6.12.25

டெங்கு காய்ச்சலை தடுக்க ஒற்றை டோஸ் தடுப்பூசி - மற்றும் நான் படிச்ச கதை

 

டெங்கு காய்ச்சலை தடுக்க சிங்கிள் டோஸ் தடுப்பூசி: பிரேசில் அரசு ஒப்புதல்

பிரேசிலியா: டெங்கு காய்ச்சலை தடுக்க பிரேசில் நிறுவனம் தயாரித்துள்ள ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெங்குவுக்கு எதிரான போராட்டத்தில் இந்த தடுப்பூசியானது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  கொசுக்கடியால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். முந்தைய காலங்களை விட தற்போது டெங்குக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கடந்த 2023ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து இருந்தது. உலக மக்கள் தொகையில் பாதி பேர் இந்த நோயால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. டெங்கு காய்ச்சலைதடுக்க ஜப்பானின் இரண்டு டோஸ் TAK-003தடுப்பூசியும், 3 டோஸ் போடப்படும் தடுப்பூசியும் உள்ளன.  இந்நிலையில், பிரேசிலின் பூடன்டன் நிறுவனம் ஒரு டோஸ் மட்டுமே போடப்படும் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. பூடன்டன் -டிவி என பெயரிடப்பட்டுள்ள து. 12 முதல் 59வயதுக்கு உட்பட்டோருக்கு செலுத்தப்படும் இந்த தடுப்பூசிக்கு பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.  பிரேசிலில் கடந்த 8 ஆண்டுகளாக பரிசோதனையில் இருந்த தடுப்பூசி தற்போது பயன்பாட்டுக்கு வருவது என்பது டெங்குவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  மருத்துவ பரிசோதனையில் 16 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் டெங்குவை தடுப்பதில் இந்த தடுப்பூசி 80 சதவீதம் திறன் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. டெங்குவால் பாதிக்கப்படாதவர்களுக்கு இது 74 சதவீதம் பாதுகாப்பையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு 89 சதவீதம் பாதுகாப்பையும் இந்த தடுப்பூசி வழங்கும் என பிரேசில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தடுப்பூசியானது 2- 6 வயதுள்ள குழந்தைகளுக்கு 80 சதவீத பாதுகாப்பையும், 7- 17 வயதுள்ளவர்களுக்கு78 சதவீத பாதுகாப்பையும், 59 வயதுள்ளவர்களுக்கு 90 சதவீத பாதுகாப்பையும் இந்த தடுப்பூசி வழங்கும் எனவும் அதேநேரத்தில் பக்கவிளைவாக லேசான காய்ச்சல் அல்லது தலைவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


===========================================================================================
பயின்ற அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டிக்கொடுத்த இஸ்ரோ பெண் விஞ்ஞானி

தென்காசி, கடந்த 2023-ம் ஆண்டு சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சார்பில் விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதன் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி. இவர் தனது சொந்த ஊரான தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தான் பயின்ற எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டி கொடுக்க ஏற்பாடு செய்தார். அதன்படி ‘நமக்கு 
நாமே’ திட்டத்தில் பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி வழங்கிய ரூ.8 லட்சத்துடன் சேர்த்து தமிழக அரசு சார்பில் ரூ.24 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது.  விழாவில் பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி, மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டித்தை திறந்து வைத்தனர்.  பின்னர் நிகர் ஷாஜி கூறியதாவது:- நான் பயின்ற பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டிக்கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இஸ்ரோவில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மதிப்புமிக்க விண்வெளி வீரர்களை பத்திரமாக விண்ணுக்கு கொண்டு சென்று, மீண்டும் அழைத்து வர பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.  ஒவ்வொரு திட்டத்தையும் வெற்றிகரமாக முடிக்க தீவிரமாக உழைத்து வருகிறோம். இஸ்ரோ மிகவும் மேம்பட்ட நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

- Thank you JKC Sir -

===========================================================================================

வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுக்கு முற்றுப்புள்ளி! ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது கமிஷன்

