21.9.15

"திங்க"க்கிழமை 150921 :: டாங்கர் பச்சடி.


ரொம்ப சிம்பிள்ங்க..

உளுத்தம் பருப்பை எடுத்து நல்லா வாசனை வர, சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள்.  அதை ஆறவைத்து, பிறகு மிக்ஸியில் இட்டு, நைஸாக அரைத்துக் கொள்ளவும்.  அளவு உங்கள் இஷ்டம்.  ஏனென்றால் வறுத்த பொடியை எடுத்து பாட்டிலில் வைத்து எப்போது வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம்.
 

                                                                    Image result for dangar pachadi images
 
பிறகு அந்த மாவிலிருந்து தேவைக்குத் தகுந்தபடி இரண்டு மூன்று ஸ்பூன் எடுத்து ஒரு பாத்திரத்திலிட்டு, எடுத்திருக்கும் மாவுக்குத் தகுந்த அளவு உப்புச் சேர்த்து, (உப்பு அளவில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கீதா மேடத்தைக் கேட்கவும்) கெட்டித் தயிர் சேர்த்துக் கலக்கவும்.  உரை(றை?) குத்தி நாலு மணி நேரம் சென்று எடுத்த தயிர் சரியாக இருக்கும்.
 
 
பச்சடிப் பதத்துக்குக் கலக்கிக் கொண்ட பிறகு அதில் கடுகு, பெருங்காயம் (சற்று தாராளமாகவே), காய்ந்த மிளகாய் (உங்கள் காரத் தேவையைப் பொறுத்து) தாளித்துக் கொள்ளவும்.
 

                                                            Image result for dangar pachadi images
 
கரிவேப்பிலை,கொத்துமல்லி சேர்க்கவும்.  சிலர் இதில் தக்காளியைப்  வதக்காமல் பச்சையாகவே நறுக்கிச் சேர்ப்பார்கள்.  (நாங்கள் சேர்ப்பதில்லை)
 
 
அவ்வளவுதான்.  டாங்கர் பச்சடி ரெடி.   துவையல் சாதம் முதல் வத்தக்குழம்பு சாதம் வரை எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.




படங்கள்  :  நன்றி இணையம்.

20.9.15

ஞாயிறு 324 இது என்ன ஸ்கூட்டர்? + சொல்லாதே யாரும் கேட்டால் ... ... 7/7


ஏழுநாள் தொடரின் முடிவை யூகிக்காதவர்கள் எல்லோரும், இங்கே இருக்கின்ற ஸ்கூட்டர் படம், என்ன பிராண்ட், என்ன மாடல் என்று கண்டுபிடியுங்கள். 
       
                     

 சொல்லாதே யாரும் கேட்டால் ... ... 7/7 
     
முதன் முதலாக முன்பின் தெரியாத முகநூல் நண்பரிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது, என்ன பேசுவது, என்னைப் பற்றி முழுவதும் என் பதிவுகள்  மூலம் அவருக்குத் தெரிந்திருக்கும்.

அவர் என் நண்பர்கள் கூட்டத்தில் யார் என்று கூட எனக்குத் தெரியவில்லையே!

சற்றுக் குழம்பியவனாக அவரருகே சென்று ......   " நீங்க ......   ஃபேஸ் புக்குல ....  வந்து ...... நீங்க   ...... இங்கே ....எப்படி  .... "  என்று பேச ஆரம்பித்தேன்.

அவர் உடனே, " ஆஹா! ஆமாம் ஃபேஸ்புக் தான்! கரெக்ட்.  முதலில் நீங்க என்னைப் பார்த்துச் சிரித்தவுடனேயே தெரிந்துகொண்டுவிட்டேன், என்னை அடையாளம் கண்டுவிட்டீர்கள் என்று."

