செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :கோபம் பாபம் பழி - நெல்லைத்தமிழன் - சீதை 17




     சீதா ராமன் மன்னிப்பு தொடரில் நண்பர் நெல்லைத்தமிழனின் படைப்பு இந்த வாரம்.  ஒரு விசேஷம்...  தான் எழுதிய கதைக்கு தானே படமும் வரைந்து அனுப்பியிருக்கிறார்.






அன்புள்ள ஸ்ரீராம்,

ப்ளாக் வைத்திருக்காததுனால, எங்கிட்டலாம் கதை கேட்டு வாங்கிப் போட  மாட்டேங்கிருங்கீங்க. கேட்டாத்தானே யோசிக்கத் தோணும். நானெல்லாம் சிறுகதை எழுதிப் பழக்கமில்லாதவன். ஆனாலும், எதையும் முயற்சி செய்தால்தானே வசப்படும். இந்தத் தடவை, ‘சீதை ராமனை மன்னித்தாள்’ அப்படீங்கற வரியோட கதை முடியணும்னு சொன்னதினால, யார் வேணுமானாலும் எழுதலாம் என்று புரிந்துகொண்டு, ஒரு கதை எழுதியனுப்பியிருக்கேன். 


      அன்புள்ள நெல்லைத்தமிழன்..   உங்களிடம் கதை கேட்காமல் யாரிடம் கேட்கப்போகிறேன்?!  நிச்சயம் நானே கேட்டிருப்பேன்.  அதற்குள் நீங்களே கொடுத்து விட்டீர்கள்.  நன்றி.  -  ஸ்ரீராம் 


==============================================================================



கோபம் பாபம் பழி


நெல்லைத்தமிழன்




சீதாவுக்குத் தன் வாழ்க்கையே கசந்தது. இன்னும் எத்தனை நாளைக்கோ இந்த உயிர் ஊசலாடப்போகிறது. எப்போதும்போல் வெறிச்சோடிக் கிடக்கும் வீடே கதியாகிவிட்டது. ரேழியில் இருந்த அப்பாவின் போட்டோவைப் பார்த்ததும் பெருமூச்செறிந்தாள்.


எத்தனை முறை அப்பா சொல்லியிருப்பா. ‘கொழந்த.. உனக்கு சீதைன்னு பேர் வைக்கக்கூடாதுனு எத்தனையோ பேர் எங்கிட்ட சொன்னாம்மா. பொண்ணு வாழ்க்கை, ‘சீதை’யைப் போல் கஷ்டப்படும்படியாயிடும்னு. எனக்கு எங்க அம்மா சீதாலட்சுமி மேல உள்ள அன்பால உனக்கு சீதைன்னு பேர் வச்சேன். உனக்கு கஷ்டம்னா என்னன்னே தெரியாம வளத்துட்டேன். பக்கத்தூரிலேயே வேலைபார்க்கிற வாத்தியாருக்குத்தான் கல்யாணம் பண்ணிக்கொடுத்துருக்கேன். ஒரு பிக்கல் பிடுங்கல் இல்லை. உங்க வாழ்க்கையும் நல்லாத்தான் போயிண்டிருக்கு. எல்லாம் பகவான் அருள். உனக்கு ஒரு குழந்தை பொறந்துட்டா நான் நிம்மதியா கண்ணை மூடிடுவேன்’.  அவருக்கு அப்போ தெரியலை.. வாழ்க்கைல கஷ்டம் என்னைத் தேடி வரும்னு. 


*****



சீதாவின் கணவர் கிருஷ்ணமூர்த்தியும் ரொம்ப நல்லவர்தான். என்ன ஒண்ணு, எல்லாத்துலயும் ஒரு ஒழுங்கு எதிர்பார்ப்பார். ஒழுங்கு தவறினா, அளவிட முடியாத கோபம். யார்கிட்டயும் போய் கையேந்தக்கூடாதுன்னு மனுஷனுக்கு ஒரு வைராக்யம். சீதாவுக்கும் தன் ஆம்படையான் ஒழுங்குமுறையோட இருக்கறது பிடிக்கும்தான். அதுனாலதானே, ஊர்ல நாலு பேர் வந்து இவர்கிட்ட வந்து பிரச்சனைகளைப் பேசி தீர்வு வாங்கிண்டுபோறான்னு அவளுக்கு ரொம்பப் பெருமை. 



