வீட்டில் பாத்திரம் தேய்ப்பதற்கு ஒரு பெண்மணி, பெருக்கி துடைப்பதற்கு ஒரு பெண்மணி என்று இரண்டுபேர் வீட்டில் வேலை செய்பவர்கள். பழைய வீட்டில் வேலை செய்தவருக்கு உறவு என்று ஒரு பெண் இருந்தார். அவரை இந்த ஏரியாவில் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. அந்த வீட்டில் வரலக்ஷ்மி விரதம் அன்று அவரை தாம்பூலம் வாங்கி கொள்ள அழைத்தால் அவர், தன் இரு சகோதரிகள், இன்னும் இரு பெண்கள், பக்கத்து வீட்டுக்கார பெண்மணி என்று ஒரு குழுவையே அழைத்து வருவார். ஒன்றும் சொல்ல முடியாது. "உங்களுக்கு அப்படியே புண்ணியம்" என்பார்.
இங்கு அவரைப் பார்த்தபோது நாங்கள் ஏற்கனவே ஒரு பெண்ணை பாத்திரம் தேய்க்க வைத்திருந்தோம். எனவே அவரை உபயோகித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் அவரோ ரொம்ப பிஸியாக இருந்தார். காலை ஆறு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி, ராமச்சந்திராவில் பணிபுரியும் டாக்டர் ஒருவர் வீட்டில் சமைத்து விட்டு, பல வீடுகளில் வீட்டு வேலை செய்வார். மின்னல் வேகம்தான். 'வாம்மா மின்னலு' என்பது போல விஷ்க் என்று வந்து வேலை முடித்து விஷ்க் என்று காணாமல் போவார்.
தினசரி வீடு பெருக்கி 'மாப்' போட பாஸால் ஒரு கட்டத்தில் முடியாமல் போக, பாத்திரம் தேய்க்கும் பெண்ணை அதையும் சேர்த்து செய்கிறீர்களா என்று கேட்டால் அப்போது அவரும் பல வீடுகளிலும், ஒரு லேடிஸ் ஹாஸ்டலிலும் வேலை செய்து, பிஸி ஷெட்யூலில் இருந்ததால் மறுத்து விட, இந்த பழைய பெண்மணியை அதற்கு ஒப்பந்தம் செய்தோம். தனித்தனியாக இரண்டு பேர் சம்பளம் என்பதால் நினைத்ததை விட கூடுதல் காசு. ஆனாலும் வேறு வழியில்லை. வீட்டைப் பெருக்கி மெழுகும் அந்தப் பெண்மணி ஒன்று விட்டு ஒரு நாள்தான் வருவார்.
இப்போதும் அவர் வரலஷ்மி விரதத்துக்கு நான்கைந்து பேர்களை அழைத்துக் கொண்டுதான் வருவார்! வசூல் என்று நினைக்கக் கூடாது! மாமிக்கு புண்ணியம் சேர்த்துத் தருகிறார் என்று எடுத்துக் கொள்ளவேண்டும்!
இருவருக்கும், மற்றும் குப்பை எடுக்க வரும் பெண்ணுக்கும் பாஸ் அவ்வப்போது துணிகள், பாத்திரங்கள் என்று அள்ளி விடுவார். பாஸ் கை தாராளம். தீபாவளிக்கு மூன்று பேர்களுக்கும் புடைவை உண்டு. அதில் பாத்திரம் தேய்ப்பவர் 'என் வீட்டுக்காரர் உனக்கு மட்டும் தனியாக தரலாமா என்று கேள். எனக்கும் எதாவது வாங்கி கொடுக்கச் சொல்' என்று சொல்ல, அவருக்கும் சேர்த்து கொடுப்பதும் வழக்கமானது.
இதைத்தவிர பாத்திரம் அதிகம் என்று பாஸ் நினைக்கும் நாட்களில் கையில் கொஞ்சம் காசு கொடுப்பார். குப்பை அள்ளும் பெண்மணிக்கு அப்படியே.
சொல்லிக் காட்டுவதற்காக இல்லை, அல்லது இதெல்லாம் செய்தால் நாம் சொன்னவற்றை எல்லாம் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் அர்த்தமில்லை. ஆனாலும் சில சமயங்களில் வருத்தம் ஏற்படும்.
பாத்திரம் தேய்ப்பவர் மாதாந்திர மூன்று நாள் வரும்போது பாஸ் அவரை வரவேண்டாம் என்று சொல்லி விடுவார். 'நான் வந்து தேய்த்து வைத்து விடுகிறேன். இன்னும் இரண்டு மாமிகள் வீட்டில் செய்வது போல தண்ணீர் தெளித்து எடுத்துக் கொள்ளுங்கள்' என்று அவரும் ஓரிருமுறை சொல்லிப் பார்த்தும் பாஸ் ஒப்புக்கொள்ளவில்லை. அதேபோல ஒருமுறை அம்மா வீட்டுக்கு போகிறேன் என்று பத்து நாட்கள் வராதபோதும் பாஸ் அவருக்கு முழுச் சம்பளம் கொடுத்தார். இது மாதிரி சமயங்களில் அந்த இன்னொரு பென்னி ஒப்பந்தம் செய்து அவரை அந்த நாட்களில் வேலைக்கு வரவழைத்து அதற்கு தனியாக காசு கணக்கு பார்த்து கொடுத்து விடுவார். 'நான் ஞாயிற்றுக் கிழமைகளில் வருவதில்லையே... பரவாயில்லை எனக்கு காசு வேண்டாம் என்றோ, குறைத்துக் கொடுங்கள்' என்றோ இவரும் சொல்வதில்லை.