"இல்லை, நான் வந்து ..... அதாவது ..... உங்களை ...... "

"ஆமாம், ஆமாம் நீங்க என்னை இங்கே  எதிர்பார்க்கலை இல்லியா! ஒரே ஒரு ரிக்வெஸ்ட். நீங்க என்னை இங்கே பார்த்ததாக யாருக்கும் சொல்லிவிடாதீர்கள். கொஞ்சநாளைக்கு யார் தொந்தரவும் இல்லாம இருக்கலாம் என்று வந்திருக்கேன். ப்ளீஸ் ....... " என்று சொல்லியவாறு வேகமாக பார்க்கை விட்டு வெளியேறினார்!  

      
  


(ஹி ஹி அம்புட்டுதான்)
             

19.9.15

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்தவாரம் + சொல்லாதே யாரும் கேட்டால் ... 6/7




1)  மாணவர் சமுதாயம் இன்றைய கால கட்டத்தில் படிப்பு மட்டும் அல்லாமல் பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்து அசத்துகின்றனர். மக்களுக்கு பயன்படும் வகையில் பல வித பொருட்களை கண்டுபிடித்து தங்கள் தனி திறமைகளை வெளி காட்டுகின்றனர்....  பிளஸ் 1 மாணவன் அஜய் விஷால்.
 


2)  முன்பு தமிழ்நாட்டுக்குள் வந்த செய்தியாக விஸ்ராந்தி பற்றிப் பார்த்தோம்.  இப்போது மீண்டும் சாவித்திரி வைத்தி பற்றி அகில இந்திய அளவில்.
 


3) T3K.  சென்னையை அழகாக்க முயற்சிப்பவர்கள்.
 



4)  கல்வித்தரம், கட்டமைப்பு வசதி மற்றும் சுகாதார வசதிகளில் தன்னிகரற்ற வகையில் வேகமாக வளர்ந்து வருகிறது மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.  தலைமை ஆசிரியரின் முயற்சியில், தனியார் பங்களிப்புடன்.
 


5)  ஜாலி ஹோம்.
 



6)  திண்டுக்கல் அருகே பஞ்சாயத்து தலைவர் ஒருவர், மக்கள் பங்களிப் புடன் பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள் அமைத்து ஒரு முறை பெய்யும் 2.5 செ.மீ. மழை யில் 1.70 கோடி லிட்டர் தண்ணீ ரைச் சேமித்து, குடிநீர் பிரச்சினைக் குத் தீர்வுகண்டு சாதனை படைத் துள்ளார்.  சாதனை மனிதர் வாகரை பஞ் சாயத்து தலைவர் கே.சின்னான்,  அனைவராலும் பின்பற்றப் படவேண்டியவர்.
 



7)  ஈக்களும் புழுக்களும் குடியிருக்கும் சூழலில், கால்கள், கைகள், மர்ம உறுப்புகள் அழுகிய நிலையில், குடும்பத்தாரால் கைவிடப்பட்ட நிலையில், ஆதரவற்றுக் கிடப்போரை மீட்டு இல்லங்களில் சேர்க்கிறார், 'அகல் பவுண்டேஷன்' வெங்கடேஷ்.
 


8)  விளையும் பயிர்.  ஆனால் இது எந்த அளவு சாத்தியம், தலையை அசைத்தாலே ஆன் ஆகி,  ஆஃப்  ஆகி விடும் என்றால் பயனிருக்குமா என்றெல்லாம் தோன்றினாலும் தெரியாமலா விருதுக்குத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்? முயற்சிக்குப் பாராட்டுகள்.
 


9)  குறை சொல்லிக் கொண்டே இருப்பதைவிட, செயலில் நாமே இறங்கி விடுதல் நல்லது!  ரிசர்வ் வங்கியிலிருந்து ஒய்வு பெற்ற 65 வயது அஜித் லக்ஷ்மிரத்தன்.
 



10)  பேராசை இல்லை.  வாழ்க்கையை நடத்தத் தேவையான அளவு பணம், இல்லை, இல்லை, காசு போதும்!  அதற்குமேல் வேண்டாம்.  வரதராஜன், 75 - ஆதிலெட்சுமி,72 தம்பதியர்.
 



