காரை நிறுத்தி விட்டு அதோ அங்கே தெரிகிறதே.. அதுதான் ரோப் கார் ஸ்டேஷன்.. அங்கே சென்றோம். நேராக அப்படியே சென்றால் எல்லோரும் செல்லும் வழி. பொதுஜனத்துக்கான டிக்கெட் வங்கச் செல்லும் வழி.. நாங்கள்தான் வி ஐ பி ஆச்சே.. எனவே அதன் வலது பக்கம் இருக்கும் சிறிய கதவுக்காய் செல்லுமாறு பணிக்கப்பட்டோம்.
எங்களுக்கு குதூகலம் கூடி விட்டது. டியாலோ கியாலோ என்று ஆடிப் பாடாத குறையாய் நாங்கள் வலதுபுறம் இருந்த அந்த வாசலுக்காய் நடந்தோம். மனதுக்குள் 'இதோ கார் ஏறி இறைவனைப் பார்த்து விடப்போகிறோம்' என்கிற துள்ளல் எப்படி இருந்தது என்றால்...
ஆனால் பக்கம் சென்றபோது அங்கே சிறிய கதவுக்கு வெளியே மக்கள் கூடி நின்றிருக்க, கதவைத் தட்ட வேண்டிய தேவை இல்லாமல் நாங்கள் பக்கம் சென்றபோதே கதவு திறந்தது. மீசைக்காரர் ஒருவர் ஃபோன் ஒரு கையிலும், பெரிய சைஸ் நோட்டு ஒரு கையிலுமாய் காட்சி அளிக்க, உள்ளே நுழைய முயன்ற எங்களைத் தடுத்து நிறுத்தினார். பெயர் கேட்டார். எங்கள் பெயர் அவருக்கு மெஸேஜில் வந்திருக்க வேண்டும் என்றார். சிபாரிசு செய்தவர் பெயரைச் சொன்னோம். 'பத்தரைக்கு வரச்சொன்னார்கள்' என்று வாட்சைக் காட்டினேன்.
அறநிலையத்துறையிடமிருந்து கால் வந்ததா என்று கேட்டார். இல்லை என்றேன். என் தோளைப் பிடித்து ஓரம் ஒதுக்கி, எனக்குப் பின்னால் நின்றவர்களின் பெயரை வாசித்து அவர்களைமட்டுல உள்ளே இழுத்துக் கொண்டு என்னைப் பார்த்தபடியே கதவை மூடினார்!
ரொம்ப வளர்க்காமல் சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பல 'பேர்போன பெரிய மனிதர்கள்' வந்து சிலருக்கு சிபாரிசினார்கள். அவரோ அசரவேயில்லை. ஃபோனில் மெஸேஜ் வந்திருக்கிறதா என்றுதான் பார்த்தார். நாங்கள் எங்கள் ' வி ஐ பி' யையும் அழைத்து, அவரும் வெள்ளை வேட்டி, வெள்ளை சில்க் சட்டை, இடது கையில் செங்கல் போல செல்ஃபோன் சகிதம் நேரிலேயே வந்து சொல்லிச் சென்றார்.
"சொல்லி இருக்கேன்.. இதோ பத்து நிமிஷத்துல கூப்பிட்டுடுவாங்க"
ஊஹூம்.. ஒரு மூன்று நான்கு 'கன'வான்கள் பொருந்தாத சஃபாரியில் வந்து தாங்கள் தலைமைச் செயலகத்திலிருந்து வந்திருப்பதாகச் சொல்லி உள்ளே நுழைய முயற்சித்தவர்களும் ஓரம் கட்டப்பட்டனர்! அவர்கள் தங்கள் மேல் மேல் அதிகாரியைத் தொடர்பு கொண்டு முயற்சிக்கத் தொடங்கினார்கள். அப்புறம் ஒரு உயர் போலீஸ் அதிகார ஜம்பமாக "வேலா.. நான்தான்.. ஹையர் ஆபீசர் பேமிலி.. நாலு பேர் கதவைத் திற.." என்று அதிகாரமாய் சொன்னபடியே அவர் பதிலை எதிர்பார்க்காமல் ஃபோன் கட் செய்து, அருகில் வந்தார். கொஞ்ச நேரம் ஆயிற்று, கதவு திறக்கவில்லை. மறுபடியும் கொஞ்சம் இறங்கிய தொனியில் ஃபோன் பேசினார். கடைசியில் அவர் ரொம்பவே இறங்கி கெஞ்சியும் கதவு திறக்கவில்லை. மூன்றாவது அழைப்பிலேயே ஒருமை பன்மை ஆகி இருந்தது! அதற்கும் அப்புறம் கதவு திறந்தது. இவர் தொப்பியை மாட்டி சரி செய்து கொண்டு பின்னே திரும்பி, பின்னால் நின்றிருந்த நான்கைந்து பேர்களிடம் 'வாங்க' என்று ஒற்றை வார்த்தையில் சொல்லி முன்னேறி... ஊஹூம்.. மறுபடி அவர் பின்னுக்கு அனுப்பப்பட்டார். "பெயர் வரட்டும்"
போலீசாக இருந்தால் என்ன, போலீஸ் உயர் அதிகாரியாய் இருந்தால் என்ன, செக்ரட்டேரியட் ஆட்களாயிருந்தால் என்ன, உள்ளூர் ஆளும் கட்சி வி ஐ பிக்களாய் இருந்தால்தான் என்ன.. அந்த க்ளெர்க் எல்லாருக்கும் மறைமுகமாகச் சொன்னது இதுதான்..
பத்தரைக்கு வந்து நின்ற நாங்கள் பாஸின் தம்பி மதுவுக்கும், அவன் சொல்லி இருந்த வி ஐ பி க்கும் எங்களை அழைத்து வந்த உதவியாளருக்கும் (எங்களை அங்கே நிறுத்தி விட்டு அவர் பறந்து விட்டார்!) மாற்றி மாற்றி ஃபோன் செய்தும் பிரயோஜனமில்லை. நானும் மறுபடி அவரிடம் போய் கெஞ்சியோ, சாதாரணமாகவோ கேட்கவில்லை. ஒருவகையில் ரசிக்கத்தொடங்கி விட்டேன்! திரும்பிப் போய்விடலாம் என்றால் பாஸ் ஒத்துக்கொள்ளவில்லை. திருப்பதி ஞாபகம் வந்திருக்கும். ஒரு மணி நேரத்துக்கு அப்புறம் அவரே என் முகத்தைப் பார்த்து "இன்னும் உங்கள் பெயர் வரவில்லை சார்" என்றார். அந்த அளவு அவருக்கு என் முகம் பரிச்சயமாகி விட்டது. மிரட்டலுக்கும், சிபார்சுகளுக்கும் பணியாத அவரை அதனாலேயே எனக்குப் பிடித்தும் போனது. ஒவ்வொரு முறை கதவு திறந்து சிலரை உள்ளே அழைத்தபோதெல்லாம் அவர் கண்கள் ஒருமுறை என்னைப் பார்த்துச் சென்றன! "வார்த்த போய் கேளுங்க.. நச்சரிச்சால்தான் வழி கிடைக்கும்" என்று சொன்ன பாஸின் பேச்சைப் புறக்கணித்தேன். இது ஏதோ நான் நிற்க வேண்டும் என்று இருக்கிறது என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். என் மனதிலும் திருப்பதி இருந்தது.
