கார்த்திகை மாதம் நரசிம்மர் கண் திறந்து பார்க்கும் மாதமாம். எனவே வருடா வருடம் அந்த மாதத்தில் ஒருமுறையாவது நரசிம்மரை தரிசித்துவிட்டு வேண்டுமென்று சொல்கிறார்கள். வருடா வருடம் சோளிங்கர் சென்றுவர பாஸுக்கு ஆசைதான். சென்ற வருடத்துக்கு முந்தைய வருடம் சென்று வந்தோம். சென்ற வருடம் தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல முடியாமல் போனது. இந்த வருடம் மறுபடி சென்று வந்தோம்.
"நீ போயிட்டு வாயேன்.. என்னை என்னை ஏன் இழுக்கறே?" என்று நான் கேட்ட கேள்விக்கு பாஸ் சொன்ன பதிலை நான் இங்கு எழுதப்போவதில்லை. இந்தமுறை இரண்டு மலையும் ஏறிப்பார்க்கும் ஆவலில் இருந்தார் பாஸ். என் இரண்டு முழங்கால்களும் கீச் கீச்சென்று முனகின.
அடுத்த சலுகையாக நான் "சரி.. போய்வருவோம். மலை ஏறணுமா என்ன?"
"கட்டாயம். நரசிம்மரைப் பார்த்து பதினோரு வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆஞ்சியையும் பார்க்கணும். அது சின்ன மலைதானே?"
சின்ன மலைக்கே 705 படிகள். ஏற, இறங்க 705+705=1540 படிகள். முதல்வர் கணக்கில் கணக்கு போட்டது மனம். சொன்னேன்.
"பெரியமலைக்கு ரோப்கார் இருக்கிறது. சென்று வந்து விடலாம். மது சொல்லி இருக்கான். சின்ன மலை மட்டும் ஏறணும். அது வேணா நான் மட்டும் போய்வந்து விடுகிறேன்" - என்ன பெருந்தன்மை!
எனக்கு சிபாரிசில் சென்று வருவது கூச்சம், சங்கடம். கூட்டம் என்றால் அலர்ஜி. பாஸுக்கு தெரியாதா என்ன! ஆனால் பெருமாளை பார்ப்பதில் உறுதியாய் இருந்தார். அதுவும் நானும் பெரியமலை ஏறவேண்டும் என்றும் சொல்லி விட்டார்.
பாஸ் தம்பிகள் - அதாவது சித்தி பெற்ற ரத்தினங்கள் - இருவரும் அதிசயப் பிறவிகள். பெருமாள் என்றால் உயிரை விடுவார்கள். சில பழைய கோவில்களை எடுத்து புனருத்தாரணம் செய்திருக்கிறார்கள். சோளிங்கரில் சின்ன மலை ஏறும் படிக்கட்டுகளின் தொடக்கத்தில் இடதுபுறமாக செங்கமலம் அன்னதானக் கூடம் இருக்கும். அது இவர்களுடையதுதான். வருடா வருடம் உறவுகளிடமும், நட்புகளிடமும் நன்கொடையும் வாங்குவார்கள். ஆனால் அதெல்லாம் தவிர அவர்கள் செய்யும் செலவும், சேவையும் மிக அதிகம். வருடம் முழுவதும் அங்கு அன்னதானம் நாள் முழுக்க தொடர்ந்து நடக்கும். அவர்கள் பெற்ற பிள்ளைகளும் அதே மார்க்கத்தில் தொடர்வது அவர்கள் செய்த பாக்கியம். ஏகாதசி விரதம் இருப்பதும், திரிகால ச.வந்தனங்களும் தினசரி பூஜையும் என்று அமர்க்களப்படுத்துகிறார்கள்.
"அவசியம் பெருமாளை பார்க்கணுமா? ஒரே கூட்டமா இருக்குமே...' என்று எண்ணம் ஓடினாலும் வெளியில் சொல்லவில்லை. பாஸ் திட்டுவார் என்பது மட்டுமில்லை, நரசிம்மருக்கும் கேட்டு, 2019 திருப்பதி போல ஆகிவிட்டால்..? 'டேய் முட்டாள்.. வெளியில் சொன்னால்தான் பெருமாளுக்கு கேட்குமா, தெரியுமா '
"அஸ்து பாடாதீங்க... கிளம்புவோம்" பாஸின் கட்டளை வந்துவிட்டது. அவர் கட்டளையே சாசனம்.
