4.12.25

மோகத்தின் நிறங்களை இருளில் நீர் காண முடியாதே

 "அப்படி ஒன்றும் பயப்படும்படியான ஆளரவமற்ற இடமாக இருக்காது என்று தோன்றியது...."

இப்படி முடித்திருந்தேன் சென்ற வாரத்துக்கு முதல் வாரம்...

ஆனால் போகப் போக அப்படியும் இருந்தது.  கூகுள் மேப்பை நம்பி ஓரிடத்தில் போய் நின்றதும் அந்த இடத்தில கோவில்கள் எதுவும் காணாததால் அங்கிருந்த டீக்கடையில் விசாரித்தேன்.


"மேப்பை நம்பி வந்தீங்களா?  நிறையபேர் இப்படிதான் வந்து மாட்டிக்கறாங்க..  கொஞ்சம் முன்னாடியே அஞ்சூர்னு ஒரு ஊர் போர்ட் இருந்திருக்கும். அங்கே ரைட் எடுத்திருக்கணும்.  ஆனால் பரவாயில்லை,   அதுவும் நல்லதுக்குதான்.  அப்படி வழியா போனா ரெண்டு கிலோமீட்டர் இறங்கி நடக்கணும்.  இப்போ இப்படியே நேரா போங்க...அந்தப் பக்கம் ஒரு பைபாஸ் வரும்.. அதுல ரைட் எடுத்து கொஞ்ச தூரம் போய் ரைட் எடுங்க..   உங்களுக்கே அங்க இங்கதான்  ரைட் எடுக்கணும்னு தெரியக்கூடிய அளவுல ஒரு ஆர்ச் இருக்கும்?

"நன்றிங்க... உங்க பேர்?"

"செந்தில்குமார்"  சொல்லி விட்டு தன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு போய்விட்டார்.  புகைப்படம் எடுக்கிறேன் என்பது அவருக்கு ஓரளவு புரிந்து கொண்டார் என்றே நினைக்கிறேன்.  நல்ல விஷயம்தானே அவரைப்பற்றிச் சொல்லி இருக்கிறேன்...  கோபித்துக் கொள்ள மாட்டார்!

நாங்கள் அவர் சொன்னபடியே புறப்பட்டு சென்றாலும் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.  ஆங்காங்கே ஓரிரு கிராமத்து வாசிகளையும் விசாரித்தபடி அவர்கள் சொன்னபடியே பைபாஸ் அடைந்து, வலப்பக்கம் திரும்பி,  ஆர்ச் கண்டு, மறுபடி வலப்பக்கம் திரும்பி உள்ளே சென்றோம்.  இப்போது பாதை இன்னமும் குறுகி, போகப்போக கட்டங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. 

அப்படியே சென்று கொண்டிருந்ததில் கோவில் கோபுரம் கண்ணில் பட்டது.  கோவில் பற்றிய விவரங்கள் சென்ற பகுதியிலேயே சொல்லி இருந்தேன்...


இமயமடக்கொடியம்பை ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் திருக்கோவில் திருஇடைச்சுரம், திருவடிசூலம் கிராமம், செங்கல்பட்டு வட்டம், காஞ்சீபுரம் மாவட்டம்.
"திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தொண்டை நாட்டு திருத்தலம். இங்கே உள்ளே இருக்கும் சுவாமி ஸ்வயம்பு மரகதலிங்கம்.
சுவாமி, தான் நிறம் மாற வேண்டும் என்று நினைத்தால், பிரதோஷ காலத்தில் தேன் அபிஷேகம் ஆகும் போது பச்சை நிறமாக மாறுவார். அம்பாள் பசு வடிவமாக வந்து புத்துல சுவாமி இருக்கும் போது பால் கறந்து லிங்கத்தை வழிபட்டு சென்ற திருத்தலம் இது.
திருஞானசம்பந்தருக்கு சுவாமியே போய் மோர் கொடுத்து, அவர் பசி தீர்த்து இங்கு அழைத்து வந்து பாட வைத்த தலம்.
கௌதம ரிஷி சனத்குமாரர்கள் எல்லாம் இங்கு வந்து வழிபட்டு போன திருத்தலம்.
சுவாமி மட்டும் இங்க சுயம்புவாக உருவாகி 3000 ஆண்டுகள் ஆகின்றன."
வெளியே சின்ன சன்னதிகள் உள்ள விநாயகர் மற்றும் சுவாமிகள் சிலையில்லாமல் இருக்கின்றன அல்லது சிலைகள் வெண் துணியால் மூடப்பட்டிருக்கின்றன. மராமத்துப் பணிகள் நடக்கின்றதோ என்னவோ.





