3.8.25

ஞாயிறு பட உலா – நெல்லைத் தமிழன் நான் சென்ற இடங்கள் – மெக்சிகோ - படங்களுடன் - 09

 

                                               சிச்சன் இட்ஸா மற்றும் பிற இடங்கள்

சிச்சன் இட்ஸா என்பது மாயன் கலாச்சாரத்தின் இடிபாடுகள் அல்லது அழிந்துபட்டவை. இது மெக்சிகோவின் யுகடேன் தீபகற்பத்தில் இருக்கிறது. இங்கு மிகப் பெரிய பிரமிட் போன்று ஒன்று உள்ளது. அதனை குல்குல்கன் கோயில் என்று குறிப்பிடுகிறார்கள். இந்தப் பகுதியில் பழமை வாய்ந்த பெரிய நகரம் இருந்தது,  கிபி 600 லிருந்து 1200 வரை. இங்கு பந்தை உபயோகித்து விளையாடும் ஒரு சிறு மைதானமும்,  போர் வீரர்களுக்கான கோயிலும் (அதன் சுவற்றில் மண்டையோட்டுச் சிற்பங்களுடன்) இருக்கிறது.

இந்தப் பெயருக்கு ஏழு அழகிய வீடுகள்,  ஏழு பெரும் அரசர்கள் என்றெல்லாம் அர்த்தம் வருகிறது என்கிறார்கள். இல்லை…  புனிதக் கிணற்றின் வாயில் என்றும் அர்த்தம் சொல்லலாம் என்கிறார்கள். இதற்கு ஏற்றாற்போல், இந்த இடத்தின் அருகில் ஒரு பெரிய கிணறு இருக்கிறது. 


வழியில் பார்த்த, அவர்களது (மெக்சிகன்) வீடு.. அந்த ஃபீல் வருவதற்காக வைத்திருந்திருப்பார்களோ?


ஒரு வழியாக வரலாற்றுத் தொன்மையான இடத்திற்கு வந்துவிட்டோம்.


உங்களில் எத்தனை பேருக்கு, தற்போது இருக்கும் கான்க்ரீட் வீட்டைவிட குடிசை வீடே மேல்  (உடனே கௌதமன் அவர்கள் மேல், ஃபீமேல் என்று ஆரம்பித்துவிடுவார்) என்று தோன்றுகிறது?

கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விதமாக அமைக்கப்பட்ட டிக்கெட் செண்டர்


கண்காணிப்பு கோபுரமா இல்லை முக்கியமானவர்கள் தங்கும் இடமா?

 

இந்த இடம், மாயன் கலாச்சாரத்தில் Foodball போன்று ஒருவித விளையாட்டை விளையாடும் மைதானம். எப்படி விளையாடினார்கள் என்று guide மழை இருந்தபோதும் எங்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தார்.


ஆமாம். அவங்க மொழில எழுதின கல்வெட்டுதான். யாரு படிப்பது?

ஆமாம் ஒரே மண்டையோட்டுப் படங்களாக இருக்கிறது. கல்வெட்டா இல்லை வெட்டு விழுந்தவங்களின் நினைவுச் சின்னமா?

நாகத்தின் (அனகோண்டாவின்) தலையைப் பார்த்துட்டீங்களா? நம்ம மயன் கலாச்சாரம் பாரதக் கலாச்சாரத்தோடு தொடர்புடையது மாதிரித் தெரியுதா? (ஒரு சிற்பத்தை வைத்து கலாச்சாரத்தைத் தொடர்புபடுத்தறயே… நாம எங்கப்பா நரபலிலாம் கொடுத்தோம்? கொடுக்கலையா? யோசிச்சுப் பாருங்க)

ரொம்ப close-upல மண்டையோட்டுகளைப் பார்த்தாச்சு. இனி எங்களுக்கு ஜென்ம சாபல்யம்தான்.

