செவ்வாய், 9 ஜூலை, 2024

சிறுகதை : ஆனந்தப் பூக்கள் - துரை செல்வராஜூ

 ஆனந்தப் பூக்கள்

*** *** *** *** 

சரவணனின் ஆட்டோ - வீட்டு வாசலில் நின்றது..

" தம்பி.. இந்தாப்பா.." - என்றபடி நூறு ரூபாயை நீட்டினாள் ஜோதி..

" அந்த அக்கா கொடுத்துட்டாங்க அக்கா!... "

காய்கறிப் பைகளுடன் மூன்றடுக்கு எவர்சில்வர் தூக்கு, பிளாஸ்க் என்று இறக்கி வைத்த சரவணனின் முகத்தில் புன்னகை..

" அது அந்த அக்கா கொடுத்தது... வச்சுக்கோ.. இது இந்த அக்கா கொடுக்கறது... வாங்கிக்கோ சரவணா... "

" இது நம்ம பாலிசிக்கு ஒத்து வராதது.. ஆனாலும் எங்க சோழபுரம் அக்காவப் பார்த்த மாதிரி இருக்கீங்க!.. " - என்றபடி பணத்தை வாங்கிக் கண்களில் ஒற்றி கொண்டான்..

" சோழபுரமா?.. "

" அந்த ஊர்ல தான் கட்டிக் கொடுத்தது.. அத்தான் அரிசி மண்டி வைச்சிருக்கார்.. சோழபுரம் தெரியுமா உங்களுக்கு?.. "

" தெரியும்.. பக்கத்தில பந்தநல்லூர்.."

" ஆமா!.. " 

"  அங்கே தான் ஹைஸ்கூல் படிச்சோம்.. நானும் அந்த அக்காவும்!.. "

" ஓ... அந்த அக்கா பாலா மாதிரியெல்லாம் யாரும் அமைய மாட்டாங்க அக்கா.. இப்போ நீங்களும் அந்த லிஸ்ட்ல!.. "

மெல்லச் சிரித்தாள் ஜோதி..

" நான் கொடுத்த கார்டை வச்சிக்குங்க அக்கா...  சவாரி ன்னா கூப்பிடுங்க.. வந்து நிக்கிறேன்.. "  கை வணங்கி விடை பெற்றுக் கொண்டான் சரவணன்..

சரவணனின் ஆட்டோ நகர்ந்ததும் சபரீஷ் வண்டியில் வந்து இறங்கினான்..

" என்னம்மா ரொம்ப ஜாலியா..  முகத்துல தெரியுது!.. "

கைப்பையில் இருந்து சாவியை எடுத்து கதவைத் திறந்த ஜோதி எதுவும் பேசாமல் - எவர்சில்வர் தூக்கு ,  பிளாஸ்க்குடன் உள்ளே நுழைந்தாள்...

வாசலில் இருந்த  காய்கறிப் பையை எடுத்து வந்த சபரீஷுக்கு ஏதும் புரியவில்லை..

' ஏன் அம்மா இப்படி இருக்கிறார்கள்?.. '

மனம் குழம்பிய சபரீஷ் கேட்டே விட்டான்...

" அம்மா  நீங்க ஏன் இந்த மாதிரி இருக்கீங்க.. எதையோ மறைக்கிறீங்க... "

" நீ  மட்டும் என்கிட்ட மறைக்கலையா?.. "

" நானா?... நான் எதை மறைச்சேன்!.. "

" எங்கே நெஞ்சில கைய வச்சு சொல்லு... நீ  எங்கிட்ட எதையும் மறைக்கல ன்னு!.. "

" இல்லேம்மா... "

" ஏம்பா.. அந்தப் பொண்ணோட மூனு மாசம் பழகியிருக்கே.. எங்கிட்ட ஒரு வார்த்த சொல்லலை.. "

" ஓ.. இதான்.. உங்க பிரச்னயா!... ஏம்மா.. அந்தப் பொண்ணு எந்த அர்த்தத்தோட சொன்னாளோ..  அவ சொன்னத நம்பி... "

" அவங்க வீட்ல வச்சி - மூனு மாசமா உன்னைத் தெரியும் ன்னு அந்தப் பொண்ணு சொன்னப்போ திக்குன்னு இருந்திச்சு.. நான் அப்படியே திகைச்சுப் போய்ட்டேன்... "

