செவ்வாய், 16 ஜூலை, 2024

'எடுத்துப் போடும்' சிறுகதை - கொடுப்பினை - அன்னம்

 முன் குறிப்பு :

ஒரு சிறு மாறுதலாய்,  இந்த வாரம் 'எடுத்துப் போடும்' சிறுகதை!!  60 களில் விகடனில் வந்த ஒரு சிறுகதையை இங்கே எடுத்துப் பகிர்கிறேன்.  இது ஒரு மாறுதலுக்குதான்.  வழக்கம் போல நண்பர்கள் அனுப்பும் கதைகள் பிரசுரமானாலும் இது போல அவ்வப்போது செய்ய உத்தேசம்.  முன்னரும் கூட இப்படி மஹரிஷி போன்றோர் கதைகள் சிலவற்றை இப்படி பகிர்ந்திருக்கிறேன்.

இனி கதைக்குள் செல்வோம்....


கொடுப்பினை 

- அன்னம் -

               



"ஸ்பெஷல் மசாலா ​மூணேய்"  என்ற ​ஸப்ளையரின் குரல் நா​ணாவின் காதுகளில் மோதியது​. ​ 

ஹோட்டலில் அ​டுப்ப​டியில் நின்ற நா​ணாவின் கைகள் எந்திர கதியில் இயங்கின.  நீண்ட சதுரமான அந்த இரும்பு தட்டில் மூன்று வட்டங்கள் மாவினால் உருவாக்கப்பட்டன​.  ஸ்பெஷல் என்ற அடைமொழிக்கு ஒத்து வருகிறாற் போல சுட்ட எண்ணெயை இன்னும் கொஞ்சம் தாராளமாக வார்த்தான் நாணா.  தோசையை திருப்பி போட்டு மசாலாவை உள்ளே வைத்து காகிதத்தை சுருட்டுவது போல் லாவகமாக சுருட்டி வாசனைக்காக கொஞ்சம் நெய்யை தூவி தயாராக காத்திருந்த ​ஸர்வரின் கையில் கொடுத்தான்​. 

நா​ணா ஒண்டிக்கட்டை​.  தந்தையின் முகம் தெரியாது​.  தாயைப் பற்றி எங்கோ ஓரிரு கோடுகள் கிழித்தாற் போல ஞாபகம் வந்தது​.  அவள் முகத்தையும் பூரணமாக நினைவுக்கு கொண்டு வர இயலவில்லை​.  பாலக்காட்டுக்கு பக்கத்தில் ஒரு சிறிய ஊரில் அவன் தன் எட்டு வயது வரை கழித்தது ஞாபகத்துக்கு வருகிறது​.  யாரோ ஒரு பாட்டி அப்பாவுக்கு அம்மா​வோ, அல்லது அம்மாவை பெற்றவளோ​,  ​ஒருத்தி இருந்தாள்.  ஒரு சினிமா பார்ப்பதற்காக அவள் சுருக்குப்பையில் இருந்து இரண்டு​ அணா எடுத்த குற்றத்துக்காக அவள் போட்ட சூட்​டுத் தழும்பு இன்னும் அவளை நா​ணாவின் ஞாபகத்தில் நிற்க வைத்தது​.  

ஒரு நாள் இரவு அவன் திருட்டு ரயில் ஏறி சென்னைக்கு வந்தான்​.  மலையாளமும் தமிழும் கலந்த அவன் பேசிய பேச்சால் கவரப்பட்ட ஹோட்டல் முதலாளி அவனை எடுபிடி வேலைக்கு தன் ஹோட்டலில் சேர்த்துக் கொண்டா​ர். அதற்குப் பிறகு எத்தனையோ நிகழ்ச்சிகள் மறக்கத் தகுந்தவை மறக்க முடியாதவை என பல​ப் பல​.

கொஞ்சம் கொஞ்சமாக அவன் வேலையை கற்றுக் கொண்டு அங்கேயே ​ஸப்ளையராக மாறியது​, கரண்டியை கையில் பிடித்தது ஆகியவை தொழிலில் ஏற்பட்ட முன்னேற்றங்கள்​. முதலாளியின் 20 வயது மகள்​, பக்கத்து தெரு இளைஞனிடம் சேர்ப்பிக்க சொன்ன காதல் கடிதம் ஹோட்டல் முதலாளியிடம் அகப்பட்டு​, அவர் இவனை சந்தேகித்து வேலையை விட்டு விரட்டியது அவன் வாழ்க்கையில் ஒரு மைல்​ கல்.  

எத்தனையோ இடங்களில் வேலை மாற்றி மாற்றி பா​ர்த்தாகிவிட்டது​.  கடை வேலை அ​லுத்து​ப் போய்​, கல்யாண சமையல் கோஷ்டியிலும் கலந்து கொண்டாயிற்று​. அதுவும் பிடிக்காமல் ஹோட்டல்களில் சரக்கு மாஸ்டராக ஆனதும் உண்டு​. அவன் வயது 22 தாண்டியதும் ஒருவர் அவனுக்கு தன் பெண்ணை கொடுக்க முன் வந்தார்.  அந்தத் திருமணத்தன்று காலை அவர் அடைந்த மகிழ்ச்சி இரவு வரையில் கூட நீடிக்கவில்லை​. 

கல்யாணத்தன்று இரவு ​தனி அறைக்குப் போகும் முன்னால் மணமகள் மயக்கம் அடைந்து கீழே விழுந்தா​ள்.  கவனிக்க வந்த டாக்டர் சொன்ன செய்தி தான் ​எத்தனை பயங்கரம்​!  கங்கணம் கட்டிய கையுடன் வெளியே வந்த நாணா, அதற்கு பிறகு குடும்பம் பாசம் என்று எதையும் நினைத்துப் பார்க்கவில்லை​.  

பகலெல்லாம் மாடு மாதிரி உழைப்பான் அ​டுப்ப​டியில் வெந்து ​சாவான்​. சம்பாதித்த பணத்தை எல்லாம் இரவு சீட்டாட்டத்தில் தோற்பான்​. நாளைக்கு என்ன செய்வது என்ற கவலை இல்லாமல் அவன் வளர்ந்தான்​. இப்போது வயது 40 தாண்டி விட்டது​. 

சில நாட்களாக அவனுக்கு ஒரு ஆசை. அவன் வளர்ந்த அந்த பூமி​, வளர்ந்த அந்த மலையாள தேசத்தை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை எழுந்தது​.  அந்த ஆசை நிறைவேறக்கூடிய இல்லை​,  நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியது​.  

ஆனால் அதே சமயத்தில் இன்னும் ஒரு கெட்ட பழக்கமும் அவனை தொற்றிக் கொண்டிருந்தது​. உடல் அசதி தீர குடிக்க ஆரம்பித்தவனுக்கு​, இப்போது அது இல்லாவிட்டால் மறுநாள் வேலை செய்ய முடியாது என்ற நிலைமை உருவாகியது​. 

