செவ்வாய், 2 ஜூலை, 2024

சிறுகதை : அன்பின் மின்னல் - துரை செல்வராஜூ

 அன்பின் மின்னல்

துரை செல்வராஜூ 

*** *** ***
" இதோ ஊற வைத்த இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் எல்லாம் இருக்கு.. " என்றபடி, கஸ்தூரி நகர்ந்தாள்.. 

டிகாக்‌ஷனுக்கு தண்ணீர் வைத்த நேரத்தில் கன்றுக் குட்டியின் குரல் கேட்டது.. 

' பால்சாமி வந்துட்டாரா!.. ' என்று நினைத்துக் கொண்டவளின்  மனதில் கொஞ்சம் திருப்தி.. 

விளக்கெண்ணெய் கிண்ணமும் பால் செம்பும் கிணற்றடி மேடையில் தான் இருக்கின்றன.. சிறிது நேரத்தில் சொர்... சொர்...  என்று பால் பீய்ச்சப்படுகின்ற சப்தம்.. 

ஆட்டுக் கல்லைக் கழுவி ஆயத்தம் செய்து கொண்டிருந்தாள் கனகா..

" அத்தாச்சி.. இருங்க.. அஞ்சு நிமிஷம் கழிச்சு அரச்சுக்கலாம்... காஃபி போட்டுடறேன்.. "  - என்று, கனிவாகச் சொல்லிவிட்டு கொல்லைப் புறத்திற்குச் சென்றாள் கஸ்தூரி..

கனகாவின் அண்ணன் விஸ்வநாதன்..  மனைவி  கஸ்தூரி.. 

அண்ணி என்றாலும் இருவருக்கும் ஒரே வயது தான் .. ஆனாலும் ஒருவருக்கொருவர் மரியாதை தவறுவதில்லை..

" சோளத் தட்டை ரொம்பவும் போடாதீங்கம்மா.. வயித்துக்கு ஒத்துக்காது.."  என்றபடி, பால் செம்பைக் கொடுத்தார் பால்சாமி..

" சோளத்தட்டை நல்லதுன்னு சொல்லி கொண்டு வந்து போட்டுட்டு பசங்க காசு வாங்கிட்டுப் போய்டுறாங்க.. இனிமே நான் பார்த்துக்கறேன்!.. "

வேறென்ன சொல்வது?..

பசு வளர்ப்பதில் பாரம்பரியம் உடையவர் பாலசாமி.. எப்படியோ பேச்சு வழக்கில் பால்சாமி என்றாகி விட்டார்..

பசு எருமை - என்று, எந்த ஒன்றைப் பார்த்தாலும் இத்தனை செம்பு தான் கறக்கும் என்று துல்லியமாகச் சொல்லி விடுவார் பாலசாமி..

மாடு வாங்கறவங்க இவரை அழைத்துக் கொண்டு போய்த் தான் சந்தையில் மாடு வாங்குவார்கள்.. அந்த அளவுக்கு மாடுகளோட அங்க லட்சணம் தெரியும்.. கைராசிக் காரர்..

ஸ்வேதா காஃபியுடன் வந்தாள்.. 

கனகாவின் அண்ணன் மகள்.. இந்த வீட்டுக்குள் தனித்திருக்கும் கனகாவிற்கு உற்ற தோழி.. இருபது வயதுதான் என்றாலும் தீர்க்கமான அறிவு.. அந்த அறிவும் கண்களில் தெரிவது தான் அழகு.. இப்படி எல்லாருக்கும் அமைவதில்லை.. 

அவளிடமிருந்து காஃபியை வாங்கிக் கொண்ட கனகா ஒரு வாய் பருகி விட்டு ஓரமாக வைத்தாள்.. 

" நீங்க இருங்க அத்தே... நான் அரைக்கிறேன்.. " - என்றவாறு வலக் கையால் அரிசியை அள்ளிப் போட்டு இடக் கையால் குழவியைச் சுழற்ற ஆரம்பித்தாள் ஸ்வேதா...

" நீ விடும்மா... இதோ நான் வந்துட்டேன்... " என்ற கனகா குழவியைப் பற்றிக் கொண்டாள்..

" அத்தை!... என்னை ஒரு வேலையும் செய்ய விடமாட்டீங்களே.. " - அலுத்துக் கொண்டாள்..

