22.10.25

உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி !

 

கேள்வி & பதில்கள். 

நெல்லைத்தமிழன் : 

 எதிர்மறைச் சிந்தனைகள் கொண்டவர்கள் ஆபத்தானவர்களா? 

எதிர்மறை சிந்தனை ஆள்களாக அவர்களுக்கேதான் ஆபத்து இல்லை அசௌகரியங்கள் மன உளைச்சல்கள் வரக்கூடும்.

& அக்டோபர் 1 ஆம் தேதி நீங்கள் கேட்ட கேள்வியும், எங்கள் பதிலும் கீழே : 

வளர்ப்புப் பிராணிகளாக மலைப்பாம்பு பெரிய சைஸ் ஓணான் வளர்ப்பவர்களைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன? 

விபரீதங்கள் எங்கும் உண்டு. நாய் தவிர வேறு பிராணிகள் ஒத்து வராது என்பது என் எண்ணம்.

உலகச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு என்ன செய்யப்போகிறோம்? அதுபோல வாட்சப் செய்திகளையும்.

உண்மைதான். செய்திகளைத் தெரிந்து கொண்டு ஆகப் போவது ஒன்றும் இல்லை. ஏனென்றால் உலகத்தில் நடப்பவைகளை மாற்ற நம்மிடம் எந்த சக்தியும் இல்லை.

ஆனால் சில சந்தர்ப்பங்களில் உலக நடப்புக்கு ஏற்றவாறு நாம் நம்மை சரி செய்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது இல்லையா ? அதற்கு  செய்திகள் உதவியாக இருக்கக்கூடும்.

மாத்திரையின் அளவுக்கும் மருந்துக்கும் என்ன சம்பந்தம்? சில மாத்திரைகள் ரொம்ப பெரியதாக இருக்கிறதே!

மருந்து சத்து இருக்க வேண்டிய அளவுக்கேற்ப சைஸ் இருந்தாக வேண்டுமே !

&  தமிழ் எழுத்தின் அளவை உச்சரிக்க ஆகும் கால அளவை, சாப்பிடும் மாத்திரையோடு ஒப்பிட்டு கேட்கிறீர்களோ?

மாத்திரை என்பது தமிழ் இலக்கணத்தில் ஒரு எழுத்தை உச்சரிக்க ஆகும் கால அளவைக் குறிக்கிறது, இது கண் இமைக்கும் அல்லது கை நொடிக்கும் நேரத்திற்குச் சமம். மருத்துவத்தில், மாத்திரை என்பது மருந்துகளின் அளவைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தையாகும். இலக்கணத்தில் மாத்திரையின் அளவு, ஒலிக்கும் எழுத்தின் வகையைப் பொறுத்து மாறுபடும்; குறில் எழுத்துக்கள் அரை மாத்திரையும் நெடில் எழுத்துகள் மாத்திரையும் ஒலிக்கும் என்கிறது விக்கி!

பானுமதி வெங்கடேஸ்வரன் :

சிவாஜி கணேசனுக்கு பிறகு வந்த பலர் அவர் பாணியை பின்பற்றினார்கள். அவருடைய சம காலத்தில் அல்லது சற்று முன்னதாக இருந்த ரங்காராவ் போன்ற இயல்பான நடிகர்களை யாரும் பின்பற்றவில்லை. அதே போல எழுத்துலகில் சுஜாதாவை பலரும் பின்பற்றுகிறார்கள், புதுமைப்பித்தன், கு.ப.ரா. ஜெயகாந்தன், அசோகமித்ரன் போன்றவர்களை  யாரும் தொடர்வதில்லை. இதில் யாரை திறமைசாலி என்பீர்கள்? தன்னை பலரும் தொடரச் செய்பவரா? அல்லது தனக்கென தனி பாணியை கொண்டவர்களையா?