ஹோட்டல் வேலை முடிந்து எல்லோரும் படுத்துக் கொண்டாகிவிட்டது​. ​நாலைந்துபேராக கூடிக் கூடி பேசிக் கொண்டார்கள்​. ஏதோ சேகர் டூரிஸ்ட் கம்பெனி மகாபலிபுரம்​, சாத்தனூர்​, திருவண்ணாமலை​, சிதம்பரம்​, பழனி இப்படியெல்லாம் ஊருக்கு போய் கேரளத்தில் பாலக்காடு​, திருச்சூர்​, எர்ணாகுளம்​, மற்றும் திருவனந்தபுரம் ஆகியவற்றையும் பார்த்துக்கொண்டு ஏழு நாட்களுக்குள் திரும்பி வருவார்களாம்​.  சாப்பாட்டுடன் தலைக்கு ரூபாய் நூறு ஆகிறதா​ம். ​ 

ஹோட்டலில் வேலை செய்தவர்கள் நான்கு பேர் போய் வந்த பின்னர் தங்கள் அனுபவங்களை பத்து நாட்கள் ஏற்​றி இறக்கிச் சொன்னார்கள்​.  தானும் போகவேண்டும் என்று நா​ணாவுக்கு ஒரு ஆசை பிறந்தது​.  கையில் நயா பைசா இல்லை​.  முதலாளியிடம் போய் கடன் கேட்டான்​. 

​"உனக்கு ஏன்டா இந்த வேலை எல்லாம்​? சாயங்காலம் சாராயக் கடைக்கு போகிறவனுக்கு குருவாயூர் தரிசனம் கேட்கிறதா​?" என கடிந்து கொண்டார்​. 

நாராயணனுக்கு வீம்பு பிறந்தது​. மூன்று மாதங்களில் பணம் சேர்த்து அவன் குருவாயூருக்கு போய் வரத்தான் போகிறான்​. எல்லா இடங்களும் பார்க்கத்தான் போகிறான்​. இந்த முதலாளி மறுத்தால் இருக்கவே இருக்கிறது இன்னும் ​ஒரு இடம். கையில் தொழில் இருக்கும் போது என்ன பயம்​? 

அன்று முதல் அவன் குடிப்பதை நிறுத்தினா​ன்.  எப்படியோ பத்து ரூபாய் மிச்சம் பிடித்து ஒரு சேமிப்பு கணக்கை திறந்தா​ன். சேகர் டூரிஸ்ட் சர்வீஸ் இரண்டு மாதங்களில் இன்னும் ஒரு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது​. அவன் கூட வேலை பார்த்த கோவிந்தன் நாயர்​, ராமன் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் போகிறார்கள்​. நா​ணா தானும் அதற்காக பணம் சேர்ப்பதாக சொன்னான்​. 

அவர்கள் சிரித்தார்கள்​. ​"பார்க்கலாம்​... நீ பணம் சேர்த்து கொடு​.  நான் டிக்கெட் எடுத்து தருகிறேன்​" என்றான் கோவிந்தன் அவநம்பிக்கையுடன்​.  

இரண்டு மாதங்களில் 100 ரூபாய் சேர்ந்து விட்டது​. வெற்றிலை​, புகையிலை கூட தொடாமல் வைராக்கியமாக இருந்து பணம் சேர்த்தா​ன் நா​ணா. 

ன்று ஹோட்டலில் எக்கச்சக்கமான வேலை​. மறுநாள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டும்​. எப்படியோ முதலாளியிடம் பத்து நிமிஷங்கள் அனுமதி கேட்டு போய் பணம் வாங்கி வந்தான்​. பேங்க் பாஸ் புத்தகமும் பணமும் அவனிடத்தில் பத்திரமாக இருந்தன​. ஹோட்டலில் அதை எங்கும் வைக்க அவ​னுக்கு பயம்​. எந்த திருட்டு பயலா​வது அடித்துக் கொண்டு போய்விட்டால்​?  

அன்று அவன் வேலையில் தன் மன​த்தை ​லயிக்கச் செய்ய முடியவில்லை​. தோசைக்கு மாவை வட்டமாக இடும்போது குருவாயூரப்பனின் வட்ட முகம் கவனத்துக்கு வந்தது​. சாம்பாரில் மிதந்த முருங்கைக்காய் உப்பங்கழிகளில் தவழ்ந்த ஓடங்களை கவனப்படுத்தின​. பால் பொங்கும் போது மலம்புழா அணைக்கட்டில் தண்ணீர் மோதுவது அவன் நினைவில் வந்தது​.

நா​ணாவின் கவனத்தை கலைத்தா​ர் அப்​பு. ​ அவர் தான் அங்கு சீ​ஃப்​. 

​"டேய் நா​ணா...  இந்த பானையை ஒரு கை​ பிடி​" என்றா​ர் அவர்​. பானையில் சாதம் பதமா​கி இருந்தது​. அதை எடுத்து வைக்க தான் அவர் அவனை கூப்பிட்டார்​. 

நா​ணா அவர் பக்கம் போய் நின்று​, ஒரு மூச்சுப்பிடித்து​, பானையை தூக்கினான். காலடியில் அடுப்பு ​'திபுதிபு' என்று எரிந்து கொண்டிருந்தது​. வயிற்றை​ எக்கி ஒரு மூச்சு பிடித்து பானையை தூக்கியதால் இடுப்பு துண்டு நழுவியது​. இரண்டு கைகளாலும் சோற்றுப் பானையை பிடித்துக் கொண்டிருந்ததால் இடுப்பு ​துண்டை பிடிக்க முடியவில்லை​. அந்த ஒரு நொடியில் அவன் இடுப்பில் இருந்த பாஸ்​ புத்தக​மும்​, அதிலிருந்து ரூபாய் நோட்டுகளும் எரியும் ​நெருப்பில் விழுந்தன​.  ​மறுநிமிஷம் கருகி பஸ்பமாக போயின​.  பதறிப் போய் ​அடுப்பிற்குள் கையை கொண்டு போன​ நா​ணாவை தடுத்து பிடித்தா​ர் அப்​பு. 

நா​ணா அழுதே விட்டான்​.  ​"என் பணம்​.. என் பணம்​" என்று தலையில் அடித்துக் கொண்டான்​.  எல்லோரும் கூடிவிட்டனர்​.  முதலாளியும் ஓடி வந்தார்​.  ​"என்ன​ய்யா ரகளை இங்கே​?  ரூபாயை வைக்கும் இடத்தை பார்க்கவில்லை​? என்னிடம் கொடுத்தால் முழுங்கியா விடுவேன்​?" என்று அதட்டினார்​. 

கோவிந்தன் நாயர் ஆறுதல் சொன்னா​ன்​.  "நா​ம் நினைச்சா குருவாயூர் போக முடியுமா நா​ணா?  அவன் மனசு வச்​சு நமக்கு தரிசனம் தரதுன்னு எண்ணினா தான் கிடைக்கும்​" என்று கூறினா​ன்.

​ராமன் பிள்ளை வெறுப்புடன் காரி உமிழ்ந்தான். ​ "அதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா​? போன பிறப்புல என்ன பாவம் பண்ணி தொலைத்தாயோ​?" 

அன்று நா​ணா தூங்கவில்லை.  அப்படி அவன் என்ன தவறு செய்தான்​? யார் குடியை கெடுத்தான்?​ யாருக்கும் அறியாமல் கூட தீங்கிழைக்கவில்லையே​? தெய்வம் ஏன் அவனை வஞ்சிக்கிறது​? ​ற்ப ஆசைகளைக் கூட பூர்த்தி செய்து கொள்ள இயலாதபடி விதி ஏன் விளையாட வேண்டும்​? 