"அக்கா.. சனிக்கிழமைன்னா இன்னும் கூட்டமா இருக்கும். வெள்ளிக்கிழமை வாங்க.. குறைவாத்தான் இருக்கும். நான் லோக்கல் வி ஐ பி கிட்ட சொல்லி ரோப்கார் ரிசர்வ் பண்ணி வச்சுருக்கேன். காலைல சீக்கிரம் கிளம்பிடுங்க" மதுவின் யோசனை திட்டமாக இருந்தது.
டிசம்பர் ஐந்தாம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு காஃபி சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். வழியில் எதுவும் சாப்பிடவில்லை என்பதற்கு காரணம் இரண்டு. ஏழரை மணிக்குள் சோளிங்கர் சென்றுவிடுவோம், இடையில் அவ்வளவு சீக்கிரம் சாப்பிடத் தோன்றாது என்பது ஒன்று. அங்கு சென்று விட்டால் அன்னதான கூடத்தில் ஏதாவது சாப்பிட்டுக் கொள்ளலாம் என்பது இரண்டு.
வாடகை ஓட்டுநர் எங்களுடன் முன்பு ஆலங்குடிக்கு வந்தவர். ஆலங்குடி பயணக்கட்டுரை எழுதி விட்டேனோ? கோவில் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்த நிகழ்வு..? இல்லையோ? அங்கும் இதே தம்பிகள்தான். அங்கு வந்த அதே டிரைவர் மோகன்தான் இப்போதும். அப்போது அவர் கோவில் பக்கமே வரவில்லை என்பதால் அவர் கன்வர்ட்டட் கிறிஸ்தவர் என்று எண்ணியிருந்தேன். இந்தமுறை பேசியபோது அவர் முதல்நாள்தான் திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் சென்று வந்திருந்தார் என்பதும், அவர் சோளிங்கர் இரண்டு மலையும் இதுவரை பார்த்ததில்லை என்றும், 'நடந்து ஏறினால் முடியாது, ரோப்கார்னா நானும் வரலாம்னா வரேன்' என்றார். நாங்களே சிபாரிசு. இவருமா? கேட்டுப் பார்த்தோம். பச்சை.
சென்று இறங்கும்போது மணி காலை 7.20 சுற்றிலும் குரங்குகள் பிஸியாக இயங்கி கொண்டிருக்க, சத்திரத்தை அடைந்தோம் . ஒரு குஞ்சுக் குரங்கு என்னுடனேயே சமமாக நடந்து வந்து என்னைப் பார்த்தபடி கூட வந்ததது. இன்னொரு நடுத்தர வயதுக்கு குரங்கு ஸ்பைடர்மேன் போல மேற்கூரையில் கம்பிகளை பிடித்தபடி கைமாற்றித் தாவித்தாவி முகத்துக்கு அருகில் எங்களுடனேயே பயணம் செய்தது. ஒரு குரங்கு அங்கிருந்த பைக்கில் தாவி ஏறி.....
இருங்கள்.... ராமநாராயணன் படம் போல 'பைக்கை ஸ்டார்ட் செய்து பறந்தது' என்று எழுதப்போகிறேன் என்று நினைக்காதீர்கள். பெட்ரோல் டேங்கின் மேல் இருக்கும் லெதர் பையின் ஜிப்பைத் திறந்து, கையை உள்ளே விட்டுத் துழாவி எதுவும் இருக்கிறதா என்று பார்த்து, உள்ளே இருந்த சிறிய தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு, ஜிப்பை மூடி கீழே இறங்கி லாவகமாக பாட்டிலின் மூடியைத் திறந்து தண்ணீரைக் குடித்து விட்டு பாட்டிலை வீசி எறிந்தது! நடுக்கத்தை மறைத்தபடி நடந்தோம். எங்களை மட்டும் ஜாக்கிரதையாக உள்ளே அனுமதித்து கம்பியிட்டிருந்த கேட்டை சட்டென மூடினார் அங்கிருந்த சேவார்த்தி ஒருவர். உள்ளே குரங்குகள் வந்து விடக்கூடாது என்று எச்சரிக்கை.
எங்களை வரவேற்றார் தலைமை குக். அவர் எங்களுக்கு பரிச்சயமானவர்தான். கொரோனா காலத்தில் எங்கள் வீட்டுக்கு மூன்று வேலையும் வந்து உணவளித்துச் சென்ற அன்னதாதா.
"வாங்க.. மலை ஏறப்போறதா மது சொன்னார். காஃபி சாப்பிட்டு விட்டு மலைக்கு கிளம்பறீங்களா? அப்படியேவா?"
