22.5.26

மெய் சிலிர்த்து முகம் சிவக்கும் மெல்லிடையாள் கூந்தலிலே

 

பெங்களுருவில் மதியம் ஒரு ஹோட்டல் தேடும் படலம்.  சென்ற அனைத்து வீடுகளிலும் இங்கு சாப்பிடுகிற மாதிரி வாருங்கள் என்று சொல்லியும், நேரம் ஒத்து வரவில்லை.  அந்த சமயம் சென்ற இரண்டு இடத்தில் "சொன்னா குக்கர் வச்சுடுவேன்".  நம்மால் சரியாக நேரம் சொல்ல முடியாத நிலையில் அவர்கள்தான் என்ன செய்வார்கள், பாவம்.  சரிவராது!  மேலும் டிரைவருக்கும் வாங்கி கொடுக்க வேண்டும்,.

பார்த்துக் கொண்டே சென்றால் எழுத்துகள் எல்லாம் ஜிலேபி ஜிலேபியாக இருக்கின்றன.  அவை பெரிதாகவும், ஆங்கிலம் சிறிதாகவும்.  மேலும் பெங்களூரு சாலைகள் ஒரு இடத்தைத் தவற விட்டால் மறுபடி அந்த இடம் வர நீண்ட தூரம் சென்று திரும்பி வரவேண்டும்.  ஊர்க்காரர்களுக்கு அது பரிச்சயமான பாதைக்கு என்பதால் சுலபமாக வந்து விடலாம்.  நாங்கள் திசை தெரியாமல் திசை மாறி அங்கிருந்து இன்னொரு இடம்  சென்றோம்!

மேலும் ஹோட்டல் செல்ல வேண்டுமென்றால் முதலில் பிரதான சாலையிலிருந்து (அப்பப்போ இப்படி தூய தமிழிலும் சொல்வேன்!) விலகி சர்வீஸ் ரோடில் செல்ல வேண்டும்.  அந்த சர்வீஸ் ரோடோ இதே சாலையில் மீண்டும் இணையும் என்கிற நிச்சயமுமில்லை!

இங்குதான் எங்கள் டிரைவரின் ஆட்டம் ஆரம்பமானது.  அவருக்கும் பசி, சாப்பிட வேண்டும்.  ஆனால் பிரதான சாலையிலேயே (மறுபடியும் தமிழ்!) அதுவும் வலது புறமாக ஓட்டிச் செல்கிறார்.  சொன்னாலும் கேட்பதில்லை.  "இந்த ஊரே ரொம்ப மோசம் சார்..  நான் அதனால்தான் பெங்களூரு யாராவது சவாரி கூப்பிட்டால் வரவே மாட்டேன்" என்று டயலாக் வேறு.  எனக்காக பெருந்தன்மையுடன் வந்திருப்பது போல அர்த்தம் வருகிறதே..  

யாரையாவது நிறுத்திக் கேட்கலாம் என்பதை முதலில் அவர் செவிமடுக்கவேயில்லை.  என் நேரம் அப்படி நிறுத்தி கேட்டவர்கள் எல்லோரும் "நானும் ஊருக்கு புதுசுங்க" என்று கைவிரித்ததில் அவர் பலம் அதிகமானது.

'மேப்' போட்டுப் பார்த்தால் அது காட்டும் ஹோட்டல்களை அடைய 'யு டர்ன்' போட முடியாத சாலைகளில் நின்றிருந்தோம்.

அங்கே இருக்கும் ஆட்டோக்காரர்கள் கிட்ட நிறுத்துங்க கேட்கிறேன் என்றால் "அப்படி நிறுத்த முடியாது ஸார்..  பின்னால வர்ற வண்டி மோதிடும்.  பரவாயில்லையா" என்று அப்பாவியாகக் (அப்பாவி போல) கேட்கிறார்.  "அவர்கள் ஓரம் கட்டி நிறுத்தி இருக்கிறார்கள்.  அதேபோல ஸ்லோ செய்து ஓரமாக அவர்கள் பக்கம் ஒதுக்குங்கள்" என்றால் அப்படியும் செய்யாமல் ஓட்டிக் கொண்டிருந்தார்.

அப்புறம் "இப்போ ஸாருக்கு கோபம் வருது..  டென்ஷனா இருக்கார்.  ஸார் சொல்றமாதிரி சர்வீஸ் ரோட்டுல போகவேண்டியதுதான்.. என்றார். 

"எந்த இடம்னு காட்டுங்க ஸார்..  போறேன்" என்றார்.  

 ஆனாலும் அவர் செயலில் அதற்கான முஸ்தீபுகள் எதுவும் இல்லை.  

அப்புறம் நான் சொன்னபடி அடுத்தடுத்து நின்ற இரண்டு ஆட்டோக்களை நெருங்க, உள்ளே டிரைவர் இல்லை. "நான்தான் சொன்னேன்ல..  இதெல்லாம் வேலைக்காகாதுன்னு..இறங்கிப் போயி விசாரிக்கணும் சார்"  என்றார்.

அப்புறமும் பிடிவாதமாக நான்கு ஆட்டோக்கள் அருகே நிறுத்தச் செய்து அதில் கடைசி ஆட்டோக்காரர் அப்படியே அவர்  பின்புறம் கையைக் காட்ட மிகச்சிறிய ஹோட்டல் ஒன்று இருந்தது.  ஆறு பேர் உட்காரலாம்.  கொஞ்சம் பெரிய ஹோட்டல் என்று கேட்டதும் கைஜாடையிலேயே நேராகச் சென்று (சிறிய அளவே முன்னால் நீட்டி) இடதுபுறம் கையை ஒடித்தார். வார்த்தைப் பேச்சு எதுவும் இல்லை.  தமிழ் வராதோ, கொழுப்போ..!  பதில் சொன்னாரே... 

நம் டிரைவர் வண்டியை விடத் தொடங்கி கொஞ்ச தூரத்திலேயே குறுகிய இடது பக்கத்தில் சாலை ஒன்று வர, அதில் திரும்பச் சொன்னேன்.  

"இதிலெல்லாம் வராது ஸார்..  எனக்குத் தெரியாதா? (ஆனால் உள்ளே கடைகளாக இருந்தன) என்றவர். அவர் பெரிய ரோடைச் சொன்னார்.  எனக்குத் தெரியும் என்று அடுத்த சிக்னலுக்கு சென்று திரும்பினால்...

ஹோ வென்ற பெரிய சாலை.  மறுபடி ஹோட்டல்கள் எதுவும் தென்படாத நிலை.  "இந்த ஊர்ல ஆட்டோக்காரங்க எல்லோருமே திமிர் பிடிச்சவங்க ஸார்...  எனக்குத் தெரியும்" என்றார்.

"நான்தான் சொன்னேன்ல..  இதற்கு முதல் சந்திலேயே திரும்பி இருக்க வேண்டும்" என்றேன் நான்.

"இப்போ என்ன செய்ய..   யு டர்ன் போட்டு அங்க போகணுமா இல்லை இந்த சர்வீஸ் ரோட்ல போகவா?"

"சர்வீஸ் ரோட்ல போங்க"

அப்படியே கொஞ்ச தூரம் சென்றோம்.  வழி திரும்பியது.

நடுநடுவேயே அவர் "மதிய சாப்பாடே வேணாம், விடுங்க..  நைட்டு ஒரேயடியா பார்த்துக்கலாம்..  என்னால முடியும்" என்று சொல்லிக் கொண்டே வந்தார்.  நான் பதிலே சொல்லவில்லை.

"திரும்பவா?" - டிரைவரின் கேள்வி.

"வேற ஏதாவது வழி இருக்கா என்ன?" - நான்.

"நாம அடுத்து போக வேண்டிய ரோட்லேயிருந்து மார்றோம்..  பரவாயில்லையா?

"அட பரவாயில்லை விடுங்க..  பார்த்துக்கலாம்"

இப்படி கொஞ்ச தூரம் சென்றதும் 'உடுப்பி சந்நிதி' என்ற பெயரில் ஒரு உடுப்பி ஹோட்டல் வந்தது.  அதில் இறங்கி சாப்பிட்டு விட்டு பயணத்தைக் தொடர்ந்தோம்.