" ஏன் செய்யணும்?..  எதுக்கு செய்யணும்?.. எங்க அண்ணன் பொண்ணு கை நோகலாமா... இப்போ தான்  இட்லிக்கு மாவு அரைக்க புதுசா மிஷின் வந்திருக்காமே.. அது வாங்கினதுக்கு அப்புறம் உன் ராஜ்ஜியத்தை நடத்து!... "

" நீங்க இப்படிச் சொல்லிட்டு இந்த வீட்ல எத்தன கஷ்டப் படுறீங்க... "

" அப்படியெல்லாம்  ஒன்னும் இல்லடி ராசாத்தி... அண்ணனும் அண்ணியும் எனக்கு இன்னொரு அப்பா அம்மா!.. தெய்வம்!.. நானாத் தான் இதையெல்லாம் இழுத்துப் போட்டு செய்றேன்.. குடியிருக்கிற கோயிலுக்குக் காணிக்கையா..  "

கண்களின் ஓரங்கள் ஈரமாகின.. 

" அத்தே... " - ஸ்வேதாவிடம் பதற்றம்..

" ஒன்னுமில்லேம்மா.. " - கனகா கண்களைத் துடைத்து கொள்ள ஆட்டுக்கல்லின் குழவி வேகமாக சுற்றிச் சுழன்றது..

பள்ளிப் படிப்பின் கடைசி நாள்.. 

நூலகத்திற்கு எதிரில் மா மரத்தடியில் தேநீர் விருந்து.. மாவ மாணவியர் கூடிக் குதுகலித்திருந்தனர்..

சாதாரண நாட்களிலேயே நூலகத்திற்கு யாரும் வரமாட்டார்கள்.. - என்ற தைரியத்துடன் நூலகத்திற்குள் ஒருவரை ஒருவர்  எதிர்கொண்டிருந்தனர் கனகாவும் சபேசனும்.. 

சபேசன் சில மாதங்களாக கனகாவின் மனதை வருடுகின்றவன்.. கண்களின் உறக்கத்தைத் திருடுகின்றவன்..

" இப்போதாவது சொல்லேன்.. "

" பரீட்சை முடியட்டும்.. "

" ரோஜாவின் இதழ்கள்
உதிர்ந்து விடும்.. 
மல்லியொடு முல்லையாய்
மலர்ந்தே 
வருவேன்..
மகிழ்ந்தே வருவேன்.. 
உலர்ந்தாலும் 
உதிந்தாலும்
உன்னோடு மகிழ்வேன்..
உவந்தே மகிழ்வேன்!.. '

கவிதையெல்லாம் எழுதிக் கொண்டோமே.. "

" எங்கப்பா ஒத்துக்குவார் ங்கற நம்பிக்கை எல்லாம்  எனக்கு இல்லை.. ஆனாலும், நீ வந்து கேள்.. "

சபேசனின் சுட்டு விரல் கனகாவின் இடுப்பில் கோடிட்டுச் செல்ல - அவளது உச்சந்தலையில் மின்னல் வெளிப்பட்டது..

எப்படியோ விஷயம் கசிந்து வீட்டில் பிரளயம்...

" என்னடி இது?.. " - என்று பதறினாள் அம்மா..

கோபத்தில் கொதித்துக் கொந்தளித்து குதித்துக் கொண்டிருந்தார் அப்பா..

" கோயில் குளம் புராணம் ன்னு  இருக்கறவருக்கு இப்படி வந்து வாய்ச்சிருக்கியே.. "

அதே கோயில் புராணத்துல  குலமும் கோத்திரமும் கொண்டு என்னடா செய்யப் போறீங்க ன்னு கூட கேட்டுக்கே!... 

பாவம்.. அம்மாவுக்கு அது தெரிஞ்சிருக்க நியாயம் இல்லை..

அதன்பின் யாரோ வந்து சபேசனின் தரப்பில் பேசினார்கள் - இதெல்லாம் சகஜம் என்று.. 

மனம் தெளிந்து நிலைமை சீரடைவதற்குள் சபேசனின் தந்தைக்கு பணியிடம்  மாற்றப்பட்டது.. மாயவரத்துக்கு அந்தப் பக்கமாம்.. 

கண் பார்த்துக் கொள்வதற்கே கடும் பிரச்னை எனும்போது - வீட்டில் எவருக்கு கடிதம் வந்தாலும் குடும்பத் தலைவரைக் கூப்பிட்டு அவரது கையில் கொடுத்து விட்டுச் சொல்கின்ற  நேர்மையினால் - 

கடிதப் போக்குவரத்துக்கும் வழியின்றிப் போனது.. 