கோபம் ஜாஸ்திதான். எல்லோருக்கும் ஏதாவது குணக்கேடு இருக்கத்தானே செய்யும். அவருடைய மனசுபோல நடந்துவந்ததனால் அவள்கிட்ட கோபத்தைக் காண்பிக்கவேண்டிய சந்தர்ப்பமே அவ்வளவாக இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் அவருடைய அதீத கோபம் என்ன விளைவைக் கொண்டுவரப்போறதோன்னு சீதாவுக்கு எப்போவுமே மனசுல பயம். போதாதற்கு, ஒரு பிரச்சனைனா சொல்றதுக்கு மாமனாரும் இல்லை. அவளுக்குக் கல்யாணமான சில மாதங்களிலேயே அவர் இறந்துவிட்டார். மருமகள் கையால கொஞ்சமாதமேனும் அவருக்கு சாப்பிடக் கொடுத்துவைத்திருந்தது. மாமியாரோ, சீதா கணவர் சின்ன வயசாக இருக்கும்போதே காலமாகிவிட்டாராம்.


“அயோத்தி ராமர் மாதிரி, நமக்கு ரெண்டு குழந்தையாவது வேணும்னா”. ஒரு நல்ல இரவில், கல்யாணமான ஓரிரு மாதங்களில், அவர் வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டிருக்கும் சமயம் சீதா சொன்னாள். “ஒண்ணும் வேணாம்டி. ஒரு குழந்தையே போறும். அவனை நல்லா வளத்தாலே போதும். எதுக்கு நிறையப் பெத்துண்டு அதுகளுக்காக இன்னும் இன்னும்னு பணத்தத்தேடி ஓடணும்’”.


“வேணாம்டி” என்று அச்சானியமாக அவர் சொன்ன நேரமோ என்னவோ, சீதாவுக்கு சூல் கொள்ள 10 வருடமாகிவிட்டது. அவள் அப்பா, எத்தனையோ வேண்டுதல்கள் நிறைவேற்றியும், தன் ஒரே மகளுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லையே என்ற ஏக்கத்திலேயே இறந்துவிட்டார். 




பையன் ராமபத்ரன், சீதாவுக்குச் செல்லம்தான். தாத்தா பேரைத்தான் ஆசையா வச்சது. ஆனா கூப்பிடறதுக்கு வாசு. படிப்புல கொஞ்சம்தான் கவனம். ரொம்ப விளையாட்டுப் புத்தி. கிருஷ்ணமூர்த்திக்கு பையன் படிப்புல கொஞ்சம் கவனக்குறைவாக இருக்கறது ரொம்ப வருத்தம்தான். அவன் ஸ்கூல் விட்டு சீக்கிரம் வந்துடுவான். இவர், வேலையெல்லாம் முடிந்து, இல்லாதப்பட்டவாளுக்கு வச்சிருக்கற டியூஷன்லாம் முடிந்து வீட்டுக்கு வர ஒண்ணு ரெண்டு மணி நேரமாயிடும். அவர் வர்றதுக்குள்ள, பையன் புத்தகத்தோடு ரெடியா இருக்கணும். சாப்பிட்ட பிறகு 1 மணி நேரமாவது அவனோட உட்கார்ந்து அவனுக்கு பாடம்லாம் சொல்லித்தருவார். ஆனாலும் வாசுவுக்கு படிப்பு சுமாராத்தான் வந்தது. அப்பா ஸ்கேலை எடுத்துடுவாரேன்னு பயந்துண்டுதான் அவரோட படிக்க உட்காருவான். அவரும், அவன் தவறு செய்தால், உடனே கை நீட்டிவிடுவார். தடுக்க சீதாவுக்கு பயம்.



ஒரு நாள் இரவு, மெதுவா அவர்கிட்ட,





“ஏன்னா பையனை அடிக்கறேள். கொஞ்சம் கடுமையா சொன்னா பத்தாதா. வளர்ற பையன்”


“போடி.. உனக்கு ஒண்ணும் தெரியாது. அடியாத மாடு படியுமாடி. பயமில்லாமல் படிப்பு எங்கடி வரும்” என்று அவள் வாயை அடைத்துவிட்டார்.