இவையெல்லாம் அழிந்துபட்டதின் மிச்ச மீதங்கள். ஓஹோ என்று இருந்தபோது எவ்வளவு சிறப்பாக இருந்ததோ…

பிரமிடுக்குத் தம்பி சிச்சன் இட்ஸா இதுதான்   (செச்சன் இட்ஸா என்று சொல்லத்தான் ஆசை… ஆனால் யாராவது மொழி தெரிந்தவர் வந்து, அதைச் சொல்லும்விதமே தவறே என்று நக்கீரராகிவிடக்கூடாது இல்லையா?)




1900ல் இந்த இடம் இப்படி இருந்ததாம். (இணையப் புகைப்படம்).

 





பறவைப் பார்வையில் சிச்சன் இட்ஸா (இணையம்)



எகிப்து பிரமிட் மாதிரித்தானே இருக்கிறது? ஆனால் அதன் நோக்கம் வேறு. இதன் நோக்கம் வேறு.  கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். அரசர், முக்கிய மந்திரிகள் மற்றும் பூசாரிகள் உயரத்தில் அமர்ந்திருப்பார்கள். குடிகள் சிச்சன் இட்ஸாவைச் சுற்றி இருப்பார்கள் (ஆயிரக்கணக்கில்). அப்போது பூசை, பலி மற்றும் தண்டனைகள் நிறைவேற்றப்படும்.

எனக்கு எகிப்து பிரமிட் போகவேண்டும் என்று ஆசை. அந்த ஊரில் இருக்கும்போதுதான் இப்படியெல்லாம் வெளிநாடு செல்வது சுலபம். ஒரு வெகேஷனுக்கு எல்லோரையும் கூட்டிக்கொண்டு எகிப்து போய் பிரமிட் மற்றும் சில பல முக்கியமான இடங்களைக் காணலாம் என்று நினைத்தேன். என் பெண், கூடவே கூடாது என்று சொல்லிவிட்டாள் (7-8ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்).  இப்போ விட்டால் வாய்ப்பு கிடைக்காது என்றெல்லாம் சொன்னேன். அவளோ, பிரமிட்லலாம் மம்மி இருக்கும், விஷப் பூச்சிகளோ இல்லை விஷ வாயுக்களோ இருக்கும். உடல் நலத்துக்குக் கெடுதல் வந்துவிடும் என்றெல்லாம் சொல்லி, போகவே போகக் கூடாது என்று சொல்லிட்டா. 

இதை எழுதும்போது பாரீஸுக்கு முதல் முறை சென்ற நினைவு வருகிறது (2005). அதற்கு முன்பு 2004ல் நான் ஃப்ரான்ஸ் சென்றிருக்கிறேன் ஆனால் நேரடியாக லில் என்ற இட த்திற்குச் சென்று அங்கு இரண்டு நாட்கள் இருந்திருக்கிறேன். பாரீஸில் தங்கினதில்லை.  2005ல் பாரீஸில் தங்கும் வாய்ப்பு கிடை த்தபோது எனக்கு மிகவும் பிடித்தமான லூவர் மியூசியத்துக்கு இரவு 7 மணி வாக்கில் சென்றேன் (பகலில் ஆபீஸ் வேலை). 15-19 யூரோ நுழைவுக் கட்டணம் என்று நினைவு. எனக்கு மியூசியங்கள் மிகவும் பிடிக்கும். அது கடலளவு என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டது. 1½ மணி நேரம் சுற்றிக்கொண்டிருந்தேன்.  இரவு 9 மணிக்கு மூடிவிடுவார்கள். அதனால் கடைசியாக எகிப்து பகுதிக்குச் சென்றேன். அங்குள்ள  மம்மிகளை வைத்திருந்த பெட்டிகள் இருந்த பகுதிக்கு வரும்போது எதனாலோ எனக்கு அலர்ஜி வந்துவிட்ட து. அது முதல் முறை வந்த அலர்ஜி.  இரவு 8 ½ மணி. வேக வேகமாக வெளியே வந்து மெட்ரோ பிடித்து தங்கியிருந்த இட த்துக்கு வந்து சேர்ந்தேன். அதற்குள் அலர்ஜி அதிகமாகிவிட்டது. தோல் ரொம்ப எரிகிறதே என்று நினைத்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டுப் படுத்துவிட்டேன். (மனதில் எப்போதும் இறைவனின் நாமங்கள் ஓடிக்கொண்டிருக்கும். அன்றென்னவோ இராம சரிதம் ஓடிக்கொண்டிருந்தது). எப்படியோ சரியாகிவிட்டது.  ஏதேனும் பெரிய பிரச்சனை ஆகியிருந்தால் என்ன செய்திருப்பேன் என்றே தெரியாது. உடனே தொடர்புடைய இன்னொரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது.