# கடவுள் தந்த வரமாக எழுதும் திறன் படைத்தவர்கள், எழுத வேண்டும் என்ற உந்துதல் காரணமாக அதன் நுணுக்கங்களைப் பிழையறக் கற்று, கற்றதைப் பிசகாமல் சாதிக்கிற சாமர்த்தியம் கொண்டவர்கள் - இப்படி எழுத்தாளர்களை இரண்டு வகையாகப் பார்க்கலாம். எந்த வகை என்பது கூட வாசகரின் தனிப்பட்ட அபிப்பிராயத்தை பொருத்தது என்று தான் சொல்ல வேண்டும். இதில் முதல் வகை எழுத்தாளர்களை பின்பற்றி எழுதி வெற்றி காண்பது கடினம்.‌ இரண்டாம் வகை எழுத்தாளர்களை பின்பற்றி எழுதுவது அவ்வளவு கஷ்டம் அல்ல என்பது என் சொந்த அபிப்பிராயம்.‌ ஒரு ஃபார்முலாவை பின்பற்றி எழுதும்போது அந்த பார்முலாவை வரவேற்கும் வாசகர் கூட்டம் கணிசமான அளவு இருக்கத்தான் செய்யும். வெற்றி தோல்விகளை முடிவு செய்வது வாசகர் எண்ணிக்கை தானே. காலம் கடந்து நிற்கும் எழுத்து என்பது அப்புறம் தான் வருகிறது. இந்த இரண்டு வகைகளில் சிறந்தது எது என்பது மதிப்பிடுபவரது இயல்பையொத்தது. 

என்னதான் ஆகட்டும்.  எவ்வளவு சிறப்பானதானாலும் அதற்கும் ஆயுட்காலம் என்று ஒன்று இருக்கத்தான் செய்யும்.‌ காலக் கிரமத்தில் மொழியே மாற்றமடையும் போது முந்தைய சிறந்த படைப்புகள் அவற்றிற்கான மொழிநடையுடன் அறிமுகம் இருப்பவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் மட்டுமே புரிகிறவையாக இருக்கும்.

&  இப்படி யோசிக்கலாமா?  நாம் சுஜாதாவை அறிந்த, படித்த அளவு புதுமைப்பித்தனோ மற்ற நீங்கள் சொல்லும் எழுத்தாளர்களின் பாணியோ படித்த நம் மனதில் நிற்கவில்லை.  எனவே அவரை பின்பற்றி யாராவது எழுதி இருந்தால் கூட அதை நம் சட்டென உணர முடிவதில்லை!  

அது போலதான் நடிப்பிலும்.

= = = = = = = = = = = =

படமும், பதமும் 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 


ஆட்டம்(autumn) அழகு! எங்கள் சின்ன வயதில் தீபாவளிக்கு மருதாணி வைத்துக் கொள்வோம் அதுபோல இங்கே மரங்கள் எல்லாம் மருதாணி இட்டுக் கொண்டிருக்கின்றன. 

- - - - - - - - -

நெல்லைத்தமிழன் : 


ரிசார்ட்டுகளில் படுக்கையை அலங்கரித்து வைத்திருப்பதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். தாய்லாந்தில் நான் சென்ற ஒரு ரிசார்ட்டில், Towelஐ,அழகுற வைத்திருந்தார்கள்.


ஒரு குரங்குக்குட்டி உட்கார்ந்துகொண்டிருப்பது போல எனக்குத் தோன்றுகிறது. 

அதுபோல, டாய்லெட் சீட்டருக்குக் கீழேயும் காலில் ஈரம் போக உபயோகிக்கும் டவலை இவ்வாறு அலங்காரமாக ஒரு பூவுடன் வைத்திருந்தார்கள். நன்றாக இருக்கிறது இல்லையா?

(டாய்லெட்டில் இப்படி எல்லாம் அலங்காரம் இருந்தால் எனக்கு 2 வராது! நெர்வசாக இருக்கும்! )

= = = = = = = = = =

KGG பக்கம். 