மறுநாள் புறப்பட்ட டூரிஸ்ட் ​பஸ்ஸில் கோவிந்த நாயர்​, ராமன் பிள்ளை மற்றும் ​பலர் குடும்பத்துடன் ஆனந்தமாக போவதை ஏக்கத்துடன் பார்த்தான் நா​ணா. 

​"ஆமாம்​!  அவர்கள் நிச்சயம் கொடுத்து வைத்தவர்கள்​!"  என்று எண்ணினான்​. 

ரண்டு நாட்களுக்கு பிறகு முதலாளி அவனை கூப்பிட்டு அனுப்பினார்​. புதிய நபர் ஒருவர் அவர் அருகில் உட்கார்ந்திருந்தார்​. 

​"நான் சொன்னேனே...   நா​ணா  இவன் தான்​.  எல்லா வேலையும் தெரியும்​. நம்பகமானவன்​. நீங்கள் அழைத்துப் போகலாம்​" என்றா​ர் முதலாளி​. 

நா​ணா ​திகைத்தான். 

​"என்ன விழிக்கிறாய்​" அதிர்ஷ்டம் உன்னை தானாக அழைக்கிறது​. அவர் நாராயணா டூரிஸ்ட் ஏஜென்​ஸி முதலாளி ​அனந்தசாமியாக்கும்​.... 70 நாள் வடதேச யாத்திரை​...  உடுப்பி​, மதுரா​, காசி​, கயை​, ஏன் காஷ்மீர் பத்ரிநாத் கூட உண்டு​.  கூட வரும் சமையல் காரருக்கு திடீரென்று வைசூ​ரி கண்டு விட்டதாம்​.  நீ போகிறாயா​" மொத்தமாக 500 ரூபாய் தருகிறார்கள்​" 

நா​ணா தன் கைகளை ​கூப்பினா​ன்.  ​"ஆண்டவனே குருவாயூருக்கு புறப்பட்ட ​என்னை நீ தடுத்துவிட்டாய் என்று திட்டினேன்​!  நீ என்னை துவாரகைக்கு கூப்பிடுகிறாய்​..!"  என்று வியந்தான் 

இந்த சமயத்தில் ஓடோடி வந்தார் ஒருவர்​. ​"இந்த அநியாயத்தை கேட்டீர்களா​? நம்ம கோவிந்தன்​, ராமன் போன டூரிஸ்ட் பஸ் ஆக்சிடென்ட்டில் மாட்டிண்டிடுத்தாம். எல்லோரையும் பாலக்காடு ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கிறார்களாம்​... ​ஃபோன் வந்தது​" 

நா​ணா ​சிலையாக நின்றான்​.  வந்தவருக்கு எத்தனையோ வேலை​. ஊர்க் கதைகளை கேட்டுக் கொண்டிருக்க நேரமில்லை​. 


​"அப்படியானால் நாளைக்கு மாலை ரயில்வே ஸ்டேஷனில் உங்களை பார்க்கலாம்​"  என்று ​எழுந்தார்​ அவர். 

​"இல்லை ​ஸார்​!  என்னை மன்னித்து விடுங்கள்​. நான் வருவதற்கு இல்லை​. கோவிந்தனும் ராமனும் என்ன பாடுபடுகிறார்களோ​... அவர்கள் உடல் தேறி வேலைக்கு வர இன்னும் எத்தனை நாட்கள் ஆகு​மோ?  இத்தனை நாள் கூட பிறந்த​வன் மாதிரி பழகிட்டு இப்போ அவர்களை தவிக்க விட்டு வருவது சரியா​? எனக்கு தரிசன பாக்கியம் இல்லை ​ஸார்​.... நான் கொடுத்து வைக்காதவன்​.." என்றான்​. 


முதலாளி​யின் கண்களில் நீர் கசிந்தது​. இத்தகைய ஒரு நல்ல ஆத்மாவை சந்திக்க அந்த ஆண்டவன் தான் கொடுத்து வைக்கவில்லை என்று பட்டதுஅவருக்கு​. 

********************************************************

பின் குறிப்பு :- 

Meta AI இடம் படம் கேட்டால் நாம் நினைத்தபடி தர மாட்டேன் என்கிறது, எவ்வளவு குறிப்புகள் திரும்பத் திரும்பக் கொடுத்தாலும்!  அதைப் பொறுத்தவரை 'குக்' என்றால் தலையில் தொப்பி இருக்க வேண்டும்!  நம்மூர் சாதாரண கபே கடைகளின் தோசையாளரை அது எப்படி அறியும்!

அன்னம் புகழ் பெற்ற எழுத்தாளரா, தெரியாது.  அப்போது நெகிழ்ச்சியுடன் படிக்கப் பட்டிருக்கும்,. திருப்பங்கள் புதுசாய் இருந்திருக்கும். இப்போது இதை படிக்கும்போது, நாம் படித்துப் படித்து பழகிப்போன திருப்பங்கள்!  எனினும் அந்த காலகட்டத்தில் வந்த கதைகளின் மாதிரிக்கு ஒன்று இன்று!  அவ்வப்போது இது தொடரும்.

= = = = = = 

84 கருத்துகள்:

  1. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று..

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க...  வாழ்க...  வாங்க செல்வாண்ணா...  வணக்கம்.

      நீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம்
    வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. எபியில் புதிய முயற்சி..
    பூத்துக் குலுங்கட்டும் தமிழ்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. புதிய முயற்சி அல்ல.. ஏற்கெனவே சில வருடங்களுக்கு முன் தொடங்கி பாதியில் நேரமின்றி நின்று போனதுதான்!

      நீக்கு
  5. நீ துவாரகைக்கு கூப்பிடுகிறாய்..... அத்துடன் கதை முடிந்தது.

    ட்விஸ்ட் என்பதற்காகப் போட்டிருக்கும் கீழ்பகுதிகள் சுவாரசியமாக இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்..   அது ரொம்ப நாடகத்தனமாய் இருக்கு.  ஆனால் வெளி வந்த காலத்தைப் பார்க்கணும்...   இப்போ நமக்கு பழகிப் போச்சு அவ்ளோதான்!

      நீக்கு
    2. யெஸ் நெல்லை. டிவிஸ்ட் என்பதை விட நாணாவுக்கு இப்படியும் மனசு இருக்குன்னோ இல்லை மாரல் ஆஃப் த ஸ்டோரின்னோ அப்போதைய காலகட்டத்திற்குச் சொல்லியிருக்கிறார். அப்ப வாசகர்கள் இதை எதிர்பார்த்திருப்பாங்க.