நான் 4-5ம் வகுப்பு படிக்கும்போதே கதைப்புத்தகங்கள் படிக்கும் பழக்கம் வந்துவிட்டது. வீட்டில் இருக்கும் ஸ்ரீமஹா பக்தவிஜயம், இராஜாஜியின் இராமாயணம் போன்றவற்றைப் படித்திருந்தேன். நான் 5வதோ இல்லை 6வது படிக்கும்போதுதான் வினுவின் ஓவியத்துடன் சிவகாமியின் சபதம் இரண்டாவது முறை கல்கியில் வெளியானது என்று நினைவு. நாகநந்தி படமும் நினைவில் இருக்கிறது.  ஓவியத்தை தடிமனான அட்டையுடன் கொடுத்திருப்பார்கள் என்று நினைவு.  நாங்கள் இருந்தது பெரிய வளாகத்தின் முகப்பில். வீட்டின் பின்னால், வளாகத்தின் (வளைவு. க்ரௌவுண்ட் தான் இருக்கும்) பின் பக்கம் கொஞ்ச தூர த்தில் வளாகத்தில் வாடகைக்கு இருக்கும் எல்லா வீடுகளுக்கும் பொதுவாக மிகப் பெரிய கிணறு இருக்கும். அதில்தான் நீர் இரைத்து வீட்டுக்குக் கொண்டுபோவார்கள். எங்கள் வீட்டில் கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவர ஒரு மாத்வா மாமி (வயதானவர்) இருந்தார். அன்று அவர் வராமல் அவருடைய 15-18 வயது பெண்ணை அனுப்பியிருந்தார்.  அம்மா என்னிடம், அவளுக்குத் துணையா நீயும் போயிட்டு வா என்றார். மாலை 5 ½ இருக்கலாம். கிணற்றில் நான் இராட்டையைப் போட்டு அதில் கயிறை நுழைக்கணும். ஏதோ ஒரு வேகத்தில் நான் இராட்டையைப் போடவும், அது கொக்கியில் மாட்டாமல் கயிற்றோடு கிணற்றுக்குள் விழ ஆரம்பித்தது. கயிற்றைப் பிடித்திருந்த நானும் நேரே கிணற்றுக்குள் விழுந்துவிட்டேன். அடியில் பாறையுடன் கூடிய கிணறு அது. கீழே விழும்போது என் மனதில் இராமர் சீதை நினைவுதான் இருந்தது. (சொன்னால் நம்புவது கடினம். என் வயது 10-11 இருக்கலாம்). அந்தப் பெண் இதைப் பார்த்து அதிர்ச்சியாகி கிணறு பையன் விழுந்துட்டான் என்று சொல்லி பேச்சுவராமல் நின்றுவிட்டாராம். கிணற்றைச் சுற்றி நிறையபேர் கூடிவிட்டார்களாம். ஹெட்மாஸ்டர் பையன் கிணற்றுக்குள் விழுந்துவிட்டான் என்ற சேதி வர, வீட்டுக்குள் நுழைந்துகொண்டிருந்த என் அப்பா, நேரே கிணற்றுக்கு வந்துவிட்டார். பிறகு கயிறு கட்டி வாளி அனுப்பி, மெதுவாக என்னை வெளியே எடுத்தார்கள். தண்ணீர் 4-5 அடிதான் இருந்திருக்கும் ஆனால் அடியில் பாறை. நான் விழுந்தது தலைகீழாக. எனக்கு ஒன்றும் ஆகவில்லை. 