" தெரியும் ன்னு தானே சொல்லி இருக்கா... வேற எதையும் சொல்லலையே.. விஷயத்தை சரியா புரிஞ்சுக்காம கலவரமா ஆய்ட்டீங்களே அம்மா.. அந்தப் பொண்ணு சொன்ன மூனு மாசத்துல நேருக்கு நேரா பார்த்தது ரெண்டு தடவை தாம்மா... அவர் கணேஷ் சார் தான் புதுசா அக்கவுண்ட்  ஓபன் பண்ணி டீடெய்ல்ஸோட எங்கிட்ட அனுப்பி வெச்சார்.. ரெண்டாவது மாசம் பெரிய அமௌண்டை டைரக்டா டெபாசிட் பண்ண வந்தா... மூனாவது தடவையா ஏடியெம் கார்ட் மிஷின்ல மாட்டிக்கிச்சு ன்னு வந்தா... அதக் க்ளியர் பண்ணிட்டு ஆபீஸ் நம்பரைக் கொடுத்தேன்.. அவ்வளவு தான்.. இதுக்குள்ள நீங்களும் குழம்பி - அடடா... "

ஒரு கணம் நிறுத்திய சபரி தொடர்ந்தான்..

" கோயில் குளம் ன்னு சுத்தாம  அங்கே இங்கே ன்னு நாங்க ரெண்டு பேரும் ஊர் சுத்துனதா நீங்களே கற்பனை பண்ணிக்கிட்டீங்களா!.. இல்லாத அண்ணன் பொண்ணுக்கு என்ன பதில் சொல்றது ன்னு தடுமாறி தத்தளிச்சீங்களா!.. "

கள்ளம் கபடமின்றிச் சிரித்தான்..

ஜோதியின் மனதில்  சந்தோஷம் சூழ்ந்த மாதிரி இருந்தது.. 

" நான் உங்க புள்ள ம்மா.. "

" என் ராஜா உன்னப் பத்தித் தெரியாதா... இன்னிக்கு வைகாசி பொறந்துருக்கு முதல் தேதி.. புதுக் கதை ந்னு சந்தோஷப்பட்டதுக்கு சேட்டை மூட்டை செவ்வாய்க் கிழமை  ந்னு குணத்தைக் காட்டியிருக்கு... சரி நீ முகத்தைக் கழுவிட்டு வா.. ஈவினிங் டிபன் செய்றதுக்கு நேரம் இருக்காது ன்னு ஆத்தாளும் மவளுமா சேர்ந்து உனக்கு டிபன் காபி கொடுத்து விட்டுருக்காங்க.. "

" அந்தப் பொண்ணு செஞ்சதா?.. "

" அவளுக்கு சர்வ் பண்ண மட்டும் தான் தெரியுமாம்!.. "

" என்ன டிபன் மா!.. "

" கேசரி... தவ வடை.. உனக்கு ன்னு ஸ்பெஷலா போளி.. பில்டர் காபி.. "

ஜோதியிடம் புன்னகை..

" என் டா.. சபரி.. அந்தப் பொண்ணு மெலிஞ்ச மாதிரி இல்லே?.. "

" அதெல்லாம் இல்லை மா.. ரோஜாச் செடி  என்ன குண்டாவா இருக்குது.. இல்லே மல்லிகைக் கொடி தான் குண்டா இருக்குதா?.. "

சபரியின் பதிலைக் கேட்டு, 'அடேங்கப்பா!. ' - என்றிருந்தது ஜோதிக்கு..

" இன்னொரு உண்மையயும் சொல்லட்டுமா அம்மா.. "

" சொல்லுப்பா.. "

" அந்தப் பொண்ணு மேல எனக்கு எதுவுமே இல்லை மா.. "

" என்னய்யா சொல்றீங்க?.. "

அதிர்ந்தாள் ஜோதி.. ஏதோ சுழல்வது போல் இருந்தது..