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் நடக்கும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் போலி வாக்காளர்கள், இரட்டை பதிவுகள், இறந்த வாக்காளர்கள் ஆகியோரை கண்டறிந்து நீக்க, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தேர்தல் கமிஷன் பயன்படுத்த உள்ளது.  வாக்காளர் பட்டியலில் போலி பதிவுகள் மற்றும் இரட்டை பதிவுகள் இடம் பெற்றிருப்பது, ஜனநாய கத்தின் அடித்தளத்தையே அசைப்பதுடன் பல குழப்பங்களையும், பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது.  வாக்காளர் பட்டியலில் போலி பெயர்கள் அதிகமாகச் சேரும்போது, உண்மையான வாக்காளரின் ஓட்டுக்கு மதிப்பு குறைகிறது.  இது, வேட்பாளரின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும். எனவே தேர்தல் கமிஷன், வாக்காளர் பட்டியலில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டு வந்துள்ளது.  போலி பதிவு இந்த ஆண்டு பீஹாரில், சட்டசபை தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதில், 60 லட்சம் போலி மற்றும் இறந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.  பீஹாரைத் தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம், சத்தீஸ்கர், கோவா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணி தீவிரமாக நடக்கிறது.  இதில், தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது.  மேற்கு வங்கத்தில் தற்போது நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தேர்தல் கமிஷன் பயன்படுத்த உள்ளது.  இதன் மூலம், ஒரே நபர் வாக்காளராகப் பல இடங்களில் பதிவு செய்திருந்தாலோ அல்லது ஒரே புகைப்படத்தை பயன்படுத்திப் பல போலி பதிவுகள் இருந்தாலோ, அந்தப் பதிவுகளை ஏ.ஐ., உதவியுடன் முகத்தை பொருத்தி பார்க்கும் தொழில்நுட்பம் அடையாளம் காண உதவும்.

இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:

புலம்பெயர்ந்த தொழி லாளர்களின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி, போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு அதிக புகார்கள் வந்துள்ளன.  அதே போல் இரண்டு இடங்களில் ஓட்டுகள் வைத்திருப்போர் அதிகரித்துள்ளதாகவும் புகார் உள்ளது.  உதவிக்காக மட்டுமே இதற்காக ஏ.ஐ., அம்சத்துடன் கூடிய முகத்தை பொருத்தி பார்க்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம்.  இருப்பினும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் உறுதி செய்த பின்னரே, ஏ.ஐ., கண்டறிந்த பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப் படும். உதவிக்காக மட்டுமே ஏ.ஐ., பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

=====================================================================================================================================================================


நான் வாசித்த கதை -  கீதா ஆர்

---------

சிறுமி கொண்டு வந்த மலர் -

விமலாதித்த மாமல்லன்

கதையின் சுட்டி


விமலாதித்த மாமமல்லன் அவருடைய வலைத்தளம் - https://www.maamallan.in/

இயற்பெயர்: சி. நரசிம்மன். மாத்வ குடும்பத்தைச் சார்ந்த கன்னட – மராத்திய தாய் தந்தையருக்கு, சென்னையில், திருவல்லிக்கேணியில் பிறந்தார். பிறப்பு: ஜூன் 19, 1960

படைப்புகள்: சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கிய விமர்சனம், கட்டுரைகள். அவரது படைப்புகள் அச்சு மற்றும் மின்னூல் வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