அவனுக்கு வயது ஏற ஏற, வாசுவுக்கு அப்பாவுடன் ஒட்டுதல் இல்லை என்பது அவளுக்குத் தெரிந்தது. அப்பா இருக்கும்போது அடங்கி நடக்கறமாதிரி இருந்தவன், அப்பா இல்லாதபோது, அவரைக் குறைசொல்லி அவளிடம் சொல்லுவான். சீதாவுக்குத்தான் என்ன செய்யறதுன்னு தெரியலை.


“டேய்.. உன் நல்லதுக்குத்தாண்டா அவர் கஷ்டப்படறார். வாத்தியார் பிள்ளை படிப்புல சோடை போலாமா’


“எனக்கு என்ன முடியுமோ அவ்வளவுதான் மார்க் வாங்க முடியும். ஹிஸ்டரி வாத்தியார், அவர் பையனை ஸ்விம்மிங்க் கிளாஸ்லலாம் சேர்த்திருக்கார். என்னோட படிக்கற ராபர்ட் வீட்டுல, அவனுக்குன்னு தனி ரூம், டிவி இதெல்லாம் கொடுத்திருக்கா. அவனும் என்ன மாதிரிதான் மார்க் வாங்கறான். எப்போப் பார்த்தாலும் படி படின்னு இவரோட டார்ச்சர் தாங்கலை. ஒரு நாள் எனக்குக் கோபம் வந்ததுன்னா, அப்பா அடிக்கும்போது திருப்பி அடிச்சுடுவேன். அப்பத்தான் அவருக்குப் புரியும்’


இவளுக்குத்தான் என்ன பண்ணறதுன்னு தெரியலை. ஒரு நாள், ராமு இல்லாதப்போ, அவர்கிட்ட மெதுவா விஷயத்தை ஆரம்பித்தாள்.


“ராமு பெரியவனா ஆயிண்டிருக்கான். பெரிய பையன்ட கை நீட்டாதீங்கோ. அவனை ரொம்ப கட்டுப்படுத்தினால் படிக்கறதுலயே அவனுக்கு வெறுப்பு வந்துடும். வீடுன்னாலே அவனுக்கு எரிச்சலாயிடப்போறதுன்னா.”


“போடி அசடே.. அவன் நல்லாப் படிச்சாத்தானே நல்ல படிப்பு படிக்கவைக்கமுடியும். இந்த வருஷம் 8வது முடிந்துடும். அப்புறம், கண்மூடி கண் திறக்கறதுக்குள்ளே 10வது பொதுத் தேர்வு வந்துடும். என் பையன்னுட்டு அவனுக்குத் தேவையான பிரிவு கொடுக்கமுடியுமா? இப்போல்லாம் படி படின்னு சொன்னா கசப்பாத்தான் இருக்கும். அப்புறம் பின்னால, நல்ல படிப்பு படித்து வேலை பார்க்கும்போதுதான் நாம பட்ட கஷ்டம் அவனுக்குத் தெரியும். கண்டிப்பக் காட்டாம இப்பவே அவன்ட ஈஷிண்டிருந்தா, நாளைக்கு அவன் வாழ்க்கை என்னாறது? இப்போ எங்க போனான்? இன்னும் ஒரு வாரத்துல முழுப்பரீட்சை வருது”


*****


அவன் பத்தாவது படிக்கும்போதுதான் அது நிகழ்ந்தது. அவனோட கூடப் படிக்கிற ராஜிங்கற பொண்ணோட அவன் பேசிண்டு திரியறது. கோவில்ல, சயின்ஸ் வாத்தியார் பெண்டாட்டி இதைச் சொன்னபோது, அவளுக்கு ஒண்ணும் வித்தியாசமாத் தெரியலை. கூடப் படிக்கிறா. பாடத்தைப் பற்றி இல்லைனா பொதுவா பேசிண்டிருப்பாங்க. இது ஒரு விஷயமான்னு தோணித்து. ஆனா, ஒரு நாளைக்கு ஸ்கூல்லேர்ந்து வந்த இவர், வாசுவைப் போட்டு ஸ்கேலால் பளார் பளார்னு அடிக்கும்போதுதான் பிரச்சனை என்னன்னு தெரிஞ்சுது.


“வெட்கமில்லை.. பொம்பளைப் பிள்ளையோடு இளிச்சுப் பேசிட்டிருக்கயே. படிக்கற வயசுல இது என்ன பிக்காலித்தனம். அவள்ட போய் ஐ லவ் யூன்னு சொன்னியாமே.. என்ன தைரியம்’னு உறுமினார்.