      இப்ப நாம் எழுதுவது பிற்காலத்தில்...ஃபூ இம்புட்டுத்தானா ஹூம் bore என்று சொல்லப்படலாம். டெக்னாலஜி யுகமாக மாறுவதால் கதைகள் பெரும்பாலும் டெக்னாலஜி சார்ந்தவையாக உணர்வு ரீதியாக இல்லாமல்.... இல்லைனா ரோபோக்களும் கூட அழுவதாகச் சிரிப்பதாகச் சொல்லி கதைகள் வரலாம்..அப்பவும் மாமியார் மாமனார் படுத்தல் கதை வரலாம்...இப்ப குடிகாரக் கணவன் போல ரோபோக்களிலும் அது வேறு விதமாக வந்து இப்படி./........வாசிப்பது கூட கேப்ஸ்யூல் வடிவத்தில் வரலாம்....எனக்கு இப்படியான கற்பனை சிந்தனைகள் கதையாக மனதில் ஓடியது ரயிலில் வந்தப்ப!!!! ஹிஹிஹி......மனதில் இருந்த மற்றொரு கீதா சொன்னா ஹூம் அதுல கூட இந்த மாமனார் மாமியார், குடும்பம் குடி இல்லாம கதை தோணாதோன்னு. மனசுல நிறைய வந்தாலும் இப்பலாம் எழுதுவதில் ஸாரி தட்டச்சுவதில் மனம் ஒத்துழைப்பதில்லை. பேசாம மெட்டா ஏஐ ய அஸிஸ்டெண்டா வைச்சுக்கலாமான்னு ஹாஹாஹாஹா....ஆனா என் வாட்சப்பில் மெட்டா ஏஐ இன்னும் வரலை.

      கீதா

      நீக்கு
    3. வாட்ஸ்அப் மெசஞ்சரை அப்டேட் செய்யவும். அப்போ மீடா தென்படும்.

      நீக்கு
    4. கௌ அண்ணா, அப்டேட்டட்!!!!! ஆகதான் இருக்கு. அதுவும் முயற்சி செய்தேனே.....

      கீதா

      நீக்கு
  6. நாணா, சூப்பர் கேரக்டர் என்று நினைக்கும்படியாக எதுவும் இல்லை. அவரு நல்லவரு, வல்லவரு என்னும்படியான தை ஓட்டமும் இல்லை.

    எடுத்துப் போடும் கதை... புதிய முயற்சி. படித்த கதையுடன் போட்டிக்கு நிற்காமல் இருந்தால் சரிதான்.

    நீங்க, வலைத்தளங்களிலிருந்து கதை அல்லது கதை சார்ந்த பதிவுகளை இங்கு வெளியிட்டால் வித்தியாசமாக இருக்கும். எனக்கே அப்படிப்பட்ட கதைகள் (வலைத்தளங்கள்) லிங்க் கொடுக்கலாமா என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாணாவை ஒரு இயல்பான மனிதனாகப் பாருங்கள்.  சாதாரண ஆம் ஆத்மியின் வாழ்வில் ஒரு சம்பவ்!

      படித்த கதை விமர்சனம் அல்லது சிலாகிப்பின் பாற்பட்டது.  இது ஜஸ்ட் கதைப் பகிர்வு.  தட்ஸ் ஆல்.

      வலைத்தளக் கதைகள்?  ம்ம்ம்ம்...  செவ்வாயில் சரிப்படும் என்று தோன்றவில்லை.  அவற்றை படிச்ச கதையில் விவரிக்கலாம்..  நீங்கள் ஒன்று எழுதுங்களேன் நெல்லை...

      நீக்கு
    2. எனது காஃபி வித் கிட்டு பதிவுகளில் அப்படி அவ்வப்போது படித்த சிறுகதைகளின் லிங்க் கொடுப்பதுண்டு...

      நீக்கு
    3. ஆம், பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
    4. நாணா, சூப்பர் கேரக்டர் என்று நினைக்கும்படியாக எதுவும் இல்லை. அவரு நல்லவரு, வல்லவரு என்னும்படியான தை ஓட்டமும் இல்லை.//

      நெல்லை ஏன் அப்படிப் பார்க்க வேண்டும்? அவன் ஒரு சாதாரண மனிதன் அதுவும் வாழ்க்கையில் புரட்டி அடிக்கப்படுகிறான்.

      எல்லோரும் பிறக்கும் போதே நல்லவர்களாகப் பிறப்பதில்லை. ஜீன் மற்றும் வாழ்க்கைச் சூழல் அனுபவங்கள்தானே தீர்மானிக்கின்றன ஒருவரது வாழ்க்கையை பல கட்டங்களில். சில சினிமாக்களில் முதல் சீனிலேயே ஹீரோவை நல்லவனாகக் காட்டுவது போல காட்டணுமா என்ன!!!! அதைத்தான் ஆசிரியர் அந்தக் கதாபாத்திரத்தை மிக இயல்பாகக் காட்டியிருக்கிறார்.

      அவனுடைய அனுபவங்கள் அவனை மாற்றுகின்றன என்றும் கொள்ளலாம். அதனால்தான் அவனுக்குச் சுற்றிப் பார்க்கும் ஆர்வம் எழும் போது கெட்ட பழக்கங்களை விட்டுப் பைசாவை சேகரிக்கிறான். அடுத்து கூட இருந்தவர்கள் விபத்தில் சிக்கும் போது தன் ஆசையைக் கொஞ்சம் மூட்டை கட்டி ஒதுக்கிட்டு அவர்களைக் கவனிக்கலாம் என்றும் நினைக்கும் ஒரு ஈரம் அவன் உள்ளத்தில் இருக்கிறது அது இவ்வளவு நாள் வெளியில் தெரியவில்லை இப்ப தெரிகிறது என்றும் கொள்ளலாமே!

      கீதா

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய செவ்வாய் கதைகளில் நல்ல முயற்சியாக மலர்ந்துள்ள "எடுத்துப் போடும் கதைகள்" என பகிர்ந்துள்ளதற்கு பாராட்டுக்கள்.எ. பியில் "கேட்டுப் போடும் கதைகள்" என்பது,போல், "எடுத்துப் போடும் கதைகள்" எனற தலைப்பில் வந்துள்ளமைக்கு வாழ்த்துகள். அன்னம் என்ற எழுத்தாளர் கதைகளை அப்போதைய பத்திரிக்கைகளில் படித்துள்ளதாக நினைவு. இந்தக்கதையையும் பிறகு படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிழை திருத்தம்- எ. பியில், "கேட்டு வாங்கிப் போடும் கதைகள்" என்று முன்பு வந்தது போல். என்று படிக்கவும்.

      நீக்கு
    2. முன்பு மகரிஷி, சு. ராஜு கதைகள் இதே போல பகிர்ந்துள்ளேன். இனி இது அவ்வப்போது தொடரும்.

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. கதை நன்றாக இருக்கிறது. நா​ணாவை வாழ்க்கை வஞ்சித்து விட்டது.
    வாழ்க்கை துணை ஏமாற்றம். முதாலாளி பெண்ணால் வேலை போய் இருக்கிறது. பந்த பாசம், குடும்ப வாழ்க்கையை வெறுத்து இயந்திரம் போல வாழ்ந்து இருக்கிறார்.

    கெட்டபழக்கம் எல்லாம் விட்டு பணம் சேர்த்து குருவாயூரப்பனின் தரிசனம் காண நினைத்தது தப்பா?

    //தெய்வம் ஏன் அவனை வஞ்சிக்கிறது​? அ​ற்ப ஆசைகளைக்கூட பூர்த்தி செய்து கொள்ள இயலாதபடி விதி ஏன் விளையாட வேண்டும்​?//

    நாணாவின் நினைப்புதான் நமக்கும்.

