18.10.25

சகபயணிக்கு உதவி, மற்றும் நான் படிச்ச கதை



===========================================================================================


========================================================================================


 மலேசிய தொழிலதிபர் மீது லண்டனில் தாக்குதல்: கொள்ளையர்களை எதிர்த்து தீரமுடன் போராடிய மனைவி

லண்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசிய தொழிலதிபர் லண்டனில் வழிப்பறி கொள்ளையர்களால் தாக்கப்பட்டார். அவருடன் இருந்த மனைவி, தீரமுடன் போராடி அவரை காப்பாற்றினார்.  மலேசியாவை சேர்ந்த பெட்ரா குழுமத் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வினோத் சேகர், தெற்கு லண்டனில் தான் தாக்கப்பட்டது குறித்து, பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 
அவர் கூறியிருப்பதாவது:  ஆக்ஸ்போர்டில் குடும்பத்தினருடன் இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு பேட்டர்ஸீ பவர் ஸ்டேஷன் அருகே உள்ள என் மகளின் பிளாட்டிற்கு இரவில் திரும்பிக் கொண்டிருந்தபோது, அங்கு திடீரென வந்த இரண்டு பேர் என்னைத் தாக்கினர். கையில் இருந்த கைக்கடிகாரம் உடைந்தது. காயத்தால் ரத்தம் வடிந்தது. அவர்களுடன் போராட முயற்சித்தேன். ஆனால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்ட காரணத்தால், என்னால் முடியவில்லை. -  அப்போது என் மனைவி வினி யீப் தீர்க்கமாக செயல்பட்டார். தனது பணப்பையை காட்டியபடி, கூச்சல் போட்டு கொள்ளையர்களை எதிர்கொண்டார். பெண் சிங்கம் போல அவர் எதிர்த்து நிற்பதை கண்ட கொள்ளையர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.  லண்டன் போலீஸ் அதிகாரிகள் சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் என்னிடம், 'நீங்கள் அதிர்ஷ்டசாலி. நீங்கள் அவர்களிடம் உடைமைகளை கொடுக்காமலிருந்தால் காயம் அடைந்திருப்பீர்கள்' என்றும் கூறினார்.  லண்டனை ஒப்பிடும்போது கோலாலம்பூர் உலகின் மிகவும் பாதுகாப்பான, நகரங்களில் ஒன்றாக உள்ளது. அதற்கு பெரும் நன்றி. இன்று உலகில் குறைபாடுகள் இருந்தாலும், சில விதிவிலக்கான மக்கள் இருக்கிறார்கள். இந்த கொடுமையிலும் கருணை இன்னும் உலகில் உள்ளது.  பொருட்களை காட்டிலும், உயிரும், உறவுகளும் பல கோடி மடங்கு விலை உயர்ந்தவர்கள். விலை உயர்ந்த கடிகாரம் அணிவது, மணி பர்ஸ் வைத்திருப்பது, அனைத்து தெருக்களும் பாதுகாப்பானவை என்று நினைப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கிறேன்.  
உங்களுக்கு இதுபோன்ற ஏதாவது நடந்தால், அதை மறந்துவிடுங்கள். ஒரு கடிகாரம், ஒரு பணப்பை, ஒரு மொபைல் போன் என அனைத்தையும் புதிதாக வாங்கிக்கொள்ள முடியும் ஆனால், உங்கள் உயிர், உங்கள் உறவுகள், நண்பர்களை ஒருபோதும் இழக்க முடியாது.  எச்சரிக்கையாக இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். கொள்ளையடிக்க முடியாத விஷயங்களுக்கு - ஒவ்வொரு நாளும் - நன்றியுடன் இருங்கள்.  இவ்வாறு சமூக அக்கறையுடன் வினோத் சேகர் பதிவிட்டுள்ளார்.
======================================================================================



கேரள முதல்வர் பினராய் விஜயனை அலற விட்ட பெண் IAS அதிகாரி ரேணு ராஜ். 

     டிரான்ஸ்பர் செய்யப்பட்டு வேறு பணிக்கு செல்லும் கடைசி நாளில் அதிரடி நடவடிக்கை, அதிர்ச்சியடைந்த பினராய் விஜயன்...       கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசை கதற விட்டு...   இயற்கை எழில் கொஞ்சும் மூணாறு பகுதியில் தான் சப் கலெக்டராக பணியில் இருந்த போது...         விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் யாருடையதாக இருந்தாலும், எந்தக் கட்சியின் ஆதரவு இருந்தாலும்,  ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு இருந்தாலும் சரி...   யாருக்கும் பயப்படாமல் 

     `9 மாதங்கள்; 90 ஆக்கிரமிப்புகள் கட்டிடங்கள் அகற்றம்!' - பினராய் விஜயன் ஆட்சியை பதறவைத்த கேரள பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி       முறைகேடாக நிலம் வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்..          மூணாறில் ஓடும் முத்திரா ஆற்றின் கரையில் கட்டப்பட்டு வரும் பஞ்சாயத்து அலுவலகம் கட்டிடம் நதிக்கரை பாதுகாப்பு விதிகளை மீறி உள்ளது என்று உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார்...         இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் சென்ற அரசு தோல்வி அடைந்தது..         எங்கே பிரச்சினை துவங்கியது?... 

ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவரான இடுக்கி தொகுதி முன்னாள் எம்பி ஜாய்ஸ் ஜார்ஜ் குடும்பத்தினர்  முறைகேடாக 20 ஏக்கர் நிலத்தை பட்டா போட்டுள்ளது தெரியவந்துள்ளது..        உடனடியாக அந்த 20 ஏக்கர் நில பட்டாவை ரத்து செய்து விட்டார்...          இதிலிருந்து தான் பெண் சப் கலெக்டருக்கு ஆளும் பினராய் விஜயன் அரசுடன் மோதல் தொடங்கியது...         பினராய் விஜயன் அரசின் அராஜக தேவிகுளம் CPM எம்எல்ஏ ராஜேந்திரன்...  சப் கலெக்டர் ரேணு ராஜ் மீது உண்மைக்குப் புறம்பாக குற்றம் சாட்டியுள்ளார்...       IAS படித்து விட்டால் இவர்களுக்கு எல்லாம் தெரியுமா?, கொஞ்சம் கூட அறிவில்லாதவர்கள் என்று பொது மக்கள் முன்னிலையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது...       டிரான்ஸ்பர் செய்த பினராய் விஜயன் மார்க்சிஸ்ட் அரசு... 
இதன் பிறகு சப் கலெக்டர் ரேணு ராஜ்ஜை நிர்வாகதுறையின் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார்.       கடைசி நாளிலும் அதிரடி காட்டி கேரள மார்க்சிஸ்ட் அரசை கதற விட்டு...   1999 ஆம் ஆண்டு முறைகேடாக வழங்கப்பட்ட 2.5 ஏக்கர் கொண்ட  4 நிலங்களின் பட்டாக்களை ரத்து செய்து உத்தரவிட்டார்...        மூணாறில் மற்றும் தேவிகுளம் பகுதியில் உள்ள காடுகளை ஆளும் கட்சி ஆதரவுடன் தங்கள் இஷ்டப்படி ரியல் எஸ்டேட் மாபியா கும்பல் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்று அந்த பகுதியில் பணி செய்து வரும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்...         மூணாறில் உள்ள மலைவாசதளத்தில் புற்று நோயாக ஆக்கிரமிப்பு பரவி உள்ளது... இதற்குரிய அறுவைச் சிகிச்சை செய்து தான் இங்கு பணிபுரிந்த 9 மாதங்களில் ஒரு நாள் கூட வீணாக்காமல் 90 ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டார் ரேணு ராஜ்...        கடந்த 9 வருடங்களில் தேவிகுளம் சப் கலெக்டராக பணியில் இருந்த 16 IAS அதிகாரிகள் பணி மாறுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது..         CPM முதல்வர் பினராய் விஜயன் ஆட்சியில் டிரான்ஸ்பர் செய்யப்பட்ட  5 வது IAS அதிகாரி ரேணு ராஜ்...        காங்கிரஸ் ஆட்சியிலும் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காமல், ஆக்கிரமிப்புகளை அகற்றிய நேர்மையான சப் கலெக்டரை பணி மாறுதல் செய்யும் வேலையை மட்டும் பார்த்து வந்துள்ளார்கள்... 

     பாரதி கண்ட புதுமைப் பெண் ரேணு ராஜ் IAS அதிகாரிக்கு பாராட்டுக்கள்....

=======================================================================================

ஓடும் ரயிலில் வலியால் துடித்த கர்ப்பிணி: 'வீடியோ' அழைப்பில் பிரசவம் பார்த்த இளைஞர்

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில், ஓடும் ரயிலில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை ரயிலில் இருந்து இறக்கிய இளைஞர், டாக்டரை 'வீடியோ' அழைப்பில் தொடர்பு கொண்டு அவரது உதவியுடன் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.  இளம்பெண் மஹாராஷ்டிராவின் மும்பை புறநகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 15ம் தேதி பிரசவத்துக்காக தன் குடும்ப உறுப்பினர் ஒருவருடன் மும்பை மருத்துவமனைக்கு சென்றார்.  அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், குழந்தை பிறக்க சில நாட்கள் ஆகும் என கூறியுள்ளார்.  இதனால், ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் ஓடும் ரயிலில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.  ஒருகட்டத்தில் அப்பெண், குழந்தையை பிரசவிக்கும் நிலையை அடைந்துள்ளார்.  இதை பார்த்த சக பயணியான விகாஸ் திலிப், உடனே அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார்.  ஜோகேஸ்வரிக்கும், கோரேகாவ்னுக்கும் இடையே உள்ள ராம் மந்திர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.  அங்கு டாக்டர்களோ, மருத்துவ வசதியோ, ஆம்புலன்ஸ் வசதியோ இல்லை. இதனால் திலிப் உடனே தன் தோழியான டாக்டர் தேவிகா தேஷ்முக்கை, 'வீடியோ' அழைப்பில் தொடர்பு கொண்டார்.  பாராட்டு அவரின் வழிகாட்டுதல் படி ரயில் நிலைய பிளாட்பாரத்திலேயே சிறிய தடுப்பு ஏற்படுத்தி அந்த கர்ப்பிணிக்கு திலிப் பிரசவம் பார்த்தார்.  இதில் அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து அந்த பெண்ணையும், குழந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.  சரியான நேரத்தில் சமயோஜிதமாக செயல்பட்ட திலிப்பை மும்பை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்

===========================================================================================

 

நான் படிச்ச கதை (JKC)

நேச நெஞ்சம்

கதையாசிரியர்: கா.ஸ்ரீ.ஸ்ரீ.

 

கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர்.

'கலைமகள்' பத்திரிகைக்கு துணையாசிரியராகவும் பதிப்பாசிரியர்களுள் ஒருவராகவும் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். மொழிபெயர்ப்புகளுக்கான 'மஞ்சரி' பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும் இருந்தார்.