திருஇடைச்சுரம் - (திருவடிசூலம்) ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் தலவரலாறுஇறைவர் திருப்பெயர்:   ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர்.  இறைவியார் திருப்பெயர்:  கோபரத்னாம்பிகை, இமயமடக்கொடி.   தல மரம்:  வில்வமரம் - (Vilvam or Bael Tree)  தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்  வழிபட்டோர்:அம்பாள்,  அப்பர்,  சேக்கிழார், சனற்குமாரர், கெளதம ரிஷி, பிருங்கி ரிஷி ஆகியோர். Sthala Puranamபார்வதிதேவி பசுவடிவில் பால் சொரிந்து இறைவனை வழிபட்டத் தலம்.

வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த ஒரு பசு சரியாகப் பால் தரவில்லை. இடையன்  பசுவைக் கண்காணித்த போது புதருக்குள் சென்று பால் சொரிவதைக் கண்டான். ஊர் மக்களுடன் சென்று பார்த்த போது சிவபெருமான் மரகதலிங்கமாகச் சுயம்புவாகக் காட்சி கொடுத்தார். அவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டனர். ஞானம் தரும் பாலைப் பூஜை செய்து கொண்டதால் சிவபெருமானுக்கு ஞானபுரீஸ்வரர் என்று பெயர். சிவபெருமானே இடையன் உருவில் திருஞானசம்பந்தரை அழைத்து வந்து காட்சி கொடுத்தார் என்று ஒரு செய்தி உண்டு 

திருமுறைப் பாடல்கள் : 1. சம்பந்தர்   - 1. வரிவள ரவிரொளி (1.78). 2. அப்பர்      -    சிந்தும் புனற்கெடில (6.7.10). 3. சேக்கிழார்  -    சென்னி இள மதி (12.28.1125,1126 & 1128) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்    Specialitiesதொண்டை நாட்டுப் பாடல் பெற்றத் தலங்களில் இது 27வது தலமாகும்.மக்கள் வழக்கில் தற்போது "திருவடிசூலம்" என்று வழங்குகிறது.

மலைகள் சூழ்ந்த இயற்கை சூழலில் கோயில் அமைந்துள்ளது.கருங்கல் கட்டமைப்புடைய பழைமையான திருக்கோயில்; கருவறை அகழி அமைப்புடையது.பிரகாரத்தில் பிரம்மாண்டேஸ்வரர் சன்னதி உள்ளது கோயிலில் நால்வர் பிரதிஷ்டை உள்ளது.மூலவர் - மரகத (பச்சைக்கல்) சிவலிங்கத் திருமேனி; சுயம்பு மூர்த்தி. தீபாராதனையின்போது தீபம் மரகத மேனியில்பட்டு பிரகாசிப்பது மனதிற்கு நிறைவைத் தருகிறது. 

இத்தல சம்பந்தர் தேவாரப் பதிகம் முழுவதிலும் மரகதலிங்கத்தின் அழகு புகழ்ந்து பாடப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.சோழ அரசன் குலோத்துங்க சோழதேவன் ஆட்சியில் ஜயங் கொண்ட சோழ மண்டலத்திலுள்ள களத்தூர்க் கோட்டத்தின் பகுதியான வளநாட்டிலுள்ள திருவிடைச்சுரம் என்று(335 of 1908) குறிக்கப்பட்டுள்ளது. 