    //நா​ணா தன் கைகளை ​கூப்பினா​ன். ​"ஆண்டவனே குருவாயூருக்கு புறப்பட்ட ​என்னை நீ தடுத்துவிட்டாய் என்று திட்டினேன்​! நீ என்னை துவாரகைக்கு கூப்பிடுகிறாய்​..!" என்று வியந்தான் //

    கண்ணன் மனம் இறங்கி விட்டான் என்று மகிழ்ந்தால் அதுவும் இல்லை.

    //"இல்லை ​ஸார்​! என்னை மன்னித்து விடுங்கள்​. நான் வருவதற்கு இல்லை​. கோவிந்தனும் ராமனும் என்ன பாடுபடுகிறார்களோ​... அவர்கள் உடல் தேறி வேலைக்கு வர இன்னும் எத்தனை நாட்கள் ஆகு​மோ? இத்தனை நாள் கூட பிறந்த​வன் மாதிரி பழகிட்டு இப்போ அவர்களை தவிக்க விட்டு வருவது சரியா​? எனக்கு தரிசன பாக்கியம் இல்லை ​ஸார்​.... நான் கொடுத்து வைக்காதவன்​.." என்றான்​. //

    தன்னை காரி உமிழ்ந்து இழிவாக பேசிய ராமன் நிலை கண்டு மனம் இரங்கி அவர்வளுக்கு உதவ நினைக்கும் உயர்ந்த மனத்தை காட்ட கண்ணன் நினைத்து இருந்தான் போலும்.

    இறைவனின் திருவுள்ளத்தை யார்தான் அறிய முடியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன முன் ஜென்மக் கர்மமோ...  அதைத் தீர்க்க நாணாவுக்கு இறைவன் வேறு சேவைகள் விதித்திருக்கிறான் போலும்.   
      நன்றி கோமதி அக்கா.  கதையை அலசி விட்டீர்கள்.

      நீக்கு
  11. கதை நன்றாக இருக்கிறது. ஆனால் நா​ணாவின் வாழ்வில் மிஞ்சியது
    ஏமாற்றம் மட்டுமே..

    இது முன்பே எடுக்கப்பட்ட முயற்சி தான் என்பது எனக்குத் தெரியாது..

    தொடரட்டும் இப்பணி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாணா அதை ஏமாற்றமாக நினைக்கிறானா என்பதுதான் கேள்வி...  பிறருக்கு உதவுவதில் இறைவனைக் காண்கிறான் போலும்.

      நீக்கு
    2. இதையும் சொல்ல நினைத்தேன் அதுக்குள்ளே மேலே வந்திட்டேன்.

      //நாணா ஏமாற்றத்தில் விரக்தியில் சொல்கிறானா இல்லை மனமுவந்து சொல்கிறானா என்பது வாசகர்களின் ஊகத்துக்கும் எடுத்துக் கொள்ளலாம் //

      இதைக் கீழ போட வந்தேன்....இப்ப உங்க கருத்தும் பார்த்துவிட்டேன் ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    3. இங்கே போட்ட கமென்ட் வந்திருக்கான்னு பாருங்க ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  12. இப்பதான் எங்கள் ப்ளாகர் அக்கவுண்டுக்குள் நுழைய முடிந்தது!! வெங்கட்ஜி தளத்திற்கு, இன்னும் சில தளங்களில் என் அக்கவுண்டிலிருந்தே கருத்து போட முடிகிறது.

    இந்தப் புதிய முயற்சியும் நல்லாருக்கு ஸ்ரீராம். எடுத்துப் போடும் கதை!!

    வருகிறேன் வாசித்துவிட்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன பிரச்னை செய்கிறதா பிளாக்கர்..?  கஷ்டம்தான்.

      நீக்கு
    2. இல்லை ஸ்ரீராம் ப்ளாகர் அக்கவுன்ட் துளசியின் அக்கவுன்ட் இல்லையா அது அவரது தனிப்பட்ட அக்கவுண்டும் கூட. நான் சிங்க் செய்து வைத்திருப்பேன் அது போய்விட்டதுனா....அக்கவுன்ட் ஓப்பன் பண்ணும் போது செக்யூரிட்டி செக் செய்ய அவர் ஃபோனுக்குத்தான் செல்லும் இல்லையா...அப்ப அவர் அதைப் பார்த்து இது நான் தான் ன்னு சொல்லணுமே!!

      என் அக்கவுண்டை ப்ளாகரில் சேர்க்க முடியலை.

      எங்கள்ப்ளாக் தளம் "ஒன்லி கூகுள் அக்கவுன்ட்" நு செட்டிங்க்ஸில் கமென்ட் பகுதியில் வைச்சிருக்கீங்கன்னு நினைக்கிறேன். அப்படி வைத்திருப்பவர்கள் தளங்களில் (கோமதிக்கா, கமலாக்கா, கில்லர்ஜி) தளங்களில் என் அக்கவுண்டிலிருந்து கருத்து போட முடியாது. என் அக்கவுண்டும் கூகுள் தான் ஆனாலும் போட முடிவதில்லை. போட முனைந்தால் கூகுள் அக்கவுண்டிலிருந்து கமென்ட் போடவும்னு வரும். துளசிதரன்ற பெயர்லதான் வரும்.

      வெங்கட்ஜி தளம் எங்கள் தளம் போன்ற தளங்களில் கமென்ட் மாடரேஷன் செட்டிங்க்ஸில் anyone என்ற ஆப்ஷன் வைத்திருப்பதால் என் அக்கவுண்டிலிருந்தும் - கூகுள் அக்கவுன்ட் தான் - போட முடியும ஆனால் பெயரில்லா என்று வரும்.

      வெங்கட்ஜி anyone என்று வைத்திருப்பார் ஆனால் கமென்ட் மாடரேஷன் வைக்கலை. நாங்களும் anyone என்று தான் வைத்திருக்கிறேன் ஆனால் மாடரேஷன் வைத்திருக்கிறேன். தேவையில்லா கமென்ட்கள் வந்தால் பப்ளிஷ் பண்ணுவதில்லை

      கீதா

      நீக்கு
    3. என்ன இப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்க மாட்டேன்.  எனக்கும் இந்தப் பிரச்னைகள் வருகின்றன.  ஏகாந்தன் ஸார் பதிவில் அல்லது வர்ட்ப்ரெஸ் பதிவுகளில் என்னால் கமெண்ட்டே போடமுடிவதில்லை.  முன்னர் பழைய போனில் போனிலிருந்து பின்னூட்டங்கள் எழுதுவேன், பதில் கொடுப்பேன்.  இப்போது இந்த போனில் அது முடியவில்லை.  எத்தனை முறை லாகின் செய்தாலும் மண்ணாந்தை மாதிரி அப்படியே நிற்கிறது.

      ஆமாம், இந்த மண்ணாந்தை என்று சொல்கிறோமே, ஏன், என்ன அர்த்தம்?  எப்படி இந்த மாதிரி விஷயங்களில் அந்த வார்தையைப் போடுகிறோம்?