தமிழ் விக்கி சுட்டி    கா-ஸ்ரீ-ஸ்ரீ

கா ஸ்ரீ ஸ்ரீ

நேச நெஞ்சம்

கண்ணனுக்குப் பிரியமான கோபி அவள், என்றாவது ஒரு நாள் அவனைக் காணாவிட் டால் அவளுக்கு உணவு இனிக்காது. யமுனைக் கரைக்கு அவள் சென்றால், முன்னமே புன்னை மரத்தின் அடர்ந்த கிளைகளில் பதுங்கி அமர்ந்த கண்ணன் குழலூதுவான். அவள் கால் அங்கேயே தயங்கிப் பின்னித் தடுமாறும். இடுப்பில் உள்ள பானையில், அமுதினுமினிய இசை வெள்ளம் அலையலையாக நிரம்பித் தளும்புவதாகத் தோன்றும்.


சில சமயம் அவன் ஊமையாக இருப்பான். உவகை மங்கி, அவள் மெல்ல மெல்ல அடியிட்டு நகருவாள், கண் இமைக்கும் பொழுதில் “டக்” என்று ஒரு கல், குறி தவறாமல் அவளது பானையைத் தாக்கும். பானை உடையும்.

”இதோ நேரே யசோதையம்மாவிடம் போய்ச் சொல்லுகிறேன்!” என்று வீறாப்புடன் பேசிவிட்டு, அவள் தரதர வென்று நடப்பாள். கையில் உடைந்த ஐந்தாறு பானையோடுகள் இருக்கும். ஆனால் நந்தனுடைய அரண்மனைக்கு வரும்போது அவற்றுள் ஏதாவது ஒரு துண்டுதான் அவளிடம் மிஞ்சும். அதை வீடு எறிய மனம் வராது. தலைப்பில் அதை முடித்து மறைத்துக் கொண்டு அரண்மனைக்குள் புகுவாள்.

யசோதையிடம் அவள் பேச்சுக் கொடுப்பாள்; கண்ணனுடைய சாமர்த்தியத்தையும் வீரத்தையும் புகழ்வாள்; நேரம் போவது தெரியாது. பேச்சுப் பராக்கில், யமுனை ஆற்றிலிருந்து இன்னும் தண்ணீர் கொண்டு வரவே இல்லையே என்ற நினைவு எழும். சடக் கென்று எழுத்து வீட்டுக்கு வருவாள். தாய்க்குத் தெரியாமல் இன்னொரு பானையை எடுத்துக் கொண்டு புறப்படுவாள். காதில் ஒலிக்கும் குழலோசை துணை வர, கொதிக்கும் வெயிலும் தண்ணிலவாகக் குளிரும்.

இப்படி இளவேனில்கள் வந்தன, போயின.

உலக வழக்கப்படி ஆய்ப் பெண்ணுக்குத் திருமணம் நிகழ்ந்தது. உயர்ந்த நிலையிலுள்ள கணவன் கிடைத்தான் என்று ஊரார் போற்றினர். மாமன்னன் கம்ஸனது மடைப்பள்ளியில் அவன் ஓர் அதிகாரி.

தினமும் இனிய பண்டங்கள் அவளுக்கு உண்ணக் கிடைத்தன. பசைப் பூச்சினால் மிருதங்கம் கூட மதுரமாக ஒலிக்கிறது. மாந்தருக்குக் கேட்க வேண்டுமா? கணவன் வாயிலாகக் கம்ஸனைப் பற்றிக் காதில் விழுந்த புகழ் மொழிகள் மெல்ல மெல்ல அவளுக்கும் பாடமாயின. விழித்திருக்கையில் குழலோசை அவள் காதில் ஒலிக்காத நிலை வந்தது.


கண்ணனுடைய குறும்புகள் ஓயாமல் வளர்வதாக மதுரைக்குச் செய்திகள் விரைந்த வண்ணம் இருந்தன. அஞ்சி நடுங்கிய கம்ஸன், கண்ணனை அழைத்து வர அக்ருரரை அனுப்பினான். கண்ணனும் பலராமனும் மதுரைக்கு வந்ததுமே, கண்ணன் சாணுரனுடனும், பலராமன் முஷ்டிகனுடனும் மற்போர் நிகழ்த்த வேண்டும் என்ற ஏற்பாடு, மதுரை மாநகர் முழுவதும் அந்தப் பெரு விழாவைக் கண்டுகளிக்க ஆர்வமுற்று, கண்ணில் உயிரைத் திரட்டிக் கொண்டு அந்த நாளை எதிர்பார்த்திருந்தது.

ஆகா! அந்தப் பொன்னான நாள் ஒரு வகையாக உதித்தது. அன்றைக்கு ஆய்மகள், காட்சிச் சாலையில் சாமானிய மக்களுடன் கூட்டத்தில் மோதி இடிபட்டுக் கொண்டு உட்காருவதாக இல்லை. யாரும் எளிதில் கவனிக்கக் கூடிய முக்கியமான இடத்தை, அவளுக்காக அவள் கணவன் பிடித்து வைத்திருந்தான்.

பொழுது விடிந்ததிலிருந்தே அவள் எத்தச் சேலையை உடுப்பது, எந்த எந்த நகைகளை அணிவது என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். தான் பாடப்போகும் பெருங் காப்பியத்தைப் பற்றி ஒரு மகாகவி கூட அப்படிக் கவலைப்பட மாட்டான்; அவ்வளவு கவலை அவளுக்குத் தன் சிங்கார ஆடை அணிகளைப் பற்றி! என்ன செய்தும் அவளுக்கு எதுவுமே திருப்தியாக அமையவில்லை.

மற்போர் நிகழ வேண்டிய வேளை நெருங்கி நெருங்கி வந்தது. ஆனால் கோபியின் அலங்கரிப்பு முடிந்த பாடில்லை. இன்னும் சில நகைகளை அவள் அணிய வேண்டியிருந்தது. நேரம் கடக்கக் கடக்க அவளது ஒய்யாரமும் சொருகம் கணவனுக்குப் பிடிக்க வில்லை. ”விழா முடிந்த பிறகு அங்கே போய் நீ என்ன, குப்பை கூட்டப் போகிறாயா?” என்று எரிந்து விழுந்தான்.