“அப்படில்லாம் இல்லப்பா.. ஃப்ரண்ட்ஸ் சும்மா இப்படி வம்பு பண்ணிட்டாங்க. விளையாட்டுக்குச் சொன்னேன்பா’ன்னு அவன் அழுதுகொண்டே சொன்னபோது, இந்த மனுஷர்மேல் கோபம் வந்தது. வளர்ற பையன்மேல நம்பிக்கை வேணாம். சின்ன விஷயத்துக்கெல்லாம் பையனை யாராவது அடிப்பாளா. சே. என்று தோன்றியது.


அந்த வருஷம் பொதுத்தேர்வில், ரிசல்ட் வர சமயம், வாசு இயல்பாகவே இல்லை. சரி.. குழந்தை ரிசல்ட் நினைத்து பயப்படறான்னு தோணித்து. “பயப்படாதேடா.. எல்லாம் நல்லாத்தான் வரும். மார்க் ஷீட் வரும்போதுதான் அப்பா கொஞ்சம் கோபப்படுவார். அப்போ பாத்துக்கலாம்டா” என்றாள். அவளுக்குத் தெரியுமா, அவள் வாழ்க்கையை ரெண்டு நாளில் புரண்டுவிடப்போகிறது என்று.


ரெண்டு நாள் கழித்து சாயந்திரம் வேக வேகமா வந்தான். இவளுக்கோ தூக்கக் கலக்கம். சாப்பாடு மேசைல வச்சிருக்கேன் என்றாள். ‘ஒண்ணும் வேண்டாம். பசியில்லை. வெளில ஃப்ரெண்டைப் பார்த்துட்டு வந்துர்றேன்’ என்று சொன்னவாறே வெளியே போய்விட்டான். இரவு அவர் வேகவேகமாக வீட்டுக்குள் நுழைந்தபோதுதான் அவளுக்கு ஏதேனும் பிரச்சனையோ என்று தோன்றியது.


“எங்க உம் புள்ளை.. உருப்படாதவன்”


“ஏன் வந்ததும் வராததுமா அவனைத் திட்டறேள். வெளில எங்கயோ ஃப்ரெண்ஸைப் பார்த்துட்டு வர்றேன்னு போயிருக்கான். என்னவோ லேட்டாறது”


மேசை டிராயர் திறந்திருப்பதையும், கொடியில் இருந்த அவன் டிரெஸ்ஸைக் காணாததும் அவளை என்னவோ செய்தது. அவசர அவசரமா டிராயரைப் பார்த்தாள். பணம் வைத்திருக்கும் பர்ஸைக் காணவில்லை.


“ஏன்னா.. இங்க இருந்த பர்ஸை எடுத்தேளா”.


“நானே இப்போதான் வர்றேன். அதுக்குள்ள அதை எடுத்தயா இதை எடுத்தயான்னுட்டு”. “ஒழுங்காப் படிக்கிற புள்ளையைப் பெத்திருந்தாத்தானே. பரீட்சைல ஃபெயிலாயிட்டான். படிப்பை விட்டுட்டு பொம்பளைப் பிள்ளைகளோட ஈன்னு இளிச்சிட்டிருந்தா எங்க படிப்பு வரும். போதாக்குறைக்கு எப்போவும் அவனோடயே ஈஷிண்டிருக்கற அம்மா”. சத்தம் போட்டுக்கொண்டிருந்தபோது வாசு மெதுவாக உள்ளே நண்பர்களுடன் நுழைந்தான். அவனைப் பார்த்ததும் சீதாவுக்கு அப்பாடா என்றிருந்தது. கிருஷ்ணமூர்த்திக்கோ ஆத்திரம் தலைக்கேறியது.


“என்ன படிச்சுக் கிளிச்சுட்டனு ஊர் சுத்திட்டு வர்றே. பத்தாவது பாஸ் பண்ணத் துப்பில்லை. இதுல ஃப்ரெண்ட்ஸோட ஊர் வம்பு” என்று கையில் கிடைத்த பிரம்பால் அவனை அடித்தார். நண்பர்கள் முன்னால் பெற்ற அவமானம், வலியில், புயலென வெளியேறினான் வாசு. ‘டேய் வாசு வாசு’ என்று சீதா  கூப்பிடக் கூப்பிட தெருவில் இறங்கிச் சென்றுவிட்டான்.