இறைவன் பெயர் திருவிடைச்சுரமுடைய நாயனார்; திருவிடைச்சுரம் உடையார் என்றும், வழங்கப்பெறும். இங்கு ஜனனபுரீசுவரர் கோயில் ஒன்று உள்ளது. மேலும் கோவர்த்தன அம்பாள் திருக்காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியார் உருவம் நிறுவ, பெருந்தண்டிலத்திலுள்ள கருப்பக்கிருகம் கட்டப்பட்டதையும் கூறுகிறது(346 of 1908). இந்த இறைவி கருப்பக்கிருகத்திற்கு விளக்குப்போட, ஆவன செய்யப்பட்டுள்ளது(347 of 1906). மகாமண்டலேசுவர குமார ஜலகராஜ திருமலையதேவ மகாராயரால் விளக்குக்காகவும் படையலுக்காகவும் நிலம் கொடுக்கப்பட்டது(337 of 1908). பிள்ளையார் நீலங்கநாயனாரைப் பற்றி(342 of 1908) விவரிக்கின்றது. ஏனையவை விளக்கிற்காகவும் பிறவற்றிற்காகவும் பொன், நிலம், ஆடுகள், பசுக்கள் இவைகள் அளிக்கப்பட்டமையை அறிவிக்கின்றன.முந்தைய தலம்<திருக்கச்சூர் (கச்சூர்) ஆலக்கோயில் அடுத்த தலம்>திருக்கழுக்குன்றம்Contact Addressஅமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு 
செங்கற்பட்டு - திருப்போரூர் சாலையில் இத்தலம் உள்ளது. "திருவடிசூலம்" பேருந்து நிறுத்தத்திலிருந்து உள்ளே 1-கி. மீ. சென்றால் ஊரை அடையலாம். வாகனங்களில் கோயில் வரை செல்லலாம்.
தொடர்பு :

044 - 27420485, 09444523890
 Related Content  திருக்கச்சூர் (கச்சூர்) ஆலக்கோயில், மருந்தீசர் தல வரலாறு Read more  திருக்கழுக்குன்றம் திருக்கோயில் தல வரலாறு Read more  அச்சிறுபாக்கம் (அச்சரப்பாக்கம்) ஆட்சீஸ்வரர் திருக்கோயில் 

இன்னும் விவரங்கள் படிக்க ஒன்றுஇரண்டு, மூன்று இந்த இடங்களில் ஒவ்வொன்றாக க்ளிக் செய்து படிக்கலாம்.

உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் தெரிகிறது பாருங்கள் அந்த இடத்துக்குள் செல்லவேண்டும் ஈஸ்வரரையும், அம்பாளையும் தரிசிக்க...

உள்ளே இருபத்தைந்து வயதுக்குள் மதிக்கத்தகுந்த குருக்கள் இருந்தார்.  முகத்தில் தேஜஸ் தெரிந்தது.  செல்போன் பார்த்துக் கொண்டிருந்தவர், உள்ளே வந்து கற்பூரம் காட்டி வரலாறு சொன்னார்.  செல்லில் ரெகார்ட் செய்து கொண்டேன்.  லிங்கேஸ்வரரை நான் படம் எடுப்பது பார்த்து 'படம் எடுக்காதீர்கள்' என்றதுக் சன்னதி உள்ளே செல்லை அதோடு உள்ளே வைத்து விட்டேன்.





அபிஷேகம், வழிபாடு செய்ய புற்று.  வாசலில் பால், விபூதி விற்கிறார்கள்.  திருஇடைசுரநாதருக்கு அபிஷேகத்துக்கு வாங்கி கொடுத்த தேன் பாட்டிலை அவர் அபப்டியே ஓரமாக வைத்து விட்டார்.  அங்கே ஏற்கனவே ஏழெட்டு பாட்டில்கள் இருந்தன.

இதை கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  படிக்க முடிகிறதா?

ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இன்னும் சில பழைய விஷயங்கள்...