ஒரு கடைக்கண் வீச்சினால் அவன் சினத்தை அடக்கிய அவள், “இங்கே கொஞ்சம் உதவிதான் செய்யுங்களேன்! கருவூலத்தில் வைத்துள்ள என் நகைப் பேழையை எடுத்து வாருங்களேன்!” என்று கட்டளை யிட்டாள்.

கணவன் பேழையைக் கொண்டு வந்தான், காதணிகள், கழுத்தணிகள், தோளணிகள் – அனைத்தையும் அவன் வெளியே எடுத்தான். கடைசியில் பேழை அடியில் ஒரு சிறு பானைச் சுக்கல் அவன் கைக்குத் தட்டுப்பட்டது. அதை எடுத்துப் பார்த்து அவன் கலகல வென்று நகைத்துக் கொண்டே, “பெண்களின் தகை நகைகளைப் பற்றி எனக்கு என்ன தெரிகிறது? இத்த நகையின் பெயர் என்னவோ? இதை எங்கே அணிந்து கொள்வாயோ?” என்று மனைவியைக் கேட்டான்.

அவன் கையிலிருந்த ஓட்டாஞ்சல்லியைக் கண்டு அவள் கண்ணை ஒரு சுழற்றுச் சுழற்றினாள்; முகத்தைச் சிணுக்கிக் கொண்டே “இது என்ன வேடிக்கை வேண்டிக் கிடக்கிறது! எனக்கு இந்த விஷமமெல்லாம் பிடிக்காது. நீங்கள்தாம் குறும்புக்காக இந்த ஓட்டாஞ்சல்லியை நகைப் பேழையில் வைத்திருப்பீர்கள்!” என்றாள்.

அவனது கையிலிருந்து அவள் அந்தத் துண்டை வெடுக்கென்று எடுத்து, அசட்டையுடன் வாசலில் வீசி எறிந்தாள், மதுரையில் பிரபலமான ஒரு காதல் கீதத்தை இனிமையாக இசைத்தபடி நகைகளை அணியலானாள்.

காதல் கீதம்

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்

நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்

நினைவு தராமல் நீயிருந்தால்

கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்

நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்


நள்ளிரவு கடந்து விட்டது. ஆய்மகளின் கணவன் வீட்டுக்கு நடந்தான். அரண்மனையில் குழம்பிக் கொண்டு கிடந்தால் மட்டும் அவனால் என்ன செய்து விட முடியும்? மாமன்னன் கம்ஸனுடைய உயிரற்ற உடலில் உணர்வை மீட்கும் வல்லமை யாருடைய கண்ணீருக்கும் இல்லை. எவருடைய புலம்பலுக்கும் இல்லை.


நினைத்தது ஒன்று; நடத்தது வேறு! மற்போரில் கண்ணனையும் பலராமனையும் கொன்று தீர்க்கத் திட்டமிட்டிருந்தான் கம்ஸன், ஆனால், மாயக் கண்ணன், அந்தத் திட்டத்தைக் குலைத்து எய்தவன் மீதே அம்பு பாயச் செய்து விட்டான்! ‘கம்ஸன் கொலையுண்ட செய்தி இவ்வளவு நேரத்தில் ஜராஸந்த மகாராஜாலின் காதுக்கு எட்டியிருக்கும். அவன் பிரம்மாண்டமான சேனையுடன் வாயு வேகமாக மதுரைக்கு வருவான்; இந்தத் துஷ்டப் பயல் கிருஷ்ணனைக் கடுகு கடுகாகத் துளைத்துத் துண்டமாக்கி எல்லாத் திசைகளிலும் எறியப் போகிறான்!’ – இந்த ஒரே ஆறுதல்தான் இப்போது மதுரை மாநகரில் மிஞ்சி யிருந்தது.

தன் வீட்டை அணுகி விட்டதுகூடச் சிந்தனை மயக்கத்தில் கோபியின் கணவனுக்குத் தெரியவில்லை. எதிரே கண்ட காட்சி அவனைத் திடுக்கிட வைத்தது. கையில் விளக்குடன் யாரோ வாசலில் குறுக்கும் நெடுக்குமாக நடப்பது தெரிந்தது. ‘பயங்கரமான இந்த யமராத்திரியில் எதுவும் நடக்கலாம். இது யார், திருடனா, பிசாசா?’ என்று அவன் திகைத்தான்.

தயங்கித் தயங்கி முன்சென்று அவன் அந்த உருவத்தின் அருகில் வந்தான்; நன்றாகக் கவனித்துப் பார்த்தான், கையில் விளக்கை வைத்துக் கொண்டு கோபிதான் எதையோ தேடினாள்!

அவன் கொதிப்புடன், “அடி அசடே! உள் உயிர் உனக்கு வேண்டாததாக இருக்கலாம். எனக்கு அது வேண்டும். பேசாமல் வீட்டுக்குள் வா!” என்றான்.

“நீங்கள் போங்கள் உள்ளே! இன்றைக்கு மிகவும் களைத்து வத்திருப்பீர்கள். இதோ உங்கள் பின்னாலேயே வருகிறேன்!”

”வாசலில் எதைத் தேடுகிறய், பைத்தியம் மாதிரி?”

“ஒரு நகையை.”

“நகையா? போனால் மற்றென்று செய்து கொள்ளலாமே!”

”ஒவ்வொரு நகையிலும் பெண்கள் எப்படி உயிரை வைத்திருக்கிறார்கள் என்பது ஆண்களான உங்களுக்கு எப்போதும் தெரிய முடியாது! ‘கணவனே பெண்ணுக்கு அணிகலன்’ என்று நாங்கள் சும்மாவா சொல்கிறோம்?”