சூழ்நிலை இப்படி இருக்க - சொந்தத்தில் பெண் கேட்டு வந்தார்கள்.. 

" காலேஜ் படிப்பெல்லாம் நமக்கு எதுக்கு.. நல்ல சம்பந்தம் வர்ற நேரத்துல முடிச்சுடணும்.. "

எதையும் மேற்கொண்டு பேச விடாமல் உள்ளூர் கலகப் பிரியர்கள் கைங்கர்யம் செய்தனர்.. விகார முகச்சுழிப்புகளுடன் அவப்பெயர் ஏற்பட்டது தான் மிச்சம்.. அதன் பிறகும் வேறு சில முயற்சிகள் .. மகளின் மண வாழ்க்கை பற்றிய கவலையுடன் மனம் நொந்து  - நொந்து போனார்கள் பெற்றோர்.. அதன் பிறகே உளறித் திரிந்தவர் ஓய்ந்தனர்..

நாட்கள் ஓடிப்போக - அண்ணனுக்கு மண வாழ்க்கை அமைந்தது.. கஸ்தூரி வந்தாள்..  

நிர்க்கதியாகி விடுவோமோ.. என்று கனகா கலங்கிய நேரத்தில் கஸ்தூரியின் அன்பு மனம் வெளிப்பட்டது..

அதில் நெகிழ்ந்த கனகா - அண்ணியின்   அன்பிற்கு அடிமையானாள்..

அடிமைக்கு அடிமையாய் அன்பின் ஸ்வேதா.. அத்தையின் அருகில் இருக்கும் போது கவிதை வேண்டுமெனக் கேட்பாள்..  ஒன்றாய் இரண்டாய் பழங்கதையை - கவிதையாய்ப் பகிர்வாள் கனகா ..

குடும்பத்தில் யாரும் ஏறுக்கு மாறாகப் பேசுவது இல்லை.. என்றாலும் தங்கையிடமும் அவ்வப்போது யோசனை கேட்டுக் கொள்வான் அண்ணன்..

எப்படி ஸ்வேதாவை கனகா கவனித்துக் கொள்கின்றாளோ அப்படியே கனகாவை கஸ்தூரி கவனித்துக் கொள்கின்றாள்..

அப்படியிருக்க வேறேது குழப்பம்?..

வாசலில் ஸ்கூட்டியின் சப்தம் கேட்டது.. வங்கியில் தணிக்கைக்கு வந்திருக்கின்றனர்.. வேலை அதிகமா இருந்திருக்கும்..  அண்ணனின் முகத்தில் களைப்பு.. கூடவே புன்னகை..

" என்னண்ணா.. விசேஷம்?.. "

" எல்லாமே விசேஷம் தாம்மா!.. "

" ஆடிட் எல்லாம் முடிஞ்சதா!.. " கஸ்தூரி சிற்றுண்டியுடன் வந்தாள்..

" நாளைக்கும் இருக்கு.. "

 அண்ணனின் முகத்தில் மர்மப் புன்னகை

" ஆடிட்டர் நல்லவர்..  மனம் விட்டு பேசினார்..  பள்ளிப் படிப்பு இங்கே நம்ம ஊர்ல தான் படிச்சிருக்கார்!..  அவங்க அப்பா ரெவினியூ இன்ஸ்பெக்டரா இங்கே இருந்துருக்கார்..  

' ஈரக் கூந்தலில் 
ஒற்றைப் பூவுடன் 
வருவேன்.. 
வருவேன்.. ' 

- ன்னு ஒரு பொண்ணு எழுதுன கவிதையால இன்னும் பிரம்மச்சாரி யா இருக்காராம்.. "

தலைக்கு மேல் ஆனந்த மின்னல்..  கனகா நிமிர்ந்து பார்த்தாள்..

" நாளைக்கு சாயங்காலம் நம்ம வீட்ல தான் அவருக்கு டின்னர்.. நம்ம பால்சாமிக்கு தூரத்துச் சொந்தமாம்... பேரு சபேசன்!.. "

கஸ்தூரிக்கு விவரம் புரிந்து விட்டது..

கண்களில் நீர் துளிர்க்க விம்மினாள் கனகா.. ஸ்வேதா ஓடி வந்து கையைப் பற்றிக் கொண்டாள்..

அரைத்து வைத்த இட்லி மாவு போல் கனகாவின் இதயம் பொங்கி வழிந்தது..

ஃஃஃ

60 கருத்துகள்:

  1. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
    வேளாண்மை செய்தற் பொருட்டு..