“ஏன்னா போய் பாருங்களேன். ராத்திரி வேளைல வெளில வேகமாப் போறானே”.  


“வேற எங்க போவான்… எல்லாம் ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்குப் போயிட்டு தானா வருவான். கழுதைக்கு எங்க போக்கிடம்”.  சீதாவுக்கு பதில் சொன்னாலும், அவருக்கு மனதில் கொஞ்சம் கலக்கம் ஏற்பட்டது. இப்படி இவன் போகமாட்டானே என்று தோன்றியது. சரி சரி.. ராத்திரி வீட்டுக்கு வந்துதானே ஆகணும்.


ஆச்சு.. அது நடந்து பதினைஞ்சு வருஷமாகிடுத்து. போலீசுல சொல்லி, எங்க எங்கயோ தேடி, விளம்பரம்லாம் கொடுத்து.. அவனைக் கடைசி வரைல கண்டுபிடிக்கவே முடியலை. அலைச்சல்தான் மிச்சம். சீதாவால் தன் கணவனை மன்னிக்கவே முடியலை. அன்றைக்குப் பேசுவதை நிறுத்தினவள்தான். கடைசிவரை அவரோடு பேசவேயில்லை. ஹால்ல இருந்த போர்டுல என்ன சொல்லணும்னாலும் எழுதுவா. அவளுடைய கோபத்திலிருந்த நியாயத்தைப் புரிந்துகொண்ட கிருஷ்ணமூர்த்தியும் போர்டுல எழுதித்தான் COMMUNICATE பண்ணுவார். 



தான் செய்த தவறை நினைத்து நினைத்து கிருஷ்ணமூர்த்தி மறுகினார். வேலையில் இருந்த ஈடுபாடு குறைந்தது. எங்கெங்கோ பையனைத் தேடி அலைந்து ஏமாற்றமடைந்தார். சீதா, என்னதான் வீட்டுவேலைகளையெல்லாம் செய்துகொண்டுவந்தாலும், கணவரோடு பேசாமலேயே இருந்துவிட்டாள். வேலையை விட்டுவிட்ட மறுநாள் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் இறந்தார். அவரோடு வேலை பார்த்த மற்ற ஆசிரியர்கள், அவருடைய பென்ஷன் பணம் சீதாவுக்குக் கிடைக்கும்படியான எல்லா வேலைகளிலும் துணையிருந்தார்கள். இறந்தபோது வருத்தமாக இருந்தபோதும் அவளால் அவருடைய கோபத்தால் வந்த விளைவை மறக்க முடியலை. மன்னிக்கவும் தோணலை.


****


ஆச்சு.. கணவர் மறைந்து 10 வருஷமாச்சு. பையன் எங்க கஷ்டப்படறானோ.. என்னவா இருக்கானோ என்று அவள் எண்ணாத நாளில்லை. கொழந்தை படத்தையாவது பார்ப்போம் என்று அவளுக்குத் தோணியது. அவனது போட்டோவைப் பார்க்கும்போதெல்லாம் மனது தாளமுடியாமல் கணவர், அலமாரியின் மேல் இருந்த கல்யாண ஆல்பம் பொட்டியில் வைத்தது ஞாபகம் வந்தது. அலமாரிக்கு மேல இருந்த பொட்டியைத் தொறந்தாள். 25-30 வருஷம் கவனிப்பாரற்றுக் கிடந்ததனால் ஒரே தூசியும் தும்பட்டையுமாக இருந்தது. வாசு போட்டோ, மேலாப்பிலேயே இருந்தது. அதன் மேல் ஒரு கவர் வைத்துக் கட்டப்பட்டிருந்தது. சீதை அதை எடுத்துப் படித்தாள்.


“அம்மா சீதே… நீ பேசாமல் இருப்பது எனக்கு சிறையில் இருப்பதுபோல்தான் இருக்கிறது. உன் வேதனை புரிகிறது. நான் அம்மா இல்லாமலேயே வளர்ந்தவன். கெட்டுப்போயிடக்கூடாதுன்னு எங்க அப்பா எவ்வளவு கண்டிப்போட என்ன வளர்த்தார் தெரியுமா. நான் நல்லாப் படிக்கணும்னு தன்னுடைய சுகத்தையெல்லாம் விட்டுவிட்டு எனக்காகவே வாழ்ந்தார். அம்மா இல்லாத குறை எனக்குத் தெரியக்கூடாதுன்னு எங்கிட்ட முடிஞ்ச அளவு அன்பாத்தான் இருந்தா. அவரைப் பத்தி நான் புதுசா உனக்குச் சொல்லவேண்டியதில்லை. அவருக்கு உன் கையினால சோறு போட்டு கடைசி காலத்தில் பார்த்துக்கொண்டதை என்னால் மறக்கவே முடியாது.