"லேட் ஆயிடாதில்ல? டைம் இருக்குன்னா காஃபி சாப்பிட்டுட்டே கிளம்பறோம்"
நரசிம்மர் புன்னகைத்தார்.
=======================================================================================
கார்த்திகைக்கு தீபம் வைக்க வீட்டில் பாஸ் ஸ்வாமி முன் அகல் விளக்குகள் எடுத்து வைத்துக் கொண்டிருக்க, அதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டராகிராமில் ரீல்ஸ் போட்டும், பேஸ்புக்கில் போட்டும் ஜென்ம சாபல்யமடைந்தேன்!
=================================================================================================
பூண்டு, வெங்காயம் பயன்படுத்துவதில் பிரச்னை; விவாகரத்தில் முடிந்த 11 ஆண்டு திருமண வாழ்க்கை
'நான் படிச்ச புத்தகம்' என்கிற தலைப்பில் 60 களின் ஆரம்பத்தில் விகடனில் ஒரு தொடர் வந்திருக்கிறது. அதில் ஆர்வி எழுதிய புத்தகம் ஒன்றுக்கான விமர்சனம். இதற்கான படம் எடுத்து வைத்திருந்தேன். ரொம்ப ரொம்ப நாட்கள் ஆனதால் படத்தைக் காணோம். எனவே கதையின் தலைப்பையும் காணோம்! என்ன கதை என்று ஜீவி ஸார் சொல்வாரா? படித்திருப்பாரா? படித்திருந்தாலும் நினைவிருக்குமா?
இதைப் படித்து விட்டு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். என்றாவது ஒருநாள் இதற்கான படம் கிடைக்கும்போது குறிப்புடன் பகிர்கிறேன்!
காட்டு மலரை ரோஜா மலராக மாற்ற முயலும் சுந்தரத்துக்கும், அந்த மலராகிய காவேரிக்கும் இடையே இருந்த அன்பை விவரிக்கும் நவீனம்தான் யுவதி. இளம் உள்ளத்துக் கற்பனைகள், துடி துடிப்பு, தான் நினைத்ததைச் செய்ய வேண்டும் என்ற முரட்டுப் பிடிவாதம், வயதுக்கு உரிய பலவீனங்கள் இவற்றை மையமாக வைத்துக் கொண்டு புனையப்பட்ட சிறந்த தொரு நாவல். மற்றும் பலதரப் பட்ட மனிதர்களின் மனோபாவங்களையும் தத்துவ ரீதியாக விளக்கி வெகு அழகாக எளிய நடையில் சித்திரிக்கிறார் ஆசிரியர் ஆர்வி.
சுந்தரத்திற்காக, பட்டணத்திலேயே ஒரு குடித்தனம் போடத் தீர்மானித்து தாயும் அவளுக்குத் துணையாகக் காவேரியும் பட்டணம் வருகிறார்கள். 'அவளை அழைத்துக் கொண்டு போய்த் துணிமணிகளை யெல்லாம் வாங்கிக் கொடுடா. உனக்கு ஒரு தங்கை யிருந்தால் செய்ய மாட்டாயா?' என்கிறாள் சுந்தரத்தின் தாயார். அவளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க ஒரு வாத்தியாரம்மாவை ஏற்பாடு செய்கிறான். தினம் தினம் பார்த்துக்கொண்டே இருந்தபோதிலும் அவள் யுவதியாக மாறி விடும் சின்னங்கள் அவன் மன அமைதியைக் கெடுக்கின்றன. சுந்தரத்தின் நண்பன் கோபு ஒரு யதார்த்தவாதி. அவன் சுந்தரத்திற்கும், காவேரிக்கும் இடையே உள்ள தொடர்பு முடிவில் விபரீதத்தில் முடியும் என்று சுந்தரத்திடம் எச்சரிக்கின்றான்.
கோபுவின் பயம் வீணானது என்பதைச் சுந்தரம் நிரூபிக்க விரும்புகிறான். ஓர் இளம் பெண்ணிடம் மாசற்ற அன்பைச் செலுத்துவதில் தவறென்ன என்று தீர்மானித்து பின்னும் தீவிரமாக இருக்கிறான். சுந்தரத்தின் தாயாருக்கும் வரவர அவன் போக்கு பிடிபடவில்லை. கோபுவின் சந்தேகத்தில் அவளுக்கும் இப்பொழுதுதான் நம்பிக்கை அதிகமாகிறது. இந் நிலையில் சுந்தரத்திற்கும் சரஸ்வதற்கும் கல்யாணம் நடந்தேறுகிறது. கல்யாணத்திற்கு முன்பு சரஸ்வதியை காவேரியின் வாத்தியாரம்மா வீட்டில் சந்தித்து, காவேரியின் முன்னேற்றத்திற்கான தன் விருப்பங்களை தெரிவிக்கிறான். அவனுடைய உன்னத எண்ணங்களை அறிந்த சரஸ்வதி அதற்கு உடன்படுகிறாள்.