பிள்ளை பிழைத்தது மிக அதிசயம் என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள். எனக்கு ஒன்றும் ஆகாமல் காப்பாற்றியது இறைவன் என்று நான் நம்புகிறேன். எதற்காக இதனை எழுதுகிறேன் என்றால், இறை நம்பிக்கை இருக்கும்போது பிரச்சனைகள் வந்தாலும் அதுவே தீர்வை எட்டிவிடும் என்பதற்காக. 

பிரமிட்ல ஆரம்பிச்சு, சின்ன வயசுக் கதைக்குப் போய்விட்டேனா? அடுத்த பகுதியில் படங்கள் ..

(தொடரும்) 

38 கருத்துகள்:

  1. அந்த பிரமிட் மாதிரி இருக்கும் கட்டிடம் மேல் ஏறி பார்க்க முடியாதா?  புகைப்படங்களை பார்க்கும்போது ஏதோ பெரிதாக இருக்கிறது என்று தோன்றி ஒன்றுமில்லாமல் போனது போன்ற உணர்வு. 

    இன்னும் இன்னும் திகில், இன்னும் கொஞ்சம் மர்மங்களை எதிர் பார்த்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம். இந்த சிச்சன் இட்ஸாவில் பெரிய மர்மம் திகில் இல்லை. இந்த ஆங்கிலேயர்கள் இந்த இடங்களை புதையலுக்காக அக்கு வேறு ஆணி வேறுன்னு பிரிச்சு மேஞ்சிருக்காங்க. அருகில் இருந்த புனித குளம் போன்ற பெரிய கிணற்றிலும் ஏதேனும் புதையல் இருக்கிறதா என ஆட்களை விட்டுத் தேடியிருக்காங்க

      நீக்கு
  2. மம்மிகளைப் பார்த்ததில் அலர்ஜியா?  மனம்தான் காரணமோ?  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஸ்ரீராம். அங்க இருந்த ஏதோ வாசனை அலர்ஜியை ஏற்படுத்தியிருக்கு. மனசு காரணம் இல்லை

      நீக்கு
  3. கிணற்றுக்குள் விழுந்தது, அதுவும் தலைகீழாக...   

    படிக்கும்போதே பகீரென்கிறது. 

    உண்மையில் கடவுள்தான் காப்பாற்றி இருக்க வேண்டும்.

      "உனக்கான நேரம் இது இல்லை தம்பி..  நீ இன்னும் மெக்சிகோ போகணும், நிறைய கோவில்கள் போகணும்" என்று சொல்லிக் கொண்டே ஆபத்தில்லாமல் விழ வைத்திருப்பாரோ.....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில் பிழைத்தது மிகவும் ஆச்சர்யம். நான் பத்தாவது படிக்கும்போது யாரேனும் இவன் வெளிநாடு செல்வான் எனச் சொல்லியிருந்தால் யாருமே நம்பியிருக்க மாட்டாங்க. இறைவனின் கருணை அது

      நீக்கு
  4. மெக்சிகோ குடிசை பேய்வீடு போல இருக்கிறது.