“அப்படி என்ன விலை உயர்ந்த நகை போய் விட்டது?”

“என் வங்கி! இன்று பகலில் எல்லாமே விபரீதமாக நடந்தது. நான் வீடு திரும்பிய போது என் மனம் ஒரு நிலையிலே இல்லை. பாழாய்ப்போன அந்த வங்கி, இங்கே தான் எங்கோ நழுவி விழுந்திருக்க வேண்டும்!”

சிரித்துக் கொண்டே அவன் வீட்டினுள் சென்றான். ஆய்மகள் குனிந்து மீண்டும் தேடலானாள். பகலில் கண்ணன் அவளை யதேச்சையாகப் பார்த்தான்; அவளும் அவனைப் பார்த்தாள். அந்தக் கண்ணிணை நோக்கு, கோகுலத்து இனிய நினைவுகளை எழுப்பி அவளை மயக்கி மகிழ்விக்கலாயிற்று.

காலையில் அவள் வாசலில் வீசி எறிந்தாளே ஒரு பானைச் சுக்கல் – அது ஓட்டாஞ் சல்லியல்ல; அவளுடைய நெஞ்சமே அப்படித் தெறித்து விழுத்திருந்தது! அது கிடைத்தாலன்றி அவள் அமைதியாகத் தூங்க முடியாது. நெடு நாட்ளாகப் பாடாமலிருந்த கோகுலத்துப் பழம் பாடலொன்றை உருக்கமாக இசைத்துக் கொண்டே – அவள் அந்த உடைசல் துண்டைத் தேடலானாள்.

சோக கீதம்

நெஞ்சத்திலே நீ நிறைந்திருந்தாய்

நேற்று முதல் நீ மறைந்து விட்டாய்

நினைவு தராமல் நீயிருந்தால்

கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

பின்னுரை.

கோபியின் மனதில் இருவர். கண்ணன்; தீராத விளையாட்டு பிள்ளை; நினைத்தாலே இனிப்பவன்; கம்சன் மாமன்னன்; பேரும் புகழும் வாய்ந்தவன்; கணவனின் எசமானன். இவர்களில் எவரை மறப்பது. அதன் உருவகமே கண்ணனுக்கும் கம்சனுக்கும் இடையே நடக்கும் மல்யுத்தம்.

இறந்தவர்களுக்கு செய்யும் கடைசி சடங்கான நீர் மாலை பானை உடைப்பு செயல் மூலம் நடக்கப்போவதை (கம்சன் இறப்பு) கண்ணன் சூசகமாக தெரிவித்து விட்டான். மறுநாள் கம்சன் இறந்தவுடன் கோபிக்கு கண்ணன் வென்றதை கொண்டாடுவதா, கம்சன் இறப்புக்கு வருந்துவதா என்று தெரியவில்லை. இந்த நிலைக்கு காரணமான ஒன்று தான் ஓட்டாஞ்சில்லு. அதைத்தான் கோபி கடைசியில் தேடுகிறாள்.

நமக்குள்ள பாடம் : செயலும் அவனே, செய்வதும் அவனே. கருவி மட்டுமே நாம்.  

கதையில் படமும் பாடலும் சேர்த்தது JKC

– கல்கி, 25-04-1976. மூலம்: வி.ஸ.காண்டேகர், தமிழ் வடிவம்: கா.ஸ்ரீ.ஸ்ரீ

Vishnu Sakharam Khandekar (11 January 1898 – 2 September 1976) was a Marathi writer from Maharashtra, India. He was the first Marathi author to win the prestigious Jnanpith Award.

கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள்: பதினைந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை.

49 கருத்துகள்:

  1. முதல் செய்தியை என்னவென்று சொல்ல என்று தெரியவில்லை.

    பாசிட்டிவாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அப்படி எடுத்துக் கொண்டால் மனம் வலிக்கிறது. அக்குழந்தையையும் குழந்தையின் அம்மாவையும் நினைத்து.

    இதோடு ஒரு சில வரிகள் எழுத வந்தது ஆனால் அவை எல்லாம் குறிப்புகளாக இருப்பதால் சொல்லாமல் போகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானுமே பொதுவாக இது மாதிரி செய்திகளை - டிரைவர் மாரடைப்பு வந்தும் பஸ்ஸை ஓரமாக நிறுத்தி பயணிகளில் உயிரைக் காப்பாற்றி பின் உதயிரிழந்தார் - போன்ற செய்திகளை தவிர்த்து விடுவேன்.  ஆனால் இந்தச் செய்தியில் இவ்வளவு சின்னப்ப பையன் எப்படி அவனுக்கு அப்படி தோன்றியது, என்ன தோன்றி இருக்கும் என்கிற சோகம், நெகிழ்ச்சி வந்தது.

      நீக்கு
  2. இரண்டாவது செய்தியில் வினோத் சேகர் சொல்லியிருக்கும் இந்த வரிகளை

    //பொருட்களை காட்டிலும், உயிரும், உறவுகளும் பல கோடி மடங்கு விலை உயர்ந்தவர்கள். விலை உயர்ந்த கடிகாரம் அணிவது, மணி பர்ஸ் வைத்திருப்பது, அனைத்து தெருக்களும் பாதுகாப்பானவை என்று நினைப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கிறேன். //

    அப்படியே டிட்டோ செய்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளிக்கிழமைகளில் யாரும் வேறு ஒருவருக்கு வீட்டிலிருந்து பணம் எடுத்த்யு தரமாட்டார்கள்.  விளக்கு வைத்ததும் மோர் கொடுக்க மாட்டார்கள்.  என்ன சாஸ்திரமோ... 