    குறள் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்

    கண் கவரும் ஒளிப்படத்துடன் அழகு செய்த சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  5. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நல்வரவு..

    பதிலளிநீக்கு
  6. ஒளிச்சித்திரம்!...

    அருமை.. அழகு!..

    இப்படி எதிர்பார்க்க வில்லை..

    சித்திரச் செல்வர் வாழ்க!..

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. கதை நிறைவாக இருந்தது. ஆனாலும் வயதுக் குழப்பமாக ஆரம்பத்தில் தோன்றியது.

    கனகா கஸ்தூரிக்கு நாற்பது வயது, ஸ்வேதாவுக்கு இருபது, முன்பு மனதைப் பறிகொடுத்த சபேசன் நாற்பதுகளில் கனகாவை மணம் புரியப் போகிறார் என்று புரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
  9. படம் யாருக்குப் போடணும் என்ற குழப்பத்தில் ஸ்வேதாவுக்கு படம் போட்டிருக்கிறார் கேஜிஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருக்கும் இளமை திரும்பும் தானே!..

      நீக்கு
    2. குழப்பமே இல்லை. து செ எங்கே வர்ணனை செய்கிறாரோ அந்த இடத்தை படம் சேர்க்க எடுத்துக் கொள்வேன்!

      நீக்கு
    3. // கனகாவின் அண்ணன் மகள்.. இந்த வீட்டுக்குள் தனித்திருக்கும் கனகாவிற்கு உற்ற தோழி.. இருபது வயதுதான் என்றாலும் தீர்க்கமான அறிவு.. அந்த அறிவும் கண்களில் தெரிவது தான் அழகு.. இப்படி எல்லாருக்கும் அமைவதில்லை.. // இது போதுமே எனக்கு!

      நீக்கு
    4. ஆ! அப்ப அது கனகா இல்லையா?!!! ஸ்வேதாவா...ஹூம் கௌ அண்ணா சபேசனுக்காகவாவது கனகா படத்தை போட்டிருக்கலாமே! அதுதானே இனிய நிகழ்வு! கனகா சந்தோஷத்தின், ஆச்சரியத்தின் உச்சியில் இது கனவா நிஜமா என்று நிற்பது பொலவும் சபேசன் வருவது போலவும்!!!!

      கீதா

      நீக்கு
    5. // கௌ அண்ணா சபேசனுக்காகவாவது கனகா படத்தை போட்டிருக்கலாமே!// சபேசன்தான் கனகாவையும் அவர் எழுதிய கவிதையையும் காலம் காலமாக கண்ணுக்குள் வைத்துப் போற்றி வருகிறாரே! அவருக்கு எதற்கு நான் வரைகின்ற படம்!

      நீக்கு
  10. நிறைவான மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் முடிவு.

    கதையில் எல்லோரும் நல்லவரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேண்டுமானால் -
      அந்த காலத்துத் தந்தையை வன்முறையாளனாக தீவிரவாதியாகக் கொள்ளலாம்...

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    கதை நன்றாக உள்ளது. நல்ல அன்பான குடும்ப கதை. நீண்ட இடைவெளிக்குப் பின் விரும்பியவர்கள் திருமணம் செய்து கொள்வது குடும்பத்தில் அனைவருக்குமே மகிழ்ச்சிதான். அந்தக் குடும்பத்தில் தன் நாத்தனாரிடம் அன்புடன் இருக்கும் அண்ணியை போற்ற வேண்டும். கடைசி முடிவு சுபமாக அமைந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. நல்ல கதையை தந்தமைக்கு பாராட்டுக்கள்.

    கதைக்கேற்றவாறு ஓவியத்தை தேர்வு செய்து அலங்கரித்த சகோதரர் கௌதமன் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுபமாக அமைந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. நல்ல கதையை தந்தமைக்கு பாராட்டுக்கள்...

      மகிழ்ச்சி...
      நன்றி...

      நீக்கு
  12. @ அன்பின் நெல்லை..