    1900 ல் இப்படி இருந்தது என்றால், அதற்குப்பின் தான் கீழே இருந்த பகுதிகளை அகழ்ந்து எடுத்தார்களா?  ஒருவேளை இன்னும் கீழே தோண்டினால் இன்னும் ஏதாவது கட்டிடங்கள் கிடைக்குமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1900த்தில் தஞ்சை பெரியகோயிலும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்தது. நம்ம ஊரில் கோயில்களில் அகழ்ந்து ஆராய்ந்தால் நிறைய சிலைகள் சிற்பங்கள் கிடைக்கும்

      நீக்கு
  5. ​//நாம எங்கப்பா நரபலிலாம் கொடுத்தோம்? கொடுக்கலையா? யோசிச்சுப் பாருங்க)// மகா பாரதம் தெரியாதா?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். அப்போதும் கொடுத்தோம் இப்போதும் ஆங்காங்கே நடக்கிறது

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ஞாயிறு என்பதால் தாமதமா? பேத்திக்குக் குணமாகிவருகிறதா?

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    அனைவரும் நலமா?அனைவருக்கும் ஆடி பதினெட்டாம் பெருக்கு நல்வாழ்த்துகள்.மற்றும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள். இங்கு இப்போது எங்கள் பேத்தி நலமாக இருக்கிறாள்.

    இன்றைய பதிவும், படங்களும் அருமை.சிச்சன் இட்சா பற்றிய பல விபரங்களை பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். சகோதரர் நெல்லைத்தமிழரின் இறை பக்தி சிறப்பு. அதுவும் சிறுவயதிலிருந்தே அவருள் உணர்ந்த இறைபக்தி படிக்கவே மெய்சிலிர்க்கிறது. "கடவுளை நம்பினோர் கை விடப்படார்"என்ற வாசகம் எவ்வளவு உண்மையானது. அனைத்தும் நமக்கு அப்பாற்பட்ட "அவனது" செயல்கள்தாம். உணர்ந்தால் உன்னதமாவோம் என்பது உறுதி.அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். பிறகு வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா பேத்தி நலமா? கை ஓகேவா..

      கீதா

      நீக்கு
    2. பேத்தி நலமா கமலா? கட்டு பிரித்து விட்டீர்களா?
      பள்ளி செல்கிறாளா குழந்தை? நலமாகி இருப்பாள் என நினைக்கிறேன்.
      விரைவில் நலபெற பிரார்த்தனைகள்.

      நீக்கு
    3. இப்போது நலமாக உள்ளாள் சகோதரி. ஆனால் இன்னமும் கைக் கட்டு பிரிக்கவில்லை. மேலும் இன்னமும் இரு வாரங்கள் கழித்துதான் மருத்துவரிடம் சென்று செக் செய்ய வேண்டும். (மொத்தமும் ஒரு மாதங்கள் கைக் கட்டுடன்தான் இருக்க வேண்டுமாம்.) இரவில் அவள் தூங்கும் போது அந்த இடது கையின் மேல் புரண்டு படுத்து விடாமல் நாங்கள் (நானும், மகளும் மாறி, மாறி) கவனமாக பார்த்துக் கொள்கிறோம். இது குறித்து என் மலர்கள் பதிவுக்கு நீங்கள் வந்து தந்த கருத்துக்கு பதிலாக தந்துள்ளேன். டாக்டர் நல்லதாக பார்த்து முழுவதுமாக குணமாகி விட்டதென கூறினால்தான் மனதுக்கு பழைய நிம்மதி வரும். உங்கள் இருவரின் அன்பான விசாரிப்புக்கு🙏ம், பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    4. கமலா ஹரிஹரன் மேடம்.. ஆடிப் பதினெட்டை நினைத்தால் தாமிரவருணி வாழ்க்கையில் எல்லோரையும் போல ஆற்றுக்குச் சென்று கலந்த சாதம் சாப்பிட வாய்ப்பில்லாத ஏக்கமும் மேட்டூரில் வேலை பார்த்தபோது அணைப்பகுதியில் எல்லோரும் கொண்டாடியது நினைவுக்கு வருகிறது

      நீக்கு
    5. இரவு கைமீது அமுக்குவதுபோல படுத்துவிடக் கூடாது என்பது முக்கியம். கை செட்டாகும் வரை இரவு கவனமாக பார்த்துக்கொள்வது கடினம் உங்கள் தூக்கமும் கெடும். விரைவில் சரியாகட்டும்.