அங்கு ஆர்டர் கொடுக்கும்போது பாஸ் தயிர்சாதம் என்று சொல்ல, நான் அவரிடம் "கர்ட் ரைஸ்..  வித்தவுட் சுகர்" என்றேன்.   அவர் தலையாட்டிக்கொண்டே சென்றார்.  நான்  சாதா ப்ளெயின் தோசை சொல்லி இருந்தேன்.  அதையே டிரைவரும் ஆர்டர் செய்திருந்தார்.

கர்ட் ரைஸ் என்று மோர் சாதத்தைக் கொண்டு வந்து தந்தனர்.  நல்லவேளை, சர்க்கரை இல்லை!  ப்ளெயின் தோசையை தமிழ்நாட்டில் ஸ்பெஷல் தோசை ஆர்டர் செய்தால் கோபுரம் போல கொண்டுவந்து கொடுப்பார்களே அது போல கொண்டு வந்து தந்தார்கள்.  

பெங்களுரூவில் தோசையை மெலிதாகவே போடத் தெரியாது போல..  சென்னை தோசையையே தடிமனாக இருக்கிறது என்று சொல்வேன்.  இது இன்னும் தடிமனாக இருந்தது.

பசி அடங்கியபின் டிரைவர் அவ்வளவு வார்த்தையாடவில்லை!

============================================================================================

சாண்டில்யன் பக்கம்  :

அதென்ன எப்போது பார்த்தாலும் சாண்டில்யன் பெண்களை எப்படி வர்ணித்திருக்கிறார் என்றுதான் பார்க்கவ வேண்டுமா என்ன!  நாயகனை வர்ணிக்கிறார் சாண்டில்யன் - நாயகியின் பார்வையில்.
வெட்கப் பார்வையாக கரிகாலனை பார்த்ததால் அவன் எத்தனை அழகாய் இருக்கிறான் என்பதை அன்றுதான் நன்றாகக் கவனித்தாள் மன்னன் மகள். அந்த வாயிற்படியின் உயரம் போதாமையால், தலையைச் சற்றே சாய்த்தும் கால்களை வளைத்தும் நின்றிருந்த கரிகாலனுடைய கை, கால்கள் எத்தனை மெல்லியதாக அழகாயிருக்கின்றன என்பதைக் கவனித்த நிரஞ்சனாதேவி, நல்ல உயரமான அவன் உடல் மெல்லியதாக இருந்தாலும் எத்தனை கம்பீரமாயிருக்கிற தென்பதையும், அவன் தலை யில் சுருண்டு தொங்கிய கறுமயிர்கள் அவன் முகத்தைச் சூழ்ந்து நின்றதால் இயற்கையாக இருந்த முகத்தின் எழில் எவ்வளவு தூரம் அதிகப்பட்டு விட்டதென்பதையும் கவனித்தாள். 

பார்ப்பதற்குக் குழந்தை முகம் போலிருந் தாலும், ஈட்டிகளை விடக் கூர்மையாக இருந்த விழிகளில் வீரமும், ஆராய்ச்சி மனப்பான்மையும் கலந்து வீசுவதைக் கண்ட நிரஞ்சனாதேவி, காலக்கிரமத்தில் கரிகாலன் பெரும் வீரனாக மாறுவான் என்று சந்தேகமறத் தீர் மானித்துக் கொண்டாள். வீரமும், அழகும் கலந்து தோன்றிய அந்த முகத்துக்கு, அவன் இதழ்களின் ஓரத்தில் சதா தொக்கி நின்ற ஒரு விஷமப் புன்முறுவல் தனிச் சோபையை அளித்துக் கொண்டிருந்தது. 

பெண்களின் இடுப்புப் போல் குறுகிக் கிடந்த இடுப்பில் கட்டப்பட்ட கச்சையிலிருந்து பாதம் வரையில் தொங்கிக் கொண்டிருந்த மிக நீளமான வாளைப் பார்த்த நிரஞ்சனாதேவி 'இவ்வளவு பெரிய வாளை இந்த மெல்லிய கரம் சுழற்ற முடியுமா?' என்று நினைத்துப் புன்முறுவலும் கூட்டினாள்.

அவள் மனத்தே ஓடிய நினைவுகளை விநாடி நேரத்தில் புரிந்துகொண்டு, "அரசகுமாரி! வாளைச் சுழற்ற கை பருமனாயிருக்க வேண்டியதில்லை. கையில் உரம் வேண்டும். லாவகம் வேண்டும், அவ்வளவுதான்" என்றான் கரிகாலன்.

=======================================================================================

பாஹே பக்கம்  :


=======================================================================================


புதுமைப்பித்தன் கவிதைகள்..  என் ஆர் ஹனுமந்தன் என்பவர் எழுத்திலிருந்து, இணையத்தில் படித்தது.


“…கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே”

என்ற சத்திமுத்து புலவர் பாடலையொட்டி, காச நோய் பீடித்த கடைசி காலத்தில் புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதியதாக இந்தப் பாடல் மட்டும் முன்னரே படித்த நினைவு –

“கையது கொண்டு மெய்யது பொத்தி
போர்வையுள் கிடக்கும் பெட்டிப் பாம்பென
சுருண்டு மடங்கி சொல்லுக்கு இருமுறை
லொக்கு லொக்கென இருமிக் கிடக்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே!”

கற்பனையை விற்றுப் பிழைக்க வேண்டிய நிலை புதுமைப்பித்தனுக்கு மிகுந்த உறுத்தலாக இருந்திருக்கும் போலிருக்கிறது. ‘ஓடாதீர்’ என்ற கவிதை இப்படி போகிறது என்றால் –

சொல்லுக்குச் சோர்வேது
சோகக்கதை என்றால்
சோடி ரெண்டு ரூபா!
காதல் கதை என்றால்
கைநிறையத் தர வேணும்!
ஆசாரக் கதை என்றால்
ஆளுக்கு ஏற்றதுபோல்;
பேரம் குறையாது
பேச்சுக்கு மாறில்லை.
ஆசை வைத்துப் பேசி எமை
ஆட்டி வைக்க முடியாது!
காசை வையும் கீழே, – பின்
கனவு தனை வாங்கும்,-
இந்தா!… இது
காலத்தால் சாகாது
காலத்தின்
ஏலத்தால் மலியாது!

பாரதிக்குப் பின்’ என்ற கவிதையில்,

வேளைக்கு வேளை
விருதாக் கவிசொல்லி
நாளும் பொழுதும்
கழிஞ்சாச்சே – ஆழாக்குப்
பாலுக்கோ விதியில்லை;
பச்சரிசிக்கோ தாளம்;
மேலுக்கேன் ஆசாரப்
பேச்சு?

என்று போகிறது.

ரகுநாதன் மிகத் துல்லியமாக “எவற்றையெல்லாம் ரூபமெனப் பெரும்பாலோர் ஒப்புக்கொள்கிறார்களோ, அவற்றிற்குப் புறம்பான ரூபத்தை”த்தான் புதுமைப்பித்தன் தமது கவிதையின் மூலம் நமக்கு உண்டாக்கித் தந்திருக்கிறார்,” என்று எடுத்துக் கொடுப்பதை மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கவிதைகளை வாசிக்கும்பொழுது டெம்ப்ளேட்டுகளுக்கு எதிராகப் போர் தொடுக்கும் சமகாலத்துக்குரிய கவிஞர் பேயோனுக்கும் புதுமைப்பித்தனுக்கும் இதிலும் இன்னும் பல விஷயங்களிலும் ஒற்றுமையுண்டு என்ற ஆச்சரியம் தெரிகிறது.

உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
மற்றுமிந்த வாணிபத்தின் புன்செல்வம் யான்வேண்டேன்
பொற்றோளாய்! உன்னுடைய பெருமைமிகு சர்விஸில்
சிற்றுருவ மானதொரு அட்டெண்டர் ஆகேனோ!

என்று ‘திரு ஆங்கில அரசாங்கத் தொண்டரடிப்பொடி யாள்வார் வைபவம்‘ எழுதிய புதுமைப்பித்தன், கொஞ்சமும் தளை தட்டாமல்

நிழலூது நெடுமரக்
கிளைகளிடை சாயும்
வெயிற்குழாய்கள்


ஆகப்பெரிதின்
அடியில் நின்று
வானோக்குகிறேன்
ஸ்காட்டியே, என்னை
பீம் செய்து ஏற்றிடு!