      இவை இரண்டையுமே நான் செய்திருக்கிறேன் - அவர்களின் தேவை, அவசரம் கருதி. 

      அவர்களே எனக்கு இதுமாதிரி காரணம் சொல்லி சில உதவிகளை ஒத்திப் போட்டிருக்கிறார்கள்!

      நீக்கு
    2. ஸ்ரீராம் நான் இது போன்றவைகளை பின்பற்றுவதே கிடையாது. அப்போது என்ன அந்த நேரத்தில் என்ன தேவையோ அதைத்தான் யோசிப்பேன். உங்க கருத்துக்கு டிட்டோ

      கீதா

      நீக்கு
  3. முதல் செய்தி.... குழந்தையைப் பாராட்டுவதா, தன் பெற்றோர்களின் கனவைக் கலைத்துவிட்டானே என வருத்தப்படுவதா எனத் தெரியவில்லை. சிறுவனுக்கு அவ்வளவு நாலெட்ஜ் இருந்திருக்குமா இல்லை தெய்வாதீனமாக இது நடந்ததா என்றெல்லாம் யோசனை வருகிறது.

    பதிலளிநீக்கு
  4. ரேணு ராஜ் அவர்களுக்கு சல்யூட்!!!!!

    // பினராய் விஜயன் அரசின் அராஜக தேவிகுளம் CPM எம்எல்ஏ ராஜேந்திரன்... சப் கலெக்டர் ரேணு ராஜ் மீது உண்மைக்குப் புறம்பாக குற்றம் சாட்டியுள்ளார்... IAS படித்து விட்டால் இவர்களுக்கு எல்லாம் தெரியுமா?, கொஞ்சம் கூட அறிவில்லாதவர்கள் என்று பொது மக்கள் முன்னிலையில் பேசிய//

    கேவலமாக இருக்கு.

    கேரளம் எதுக்குப் பீத்திக்குது? God's own land என்று? அழகான மூணாறை காட்டுப் பகுதியை ரியல் எஸ்டேட் ஆக்ரமிச்சுட்டு அப்புறம் என்ன பெருமை வேண்டிக் கிடக்கு? கட்சியின் அராஜகம் கொந்தளிக்க வைக்கிறது. எந்தக் கட்சியும் உறுப்படி இல்லை. மக்களும் உறுப்படி இல்லை. அவங்கதானே தேர்ந்தெடுக்கறாங்க.

    நேர்மையான அதிகாரிகளுக்கு இப்படித் தொல்லைகள் கொடுத்தால்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உறுப்படியா இல்லை உருப்படியா?

      நீக்கு
    2. உருப்படி. போங்கப்பா தட்டச்சு செய்யறப்ப வரும் பிழைகள்

      கீதா

      நீக்கு
    3. நேற்றைய என்னுடைய கருத்திற்கு சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் விபரமாக பதில் தந்துள்ளார். அவருக்கு நன்றி. சிறுகதை போட்டியில் நீங்கள் வெற்றி பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரி.

      நீக்கு
    4. இப்போதெல்லாம் அல்லது பொதுவாகவே ஆண்களுக்கு இல்லாத துணிவும் நேர்மையும் பெண்களிடம் மிகுந்து வருகிறது.

      நீக்கு
    5. கமலா அக்கா அக்கா, நேத்திக்கு உங்கள் கருத்தை பார்க்கவே இல்லை அதன் பிறகு வலைப்பக்கம் வராததால். மிக்க நன்றி உங்கள் வாழ்த்திற்கு. நேற்றைய பதிவிற்கும் சென்று பார்க்கிறேன் அக்கா.

      கீதா

      நீக்கு
    6. பெண்களை நம் சமூகம் அடக்கி வைத்ததன் முக்கியக் காரணம், அவங்க எல்லா வித்த்திலும் ஆண்களைவிட மேம்பட்டஙர்கள் என்பதால். அறிவு, திறமை, தைரியம், மிகப் பிரச்சனையான சமயங்களில் தைரியம் இழக்காமல் முடிவெடுக்கும் திறமை என பல்வேறு குணங்கள் அவர்களுக்கு உண்டு. இதனைப் பற்றி நிறைய எழுதலாம்.

      நீக்கு
    7. நான் மதிக்கிறேன்.  வீட்டில் எல்லா வகையிலும் முடிவெடுக்கும் திறன் கொண்டவர். குறைந்த சம்பளத்தில் அழகாய் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்திக் காட்டியவர்.

      பாஸ் அழகாக பாடுவார்.  அதேபோல இரண்டு பக்கமும் உறவுகளை மிகச்சிறப்பாக பேணுவார்.  வீட்டின் சிறப்பான PRO அவர்.  அதேபோல நாங்கள் திருமணமாகி வந்தபோது அவருக்கு குக்கர் வைக்கக் கூட தெரியாது.  ஆனால் இன்று அவர் செய்யும் பல கைப்பக்குவங்களுக்கு நான் பெரும் ரஸிகன்  நகைகளுக்கு ஆசைப்படுவது கிடையாது.  வீட்டுப் பெண்களை வீட்டுக் கொடுப்பது கிடையாது.  நான் கோபப்பட்டால் கூட தப்பு என்று அட்வைஸ் செய்வார்.  

      நீக்கு
    8. ஸ்ரீராம் சூப்பர் சூப்பர்......எனக்குத் தெரியும், நீங்க பாஸை எப்படிச் சொல்வீங்கன்னு!!!!! நிஜமாகவே ரொம்ப நல்ல மனசு அவங்களுக்கு வெளிப்படையாகப் பேசிவிடுபவர் கூடவே மனம் நல்ல மனம்.