11)  தமிழகத்தில் இருந்து, ஆயிரக்கணக்கான டிரைவர்கள் லோடு ஏற்றி வந்தாலும், அதில் நான் மட்டும் தான் பெண் என்பது, ரொம்ப பெருமையாக இருக்கும். இப்போது, டிரைவராக மட்டுமே, மாதம், 30 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன். சொந்த லாரி என்பதால், கிடைக்கும் கூடுதல் லாபம் தனி. கஷ்டம்னு நினைத்தால், வீட்டை விட்டு வெளியே வர முடியாது; முடியும்னு நினைத்தால் எந்தச் சுமையும் சுகமாக மாறிவிடும்.  'கல்பனா சாவ்லா' விருது பெற்ற, லாரி ஓட்டுனர் ஜோதிமணி
 


12)  எத்தனை தடைகள்!  அத்தனைத் தடைகளையும் உடைத்தது தன்னம்பிக்கை மற்றும் முயற்சி என்னும் நேர்மறை எண்ணங்கள்தானே...  பாவன் கௌர்.
 



13)  இந்த 'பைக்கிற்கு' தேசிய அளவில் முதல் பரிசு கிடைத்துள்ளது.  ஒருமுறை 'சார்ஜ்' செய்தால் 60 கி.மீ., செல்லும். மின்சாரமின்றி இடையில் நின்றாலும் 5 நிமிடங்கள் கழித்து இயங்கினால் கூடுதலாக 5 கி.மீ., வரை செல்லும்.   
 
 
மாற்றுத் திறனாளிகளால் தங்கள் பைக்கை 'ரிவர்சில்' இயக்க முடியாது. இதற்கு பிறர் உதவியை நாட வேண்டியுள்ளது. இதை தவிர்க்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 'இ பைக்' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி ஆட்டோ மொபைல் பேராசிரியர் ராஜவேல் தலைமையில் மாணவர்கள் முகமது ஷகில், சப்தகிரி, நவீன்குமார், சரண்பாண்டியன், அஸ்வின்பாபு, நிஷாந்த் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.  


 


================================================================


சொல்லாதே யாரும் கேட்டால் ... 6/7  
    
எனக்கு அவரைத் தெரியவில்லை. அவருக்கு என்னைத் தெரிந்திருக்கிறது.

எப்படி ?

என் முகம்?......   முகம் ........!    

அட! இப்போ தெரிஞ்சிடுச்சு. முகநூல்.

நான்தான் என்னுடைய முகத்தை முகநூலில் ஆதிகாலம் முதல்  மாற்றாமல் அப்படியே போட்டு வைத்திருக்கின்றேனே!
      
(யாருங்க இந்த இளிச்சவாயன்?)  
      

ஃபேஸ்புக்கில் இருக்கின்ற என்னுடைய மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு என் முகம் நன்கு பரிச்சயம் ஆகி இருக்குமே!

இவர் என் படத்தை facebook ல பார்த்திருப்பார். அதனால்தான் என்னைத் தெரிந்திருக்கின்றது!

இதோ இந்த ரவுண்டில் அவரை நெருங்கினேன்.

அவர் பெஞ்சிலிருந்து எழுந்து, என்னிடம் பேசத் தயாராக நின்றுகொண்டிருந்தார்.

(தொடரும்)

18.9.15

வெள்ளிக்கிழமை வீடியோ 150918 & சொல்லாதே யாரும் கேட்டால் ... ... 5/7

           


                  
சொல்லாதே யாரும் கேட்டால் ... ... 5/7  


இந்த ஊரில் தமிழ் பேசுபவர்கள், தமிழ் தெரிந்தவர்கள் அதிகம். அதனால இதுல விசேஷமா எதுவும் இல்லை.
           
கட்டிடத் தொழிலாளர்கள் தொடங்கி காய்கறிக் கடைக்காரர் வரை எல்லோரும் தமிழ் பேசுகிறார்கள்.
             