நின்று கொண்டிருக்கும் நேரத்தில் சும்மா சில ஃபோட்டோஸ் எடுத்தேன்.
அங்கு காத்திருந்த நேரத்தில் நான் புரிந்து கொண்டது, எங்கள் சிபாரிசர் தன் பெயர் சொன்னாலே உள்ளே விட்டு விடுவார்கள் என்று எண்ணி இருந்திருக்கிறார். இங்கு வந்து நேரில் பார்த்த அப்புறம் அவர் அனுப்பிய சிபாரிசு மெஸேஜிலும் எங்களை பற்றிய விவரங்களை சரியாய் கொடுக்காமல், தப்புத் தப்பாய் கொடுத்திருந்தார். அரைகுறை வேலை, அலட்சியம். வெங்கடேசன்(பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்கிற பெயரில் வந்திருந்த சிபாரிசுக் குறிப்பைக் காட்டினார் அந்த க்ளெர்க். அதில் எங்கள் கான்டாக்ட் போன் நம்பர் இல்லை, பெயரும் வேறு ஏதோ சொல்லப்பட்டிருந்தது. நாங்கள் வந்த நேரத்துக்கு மெஸேஜ் போட்டிருந்தால் கூட (அப்படிதான் அதைச் சொல்கிறார்கள்) இந்நேரம் உள்ளே சென்றிருப்போம். எங்கள் அருகில் இருந்த செக்ரட்டேரியட் ஆசாமிகள் ஒரு மாதிரி சமாதானமடைந்து காத்திருக்கத் தொடங்கி விட்டார்கள். போலீஸ் ஆபீசர் மக்கள் எதிரிலும், உயர் அதிகாரி குடும்பம் எதிரிலும் தன் மானம் போகிறதே என்று சங்கடப்பட்டார்! அப்.... புறமாய் அவர் அழைத்து வந்த நபர்களை உள்ளே விட்டாலும், அவரை உள்ளே விட மறுத்து விட்டார் அந்த கண்டிப்பான ஊழியர்.
நாங்கள் காலையிலிருந்து இரண்டு காஃபி தவிர வேறொன்றும் சாப்பிடவில்லை. எனக்கு பாதிக்கவில்லை. பாஸ் கொஞ்சம் சிரமப்பட்டார். பனிரெண்டே முக்கால் மணிக்கு (அவ்வப்போது கதவு திறந்து சிலரை பெயர் சொல்லி அழைத்து உள்ளே விட்டுக் கொண்டுதான் இருந்தார்) கதவு திறந்து நான்கு பேரை உள்ளே அழைத்து விட்டு, என் பக்கம் திரும்பி என் கண்கள் அவர் கண்களை சந்தித்ததும் ஜாடை காட்டி உள்ளே அழைக்க, புத்துயிர் பெற்று உள்ளே சென்றோம்!
உள்ளே டிக்கெட் கொடுக்குமிடம். நாங்களும் அங்கேதான் டிக்கெட் வாங்கவேண்டும். பொதுமக்களுக்கான டிக்கெட் கொடுக்குமிடமும் அதுதான். அவர்கள் வெளியிலிருந்து வாங்கி உள்ளே வருவார்கள். நாங்கள் உள்ளிருந்தே வாங்கி கொண்டு உள்ளே செல்ல வேண்டும்.
முதலில் தெரிந்தது டிக்கெட் கட்டணம் நூறு ரூபாய் அல்ல. அல்லது சீசனில்லாத நாட்களில் நூறு ரூபாய் வாங்கி கொண்டு போக வர டிக்கெட் கொடுத்து விடுவார்களோ என்னவோ... மூன்று வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது. மற்றவர்களுக்கு ஒரு டிக்கெட் ஐம்பது ரூபாய். ரிட்டர்ன் டிக்கெட் இங்கேயே கொடுக்க மாட்டீர்களா என்றுகேட்டதற்கு அங்கே வாங்க வேண்டும் என்றார்கள். முதல் கவலை வந்தது!
கறார் ஊழியரை மெதுவாக அணுகி அவருடைய வளைந்து கொடுக்காத தன்மைக்கு பாராட்டினேன். "நானாயிருந்தால் கூட போலிஸ், அரசியல்வாதி, செக்ரட்டேரியட் என்றால் கொஞ்சம் வளைந்து விடுவேன்" என்றேன். நானும் அரசு ஊழியர்தான் என்றும் சொன்னேன். "நான் அப்படி இல்லாவிட்டால் இங்கே சமாளிக்க முடியாது" என்றார் அவர். 'தேங்க்ஸ்' சொன்னார். "இந்தப் பாராட்டை நான் வெளியில் காத்திருந்தபோதே சொல்லி இருப்பேன். அது நான் ஐஸ் வைக்க பாராட்டுவது போல இருக்கும் என்பதால் உள்ளே வந்ததும் பாராட்டுகிறேன்" என்றேன். ............... இங்கு சில வரிகள் வரவேண்டும். அது இல்லாமல் தொடர்கிறேன். மறுபடியும் நன்றி சொன்னவரிடமிருந்து நகர முற்பட்டவனை அவர் நிறுத்தினார். நோட்டைக் காட்டினார்.
"இப்போ கூட உங்கள் பெயர் வரவில்லை. வெளியில் நின்று நீங்கள் கட்சி கட்டவும் இல்லை, வம்பு செய்யவும் இல்லை. ரொம்ப நேரமாய் நிற்கிறீர்கள் என்று நான்தான் உங்களை உள்ளே விட்டேன்" என்றவர், "என் நம்பரை எடுத்துக்குங்க.. இங்கே என்னிடம் முன்னரே சொல்லி விட்டால் நான் உங்களை உள்ளே கூப்பிட்டு விடுவேன்" என்றார்.
ரோப் கார் இரண்டே இரண்டுதான் இருக்கிறது. ஒன்று மேலே செல்லும். அதே நேரம் ஒன்று கீழே இறங்கும். ஒரு தடவைக்கு 16 பேர் மட்டுமே பயணிக்க முடியும். நான்கு பெட்டிகள் கொண்ட தொங்கு உந்தில் ஒரு பெட்டிக்கு நான்கு பேர் அமர வேண்டும். பொதுஜனம் ஆயிரக்கணக்கில் காத்திருப்பார்கள் என்பதால் அங்கிருந்து ஒன்பது பேர்களும், வி ஐ பி பகுதியிலிருந்து ஏழு பேர்களும் ஒரு சவாரிக்கு உள்ளே அழைக்கப்படுவார்கள். உள்ளே அமர்ந்திருந்த 16 பேர்களில் நாங்கள் இரண்டாவது பேட்ச்சில் உள்ளே பிளாட்பாரத்துக்கு அழைக்கப் பட்டோம்.
நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
============================================================================================
அவ்வப்போது OTT யில் படங்கள் பார்ப்பேன் என்று நெல்லையிடம் சொன்னபோது 'சுருக்கமாகவாவது அதைப் பற்றி எழுதுங்களேன்' என்றார். இப்படி படங்கள் வந்திருக்கிறது என்பதும், அது எப்படிப்பட்ட படம் என்றும் ஒரு சின்ன அறிமுகமாவது கிடைக்குமே என்று அவர் என்னை எழுதத் தூண்டியதை நான் நிறைவேற்றும் நாளும் இன்றுதான் இருக்க வேண்டுமா என்று அலுத்துக்கொள்ளாதீர்கள். தீபாவளி மலர் போல கிறிஸ்த்துமஸ் மலர் என்று நினைத்து கொஞ்சம் கொஞ்சமாய் படித்து விடுங்கள்... நோ.. நோ.. அப்படி முறைக்கக் கூடாது...
ZEE 5 OTT யில் பார்த்தேன். கெளதம் வாசுதேவ் மேனன் படம். ஆனால் அவர் பாணியிலிருந்து சற்று மாறியிருக்கிறது. எளிமையாக எடுத்திருக்கிறார். மம்மூட்டி ஹீரோ. அவரே ஒரு காட்சியில் "நாங்கள் ரொம்ப லோ பட்ஜெட் டிடெக்டிவ்ஸ்" என்பார். நிறக் குருடு என்பதால் வேலையிலிருந்து விலக்கப்படும் போலீஸ் அதிகாரி டொமினிக் என்னும் மம்மூட்டி சுமாரான ஒரு துப்பறியும் நிறுவனத்தை நடத்துகிறார். அவருடைய ஹௌஸ் ஓனர், தான் கண்டெடுத்த ஒரு லேடிஸ் பர்ஸை யார் சொந்தக்காரர் என்று கண்டுபிடித்தால் வாடகையில் சலுகை என்கிறார். தோண்டத் தோண்ட ஒவ்வொரு பூதமாய் கிளம்புகிறது. அடுத்தடுத்து சின்னச்சின்ன திருப்பாங்கள். எதிர்பாராத கிளைமேக்ஸ். கொஞ்சம் பொறுமையாய் பார்க்க வேண்டும். ரசிக்கலாம்.
காந்தா. ரத்தக் கண்ணீர் நாயகியின் பெயர்! நெட்ஃப்ளிக்ஸ் OTT யில் பார்த்த படம். துல்கரை எனக்குப் பிடிக்கும். ரசிப்பேன். நான் ரசிக்கும் அவரது அம்சங்கள் எதுவும் இல்லாத திரைப்படம். நடிப்புச் சக்கரவர்த்தி TKM என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். நீங்கள் அதை MKT என்று கூட ஜம்பிள் செய்து கொள்ளலாம். அவர் வாழ்க்கையின் சாயலும் படத்தில் இருக்கும். கொஞ்சம் சிவாஜி, கொஞ்சம் MGR.. இதுவும் கொஞ்சம் ஜவ்வுதான். சமுத்திரக்கனி கோபமான இயக்குனர். வையாபுரி துல்கர் மனைவியின் பாதுகாவலன். துல்கர் மாமனார் ஒரு பெரிய அரசியல்வாதி. ராணா டகுபதி போலீஸ் ஆபீசர். ஏற்கனவே திருமணம் ஆன துல்கருக்கு இப்போது நடிக்கும் நாயகி மேல் காதல் வருகிறது. அந்த இயக்குனருக்கும் இவருக்கும் குடுமிபிடி சண்டை. ஏனென்று வெள்ளித்திரையில் பாருங்கள்! திடீரென்று படப்பிடிப்பின் இறுதி நாளில் ஒரு கொலை நடந்துவிட, கொலையாளி யார் என்று துப்பறிய வருகிறார் ராணா. வித்தியாசமான நடிப்பு அவருக்கு. படப்பிடிப்பு படப்பிடிப்பு என்று ரத்தக்கண்ணீர் பட வாசனையில் படமெடுக்கும் காட்சிகளே - அதுவும் கருப்பு வெள்ளையில் - பாதி நேரம் ஆக்கிரமிக்கிறது. திரைப்பட ஷூட்டிங், டைரக்டர்-ஹீரோ பனிப்போர், நடுவில் ஒரு காதல், அதுவும் திருமணம் தாண்டிய உறவு, ஒரு கொலை, குற்றவாளி யார்.
இதுதான் படம்.
============================================================================================
சுஜாதாவின் கணேஷ் - வஸந்த் கேரக்டர்ஸ் எப்போதுமே சுவாரஸ்யம்தான். கணேஷ் - வஸந்த்துக்கு நடுவே ஒருமுறை மிஸ்அண்டர்ஸ்டாங்டிங் வந்து விடுகிறது... கணேஷின் அலட்சியம் ப்ளஸ் கோபத்தால் மனம் நொந்த வஸந்த் போதையை நாடுகிறான். பாக்யராஜ் படக்கதை போல சுவாரஸ்யமான ஒரு கணேஷ் வஸந்த் பிரிய நினைத்து சேரும் பகுதி.. உயிர்மை அல்லது கிழக்கு பதிப்பகத்தின் பிரசுரத்தில் மூலத்தில் இருந்த சில வரிகள் இல்லை என்பதைக் கண்டுபிடித்தேன். என்னிடம் மூலம் இருந்ததை எடுத்து நினைவில் இருந்ததையும் சேர்த்து இணைத்திருக்கிறேன். கொஞ்சம் நீளமாக இருந்தாலும் சுவாரஸ்யமான ஊடல்.
"என்ன கேஸ் தெரியுமா?'
'ஏதோ கேஸ். கார்ல போறப்ப சொல்லு போதும்' என்று படுக்கையில் சாய்ந்த கணேஷை வஸந்த் வினோதமாகப் பார்த்தான். 'என்ன பாஸ்? ஏதாவது அஜீரணமா இல்லை காதலா?'
கணேஷ் பதில் சொல்லாமல் நிக் கார்ட்டர் புத்தகம் ஒன்றை எடுத்து வைத்துக்கொண்டான். வஸந்த் கவலைப்பட்டான். கணேஷ் நிக் கார்ட்டர் படிப்பதாவது! காஸ்ட்டனேடா படித்துக் கொண்டிருந்த ஆள்! அறையைப் பெருக்க வந்த பெண் 'கொஞ்சம் ஒதுங்கய்யா' என்றாள்.
'நீ என்ன புதுசா?'
'எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லைய்யா.'