கோபரரத்னாம்பிகை இமயமடக்கொடிஉடனுறை  ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர் சன்னதியை வளம் வரும்போது எடுத்த வீடியோ...


கீழே உள்ள படம் அடுத்து நாம் செல்லவிருக்கும் இடம்...  முன்னோட்டம்!

============================================================================================

கனவுகள் சொல்வது என்ன ?


கனவுகளை பற்றியும் அவற்றால் ஏற்படும் பலன்களைப் பற்றியும் இன் னும்கூட விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்துவருகிறார்கள். இவர்கள் கனவு களைப் பற்றிக் கண்டுபிடித்திருக்கும் சில புதிய உண்மைகளைக் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

கனவுகள் ஏற்படுவதால்தான் பலருக்கு வாழ்க்கை என்பது இன்பமுள்ளதாக இருக்கிறது. விழித்திருக்கும்போது சோர்வுடன் இருப்பவர்கள்கூட கனவுகள் காணும் போது உற்சாகமாக இருக்கிறார்கள். தாம் விழித்திருக்கும்போது சாதிக்க முடியாத செயல்களைக் கூட கனவில் செய்து முடிப்பதாகக் கண்டு மகிழ்ச்சி யும் மனக்கிளர்வும் அடைகிறார்கள். உண்மையில் வாழ்க்கையில் தோல்வி யடைபவர்கள்கூட கனவில் வெற்றி களைக் காணமுடிவதால் நீண்ட நேரம் இவர்கள் தூங்குகிறார்கள்.

சிலருக்குக் கனவுகள்கூட வண்ண வண்ணமாகத் தோன்றுகின்றன. இப் படி பலவகை வண்ணங்களில் கன வுகள் தோன்றினால், இவர்களுக்கு வாழ்க்கை அமைதியாக இருக்கிறது என்று பொருள். பெண்களுக்குதாம் அடிக்கடி வண்ணங்களில் கனவுகள் தோன்றுகின்றன என்று கண்டறியப் பட்டிருக்கிறது. வண்ணங்களில் கனவு காணும் பெண்கள் பெரும்பாலும் வெற்றியடைபவர்களாக இருப்பார் கள்.

வாழ்க்கையில் பிரச்னைகளை எதிர்த் துச் சமாளிக்க அஞ்சுபவர்களுக்கு கனவுகளில் இந்தப் பிரச்னைகள் தோன்றுகின்றன. கனவுகளில் இவர்கள் பிரச்னைகளைக் கண்டு ஓடமுடிவ்தில்லை பிரச்னைகளுக்கு அஞ்சி மது அருந்து பவர்கள்கூட கனவுகளில் பிரச்னைகள எதிர்க்க வேண்டிய நிலைமை ஏற்படு கிறது. அப்போது சில தீர்வுகள் தோன்றுகின்றன. இதைப் படுத்தி வாழ்வில் உயரமுடியும். அச்சம் தரும் கனவுகள் ஏற்பட்டால். இவர்கள் பிரச்னைகளே வேண்டாம் என நினைப்பவர்கள் என்று பொருள். பயன்

சிலருக்குக் கனவுகள் தெளிவாக நினைவிருக்கும். ஆனால் விழித்திருக்கும் போது நடக்கும் நிகழ்ச்சிகள் அடிக்கடி மறந்துபோகும். அப்படியானால் இவர் களுக்கு ஞாபகசக்தி குறைவு என்று சொல்லிவிடமுடியாது. இப்படிப் பட்டவர்கள் புதாக ஏதாவது கண்டு பிடிக்கிம் ஆற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள்.