  • காலச்சுவடு இதழில் வெளியான 'இணையமும் இலக்கியமும்' எனும் கட்டுரை கேரள அரசின் பதினோராம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் இடம்பெற்றுள்ளது.
  • 1981ல் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் இவரின் முதல் சிறுகதையான 'வலி' வெளிவந்தது. அதே ஆண்டில் கணையாழியில் வெளியான 'இலை' மற்றும் 'பெரியவர்கள்' குறுநாவல் வழியே தமிழ் இலக்கியச் சூழலில் கவனத்திற்கு வந்தார். ஷிலிக்கான் ஷெல்ஃப் ஆர் வி அவர்கள் 'வலி' மற்றும் 'இலை'  நல்ல கதைகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
  • எஸ் ரா அவர்கள் தொகுத்திருக்கும் ==> 100 சிறந்த கதைகளில்<=== இடம்பெற்றிருக்கிறது இக்கதை. 
  • கி. விட்டல் ராவ் தொகுத்த, இந்த நூற்றாண்டுச் சிறுகதைகளிலும் இவரது 'சிறுமி கொண்டுவந்த மலர்' சிறுகதை இடம்பெற்றிருக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையின் தலைவராகப் பணியாற்றிய வீ. அரசு தொகுத்த இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூலிலும் இடம் பெற்றுள்ளது.

சிலிகான் ஷெல்ஃப் ஆர் வி அவர்களின் தளத்தில் பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் ஷெல்ஃபில் விமலாதித்தன் மாமல்லன் பெயரைப் பார்த்ததும் உடனே உருவினேன், சிலிகான் ஷெல்ஃப் ஆர் வி அவர்களின் வரிகளில் - அவர் சில கதைகளே எழுதி இருந்தாலும், அவற்றில் வெகு சிலவற்றையே நான் படித்திருந்தாலும், படித்தவற்றிலும் சில புரியவே இல்லை (சிறுமி கொண்டு வந்த மலர்) என்றாலும், அவர் குறிப்பிடப்பட வேண்டிய தமிழ் எழுத்தாளர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை - சிலிகான் ஷெல்ஃப் ஆர் வி.

ஷெல்ஃபில் அவர் கொடுத்திருந்த சுட்டி அழியாச்சுடர்கள். சென்றேன். ஆனால் அங்கு கதை நீக்கப்பட்டிருந்தது. சிறுகதைகள்.காமில் கிடைத்திட உடனே எடுத்துக் கொண்டேன். நன்றி - சிலிகான் ஷெல்ஃப் ஆர் வி மற்றும் சிறுகதைகள்.காம்.

Voracious Reader ஆர் வி அவருக்கே ((2012ல்) புரியலைனா , நமக்குப் புரியுமோ என்றுதான் வாசித்தேன். அவருக்கு இப்போது புரிந்திருக்கலாம்.

சரி, நான் என்ன புரிந்து கொண்டேன்? கதைக்குக் கீழே.

ஸ்க்ரோலிங் பிடிஎஃப் கொடுத்திருக்கிறேன். அதில் வாசிக்க முடியவில்லை என்றால் இதோ கூகுள் ட்ரைவ் சுட்டி. சிறுமி கொண்டுவந்த மலர்

கதையின் முக்கிய கதாபாத்திரங்களான ஒரு சிறுமி மற்றும் சுகன்சந்த் ஜெய்ன் மூலம் ஆசிரியர் என்ன சொல்லவருகிறார்? முடிவு எதையும் அறுதியிட்டுச் சொல்லாமல் கதையின் போக்கிலேயே சென்று வாசகர்கள் யூகித்துக் கொள்ளட்டும் என்று இயல்பாக முடிவடைகிறது. அதனால் கதை பிடித்திருந்தது. கதையில் உள்ள விஷயத்தை உள்வாங்கி எழுதுவதற்காக மூன்று முறை வாசித்தேன்!

தூக்கமில்லாமல் தாமதமாக எழும் சுகன்சந்த் ஜெய்ன், ஏதோ அமானுஷ்யம் நடந்தது போன்ற ஒரு பிரமையில் இருக்கிறார், காரணம் முந்தைய நாள் நடந்த சம்பவம்.

முந்தைய நாள்  ஒரு சிறுமி வருகிறாள். அவருக்குக் குழப்பம். வழக்கமான வாடிக்கையாளர் அல்லாமல் ஒரு சிறுமி. லாலா மிட்டாய் கடை என்று நினைத்து வந்துவிட்டாளோ என்ற சந்தேகம். அவள் வந்திருப்பது ஒரு பூ வை விற்க. பூ? ஆம்! 