      நீக்கு
  8. நெல்லை உங்களுக்கு பாரீஸ் ம்யூஸியத்தில் டைம் ஷார்ட்டேஜ் போல இன்று எனக்கு உலா வர டைம் குறைவுதான்....அதாவது உலா வந்தாலும் கருத்து நிறைய சொல்ல....

    படங்கள் அட்டகாசம். ! நீங்கள் எடுத்த படங்கள்.

    அந்த பிரமிட் போல - சிச்சன் இட்ஸா - சூப்பர் இல்ல? மேல உச்சில அறை - போல இருப்பதிலா அந்த பெரிய மனுஷங்க!!! உட்கார்ந்திருப்பாங்க? வெளிய தெரியாதே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன் க்கா. மேல அறை போன்று இருக்கும். 18 படிகள் போல எல்லாப் படிகளிலும் அலங்காரம் செய்திருப்பார்கள். பிரமிட் வேறுவகை. பெரிய மனுஷங்க சமாதி அவை

      நீக்கு
  9. குடிசை வீடும் ரொம்பப் பிடிக்கும் நெல்லை. பராமரிப்பது கொஞ்சம் எளிதுன்னே தோன்றும். கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விதமாகன்னு சொல்லிருக்கீங்களே குடிசைப்படம் - அதைப் பார்த்ததும் இப்படியான குடிசைனா ஏன் பிடிக்காது என்று தோன்றியது.

    உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும் இப்படியான குடிசைகள் போன்று பல ரெசார்ட்ஸ் இருக்கே!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடுகளே கூட இப்படிக் கட்டுவது ட்ரென்ட்!! இப்ப

      கீதா

      நீக்கு
    2. குடிசைகள் அழகுதான். கூரையில் பாம்பு நெளிவதையும், மேலிருந்து அவ்வப்போது தேள் கீழே விழுவதையும் கற்பனை செய்துகொள்ளுங்கள்

      நீக்கு
  10. கைட் ரொம்ப சின்சியர்!!

    குடிசை அமைப்புகள் ரொம்ப ஈர்க்கின்றன.

    இத்தனை பேர் பலியானார்கள் என்பதைக் குறிக்கும் என்று நினைக்கிறேன். எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசத்துடன்...ஒரு வேளை இப்படித்தான் இருந்தாங்கன்னு சொல்றாங்களோ என்னவோ..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் கீதா ரங்கன் க்கா.. அவங்க என்னதான் விளக்கமாச் சொன்னாலும் ஒரு குன்சா சொல்றமாதிரிதான் தோணும். அதனால அசிரத்தையாக் கேட்போம்

      நீக்கு
  11. கொடுக்கலையா? யோசிச்சுப் பாருங்க//

    அதானே ! இப்பவுமே நடக்குதே ஆங்காங்கே!! சமீபத்தில் கூட ஒரு செய்தி வாசித்த நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணவனுடன் உடன்கட்டை அரசிகள் ஏறினார்கள் என்பதே எனக்கு ஆச்சர்யமா இருக்கு. எங்கள் குடும்பத்திலேயே கொள்ளுப்பாட்டி காலத்தில் நடந்திருக்கு என அப்பா சொல்லியிருக்கார். உடன்கட்டை பற்றி ஒரு ஞாயிறு அலசுவோம்

      நீக்கு
  12. 1900ல் இந்த இடம் இப்படி இருந்ததாம். (இணையப் புகைப்படம்).//

    இந்தப் படம் சூப்பர்!! அழகு. அப்பவே செடி முளைச்சிருக்கே. இப்ப இப்படி இல்லையோ? இதற்கான இப்போதைய நிலை நீங்க எடுத்த படங்களில் இருக்காஅ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது கவனமா இருக்காங்க. டூரிஸ்ட் அட்ராக்ஷன் இல்லையா? நம்ம ஊர்ல இப்பவும் நிறைய கோவில் கோபுரங்கள் செடிகளோடுதானே இருக்கின்றன

      நீக்கு
  13. கயிற்றைப் பிடித்திருந்த நானும் நேரே கிணற்றுக்குள் விழுந்துவிட்டேன். அடியில் பாறையுடன் கூடிய கிணறு அது. //

    மை காட்! தப்பிச்சீங்க நெல்லை.!