என் பையன் நல்லா இருக்கணும், நல்ல வேலைக்குப் போய் நல்ல வாழ்க்கை வாழணும்னுட்டு தான் அவங்கிட்ட ரொம்ப கண்டிப்பா இருந்தேன். ஆசிரியராவே காலம்பூரா இருந்துட்டதுனால, ஸ்கேல ஓங்கறத என்னால விட முடியலை. கண்டிப்பும் கடுமையும் ஒழுக்கத்துக்கு ரொம்ப முக்கியம்னுதான் நான் படிச்சிருக்கேன். அதையேதான் நான் வேலையிலும் செய்திருக்கேன். என்னோட கண்டிப்பு எத்தகைய விளைவை ஏற்படுத்திடுத்து. அவன் என் பையன்னு நினைச்சேனே தவிர, உனக்கும் அவன் பையன்தான், நீ ‘அடிக்காதீங்கோ.. அன்பாச் சொல்லுங்கோ’ன்னு சொன்னதையெல்லாம் நான் மனசுல போட்டுக்கலையே. எங்க அப்பா என்னைத் தாயோட கருணையையும் காட்டி வளர்த்தா மாதிரி நான் வளக்கலையே. அதீதக் கண்டிப்பைக் காட்டி அகல் விளக்கை அணைச்சுட்டேனே. உன் கண்ணைப் பிடிங்கிட்டேனே.


‘நக் க்ரோதோ நச மாச்சர்யம்’னு தினமும் பாராயணம் பண்ணினவனுக்கு கோபத்தினால் இப்படி பாவமும் வருத்தமும் வந்து சேரும்னு தெரியாமப் போயிடுத்து.


எனக்கு நீ பேசாமல் இருந்து கொடுத்த தண்டனையும், என் பையன் என்னை விட்டுப் போய் எனக்குக் கொடுத்த தண்டனையும் போதும். என்னைக்காவது இந்தக் கடிதம் படிக்க நேர்ந்தால், உன்னிடம் மனசார நான் மன்னிப்புக் கேட்கிறேன் என்பதை நீ புரிஞ்சுண்டா போதும்.


கடவுள் கிருபையால வாசு என்னைக்காச்சும் உங்கிட்ட வந்து சேர்ந்தான்னா, அவன் கிட்டயும் நான் மன்னிப்புக்கேட்டேன்னு சொல்லு.


உன்னிடம் எப்போதும் அன்பு வைத்திருக்கும்


கிருஷ்ணமூர்த்தி”


மேசையிலிருந்து சுவற்றைப் பார்த்தாள் சீதா. பெரிதாக மாட்டப்பட்டிருந்த அவளின் கல்யாண போட்டோ கண்ணில் பட்டது. கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. சீதாலட்சுமி,  யக்ஞராமன் என்ற கிருஷ்ணமூர்த்தி என்ற பேரைப்பார்த்ததும் துக்கம் தொண்டையை அடைத்தது. பிள்ளையின் பிரிவில் அவரும்தானே கஷ்டப்பட்டிருப்பார். தன்னுடைய தண்டனையும் அவரை எவ்வளவு வருத்தியிருக்கும். கண்களில் கண்ணீர் பெருகியது. அந்த க்ஷணத்தில், சீதை, ராமனை மன்னித்துவிட்டாள்.






தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு க்ளிக்கி வாக்களிக்கவும்!


125 கருத்துகள்:

  1. >>> அவனுக்கு வயது ஏற ஏற, வாசுவுக்கு அப்பாவுடன் ஒட்டுதல் இல்லை என்பது அவளுக்குத் தெரிந்தது. <<<

    பதின்ம வயதில் மிகப் பெரிய கொடுமை இது.. ஏன் இப்படி நேரிடுகின்றது?...

    கதையும் அதனைக் காட்சிப் படுத்திய சித்திரமும் அருமை..