இது மாதிரி இருப்பவர், விசேஷ சமயத்திலோ, திவச நேரங்களிலோ பாத்திரம் அதிகமாக விழும் காலங்களில் - அது கொஞ்சம் அபூர்வம் - இரண்டு வேளை வரச்ச்சொன்னால் வரமாட்டார். அதே போல பாத்திரம் தேய்த்தபின் அந்த இடத்தை கழுவி விடுவது கிடையாது. சில கூடுதல் பணி சொன்னாலும் கண்டுகொள்ளாமல் போய்விடுவார். சிலசமயம் குப்பை வண்டி வராத நாட்களில் குப்பையை குமரன் சில்க்ஸ் போன்ற பையில் போட்டுக் கொடுக்கிறோம், போட்டு விடுகிறீர்களா என்று கேட்டால் மௌனம்தான் பதில் என்பதோடு, கிளம்பும்போது ஒரு பதிலும் சொல்லாமல் மறந்தாற்போல சென்று விடுவார்.
சில சமயங்களில் உரிமையாக 'அம்மா.. பசிக்கிறது.. மயக்கமாக வருகிறது... கொஞ்சம் சோறு இருந்தால் போட்டுக் கொடுங்கள்.. உங்க வீட்ல மட்டும்தான் உரிமையா கேட்பேன்" என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார். தினசரி தேய்ப்பதற்கு போடும் பாத்திரங்களை திறந்து கறி, காய், கூட்டு, குழம்பு இருக்கிறதா என்று பார்ப்பார். இல்லை என்றால் ஏமாந்து போனேன் என்பார். அது ஆனால் அபூர்வம். தினசரி எப்படியும் எடுத்துப் போவதற்கு சாதம் உண்டு. ஏனோ மனசு கேட்காமல் அவருக்கு கொடுத்தனுப்பும் அளவு தினசரி சற்று கூடுதலாகத்தான் பாஸ் சாதம் வடிப்பார்.
ஆனாலும் கொஞ்சம் கூடுதல் பாத்திரங்கள் என்றால் முகம் கூம்பிப் போவதும், எதுவும் பேசாமல் செல்வதும், எப்போதாவது நாம் சொல்லும் சில கூடுதல் வேலைகளையும் - அதுவும் அதே பாத்திரம் தேய்க்கும் வேலையோடு சம்பந்தப்பட்ட வேலைதான், செய்யாமல் போவதும்..
இன்னொரு பெண்மணி சமீபத்தில் சம்பந்தி குடியிருந்த வீட்டை காலி செய்தபோது சுத்தப்படுத்துவதற்கு சென்றார். அங்கிருந்த மளிகை, காய்கறிகளில் பழங்கள், நட்ஸ் என்று நாங்களாக கொடுத்தது போக முன்னதாகவே தானாகவே எடுத்து ஒதுக்கி வைத்துக் கொண்டார். நட்ஸை மட்டும் மீட்டோம். இரண்டு படுக்கையறை ஹால், கிச்சன் க்ளீன் செய்ய காசு அப்போது உடனே வாங்கவில்லை.
ரொம்பப் பழகிய பெண் என்பதால், வேண்டாம் என்றே சொல்வாரோ (!) என்று எதிர்பார்ப்பு இருந்தாலும் 'எவ்வளவு' என்று கேட்டபோது 'நீங்களே கொடுங்கள்' என்றே மறுபடி மறுபடி சொல்ல, அவர் வாயிலிருந்து வரவழைப்பதற்காகவும், ஆழம் பார்க்கவும் நான் முன்னூறு ரூபாய் தருவதாகச் சொன்னேன். முகம் மாறிப்போய் மௌனமானார். பாஸ் என்றால் கூடுதலாக சொல்லி இருப்பார். அவரை அடக்கி விட்டு நான் சொன்னேன். பின்னர் கிளம்பும்போது பாஸிடம் சென்று ரகசியமாக ஆயிரம் ரூபாய் என்று கேட்டு வாங்கிச் சென்றார்.
என்னைப்பொறுத்தவரை முன்னூறே போதும். அவ்வளவு பொருட்கள் எடுத்துச் சென்றிருக்கிறார். ஆனால் அவர் ஐநூறு கேட்பார் என்று எதிர்பார்த்தேன். ஆயிரம் அதிகம் என்று பட்டது. பாஸிடமும் சொன்னேன். கொடுத்தாச்சு.. வேறு வழி இல்லை என்றார்.