கல்யாணமானதும் சுந்தரத்தின் படிப்பு முடியும் வரை சரஸ்வதி பெற்றோர் வீட்டிலேயே இருக்கிறாள். காவேரியும் அவளுடனே இருந்து கொண்டு பழைய வாத்தியார் அம்மாவிடமே படிக்கிறாள். புதுப்புது பிரச்சனைகள் அன்றாடம் தோன்றி எப்படியோ சமாளிக்கப்பட்டு வருகின்றன. காவேரியை பற்றிய சகல பிரச்சனைகளையும் சரஸ்வதி அவன் நிமித்தம் திருப்திகரமாகவே ஏற்று முடிக்கிறாள். ஆனால் சரஸ்வதியின் சக்தியையும் மீறி இருக்கிறது ஊர்வாய். கோபுவை பலமுறை சுந்தரம் விலக்கினாலும் அவன் ஒவ்வொரு விஷயத்திலும் தலையிடுகிறான். சுந்தரம் தெரிந்தோ தெரியாமலோ தவறான வழியில் செல்வதோடு இல்லாமல் பிறரையும் அழைத்துச் செல்வதை அவனால் சகிக்க முடியவில்லை. இந்த அபவாதத்துக்கு இடையே காவேரி தன் கிராமத்திற்கு போக கூட மறுக்கிறாள். சரஸ்வதி தன் கணவனுக்கு வரும் அவமானத்தில் தனக்கும் பங்கு உண்டு என்று தைரியமாக இருக்கிறாள். சரஸ்வதி கணவனோடு தனி குடித்தனம் ஆரம்பித்தவுடன் காவேரியை வாத்தியாரம்மா வீட்டிலேயே தங்க ஏற்பாடு செய்கிறார்கள்.
தன் வீட்டு சமையல்காரருடைய பெண்ணின் கலியாணத்திற்காக சுந்தரமும் சரஸ் வதியும் ஊருக்குப் போகிறார்கள். ஊரில் எல்லோகும் இவனை ஒரு மாதிரியாகப் பார்ப்பதைக் கவனித்துவிட்டு, அங்கு இருக்கப் பிடிக்காமல் சரசுவதியை அங்கு விட்டு விட்டு, சென்னைக்கு வந்து விடுகிறான். காவேரியைச் சந்தித்து தன் நிலைமையை விரிவாக விளக்கி. 'நம்மைச் சுற்றியிருப்பவர்கள் பலங்கொண்ட மட்டும் தாக்கும் கடைசி அடி நம் மேல் விழுகிறது. ஒன்றும் தெரியாத ஒரு பெண் விணாகி விட்டாள் என்பதுதான் அவர்கள் முடிவு! இந்த அபவாதம் என் தலைமீது பெரிய பாரமாக விழுந்திருக்கிறது. அதைத் தூக்கி எறிந்து விட்டு, நிமிர்ந்து நிற்கவே போகிறேன். அப்படித் தூக்கி எறியும்போது, அது யார் மீது போய் விழும் என்று நான் கவலைப்பட முடியாது. அவர்கள் அதை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். சரசுவதி இதைத் தாங்க மாட்டாள் என் பதை யறிவேன். ஆனால் அவளைச் சேர்ந் தவர்கள் என் மீது பழி சுமத்தும்போது. பக்கத்திலே அவளும் இருக்கிறாளே என்று சிந்திக்க வில்லையே. அவர்கள் பெண் அவர்களோடு வாழட்டும். என்றைக்குப் பழியை என்னிடம் காணவில்லையோ அன்று அவள் வரட்டும்" என்கிறான். காவேரியின் உடல் பயத்தால் நடுங்குகிறது. 'காவேரி! பயப்படாதே. நான் உன்னைக் கைவிட மாட்டேன். களங்க மற்ற அன்புக்கு எப்பொழுதுமே அவமதிப்பு ஏற்படாது,' என்று தேற்றுகிறான்.