'அப்படியா? உங்கம்மாவுக்குப் பதிலா வந்தியா? பெருக்கு பெருக்கு! நல்லாக் குனிஞ்சு பெருக்கு!'
'வஸந்த்' என்று கணேஷ் புத்தகத்திலிருந்து நிமிராமல் அதட்டினான்.
'என்ன பாஸ்? குப்பை ஜாஸ்தியாயிருச்சு.'
'கல்யாண்ஜியோட கவிதை தெரியுமா?'
'சேச்சே! என்ன பாஸ் இது, ஏதோ குழந்தை... ஏ குட்டி, உனக்கு என்ன வயசு?'
'தெரியாதுங்க?'
'உக்காந்திக்கினியா? இல்லையா?'
'என்னங்க?'
கணேஷ் கோபத்துடன், 'இதப் பாரும்மா. இந்த அய்யாகூட பேசாதே. உள்ளே போய் துணியெல்லாம் தோயி. போ. நாங்க எல்லாரும் போனப்புறம் வேலைக்காரன் இருப்பான், அப்ப வந்து பெருக்கு. போதும்.'
அவள் உள்ளே செல்ல, 'பாஸ் நீங்க பண்றது அநியாயம். பாரதி நூற்றாண்டு விழாவில்...'
'ஏய்! உன் மனசுக்குள்ள இருக்கிறது எனக்குத் தெரியாதா என்ன?'
'இந்தப் பெண்ணுக்கு இன்னிக்கெல்லாம் இருந்தா...'
'வஸந்த்! மேலே மேலே பேசி எரிச்சலைக் கிளப்பாதே.'
'என்னமோ பாஸ்! இப்பல்லாம் நான் எது செஞ்சாலும் எரிஞ்சு விழறீங்க. ஒவ்வொரு சமயத்தில் உங்ககிட்ட இருந்து ரிஸைன் பண்ணிடலாம்னு தோணுது.'
‘பண்ணிடேன்! யார் வேண்டாம்னாங்க? இப்ப என்ன, என்னை பயமுறுத்தறியா?'
'பாஸ்.'
'நீ இல்லாட்டா என்னால தனியா சமாளிக்க முடியாதுன்னு அபிப்பிராயமா?'
'இல்லை பாஸ். என்னைப்போல அற்பப் பதர்கள் மெட்ராஸ்ல தடுக்கி விழுந்தாக் கிடைப்பாங்க நிச்சயம் தெரியும் எனக்கு. இருந்தாலும் இந்த மாதிரிப் பேசி என் மனத்தைப் புண்படுத்தறீங்க. நெஞ்சில புதுசா சாணை தீட்டின வேலாப் பார்த்து நுழைக்கிறீங்க. பரவாயில்லை!'
"சும்மா சும்மா இப்படி பயம் காட்டாதே... என்னால தனியா சமாளிக்க முடியும்"
'அதான் சொல்லிட்டிங்களே!'
'அதான் சொல்லிட்டிங்களே!'
'போறதா இருந்தாப் போய்க்க.'
வஸந்த் மிகச்சில சந்தர்ப்பங்களில் மட்டும்தான் முகத்தில் வருத்தம் தெரிவிப்பான். அவனைக் கோபப்படுத்துவது மிகவும் கஷ்டம். அதைவிட அவன் கண்களில் கண்ணீர் வரவழைப்பது.
இப்போது அவன் விழியோரத்தில் கண்ணீர் லேசாகத் தெரிந்தது.
'சரி பாஸ்! என்னைக் கண்டா திடீர்னு உங்களுக்குப் பிடிக்கல்லை. நான் கொஞ்ச நாள் விலகிக்கிறேன். என்ன?'
'சரி'
பிற்பகல் கோர்ட்டில் இருவரும் சரியாகப் பேசிக்கொள்ளவில்லை. சண்டை போட்டுக்கொண்ட புருஷன் பெண்டாட்டி போல இருந்தார்கள். கணேஷ் ஒரு லா பாயிண்ட்டுக்காகத் தயங்கும்போது, உடனே அந்தப் பக்கத்தைக் குறித்துவைத்து வஸந்த் மௌனமாகக் காட்டுவான். பேச்சுவார்த்தை கிடையாது. காண்டீனில் இருவரும் தனித்தனி மேசையில் சாப்பிட்டார்கள். கணேஷ் அவனிடம் சொல்லாமல் கார் எடுத்துக்கொண்டுபோய் அரை மணி கழித்து, ஒரு ஆர்க்கிடெக்ட்டுடன் திரும்பிவந்து ஆபீஸ் கட்டடத்தை மாற்றி அமைப்பதைப் பற்றி விசாரித்தான். வஸந்த் நடுவே ஏதாவது பேச முற்பட்டாலும் இருவரும் கவனித்ததாகத் தோன்றவில்லை. இதைவிட, சாயங்காலம் கோர்ட்டு முடிந்ததும் நேராக காரில் பாய்ந்து கணேஷ் ஆபீசுக்குத் திரும்பிவந்துவிட்டது வஸந்துக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
'என்னடா மயிரு வேலை! இந்தாளை விட்டா எனக்கு வேற வக்கீல் கிடைக்கமாட்டானா? இல்லை, என்னாலதான் தனியாப் போய் பிழைக்க முடியாதா!'
சைனா பஜாரைக் குறுக்கிடும்போது பிளாட்பாரத்தில் ஒருத்தன் ஷூ லேஸ், கைக்குட்டை, சேஃப்டி பின், கொண்டை ஊசி என்று சாமான்களை, ஒரு குடையைக் கவிழ்த்துப்போட்டு விற்றுக்கொண்டிருந்தான். ஷு லேஸ் விற்று சம்பாதிக்க முடியாதா! 'ஏன்யா உனக்கு ஒரு நாளைக்கு நிகரமா எத்தனை லாபம் கிடைக்கும்?'
'இன்னா லாபம் கெடிச்சா உனக்கென்னய்யா? நீ வாங்குறியா, இல்லைல்ல? பேசாம கம்னு பார்த்துக்கினே போ!'
சே! கேவலம் ஒரு பிளாட்பாரம் வியாபாரிகூட நம்மை மதிக்க மாட்டேங்கறான். கணேஷ் எங்க மதிக்கப் போறார்? ஆச்சரியமில்லை! இப்ப என்ன செய்யலாம். திரும்பி அந்த அறைக்குப் போனால் மறுபடி உறவு முறிவின் சின்னங்கள். வேறு எங்கே போகிறது?
*
'வாங்க! டேய், அய்யாவுக்கு தடுக்குப் போடுரா! என்ன? பாத்து நாளாச்சு. வேறே எங்கேயாவது போறீங்களா? இல்லை பழக்கம் போயிருச்சா?'
'எனக்கு எப்பவும் பழக்கமில்லைங்க. எப்பவாவது ஒரு முறைதான் வருவேன்... ரொம்ப ஸ்ட்ராங்காப் போடாதீங்க.'