============================== ============================== ============================== =
"நான் பிறந்தது விருதுநகரில் உள்ள கசாப்புக்கடைக்காரர் தெருவில். விருதுநகரில்தான் என் அம்மாவின் தந்தை ஹோட்டல் நடத்திக் கொண்டிருந்தார். விருதுநகரில் பிறந்தாலும் நான் வளர்ந்தது, படித்தது எல்லாம் அப்பாவின் ஊரான கோவில்பட்டியில்தான். அப்பா, அம்மா இருவருமே ஆசிரியர்கள். கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி, கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் படித்தேன். என் பள்ளிச்சூழல்தான் என்னை நடிகனாக்கியது என்று சொல்லலாம். நாடார் நடுநிலைப்பள்ளியில் தொடக்கக்கல்வி மாணவர்களுக்காக 'பாலர் சபை' என்ற அமைப்பு இயங்கிவந்தது.
ஒவ்வொரு மாதம் இரண்டாம் சனிக்கிழமையும் எல்லா மாணவர்களும் மேடையேறி ஏதாவது திறமையை வெளிப்படுத்த வேண்டும். ஒரு பையனுக்கு எதுவுமே தெரியவில்லை, வீட்டை நினைத்து அழுகிறான் என்றால், 'மேடையில் வந்து அழுதுவிட்டாவது போ' என்று கொண்டுபோய் நிறுத்தி விடுவார்கள். அப்படித்தான் எனக்கு மேடைக்கூச்சம் போனது. 'தேவே உன்னைப் போற்றிடுவேன்; தினமும் என்னைக் காத்திடுவாய்; நாவால் உன்னை நான் பாட நல்ல தமிழைத் தந்திடுவாய்' என்று பிரார்த்தனைப் பாடலையாவது பாடித்தான் இறங்குவார்கள். இப்படி பள்ளியில் இருந்தே எனக்குத் திறமையை எந்தக்கூச்சமும் இன்றி வெளிப்படுத்தும் வாய்ப்பு அமைந்தது".
"கவிஞர் ஆத்மாநாம் என் அறைத்தோழர். அவரது இயற்பெயர் மதுசூதனன். பி.எஃப் அலுவலகத்தில் பணிபுரிந்த கவிஞர் ஆனந்த் என் நண்பர். அவர்தான் ஆத்மாநாம், ஸ்டெல்லாபுரூஸ், ஞானக்கூத்தன் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்தார். நான் தங்கிய அறையில் இருந்து 'ழ' சிற்றிதழில் முகவரி எழுதி தபால் மூலம் அனுப்பிவைத்திருக்கிறார்கள். எதைக்கண்டும் பிரமிப்பு அடையாமல் இருத்தல், சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் நமக்கு நாமே பெருமைப்பட்டுக் கொள்ளாமல் இருப்பது போன்றவறுக்கு எல்லாம் எழுத்தாளர்களின் நட்புதான் காரணமாக இருந்தது"
-நடிகர் சார்லி
நன்றி: சினிமா விகடன்
============================== ============================== ============================== =========
கூரைக்கூச்சல் 03
"சேட்டை" வேணுஜி
கூரைக்கூச்சல் – 03
கல்லூரிக்காலம் வரைக்கும், பழைய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படங்களில் வருகிற பொறுப்பில்லாத பிள்ளை மாதிரி, ஏறத்தாழ ஒரு போக்கிரியாக இருப்பதே பொன்செய்யும் மருந்து என்றிருந்தவன் நான். எனக்குள்ளும் ஒரு பொறுப்பான உழைப்பாளி இருக்கிறான் என்பதை எனக்கே புறமண்டையில் தட்டி உறைக்கவைத்த இடம் டி.வி.எஸ். ஓசூர்!
காலை எட்டரை முதல் மாலை ஐந்து மணிவரை ஜெனரல் ஷிஃப்ட் என்று ஜாலியாக வேலைக்குப் போய், நாளொன்றுக்கு 200 முதல் 250 GRNகளை போஸ்டிங் பண்ணி விட்டு, ஐந்து மணிக்கு ரூமுக்கு வந்து, இரண்டாம் குளியல் போட்டுவிட்டு, சினிமா அல்லது மலைமேல் குடிகொண்டிருந்த சந்திரசூடேஸ்வரர் தரிசனம் என்று மாற்றி மாற்றி பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கையில், ஒரு நாள் ஸ்டோர்ஸ் மேனேஜர் ராமச்சந்திரன் சார் என்னை அழைத்தார்.
‘நீ வந்து ஒரு மாசமாயிடுத்து. இந்த மாசத்துலேருந்து உனக்கு நைட் ஷிஃப்ட் போடப்போறோம். நல்லபடியா வேலை பார்த்து நல்ல பேர் வாங்கு,’ என்று அவர் சொன்னதும், ‘ஐயையோ’ என்று மனதுக்குள் ஒரு அபயக்குரல் கூவியது. அப்படியென்றால், சினிமா? சந்திரசூடேஸ்வரர் கோவில்? ஊர் சுற்றுவது? என்றெல்லாம் கிளைக்கேள்விகள் கிரைண்டருக்குக் கீழிருந்து ஊர்ந்துவருகிற கரப்பான்பூச்சிகள் மாதிரி கிளம்பின. ஆனால், வேறு வழி?