      நீக்கு
    4. ஆ! ஸ்ரீராம் கவனமா இருங்க....மண்ணாந்தை எனும் சொல்லைப் பயன்படுத்தலாமான்னு!!!!!!!!!

      எங்க ஊர்ப்பக்கம் வெண்ணாந்தைன்னு சொல்றதுண்டு. அறிவிலி, முட்டாள் எனும் அர்த்தத்தில். ஒரு வேலை இந்தச் சொல்வழக்கு அதாவது மண்ணாந்தை என்பது மலைப்பாம்பையும் சொல்வதால் அது அப்படியே அசையாமதானே இருக்கும் இரை பிடிக்க...பிடிச்சப்புறம் கேட்கவே வேண்டாம் அப்படியேதான் மயங்கிக் கிடக்கும் அதனால அந்த அர்த்தம் வந்ததோ என்னவோ

      கீதா

      நீக்கு
    5. :-)) அத சொல்லுங்க...   பார்த்து பேசணும்!

      நீக்கு
    6. ஸ்ரீராம் எனக்கும் ஏகாந்தன் அண்ணா தளத்தில் போட முடியலை ஆனா இப்ப அதிசயமாக எனக்கு இப்ப வேர்ட் ப்ரஸ்ஸில் அவர் தளத்தில் போட முடிந்தது.

      கீதா

      நீக்கு
    7. என்னை அது அனுமதிக்க மாட்டேன் என்கிறது!  ஏகாந்தன் ஸார் வேற இப்போதெல்லாம் இந்தப் பக்கமே வருவதில்லை...

      நீக்கு
  13. நம் விமர்சனம் அல்லாமல் வாசகர்களின் விமர்சனத்திற்கு விடும் இந்த முறையும் நல்லாருக்கு ஸ்ரீராம். நிறைய கதைகள், எழுத்தாளர், அவர்கள் எழுதும் நடை, கரு அறிமுகமாவது நல்ல விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயிற்சியாகவும் இருக்கும், சுதந்திரமாக விமர்சிக்கலாம்.

      நீக்கு
    2. யெஸ்ஸு....அதுவும் கலந்துரையாடல் போல வரும் போது மாற்றுக் கருத்தும் நமக்குக் கிடைக்குமே. இப்ப கீழ உங்கள் கருத்து என் கருத்துப் பரிமாற்றம்.

      கீதா

      நீக்கு
    3. இது என்ன புது விஷயமா இருக்கு? நாம கதையை விமர்சனம் செய்து நல்லால்லை என்றால், பொதுவா கதையை வெளியிட்டவங்க, தன்னைக் குறை சொல்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளத்தான் வாய்ப்பு அதிகம்

      நீக்கு
  14. கதை செல்லும் நடை நல்லாருக்கு ஸ்ரீராம்., கதையும் நல்லாருக்கு அதாவது அந்தக் காலத்தில் எழுதியதை அக்காலத்தின் ஓட்டத்திலேயேதான் வாசித்தேன்.

    நாணா போன்ற கதாபத்திரங்கள் நிஜ வாழ்வில் நிறைய உண்டு. குறிப்பாக இப்படியான வேலை செய்யும் இடங்களில். சரக்கு தூக்கும் வேலை இடங்களில், பாரிஸ் கார்னர் சென்றால் இப்படியான கதாபத்திரங்களைப் பார்க்கலாம்.

    இன்னும் வருகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் ஆம் ஆத்மி!

      நீக்கு
    2. ஆம் ஆத்மி? அப்படினா? ஓ சாதாரண மனிதன் என்ற அர்த்தம்? கரெக்ட் தான் நாணா ஒரு சாதாரண மனிதன் வாழ்க்கையில் அடிப்பட்டவன்.

      கீதா

      நீக்கு
  15. நாணா மிக மிகச் சாதாரண மனிதன்....வாழ்க்கை அவனை எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் செய்கிறது. அவனைப் பற்றி வாசிக்கும் போதும் மனம் கொஞ்சம் வருந்துகிறது. என்னடா இது வாழ்க்கை என்று. பாவம் நாணா என்றும் எண்ண வைக்கிறது.

    //"நான் சொன்னேனே நா​ணா... இவன் தான்​. எல்லா வேலையும் தெரியும்​. நம்பகமானவன்​. நீங்கள் அழைத்துப் போகலாம்​" என்றா​ர் முதலாளி​.

    நாணாவிடம் திரும்பிய முதலாளி

    ​"என்ன விழிக்கிறாய்​" அதிர்ஷ்டம் உன்னை தானாக அழைக்கிறது​. அவர் நாராயணா டூரிஸ்ட் ஏஜென்​ஸி முதலாளி ​அனந்தசாமியாக்கும்​.... 70 நாள் வடதேச யாத்திரை​... உடுப்பி​, மதுரா​, காசி​, கயை​, ஏன் காஷ்மீ​,ர் பத்ரிநாத் கூட உண்டு​. கூட வரும் சமையல் காரருக்கு திடீரென்று வைசூ​ரி கண்டு விட்டதாம்​. நீ போகிறாயா​" மொத்தமாக 500 ரூபாய் தருகிறார்கள்​"

    நா​ணா ​திகைத்து நின்றான். //

    இப்படி இங்கு கதையை முத்திருக்கலாமோ என்றும் தோன்றியது. ஆனால் நான் எழுத்தாளர் இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது இந்தக் காலம். அது அந்தக் காலம். அவர் ஒரு நீதியையும் காரணத்தையும் சொல்லி விட வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.

      நீக்கு
    2. ஆமாம் அது புரிந்தது ஸ்ரீராம். அந்தக் காலத்துக் கதைப் போக்கு..

      கீதா

      நீக்கு
  16. இந்த சமயத்தில் ஓடோடி வந்தார் ஒருவர்​. ​"இந்த அநியாயத்தை கேட்டீர்களா​? நம்ம கோவிந்தன்​, ராமன் போன டூரிஸ்ட் பஸ் ஆக்சிடென்ட்​டில் மாட்டிண்டிடுத்தாம். எல்லோரையும் பாலக்காடு ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கிறார்களாம்​... ​ஃபோன் வந்தது​" //

    இது கொஞ்சம் புகுத்தப்பட்டதோ என்று தோன்றினாலும், நாணாவை வாழ்க்கை புரட்டிப் போட்டுப் பதம் பார்த்தாலும், நாணாவினுள்ளும் இன்னொரு பக்கம் இருக்கிறது என்பதைக் காட்டவும் வாழ்க்கை அனுபவங்கள் அவனுக்குப் பல பாடங்களைப் போதித்திருக்கலாம் என்பதும் தெரிகிறது கடைசியில் அவன் தன் நண்பர்களுக்காக இந்த வாய்ப்பை விடுவது. அதனால் ஆசிரியர் அப்படி ஒரு முடிவை வைத்திருக்கிறார்.

    //எனக்கு தரிசன பாக்கியம் இல்லை ​ஸார்​.... நான் கொடுத்து வைக்காதவன்​.// அப்போதைய விரக்தி.

    ஆனால் ஆசிரியர் இந்த வரியைத் தவிர்த்திருக்கலாம். ஏனென்றால் இந்த வரிக்கு முன்னால் சொல்லியிருக்கும் வரிகளைப் பார்க்கறப்ப அவன் அவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறான் என்றால் இந்த வரி அதற்கு முரணாக நிற்கிறது.