வில்ஸ் ஃபில்டர் சிகரெட்டின் தூள்கள் நீக்கப்பட்டு, அதற்கு பதில் கரும் பச்சையில் வேறு ஏதோ கெடித்துக் கொடுக்கப்பட, வஸந்த் பற்றவைத்தான். பாயில் உட்கார்ந்தான். பக்கத்தில் ஒருத்தன் அரைகுறையாகப் படுத்திருந்தான். எதிரே சாவி கொடுக்கும் கிராமஃபோன் இருந்தது. அதில் ஒருத்தன் இசைத்தட்டைத் துடைத்து புதுசாக ஊசி போட்டு, கரக்கென்று நிரடிப் பார்த்துவிட்டு, சவுண்ட் பாக்ஸை அமைத்து, ஸ்ஸ்ஸ் என்று ஆரம்பித்து பாட்டுப் போட, வஸந்த் முதல் இழுப்பில் தரையிலிருந்து சுத்தமாக ஹடயோகிபோல உயர மிதந்தான்.
ப்ரேமையில் யாவும் மறந்தோமே! ஜீவனம் உன்தன்பே!
'சுப்பலட்சமி, ஜீ என் பாலசுப்ரமணியம். செத்துட்டாரு அவரு.'
என்னை மறந்தேன் மதன மோகனா நானுன்னை மறவேன்! நானுன்னை மறவேன்!
உம்மை நான் பிரியேன்!
உம்மை நான் பிரியேன்!
திரும்பத் திரும்ப மறவேன் பிரியேன் மறவேன் பிரியேன் என்று ஒரு வாரம் கேட்டுக்கொண்டிருந்தது. வஸந்துக்குள் நிற ரகளைகள் தோன்றின. பெரிசாக ஒரு பூ பிறந்து இன்னும் இன்னும் பெரிசாக விரிந்தது. வரிசையாக க்யூவில் நின்று எல்லோரும் நன்றி மறந்தார்கள்.
'பிரதர்! திருவள்ளுவர் என்ன சொன்னார்?'
பக்கத்தில் உட்கார்ந்திருந்தவன் ரத்த நிறக் கண்களால் அவனை ஏறிட்டுப் பார்த்து, தன் சொந்த நரகத்தைத் தொடர்ந்தான்.
'திருவள்ளுவர் பெரிய ஆளு' என்றான் ஒருத்தன்.
‘மைலாப்பூர்ல சிலை இருக்கு.'
'என்னன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற கணேஷுக்கு'
'உய்வுன்னா என்ன வாத்தியாரே?'
'உய்' என்று ஒருவன் விஸிலடித்துக் காட்டினான்.
வஸந்த் நின்று பார்த்தான். உலகம் சாய்ந்தது.
'என்னங்க எழுந்திட்டீங்க, போதுமா?'
'நா... நான் வந்தது வேற விசயங்க. நன்றி பத்தி பேசறதுக்கு வந்தேன். ஒருத்தரும் கவனிக்கலை' என்று வஸந்த் சொல்லி முடிப்பதற்குள் அரைமணி ஆயிற்று. தடுமாறி, படிகளில் சரிந்து தெருவுக்கு வந்தான்.
தண்ணீருக்குள் தெரிந்ததுபோல் சின்னக் கால்களுடன் பெரிய தலைக்காரர்கள் நடந்துகொண்டிருக்க வஸந்த், பஸ்ஸை நோக்கி மிதந்தான். வெளியே பேசும்போது சரியாகத்தான் டிக்கெட் கேட்டான். உள்ளுக்குள்தான் ரகளையாக இருந்தது. இழுத்தது போதாது. இருந்தும், உள்ளுக்குள் கோபம் ஒன்று அவனை உந்தித் தள்ளியது. நேராகப் போய் ராஜி ராஜி அது என்னது நாமா... ராஜிநாமா..."
லிங்கிச்செட்டி, கொண்டிச்செட்டி தெருவை எல்லாம் கடந்து சந்துக்கு வந்தபோது புதிதாக ஒரு கார் கணேஷின் காருக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தது.
யார் இது புதுசாக? வஸந்த் தன் ராஜிநாமாக் கடிதத்தை மனசுக்குள் எழுதிக்கொண்டே நுழைந்தபோது உள்ளே கணேஷ் சோபாவின்மேல் படுத்திருந்தான். அவன் கரத்தில் ஒரு ரத்த அழுத்தக் கருவி சுற்றியிருக்க, டாக்டர் சி. வெங்கட்ராமன் அவனுடன் லேசாகப் பேசிக்கொண்டிருந்தார்.
‘டயாஸ்டாலிக் தொண்ணூத்தி மூணு இருக்கு. என்ன பண்ணித்து உங்களுக்கு?'
'ஒரு செகண்ட் அல்லது ஒரு பத்து பதினைஞ்சு செகண்ட் ப்ளாக் அவுட்!'
'எப்ப? படுத்திட்டிருந்து எழுந்தப்பவா?'
'இல்லை. படிச்சுக்கிட்டு இருந்தபோது.'
'லைட்டு கம்மியா இருந்ததா?'
‘இல்லையே! இந்த லைட்டுதான்.'
'வேர்த்து கீர்த்து விட்டுதா?'
'இல்லை டாக்டர். கொஞ்சம் ஃபெடிக்குனுதான் நினைக்கிறேன். ஓவர் ஒர்க்கா இருக்கலாம். ஏய் வஸந்த்! எங்க போய்ட்டான்?'
வஸந்த் மவுனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.
'என்ன பாஸ் உங்களுக்கு?' என்றான்.
'பத்து பதினஞ்சு செகண்டு மயக்கம் மாதிரி வந்துருச்சு. பையன் பார்த்துட்டு டாக்டருக்கு போன் பண்ணிட்டான்.
வஸந்துக்கு அவனுக்குள் இருந்த மயக்க உணர்ச்சி அத்தனையும் விலகிப் போய்விட்டது. 'என்னது?' என்று அருகே சென்று கணேஷை நெற்றியில் தொட்டுப் பார்த்தான். இதற்குள் டாக்டர் வெங்கட்ராமன், 'இதப் பாருங்க. இந்த டெஸ்ட்டெல்லாம் நாளைக்கு எடுக்கணும். ஜேஜே பாலிகிளினிக்குல போனா எல்லா வசதிகளும் அங்கேயே இருக்கு. ஒரே அடியாப் பார்த்துரலாம்' என்றார்.
'என்ன டாக்டர் இவருக்கு?'
'சொல்ல முடியாது. எல்லா டெஸ்ட்டும் எடுத்தப்புறம்தான் சொல்ல முடியும். நாளைக்கு சாயங்காலம் ரிப்போர்ட்டோட வாங்க. இந்த மாத்திரையைப் படுக்கப் போறப்ப ஒண்ணு போட்டுக்கங்க. ராத்திரி சரியாத் தூங்கறீங்களோ?'