    நானும் இப்படி நிறைய தப்பித்திருக்கிறேன்!

    கீதா




    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. படங்கள், மற்றும் செய்திகள், உங்கள் சிறு வயது நினைவுகள் எல்லாம் அருமை.
    இறை நம்பிக்கைதான் நம்மை வழி நடத்தி செல்கிறது. கிணற்றில் பாறை இருந்தது என்றீர்கள் அதில் மண்டை இடித்து கொள்ளவில்லை இறை அருளால்.

    பிரமிட் போன்ற ராஜ தர்பார் படம் பார்த்ததும் நீங்கள் போன வாரத்தில் நான் பார்த்த படத்தின் பேர் சொன்னீர்கள் அல்லவா அகோபலிப்டோ, அந்த படத்தில் நரபலி கொடுக்கும் காட்சி வரும் இல்லையா உயரமான இந்த இடத்தில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவன் அருள் பல நேரங்களில் என்னைக் காத்திருக்கிறது.

      நீங்கள் சொன்ன படத்தை பல இடங்களில் ஓட்டித்தான் பார்த்தேன். எத்தனை அப்பாவிகள் உயிர் போனதோ. கௌதமன் சாருக்கு இந்தப் படம் பிடிக்கலைனு சொன்னார்

      நீக்கு
  16. மாயன் குடிசைகளின் பாணியில் மெக்சிக்கன் குடிசை வீடுகள் நன்றாக உள்ளன.

    குடிசைவீடு எனக்கும் பிடிக்கும். சிறுவயதில் எங்கள் சாப்பாட்டு அறை அரைச்சுவராடு இருந்தது. ஆக்கப்பட்டு மேலே பனை ஓலையால் வேயப்பட்டிருந்தது. அப்பா எமக்கு சாப்பிட ஒரு மேசையும் நான்கு ஸ்ரூல்களும் போட்டு விட்டிருந்தார். அவ் அறையிலிருந்து பத்தி இறக்கி சமையல் இடம் அது தென்னங்கிடுகால் வேயப்பட்டது. வீடு கல்வீடு.
    இப்பொழுதும் அவை என் நினைவில் இருக்கும்.

    பிரமிட் அழகாக உள்ளது. அவர்கள் கலாச்சாரத்தை காட்டும் படங்கள் கண்டோம். மம்மிகள் எல்லாம் படங்களில்தான் கண்டதுண்டு. உங்களுக்கு அவற்றின் கெமிக்கல் மணம் பிடிக்காமல் இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி அவர்கள். உங்களின் குடிசை நினைவுகள் அழகு. பொதுவா கீற்று மண் சுவற்றின் மீதுதான் எழுப்புவாங்க. கல் கட்டிடம் இன்னும் வலுவானது.

      நான் பல இடங்களில் மம்மிக்கள் கண்டிருக்கிறேன். சவம் என்றாலும் இத்தனை ஆண்டுகள் கடந்து நமக்குக் காணக் கிடைக்கிறதே. ஆச்சர்யம்தான்

      நீக்கு
    2. ​கேரளத்தில் முழுதும் மரத்தால் சுவர்கள் உள்ள ஒரு பெட்டியைப்போல் வீடு செய்து அதற்கு கூரை கீற்றால் வேய்ந்திருப்பார்கள். அப்படிப்பட்ட பழைய வீடுகளைக் கண்டிருக்கிறேன். கீற்று வெப்பத்தை உள்வாங்கி வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

      Jayakumar

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!