என்ற பேயோனின் ‘இயற்கை’ கவிதையையும் எழுதியிருக்க முடியும் . இரண்டு கவிதைகளும் ரூபங்களை எவ்வளாவு எளிதாக கலந்தடித்து விளையாடுகின்றன என்பதில் இருக்கிறது வியப்பு.

=========================================================================================

அபாயகரமான கோவிலில் அனுதினமும் பூஜை...



======================================================================================

கண்ணில் வரும் காட்சியெல்லாம்... 



காட்சி விரிகிறது பாதை தெரிகிறது 
வானமும் மேகமும் குன்றும் 
அகண்ட பாதையில் அம்சமாய் தெரிய 
கவிதை எழுத முயற்சிக்கிறேன்.
காட்சியே கவிதையாகும்போது  
வரிகளுக்கு அங்கே வேலையில்லை!

===========================================================================================


மூணு பாஷை இல்லீங்க...   முப்பது பாஷை இருந்தாலும் கத்துக்கத்தயார்...


==================================================================================



சில்பி ஓவியங்கள் 


படிக்க முடியும் என்றே நம்புகிறேன்!



============================================================================================


பூவும் பொட்டும் படம்.  

முன்னர் இந்தப் பாடலின் வரிகளை பகிர்ந்திருந்தேன்.  பாடலையே பகிர்ந்திருக்கலாம் என்று கமெண்ட் வந்ததது.  முன்னரே பகிர்ந்த ஞாபகம் எனினும் பாடலின் இனிமை, வார்த்தைகளின் அழகுக்காக இதோ பாடல்..

ஆர் சுதர்சனத்தின் சகோதரர் ஆர்  கோவர்தனன் இசை.  ஏ வி எம் ராஜன், பானுமதி, நாகேஷ் நடித்தது.  பாடும் குரல்கள் டி எம் எஸ், சுசீலாம்மா. 1968 ல் வெளியான படம்.




117 கருத்துகள்:

  1. பெங்களூரில் ஹோட்டலுக்கா பஞ்சம்? உள்ளூர் கார்ர்களிடம் கேட்டிருக்கலாமே.

    மெலிய தோசை கர்நாடகாவில் எதிர்பார்ப்பது, தமிழகத்தில் அழகிய பெண்களை எதிர்பார்ப்பதுபோல என்று சொல்வது தவறு. கைக்கு அடக்கமான தோசை கர்நாடகா தோசை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...   இன்ன இடத்தில்  இன்ன ஹோட்டல் இருக்கிறது என்று தெரிந்தால் அதற்கான சாலையைப் பிடித்து சரியாக சென்று விடலாம்.  எங்களுக்கு அது சாத்தியமில்லையே...

      நீக்கு
    2. அந்த கனமான தோசையை "பெண்ணே தோசா" வாகச் சாப்பிட்டிருக்கலாம். தொட்டுக்கத் தேங்காய்ச் சட்னி மட்டுமே கொடுத்தாலும் தோசை நல்லாவே இருக்கும். இருந்தது.

      நீக்கு
    3. வாங்க கீதா அக்கா..  சட்னி மட்டுமல்ல, கூடவே தித்திப்பாய் ஒரு சாம்பாரும் தருகிறார்கள்.  அது பெண்ணே தோசையா, பென்னே தோசையா?!!

      நீக்கு
  2. பிசினெஸ் என்று வந்துவிட்டால், தேவை இருந்தால் மனிதன் எதையும் கற்றுக்கொள்வான். பள்ளிகளில் பல மொழிகள் கற்றுக்கொடுக்க வேண்டும். அதில் அரசியல் செய்கிறது அரசு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவகங்களிலும் கடைகளிலும் வேலை செய்யும் வடஇந்தியர்கள் தமிழ் கற்றுக்கொள்ள முயற்சிப்பதே இல்லை, அல்லது தெரிந்தாலும் தெரிந்ததாக காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

      நீக்கு
  3. சில்பி புத்தகம் கிடைக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை நெல்லை..  பழைய புத்தகங்கள்தான்.

      நீக்கு
    2. முகநூலில் தினமும் யாரோ சில்பியின் ஓவியங்களைத் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். எங்கே இருந்துனு தெரியலை. எனக்குத் தெரிஞ்சு நான் பள்ளியில் படிக்கையில் சில்பி மதுரைக்கு வந்து அங்கே மீனாக்ஷி சந்நிதியில் உட்கார்ந்து கொண்டு படம் வரைந்ததை நேரில் பார்த்திருக்கேன். காலை வேளைகளில் தான் பார்க்க முடியும். மாலை எங்கேயோ போயிடுவார் போல. ஸ்வாமி சந்நிதியில் பார்த்தது இல்லை.

      நீக்கு
    3. எங்களிடம் இருக்கும் மீனாக்ஷி சில்பி வரைந்தது தான். ஆனால் ஒரிஜினல் இல்லை. ப்ரின்ட் தான். :(

      நீக்கு
    4. என்னிடம் புத்தகம் ஏதும் இல்லை. தீபாவளி மலர்களிலிருந்து எடுப்பதுதான்!

      நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. சாண்டில்யன் பக்கத்திற்கு வாங்க, நெல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்..

      நீக்கு
    2. எங்கத்த வர்றது ஜீவி சார்.. பெண்கள் வர்ணனையென்றால் படிக்கலாம். ஆண்களைப் பற்றிய வர்ணனை என்றால்...ம்ம்.. என்று பெருமூச்சுதான் விட முடியும்.

      நீக்கு
    3. அதற்கில்லை.. அவர்மேல் குற்றம் சொல்கிறவர்கள் ஒருகணம் யோசிப்பார்களே...! ஆனால் நான் இப்போது படிக்கும் விலைராணி... ஹையோ...ஆபாசம்.

      நீக்கு
    4. நல்லவேளை சொன்னீங்களே! தேடிப் பிடிச்சுப் படிக்கலாமோனு நினைச்சுட்டு இருந்தேன். :)

      நீக்கு
    5. பாஷ்யம் ஐயங்கார் சமஸ்கிருத இலக்கியங்களில் பாண்டித்யம் பெற்றவர். அந்த ஆளுமை தான் அவர் வர்ணனைகளில் சுருதி மீட்டுகிறது. கால மாற்றத்தில் பின் வந்த தலைமுறைகளுக்கு 'ஒரு மாதிரி' இருப்பதெல்லாம் எது மாதிரியும் இல்லாத மன நிலை வாய்க்கப் பெற்றால் இந்தக் கோளாறு நம் பார்வையில் தான் என்ற புரிதல் ஏற்படும்.

      நீக்கு
    6. ப்ளீஸ் டோன்ட். கதைப்பகுதி கம்மி. சதைப்பகுதி அதிகம்.

      நீக்கு
    7. // பாஷ்யம் ஐயங்கார் சமஸ்கிருத இலக்கியங்களில் பாண்டித்யம் பெற்றவர். அந்த ஆளுமை தான் அவர் வர்ணனைகளில் சுருதி மீட்டுகிறது. //

      ஆமாம் ஜீவி ஸார்.  அவரே சாகுந்தலத்திலிருந்தெல்லாம் எடுத்துக் கொடுக்கிறார்.  தமிழ் இலக்கியங்களில் அவர் பெரும் பாண்டித்யம் பெற்றவர் என்பதில் ஐயமில்லை.  ஆனாலும் விலைராணி படிக்காதீர்கள்!!!

      நீக்கு
    8. சதைப் பகுதி என்று குறிக்கும் வார்த்தை தான் கொச்சையானது. இதுவே அவராயிருந்தால் இலக்கிய பூர்வ வர்ணனையாய் வேறு வகையில் இதே வார்த்தை வெளிப்படும். இது தான் இதற்கான புரிதல்.
      உதாரணத்துடன் விளக்குவேன்.
      வார்த்தைகளைக் குதிப்பிட்டு நீங்கள் சொன்னால் அதைச் செய்யலாம்.

      நீக்கு
    9. பகிர முடியாத அளவு மோசமாயிருக்கிறது ஜீவி ஸார்..  ஒன்று நினைவில் வைக்கவும்.  நான் சாண்டில்யனின் பரம ரசிகன்.