இவர்களது போக்கை தடுக்க, எல் லோரும் ஆலோசித்து காவேரிக்கும் அவளது மாமன் மகனுக்கும் கலியாணத்தை முடிக்க ஏற்பாடு செய்கிறார்கள். இது சுந்தரத்துக்குப் பிடிக்கவில்லை. காவேரிக்குப் பைத்தியம் பிடிக்கும் போலாகி விடுகிறது. எல்லோரும் ஊரிலிருந்து வருகிறார்கள். காவேரியை அழைத்துக் கொண்டு ஊரை விட்டே போய் விடுகிறான். எல்லா இடங்களிலும் அவர்களை தேடுகிறார்கள். மதுரையில் பிடிபட்டு விடுகிறார்கள். 'என் போக்கிலே என்னை விட்டு விடுங்கள். எல்லோரிட மிருந்தும் நான் விலகிச் செல்கிறேன்' என்று சொல்லி விட்டு, அங்குள்ளவர்களை வணங்கி விட்டுச் செல்லுகிறள், காவேரி, அப்படிச் செல்லும் காவேரியை நோக்கி ஓடிய கோபு அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு 'உன் பிரயாணத் தில் என்னையும் சேர்த்து ஏற்றுக் கொள்' என்று கூறினான் அவன்.
காவேரி, யுவதியாக மாறியதும் சுந்தரத்தின் மனோநிலையை மிக அழகாக விளக்குகிறார் ஆசிரியர் சுந்தரத்திற்கு தன்னால் உருவாக்கப்பட்ட பெண் காவேரி என்ற ஒரே எண்ணம் தான் நிலவி வந்தது கரை தெரியாத பாசம் முடிச்சு தெரியாத பிணைப்பு சரீர சம்பந்தமான கவர்ச்சியினால் எழும் உணர்ச்சியை விட சிறந்த அன்பின் துளி துடிப்பு என்று அழகாக சொல்கிறார் ஆசிரியர் இந்த நவீனம் இரண்டாம் பதிப்பில் காவிரி என்ற பெயரில் வெளியாகி உள்ளது
ஏ ஸி ஸ்ரீனிவாசன் .
விகடன் ஜோக்குக்கு அபராதம் புதுசு இல்லை!





















காலை வணக்கம்.
பதிலளிநீக்கு//என் இரண்டு முழங்கால்களும் கீச் கீச்சென்று முனகின. //
திருப்பாவை பாசுரம் 07 :
கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ?
முழங்கால்களுக்குள் வலியன் (ரெட்டைவால்) குருவி வைத்திருக்கிறீர்கள் போலும். என் ஜாய்ண்ட்களெல்லாம் கடக் முடக் ஓசை மட்டும்தான் எழுப்புகின்றன! ரொம்ப வித்தியாசம்தான் ;-)
வாங்க TVM.. வணக்கம். அதை எழுதும்போது அந்த நினைவுடனேயே எழுதினேன். நீங்கள் சொல்வது போல கடக் முடக் என்றுதான் சத்தம் கேட்கும். ஆனால் எண்ணெய் இடாத கதவின் கீல்கள் கீச் கீச்சென்று சத்தமெழுப்புவது நினைவுக்கு வந்தது. மருத்துவர் ஏதோ Faluid Therapy தரலாம் என்று சஜஸ்ட் செய்திருந்தார். முழங்கால் எலும்புகளுக்கிடையே பசையின்மையால் ஏற்படும் உராய்வினால் தானே வலி!
நீக்குஇன்றைய அனைத்துப் பகுதிகளும் அருமை.
பதிலளிநீக்குகவிதையில் மாத்திரம் குறை இருக்கிறது. கடைசி இரண்டு பத்தி, அட்ஜஸ்ட் பண்ணி வாழ்ந்துவிடலாம் என முடிகிறது. அதற்கு முந்தைய பத்தி பணமே இந்த முடிவுக்குப் பிரதானம் என்ற அர்த்தத்தில் வருகிறது. இரண்டும் ஒத்துப்போகவில்லை.
