15.10.25

ஊறுகாய் பந்து!

 

நெல்லைத்தமிழன் : 

இனி நோயாளிகளை 'மருத்துவப் பயனாளிகள்' என்று அழைக்கவேண்டும் என்று அரசு சொல்கிறதே.  இனி திருடர்களை, 'செல்வப் பயனாளி' என்று அழைக்கவேண்டுமா?  கொலைகாரர்களை, 'விரைவில் உயிர் பறிக்கும் தொழிலாளி' என்றால் சரியாக இருக்குமா? ஆமாம் 'செல்வத்தை நகர்த்துபவர்' என்பது கொள்ளைக்காரனுக்குச் சரியாக வருமா?      

# பெயர் மாற்றம், சிலை அமைத்தல், மணிமண்டபங்கள் இவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதில் திருப்தி அடைபவர்கள் நிறைய இருப்பார்கள் போலும். 

(கொள்ளைக்காரர்களை செல்வத்தை பறிப்பவர்கள் என்று தானே சொல்ல வேண்டும் ?)

இன்னமும் பிளாகில் பலர் சர்க்கரைப் பொங்கல் எப்படி செய்வது, வெண் பொங்கல் எப்படிச் செய்வது என்றெல்லாம் செய்முறைகள் போடறாங்களே. இவற்றிலெல்லாம் ஒவ்வொரு வீட்டிற்கும் என்ன என்ன வித்தியாசங்கள் வந்துவிடப்போகிறது?   

# சோறு வடிப்பது எப்படி என்று புத்தகம் போட்டால் விற்கும் காலத்தில் போய் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறீர்களே !

& இதுவரை போடாத டிஷ் பற்றி நீங்கள் ஒரு லிஸ்ட் கொடுங்களேன்.,

.0.நாம், சொல்லும் கருத்தைக் கவனிப்பதைவிட, சொல்லுபவர் யார் என்று பார்த்து அதற்கேற்றபடி எதிர்வினையாற்றுவதன் காரணம் என்னவாக இருக்கும்?   

# ஒருவரை நம் மனம் மதித்தால் அவரது  சொல்லுக்கு நம்மிடம்  ஒரு கூடுதல்  மரியாதை இருப்பது இயல்பானது தான். Packaging a product தத்துவம்

& இன்னொருவரை இறக்குவதற்கு கூட இருக்கலாம்!

இரக்கிறவர்கள், சரியானவர்கள்தானா என்று கவனிப்பது நம் வேலையா அல்லது அவர்களுக்கு தானம் செய்வது நம் கடமையா?

# இரப்போர்க்கு இல்லை என்னாது ஈதல் அறம் என்று நமக்கு போதித்திருக்கிறார்கள். மோசடிகள் அதிகமாகி விட்ட இந்த நாட்களில் இரப்பவர்களையும் சரிபார்த்துத்தான் தானம் செய்ய வேண்டியதாக இருக்கிறது. ஏமாளி என்ற பட்டத்தை யார் விரும்புவார்கள் ?

& நடிகர் ராம்கியின் சமீபத்திய பேட்டியில் அவர் எங்கே யாசகர்களைப் பார்த்தாலும் ஏதாவது கொடுத்து விடுவாராம்.  நண்பர்கள் இந்த யாசகர்கள் போலி, குழந்தையை வாடகைக்கு எடுப்பார்கள் என்று சொன்னபோது கூட, தர்மம் செய்வது என் விருப்பம்.  நான் விரும்புவதைச் செய்கிறேன்.  அவர்கள் அதை எப்படி செய்கிறார்கள் என்று பார்க்க மாட்டேன் என்று சொல்லி இருந்தார்.  ஏற்க முடியாத கருத்தாக இருந்தது!

சில இனிப்பு தயாரிப்பாளர்கள், மிக அதீத விலையில் ஆன்லைனில் இனிப்புகளை விற்கிறார்கள். எப்படி இவ்வளவு கொள்ளையடிக்க இவர்களுக்கு மனம் வருகிறது என்று தோன்றுகிறது. உதாரணமா, இருட்டுக்கடை அல்வா, அங்கு போய் வாங்கினால் கிலோ 400 ரூபாய். ஆன்லைனில், 400 கிராமே 550 ரூபாய். இது போல பல கடைகள். இப்படி பணம் வாங்கினால் அது செரிக்குமா?