பல வாழ்க்கையில் புரியாத பிரச்னைகளுக்குக் கூட கனவுகளில்தாம் விடை கிடைக்கும். தாம் கண்ட கனவுகளுக்கு என்ன பொருள் என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். தூங்கும்போது கூட நமது மூளை மட்டும் தூங்கு வதில்லை. ஆகையால் தூக்கத்தில்கூ நாம் வாழ்க்கை நடத்துகிறோம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

1987. கல்கண்டு

============================================================================================

சுஜாதா நண்பர் சுஜாதா பற்றி 



ஸ்ரீரங்கத்து நினைவுகள்
-----------------------------------------------
ஒரு நாள் .கிளாஸ் பீரியட்லே ராஜு !( சுஜாதா ) மல்கோவா மாம்பழம் முழுசா சாப்பிடணும் போல இருக்கு ! என்றேன்.
அதுதான் வடக்கு வாசல் மார்கெட்லே இருக்கே ! உன்னோட வீட்டுக்குப் பக்கம் .என்றார் .

இருக்கு ராஜு ! என் அப்பா வாங்கிண்டு வந்தார். வீட்லே முழுசா தர மாட்டாங்க !எல்லாம் நறுக்கி கடைசில கொஞ்சம் கிடைக்கிறது " என்றேன், மறு நாள் எங்க வடக்கு உத்திரவீதி பிரண்ட்ஸ் என் கிட்டே நம்ம வையாபுரி தோட்டத்திலே காவேரியே தொட்டுண்டு நிறைய கொத்து கொத்தா தொங்கறது ! உனக்குத்தான் நீஞ்ச தெரியுமே ! வரியா ! என்று சொன்னாங்க .
அடுத்த நாள் ராஜு விடம் சொன்னேன். இத பாரு சங்கரா! வீணாமாட்டிக்காதே! வையாபுரி நமக்கு தெரிஞ்சவந்தான் ! ஆனா அவன் அப்பா ரொம்ப கோபக்காரர்னு சொல்லுவான். உனக்கு நீஞ்ச தெரிஞ்சாலும் மாட்டிண்டே டிராயரை உருவி அம்மாமண்டபத்துலே கட்டி வச்சுருவாங்க ! காவேரி வேற புல்லா போறது !அந்த பசங்க கூட போகாதே " என்று அட்வைஸ் பண்ணினான்.

நான் சரின்னு சொன்னாலும் அவங்க என்னை கூட்டிக் கொண்டு போய்ட்டாங்க .அந்த மேலூர் போற வழியிலே மாங்காய் பாதி பழம் பாதி காய் ஆக நிறைய தொங்கிக் கொண்டிருந்தது . எங்க லீடர் சொன்னான்னு அவங்க மூணு பேரும் பறிச்சு தண்ணீரிலே குதிச்ச சத்தம் கேட்டு காவக்காரன் ஓடிவர ,இழுப்பும் சுழலும் அவங்களை வேகமாக தண்ணீரில் கொண்டு போகுது.அவங்க மூணு பேரும் அம்மாமணடபம் படித்துறையில் காவல்காரன்கிட்டே மாட்டிக் கிட்டாங்க!
நானு பயந்துபோய் , தண்ணீரோட போக , பக்கத்துலே அமலாஸ்ரம
படித்துறையில் பாதிரியார் என்னை இழுத்து கரையிலே ஏத்தி , நெறய
புத்திமதி சொல்லி அனுப்பிச்சார். நான் மாட்டிக்கலே! ஈரத்துணியோட
வீட்டுக்குப் போய் நல்லா திட்டு வாங்கினேன்.
சொன்னா கேட்கணும் ! மாம்பழத்துக்கு ஆசை பட்டு , சாமியார் இழுத்துப்
போடலேன்னா கல்லணைக்கு போயிருப்பே ! இனிமே இந்த ரிஸ்க்
எல்லாம் எடுக்காதே ! . .இது ரங்கராஜன் அட்வைஸ்.
அப்புறம் ஸ்கூல் லே ராஜு உடனே வையாபுரியே வரவழைச்சு "என்ன சங்கரு! உனக்கு மாம்பழம் வேணும்னு என்கிட்டே சொல்லி இருந்தா ஒரு பையிலே போட்டு கொடுத்திருப்பேன் .அனாவசியமாசுழலிலே மாட்டிக்க தெரிஞ்சியே"!
என்று வையாபுரியின் அன்பான அறிவுரை .
ராஜுவும் அவங்க உன்னோட தோட்டம் என்கிறதினாலே வந்தாங்க !
இலேன்னா வந்திருக்க மாட்டாங்க ! என்று சொல்லி அவனை அனுப்பிச்சான்.
அப்புறம் என்னிடம் " நீ வீட்டுக்கு போகும் போது என் வீட்டுக்கு வா !  என் அண்ணா உன்னை பாக்கணும்னு சொன்னார் என்றான்.