ஏதேனும் கல்யாண மண்டபத்தில் உறவினருக்கு நண்பர் அல்லது நண்பருக்கு நண்பர் என்று பார்த்துப் பேசி இருப்பேனோ? ஊஹூம் - உறவினர்களிடமே அதிகம் பேசாதவன் என்று எனக்குப் பெயர்.
       
ஏதாவது ரயில் சிநேகமாக இருக்குமோ? சான்ஸ் இல்லை. 
    
(இது என் படம் இல்லை!) 


ரயிலில் நான் தனியாக வரும்பொழுதெல்லாம்  ஒன்று புத்தகம் படிப்பேன் அல்லது ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பேன். இல்லையேல் கண்ணை மூடிக்கொண்டு ஆத்மவிசாரம் பண்ணிக்கொண்டு வருவேன்! (திருமதியுடன் வரும்பொழுது திருமதியின் பேச்சு மட்டும்தான் கேட்டுக் கொண்டிருக்கும்!)
             
எனக்கு அவரைத் தெரியவில்லை என்று இருக்கும் பொழுது, அவருக்கு மட்டும் எப்படி என்னைத் தெரிந்திருக்கும்?

(தொடரும்)
       

17.9.15

சொல்லாதே யாரும் கேட்டால் ..... 4/7


சொல்லாதே யாரும் கேட்டால் ..... 4/7  
 
    
இதோ இந்த ரவுண்டில் அவரருகே சென்ற சமயம் .....

அவருடைய அலைபேசியில் அவருக்கு அழைப்பு வந்துவிட்டது.

"ஹலோ ஆமாம் .... தெரியும், தெரியும், சொல்லுங்க. ஓ அப்படியா! ...... " தொடர்ந்து பேசிக்கொண்டே என்னைப் பார்த்துத் தலை அசைத்தார். மீண்டும் புன்னகை.

தமிழ் பேசுகிறார்! தமிழ் தெரிந்தவர். இது எங்காவது என் மூளையில் பெல் அடிக்கிறதா என்று பார்த்தேன்.

ஊஹூம். மண்டை காய்கிறது. யார் அவர்?

(தொடரும்)

       

16.9.15

சொல்லாதே யாரும் கேட்டால் .... 3/7



     சொல்லாதே யாரும் கேட்டால் ...  3/7
   
ஒருவேளை ... முன்பே  எங்காவது பார்த்து, பேசி இருப்பேனோ?

சில சமயங்களில், தபால்காரரை அவருடைய யூனிஃபாரம் அல்லாத உடையில் அல்லது சலவைக்கடைக்காரரை சலவைக்கடை அல்லாத பிற இடங்களில் பார்த்தால் எனக்கு சட்டென்று ஞாபகம் வராது.

இவருக்கு விதவிதமாக யூனிஃபாரம் மனதால் போட்டுப் பார்த்தேன். சிரிப்புதான் வந்தது. வேறு ஏதும் ஞாபகம் வரவில்லை.

'அடுத்த ரவுண்டில் அவரையே கேட்டுவிடுவோமா?' என்று எண்ணமிட்டபடி, நடந்தேன்.

(தொடரும்)
        

15.9.15

சொல்லாதே யாரும் கேட்டால் 2/7



                                                 சொல்லாதே யாரும் கேட்டால்    2/7
            
  

இரண்டாவதுச் சுற்று வரும்பொழுது சந்தேகமாக அவர் இருந்த திக்கில் பார்த்தேன்.

மீண்டும் புன்னகை.

'எனக்குப் பின் பக்கத்தில் யாராவது வருகின்றார்களா?' என்று திரும்பிப் பார்த்தேன்.

யாரும் இல்லை.

அப்போ, என்னைப் பார்த்துத்தான் புன்னகைக்கின்றார் போலிருக்கு.

எதற்கும் இருக்கட்டும் என்று பதில் புன்னகை ஒன்றை வீசிவிட்டு நடைப் பயணத்தைத் தொடர்ந்தேன்.

(தொடரும்)