பூ என்றதும் //ஜெய்ன் சிரித்திருக்க வேண்டும் ஆனால் அவரால் ஏனோ அது முடியவில்லை.// காரணம் அச்சிறுமியின் தோற்றம், முகம், வயதுக்கு மீறிய மிடுக்கு அவரை வசீகரிக்கிறது. கட்டிப் போடுகிறது.

அவள் முகத்தை எங்கோ பார்த்தது போன்று தோன்றினாலும் பிடிகிட்டவில்லை. அவள் கையை விரிக்கிறாள், தங்க ரோஜா. //ரோஜாப்பூ சொக்கத் தங்கத்தில் தெரிகிறது அவர் கண்ணிற்கு// "அவர் கண்ணிற்கு" இது இங்கு முக்கியம். கண்கட்டு வித்தையோ? என்று நம்மை எண்ண வைக்கிறது.

பரம்பரைத் தொழிலை தாத்தா, அப்பாவிடமிருந்து கற்ற நுணுக்கங்களால் கில்லாடியாக இருக்கும் சுகன்சந் ஜெயினின் ரியாக்ஷன் அந்தத் தங்க ரோஜாவைப் பார்த்ததும் - //சந்தேகத்திற்கு இடமேயில்லை. அறுபத்து மூன்று வயதிலும் கண்ணாடியில்லாமல் பார்க்கிற கண் தவறாது.//

சொற்ப நேர பிரமிப்பிலிருந்து நடைமுறைக்கு வருகிறது மனம். ஆசிரியரின் இந்த வரி அழகான வரி. //கபாலத்தில் உமிழ் நீர் சுரப்பது கண்ணின் மணியில் பளபளத்தது.//

சேட்டின் மூளை போடும் கணக்கு புத்திசாலி சிறுமிக்குப் புரிகிறது. //கையைப் படக்கென்று மூடிக் கொண்டாள். கண்ணாடிப் பெட்டியின் மீதிருந்தும் கையை எடுத்துக் கொண்டவளாய் பின்னால் நகர்ந்தாள்.//

சேட்டிற்கு அப்போதும் உறைக்கவில்லை. எத்தனையோ வாலிப பசங்க கொண்டு வரும் செயின் போன்றவற்றை, அவர் தன், சாமர்த்தியத்தில் குறைந்த பணத்தில் பரிமாற்றம் செய்பவர். பொருள் மீட்கப்படவில்லை என்றால் அவருக்கு லாபம்!

ஏன், இந்தச் சிறுமி வந்து போன பிறகு கூட, மருத்துவச் செலவுக்காக அடகு வைக்க வரும் பெண்மணி கேட்கும் தொகையைக் கொடுக்காமல், அவள் கொடுக்கும் பொருட்களில் மூக்குத்தியை விற்கச் சொல்லிப் பேசி பணம் குறைவாகத்தான் கொடுக்கிறார். அப்புறம் அந்த மூக்குத்தியை அதிக விலையில் விற்பாராக இருக்கலாம். சாமர்த்திய கணக்கு.

அப்படி இந்த தங்க ரோஜாவுக்கும் கணக்குப் போட்டிருப்பார் என்பதைத்தான் அந்த வரி சொல்வதாக என் சிற்றறிவிற்கு எட்டியது.

//தேர்ந்த ஜாலவித்தை நிபுணனைப் போல மூடியிருந்த வலது கையை விரல்கள் மெல்லப் பிரிய விரித்தாள். அவர் முகத்திலிருந்து கண்களை எடுக்காமலே இதைச் செய்தாள். இதழ்களை நமுட்டிச் சிரிப்பது போலிருந்தது. அசட்டுத் தனமாய் ஆச்சரியப்படப் போகிறாய் என்று சொல்லாமல் சொன்னது அவள் செய்கை. //

தன்னிடம் அடகு வைக்க வருபவரின் வீக்னெஸைப் படிக்கும்  அளவிற்குக் கில்லாடியான அவருக்கு இச்சிறுமியிடம் முடியவில்லை. அப்போதும் அவருக்கு மண்டையில் உறைக்கவில்லை. காரணம் அவர் மனம் முழுவதும் அந்த தங்க ரோஜா.