# இந்த மாதிரி விலையில் பெரும் பங்கை கொண்டு வந்து கொடுக்கும் நிறுவனங்கள் எடுத்துக் கொள்வதாகத் தெரிகிறது. அரை கிலோ அல்வா நீ போய் வாங்கி வந்தால் உனக்கு 150 ரூபாய் அதிக செலவாகும். அதில் 80 ரூபாயை எனக்குக் கொடு என்பது தான் இதற்கான தர்க்க ரீதியான காரணம்.  

அதிகம் விலை வைத்தால் அந்தக் காசு செரிக்குமா என்ற கேள்விக்குப் பல பரிமாணங்கள் உண்டு.  'வாங்குபவர் ஒப்புக்கொள்ளும் வரை விலையை உயர்த்திச் சொல்லு' என்பதுதான் சாதாரணமாக கார்ப்பரேட் மனப்பாங்கு.  அந்த லாபத்தில் ஓரளவு நம் கைக்கு வந்து சேரும் போது நமக்கு அது அநீதியாகத் தெரிவதில்லை.

& உள்ளூரிலேயே ஸ்விக்கி, ஜோமேட்டோவில் வாங்கும்போது ஆகும் கூடுதல் செலவு பற்றி அறிவீர்களா?  எவ்வளவு வித்தியாசம் என்று பார்த்திருக்கிறீர்களா?

பானுமதி வெங்கடேஸ்வரன் :

உங்கள் சின்ன வயதில் உங்கள் தாத்தா,பாட்டியைப் பார்த்து நீங்கள் சிரித்தது போல உங்கள் பேரக்குழந்தைகள் உங்களைப் பார்த்து சிரிக்கும் விஷயம் உண்டா? அதே போல உங்கள் சின்ன வயதில் வீட்டுப் பெரியவர்கள் அதட்டிய விஷயங்களுக்காக நீங்கள் சிறியவர்கள் இப்போது அதட்டுவது/விரட்டுவதுண்டா?

# ஒரு சோகமான விஷயம் என்னவென்றால் நான் எனது தாத்தா பாட்டிகளுடன் இருந்ததே இல்லை. அவர்கள் ஒன்று முன்பே காலமாகி விட்டார்கள் அல்லது இருந்த ஒரு தாத்தா அதிகம் தொடர்பில் இருந்தது இல்லை. 

ஆனாலும் இப்போதும் என் பேரக் குழந்தைகள் (?) (எல்லாம் 28 வயதுக்கு மேல்.) என்னை பார்த்துச் சிரிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான்.

சினிமாவில் நீங்கள் ரசித்த நடன போட்டிக் காட்சிகள் எவையெவை?

# வ.வா தவிர வேறு இருப்பதே தெரியாது.

சிவாஜி கணேசன் ஏதோவொரு படத்தில் ஆடியிருப்பதாக நினைவு. வெகு சாதாரணம்.

& கமலின் சில நடனங்கள், பிரபுதேவா, ஆனந் பனாபி ஆகியோரின் நடனங்கள், ஹிந்தியில் ஆஷா ப்ரேக், மும்தாஜ், மாதுரி தீக்ஷித் போன்றோரின் நடனங்கள் ரசிக்கத்தக்கவை.

பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நன்றி சொன்னதுண்டா?

# பெற்றோர்களுக்குச் சொன்னதில்லை. மற்றவர்களுக்குப் பலமுறை சொன்னதுண்டு.

&      சொல்வதுண்டு.