      நீக்கு
    10. சரி. அந்த விலைராணி கதையை நீங்கள் தொடர்ந்து வாசிக்க தூண்டுதலாய் இருப்பது எது?..

      நீக்கு
    11. கதையை முடிக்க வேண்டுமே.. வழக்கமான போர் வர்ணனைகள், தந்திரங்கள் கூட கதையில் இல்லை.

      நீக்கு
  6. பெங்களூர் சோதனை ஓட்டுனரை எப்படி சகித்துக் கொண்டீர்கள்.!! சாப்பிட்டதும் அடங்கிப் போனதுதான் அதிசயம். படித்துக் கொண்டிருந்த எனக்கே படபடப்பாக இருந்தது:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா..  இருக்கற கிடைக்கற டிரைவர்கள்ல நல்ல டிரைவர், நியாயமான டிரைவர் அவர்தான்.  என்ன செய்ய..

      நீக்கு
  7. சில்பியின் ஓவியங்கள் என்றும் பெருமையும் அருமையும் கொண்டவை. எத்தனை கோவில்களை அவர் ஓவியங்கள் வழியாகப் பார்த்திருக்கிறோம்.. மிக நன்றி ஶ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  8. நாதஸ்வர ஓசை அன்னாட்களில் விவித பாரதியில் வெள்ளிக் கிழமைகளில் நிறையக் கேட்டிருக்கிறோம். நல்ல பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்மா... வரிகள் அழகு தமிழ்.

      நீக்கு
    2. சென்னை, மதுரை வானொலிகளில் தினம் தினம் காலை ஐந்தரை மணிக்கு ஒலிபரப்பப்படும் மங்கள இசை என்பது நாதஸ்வரத்தின் மங்களமான ஒலி தான். எனக்குத் தெரிந்து ஏழெட்டு வயதில் இருந்து இதைக் கேட்டு வளர்ந்திருக்கேன். காலை ஏழேகாலுக்கு "ஆகாசவாணி" என்ற குரல் கேட்டால் விஜயமா, சரோஜ் நாராயண்ஸ்வாமியானு பட்டி மன்றம் நடத்தாமலேயே யாருனு குரலை வைச்சுப் புரிஞ்சுப்போம். அதே போல் ஆங்கிலச் செய்திகளிலும் மெல்வில் டிமெல்லோ செய்தி வாசிச்சார் எனில் சுருக்கெழுத்து நோட்டையும் பென்சிலையும் வைத்துக் கொண்டு உட்காருவோம். அவரின் செய்தி வாசிக்கும் வேகத்துக்கு ஏற்றாற்போல் நாங்கள் சுருக்கெழுத்துப் பழகணும் என்பார் எங்க வாத்தியார். அதெல்லாம் ஒரு கனாக்காலம். படிப்பில் ஆர்வம் மிகுந்திருந்த காலம். :(

      நீக்கு
    3. மெல்வில் டிமெல்லோவா..  யாரென்றே தெரியாது!

      நீக்கு
    4. தட்டச்சு தமிழ் ஆங்கிலம் இரண்டும் முதல் வகுப்பில் தேறினேன்.  சுருக்கெழுத்து சேர்ந்தேன்.  மனம் ஒன்றவில்லை.  ஹிந்தி தட்டச்சும் சேர்ந்த வேகத்தில் வெளியேறி விட்டேன்.  ஹிந்தி படிப்பது அந்த அத்யாபக்குடனான ஒரு சண்டை காரணமாக ராஷ்ட்ரபாஷா போகும் நேரம் வகுப்பு போவது நின்றது!

      நீக்கு
  9. ஸாலைக் காட்சி மிக அற்புதம். மிக ரம்யம்.

    பதிலளிநீக்கு
  10. தோசை தடிமனாக..... ஹா ஹா ஹா... துபாய் சென்ற புதிதில் பணத்தை இந்திய ரூபாய்க்கு மனதில் கன்வர்ட் பண்ணி, மதியச் சாப்பாட்டுக்குப் பதில் தடிமனான ஊத்தாப்பம் காலை பதினோரு மணிக்குச் சாப்பிட்டது நினைவுக்கு வருது.

    எதைச் சாப்பிட்டாலும் வயிறு நிரம்ப வேண்டாமோ? சாய் சங்கீத்தில் (பெங்-சென்னை நெடுஞ்சாலை) டிஷ்யூ பேப்பர் கணக்கா ரவா தோசை போட்டது நினைவுக்கு வருது. சாதாரண பசிக்கே இரண்டு வேணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோசை தடிமனாக இருக்க வேண்டியதுதான். செட் தோசை என்போம், கல்தோசை என்போம்.. அதெல்லாம் தடிமனாக இருப்பது ஓகே. ஊத்தப்பம் வேறு. சாதா தோசையே இப்படி இருந்தால்...!
      அடுத்த வாரம்"படம் காட்டுகிறேன்" பாருங்கள்!!!!!

      நீக்கு
    2. அடடா!!! நெல்லை உங்களுக்கு ரவா தோசை மெலிசா மொறு மொறுன்னு இருக்கணும்னு நானும் அப்படிக் கொடுத்துட்டேனே அன்று!!! ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    3. ரவா தோசை என்றதும் நினைவில் வருது. சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்குப் பார்க் ஸ்டேஷனில் இருந்து வரும் வழியில் நேரே சென்ட்ரல் போகாமல் நமக்கு வலப்பக்கம் திரும்பினால் சற்று தூரத்தில் ஓர் வஸந்த் பவன் வரும். அங்கே சாப்பிடணும். நாங்க ரெண்டு பேரும் ஒரு தரம் கோட்டையில் ஏதோ பார்ப்பதற்காகப் போயிட்டு வீட்டுக்குத் திரும்பும் வழியில் இந்த ஓட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டோம். ரெண்டு பேருமே அன்னிக்குனு பார்த்து ஒத்துமையா ஆனியன் ரவாதோசை ஆர்டர் பண்ணினோம். தட்டுக்குள் அடங்கலை. தட்டை வைச்சு மேலே இலைஇ போட்டு தோசையை வைச்சார். நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளம். அவரே ரெண்டு மடிப்பு மடிச்சிருந்தார். தோசை பிய்க்கப் பிய்க்க வந்துண்டே இருந்தது. சாம்பாரும் சட்னியும் அவ்வளவு சுவை. இங்கே சாப்பிட்டுத் தானோ என்னமோ தெரியலை "பாக்யம் ராமசாமி" அவர்கள் (முகநூல் நண்பராக இருந்தப்போ) ரவாதோசை சாப்பிடுவது பத்தி ஒரு வ்யாசம் எழுதினார். இப்போவும் அது இணையத்தில் வாட்சப் குழுமங்களில் சுத்திண்டு இருக்கு. ஆனியன் ரவா ரசிகர்கள் சங்கம்னு ஒண்ணு ஆரம்பிச்சார்னா பாருங்க! :)))) அந்தச் சமயம் யாரெல்லாம் முகநூலில் இருந்தீங்களோ தெரியாது. இது சுமார் 10 வருஷங்கள் முன்னர்.

      நீக்கு
    4. பழைய நினைவில் எதையுமே இப்போ சொல்லாதீங்க...  பாண்டி பஜார் கீதா கேஃபே காலி பெங்காய டப்பிதான்.

      நீக்கு
    5. பாக்கியம் ராமசாமியின் அந்த ரவா தோசை பதிவை நானும் படித்டிருக்கிறேன். நானும் ஒரு ரவா தோசை ரசிகை! ஹோட்டலுக்குச் சென்றால் எப்போதும் ரவா தோசைதான் என் சாய்ஸ்!
      ஒரு முறை மாயவரம் காளியாகுடியில் "ரவா தோசை, முறுகலாக" என்று ஆர்டர் கொடுத்துவிட்டேன் அவர்கள் கொண்டு வைத்த தோசை வறுவல் போல இருந்தது, சாப்பிடவும் முடியவில்லை, பசியும் தீரவில்லை. 'ப்தமாக' என்று ஆர்டர் கொடுக்க வேண்டுமாம்.

      நீக்கு
    6. சாதாரணமாக தோசைனு சொன்னாலே பெரும்பாலான ஓட்டல்களில் இப்போல்லாம் இப்படி உதிரும்படியாகவே தோசை கொடுக்கிறார்கள். ஆகவே அதிகம் ஓட்டலில் தோசை இப்போல்லாம் சாப்பிடுவதை நிறுத்திட்டோம் சில ஆண்டுகளுக்கு முன்னாலேயே. சமீபத்தில் தெரியலை.