      கீதா

      நீக்கு
    9. கமலாக்கா, உண்மையை சொல்ல வேண்டும் என்றால், பரிசு பற்றி மகிழ்ந்த ஸ்ரீராம்தான் எபி வாட்சப் குழுவில் போட்டதோடு எஎல்லோருக்கும் தனிப்பட்ட முறையிலும் சொல்லியிருக்கிறார். கணையாழியில் கதை வெளியான போதும் அப்படித்தான் அவர் மகிழ்ந்து செய்தார். எல்லாருக்கும் அனுப்பி வாட்சப் குழுவிலும் பகிர்ந்தவர்.

      எனக்குமே கூட அவர்தான் செய்தி அனுப்பினார். பரிசு பற்றியும் அதற்கு முந்தைய நிலை பற்றியும்.

      கீதா

      நீக்கு
    10. எங்கள் வீட்டிலும் எல்லா பெண்களும் அசாதாரண திறமை கொண்டவர்கள்.  

      நீக்கு
    11. அதன் பின் செல்லப்பா சாரிடம் இருந்து நேரடியாகவும் பானுக்காவிடம் இருந்தும் செய்தி வந்தது.

      கீதா

      நீக்கு
  5. ஐ ஏ எஸ் அதிகாரி ரேணு பற்றி முன்னமே படித்திருக்குறேன்.

    மனசாட்சிப்படி வேலை பார்த்து பல முதலைகளையும் பகைத்துக்கொண்டு, அதனால் குடும்பத்தினரின் துன்பங்களுக்கும் காரணமாவது சரியான செயலா இல்லை ஊரோடு ஒத்து வாழ்ந்து தன்னளவில் புதிதான தவறுகளைச் செய்யவிடாமல் பார்த்துக்கொள்ளுவது நல்லதா என்ற கேள்வி என்னுள் எழும்.

    ஊருக்கு நல்லது செய்கிறேன் என்று ஆரம்பித்து, தங்கள் அரசியல் மற்றும் மத ஆசைகளால் மக்களின் வெறுப்புக்கு ஆளாகிப் புறக்கணிக்கப்பட்ட சகாயம், பொன்ராஜ் போன்றவர்களும் என் நினைவுக்கு வருவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பான்மை என்னவோ ஒத்துப்போவதுதான், மடங்கிப் போவதுதான்!

      நீக்கு
    2. இல்லைனா என்ன நடக்கும்னு அவங்களுக்கே தெரியுமே, ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
    3. நெல்லை அதேதான் ரிஸ்க் எடுக்க விரும்பாதவங்க அட்ஜஸ்ட் பண்ணி தான் நேர்மையாக இருந்துவிட்டுப் போவோம்னு ....நல்லதை செயல்படுத்த முடியாமல்

      எங்கள் வீட்டில் அனுபவங்கள் உண்டே.

      கீதா

      நீக்கு
  6. இன்றைய கதை மிகவும் சுமார் என்பது என் எண்ணம். பகிர்ந்த பாடல் பிடித்தமானது.

    பதிலளிநீக்கு
  7. திலீப்பின் சமயோஜிதம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. வீடியோ காலில் மருத்துவத்தோழியின் அறிவுரைகலின் படி அப்பெண்ணிற்குப் பிரசவம் பார்த்துக் காப்பாற்றியதையும் பாராட்டாலாம், ஆனாலும் ரிஸ்க் இருக்கோ என்றும் தோன்றியது. திலீப்பின் தைரியத்தையும் பாராட்ட வேண்டும். டெக்னாலஜி வளர்ந்திருக்கு. ஆனால் ஒவ்வொரு ரயில்னிலையத்திலும் மருத்துவ வசதிகள் வைக்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் இதிலும் சில ரிஸ்க் இருக்கிறது..

      நீக்கு
    2. ஆமாம் ரிஸ்க் இருக்கிறது.

      கீதா

      நீக்கு
    3. எல்லாம் நல்லபடியா அமைந்தால் சிலர் பாராட்டுவார்கள். சிலர் குற்றம் சொல்வார்கள். சிக்கலாகிவிட்டது, ஃபெயிலியர் என்றால் அனைவரும் அவரைக் கூண்டில் ஏற்றுவர். பல நேரங்களில் நான் நினைப்பதுண்டு, முதல் மாடியிலிருந்து குழந்தை விழுந்தால் பாய்ந்து காப்பாற்றுவோமா இல்லை வீண் பிரச்சனை என்று கடந்துபோய்விடுவோமா என்று. இவன் கையை நீட்டி பிடிக்க முனைந்ததால் தரையில் மண்டையில் அடிபட்டது, வெறும்ன விட்டிருந்தால் புல்தரை காப்பாற்றியிருக்கும் எனச் சொல்வார்களோ எனத் தோன்றும்.

      நீக்கு
  8. நான் படிச்ச கதையில், கதையை விட, எனக்கு, ஜெ கே அண்ணாவின் பின்னுரை எனக்கு மிகவும் பிடித்தது.

    புராணக் கதைகளை அப்படியே பார்க்காமல் இப்படித்தான் பார்க்க வேண்டும். என் எண்ணமும் அதுவே என்பதால்.

    மற்றும் அவரது பாடல் வரிகளும் மிகவும் பிடித்தது. அழகான பொருத்தமான சேர்க்கை.