வந்த நாள் முதல் இந்த நாள் வரை தீபாவளிகளை மனதில் கொண்டுவந்து பார்த்தால்  .. 

நாகையில் நான் படித்த காலத்தில் கொண்டாடிய தீபாவளிகளுக்கு ஈடு இணை கிடையாது. குடும்பத்தில் வறுமை / முதியோர் இறப்பு போன்றவை இருந்த காலத்திலும் என் அப்பா குழந்தைகளாகிய எங்களுடைய கொண்டாட்டங்களுக்குத் தடை போட்டதே கிடையாது. 

அப்பா ஜவுளிக் கடையில் வேலை பார்த்ததால் புதுத் துணி எப்படியாவது கிடைத்துவிடும். சில சமயங்களில் OS துணிகள் என்று சல்லிசான விலையில் துணி அப்பாவுக்குக் கிடைக்கும். (OS என்றால் old stock என்று பின் நாட்களில்தான் தெரிந்துகொண்டேன்.) அண்ணாக்கள், எனக்கு என்று எல்லோருக்கும் ஒரே துணியில் சட்டைகள்! அதே போல டிரவுசர்கள்! அதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. புது டிராயர் & புது சட்டை! அவ்வளவுதான் வேண்டியது! சந்தோஷத்திற்கு அளவே இல்லை. 

அந்த நாள் தீபாவளிகளின் சிறப்பு ஈர்ப்பு வெடி & வாணங்கள். நாகையில் மலிவாக வெடி , வாணங்கள் வாங்க எங்களுக்கு இருந்தது இரண்டு இடங்கள். ஒன்று ரயில்வே கோ operative ஸ்டோர். இரண்டு காடம்பாடி ஏரியாவில் இருந்த ஒரு தொழிற்பேட்டை - அந்த இடத்தில், ஒத்தை வெடி தயார் செய்யும் சிறு அமைப்பு இருந்தது. நாகை கடை வீதியில், இவர்கள் தயாரித்த ஒத்தை வெடி ஒரு கட்டு - 10 பைசா.  (பத்து வெடிகளை சணல் கயிறால் சுற்றி வைத்திருப்பார்கள்) ரூபாய்க்குப் பத்து கட்டுகள். தொழிற்பேட்டையில் - மொத்தமாக வாங்கும்போது ஒரு ரூபாய்க்கு 16 கட்டுகள் வரை வாங்கிவிடுவோம். ஒவ்வொருவரிடமும் ஒரு ரூபாய், நாலணா , எட்டணா என்று 20 பையன்கள் ஒன்று சேர்ந்து 10 ரூபாய் சேர்த்து 160 கட்டு ஒத்தை வெடி வாங்கி, பிறகு பங்கு பிரித்துக் கொள்வது உண்டு. 

தீபாவளிக்கு 2 வாரம் முன்பே பெரிய அண்ணனிடம்  (கேஜீ) எங்களுக்கு வேண்டிய கேப்பு , மத்தாப்பு, வெடிகள் பட்டியல் தயார் செய்து கொடுத்துவிடுவோம். அப்பா, அந்த அண்ணனிடம் தீபாவளிக்கு 10 நாட்கள் முன்பே ரூபாய் கொடுத்து எங்களுக்கும் அவருக்கும் வெடி & வாணம் வாங்கச் சொல்லிவிடுவார். 

ஆனால் கே ஜீ ஒவ்வொரு நாளும் தெருவில் விளையாடிவிட்டு அல்லது அவர் ஸ்கூல் நண்பர்களுடன் விளையாட்டுத் திடல் சென்று விளையாடிவிட்டு, திரும்பி வரும் சமயங்களில் அவர் வரவை ஆவலோடு எதிர்பார்த்திருப்போம். அவர் எதுவும் வாங்காமல் வரும் நாட்களில் நானும் என் அண்ணனும் முகம் வாடி நிற்போம். 