      நீக்கு
    7. வாங்க பானு அக்கா..   எந்தக் குறிப்பும் இல்லாமல் ரவா தோசை ஆர்டர் செய்தாலே நல்லபடியாக வரும்.  நம் குறிப்புகள்தான் அவர்களைக் குழப்புகின்றன.  உதாரணமாக "காஃபி சர்க்கரை கம்மியாக" என்று சொன்னால் டிகாஷனை அடித்து விட்டு ஸ்ட்ராங்காக கொண்டு வந்து தருகிறார்கள்.  சமயங்களில் நான் நார்மல் காஃபி, சுகர் ரொம்பக் கம்மியாக என்று சொல்வேன்!

      நீக்கு
    8. சர்க்கரை இல்லாமல் காப்பியா?..
      அதுக்கு காப்பி சாப்பிடாமலேயே இருந்ரு விடலாமே!

      நீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  12. "இந்த ஊரே ரொம்ப மோசம் சார்.. நான் அதனால்தான் பெங்களூரு யாராவது சவாரி கூப்பிட்டால் வரவே மாட்டேன்" //

    ஹாஹாஹா சரியான ஓட்டுநர்தான் போங்க...நீங்க சொல்றது போல எங்கயாச்சும் நிறுத்தி கேட்டு கூகுள் மேப் பார்த்து ஹோட்டல் தெரிந்து கொண்டு சென்றால் நல்லது இல்லைனா ஒட்டிக் கொண்டே பார்த்தால் சிலப்போ சுத்தி வர வேண்டுமாக இருக்கும்.

    ரொம்பவே அலட்டுகிறாரே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா.. நாம் இவர்களுக்கு இந்தப் பேச்சின் மூலம் எரிச்சலூட்டுகிறோம் என்பது தெரிந்தே செய்தாரா தெரியாது!

      நீக்கு
  13. ஸ்ரீராம், இங்கு ஹோட்டல்களில் தோசை கொஞ்சம் தடியாகவே தான் இருக்கிறது. இங்கு தோசைமாவு அரைப்பதற்கான பொருட்களே பாத்தீங்கனா தோசா அரிசின்னு கடையில விற்கறாங்க பச்சரிசி அதைத்தான் வாங்கி அரைக்கறாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அரிசியிலேயே வேறுபாடா?

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம். தோசா ரைஸ்னு ஹோட்டல் மட்டுமில்லை மக்களும் அதைத்தான் வாங்கறாங்க.

      ஐ ஆர் 20 வகையின் பச்சரிசி. எங்க ஊர்ப்பக்கங்களில் இந்த ஐ ஆர் 20 புழுங்கலரிசி தான் டொப்பி புழுங்கலரிசி வாங்கி சேவை செய்வதுண்டு. ரொம்ப நல்லா வரும். கேரளத்தில் டொப்பி புழுங்கலரிசிதான் இட்லி தோசைக்கும். நம் வீட்டிலும் நல்லா வரும். இட்லி அரிசியும் வாங்குவதுண்டு.

      சென்னைல இருந்தப்ப அடையார் ஏரியாவுல ஒரே ஒரு கடைல டொப்பி புழுங்கலரிசி கிடைச்சு வாங்கினேன். சேவைக்கும் மட்டும்.

      இப்ப நானோ இல்லை நம்மவீட்டாரோ சென்னைக்கு வரப்ப எல்லாம் வாங்கிக் கொண்டு வருவதுண்டு 3 கிலோ

      கீதா

      நீக்கு
    3. என்னவோ போங்க... ஒழுங்கான தோசை, இட்லி சாப்பிட வேண்டாமோ...

      நீக்கு
    4. நானும் தோசா ரைஸ் வாங்கி தோசை செய்திருக்கிறேன். நன்றாக வரும். அந்த தோசை அரிசியில் நெய் அப்பம், அதிரசம், கொழுக்கட்டை போன்றவை செய்தால் அவை மிருதுவாக வரும். தமிழ் நாட்டில் இதை 'மாவு அரிசி' என்பார்கள்.

      நீக்கு
    5. இந்த மாவு அரிசி வாங்கிட்டு நான் பட்ட பாடு. சேவைக்குப் போட்டுவிட்டுப் பண்ண முடியாமல் புளி உப்புமாவாகப் பண்ணிய கதையை எல்லாம் பதிவாப் போட்டிருக்கேன். அதே போல் கொழுக்கட்டையும். ஆகவே எப்போவுமே சாப்பாட்டுக்கு என்ன அரிசி வாங்கறேனோ அதிலேயே கொழுக்கட்டை, அப்பம் , அதிரசம் எல்லாமும் பண்ணிடுவேன். நன்றாகவே வருகிறது..

      நீக்கு
    6. எனக்கும் இந்த பெங்களூரு மாவு அரிசி வாங்குவது நெகட்டிவ்தான்!  சென்னையில் நித்ய அமிர்தம் ஹோட்டல்களில் தோசை சாப்பிட்டால் அந்த ஆசையே போய்விடும் போல..  ஆனால் கருத்துகள் ஆளாளுக்கு மாறுபடும் என்பதையும் உணர்கிறேன்.  என் விருப்பம் இப்படி!

      நீக்கு
  14. ஓ அப்ப ஓட்டுநருக்குப் பசியின் ஆட்டமா!!!! ஹாஹாஹா அப்புறம் என்ன வீராப்பு ராத்திரி ஒரேயடியா சாப்பிட்டுக்கலாம்னு!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம். 'இவர்கள் மட்டும் வீட்டுக்குள் ஏதாவது சாப்பிட்டு விட்டு வருகிறார்கள். நமக்கு பொய்ச்சாப்பிடுவதற்கு அருகில் கடை கூட இல்லையே' என்று தோன்றி இருக்கும் என்று நினைத்தேன்.

      நீக்கு
    2. இருக்கலாம்,

      நம்ம வீட்டுல எப்பவுமே ஓட்டுநரோடு வந்தால், ஓட்டுநருக்கும் சாப்பாடு டிஃபன் எல்லாம் கொடுத்துவிடுவதுண்டு. ஓட்டுநராகத் தான் வெளியில் சாப்பிடுகிறேன்னு சொன்னா மட்டும்தான் விட்டுவிடுவது காரணம் சில ஓட்டுநர்களுக்கு நம்ம சாப்பாடு அவ்வளவாகப் பிடிக்காது.

      ஆனால் எங்க நட்பு ஓட்டுநர் ஸ்ரீதர் நம்ம வீட்டு சாப்பாடைச் சாப்பிடுவார் ...டிஃபனும்.

      கீதா

      நீக்கு
    3. இவரும் நம்ம சாப்பாட்டை விரும்பிச் சாப்பிடுவார் என்பது நீங்களே பார்த்தீர்கள். இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

      நீக்கு
    4. காரோ, ஆட்டோவோ நாங்கள் சாப்பிடுவதை டிரைவருக்கும் வாங்கித் தந்து விடுவோம். என் கணவர் இன்னும் ஒரு படி மேலே போய் நாங்கள் ஸ்னாக்ஸ் வாங்கினால் அதை டிரைவருக்கும் வாங்கித் தருவார். என் கணவர் லீவில் ஊரிலிருந்து வந்தால் எங்கள் ஏரியா ஆட்டோக்காரர்கள் ரொம்ப சந்தோஷமாகிவிடுவார்கள்.

      நீக்கு
    5. எப்போவுமே ஓட்டுநர்களைக் கவனிக்கும் வழக்கம் இப்போல்லாம் எல்லோரிடமும் இருக்கு. நாங்க தங்கும் ஓட்டல்களில் ஓட்டுநர்களுக்கு எனத் தனியாக அறை இருக்கானு கூட கேட்டுப்போம். ஆனல் சிலர் காரிலேயே படுத்துக்கறேன்னு சொல்லிடுவாங்க. சாப்பிடும்போதெல்லாம் எங்களுடன் கூட்டிப் போய்ப் பக்கத்து டேபிளிலேயே உட்காரச் சொல்லிட்டு நினைவா பில்லை எங்களிடம் கொடுக்கும்படி சொல்லிடுவோம். அவங்க இஷ்டத்துக்குச் சாப்பிட்டுக்கட்டும் என அதில் தலையிடுவதில்லை.