" ஆமாம் மா.. அந்தப் பொண்ணு மேல எனக்கு எந்த எண்ணமும் இல்லை..  நீங்க என் போட்டோவைக் காட்டுனதும் அவங்க அத  அப்லோடு பண்ணி அதயே ஒரு பூங்கொத்தோட எனக்கு அனுப்பியிருந்தாள் அந்தப் பொண்ணு... சரி.. இப்பவாவது அந்தப் பொண்ணோட பேரச் சொல்லவா?...  "

" சொல்லுப்பா.. " 

" என் போட்டோவயே எனக்கு ஒரு பூங்கொத்தோட  அனுப்பியிருந்தா.. லதா!.. அதுக்கு அப்புறந்தான்.. "

" அதுக்கு அப்புறந்தான்?.. "

" உங்க கிட்ட எப்படி சொல்றது?.. எனக்கு வெக்கமா இருக்கு மா.. "

" எதுக்கு வெட்கம்.. காய்கறி வாங்கப்போன அம்மா கல்யாண சேதியோட வந்ததுக்கா!.. அதுதான் அந்தக் காலத்துலயே சொல்லியிருக்காங்களே.. "
- என்றவாறு ஜோதியின் கணவர் வீட்டுக்குள் வந்தார்..

" என்னா ன்னு?.. " - ஜோதியிடம் சிரிப்பு..

" கம்புக்கு களை எடுக்க வந்து தம்பிக்கு பொண்ணு பார்த்தானாம் அண்ணன்.. ன்னு.. "

" ஆமா.. குடும்பத்துக்கு ஏத்தவளா.. வயக்காட்டு வேலை எல்லாம் எப்படி பார்க்கிறா ங்கற கணக்கா இருக்கும்.. "

" எல்லாமே ஒரு கணக்கு தான்!.. "

பேசிக்கொண்டு இருந்தபோது வாசலில் ஆட்டோ..

துள்ளிக் குதித்து வீட்டுக்குள் வந்தான் சரவணன்.. 

" இன்னிக்கு வைகாசி முதல் தேதி செவ்வாய்க்கிழமையாம்... வீட்ல விளக்கேத்தி வைக்கணுமாம்...  அக்கா வந்திருக்காங்க.. "

என்று வாசலைக் காட்ட  கணவருடன் பாலா திரிபுர சுந்தரி வந்து கொண்டிருந்தாள்..  

அவர்களுடன் லதா! 




அனைவரது கண்களிலும் சந்தோஷப் பூக்கள் ...

== = = = =  = = = =  =

***

43 கருத்துகள்:

  1. என்பி லதனை வெயில்போலக் காயுமே
    அன்பி லதனை அறம்..

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம்
    வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நல்வரவு..

    பதிலளிநீக்கு
  5. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்

    கண் கவரும் ஒளிப்படத்துடன் அழகு செய்த சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  6. இன்றும் அழகின் ஓவியம்..
    ஒளிச்சித்திரம் அருமை!..

    சித்திரச் செல்வர் வாழ்க!..

    பதிலளிநீக்கு
  7. ஒளிச்சித்திரம்
    ஒலிச்சித்திரம்!..

    என்ன ஒரு கற்பனை!...

    பதிலளிநீக்கு
  8. பாக்கு வண்ணம்
    பட்டு வண்ணம்..
    நோக்கு வண்ணம்
    மேக வண்ணம்
    பாச வண்ணம்
    ஏந்தி வரும்
    பைங்கிளியே வருக...
    பண்புடனே அன்பு நலம்
    குலம் விளங்கத் தருக!..

    பதிலளிநீக்கு
  9. ஓ அந்தக் கதையா.....புரிந்தது. முழுசும் வாசித்துவிட்டு அப்பால வரேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கௌ அண்ணா மறந்திட்டீங்க! இதன் முதல் பகுதி அதாவது ஜோதியின் தோழி தான் பாலா திரிபுர சுந்தரி மார்க்கெட்ல பார்த்த கையோட அவங்க வீட்டுக்குப் போவாங்க ஜோதி. அப்ப அவங்களுக்கு தெரிய வந்த விஷயம் பையன் சபரீஷ் - லதா பற்றி....ஜோதிக்கு டிஃபன் எல்லாம் கொடுத்துவிடுவாங்க திரிபுரசுந்தரி.

      அதன் தொடர்பான கதை இப்ப சபரீஷ், ஜோதி வீட்டிலிருந்து!

      கீதா

      நீக்கு
    2. அடேடே ! மறந்துவிட்டேன்!