அடுத்த வாரமே, எனக்கு நைட் ஷிஃப்ட் போட்டார்கள். Goods Inwards Stores-ல், மாலை தொடங்கி நள்ளிரவு ஒரு மணி வரைக்கும், வந்து சேரும் பொருட்களை இறக்குவதை மேற்பார்வை செய்து, Vendor Quality துறைக்குத் தகவல் அளித்து, ஆய்வுக்கு ஏற்பாடு செய்து, தேவைப்பட்டால் அவர்கள் பரிந்துரைப்படி reject செய்து, வருகிற லாரி, டெம்போக்களுக்கு acknowledgement ரொப்பிக் கொடுத்து, பொருட்களுக்கெல்லாம் GRN போட்டு, முடிந்தவரைக்கும் இரவிலேயே அந்தந்தப் பொருட்களை அந்தந்த ஸ்டோர்களுக்குள் உரிய இடத்தில் வைக்க வேண்டும். ஒரு ஸ்டோர்கீப்பர் இருப்பார்; அவர் சொல்லுவதை அப்படியே செய்தால் போதும். இவையே நைட் ஷிஃப்ட்டில் ஒரு ஸ்டோர்ஸ் அசிஸ்டண்ட் செய்யத்தக்க பணிகளாம்.
எனக்கு வாய்த்த முதல் நைட்-ஷிஃப்ட் ஸ்டோர்கீப்பர் கிருஷ்ணன் சார், கட்டபொம்மன் மாதிரி மீசை வைத்துக் கொண்டிருப்பார். அவர் முகத்தில் சிரிப்பைப் பார்ப்பது என்பது சிலுக்கு ஸ்மிதாவை புடவையில் பார்ப்பதுபோன்று அவ்வளவு அரியதான நிகழ்ச்சியாகும். வசவுக்கு ஒரு நோபல் பரிசு கொடுப்பதாக இருந்தால், வருடாவருடம் அவர் பெயரை கமிட்டியே எழுதிவைத்துவிட்டுத்தான் மற்றவர்களைப் பற்றி யோசிப்பார்கள்.
ஏற்கனவே அடியேன் குறிப்பிட்டிருந்ததுபோல, அப்போதெல்லாம் அரசுப் பேருந்துகளில்தான் தொழிற்சாலைக்குப் போதல், வருதல் எல்லாம். ஆகையினால், இரவு ஷிஃப்ட் முடிந்து கிளம்பினால், தொழிற்சாலை வாசலிலேயே இரண்டு மூன்று பேருந்துகள் காத்திருக்க, உட்கார இடம் தேவைப்படுகிறவர்கள் ஓடிப்போய் ஏறிவிடுவார்கள்.
கிருஷ்ணன் சார், பாவம், கொஞ்சம் வயதானவர். பெரும்பாலும் நின்றபடியே வருவார். மனதுக்குள் விஷமச்சிரிப்பு சிரித்தபடியே அவரைப் பார்ப்பேன். ‘இன்னிக்கு ஷிஃப்ட் பூரா என்ன திட்டு திட்டுனே? வா, நின்னுக்கிட்டே வா!’
முதல்வார ஷிஃப்ட் முடிந்தது. அடுத்த வாரம் ஜெனரல் ஷிஃப்டுக்குப் போனதும், ராமச்சந்திரன் சார் கூப்பிட்டு அனுப்பினார்.
’டேய் வேணு! பிரமாதமா வேலை பண்ணியிருக்கே போலிருக்கே! கிருஷ்ணன் சார் உன்னைப்பத்தி அப்படி அப்ரிஷியேட் பண்ணினாரு! ஓடி ஓடி வேலை பார்த்தியாமே? வெரி குட்!’
என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த முதல் பாராட்டு அதுதான். அதுவும் யாரை நான் கரித்துக் கொட்டினேனோ, அந்த கிருஷ்ணன் சாரே என்னைப் பற்றி பாராட்டியிருப்பது எனக்கு கொஞ்சம் வெட்கத்தை ஏற்படுத்தியது. கணிப்பதில் அவசரப்பட்டு விட்டேனோ? சே!
கிருஷ்ணன் சாருக்கும் எனக்கும் மீண்டும் அடுத்த நைட் ஷிஃப்ட் வர ஒரு மாதம் பிடித்தது. இதற்கிடையில் ஒரு நாள், கேண்டீனில் டிபன் சாப்பிடுவதற்காக வரிசையில் அவருக்குப் பின்னால் நின்றிருந்தபோது, தயக்கத்தை விட்டுவிட்டு, ‘ஸார், ரொம்ப தேங்க்ஸ் ஸார்!’ என்று சொன்னதும், ‘போடா!’ என்று சிரித்தபடியே வயிற்றில் லேசாகக் குத்தினார்.