எப்படியோ பெரிய மனது பண்ணி அவர் தீபாவளிக்கு 3 நாள் முன்னதாக பட்டாசு , மத்தாப்பு பார்சல் கொண்டு வருகிற நாளில் எங்கள் சந்தோஷத்துக்கு வானமே எல்லையாக இருக்கும். 

பங்கு பிரித்தல், அவரவர்களுக்கான பங்குகளை ஒரு பெட்டியில் போட்டு வைப்பது  எல்லாமே சுவாரஸ்யம். அப்படி என்ன பெரிய பங்கு என்று பார்த்தால்.. .. 

என்னுடைய பங்கு: 

கேப்பு டப்பா : 3 (ஒவ்வொரு மான் மார்க் கேப்பு டப்பாவிலும் - சொன்னால் நம்பமாட்டீர்கள் - 40 கேப்புகள் இருக்கும். 

பச்சை மத்தாப்பு டப்பா : 3 (ஒவ்வொரு பெட்டியிலும் 20 மத்தாப்புகள் இருக்கும்)

சிவப்பு மத்தாப்பு டப்பா : ditto dittto ..

பூத்திரி எண்ணும் star matches : 3 டப்பா 

கம்பி மத்தாப்பு பெரியது : 1/2 டப்பா அதாவது 6 கம்பி மத்தாப்புகள் 

சாட்டை : ஆளுக்கு 6 சாட்டைகள். 

சிறு வயதில் நான் ஊசி வெடி தவிர மற்ற வெடிகள் வெடித்தது இல்லை. போகப்போகத்தான் பெரிய வெடிகள் வெடிக்கும் ஆர்வம் வந்தது. எந்த வெடியையும் நாங்கள் ஒவ்வொன்றாகத்தான் வெடிப்போம். கட்டோடு வெடிப்பது எங்களுக்கு கட்டோடு பிடிக்காது! 

மற்றபடி தரைச் சக்கரம், கலசம் என்னும் flower pots, ஏரோபிளேன் etc எல்லாம் எல்லோருக்கும் பொது. எங்கள் சார்பில் அண்ணன் கேஜீதான் அவைகளை எங்கள் முன்னிலையில் நெருப்பு வைத்து சுடுவார். நாங்கள் பாதுகாப்பு எல்லையில் நின்றுகொண்டு அவற்றைப் பார்வையிட்டு மகிழ்வோம். 

தீபாவளிக்கு மறுநாள் தெருவில் யார் வீட்டு வாசலில் அதிகம் குப்பை இருக்கிறது என்று பட்டிமன்றம் நடத்தி சந்தோஷப்படுவோம். 

சென்னைக்கு வந்து, வேலை பார்க்க ஆரம்பித்த நாட்களில் புதுத் துணி வாங்கி தைத்துப் போட்டுக் கொள்வது மட்டுமே அட்ராக்ஷன். மத்தாப்பு, வாணம் வெடிகள் வெடிப்பது பல குடித்தனங்கள் இருந்த பகுதியில் வாழ்ந்ததால் அதிகம் கொண்டாட இயலவில்லை. 

கல்யாணம் ஆன பிறகு, தலை தீபாவளி கொண்டாட்டங்கள் கூட ஓரளவுக்குத்தான். 

குழந்தைகள் பிறந்து, அவர்களுக்கு விவரம் தெரிய ஆரம்பித்த நாட்களில் கொண்டாடிய தீபாவளிகள் மிக மிக அருமை. குழந்தைகளின் சந்தோஷமான முகங்களையும், அவர்களின் ஆர்வத்தையும் கண்டு நானும் என் மனைவியும் அடைந்த சந்தோஷத்திற்கு ஈடு இணை இல்லை. 