= = = == = = = 

படமும் பதமும் 

நெல்லைத்தமிழன் : 


தாய்லாந்தில் அலுவலகத்தின் சார்பில் ஒரு கான்ஃபரன்ஸில் கலந்துகொண்டேன். ஒரு விதிவிலக்காக, சென்னையில் இருந்த மனைவியையும் அங்கு வரச் சொன்னேன் (காரணம், எனக்கு வருடாந்திர விடுமுறை எடுக்க அப்போது அவகாசமில்லை. அதனால் கம்பெனியில் மனைவிக்கான டிக்கெட்டை இப்படி எடுத்துக்கொள் என்று சொன்னார்கள்). பல்வேறு இடங்களையும் கலாச்சாரத்தையும் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. சொகுசுப் படகில் நாங்கள் (கான்ஃபரன்சுக்கு வந்திருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்) சென்றபோது, அங்கு மசாஜ் செய்துகொள்ளும் வாய்ப்பும் இருந்தது. அப்படிப்பட்ட ஒரு படம்தான் இது. 

மஞ்ச கமெண்ட் ம&: 

ஹூம்! இதெல்லாம் நான் Travel XP சானல்ல (World Best SPA) பார்த்து ஜொள்ளு விட்டதோட சரி. ஆனாலும் இவருக்கு மச்சம் ஜாஸ்தி! 


இந்தமாதிரி சில பல கான்ஃபரன்ஸுகளுக்குச் செல்லும்போது கொஞ்சம் கலாச்சார அதிர்ச்சி ஏற்படும். இப்படித்தான் ஒரு முறை நான் குவைத்துக்கு எங்கள் ஃபேஷன் டிவிஷன் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் பிரச்சனைகளை அறிந்துகொள்ளச் சென்றிருந்தேன். அங்கிருந்த தலைவி (country head, french lady) சிலபல சாஃப்ட்வேர் பிரச்சனைகளை உடனுக்குடன் சரிசெய்து காரணங்களை விளக்கியவுடன், என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள் (சிகரட் ஊதிக்கொண்டே). (இதை படம் எடுக்கலியா!) அவள் வயது 30 இருக்கலாம். நான் நடுநடுங்கிப்போய்விட்டேன். (ஐ...  கதை!) அவளுக்கு என் இந்திய நேச்சர் தெரிந்திருந்ததால் விட்டுவிட்டாள்.  அலுவலகத்திலும் பெண்கள் என்மேல் பட்டுவிடாமல் ஜாக்கிரதையாக இருப்பேன். சட் என்று மேற்கத்தைய நாடுகளிலிருந்து வந்திருக்கும் பெண் அதிகாரிகள் (officers) கை கொடுத்தால், இயற்கையாக என் கையைப் பின்னுக்கு இழுத்துக்கொள்வேன். இவையெல்லாம் மாற ரொம்ப வருடங்களாயிற்று.
- - - - - - - - - - - -

சில நேரங்களில் அசட்டு தைரியத்தில் ஏதாவது நான் பண்ணிவிடுவேன். படங்களும் எடுத்துக்கொண்டுவிடுவேன். பிறகு சாவகாசமாகப் பார்க்கும்போது ஏதேனும் ஆகியிருந்தால்? என்று தோன்றும்.  இது பற்றியே ஒரு பதிவு படங்களுடன் எழுத எண்ணம் (எரிமலைப் பகுதிகளுக்கு-மூன்று வெவ்வேறு இடங்களுக்குச் சென்று வந்ததைப் பற்றி). இது தாய்லாந்து கடலில், பாதுகாப்பு ஜாக்கெட் போட்டிருந்தாலும் கடலில் இறங்கிவிட்டேன் (நீச்சலடித்துத்தான் திரும்ப படகில் ஏறணும்)


படகிலிருந்து எவ்வளவு தூரத்தில் நீஞ்சுகிறேன் என்று தெரிகிறதா?


அதற்கு முந்தைய நாள், கடலில் Coral, Color fishes பார்க்கலாம் என்று சொன்னவுடன் நான் கடலுக்குள் (படகிலிருந்து) இறங்கிவிட்டேன். அந்த அனுபவம் தனி. இருந்தாலும் ரிஸ்க் என்பது இருக்கிறதுதானே.


தூரத்தில் தெரிகிறேனா?
= = = = = = = = = =
KGG பக்கம். 