அடுத்த முறை எங்கள் ஜோடிக்கு நைட்-ஷிஃப்ட் வந்தது. அன்றிரவு ஷிஃப்ட் முடிந்ததும், பஸ்ஸில் ஏறி உட்கார இடம்பிடித்தபின், கிருஷ்ணன் சார் வந்ததும் எழுந்து அவரை உட்காரவைத்துவிட்டு நான் நின்று கொண்டேன்.
’என்னடா காக்கா பிடிக்கிறியா?’
அது காக்காயோ, குருவியோ, எனக்கும் கிருஷ்ணன் சாருக்கும் இடையே பின்னாளில் மிக நெருக்கமான உறவு ஏற்படுவதற்கான ஒரு குட்டி முன்னோட்டமானது. அதே ஷிஃப்ட் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், கிருஷ்ணன் சார், ஏதோ ஒரு காரணத்துக்காக, கடைசி நாளன்று லீவு கேட்டிருந்தார்.
‘தனியா சமாளிப்பியாடா? முடியாதுன்னா இப்பவே சொல்லிடு. லீவை கேன்சல் பண்ணிடறேன்,’ என்றார். ‘ஜமாய்ச்சிடறேன் சார், நீங்க தாராளமா லீவு எடுத்துக்குங்க,’ என்று நான் தைரியமாகச் சொல்லிவிட்டேன்.
நைட்-ஷிஃப்ட் ஸ்டோர்கீப்பரின் வேலை மிகவும் கடினமானது. தொழிற்சாலை வளாகத்துக்குள், ஒரு ஏர்-கண்டிஷன் ஸ்டோர்ஸ் இருந்தது. அதில், குளிரூட்டப்பட்ட நிலையில் பல விலைமதிப்புள்ள பாகங்கள் இருக்கும். உதாரணத்துக்கு, Reed என்று, பாதியாக உடைக்கப்பட்ட ஷேவிங் பிளேடு போன்ற ஒரு சின்ன உதிரிபாகம்; engine assembly-யில் இடம்பெறுவது. ஒரு தீப்பெட்டி சைஸ் பாக்கெட்டுக்குள் நூறு reedகள் இருக்கும் என்றால் எவ்வளவு மெல்லியது என்பதைப் புரிந்துகொள்ளலாம். அந்த ஸ்டோரைத் திறப்பதென்றால், புரொடக்ஷன் சூப்பரிண்டெண்டை அழைத்துக் கொண்டுதான் போக முடியும். அதே போல, pre-inspection என்ற இன்னொரு ஸ்டோரில், டிவி.எஸ்-50யில் மாட்டுவதற்குத் தயார் நிலையிலுள்ள விலையுயர்ந்த பாகங்கள். இது தவிர, ட்யூப் ஸ்டோர்ஸ், scrapyard என்று அனைத்தும் அந்த இரவு ஸ்டோர்கீப்பரின் கட்டுப்பாட்டில் இருக்கும். இது தவிர, பொதுவாக தேவைப்படும் பேனா, பென்சில், பேப்பர், அச்சடித்த ஸ்டேஷனரி அயிட்டங்கள், உதிரியாக நட்டு, போல்ட்டுகள், ஸ்க்ரூடிரைவர், ஸ்பேனர் போன்ற சங்கதிகளை உள்ளடக்கிய ஜெனரல் ஸ்டோர் வேறு. ஓடியோடி ஒவ்வொரு ஸ்டோரிலிருந்தும் புரொடக்ஷன் கேட்கிற பொருட்களை உடனடியாக எடுத்துக் கொடுக்க வேண்டும். எல்லாம் முடித்தபின்னர், ஒரு நீள நோட்டில், Log Book எழுத வேண்டும். எத்தனை வண்டிகளில் சரக்கு வந்தன; என்னென்ன பொருட்கள் vendor quality தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டன, என்னென்ன சரக்குகள் இன்னும் ஆய்வு செய்யப்படாமல் இருக்கின்றன, எத்தனை வண்டிகள் இன்னும் வாசலில் நின்று கொண்டிருக்கின்றன என்பதையெல்லாம் எழுதி வைக்கவேண்டும். எந்தெந்த ஸ்டோர்கள் திறக்கப்பட்டன, எத்தனை மணிக்குத் திறந்து, எத்தனை மணிக்கு மூடப்பட்டன, என்னென்ன பொருட்கள் வைக்கப்பட்டன, எடுக்கப்பட்டன என்பதெல்லாம் எழுத வேண்டும். பிறகு, எல்லா ஸ்டோர்களின் சாவிகளையும் ஒரு தோல்பையில் போட்டு, பட்டன் போட்டு, டேப் போட்டு சுற்றி, மேலே கையெழுத்துப்போட்டு, தேதி, நேரம் எழுதி, செக்யூரிட்டியில் ஒப்படைத்துவிட்டுத்தான் கிளம்ப வேண்டும்.
இதுதவிர, ஒரு ஸ்டோர்ஸ் அசிஸ்டெண்ட் செய்ய வேண்டிய பொறுப்புகளையும் செய்தாக வேண்டும் என்பதால் இரட்டிப்புப் பணி. இதை என்னை மாதிரி ஒரு பச்சைமண்ணால் செய்யமுடியுமா என்ற சந்தேகம், அவுன்ஸ் கிளாஸ் அளவுக்கு அறிவுள்ளவர்களுக்கும் ஏற்படுவது இயல்பே.