குழந்தைகளுக்கு குழந்தைகள் பிறந்து அந்த பேரக் குழந்தைகளுக்கு விவரம் தெரிய ஆரம்பித்தவுடன் நான் பட்டாசுக் கொண்டாட்டங்களிலிருந்து voluntary ரிடயர்மென்ட் வாங்கிக் கொண்டுவிட்டேன்! 

தீபாவளி கொண்டாட்டங்களைப் பொருத்த அளவில் எனக்கு 

நாகை கொண்டாட்டங்கள் : 100/100 

சென்னை கொண்டாட்டங்கள் : 80/100 

பெங்களூர் கொண்டாட்டங்கள் : (பெங்களூரில் எனக்குத் தெரிந்து தீபாவளி நாளில் ஒருவரும் காலை ஒன்பது மணிக்கு முன்பு படுக்கையிலிருந்து எழுவது இல்லை!) 50 / 100. 

= = = = = = = = = = =

35 கருத்துகள்:

  1. எனக்கு வெடிச் சத்தம் பிடிக்காது. சிறு வயதில் வெடிக்கணும் என்ற ஆர்வம். என் வயதையொத்தவர்கள் நிறைய வெடிகள் வாங்கி வெடிக்கும்போது என் பெரியப்பா ஈட்டில் காசைக் கரியாக்கக்கூடாது என்ற எண்ணம்.

    திருமணம் ஆன பிறகும் வெளிநாட்டு வாழ்க்கையால் தீபாவளி மற்றொரு நாளே.

    இரண்டு நாட்களுக்கு முன் மகள் மருமகன் அவர் பெற்றோர் வீட்டிற்கு எல்லோரும் சென்று வெடித்து மகிழ்ந்தோம். மனைவிக்கு வெடியில் இவ்வளவு ஆர்வம் என்பதையும், வெடிக்கும்போது அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிப் பிரவாகத்தையும் முதன் முதலில் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...   

      இத்தனை வருடங்கள் கழித்து இப்போதுதான் வெடிப்பதில் மனைவிக்கு இருக்கும் அவ்வளவு ஆர்வத்தை கண்டு கொண்டீர்களா?  இத்தனை வருடங்கள் உங்களுக்காக தன் ஆர்வத்தை மறைத்து வந்திருக்கிறார்.

      நீக்கு
    2. வெடிப்பதில் எனக்கு முன்னர் ஆர்வம் இருந்தது.  இப்போது இல்லை என்பதோடு வெடிச்சத்தம் கேட்க வெறுப்பாக இருக்கிறது.

      நீக்கு
    3. எனக்கும் இதில் ஆர்வமும் மகிழ்ச்சியும் உண்டு எனக் கண்டுகொண்ட தருணம் அது.

      நீக்கு
    4. முன்னர் இருந்தால் இப்போது இல்லை;  முன்னர் இல்லாவிட்டால் இப்போது இருக்கும்!   அந்த வகையோ?

      நீக்கு
    5. ஆர்வம் மனநிலையை பொருத்தது.

      நீக்கு
    6. ​அறியாமை ஆர்வத்தைத் தூண்டும்.
      சிறுவயதில் அறியாமை அதிகம்
      அறிந்தபின் ஆர்வம் குறைந்துவிடும்
      பெரியவன் என்ற நினைப்பு ஓங்கி வரும்.

      நீக்கு
  2. வெளிநாட்டில் மேப்பிள் மரங்களின் இந்த நிற இலைகள் அடர்ந்து இருப்பதையும், இலையுதிர் காலத்தில் ஒரு இலையும் இல்லாமல் வெறும் கிளைகளுடன் மரங்கள் இருப்பதையும் பார்த்து மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது. பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலை இல்லாமல் இருந்த மரத்தைப் பார்த்து மகிழ்ந்தீர்களா!