வாங்க நெல்லை.. கடைசி இரண்டு பத்தி யோசனை சொல்கிறது. பணம் இருந்தால் அதைக் கறக்கத்தான் ஜீவனாம்சம், விவாகரத்தில் கேட்கிறார்கள். எனவே இது பெரும்பாலும், கவனிக்கவும், பெரும்பாலும் பணம் இருப்பவர்களிடையேதான் சகஜம். குடிசையில் வாழ்பவர்களும், ஒண்டு குடித்தனத்தில் வாழ்பவர்களும் விவாகரத்தை நாடுவதில்லை. கொஞ்சநாள் முன்னர் ஒரு பெண்மணி கணக்கு போட்டு மாதம் இவ்வளவு என்று பைசா கணக்குடன் கோடிகளில் பணம் கேட்டிருந்தார். நீதிபதியும் அதைக் குறித்து சொல்லி இருந்தார். அந்நேரத்தில் எழுதியது. கடைசி பத்தி சினிமா பாடல் வரி.
நீக்குகல்கி மறைந்தபோது... ஒழுங்கா ஸ்கேன் பண்ணி வெளியிட்டால் என்ன? என நொந்துகொண்டே கஷ்டப்பட்டுப் படித்து முடித்தபோது கீழே தட்டச்சு செய்து வெளியிட்டிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஹா. ஹா.. ஹா...
நீக்குஅவசரம்... அவசரம்...
நான் எனக்குச் சொன்னேன்!
பாலகுமாரன் எழுத்து ஆச்சர்யம். அவனவன் தான் பிறவியிலேயே தமிழை மேம்படுத்துவதற்காக இலக்கியவாதியானேன் என்று சொல்லிக்கொள்ளும்போது, சிறுகதை எழுதும் முறையை சுஜாதாவிடம் கேட்டுத் தெளிந்துகொண்டேன் எனழுதியிருப்பது ஆச்சர்யம்.
பதிலளிநீக்குஅவர்களுக்குள் மனஸ்தாபமும் எழுந்திருந்திருக்கிறது. படித்திருக்கிறேன். பானு அக்கா சொல்வார் பாருங்கள்.
நீக்குசோளிங்கர் தரிசனம் மூன்றுமுறை ஆகிவிட்டது. ஒரு நாழிகை நேரம் சன்னதி அருகிலுள்ள மண்டபத்தில் அமர்ந்திருந்தீர்களா? ஆஞ்சநேயர் மலை படிக்கட்டுகள் உயரம் அதிகம். ஒரு காலத்தில் படங்கள் பகிரணும்.
பதிலளிநீக்குஎனக்கும் மூன்று முறைதான்.
நீக்குஅப்பாடி..
இப்போ நானும் நெல்லை அளவுக்கு ஒரு ஆன்மீகவாதிதான்! நீங்களும் மூன்று, நானும் மூன்று!
என்ன சம்பளம் என்று தெரியாதாம்... ஒருவருக்கு கோடிக்கணக்கான சொத்து. அதில் பிச்சாத்துக் காசைப் பற்றி என்ன கவலை? இராஜாஜி ஒரு பிரின்சிபளுடன் வாழ்ந்தவர். அவருடைய பூர்வீக வீட்டையே, மருத்துவமனை அமைத்து உபயோகப்படுத்தணும், 30,000 ரூதான் பெற்றுக்கொள்வேன் என்ற கன்டிஷனுடன் அதிகப் பணத்துக்கு ஆசைப்படாமல் விற்றவர்
பதிலளிநீக்கு30,000 தான்...! ஆனால் எனக்கும் அதே கருத்துதான். அந்தக் காலத்தில் முப்பதாயிரம் என்பது எவ்வளவு பெரிய தொகை!
நீக்குஇப்பவும் ஒருவர் தனக்குப் பிறகு தன் வீட்டை மருத்துவமனைக்கு எழுதி வைப்பதாக சொல்லிச் சென்றார்.
"நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு...!"
உணவினால் விவாகரத்து அதிசயம்தான். இப்போல்லாம் கணவனுக்காக நான் வெஜ் சமைக்கிறேன் என்று சொல்வதுதான் ஃபேஷன். எந்தக் கணவனும் மனைவிக்காக என்று சொல்லிக் கேள்விப்பட்டதில்லை.
பதிலளிநீக்கும்ஹூம்... இந்த நியூஸைப் படித்தபின்தான் நான் எவ்வளவு பெரிய தியாகி என்று புரிகிறது! சகிப்புத்தன்மையும் அதிகம் எனக்கு என்றும் தெரிகிறது...
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஷோளிங்கர் பயணம் - சிறப்பு. எனக்கும் சென்று வர எண்ணம் உண்டு. பார்க்கலாம் எப்போது அழைப்பு வருகிறது என...
பதிலளிநீக்குமற்ற பகுதிகளும் நன்று.