      நீக்கு
  10. மனதைத் தொட்ட கதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  11. துரை அண்ணா! எப்படியோ, சபரீஷையும் அவங்க அம்மா ஜோதியையும் மனத்தாங்கல் இல்லாம ஜோதிய சந்தோஷமா லதாவை வரவேற்க ரெடியாக்கிட்டீங்க!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்னஞ்சிறு மழைத்துளிக்கே
      சிரிக்கின்ற
      அருகம்புல்லாக மனம்..

      மகிழ்ச்சி..
      நன்றி சகோ

      நீக்கு
  12. @ கௌதம் ஜி

    // எந்தக் கதை!.. //

    அதான்..
    அந்தக் கதை!..

    பதிலளிநீக்கு
  13. கௌ அண்ணா, ஜோதிக்குப் பிடிச்ச மாதிரி லதாவ கொஞ்சம் பூசினாப்ல அனுப்பிட்டீங்க! நல்லாருக்கு படம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்தால் - ஸ்லிம் ஆக இருப்பதுபோலத்தான் எனக்குக் தோன்றுகிறது! லதா என்றால் கொடி. அதாவது பறக்கும் கொடி அல்ல - படரும் கொடி.

      நீக்கு
    2. அதாவது - படரும் கொடி.

      பறக்கும் கொடி அல்ல..

      தமிழ்.. தமிழ்..

      நீக்கு
  14. @ கீதா..

    /// துரை அண்ணா!! சூப்பர்!
    கீதா.. ///


    பாக்கு வண்ணம்
    பட்டு வண்ணம்..
    நோக்கு வண்ணம்
    மேக வண்ணம்..


    பதிவில் கதைக்கான படம் என்று சித்திரச் செல்வரது கை வண்ணம் கண்ட மாத்திரத்தில் மனதில் எழுந்த கவியின் வண்ணம்!..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  15. "சந்தோசப் பூக்கள் " வாழ்வில் நிலைத்து வீசட்டும்.

    படமும் கதையும் மனதை மகிழ்விக்கிறது.

    பதிலளிநீக்கு
  16. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
    நன்றி மாதேவி..

    பதிலளிநீக்கு
  17. நிறைவான முடிவு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  19. கதையின் தலைப்பும் , கதையும் அருமை.
    ஆனந்த பூக்கள் மலரட்டும் , மணம் வீசட்டும்.
    கெளதமன் சார் கதைக்கு பொருத்தமாக படம் போட்டு விட்டார்.

    "// இன்னிக்கு வைகாசி முதல் தேதி செவ்வாய்க்கிழமையாம்... வீட்ல விளக்கேத்தி வைக்கணுமாம்... அக்கா வந்திருக்காங்க.. "//

    திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு வரும் போது இந்த பாடல் போடுவார்கள் அந்தக் காலத்தில்.
    திருமணத்திற்கு முன்பே வீட்டுக்கு வரும் மருமகளை வரவேற்று இந்த பாடலை போட்டு மருமகளை உறுதி செய்து விட்டார் ஜோதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// திருமணத்திற்கு முன்பே வீட்டுக்கு வரும் மருமகளை வரவேற்று இந்த பாடலை போட்டு மருமகளை உறுதி செய்து விட்டார் ஜோதி.///

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நலம் வாழ்க...

      நீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை அன்றைய கதைக்கு தொடர்ச்சியாக ஆனந்த பூக்கள் அருமையாக வந்துள்ளது. அம்மா ஜோதியின் சந்தேகத்தை தீர்க்கும் வண்ணமாய் மகன் சபரீஷ் பேசியது அருமை. பெற்று அருமையாய் வளர்த்த மகன் தன்னிடம் கூறாமலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்யத் துணிந்து விட்டது எந்த ஒரு தாய்க்கும் வருத்தத்தைத்தான் உண்டாக்கும். அதை சபரீஷ் போக்கி விட்டான். கதையை கோர்வையாய் கொண்டு செல்வது நன்றாக உள்ளது. இதன் அடுத்த தொடர்ச்சியாக மற்றொரு கதையும் பூக்களாக மலரட்டும் என எதிர்பார்க்கிறேன்.

    கதைக்குப் பொருத்தமாக சகோதரர் கௌதமன் தந்த படமும், புது முயற்சியாக வீடீயோவும் நன்றாக உள்ளது. ரசித்தேன்.உங்கள் இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!