      நீக்கு
  3. இயற்கையாக உள்ள திறமை பெற்றவர்களின் பாணியை, நடனமோ, ஓவியமோ, பாடும் பாணியையோ இல்லை எழுத்தையோ காப்பி அடித்து நிலைக்க முடியாது. கற்றுக்கொண்டு திறமை காட்டுபவரைக் காப்பியடித்துவிட சாத்தியம் உண்டு, அதற்கும், காப்பியடிப்பவருள்ளும் இயல்பான திறமை இருக்கவேண்டும். இல்லையென்றால் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் மாதிரி பல்லிளித்துவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரெக்ட். ஒரு வித ரசனையில் அவை நம்முள் இறங்கிவிட்டால் தாமாக அவ்வப்போது கொஞ்சமாவது வெளிப்படும்.

      நீக்கு
  4. //நாய் தவிர வேறு பிராணிகள்// இரு நாட்கள் முன்பு மனைவியின் உறவினர், பூனை வளர்ப்பதில் மகிழ்ச்சி இருக்கும், வீடும் சுத்தமாக இருக்கும், நாய் வளர்த்தால் வீடு நாறும் என அவர் கருத்தைச் சொன்னார். மன அதிர்ச்சி அடைந்த ஒரு பூனையை அவர் வளர்க்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​பூனை மன அதிர்ச்சி அடைந்திருக்கிறது என்று எப்படி தெரியும்?

      நீக்கு
    2. சிம்லா சென்ற பொழுது குஃப்ரிக்கு குதிரையில்தான் செல்ல வேண்டும். கீழே இறங்கும் பொழுது என் மருமகள் பயணித்த குதிரைக்கு மன நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது என்று என்று அந்த குதிரையை நடத்துனர் சொன்னார். :))

      நீக்கு
  5. கௌதம் ஜி அவர்களது அனுபவங்கள் நெகிழ்ச்சி.,
    பலவற்றை நானும் நினைவு கூர்ந்தேன்..

    பதிலளிநீக்கு
  6. நேற்று இங்கே மழை..
    இணையம் இணைப்பு இழுவை..

    பதிலளிநீக்கு
  7. சந்தனம் மிஞ்சி விட்டால் எங்கெங்கெல்லாமோ பூசிக் கொள்வது என்பது அந்தக் காலத்து சொல்வழக்கு...

    அதைப் போலத் தான் கழிப்பறையில் அலங்காரம்...

    இன்றைய தீபாவளி செலவுகளும் அப்படியே..
    மக்கள் கையில் அதீதமான பணப் புழக்கம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகின்றோம்?..

      அறம் வளர்த்த நாட்டில் மக்கள் மது போதையில்..
      இந்த லட்சணத்தில் கழுதைக்குப் பெயர் முத்துமாலை...

      நீக்கு
  8. //புதுத் துணி வாங்கி தைத்துப் போட்டுக் கொல்வது மட்டுமே //

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனமாக படித்து தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

      நீக்கு
  9. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
    நண்பனே! நண்பனே! நண்பனே!
    இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
    அது ஏன்? ஏன்? ஏன்?
    காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்.
    கின்னச் சின்ன ஆசை. சிறகடிக்கும் ஆசை இருந்தது அன்று. இன்றோ ஆசையை துறந்து நாட்களை எண்ணி எந்த நாளும் மற்றோரு நாளே என்ற நிலைக்கு வந்து விட்டபின் கடந்த காலத்தை நினைத்து பார்பபதே ஒரு மகிழ்ச்சி தான்.

    பதிலளிநீக்கு
  10. நெல்லையின் முதல் கேள்விக்கு பதில் - நம் மனது வலுவாக இருந்தால் எதிர்மறைச் சிந்தனைகள் உடையவர்களையும் நட்பில் வைத்திருக்கலாம் ஆனால் ஓர் எல்லைக்குள். நம் மனது கொஞ்சம் தளர்ந்தாலும் எதிர்மறை பக்குனு பத்திக்கும். எனவே அதைப் பொருத்துதான்