      நீக்கு
    6. நாங்களும் அப்படியே...   நம் வீட்டில் ஒருவர் போலதான் ட்ரீட் செய்கிறோம்.  சொல்லப்போனால் அன்றிரவு டிரைவர் கே ஜி ஜி வீட்டினுள்தான் ஹாலில் தூங்கினார், குளித்தார்.

      நீக்கு
  15. சாண்டில்யன் நாயகனையும் நன்றாக வர்ணிப்பார்தான். இருந்தாலும் நாயகிகளைச் சற்றுக் கூடுதலாகவே வர்ணிப்பார்ல!!!?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நியாயம்தானே.. ஆனால் எந்தப் பெண் எழுத்தாளராவது ஆணை வர்ணித்திருக்கிறார்களா?

      நீக்கு
    2. அதே கேள்வியைத்தான் நானும் அடிக்கடி நினைப்பது இங்கு கேட்டும் இருக்கிறேன்.

      பெண்கள் வர்ணித்தால் ஏனோ இந்தச் சமூகம் ஏற்பதில்லை, ஸ்ரீராம்..சும்மா சுருட்டை முடி, கூலிங்களாஸ், ஆறடி உயரம் .... இவ்வளவு வகையறாக்கள்தான்...மீசையைப் பத்திக் கூட ரொம்ப இருப்பதில்லை என்றே நினைக்கிறேன். அதனால மீசையில்லா நாயகனா போட்டுருவாங்களோ ஹிஹிஹி

      பெண்கள் எழுதுவதில் பெண்களின் உணர்ச்சிகள், மாமியார் மருமகள், கணவன் கொடுமை என்றுஎ ழுதுவதற்கே பக்கங்கள் போய்விடும் என்பதால்....விட்டுவிடுகிறார்களோ?

      கீதா

      நீக்கு
    3. இந்துமதி ஓரளவுக்குக் கதாநாயகர்களை வர்ணித்திருப்பார். ஆனால் அவரது கதாநாயகர்கள் அனைவருமே உயரமாகவும் நல்ல சிவந்த நிறமாகவும் விலை உயர்ந்த உடைகளை அணிந்தவராகவும் ரொம்பவே மன முதிர்ச்சி உள்ளவங்களாகவும் தான் இருப்பாங்க. இதை ஒரு தரம் யாரோ பிரபலம் விமரித்திருந்தார். சாதாரணக் கதாநாயகனே இருக்க மாட்டாங்களானோ என்னமோ கேட்டிருந்தார். இப்போப்பாவம் இந்துமதி! அந்த அறிவுஜீவித் தனமே போய் முற்றிலும் மாறுபட்ட கோலத்தில் குழந்தை போல் அறிவுடனும் மனதுடனும் இருக்கார். அதுவும் கணவர் இறந்ததும் ரொம்பவே மோசம்! :( பத்திரிகை ஆசிரியர்களும் இவரையும் சிவசங்கரியையுமே எப்போதுமே போட்டி போட வைப்பார்கள். இந்துமதியின் "தரையில் இறங்கும் விமானங்கள்" தவிர்த்த வேறே எதுவும் அவர் எழுதினது எனக்குப் பிடிக்காது. :(

      நீக்கு
    4. பேஸ்புக்கில் இந்துமதிக்கு மெசஞ்சரில் ஒரு கேள்வி கேட்டு அனுப்பினேன்.  வருடங்கள் கடந்தும் பதில் இல்லை.  அவரின் இன்றைய நிலை பரிதாபகரமானதுதான்.  தன்னம்பிக்கை இழந்து விட்டார் போல.

      நீக்கு
    5. சிவசங்கரி, ரமணி சந்திரன் போன்றவர்களும் ஆண்களை வர்ணித்திருக்கிறார்கள். '47 நாட்கள்' கதையில் அந்த கதாநாயகனின் பாதங்கள் மிருதுவாகவும், ரோஜா நிறத்திலும் இருந்ததாகவும், ஒரு ஆம்பிளையின் பாதம் இவ்வளவு மெத்து மெத்தென்று இருக்குமா? என்று எழுதியிருப்பார்.(நான் என் நினைவிலிருந்து எழுதியிருக்கிறேன்.crust இதுதான்) என்ன? ஆண் எழுத்தாளர்கள் பெண்களை ஆழகானவர்களாக கற்பனை செய்வது போல பெண் எழுத்தாளர்களும் ஆண்களை அழகானவர்களாகத்தான் கற்பனை செய்கிறார்கள்.
      சுஜாதா விதிவிலக்கு. அவர் பெண்களையும் விழுந்து விழுந்து வர்ணித்ததில்லை, அவருடைய கதாநாயகர்கள் ஒல்லியாக, கருப்பாக, சாதாரணமாக இருப்பார்கள்.
      ஒரு ஆணை பார்த்தாலே கற்பு போய் விடும் என்ற கதைகளை கேட்டு வளர்ந்த எங்களால், ஒரு ஆணைப் பார்த்து அழகாக இருக்கிறான் என்றெல்லாம் சொல்லக் கூடாது என்று கூறி வளர்க்கப்பட்ட எங்களால் ஆண் மகனை எப்படி வர்ணிக்க முடியும்?
      'மோகம் முப்பது நாள்' கதைக்கு மாயா வரைந்த இரண்டாவது கதாநாயகன் அழகாக இருக்கிறான் என்று நாங்கள் சிலாகித்ததையே தவறு என்று எங்கள் அத்தை கண்டித்தார். இப்படிப்பட்ட நாங்கள் என்ப்படி ஆண்மகனை வர்ணிப்போம்?

      நீக்கு
    6. இந்த கோணம் சற்று வியப்பாகத்தான் இருக்கிறது.  எம் ஜி ஆர் படங்கள் பார்த்த ரசிகைகள் போல..இதை எல்லாம் கூட குற்றம் காண்பார்களா என்ன!

      நீக்கு
    7. சுஜாதாவின்பாலியல் இரகசிய ஆய்வுகள் பிரசித்தம்.
      ஆனால் அவர் எழுத்தின் ஜாலக்கு இதற்கு மெல்லிய சல்லாத்துணியாய் மூடு திரை போட்டு மறைத்து விடும்.
      ஒரு கதைக்கு இப்படி ஒரு வரியாவது இருந்தாகணும் என்ற கோட்பாடு கொண்டவரோ என்று நம்மை நினைக்க வைக்கும் எழுத்து.
      இல்லை பத்திரிகை வியாபாரிகளின் விற்பனை சூட்சுமத்திற்கு தூபம் போட்டாரோ, தெரியவில்லை.

      நீக்கு
    8. ம்ம்ம்ம்...  சுஜாதா இந்த அளவு எழுதி இருந்தாரா என்று தெரியவில்லை.  கொலையுதிர் காலம் கதையில் ஒரு வார்த்தை உபயோகித்திருந்தார்.  அதை வேண்டுமானால் சொல்லலாமே தவிர...

      நீக்கு
    9. தெரியவில்லை என்பது வாசிப்பு நேர்த்தியில்லை.
      மார்பு என்ற வார்த்தை இல்லாமல் அவர் கதை ஏதும் இருந்ததில்லை.

      நீக்கு
    10. எங்களை அறியாமல் எங்களுக்குள் இருக்கும் மனத்தடை. மேலும் பத்திரிகை ஆசிரியர்கள் அதை அனுமதித்திருக்கஇல்லையோ என்னவோ?
      ஒரு முறை வாசந்தி, "பெண் எழுத்தாளர்கள் இதைத்தான் எழுத வேண்டும், இதை எழுதக் கூடாது என்ற நிர்பந்தங்கள் இருக்கின்றன. 'அவன் அவளுடைய சட்டை பட்டன் களை அவிழ்த்தான்' என்று நான் எழுதிருந்ததை படித்து விட்டு ஒரு பத்திரிகையாசிரியர் அதை நீக்கச் சொன்னார். சட்டை பட்டன் களை அவிழ்காமலா காதல் செய்ய முடியும்?" என்று கேட்டதற்கு, ஒருபெண் எழுத்தாளர் இப்படி எழுத்க் கூடாது என்றார். இவர் சட்டை பட்டங்களை அவிழ்காமலா காத செய்வார்?'" என்று கோபப்பட்டிருந்தார்.
      ஏன் சிவசங்கரி, இந்துமதி இவர்கள் கூட "நாங்கள் பெண்களாக இருப்பதால் எங்கள் சிந்தனைக்கு ஏன் புடவை கட்டி விடுகிறீர்கள்?"
      என்று கோபப்பட்டிருக்கிறார்கள்.