நான் போனேன்.
என்னடா ! சங்கர் ! மாங்காய் அட்வென்ச்சர் எல்லாம் பண்றே !
அப்படியே நீயும் தண்ணிலே கல்லணைக்கு காணாம போய் இருப்பே ! இனிமே இந்த மாதிரி எல்லாம் பண்ணாதே ! என்று அட்வைஸ் பண்ணிட்டு என்கையில் ரெண்டு பெரிய மல்கோவா மாம்பழம் கொடுத்தார் .
தேங்க்ஸ் அண்ணா ! என்று சொல்லிட்டு கீழ வாசல் வெள்ளை கோபுரம் கீழ உத்திர வீதி குழாய் கிட்ட நின்னு ஒரு முழு பழத்தையும் தோலோட சாப்பிட்டு வீட்டுக்கு போனேன்.
அடுத்த நாள் ரங்கராஜனிடம் நிறைய தேங்க்ஸ் சொன்னேன்.
அவர் சொன்னது . "எப்பவுமே கரெக்டா போ ! மாம்பழம் பெரிசு இல்லே ! லைப் பெரிசு ! எதுவும் யோசிச்சு கரெக்ட் டெசிஷன் எடு !
அது அந்த வயதில் எவ்வளவு நிதானம் ! எவ்வளவு சமயோஜிதம் !
இவர் உலகப் புகழ் பெறும் ஒரு உன்னத மனிதர் என்பதற்கு இது போன்ற அனுபவங்கள் உண்மையை தெரிவிக்கிறது !
அவருடன் நான் இருந்த நாட்கள் இறைவனால் தரப் பட்டவை !
அவர்தான் அருமை நண்பர் "சுஜாதா" என் பள்ளித் தோழர்
- சங்கரன் அஸ்வதி -
இது மீள் பதிவானாலும் என் மனதில் என்றும் இருப்பவை

சங்கரன் அஸ்வதி முகநூல் மத்யமர்

===============================================================================

என் To be மருமகள் ஊரிலிருந்து அவள் வீட்டு ஜன்னலில் ஒரு பறவை வந்து அமரும் படம் அனுப்பி இருந்தாள்.  மலையடிவாரத்தில் ரம்யமான சூழ்நிலையில் அமைந்திருக்கும் அவர்கள் வீடு.  படம் பார்த்ததும் எனக்குத் தோன்றியதை எழுதி அவளுக்கு அனுப்பி விட்டு, என் தங்கைக்கும் அனுப்பினேன்.  தங்கை உடனே கவிதையாலும், படத்தாலும் கவரப்பட்டு தன் வாட்ஸாப்பில் அதை ஸ்டேட்டஸாக வைத்து கௌரவித்தாள்!


என்ன வேண்டுமாம் 
எட்டிப் பார்க்கும் 
சுட்டிப் பறவைக்கு? 
ஓரக்கண்ணால் கள்ளப்பார்வை 
பார்த்து
அலகு திறந்து
அழகு வாய் காட்டி 
கால் மறைத்து 
கவ்வி நின்று 
குறும்பு செய்தால் 
திறந்து விடுவார்களோ 
கதவை?

கொஞ்ச நேரம் கழித்து வந்து பார்த்தபோது அது கோபித்துக் கொண்டதுபோல திரும்பி உட்கார்ந்திருந்ததாம்!


=================================================================================

பொக்கிஷம்,  ஜோக்ஸ், துணுக்ஸ்...

சிரிப்பு வெடி!

சரியாகப் புரியவில்லை.  நீண்டு கொண்டே போகிறதோ....





கவர்ந்த விளம்பர வாசகம்.