    கீதா




    பதிலளிநீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. முதல் செய்தி மனதை வருத்த வைத்தது. மற்றவை நல்ல செய்திகள். நேர்மையாக நடந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    இன்றைய கதை பகிர்வும் அருமை. சிறுவயதில் பழகிய கண்ணனின் நினைவை எப்படி மறக்க முடிந்தது அந்த கோபிகைக்கு.? ஆனாலும், கதையின் முடிவு நன்றாக உள்ளது. கதைக்குப் பின்னுரை சிறப்பு. படங்களும், பாடல்களும் மனதை கவர்கின்றன. பொருத்தமாக பின்னுரை எழுதி, படங்களையும், பாடலையும் இங்கு பகிர்ந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும்.. நன்றியும் கூட.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. JKC சார்..  மற்றவர்கள் படைப்பில் நம் கைவண்ணத்தைப் புகுத்துவது நியாயமா என்கிற கேள்வியை ஒதுக்கி விட்டு, 

    பொருத்தமான பாடல் மட்டுமல்ல, இனிமையான பாடலும் கூட..  அந்த பாடலை நீங்கள் இணைத்திருப்பதை ரசித்தேன்.  சாந்தி படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் உண்மையில் வெண்ணிற ஆடை படத்துக்காக எழுதப்பட்டு, நிராகரிக்கப்பட்டு, அதே ஆண்டு - 1965 - வெளியான சாந்தி திரைப்படத்தில் இடம்பெற்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யெஸ் யெஸ்....ஸ்ரீராம்.

      இப்படியும் எடுத்துக்கலாம் இல்லையா? படைப்பு பிடித்ததால், அதை வாசித்த போது தோன்றிய கருத்தினால் (அண்ணாவின் குறிப்பு) ஹானர் செய்வதாக.

      கீதா

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. காண்டேகர் எழுதிய சில நாவல்களை இவரது மொழிபெயர்ப்பில் லைப்ரரியில் படித்திருக்கிறேன்.  லைப்ரரியில் கோடை விடுமுறையில் இவர் புத்தகம் எடுத்துக் படித்து விட்டு, நேரமாகி விட்டது, மூடவேண்டும் என்று கிளப்பி விடப்படும்போது, படித்த பக்கத்தை ஒரு பேப்பர் வைத்து - புத்தகத்தின் பக்கத்தை மடிப்பது எனக்குப் பிடிக்காது - அடையாளம் வைத்து விட்டு வந்தால் மறுநாள் அதே இடத்தில் புத்தகம் சீந்தப்படாமல் கிடைக்கும்!  அப்படிப் படித்த ஒரு கதை கிரௌஞ்சவதம் என்று நினைவு.

    பதிலளிநீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு


  15. ​பாடல் சாந்தி திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணதாசன் பாடல் என்ற குறிப்பு எப்படியோ விட்டுப்போய்விட்டது. அதே போல் காண்டேகர் படமும்.
    சுட்டியத்திற்கு நன்றி. கதை சுமார் ஆனாலும் விவாதங்கள, விவரக்கேடுகளை தூண்டாதது ​என்பதில் ஐயம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  நடுவில் சில அந்த 'கோபி'க்கு சில காலம் கண்ணன் நினைவிலேயே வரவில்லை போல..   சிறுவயதில் பானை உடைப்பை வருங்காலத்தைக் கூறுவதாகக் கொள்வதிலும் பொருள் இல்லை என்று எனக்குத் தோன்றியது.

      நீக்கு
  16. சிறுவனின் உயிர்த்தியாகம் மனதை வேதனைப் படுத்தியது. ஒருவேளை விளையாட்டாகச் சிறுவன் வெடிகுண்டை எடுத்துச் சென்று வெடித்துவிட்டதோ எனவும் தோன்றுகிறது. ரேணுராஜ் பற்றிக் கடந்த சில மாதங்களில் நி/றையப் படிச்சாச்சு. அதே போல் வி.எஸ்.காண்டேகரின் இந்தக் கதையும் கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் மொழிபெயர்ப்பில் படிச்சிருக்கேன். பாடல் தான் திரைப்படப் பாடல்னு தெரியலை. இந்தப் பாடலைக் கேட்ட நினைவும் இல்லை. ஓடும் ரயிலில் பிரசவம் பார்த்த நபருக்கு முன் அனுபவம் உண்டானு தெரியலை. என்றாலும் தைரியமாக அந்த இளைஞரின் உதவியை ஏற்ற கர்ப்பிணியையும் இளைஞரையும் பாராட்டியே ஆகணும்.

    பதிலளிநீக்கு
  17. முதல் செய்தி படிக்கவே கஷ்டமாக இருக்கிறது. குழந்தைகள் படிக்கும் பள்ளியில் வெடி குண்டு வைக்கும் அரக்க மனம் படைத்தவனை என்னவென்று சொல்வது?
    குழந்தைக்கு குண்டை தூக்கி கொண்டு போய் வெளியே வீச வேண்டும் என்ற அறிவை சினிமாக்கள் கொடுத்ததா? மற்ற குழந்தைகள் காப்பாற்ற பட்டாலும் அந்த பிஞ்சு குழந்தையின் மரணம் மனதை கனக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பையன் சினிமா பார்த்து அப்படி செய்திருப்பானோ என்கிற எண்ணம் எனக்கும் தோன்றியது.

      நீக்கு
  18. மற்ற செய்நதிகளில்ல்ல உள்ள நல்ல மனது உடையோர், நேர்மையான அதிகாரி அனைவருக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  19. ஶ்ரீராம், நீங்கள் உங்கள் மனைவியின் குணநலன்களை பாரட்டி பேசியது மகிழ்ச்சி, நன்றி.
    நெல்லைத்தமிழன் பெண்களின் திறமைகளை பாராட்டியதற்கு நன்றி. அதற்கு உங்கள் இரு பெற்றோர்களுக்கும் என் வணக்கங்கள் அவர்கள் பெண்களை மதித்து சக மனுஷியாக வாழ கற்று கொடுத்து இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  20. கதை பகிர்வு நன்றி கதை படித்தது இல்லை, படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!