ஆனால், எப்படி நடந்தது என்று தெரியவில்லை. கிருஷ்ணன் சாரிடம் சொன்ன மாதிரியே, ஜமாய்த்துவிட்டேன். குறிப்பாக, லாக்-புக்கை நான் எழுதிய விதம் ராமசந்திரன் சாருக்கு மிகவும் பிடித்துவிட்டது. ‘குண்டுகுண்டா உருட்டி உருட்டி எழுதறடா. இனிமேல் Inter Office Memo எல்லாம் நீதான் எழுதணும்,’ என்று கூடுதலாக ஒரு பொறுப்பையும் ஒப்படைத்தார்.
IOM என்று சுருக்கமாக அழைக்கப்படும், Inter Office Memo என்பது, ஒரு பைண்ட் செய்யப்பட்ட, மேலே வெள்ளைக்காகிதமும் கீழே மெல்லிய காகிதமும் வைத்து, கார்பன் பேப்பர் உபயோகித்து எழுதப்படுகிற ஒரு தகவல் பரிமாற்றப் புத்தகம். எழுதிக் கையெழுத்துப்போட்டு, மேல் காகிதம் peforate செய்யப்பட்டிருப்பதால், கிழித்து உரிய துறைக்குக் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வரலாம். இமெயில் ஆகியவை இல்லாத காலத்தில் இப்படித்தான் ஒவ்வொரு டிபார்ட்மெண்டும் பிறதுகள் கூட சம்பாஷணை நடத்தி வந்தார்கள்.
IOM-ல் புதிதாக ஒரு கையெழுத்தைப் பார்த்ததும் ‘யாருடைய கையெழுத்து இது?’ என்று எல்லாரும் கேட்க ஆரம்பிக்க, அவ்வப்போது ‘your handwriting is very good,’ என்ற பாராட்டுக்களும் கேட்க ஆரம்பித்தேன்.
எங்கள் ஸ்டோர்கீப்பரின் நெருங்கிய உறவினர் காலமாகவே, ஸ்ரீசைலன் சார் பத்து நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்துக்கொண்டு மதுரை போனார். அந்த பத்து நாட்களும் யாருடைய உதவியுமின்றி நானே மொத்த ஸ்டோர்ஸையும் சரிவர பார்த்துக் கொண்டதால், ‘இந்தப்பய பரவாயில்லையே’ என்று நிறைய பேர் ஆச்சரியப்படத்தொடங்கினார்கள். அவர்கள் எல்லாரையும் விட எனது ‘திறமை’யைப் பார்த்து அதிகம் ஆச்சரியப்பட்டது, நானே தான்.
‘நீ ஒண்ணும் அவ்வளவு மோசமில்லடா! உனக்குள்ளே சரக்கிருக்கு,’ என்று ஒரு நம்பிக்கைக்குரல் எனக்குள்ளிருந்து குறைந்த டெசிபல்களில் அவ்வப்போது கேட்கத்தொடங்கின.
எல்லாமே இவ்வளவு சுமுகமாகப் போனால், அப்புறம் சந்திரசூடேஸ்வரருக்கு என்ன வேலை? ‘இந்தப் பயலை கொஞ்சம் சோதிக்கலாம்’ என்று யாரோ அவரிடம் போட்டுக் கொடுத்திருப்பார்கள் போல. அதன் விளைவாக திடீரென்று சில சிக்கல்கள், மனிதர்கள் மட்டும் இயந்திரங்கள் மூலமாக ஏற்படத்தொடங்கின.
எழுதுகிறேன் அப்பாலிக்கா!
====================================================================================================
சில செய்திகள்...
1) மாறும் இந்த இயற்கையின் நிலை சிறிய அபாய மணியை அடித்து பயத்தை ஊட்டுகிறதோ...
2) உண்மைதான் இல்லையா? இந்தத்துறை சமீப காலங்களில் என்ன சாதித்தது என்று ஆராய வேண்டும். அடுத்த செய்திப் படத்தைப் பாருங்கள்...
இதே செய்தி போல 87 ஆம் வருடம் கல்கண்டில் கேள்வி பதில் பகுதியில் வந்த ஒரு கேள்வி பதில்!
3) இந்த செய்தியை எப்படி எடுத்துக் கொள்வது? தினசரி இந்த 20,000 பேர்கள் என்ன செய்வார்கள்? அரசாங்கம் எப்படி இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது?! வெட்டிச் சம்பளமா?

================================================================================================
வெட்டி அரட்டையில் ஒன்று...
நிறைய காணொளிகள், பிரபலமானவர்களின் பேட்டிகள் பார்ப்பேன். அதில் நான் கண்ட ஒரு ஆச்சர்யம். எனக்குதான் அது ஆச்சர்யம் என்று நினைக்கிறேன். உங்களுக்கெல்லாம் இதில் என்ன இருக்கிறது என்றும் தோன்றலாம். எல்லோரும் மருதாணி வைத்துக் கொண்டால் உள்ளங்கையின் உள்பக்கத்தில்தானே வைத்துக் கொள்வார்கள்?! இவரின் உள்கை ப்ளெயினாக இருக்கிறது. உள்ளங்கையின் வெளிப்பக்கம் மருதாணி!