'இல்லை டாக்டர், சில நாள் எழுந்தர்றேன்.'
'உங்க ஃபேமிலில டயாபடிஸ் உண்டா?'
'தெரியாது டாக்டர்.'
'எதுக்கும் நாளைக்குச் சொல்றேன். ஒரு எஸ்.பி.எஸ் கொலஸ்ட்ரால் ஆல்புமின் ஒரு இஸிஜி. பொதுவா ஒரு தரோ செக்கப். கணேஷ்! கேஸ் கோர்ட்டுன்னு ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் செலவழிக்கிறீங்க?'
'பதினெட்டு மணி நேரம் டாக்டர்' என்றான் வஸந்த்,
'முதல்ல அதைக் குறைங்க. ஒய் நாட் டேக் எ ஹாலிடே ஸம்வேர்?
எல்லாத்தையும் ஒரு வாரம் பத்து நாள் மறந்துட்டு எங்கேயாவது தனியாப் போய் இருந்துட்டு ப்ரெஷ்ஷா வாங்களேன்.'
'ஒரு வாரம் பத்து நாளா?' என்று அதிர்ந்தான் கணேஷ்.
'ஒரு வாரம் பத்து நாளைக்குள்ள மேலும் சென்னை நகரத்தில் எத்தனை குற்றம் நிகழப்போறது! எல்லாத்தையும் இவர் வக்காலத்து வாங்கி ஜெயிக்கவேண்டாமா?'
'வஸந்த், நீங்கதான் சொல்லிப் பாருங்களேன். ஐ திங் ஹி நீட்ஸ் ஸம் ரெஸ்ட்'
'நானா? நான் எங்க சொல்றது? என்னை வேலையை விட்டுப் போடான்னு சொல்லியிருக்கார்.'
'அதனாலதான் என்னமோ புகையெல்லாம் புடிச்சிட்டு கலக்கமா வந்திருக்கீங்க!'
'சேச்சே! நான் வந்து லைப்ரரிக்குப் போய்ட்டுவரேன் டாக்டர்!'
'இதப் பாருங்க, டாக்டர்கிட்ட நீங்க பொய் சொல்லாதீங்க. நீங்க நடக்கிறதே சரியில்லை. கண்ணில பங்கி தெரியுது. இதெல்லாம் எடுத்துக்கிட்டு உங்க உடம்பையும் ஸ்பாயில் பண்ணிக்காதீங்க. பேசாம ரெண்டு பேரும் எங்கயாவது மலைப்பிரதேசமா போய்ட்டு வாங்க. கோர்ட்டு கேஸ் எல்லாத்தையும் மறந்துட்டு வாங்க. எதுக்கும் நாளைக்கு இந்த டெஸ்ட் எல்லாம் எடுக்கறது முக்கியம். ராத்திரி ஏதாவது அன்ஈஸியா இருந்தா எனக்கு போன் பண்ணத் தயங்காதீங்க. வரட்டுமா?'
டாக்டர் போனதும் கணேஷ் வஸந்தைப் பார்த்து, 'என்னடா? ராஜிநாமா கொடுக்கப்போறியா?'
'ஆமா பாஸ். அப்படித்தான் ஒரு யோசனை!'
'பல்லைன்னா பல்லைப் பேத்துருவேன். முட்டியை உடைச்சுருவேன். கை விரல் அத்தனையும் ஒடிச்சு கைல கொடுத்துருவேன். போயிடுவியோ? உன் மேல் கேஸ் போடுவேன்!'
வஸந்த் இப்போது கண்ணீருடன் சிரித்தான்.
'என்னடா எழுதியிருக்கான் டாக்டர்?"
'எட்டு டெஸ்ட்'
'வேற வேலையில்லை. நாளைக்கு சரியாப் போயிடும். ஞாயிற்றுக்கிழமை வேணா பார்க்கலாம். நாளைக்கு நிச்சயம் போக முடியாது. ஜெயம்மா ரேப் கேஸ் வரது.'
'பாஸ், டாக்டர் சொன்னமாதிரி கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட் தேவைதான் உங்களுக்கு.'
'நான்சென்ஸ்! எனக்கு தனியாப் போய் மலைல கிலைல உக்காந்தா பைத்தியம் புடிச்சுரும். சொல்லுடா, எவிடன்ஸ் ஆக்ட், செக்ஷன் எய்ட்டின்படி ஜெயம்மா அவம்மாகிட்ட சொன்னதை எவிடன்ஸா ட்ரீட் பண்ண முடியுமா?'
'பாஸ், ஜெயம்மா எக்கேடு கெட்டுப்போகட்டும் பாஸ்! நான் சொல்றதைக் கேளுங்க. ஒருநாளைக்கு இந்த நாடு பூராவும் பத்து நூறு ரேப் நடக்குது.'
'இப்ப என்னடா சொல்றே?'
'நான் சொன்னதுக்கு ஒப்புக்கிட்டாதான் மேல வண்டி ஓடும்.'
'என்ன? சொல்லித் தொலை.'
'நாளைக்கு ஹியரிங் ஆன கையோடு ஒரு ரீஸஸ் வரது. கொஞ்சம் கிஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு பதினைந்து நாள் எங்கயாவது காணாமப் போயிரலாம். அதுக்கு சம்மதம்னாதான் இப்ப ஜெயம்மா.'
'பார்க்கலாம். ஸ்டாச்சுட்டைச் சொல்லு முதல்ல.'
அப்புறம் இருவரும் கேஸைப்பற்றி பேசுகிறார்கள். நடுவே கணேஷ் வஸந்த்திடம் அவன் எங்கு சென்று வந்தான் என்று விசாரிக்கிறான்.
'ரெண்டுலயும் பாதிப் பாதி உண்மை இருக்கு, இவன் பொண்ணை விரும்பியிருப்பான், அம்மா இவனை விரும்பியிருப்பா!'
'சரியான கோஷ்டி கானம்! இப்ப ஜட்ஜ் நரசிம்மலுகிட்ட ரேப்பு கீப்பு எல்லாத்தையும் விட்டுட்டு எவிடன்ஸ் ஆக்ட்படி அட்மிஸிபிளா இல்லையான்னு வாதாடிக் குழப்பப்போறோம். சட்டங்கறது எத்தனை வினோதமா இருக்கு பாருங்க. ரேப்பை எப்படி அஸெப்ட்டிக்கா இங்கிலீஷ் வார்த்தைகளில் சொல்ல முடியறது பாருங்க.'
வஸந்த் சிரித்தான்.
'அதிருக்கட்டும் வஸந்த்! நீ சந்துக்குப் போயிருந்தியா?'
'ஆமா பாஸ்' என்று வஸந்த் மெதுவாகச் சொன்னான்.
'வெக்கமா இல்லை?"
'இல்லை!"
'எதுக்காகப் போனே?'