1000 ரூ கேட்கிறாள். சேட் முடியாது என்கிறார்.

அச்சிறுமி வேறு கடையைப் பார்த்துக் கொள்கிறேன் என்று திரும்பும் போது, அத்தங்கப் பூவை உரசிப்பார்க்க வேண்டும் என்கிறார் சேட்.

//பூவை நான்தான் பிடிச்சிப்பேன். கல்லை எடுத்து நீ ஒரசிக்கணும்.//

அப்போதும் சாமர்த்தியக்காரரின் மண்டைக்குள் பளிச்சிடவில்லை. இரண்டு மூன்று முறை உரசிப் பார்த்து தான் நினைத்தது சரிதான் என்று தோன்றினாலும் //இன்னொருமுறை சோதித்துவிடலாம் என்றது உள்மனம். ஒழுங்காய்க் கழுவிக் கொள்ளக்கூடத் தெரியாத குழந்தையிடம் போய் பதினெட்டு யோசனையா? வலிய வரும் அதிர்ஷ்டத்தை நழுவ விடாதேயென அதட்டியது மூளை.//

இங்கும் அவர் விழித்துக் கொள்ளவில்லை. தங்கம், பணம், மட்டுமே ஆக்ரமித்திருக்கும் மூளை. வலிய வரும் அதிர்ஷ்டம் என்று சந்தோஷப்படுகிறார். வின் வின் சிச்சுவேஷன்தானே? யாரும் ஏமாறவில்லை என்று தனக்குத் தானே நியாயம் செய்து கொள்கிறார். சிறுமி கேட்கும் ரூபாயை கொடுத்துவிடுகிறார்.

அவள் சென்றதும்தான் அவருக்குத் தெரிகிறது, எல்லோரிடமும் விலாசம் வாங்குபவர் அவளிடம் தவறவிட்டிருப்பது! அப்போதும் அவருக்கு உறைக்கவில்லை தான் ஏன் எப்படித் தவறவிட்டோம் என்று.

சாலையில் சென்று, தேடுகிறார். சிறுமியை காணவில்லை. முகவரி இல்லைனா இன்னும் நல்லதாப் போச்சு! அப்போதும் அந்த தங்க ரோஜாவின் மதிப்பைக் கணக்குப் போடுகிறது அவர் மனம். லாபம்!! சந்தோஷம்.

ஓய்வெடுத்துவிட்டு வந்தவர் மேசையை திறந்து பார்த்தால், அங்குதான் அவருக்கு ஆப்பு! அந்த ரோஜா மலர் அவரைப் பார்த்து சிரிக்கிறது. எவ்வளவு தேடினாலும் தங்கரோஜாவைக் காணவில்லை. வெளியில் சென்று சிறுமியை கோவில் பக்கம் எல்லாம் தேடுகிறார். ம்ஹூம் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

//அவருடைய மனவுலகில் ஒரு சிறுமி. அவள் கையில் ஒரு தங்க மலர். அதை ஆவலுடன் கையில் எடுக்கிறார். மறுகணம் அது வெறும் மலராகி கையைத் தீயாய்ச் சுடுகிறது.//

யாரிடமும் சொல்ல முடியாத அவஸ்தை. நம்பமாட்டார்களே! ஒரு சிறு பெண் தன்னை ஏமாற்றிவிட்டதாகவே நினைக்கிறார். அப்போதும் அவருக்கு மண்டையில் உறைக்கவில்லை.

பிரமையிலிருந்து விழித்தெழுந்து வந்து மகாவீரரைப் பிரார்த்தித்துக் கொண்டு //கீழ் டிராயரைத் திறந்தார். அப்போதுதான் கொய்யப்பட்டது போல் ரோஜா மலர் நிர்மலமாய் காட்சியளித்தது. மேசையைத் திறந்தவரைப் பார்த்து//

அந்த மலர் கொஞ்சம் கூட வாடியிருக்கவில்லையே என்றும் கூட அவருக்கு உறைக்கவில்லை. ஆற்றாமையுடன், அந்த மலருக்குள் இருக்கும் 'பெரிய விஷயத்தைப்' புரியாதவராய் தூக்கி எறிகிறார் அது சாக்கடை ஓரத்தில் விழுகிறது! எறிந்துவிட்டுத் தன் வேலையில் மூழ்கிவிடுகிறார். கதை முடிந்துவிடுகிறது.