===========================================================================================
பொட்டு வைத்த முகமோ...
பொட்டு வைப்பதில் இத்தனை விஷயங்கள் உள்ளனவா என, மலைக்க வைக்கிறார், டாக்டர் சசித்ரா தாமோதரன்: பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும், கோவில்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் பொட்டு வைத்துக் கொள்கின்றனர். போர்களின் போது வெற்றி வாகை சூடியவர்கள், சிகப்பு நிற திலகத்தை வைத்துக் கொள்வது, தொன்றுதொட்டு நம் நாட்டில் பின்பற்றப்படும் மரபு.
இந்தியா மட்டுமின்றி வங்கதேசம், நேபாளம், இலங்கை, மலேஷியா, வியட்னாம் போன்ற, பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் ஹிந்துக்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர் புருவ மத்தியில் சிகப்பு நிற பொட்டு வைத்துக் கொள்வதை காண முடிகிறது.சிந்து சமவெளி நாகரிக காலத்திலேயே இந்த வழக்கம் இருந்ததன் அடையாளமாக, அங்கே கண்டறியப்பட்ட களிமண் பெண் உருவங்களின் நெற்றியில் பொட்டு காணப்பட்டது என, தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
யோக முறைகளின்படி, நெற்றியில் குங்குமம் வைக்குமிடம், சிந்திக்கும் திறன் மற்றும் நினைவாற்றலுக்குரிய ஆக்ஞா சக்கரம் இருக்கும் இடமாக கருதப்படுகிறது. அந்த இடத்தில் குங்குமம் வைக்கும் போது, முகம் பிரகாசமாக மாறுவதுடன் ஞானம், அமைதி, தெளிவு கிடைக்கிறது என, கூறப்படுகிறது.இதனால் தான், புத்த மத துறவிகளுக்கு, நெற்றிக்கண் திறப்பு என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதில், புருவ மத்தியில் சூடு வைக்கப்படுகிறது.
தியானம் செய்பவர்கள், பொட்டு வைக்கும் இடத்தில் ஆழமாக தொடும் போது, மன ஒருங்கிணைப்பு வாய்க்கிறது என்கின்றனர்.ஹிந்துக்களில் திருமணமான பெண்கள் என்பதை காட்டும் விதமாக, நெற்றியில் குங்குமம் வைக்கப்படுகிறது. மஞ்சள், சந்தனம், நல்லெண்ணெய் போன்ற இயற்கை பொருட்கள் அடங்கிய குங்குமம், சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது. பெண்களுக்கு மன அமைதியையும், அழகையும் தருகிறது.குங்குமம், எதிர்மறை எண்ணங்களை விலக்கி, மன வலிமையை தருவதாகவும் கூறப்படுகிறது.
இன்று கடைகளில் கிடைக்கும் செயற்கை நிறைந்த குங்குமப் பொடிகளில் துத்தநாகம், பாதரசம், ஈயம், ரோடமைன் போன்ற, பல ரசாயனங்கள் உள்ளன.இவை சரும அழற்சி, அரிப்பு, பொடுகு, முடி உதிர்தல் போன்ற, பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இத்தகைய செயற்கை குங்குமத்தை நீண்ட காலம் பயன்படுத்தும் போது, நுரையீரல், சிறுநீரகம், நரம்பியல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இயற்கையான பொருட்களால் ஆன குங்குமம் தான் சிறந்தது.குங்குமம் வைப்பது, அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது
தினமலர் - சொல்கிறார்கள் -
============================== ============================== ============================== ==
கவிதை : !!
பொக்கிஷம்



















டாக்டர் சுசித்ரா தாமோதரனுக்கும் அனுஷ்காவுக்கும் என்ன சம்பந்தம்? இரண்டு அனுஷ்கா படங்களை நுழைக்க இந்தச் செய்தியா?
பதிலளிநீக்குசேட்டைக்காரனைவிட பெரிய சேட்டைக் காரனாக இருப்பார் போலிருக்கே
பொட்டு வைத்த முகம் என்றதும் அழகிய அனுஷ் முகம் நினைவுக்கு வந்து பகிர்ந்தேன்.. வேறொன்றுமில்லை. வாங்க நெல்லை...
நீக்குசேட்டைக்காரன் பகுதி சுவாரஸ்யம். அவர் மேனுவலாகச் செய்த வேலைகளை கெம்ப்ளாஸ்டில் முதல் முதலாக கம்ப்யூட்டரில் செய்யும் சாப்ட்வேரை நான் எழுதிய காலம் நினைவுக்கு வருது. அது 89ல்
பதிலளிநீக்குஆமாம். நேற்று இதே போல TVS நிறுவனத்தில் மொபிலிட்டி சர்விஸ் சென்டரில் பணிபுரியும் என் ஒன்று விட்ட தம்பியிடம் பேசிக்கொண்டிருந்தேன். இப்போது அவன் ஹோசூரிலிருந்து க்ருஷ்ணகிரிக்கு மாற்றப்பட்டு சென்று வருகிறான். சேட்டை நினைவுக்கு வந்தார்.