இப்போதும் வருகிறது..  வரவிருக்கிறது...  ஒத்திகைகளைமுடித்து விட்டார்களா, தெரியவில்லை!



பீர்பால் கதைல்கள்ல வாசிச்சு ஞாபகம்...

படத்தை இதற்குமேல் பெரிதாக்க முடியாமைக்கு மன்னிக்கவும்.

7 கருத்துகள்:

  1. காலை வணக்கம்.
    நமது அண்ணன் ஈஸ்வர ஸ்தல புராணம், போகும் வழி, மஹிமையெல்லாம் அற்புதமா சொல்லி நம்மை ஆற்றுப்படுத்துகிறார். தலைப்பு: மோகத்தின் நிறங்களை இருளில் நீர் காண முடியாதே.

    இதுல இன்னொரு வேடிக்கை என்னன்னா, 'மோகத்தின் நிறங்களை' என்றதும் காம தகனம் சமாச்சாரமும், 'நீர்' என்ற சொல்லை Water என்று அர்த்தப்படுத்திக்கொண்டு, ஒருக்கால் இதுவும் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்று (அப்பு ஸ்தலம்) என்று ஏதாவது பதிகத்தில் வருகிறதா என்று மண்டையை பிய்த்துக்கொண்டேன்!

    பதிலளிநீக்கு
  2. பாடல் பெற்ற தலத்தை நோக்கிய பயணம், கோவில், திருவிடைச்சுரநாதர் படங்கள் மனதைக் கவர்ந்தன. அமைதியான கோயில். கொஞ்ச நேரம் அங்கே இருந்தீர்களா இல்லை காலில் வெந்நீர் கொட்டிவிட்டதுபோல அடுத்த கோயிலை நோக்கிச் சென்றீர்களா?

    பதிலளிநீக்கு
  3. சங்கரனின் எழுத்து நடையே நல்லா இருக்கு. எனக்கும் மாம்பழத்தை முழுதாகச் சாப்பிடத்தான் பிடிக்கும். ஒரு சல வெரைட்டிகள் தவிர மற்ற எல்லா மாம்பழங்களின் தோலையும் விடுவதில்லை.

    பதிலளிநீக்கு
  4. To be மருமகள்... வார்த்தை குழப்புகிறது. அடுத்த பையனுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதா?

    கவிதையும் படமும் ரசிக்கும்படி இருந்தது

    பதிலளிநீக்கு
  5. கனவுகள் சொல்வது... விஷயம் இல்லாமல் சுத்தப்பட்ட பகுதி இது. ரசிக்கும்படி இல்லை, உண்மையைச் சொல்லாத்தால்.

    கனவில் எக்சாமுக்குப் படிக்கவில்லையே, என்று பயந்து முழித்துக்கொண்டு, அட்டா நாமதான் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறோமே என நிம்மதி அடைந்திருக்குறேன். பறப்பதுபோல பல முறை கனவு வந்ததுண்டு. என்னால் பறக்கமுடியும் என நம்பினேன்.

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    திருஇடைச்சுரம் ஞானபுரீஸ்வரர் கோவிலைப் பற்றிய விளக்கங்களுடன் இன்றைய வியாழன் கதம்பம் நன்றாக உள்ளது.

    இமயமடக்கொடியம்பை ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் திருக்கோவில். அம்பாள் பெயரே மிக அழகாக இருக்கிறது. சிவ தரிசனம் பெற்றேன். காணொளிகளும், படங்களும் நன்றாக உள்ளது. 123 சுட்டிகளிலும் சென்று படித்து வந்தேன். திருஞான சம்பந்தருக்கு அருளிய ஈஸ்வரர் அதுபோல் நம்மையும் அழைத்தால் சென்று தரிசிக்க முடியும். உங்களுக்கு அந்தப் பேறு கிடைத்துள்ளது. அதனால் அத்தகைய பேறு பெற்ற உங்களையே வணங்கிக் கொள்கிறேன்.கோவிலின் விபரங்களையும், அழகையும் சொல்லிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!