைகளில் அவர் குழப்பிய நேரத்தில் வீட்டவர்கள் கம்புக்குக் கொம்பு, பூ பறிப்பதை பூ பொரிச்சுட்டு வா என்று பேசிய போதும் குழம்பிப் போனேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /அல்லா மொழியும்// - அல்லா என்றாலே கடவுள் அல்லவா? இவங்க என்னா சொல்ல வர்றாங்க?

      நீக்கு
    2. சென்னை தமிழ்! அல்லாம் தெரியும்!

      நீக்கு
  17. /// எங்கள் நாட்டில் "வா "என்று பிறந்த குழந்தையைக் கூட கூப்பிட மாட்டோம்.. ///


    ஈழத்தமிழில் எனக்கு மிகவும் பிடித்ததே இந்த சிறப்பு தான்...

    ஆனால் இந்தத் தமிழகத்தில் குழந்தைகளை குட்டிகள் என்றே சில தொலைக் கா க்களில் சொல்கின்றார்கள்..

    கழுதைக் குட்டியா... பன்னிக் குட்டியா?...

    பெற்றவர்களுக்கே வெளிச்சம்...

    பதிலளிநீக்கு
  18. மங்கல நிகழ்வுகளின் அழைப்புகளில் கூட வீட்டிலுள்ள குழந்தைகளை குட்டீஸ் என்று அச்சடித்து இறும்பூது அடைகின்றனர்...

    பதிலளிநீக்கு
  19. கேள்விகளும் பதில்களும் அருமை. அதிலும் மாமியார் அடுத்த ஜன்மத்திலும் என்றவுடன் மருமகள் ஓடுவதை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  20. சென்னையில், நான் அடைந்த முதல் அதிர்ச்சி - மக்கள், மற்றவர்கள் யாருக்குமே மரியாதை(!) கொடுத்து பேசுவதில்லை! //

    உங்கள் அனுபவத்தை படித்தவுடன் கலைவாணர் கிந்தன் சரித்திரத்தில் சென்னை மொழியை பற்றி பேசியது நினைவுக்கு வந்தது.
    கோவை மக்கள் மிக மரியாதையாக பேசுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். மரியாதையே இல்லாமல் பேசுபவர்கள் சென்னையில்தான் அதிகம்!

      நீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமையாக உள்ளது.

    மருமகளின் வேண்டுதல்கள் பலித்தால், அவர் அடுத்தப் பிறவியில் மாமியாராகி கோலோச்சலாம். ஆனால், அவர்தான் அந்த வேண்டுதல்கள் வேண்டாமென இறைவனிடம் கேட்க என்ன ஓட்டம் ஓடுகிறார். ஹா ஹா ஹா. அவர் ஓடும் படத்தை ரசித்தேன்.

    புறாக்களின் இடத்தை வலையிட்டு நாம் பிடித்துக் கொண்டோம். அது பாவம்..! இனி எங்கு செல்வது என நாளும் யோசிக்கிறது.

    தங்களது சென்னை வாச அனுபவங்களை ரசித்தேன். சென்னையில் நானும் நீ, வா, பேச்சைக் கேட்டு அதிசயத்திருக்கிறேன். தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!