8.12.25

"திங்க"க்கிழமை  : தினைஅரிசி புட்டு - கீதா ரெங்கன் ரெஸிப்பி 

தினை அரிசி புட்டு

நம்ம JKC அண்ணா புட்டு செய்முறை கொடுத்திருந்தார் இங்கு. 

இதுவும் அதே செய்முறைதான், ஆனால் தினை அரிசியில் கேரளத்துப் புட்டு செய்முறை.

பொதுவாக, தேனும் தினைமாவும் கலந்து முருகனுக்குப் படைப்பதுண்டு. தினை மாவில் இனிப்புப் புட்டு, லட்டு, இனிப்புக் கொழுக்கட்டை எல்லாம் செய்வதுண்டு.

தினையை உடைத்து உப்புக் கொழுக்கட்டை செய்யலாம். இட்லி தோசை, பொங்கல் செய்வதுண்டு. அப்படி தினை மாவில் புட்டும் செய்யலாம்.

அளவு என்று ரொம்பச் சொல்ல முடியாது.

தினையை 1-2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை நன்றாக வடித்துவிட வேண்டும். நான் அதே சல்லடையில் அப்படியே 1 மணி நேரம் போல வைத்துவிடுவேன். தண்ணீர் நன்றாக வடிந்ததும் மிக்ஸியில் சிரோட்டி ரவை பக்குவத்திற்குப் பொடித்து எடுத்து அதை வாணலியை அடுப்பில் ஏற்றி அதில் நன்றாக வறுக்க வேண்டும். நல்ல வாசனை வரும். அப்போது அடுப்பை அணைத்துவிட்டு நன்றாக ஆறவிட்டுவிடலாம்.

பின்னர் அதை ஒரு அகலமான பத்திரத்தில் இல்லைனா அதே வாணலியில், உப்பு கலந்து தண்ணீரைத் தெளித்துத் தெளித்து விரவ வேண்டும். ஒரு கப் மாவிற்கு 1/4 கப்பிற்குள்தான் தண்ணீர் தேவைப்படும். தினையைப் பொருத்து. தினை அரிசி மாவு போலில்லாமல் தண்ணீர் கொஞ்சம் கூடுதல் இழுத்துக் கொள்ளும். சிறுதானியங்கள் எல்லாமே அப்படித்தான். பிடித்தால் பிடிபட வேண்டும் உதிர்த்தால் உதிர வேண்டும். அப்படியே கட்டி இல்லாமல் விரவி 1/2 மணி நேரம் வைத்துவிடலாம்.

ஒரு கப் மாவிற்கு 3/4 - 1 கப் தேங்காய்த் துருவல் தேவைப்படும் இதெல்லாம் அவரவர் விருப்பம்.

புட்டுக் குழல் பானையில் தண்ணீர் கொதிக்க வைத்து சூடாகும் நேரத்தில், குழலில் அடியில் சின்ன ஓட்டைகள் உள்ள சில்லைப் போட்டு, முதலில் கொஞ்சம் தேங்காய், அப்புறம் கொஞ்சம் தினை மாவு அப்புறம் தேங்காய் என்று போட்டு மேலில் தேங்காய் இருப்பது போல் போட்டுவிட்டு மூடி போட்டு பானை மேல் வைத்து 20 நிமிடம் ஆவியில் விட வேண்டும்.

அவ்வளவுதான். எடுத்து குழலில் இருந்து வெளியே தள்ளி, தொட்டுக் கொள்ள ஆவியில் வேகவைத்த நேந்திரன் பழம், பப்படம் அல்லது கடலைக்கறி, பயறு என்று அவரவர் விருப்பப்படி தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். 

செய்த அன்று கடலை ஊற வைக்காததால் கடலைக்கறி இல்லை. பழத்துடன் பப்படம் தான் நல்லாருக்கும். அன்று பப்படமும் இல்லை. நான் மகனுக்குப் போட்டு வைத்திருந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் (காய வைத்து) கொஞ்சம் இருந்தது அதைப் பொரித்துக் கொண்டேன். கூடவே பழம்.

இது போன்று சிவப்பு அரிசி, சிறுதானியங்கள் எல்லாவற்றிலும் செய்வதுண்டு. 

7 கருத்துகள்:

  1. தினை அரிசி புட்டு...
    மிகச்சிறந்த இயற்கை உணவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், துரை அண்ணா.

      பெரும்பாலும் சிறுதானியங்கள் தான் நம் வீட்டில்.

      மிக்க நன்றி, அண்ணா.

      கீதா

      நீக்கு
  2. சிறப்பான செய்முறை
    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  3. ​தினைப்புட்டு இதுவரை சாப்பிட்டதில்லை. தினைமாவு கடைகளில் கிடைக்காது. சாதாரணமாக தேனும் தினைமாவும் என்று சொல்வார்கள். வறுத்த தினைமாவில் தேன் சேர்த்து உருண்டை பிடிப்பது. தினைமாவில் மாலாடு போல தினைலட்டு செய்வார்கள். கொஞ்சம் மெனக்கடல் உண்டு தான். அடுத்தமுறை செய்யும்போது புட்டுமாவில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து பிசறி அவித்துப் பாருங்கள்.

    Jayakumar

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!