    /// கதையில் எல்லோரும் நல்லவரே.. ///


    இதில் உள்குத்து ஏதும் இல்லையே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உள்குத்தெல்லாம் இல்லை. பொதுவா உங்க கதைகளில் பெரும்பாலும் பாசிடிவ் மாந்தர்கள், கிராமப் பின்னணி, நம் கலாச்சாரம், நல்லொழுக்கம் எல்லாம் பிரதிபலிக்கும்

      நீக்கு
    2. அதனால உங்களுக்கு கனவிலும் தொலைக்காட்சி சீரியல்கள் எழுதும் வாய்ப்பு கிடைக்காது. அதில் வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்றால் உங்க சிந்தனையில் மாற்றம் வேண்டும். கஸ்தூரிக்கும் கனகாவுக்கும் ஆகக் கூடாது, கனகா உணவைத் தயாரிக்கும்போது அதில் அரளிவிதையை அரைப்பதாக வரணும், கல்யாணமாகதவளோடு என்ன பேச்சு என்று கஸ்தூரி ஸ்வேதாவைத் திட்டணும், இன்னும் பலப் பல மசாலாக்கள் சேர்க்கணும். ஐடியாக்கள் இருக்கின்றன.

      நீக்கு
  13. பாவம் அந்த புள்ள கனகா. காலாகலத்துல சேர்த்து வைச்சிருக்கலாம் அவங்க அப்பா.

    எப்படியோ அவளும் உறுதியாக இருக்க, அவள் அண்ணனும் அண்ணியும் அவளை வற்புறுத்தாமல் இருந்திருக்கிறார்கள். அண்ணனும் அண்ணியும் அவளிடம் பேசவில்லையோ அவள் திருமணம் பற்றி.

    எப்படியோ அவள் காத்திருத்தலின் சபேசனின் காத்திருத்தலில் (அவன் குடும்பம் அவன் பெற்றோர் அவனிடமும் வற்புறுத்தவில்லை போலும் அல்லது எந்தவித கடமைகளும் இல்லை போல. )
    எப்படியோ நல்லதாகக் கை கூடி வந்து இருவரும் இணையும் நேரம்.

    கதை நன்றாக இருக்கிறது துரை அண்ணா. கதைல எல்லாருமே நல்லவங்களாக இருக்காங்க...அண்ணனும் அண்ணியும் சுற்றத்தின் கேள்விகளை எப்படி எதிர்கொண்டாங்களோ!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கால கட்டத்தில்
      சுற்றங்கள் சும்மாவா இருந்தன ?... என்று..

      நியாயமான கேள்வி... சந்தேகம் தான்..

      காலங்களைக் கடந்த தர்மம் என, ஒன்று இருக்கின்றது..

      அது தான் இது...

      எல்லாரையும் குஷிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு கதை எழுத ஆரம்பித்து முழங்காலில் வலி வந்தது... அதை உணர்ந்து கொண்டு எழுதியதை
      அழித்து விட்டேன்..

      வித்வத்வம் நிறைந்த சபையில் கழைக்கூத்து போல நிகழ்த்துகின்றேன்...

      சில விஷயங்களை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்று இலை மறைவாக நகர்ந்து விட்டேன்...

      மகிழ்ச்சி... நன்றி சகோ..

      நீக்கு
    2. ///எல்லாரையும் குஷிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ///

      கதையில் மசாலா வேண்டும் என்ற எண்ணத்தில் - என்ற அர்த்தத்துடன் வாசிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...

      வேறொரு அர்த்தமும் இல்லை...

      நீக்கு
  14. கௌ அண்ணா!!! கனகாவுக்கு அவள் காதல் நிறைவேறப் போவதால் இளமை ஊஞ்சலாடுதோ!! 20 வயசாகிடுச்சு போல!! படம் நல்லாருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தில் இருப்பது 20 வயது ஸ்வேதா.

      நீக்கு
    2. // ஸ்வேதா காஃபியுடன் வந்தாள்..

      கனகாவின் அண்ணன் மகள்.. இந்த வீட்டுக்குள் தனித்திருக்கும் கனகாவிற்கு உற்ற தோழி.. இருபது வயதுதான் என்றாலும் தீர்க்கமான அறிவு.. அந்த அறிவும் கண்களில் தெரிவது தான் அழகு.. இப்படி எல்லாருக்கும் அமைவதில்லை.. //

      நீக்கு
    3. அந்த அறிவும் கண்களில் தெரிவது தான் அழகு.. இப்படி எல்லாருக்கும் அமைவதில்லை...

      சிறப்பு..
      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  15. கனகா கண்களைத் துடைத்து கொள்ள ஆட்டுக்கல்லின் குழவி வேகமாக சுற்றிச் சுழன்றது..//

    ஆஹா ஃப்ளேஷ் பேக் போவதற்கான வரி

    " கோயில் குளம் புராணம் ன்னு இருக்கறவருக்கு இப்படி வந்து வாய்ச்சிருக்கியே.. "

    //அதே கோயில் புராணத்துல குலமும் கோத்திரமும் கொண்டு என்னடா செய்யப் போறீங்க ன்னு கூட கேட்டுக்கே!... //

    அதானே!!! சூப்பர் வரி.