நீக்கு// கெம்ப்ளாஸ்டில் முதல் முதலாக கம்ப்யூட்டரில் செய்யும் சாப்ட்வேரை நான் எழுதிய காலம் நினைவுக்கு வருது. //
Wow..
உள்ளங்கையைக் காண்பிப்பதைவிட புறங்கையைக் காண்பிப்பது இயல்பு. பலரும் பார்க்க ஏதுவாகும். அதனால் மருதாணி புறங்கையில்.
பதிலளிநீக்குஎனக்கு உள்ளங்கையில் மருதாணி டிசைன் போட்டுக்கொள்ள ரொம்பப் பிடிக்கும். திருமண ரிசப்ஷன் சமயங்களில் இதற்கு ஒரு கவுன்டர் இருந்தால் வெட்கப்படாமல் கையை நீட்டிவிடுவேன்.
எனக்கு ஏனோ மருதாணி போட்டுக்கொள்ள பிடிப்பதில்லை. அதேபோல கையில் கொச கொசவென்று மருதாணி போட்டிருப்பவர்களும் அலர்ஜி. அழகாக சிம்பிளாக மருதாணி போட்ட கைகள்தான் பிடிக்கும். அதிலும் தாவணி போட்டிருந்தால் கொஞ்சம் கூடுதல் விசேஷம்.. சில வருடங்களுக்கு முன் சொல்கிறேன்...
நீக்குஅலுவலகப் பணி புரிபவர்களைவிட வீட்டு உதவியாளர்கள் பல வீடுகளில் வேலை செய்வதால் ஒப்பீடு செய்து அதிக்க் காசுக்கும் குறைந்த வேலைக்கும் ஆசைப்படுகிறார்கள். காசு மற்ற வீடு அளவுக்கு இல்லைனா வேலைல சுணக்கம் காட்டுகிறார்கள்.
பதிலளிநீக்குஉண்மை. ஒரே நேரத்தில் பல வீடுகளில் வேலை செய்வதால் அவசரம், அலட்சிய வேலைகள்... உண்மைதான்.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குஊசி முனையால் பொட்டு வைத்துக் கொள்ளும் காலம் இது.. இப்போதைய இளம் பெண்களில் பலர் பொட்டு வைத்துக் கொள்வதே இல்லை.. பாழ் நெற்றி தான்..
பதிலளிநீக்குஆமாம். நானும் வருத்தப்படும் விஷயம்.
நீக்குமருதாணியின் மருத்துவப் பயன்கள் என்றால் உள்ளங் கை தான்... புறங்கை என்பது வெறும் பகட்டு...
பதிலளிநீக்குஇது கவனம் கவர... ஸ்டைலு
நீக்குஒன்னேகால் ரூபாய்க்கு அட்டைப் பட கவர்ச்சியுடன் நாவல்., பொன்னான நாட்களும் கனவாகிப் போனதே...
பதிலளிநீக்குஇதயம் கனக்கின்றது..
அப்போதைய விலைவாசி.. அப்போது நாம் அதிகம் படித்தோம். அதனால் மனதில் நின்ற தெரிந்த எழுத்தாளர்கள்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஎழுபது எண்பதுகளின் தொடக்கத்தில் பாக்கெட் நாவல்கள் ஒரு ரூபாய் தான்...
பதிலளிநீக்குசென்னை பாரிமுனையில் இருந்து தஞ்சைக்கு 18 ரூபாய் தான் விரைவு பேருந்தில் (திருவள்ளுவர்)...
உண்மை. அதுவும் சின்ன சைஸ் புத்தகங்கள்! இன்றைய விலைவாசி.
நீக்குஎல்லா பகுதிகளும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குசேட்டைக்காரன் அனுபவங்கள் படிக்க சுவாரஸ்யமாக
இருக்கு.
:))
நீக்குஆ!!!!! ஸ்ரீராம் இன்று முதல் பகுதிக்கே நிறைய கருத்துகள் போட வேண்டும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குபிற பெண்மணிகளைக் கூட்டிக் கொண்டு வருவதை நான் சொல்ல நினைத்தேன்....
ஸ்ரீராம் நீங்க கலெக்ஷனுக்குன்னு வராங்கன்னு நினைக்கக் கூடாது. அவங்க உங்களுக்கு நல்லது செய்யறாங்க புண்ணியம் கிடைக்கச் செய்யறாங்கன்னு. என்று அடித்து வைத்து வாசிக்கும் போது
நீங்களும் அதே கருத்தைச் சொல்லிட்டீங்க!!!!! ஆனா நான் பைபாஸ் பண்ணாம போட்டுவிட்டேன் நான் அடித்ததையும்!!!!!!ஹிஹிஹி
கீதா