சமீபத்தில் ( காந்தி பிறந்தநாள் ) Play Arena என்ற இடத்திற்கு மகன், மருமகள், பேரன்கள் ஆகியோருடன் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. 

மாலை 3 மணி முதல், ஆறு மணி வரை நாங்கள் reserve செய்த நேரம். 

சரிதான் play area (?) என்றால் உள்ளே போய் இஷ்டத்துக்கும் ஏதாவது விளையாடலாம் என்று நினைத்து சென்றேன். 





அங்கே கேட்டில் ஒவ்வொருவருக்கும் 2000 ரூபாய் வசூல் செய்து விட்டார்கள்! அடப் பாவிகளா! அந்தக் காலத்தில் நாங்கள் வீதியில் சர்வ சாதாரணமாக கிட்டிப்புள் தொடங்கி கிரிக்கட் வரை, கோலி முதல் கோ கோ வரை இலவசமாகவே ஆடி, வீரத் தழும்புகளுடன் வீடு திரும்புவோமே ! ஒரு பைசா கூட செலவு இருக்காது! 


ஒரு யந்திரத்தில் பெயர் மற்றும் விவரங்களை உள்ளிட்டால் ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு கைப்பட்டை வெளியே வருகிறது. அந்தப் பட்டையை கைக்கடிகாரம் போல நம் கையில் அணிந்துகொள்ளவேண்டும். 

என்னுடைய பட்டையில் என்ன விவரம் உள்ளது என்று பார்த்தேன். 


அட! நான் குழந்தை என்ற விவரம் கண்டு ஆச்சரியம். child என்றால் கட்டணத்தில் தள்ளுபடி உண்டா என்று ஆர்வத்துடன் கேட்டேன். 
அதெல்லாம் இல்லை - child என்று பதிந்தால் வேறு விவரங்கள் கேட்காமல் சுலபமாக சுருக்கமாக முடிக்கலாம் என்று சொன்னான், என் பேரன்! 

ஹூம்! வாழ்க்கையில் மூன்று மணி நேரம் வெட்டியாக உட்கார்ந்து 2000 ரூபாய் செலவழித்த ஒரே பிரகிருதி நான்தான்! 


நால்வரும் ஆடிய விளையாட்டு ஊறுகாய் பந்து! (Pickle ball) 

பந்துல நிறைய ஓட்டைகள்! 

நானும் கொஞ்ச நேரம் பேரன்களுடன் ஆடிப் பார்த்தேன். மூன்று நிமிடங்களிலேயே மூச்சு வாங்கியது! ஆனாலும் சமாளித்து பத்து நிமிடங்கள் ஆடினேன். 




பக்கத்துப் பகுதியில் சிலர் ஸ்கேட்டிங் சாகசங்கள் செய்துகொண்டு இருந்தனர். 

இன்னும் ஒரு பகுதியில் செங்குத்தான அமைப்பில் சிறுவர்கள் மற்றும் இளைஞர் + இளைஞிகள் ஏறி சாகசம் செய்தனர். 



பேரன் கிரிக்கட் பேட்டிங் பயிற்சி: 


காந்தி பிறந்தநாள் விடுமுறையை இப்படி நாங்கள் கழித்து மகிழ்ந்தோம்! 
= = = = = = = = = = = = = = =

4 கருத்துகள்:

  1. புதன் புத்தன் புதன் ஆகியது, (புத்தன் = புதிய). உலகம் சுற்றும் வாலிபன் (நெல்லை) தயவில் பிகினி ஆண்ட்டி, மசாஜ் கேர்ள்ஸ் என்று ஒரே குமுதம் தான். ஆனால் அரசு பதில்கள் போன்று பதில்கள் அமையவில்லை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  2. //ஹூம்! வாழ்க்கையில் மூன்று மணி நேரம் வெட்டியாக உட்கார்ந்து 2000 ரூபாய் செலவழித்த ஒரே பிரகிருதி நான்தான்! //

    ஓய்வடைவதற்கு முன் ஆபீஸில் மூன்று மணி நேரம் வெட்டியாக உட்கார்ந்திருந்து 2000 ரூபாய் சம்பாதித்ததற்கு பின் விளைவோ?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!