    இதைச் சொல்லாமல் இருந்திருந்தால் முதலாளியின் கடைசி வரிகள் இன்னும் பொருந்திப் போயிருக்கும்.

    இப்போது அந்த வாய்ப்பு நழுவினாலும், பின்னர் வரலாமே! அதுவும் அந்த ட்ராவல் ஏஜன்ட் நாணாவின் முதலாளிக்குத் தெரிந்தவர்தானே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் கீதா...  உதவ நினைக்கிறார் என்றாலும் அவருக்கும் ஆதங்கம் இருக்கும்தானே?  அதனால் அபப்டிக் சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளலாம்.  கதையைப் படித்து முடிக்கும் நீங்கள் நாணாவுக்கு அண்டபிஹா வாய்ப்பு கட்டாயம் பின்னாளில் வரும் என்று ஆசீர்வதிப்பீர்கள்; ஆசைப்படுவீர்கள்!

      நீக்கு
    2. // அண்டபிஹா வாய்ப்பு //

      கடவுளே... டைப்புவதில் வேகம், அவசரம்! "அந்த வாய்ப்பு" என்று படிக்கவும்!

      நீக்கு
    3. கண்டிப்பாக இருக்கும், ஸ்ரீராம். ஆமாம் பாசிட்டிவ் அந்த நினைப்பு வந்தது...அவனுக்கு அந்த வாய்ப்பு வர வேண்டும் என்று தோன்றியது ஸ்ரீராம். ஆமாம் சாதாரண மனிதருக்குத் தோன்றுவதுதான்.

      எனக்குக் கதை பிடித்திருக்கு ஸ்ரீராம். ஆசிரியரின் எழுத்து, கரு எல்லாமே

      கீதா

      நீக்கு
    4. ஹாஹாஹாஹா டைப்பிங்க் புரிந்தது ஸ்ரீராம். எனக்கும் கீகள் குதிக்கின்றன. இங்கு குதிக் என்று அடித்துவிட்து மேலே கர்சர் போய் கின்றன என்றும் அடிக்கிறது!!!!!!

      அதாவது நாமெல்லாம் அவ்வளவு வேகமாகத் தட்டச்சுவதில் வல்லவர்கள்னு எடுத்துக்குவோம். இப்ப ஹையர் டெஸ்ட் வைச்சா கூட நாம பின்னிடுவோம்ல!!! ஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    5. இன்றைய நிலையில் படிக்கும்போது மிகச்சாதாரணமான கதை, இல்லையா கீதா?  அப்புறம் அப்புறம் இது மாதிரி பல அக்கதைகளை நாம் படித்து விட்டோம்!

      நீக்கு
    6. // அதாவது நாமெல்லாம் அவ்வளவு வேகமாகத் தட்டச்சுவதில் வல்லவர்கள்னு எடுத்துக்குவோம். //

      சரி...  அப்படி சொல்லி ஏமாத்திடலாம்!

      நீக்கு
    7. இன்றைய நிலையில் படிக்கும்போது மிகச்சாதாரணமான கதை, இல்லையா கீதா? அப்புறம் அப்புறம் இது மாதிரி பல அக்கதைகளை நாம் படித்து விட்டோம்!//

      ஆமாம் ஸ்ரீராம் கண்டிப்பாக....ஆனால் நாம் அன்றைய காலகட்டத்தோடு இந்தக் காலகட்டத்தை ஒப்பிடாமல் வாசிக்க வேண்டும்.

      அந்தந்தக் காலகட்டத்து எழுத்து. அந்த ரீதியில்தான் நான் வாசித்து நன்றாக இருக்கு பிடித்திருக்கு என்று நினைத்தேன்.

      இப்போதைய கட்டத்தில் விமர்சிக்க நினைத்தால் நிறைய தோன்றும் எனக்கு. மன ரீதியில் கூட

      கீதா

      நீக்கு
    8. // இப்போதைய கட்டத்தில் விமர்சிக்க நினைத்தால் நிறைய தோன்றும் எனக்கு. மன ரீதியில் கூட //

      ஆமாம்...  தோரணம் கட்டிடலாம்!

      நீக்கு
    9. கடைசிப் பகுதி கொஞ்சம் ட்ரமாட்டிக் தான்...புகுத்தல்தான் இருந்தாலும் நீங்க சொல்லியிருப்பது போல மாரல் ஆஃப் த ஸ்டோரின்னு சொல்ல நினைக்கும் காலம்.

      கீதா

      நீக்கு
  17. நாணா போன்றவர்கள் நிஜத்திலும் கண்டதுண்டு. நல்லதொரு கதை. எடுத்துப் போடும் கதையும் நன்றாகத் தான் இருக்கிறது. தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  18. ஸ்ரீராம் பின் குறிப்பு வாசித்து சிரித்துவிட்டேன். நீங்களே ஆம் ஆத்மினு தானே சொல்லிருக்கீங்க பாருங்க மெட்டா ஏஐ க்கு உங்க மனசு புரிஞ்சு கரெக்டா படம் எடுத்துக் கொடுத்திருக்கு!!!!!!

    இங்க மெட்டா ஏ ஐ யோடான துளசியின் அனுபவத்தை ஓரிரு வரிகளில் தரலாம்னு நினைத்தேன். அவர் கொடுக்கிறேன்னு சொன்னார். பதிவாகவும் வரும். மலையாளத்தில் அவர் அதைப் பற்றிப் பேசி காணொளியாக, அவர் அதனுடன் உரையாடி பெற்ற ஆங்கில நோட்ஸ் படங்களாகப் போட்டு போட்டிருக்கிறோம், யுட்யூபில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீட்டா எல்லாவற்றையும் வட இந்திய வாசனையிலேயே பார்க்கிறது!  அதுதான் பிரச்னை!

      நீக்கு
    2. புரிகிறது. அப்படினா அதை உருவாக்கியவரின் இன்புட் ஆக இருக்கும்!!

      கீதா

      நீக்கு
  19. நான் படிச்ச கதை பகுதியில் என்னுடைய ஆக்கங்களில் நான் பிரபல எழுத்தாளர்களின் கதைகளை கையாளவில்லை என்பதை கண்டிருக்கலாம். கல்கி, சாவி,புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், தூரன், சுஜாதா, மணியன்,லக்ஷ்மி,சிவசங்கரி என்று பலர்.
    ஆகவே "எடுத்து போடும் கதை" என்ற தலைப்பை மாற்றி "பிரபலங்களின் சிறந்த கதை" என்று பெரிய எழுத்தாளர்களது கதைகளை வெளியிடலாம் என்பது எனது கருத்து.
    அன்றைய காலகட்டத்தில் சிறுகதைகளிலும் சினிமா தாக்கம் இருந்தது. ஆகவே திடீர் திருப்பங்கள், நிறைவான முடிவு போன்ற உத்திகள் நிறைந்த கதைகளே அச்சில் வந்தன. வாசகர்களின் ரசனையும் அவ்வாறே இருந்தது. இக்கதையும் வாசகர்களுக்காக எழுதப்பட்டது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜெ கே அண்ணா ஆனால் இணையத்தில் இப்படியான ஆசிரியர்களின் கதைகள் இல்லை. இப்படியானவர்கள் எப்போதேனும் பத்திரிகைக்கு எழுதி அனுப்பியவர்களாக இருக்கலாம். நெட்டில் அன்னம் பற்றி கிடைக்கவில்லை. அன்னம் என்று இதழ் இருந்ததாகத் தெரிகிறது. என்னிடமும் என் மாமனாரின் தொகுப்பில் கல்கியில் வந்த கதைகள் இருக்கின்றன.