*தெரிஞ்சுண்டே கேட்டிங்க பாஸ். அது எனக்குப் பழக்கம் இல்லை. எப்பனாச்சியும் கொஞ்சம் மனசு நேரா இல்லைன்னா போய்வருவேன். அதும் இன்னிக்கு ஜாஸ்தி இல்லை. நீங்க டிரை பண்ணிப் பாருங்க!"
'பார்த்தாச்சு! ஒரு முறை போதும் எனக்கு.'
'எனக்கும்தான்.'
'அதான் அப்பப்ப ஒதுங்கறியாக்கும். உருப்பட மாட்டே. பாழாப் போயிருவே! ஆளை உருக்கிடம். அதுக்குப் பேசாம ஸ்காட்ச் ஒரு வாய் குடி!'
'அது வேற இது வேற பாஸ்! ஸ்காட்ச்ங்கறது அந்த அம்மா மாதிரி. இது அந்தப் பொண்ணு மாதிரி!'
மறுநாள் கேஸ் எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஜெயம்மாவின் தாய் ஒரு ஓரத்தில் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தான். 'என்ன பாஸ், இந்தம்மாவைப் பார்த்தா எப்படித் தோணுது?
'வஸந்த், எனக்கு இதுல ஏதும் அனுபவம் கிடையாது. நீதான் கூடவே இருந்தவன் மாதிரிச் சொல்லுவியே. உன் கணிப்பு என்ன?"
'பெண்களைப் பொருத்தவரையில என்னால கணிக்கவே முடியலை பாஸ். கண்ல பெட்ரூம் தெரியும். பதிவிரதையா இருப்பா. கண்ணகி மாதிரி இருப்பா. உக்காருன்னா படுத்துருவா. ம்ஹூம், நான் அம்பேல்!'
'இவளை என்ன செய்யலாங்கறே? அந்த விவகாரத்தைக் கொண்டுவரலாமா, வேண்டாமா?'
'போகிறபோக்கில பார்க்கலாம் பாஸ்! ட்ரெண்டு எப்படிப் போவுதுன்னு
பார்க்கலாம்.................
========================================================================================
நேர்காணல்
எதிரிகளின் பாஷையிலே
நீ
பேச வேண்டும் என்பதில்லை
உன் பாஷையில் அவர்களை
பேச வைப்பதுதான்
உன் வெற்றி.
பாஸும் பாஷையும்
காதில் விழுவது கேள்வியா
அல்லது
கருத்தா என்று
தெரியாத நிலையில்
பதில் எதுவும்
சொல்ல முடிவதில்லை
சமயங்களில்
அதற்கான கண்டனங்களை
உடனடியாக
பெறும் போது தான்
நம்மிடம் பதில்
எதிர்பார்த்து இருக்கிறார்கள்
என்று தெரிகிறது
==================================================================================
கல்கி 1957 ம் வருட தீபாவளி மலரிலிருந்து.. படிக்க முடியாததற்கு நான் பொறுப்பல்ல.. படிக்க முடிந்ததை மட்டும் படிக்கும்படி வேண்டுகிறேன்!
இரண்டு சினிமா விளம்பரங்கள்...
புத்தகத்தில் என்னென்ன இருந்தது.. படிப்பது மக்களே உங்கள் சமர்த்து!
கதைக்கு அந்தக்கால ஓவியம் . அந்த வருடங்களில் மக்கள் எந்த ஸ்டைலில் இருந்தனர் என்றும் ஓவியங்களில் பார்க்கலாம்.
வெடி வெடிக்க முடிகிறதா? ஸாரி...
என்ன அர்த்தம் என்று புரியவில்லை. வேடபையை காக்கா சாப்பிட்டு விட்டதா?

கிராமியக் காட்சிகளாம்...
சில ஸ்வாமி படங்களை ஓவியர் வண்ணத்தில் மாய்ந்து மாய்ந்து வரைந்திருக்கிறார்.




































சோளிங்கர் கோவிலா அது!! எவ்வளவு மாற்றங்கள்!
பதிலளிநீக்குபல பல பல வருஷங்கள் ஆச்சு. பார்த்து
கீதா
வாங்க கீதா.. சோளிங்கரேதான்
நீக்கு'இதோ கார் ஏறி இறைவனைப் பார்த்து விடப்போகிறோம்' என்கிற துள்ளல் எப்படி இருந்தது என்றால்... //
பதிலளிநீக்குஹாஹாஹஹாஅ.....சிரித்துவிட்டேன் ஸ்ரீராம்....
பக்திப் பரவசத்தில் என்னவெல்லாம் மனசுல வருது பாருங்க!!!
கீதா
பக்திப்பரவசத்தைப் பார்த்து நானும் திளைத்துவிட்டேன்!!!
நீக்குகீதா
ஆஹாஹா... ரசித்ததற்கு நன்றி கீதா.
நீக்குகீழே கமெண்ட்ஸ் பார்த்தால் இரண்டாவது காணொளி நீங்கள் பார்க்கவில்லை போலிருக்கே.. அந்த க்ளெர்க் மறைமுகமாக என்ன சொல்கிறார் என்று...
நீக்குஓ இது வி ஐ பி வழியா? இல்லைனா எல்லா மக்களுக்குமே இதே சட்டமா? கோவிலுக்கு? அறநிலையத்துறை அது இதுன்னு சொல்றீங்களே!!
பதிலளிநீக்குகீதா
அறநிலையத்துறை நம்பர் ஒன்று கொடுப்பார்கள். அதற்கு மெசேஜாக பெயர், மொபைல் நம்பர் விவரங்கள் வாட்ஸாப்பில் அனுப்ப வேண்டும். அங்கிருந்து நேரம் சொல்லி பதில் வரும். அழைப்பார்கள்.
நீக்குஅது சரி வி ஐ பி என்ட்ரியே இப்படியா? அப்படினாக்க எங்கிருந்து 'ம்' என்று வர வேண்டும்? கண்டிப்பா நரசிம்மர் இல்லை!!!!!
பதிலளிநீக்குகீதா
புரியவில்லை கீதா... ம் எங்கே சேர்த்திருக்கிறேன்?
நீக்குமாற்றி மாற்றி ஃபோன் செய்தும் பிரயோஜனமில்லை. நானும் மறுபடி அவரிடம் போய் கெஞ்சியோ, சாதாரணமாகவோ கேட்கவில்லை. ஒருவகையில் ரசிக்கத்தொடங்கி விட்டேன்! திரும்பிப் போய்விடலாம் என்றால் பாஸ் ஒத்துக்கொள்ளவில்லை. திருப்பதி ஞாபகம் வந்திருக்கும். //
பதிலளிநீக்குஹாஹாஹா நினைவுக்கு வந்ததே....ஞாபகம் வருதே ஞாபகம் வருதே!!!!
கீதா
அதேதான்.. என் மனதிலும் குறை இருந்தது.