    கீதா

    பதிலளிநீக்கு
  11. கௌ அண்ணாவின் பதில் போல், எதிர்மறை சில சமயம் பாசிட்டிவிற்கு வழி வகுக்கும் அதாவது, ஒரு விஷயத்தைப் பற்றி யோசிக்கும் போது எதிர்மறை பக்கத்தையும் பார்த்துக் கொண்டால் அதை எப்படி நேர்மறையாக மாற்றலாம் என்ற சிந்தனையையும் நாம் வளர்த்துக் கொள்ள உதவும். decision making ல் உதவும்

    ...strategical ஆகக் கையாள. இந்த முறை தெரிந்துவிட்டால் நாம், வாழ்க்கை குறித்த அல்லது எந்த செயல்களிலும் எதிர்மறை மட்டுமே சிந்தனையாகக் கொண்டவர்களையும் கையாண்டு விடலாம். இல்லை எல்லைக் கோட்டிற்குள் இருப்பது நல்லது.

    இல்லைனா, பாகிஸ்தான் நெகட்டிவாகப் பரப்பிக் கொண்டிருப்பதற்கு ஒவ்வொன்றிற்கும் நாம் பதில் கொடுத்துக் கொண்டே இருந்தால், நேரமும் எனர்ஜியும் வேஸ்ட் என்று தெரிந்ததால்தான் இந்தியத் தலைமை எங்கு பதில் கொடுக்கணுமோ அங்கு மட்டும் கொடுத்து மற்ற இடங்களில், "போயா நீ பாட்டுக்கு என்னத்த வேணா உளறிக்கோ....யாரும் வகை வைக்கப் போவதில்லை, நாங்க எங்க முன்னேற்றத்தைப் பார்த்துக் கொண்டே போய்க்கின்னு இருக்கோம்." என்று போய்க்கொண்டே இருக்காங்க.

    பக்கத்து நாடு தனக்குத்தானே வைக்குக் கொள்ளும் ஆப்பு. முன்னேற்றத்தை நோக்கிப் போகாமல் இன்னும் பொருளாதாரத்தை மோசம் செய்து கொண்டு இருக்காங்க. இதுதான் மிகப் பெரிய சிறந்த உதாரணம் "எதிர்மறை சிந்தனைகளுக்கு" அதுவும் மத்தவங்களைப் பத்தி நெகட்டிவா பேசினா மதிப்பை இழந்துவிடும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. எனக்கு பட்டாசு வெடிப்பதில் இருக்கும் ஆசை இன்றுவரை குறையவில்லை. சென்ற வருடம் நான் பட்டாசு வெடித்த உற்சாகத்தை பார்த்த ஒரு மாமி என்னிடம், " சின்ன குழந்தை மாதிரி ஓடி ஓடி பட்டாசு வெடித்த உங்கள் எனர்ஜியை ரொம்ப ரசித்தேன்" என்றார்.

    பதிலளிநீக்கு
  14. கேள்விகளும்,பதில்களும் நன்றாக இருக்கிறது.
    படமும் , பதமும் பகிர்வு அருமை.
    கெளதமன் சாரின் தீபாவளி மலரும் நினைவுகள் அருமை.

    பதிலளிநீக்கு
  15. நானும் வெடிகள் வெடிப்பேன். சிறு வயதில் நிரைய வெடித்தேன், குழந்தைகள் வெடிக்க ஆரம்பித்தவுடன் குறைத்து கொண்டேன்.இப்போது பேரபிள்ளைகள் வெடிப்பதை பார்த்து ரசிக்கிறேன். இருந்தாலும் அவர்களுடன் அவர்கள் விருப்பத்திற்கு மதிபளித்து அவர்களுடன் சேர்ந்து சிறுபிள்ளை குதுகலத்தோடு வெடித்து , புஷ்வாணம் வைத்து மகிழ்வேன்.

    பதிலளிநீக்கு
  16. பானுக்காவின் கேள்வி நல்ல கேள்வி. சிந்திக்க வைத்த கேள்வி.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!