    அண்ணனுக்குக் கல்யாணம் நடந்தப்ப கனகா பிரச்சனையாகலையோ? ஏன்னா கதை நடக்கும் காலகட்டம் அப்படியாச்சேன்னு!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ஃப்ளேஷ் பேக் போவதற்கான வரி...

      மகிழ்ச்சி..
      நன்றி சகோ...

      நீக்கு
  16. கனகா கண்களைத் துடைத்து கொள்ள ஆட்டுக்கல்லின் குழவி வேகமாக சுற்றிச் சுழன்றது..//

    ஆஹா ஃப்ளேஷ் பேக் போவதற்கான வரி

    " கோயில் குளம் புராணம் ன்னு இருக்கறவருக்கு இப்படி வந்து வாய்ச்சிருக்கியே.. "

    //அதே கோயில் புராணத்துல குலமும் கோத்திரமும் கொண்டு என்னடா செய்யப் போறீங்க ன்னு கூட கேட்டுக்கே!... //

    அதானே!!! சூப்பர் வரி.

    அண்ணனுக்குக் கல்யாணம் நடந்தப்ப கனகா பிரச்சனையாகலையோ? ஏன்னா கதை நடக்கும் காலகட்டம் அப்படியாச்சேன்னு!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணனுக்குக் கல்யாணம் நடந்தப்ப கனகா பிரச்னையாகலை...

      ஏன்னா ஜனங்க ரொம்ப பெருந்தன்மை யானவர்கள்...

      மகிழ்ச்சி..
      நன்றி சகோ...

      நீக்கு
  17. மனதைத் தொடும் கதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  18. நல்ல ஒரு அண்ணன் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி இறுதியில்
    "ஈரக் கூந்தலில்
    ஒற்றைப் பூவுடன்
    வருவேன்..
    வருவேன்.. ' நிறமாகவும்.

    கதை படம் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  19. நிறமாகவும் தவறு . நிஜமாகி விட்டது.

    பதிலளிநீக்கு
  20. ///எல்லாரையும் குஷிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ///

    கதையில் மசாலா வேண்டும் என்ற எண்ணத்தில் - என்ற அர்த்தத்துடன் வாசிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...

    வேறொரு அர்த்தமும் இல்லை...

    பதிலளிநீக்கு
  21. @ அன்பின் நெல்லை..

    /// உள் குத்தெல்லாம் இல்லை. பொதுவா உங்க கதைகளில் பெரும்பாலும் பாசிடிவ் மாந்தர்கள், கிராமப் பின்னணி, நம் கலாச்சாரம், நல்லொழுக்கம் எல்லாம்.. ///

    இந்த அன்பும் ஆதரவும் போதும்...

    மகிழ்ச்சி..
    நன்றி.

    பதிலளிநீக்கு
  22. கடிதக்காலகட்டக்காதல் நிறைவான கதை நன்று ஜி

    பதிலளிநீக்கு
  23. கதையின் தலைப்பும் , கதையும் அருமை.
    அப்பா தடுத்த காதல் அண்ணன் மூலம் நிறைவேறி விட்டது.
    காலம் கடந்தாலும் அன்பு வென்றது.
    கவிதைகள் நன்றாக இருக்கிறது.


    //ஸ்வேதா காஃபியுடன் வந்தாள்.. //

    சாரின் படம் கதைக்கு பொருத்தமாக இருக்கிறது. இரண்டு கைகளில் டம்ளார், பிளாஸ்க் வரைந்து இருக்கிறார். பொருத்தமான படத்தை தேர்வு செய்து இருக்கிறார். கண்ணில் அறிவும் , அன்பும் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///கண்ணில் அறிவும் , அன்பும் தெரிகிறது.//.

      தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      நன்றி..
      நலம் வாழ்க..

      நீக்கு
    2. ///கண்ணில் அறிவும் , அன்பும் தெரிகிறது.///

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி..
      நலம் வாழ்க..

      நீக்கு
  24. அன்புடன் கருத்துரைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    மகிழ்ச்சி..
    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  25. மனதைத் தொட்ட கதை. நல்லதொரு முடிவு. நல்ல கதை. மிகவும் நன்றாக இருக்கிறது

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!