      கீதா

      நீக்கு
    2. தொடர்ந்து பிரபலங்களின் சிறந்த சிறுகதைகள் என்று எடுப்பது சிரமம்.  மேலும், சிறந்த சிறுகதை அது என்று எதை வைத்து தீர்மானிப்பது!  அவ்வப்போது கிடைப்பதையு, ஓரளவு பிடித்ததை பகிர்கிறேன்.

      நீக்கு
  20. அருமையான மனதை தொட்ட கதை. டூரிஸ்ட் பஸ் 100 ரூபாய் இதை எல்லாம் தவிர்த்துவிட்டால் இந்தக்காலத்த்க்கும் பொருந்தும் கதையாக இருக்கும் என்று தோன்றுகிறது. இறுதியில் கொஞ்சம் நீட்டியிருப்பதாக இருந்தாலும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் துளசி ஜி... எல்லோர் கருத்தும் அதையே சொல்கிறது!

      நீக்கு
  21. கதை நன்றாக இருக்கிறது. தொடரட்டும் இப்பணி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி.  முதல் வருகையா?  தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  22. ஓ! நீங்கள் மெட்டா ஏஐ யிடம் கேட்டு வாங்கிய படங்களோ!

    நானும் இது போல் ஓட்டம் துள்ளல் (கேரளத்து நடன வகை) படங்களைக் கேட்டேன். அதனால் தர முடியவில்லை. நாங்கள் இருவரும் கொஞ்ச நேரம் பேசினோம். அது அனுப்பிய படங்கள் பலவற்றையும் இது இல்லை இது இல்லை என்று சொன்னேன். பிறகு இறுதியில் அதுவே ஒத்துக் கொண்டது.

    கேரளாவில் உள்ள ஓட்டம் துள்ளல் பற்றி அதிகம் தெரியாது என்று ஒத்துக் கொண்டது. இதுதான் மனிதனுக்கும் அதற்கும் உள்ள வித்தியாசம். இருந்தாலும் நாம் சொல்வதைப் புரிந்து கொண்டு அது உரையாடுவது மிகவும் வியப்பாக இருக்கிறது.

    அதுவும் வளரத்தானே செய்யும். கற்றுக் கொண்டுவிடும் இனி வரும் நாட்களில் அது நமக்கு எடுத்துத் தரலாமாக இருக்கலாம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணையத்தில் இருக்கும் தரவுகளை வைத்து வேகமாக எடுத்டுக கொடுக்கிறது.  ஆயினும் முழு திருப்தி வரவில்லை என்பதோடு இந்த Meta AI சமாச்சாரம் மக்களை  என்றும் சந்தேகம் வருகிறது.  அதனால் உங்கள் அலைபேசியின் உள்ளே ஊடுருவ முடியும்.

      நீக்கு
    2. ஸ்ரீராம், அது இணையத்தில் இருப்பதைத்தானே அளவா கரெக்ட்டா தொகுத்துத் தருது. நாம கூகுள்ல தேடுறப்ப பல தளங்கள் வரும். ஒவ்வொண்ணிலும் போய் பார்த்து சேகரிக்கறதுக்கு இது டைம் சேவிங்க். அவ்வளவுதான்.

      எனக்கும் உங்களைப் போலவே ஒரு டவுட் உண்டு. ஆனா மனுஷன் இப்படி இந்த உருவில் வந்தாலும் நாம் கேட்பதை எளிதாக எடுத்துத் தர முடியும் இல்லையா? நாம கூகுள்ல பார்த்தா கிடைக்குமே அதை எடுத்து தந்திடலாமே...ஆனா சிலதுக்கு முடியலைன்னு சொல்லுதேன்ற டவுட்டும் வருது. ஆனாலும் இதை வைத்து நம் மொபைலுக்குள் புக முடியும்தான்.

      கீதா

      நீக்கு
  23. 1960- காலகட்டக்கதை.

    //ஒரு நாள் இரவு அவன் திருட்டு ரயில் ஏறி சென்னைக்கு வந்தான்​//

    இதில் அரசியல் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

    அன்றைய சூழலில் இறைபக்தியை நிரூபித்து இருக்கும் கதையம்சம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இதில் அரசியல் இருப்பதாக நான் நினைக்கவில்லை. //

      ஹா..  ஹா.. ஹா..  இல்லை, இல்லை!  அலட்டிக்காம அரசியல் பேசறீங்க!

      நீக்கு
  24. 'நாணா ஒண்டிக்கட்டை. தந்தையின் முகம் தெரியாது' என்று தானே கதை ஆரம்பம் கொண்டிருந்திருக்க வேண்டும்?.. வழக்கமாய் நாமெல்லாம் எழுதுவதென்றால் இந்த இடத்திலிருந்து தானே ஆரம்பிப்போம்?..

    ஏன் அப்படி இல்லை?..
    'ஸ்பெஷல் மசாலா மூணேய்..' என்றலல்லவா ஆரம்பிக்கிறது?.

    இது தான் எழு தி எழுதி பழகிய எழுத்தாளருக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்.

    எங்கே எப்படிக் கதையை ஆரம்பிப்பது எந்த இடத்தில் எந்த விதத்தில் ஆரமுத்ததை முடித்து வைப்பது தான் வாசிப்பின் சுவாரஸ்யத்தைக் கூட்டும் சமாச்சாரம்.

    இந்த எழுது கலையைக் கற்பது தான் எழுத நினைப்போரின் பால பாடமாய் இருக்க வேண்டும்.

    இந்தப் பாடத்தைக் கற்காமல் என்ன எழுதினாலும் சோபிக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத ஆரம்பிக்கும்போதே நமக்கு எங்கே ஆரம்பிக்கலாம் என்று ஒரு ஐடியா கிடைத்து விடும்!  அதே போல இங்கு நிறுத்தி விடலாம் என்றும்...!

      நீக்கு
  25. எங்கே எப்படிக் கதையை ஆரம்பிப்பது எந்த இடத்தில் எந்த விதத்தில் ஆரம்பித்ததை முடித்து வைப்பது என்பது தான்
    வாசிப்பின் சுவாரஸ்யத்தைக் கூட்டும் சமாச்சாரம்.

    இதெல்லாம் தெரிந்து விட்டால் வாத்தியாரின் வண்ணான் கணக்கு கூட
    சுவையான கதையாகி விடும்.

    பதிலளிநீக்கு
  26. கதை அந்தக்காலத்தை பிரதிபலிக்கிறது.

    துவாரகை செல்லும் வாய்ப்பு கிடைத்தும் நானாவின் அந்தக்காலத்து நல்மனம் காயப்பட்டவர்களின் பரிதாபநிலையை எண்ணி, சேவையில் தான் இறைவனை காணப்போகிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!