      நீக்கு
    11. இவ்வளவு ஏன்? நானும் கீதாவும் சேர்ந்து எ.பி.யில் 'நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே' என்று ஒரு மினி தொடர் எழுதினோமே, அதில் கணவன் மனைவியான் அவர்கள் நெருக்கத்தை..ரொம்பவெல்லாம் இல்லை, அவன் அவளை அணைத்துக் கொண்டான் என்பது போல..எழுதியதற்கே 'இங்கே இதையெல்லாம் தவிர்த்திருக்கலாம் என்று பின்னூட்டம் வந்தது. :)) நடைமுறை சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

      நீக்கு
    12. // மார்பு என்ற வார்த்தை இல்லாமல் அவர் கதை ஏதும் இருந்ததில்லை.//

      நீங்கள் அதையே தவறு என்று சொல்வீர்களாயின் விலைராணியில் அதற்கும் மேலே...!!!

      நீக்கு
    13. // 'அவன் அவளுடைய சட்டை பட்டன் களை அவிழ்த்தான்' என்று நான் எழுதிருந்ததை //

      வாஸந்தியின் (இன்றைய பாடல் வாஸந்தி ராகம்தானாம்.  கீதா சொல்லி இருக்கிறார்!) கருத்தில் நியாயம் இருக்கிறது.  அப்படி சொல்லப்பட்டிருந்தால் அது ஆணாதிக்க மனோபாவம்தானே..  அதையே  எழுத்தாளர் - புஷ்பா தங்கதுரை போல - எழுதிய இருந்தால் அனுமதிக்கப்பட்டிருக்கும்.

      நீக்கு
    14. // அவன் அவளை அணைத்துக் கொண்டான் என்பது போல..எழுதியதற்கே 'இங்கே இதையெல்லாம் தவிர்த்திருக்கலாம் என்று பின்னூட்டம் வந்தது. :)) //

      அப்படியா?  நிஜமாக நினைவில்லை.   யாராக்கும் அப்படி பின்னூட்டம் இட்டது?

      நீக்கு
  16. பாஹே அவர்களின் பகுதி சூப்பர் ஆமா அம்ம பெயர்தானே போட்டுக் கொண்டார் முதலில்..மறைவுக்குப் பின் இல்லையா?//.முன் பின்னாய் இருந்தோம் இனி பின் முன்னாய் இருப்போம்!!! //

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இது அம்மா மறைந்தபின் எழுதியது.

      நீக்கு
  17. அட! பாஹே பகுதியைத் தொடர்ந்து புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதியது....

    ஓடாதீர் கவிதையை ரொம்ப ரசித்தேன்.

    //உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்//

    இதை வாசித்ததும் என்னடா பிரபந்தம் வரி வருதே என்று பார்த்ததும் , ஹனுமந்தன் அவர்களின் வரிகளைப் பார்த்ததும் புரிந்துவிட்டது தொண்டரடிப் பொடி ஆள்வார் இந்தப் பெயரை, சொல்லை கையாண்ட விதத்தை ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த வரை மாற்றி மாற்றி பிரபலங்கள் கவிதை கொடுக்கிறேன். கவனித்திருப்பீர்கள்! வெட்கத்தை விட்டு நானே சொல்கிறேன்!!!!

      நீக்கு
    2. கவனிக்கிறேன் ஸ்ரீராம். இதுக்கு என்ன வெடகம்? பலரது கவிதைகளைக் கொடுப்பது நல்ல விஷயம்தானே. மேத்தா வைப் பகிர்ந்தீங்க. இப்ப புலமைப்பித்தன்

      பேயோனின் இயற்கை கவிதைக்கான சுட்டிக்குப் போனா வரமாட்டேங்குதே ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
    3. இடையில் எங்க ஊர்க்காரர் பேர் டக்குனு வர மாட்டேங்குதே அவருடைய கவிதைகளையும் பகிர்ந்தீங்க.

      கீதா

      நீக்கு
    4. ஸ்ரீராம் சொல்லி இருக்காப்போல் இந்தக்காட்சியே கவிதையாகத் தான் இருக்கு. இப்படியான சாலைகளில் பயணிப்பதை விடப் படங்கள் மூலம் பார்த்தோம் எனில் வேறுபாடுகள் புரியும். கவிதை நல்லா இருக்கு ஸ்ரீராம். இப்போ ஓகேயா? :)))))

      நீக்கு
    5. // இடையில் எங்க ஊர்க்காரர் பேர் டக்குனு வர மாட்டேங்குதே அ //

      விக்ரமாதித்யனா வண்ண நிலவனா?

      நீக்கு
    6. கவிதை என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் அதில் ஒரு சின்ன தவறு, அது குன்று இல்லை, மலை.

      நீக்கு
  18. அபாயகரமான பூஜை - இது பார்த்திருக்கிறென் ஸ்ரீராம். என் தனிப்பட்டக் கருத்து, இப்படியான ரிஸ்க் தேவையில்லை என்றே. அவர் கையால் பிடித்துக் கொண்டு ஏறும் கல் ஒரு வேளை சற்று அசைந்துவிட்டால்?

    பக்தி இருக்கட்டும்....பக்தி இருக்கலாம் ஆனால் இப்படித் தேவையா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ப்ராக்டிக்கலாக இருக்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அப்படிதான் தோன்றியது.  இது உண்மையாயிருந்தால் இத்தனை காலத்தில் மேலே செல்வதற்கு ஒழுங்காய் ஒரு வழி ஏற்படுத்தி இருக்கலாமே...

      நீக்கு
    2. என்ன ஸ்ரீராம் இப்படி சொல்லி விட்டீர்கள்? அவர் என்ன பக்தவத்சலமா? பழனி மலை மேள் ஏற கஷ்டமாக இருந்ததால் வின்ச் ஸ்ர்வீசுக்கு ஏற்பாடு செய்ய? ஒரு ஏழை அந்தணர்.

      நீக்கு
    3. அவரா ஏற்பாடு செய்யவேண்டும்?  அரசு, அல்லது பொறுப்பானவர்கள்தான் செய்ய வேண்டும்.  அவர் செய்ய வேண்டும் என்று சொல்வேனா?!!

      நீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளிச் சிதறல்கள் அனைத்தும் அருமை.

    ஓட்டுனரின் பசியினால், உங்களுக்கு நல்ல உணவகம் கிடைக்காமல் போயிள்ளது. அவராவது அக்கம் பக்கம் விசாரிக்க வேண்டாமோ ? ஆனால், அவருக்கு மொழி பிரச்சனையால் தயங்கி இருக்கலாம். அதை வெளிக்காட்டாமல் உங்களிடம் ஏதேதோ கதையளந்து இருக்கிறார். தமிழ் நாடென்றால் அவர் அனைவரிடம் சகஜமாக விசாரித்து நல்ல ஓட்டலுக்கு சுலபமாக உங்களை அழைத்துச் சென்றிருப்பார். என்னவோ அன்று மிகவும் சிரமப்பட்டுள்ளீர்கள்.

    உங்கள் கண் காட்டிய கவிதை அருமை.இயற்கையின் படத்தை மிகவும் ரசித்தேன். மிகவும் நன்றாக எடுத்துள்ளீர்கள். பார்த்த படமே கவிதையாகிப் போனதில், கவித்துவமான எழுத்துக்களுக்கு அங்கு இடமில்லை. உண்மைதான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா..  பெங்களூர் பயணத்தில் எடுத்த சில புகைப்படங்கள் எனக்கேயும் பிடித்திருந்தன!

      நீக்கு
  20. அட்டகாசமான க்ளிக் ஸ்ரீராம், அதுக்கு உங்கள் கவி வரிகளையும் ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. உண்மையிலேயே நம்மை விட இப்படியானவர்கள் சுற்றுலாத்தலங்களில் விற்பனையாளர்கள் பல மொழிகளை எளிதாகக் கற்றுக் கொண்டுவிடுகிறார்கள் பள்ளியின் பக்கம் போகாமலேயே. அசாத்திய திறமை.

    ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு திறமை ஒளிந்திருக்க வாழ்வாதாரத்திற்கான ஒரு ஸ்கில் எனலாம் இதை. எனவே necessity is the mother of invention என்பது போல...சர்வைவல்...என்று வரும் போது என்ன திறமைகள் எலலம் வெளி வருகின்றன இல்லையா? one of the life skills.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அந்தப் பெண்மணியும் அவரைப் போன்றவர்களும் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றனர்.

      நீக்கு
  22. அட! தம்பதி சமேதராய் நவகிரஹங்கள்!

    சில்பி ஓவியங்கள் செம. என்ன ஒரு நுணுக்கம்!

    ரகசியம் - அட! இபப்டி ஒரு டிப்ஸ் இருக்கா...

    மானிஷா விஷயம் அட! இப்படியுமா என்று தோன்றியது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. So, அந்த படத் துணுக்குகளை படிக்க முடிகிறது என்று தெரிந்து விட்டது!

      நீக்கு
  23. சூப்பர் போங்க... கடைசியில் பகிர்ந்திருக்கும் பாடல்! என்ன ஒரு அழகான பாடல்! என்ன ஒரு அழகான ராகம்...பிருந்தாவன சாரங்கா! கோவர்தனன் அவர் பாடலுக்கான வரிகளுக்கு ஏற்ப அழகான ராகத்தைத் தேர்ந்தெடுத்துப் போட்டிருக்கிறார்! வரிகளும் ராகமும் ஒத்திசைந்து...மெட்டும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக அருமையான பாடல்.  பாடல் வரிகள்.  சரணத்தின் அந்த வரிகளை பாருங்களேன்..  என்ன தமிழ்!

      நீக்கு
  24. அப்பாவின் கவிதை அருமை. இன்னிக்குப் படிக்கிறாப்போல் இருக்கு. இதுக்கு அப்புறமாத் தான் அம்மா பெயரைச் சேர்த்துக் கொண்டாரோ? சாண்டில்யன் பக்கம் வழக்கம் போல். தயிர்சாதம் நாங்க புனே போயிருந்தப்போ ஓட்டல்காரர் ஸ்விகியில் ஆர்டர் பண்ணி வாங்கிக் கொடுத்தார். அது மாதிரிச் சாப்பிட்டதே இல்லை. அதிலும் அந்த மோர்மிளகாய்!

    புதுமைப்பித்தனும் கவிதைகள் எழுதுவார் என அறிந்து கொண்டேன். இருக்கும்வரை கஷ்டப்பட்டார். இப்போதோ தலையில் தூக்கி வைச்சுக்கறாங்க. :(

    இந்த குருக்கள் பத்தியும் கோயில் பத்தியும் யூ ட்யூபில் பார்த்துட்டு ரங்க்ஸ் எனக்குக் காட்டி இருக்கார். முழுதும் பார்க்கலை. மேகங்கள் அதிகம் இல்லாத வானமும் அழகான நேர்கோட்டுச் சாலையும்.

    நரிக்குறவர்களில் எனக்குத் தெரிந்த ஒரு பெண் அம்பத்தூரில் மருத்துவர் ஆகி இருக்கார். அம்பத்தூர் பேருந்து நிலையத்தின் அருகே இருக்கும் சர்ச் தாண்டிப் பழைய போஸ்ட் ஆஃபீஸ் வாசலில் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு பருவத்துக்கு ஏற்ற பழங்களை விற்பனை செய்யும் பெண்ணின் மகள். பின்னாட்களில் மருத்துவர் ஆனால் எனக் கேள்வி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா மறைந்த பிறகுதான் அப்பா தன் பெயருடன் அம்மா பெயரைச் சேர்த்து பாலசுப்ரமணியம் ஹேமலதா என்று சேர்த்துக் கொண்டார்.  யாராவது போன் செய்தால் போனை எடுத்து ஆகிவர் "பாலசுப்ரமணியம் ஹேமலதா" என்று சொல்வது இன்னும் என் காதில் ஒலிக்கிறது.

      புதுக்கவிதைகளை தந்தை புதுமைப்பித்தனும்தான்!
      ஆமாம் இப்போது நரிக்குறவர் சமூகம் நன்றாக வளர்ந்து வருகிறது என்பதை நானும் ஆங்காங்கே படிக்கும் செய்திகளில் அறிந்து கொண்டேன்.

      நீக்கு
  25. நவகிரஹங்கள் தம்பதி சமேதராக இன்னொரு கோயிலிலும் உண்டு. நினைவில் வரலை. செக் பண்ணிட்டுச் சொல்றேன். மோனிஷா, விஜயநிர்மலா சொன்னதைப் படிக்க முடிஞ்சது. பூவும் பொட்டும் படம் வந்ததுனு தெரியும். அதிலே பானுமதினு தெரியாது. எந்த பானுமதி? பி.பானுமதி ராமகிருஷ்ணாவா? ஏவிஎம் ராஜனுடனா? அல்லது பின்னால் வந்த இன்னொரு பானுமதியா? அப்போதெல்லாம் இவர் சிவகுமாருக்கு ஜோடியாக வருவார். நாட்டியம் தெரிந்தவர்னு நினைக்கிறேன். ஏபிஎன் எடுத்த படமா? நினைவில் இல்லை. ஏதோ ஓர் படத்தில் ஊர் ஊராகக் கோயில்களுக்குப் போவார்கள். அதில் கூட இவர் மதுரை அரசாளும் மீனாக்ஷி பாடலுக்கு ஆடினதாக நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர் இன்னொரு பானுமதி. 

      நீக்கு
    2. தம்பதி சமேதராக நவகிரகங்களை திருச்சிக்கு அருகில் வயலூரில் தரிசிக்கலாம்.

      நீக்கு
  26. படமும் கவிதையும் நன்றாக இருந்தது.

    தினமும் ஏறிசச்சென்று சிவனுக்கு பூசை செய்யும் விடியோ காட்சி திகைக்க வைத்தது.

    நரிக்குறவர் பெண் மொழிகள் பலவும் பேச எடுக்கும் ஆர்வம் நன்று.

    சில்பி ஓவியங்கள் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி..   படித்து, ரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  27. உங்கள் அப்பாவின் கவிதை அருமை! புதுமைப் பித்தனின் கவிதை மனதை கனக்கச் செய்து விட்டது.

    பதிலளிநீக்கு
  28. கீதா அக்கா மதுரை மீனாட்சி கோவிலில் படம் வரைந்து கொண்டிருந்தபொழுது சில்பியை பார்த்தது போல நான் திருச்சி திருவானைக்கோவிலில் படம் வரைந்து கொண்டிருந்த சில்பி அவர்களை சந்தித்திருக்கிறேன். மணியனின் இதயம் பேசுகிறது பத்திரிகைக்காக வரைவதாகச் சொன்னார். மிக அழகான, தெய்வீகமான ஓவியங்கள் அவருடையவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்...ஹும்..   நானும் அந்த கோவிலுக்கெல்லாம் போயிருக்கிறேன்.  என் கண்ணில் எல்லாம் இப்படி பிரபலமானவர்கள் பட்டதில்லையே...  கொடுத்த வைக்காத கண்கள்!

      நீக்கு
  29. நரிக்குறவர் என்னும் இனம் மறைந்து வருவது மகிழ்ச்சியே.

    பதிலளிநீக்கு
  30. பூவும் பொட்டும் படத்தில் கதாநாயகி பாரதி இல்லியா? இந்தப் பாடலில் கூட அவர்தானே நடிக்கிறார்? அந்தப் படத்தில் பானுமதி ராமகிருஷ்ணாவும் எஸ்.வி.ரங்காராவும் கணவன் மனைவியாக வருவார்கள் என்று நினைக்கிறேன். பி.பானுமதியும் நடிக்கிறாரா? அவர் பின்னாளில் சீரியல்களில்நடித்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதாநாயகி பாரதிதான்.    காட்சியில் யார்?  சரியாகத் தெரியவில்லை.  ஆனால் ஒன்று.  பாடல் மகா இனிமையான பாடல்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!