கதையில் வரும் சிறுமியை நாம் எப்படி வேண்டுமானாலும் யூகித்துக் கொள்ளலாம். தெய்வ ரூபமாகவோ, இல்லை கண்கட்டு வித்தைக்காரியாகவோ, அமானுஷ்யம் என்றோ எப்படி வேண்டுமானாலும்...

எனக்குத் தோன்றியது இதுதான். எத்தனை அறிவுரைகள் கேட்டாலும் நம் வாழ்க்கையில் நடக்கும் அனுபவங்கள்தான் சிறந்த ஆசிரியர். அதனை நம் செயல்களோடு சம்பந்தப்படுத்திப் பார்த்து உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே அதன் பாடம் அறிவிற்கு எட்டும்.

வேறொரு இடத்தில் வரும் மாமல்லனின் வரிகளை இங்கு பொருத்திப் பார்க்கலாம் என்று தோன்றியது.

“மனிதனுக்கு மிக அத்தியாவசியமான தேவைகளில் ஒன்று நம்பிக்கை. கடவுள் அல்லது லட்சியம். முன்னதில் நம்பிக்கையற்றவன் பின்னதை மிகத் தீவிரமாய் நம்புகிறான். எதையேனும் ஒன்றை நம்புவதால்தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாய்த் தோன்றுகிறது.” ― விமலாதித்த மாமல்லன்

தன் எளிய வாடிக்கையாளர்களை உருட்டெல்லாம் உருட்டி, கலவரப்படுத்தி குறைவான பணமாற்றம் செய்யும் சுகன்சந்த் ஜெயினுக்கு அதைச் சுட்டிக் காட்டுவது போன்று கண்கட்டு வித்தையாக அதாவது மனரீதியான அனுபவம் அந்தச் சிறுமி மூலம். //அவர் முகத்திலிருந்து கண்களை எடுக்காமலே இதைச் செய்தாள். இதழ்களை நமுட்டிச் சிரிப்பது போலிருந்தது. அசட்டுத் தனமாய் ஆச்சரியப்படப் போகிறாய் என்று சொல்லாமல் சொன்னது அவள் செய்கை.// ஜெயினுக்கு உறைக்கவில்லை. ஏனென்றால் அவருக்கு தங்கம், பணம்தான் லட்சியம்! அதுதான் அர்த்தமுள்ளதாய் அவருக்குப்படுகிறது. அனுபவப் பாடங்கள் அல்ல!

அவருடைய அதீத ஆசையே அவருடைய (அறிவுக்) கண்ணைக் கட்டிவிடுகிறது. கண்கட்டுவித்தை!!! கதையை வாசித்த போது என் மனதில் பட்டது இதுதான்.

இக்கதையில், எழுதுபவர் தன் நம்பிக்கைகளை, எண்ணங்களை எளிதாகத் திணிக்க வாய்ப்புகள், இடங்கள் அதிகம். படிப்பினைசொல்லும் கதையாகவோ, இல்லை இறைவனை தொடர்புபடுத்தியோ. ஆனால், ஆசிரியர் அதை எதையும் தொடாமல் கதையைக் கதையாகவே கொண்டு சென்று வாசகர்களின் யூகத்திற்கு விட்ட அந்த எழுத்து என்னைக் கவர்ந்தது. ஆழமான, நுட்பமான கதை. எழுதப்பட்டவிதம் அருமை. எழுத்து நடையும்.

கதையை வாசிப்பதோடு, கதையைப் பற்றி எழுதுபவர்களின்  விமர்சனம் பற்றியும் (அது யாராக இருந்தாலும்)   தயவாய் சொல்லிவிட்டுப் போங்களேன்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!