நீக்குமிரட்டலுக்கும், சிபார்சுகளுக்கும் பணியாத அவரை அதனாலேயே எனக்குப் பிடித்தும் போனது. //
பதிலளிநீக்குகறார் பேர்வழி....சூப்பர். அது சரி...பெயர் வர வேண்டும் என்பது எங்கிருந்து?
இது ஏதோ நான் நிற்க வேண்டும் என்று இருக்கிறது என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். என் மனதிலும் திருப்பதி இருந்தது.//
ரைட்டோ!!
கீதா
A C இடமிருந்து வரவேண்டும் என்று சொல்லி சிலபேர் அவரிடமிருந்து நமபறும் வாங்கி கொண்டார்கள். அவர் விவரமாக வேறொரு காரியம் செய்தார்.
நீக்குதெரிந்து செய்தாரோ, தெரியாமல் செய்தாரோ, நான் பார்த்து மூன்று பேருக்கு நம்பர் கொடுக்கும்போது கடைசி இரண்டு எண்களை மாற்றிக் கொடுத்து அல்லாட விட்டு அவர்கள் திரும்பி வந்து கேட்டதும், 'அப்படியா கொடுத்தேன், இருங்கள் பார்க்கிறேன்' என்று சொல்லி 'ஸாரி.. இதோ சரியான நம்பர்' என்று கொடுத்தார்!
அடக் கடவுளே! சிபாரிசிலும் இத்தனை சங்கடங்களா.....
பதிலளிநீக்குஇதுக்கு நேரடியாவே போயிருக்கலாமோ!?
கீதா
அப்படியும் தோன்றியது. ஆனால் அப்புறம் லேட்டாக தோன்றியது.
நீக்குஆனால் கூட்டமில்லாத நாள் என்று சொல்லப்பட்ட அந்த வெள்ளிக்கிழமையிலேயே அங்கு நின்றிருந்த ஒழுங்கற்ற கூட்டத்தைப் பார்த்தால் தலை சுற்றியது.
மலைப் படிகளில் ஏறிச் சென்றிருக்க முடியுமோ? நிறைய கூட்டமோ?
பதிலளிநீக்குதிரும்ப வரும்போது எவ்வளவு கஷ்டப்பட்டீங்களோ
வாங்க நெல்லை... மலைப்படிகளில் ஏறிச்செல்ல முழங்கால் அனுமதிக்காது. அதனால் ரோப் கார் என்றதும் தரிசனம் செய்து வரலாமே என்று தோன்றியது.
நீக்குகணேஷ் வசந்த் பகுதி நல்லா இருந்தது.
பதிலளிநீக்குஎப்பவுமே... அதனால்தான் பகிர்ந்தேன். நீளமாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருக்கும்.
நீக்குஓடிடி விமர்சனங்கள் நன்று. நான் சமீபத்தில் நெட்ஃப்ளிக்சில் தி ஈக்வலைசர் மூன்று பகுதிகளையும் பார்த்தேன்.
பதிலளிநீக்குநான் அந்தப் படத்தின் மூன்று பாகங்களையும் வெகு முன்பே பார்த்து விட்டேன். ரசித்தேன். ஹீரோ டைம் சொல்லி எதிரியை அடிப்பது சுவாரஸ்யம்.
நீக்குஸ்கான் பண்ணிய பகுதிகளைப் படிக்கக் கஷ்டம். கணிணியில் பிறகு பார்க்கிறேன்.
பதிலளிநீக்குபரவாயில்லை விடுங்க.. அடுத்த முறை வேறு பகுதி வரும்! படிக்கிறா மாதிரி இருக்கும்.
நீக்குபோக வர டிக்கெட் கொடுத்துவிடலமே ஏன் இப்படி?
பதிலளிநீக்குகீதா
பதிவிலேயே சொல்லி இருக்கேனே... மற்ற மாதங்களில் அல்லது முன்பு அப்படியோ என்னவோ.. இப்போது ஒருவழிதான். ஏன் என்று மேலே சென்று திரும்பி வரும்போது நாமே உணர்வோம்.
நீக்குமணிக்கதவம் ஒரு வழியாகத் தாள் திறந்து!
பதிலளிநீக்குமாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா!
உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி,
கோப்பு உடைய சீரிய சிங்காசனத்து இருந்து,
யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!!
நினைவுக்கு வந்தது
கீதா
மணிக்கதவம் என்றால் எனக்கு கல்யாண்ஜி என்று நினைக்கிறேன்.. அந்தக் கவிதை ஒன்று அரைகுறையாக நினைவுக்கு வரும். அந்தக் கவிதை கூட எனக்கு எப்படித் தெரியும் என்றால் வஸந்த் சொல்லிதான்!!
நீக்குஸ்ரீராம், நீங்கள் அவரைப் பாராட்டியதும், பாராட்டிய விதமும் சூப்பர் ரொம்ப நல்ல விஷயம் அதுக்கே உங்களுக்குப் பாராட்டுகள். ஹைஃபைவ்! நானும் அவ்வழியே!
பதிலளிநீக்குகீதா
பரவாயில்லை நிறைய விஷயங்களில் ஒத்துப் போகிறோம்!
நீக்குபாருங்க, அடுத்த பாரா...பொறுத்தார் பூமி ஆள்வார்!!!
பதிலளிநீக்குரோப் கார் படங்கள் எல்லாமே சூப்பரா அழகா பண்ணிருக்காங்க. பளிச்சுனு இருக்கின்றன.
கூடவே இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
கீதா
படங்கள் சரி.. காணொளி ஏற்கனவே பார்த்திருப்பதால் ஸ்கிப் செய்து விட்டீர்களோ...!!
நீக்குபடங்கள் ரெண்டுமே பார்க்கத் தூண்டுது. ஆனால் ஆனால்.....
பதிலளிநீக்குகீதா
ஹா.... ஹா.. ஹா... புரியுது.
நீக்குகணேஷ் வசந் கதாபாத்திரங்கள் ரொம்ப ரசிக்கக் கூடிய ஒன்று. சில கதைகளில் ரெண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு வரும்...வசந்த் தற்காலிகமாகக் கோபித்துக் கொண்டு அதாவது சில நிமிடங்கள் மணி நேரங்கள் ...அப்புறம் சேர்ந்து என்று இதிய வாசிக்கிறேன்...அப்பால வரேன்
பதிலளிநீக்குகீதா
ஓகே... ஓகே.. மெதுவா வாங்க கீதா...
நீக்குஅட! கனு தேசாய்க்கு
பதிலளிநீக்குரெட்டை சான்ஸா
என்று நினைக்கும் பொழுதே
எனக்கும் தான் என்று
புன்னகைத்தார் வினு.
ஹா.. ஹா.. ஹா.. அந்தக் கால ஓவியத் திலகங்கள்... வாங்க ஜீவி ஸார்...
நீக்குஅவர்கள் வரைந்த ஓவியங்கள் கவிதை மாதிரின்னு சொல்லாம சொல்றீங்களோ!
நீக்கு