    பதிலளிநீக்கு
  2. பிள்ளையைக் காணாமல் அடித்து விட்டு பெற்ற வயிறு எப்படித் துடித்திருக்கும்?..

    அந்தக் கொடுமை யாருக்கும் வரக்கூடாது..

    பதிலளிநீக்கு
  3. நடுவிலே கொஞ்சம் சின்ன எழுத்தா, பொடிப் பொடியா வருது. படிக்கக் கஷ்டமா இருக்கு. மாத்துங்க! :(

    பதிலளிநீக்கு
  4. என்னதான் ஞான வைராக்கியம் எல்லாம் இருந்தாலும் பலர் வழுக்கி விழும் இடம் - அதீத கண்டிப்பு!..
    யக்ஞராமன் ஆத்மா சாந்தி அடையட்டும்!..

    பதிலளிநீக்கு
  5. அதீத கோபம் என்ன விளைவைக் கொண்டுவரப்போறதோன்னு சீதாவுக்கு எப்போவுமே மனசுல பயம். //

    சீதா நினைத்தது போலவே ஆகி விட்டதே!

    அதீத பாசமும், அதீத கோபமும் விளைவை விபரீதமாக தான் கொண்டுவரும் என்பதை கதை உணர்த்துகிறது.

    //ஹால்ல இருந்த போர்டுல என்ன சொல்லணும்னாலும் எழுதுவா. அவளுடைய கோபத்திலிருந்த நியாயத்தைப் புரிந்துகொண்ட கிருஷ்ணமூர்த்தியும் போர்டுல எழுதித்தான் COMMUNICATE பண்ணுவார். //

    உனக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து இருக்கிறேன் படித்துப் பார் என்று போர்டில் எழுதி வைத்து இருக்கலாம்.
    அப்போதே சீதை மன்னித்து இருப்பாள். கணவரை இழக்கும் கொடுமை நடந்து இருக்காதோ! என்ற் நினைப்பு வருகிறது. வயதான காலத்தில் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக வருத்ததை பங்கு போட்டுக் கொண்டு மீதி காலத்தை ஓட்டி இருக்கலாம் மகனின் வரவிற்காக.

    25 ,30 வருஷம் கழித்து கடிதம் படிக்க படுவது மிகவும் கொடுமை.

    அப்பாவின் கண்டிப்பில் எப்போது பாசம் ஓளிந்து இருக்கும். அம்மா பாசத்தை வெளிபடுத்தி விடுவாள்.
    படம் நன்றாக இருக்கிறது. இரவு கணவனிடம் குழந்தை அடிக்காதீர்கள் என்று சொல்லும் படத்தில் இருவர் அன்பும் தெரிகிறது.
    கையில் வளையல் பொட்டு இருக்கலாம், மொட்டை கையாக இருக்கிறது.

    அடுத்த படம் என்னை புரிந்து கொண்டது இவ்வளவுதானா ? என்று கேட்பது போல் உள்ளது கை அவரை நோக்கி காட்டுகிறதே!

    நல்ல கதை பகிர்வுக்கு நன்றி.





    பதிலளிநீக்கு
  6. நல்ல கதை! இதிலே சீதாலக்ஷ்மி என்னும் பெயருக்குக் கொடுத்திருக்கும் விளக்கம் எங்க வீட்டிலேயும் சொல்லுவாங்க. என் பெயரும் சீதாலக்ஷ்மி தான். என்னோட பாட்டி பெயர். அப்பாவின் அம்மா. ஆனால் அவங்க கண்ணெல்லாம் தெரியாமப் போய்க் கஷ்டப்பட்டதாலே அந்தப் பெயரில் கூப்பிடறதில்லை. ஆனாலும் இன்னமும் அந்தப் பெயரை எங்க வீட்டில் பிறக்கும் பெண்களுக்கு வைப்பது நிற்கவும் இல்லை. என்னோடு சேர்ந்து என் பெரியப்பா பெண்களுக்கும் சீதா லக்ஷ்மி! இப்போப் பிறந்து இருக்கும் என்னோட அண்ணா பெண்களின் பெயரும் சீதாலக்ஷ்மி தான். கூப்பிடறது தான் வேறே! :)

    பதிலளிநீக்கு
  7. என்னோட அப்பாவும் இப்படித் தான் எல்லாத்துக்கும் அடிப்பார்! ஆனாலும் அதிகக் கண்டிப்பினால் பலரும் மேலே சொன்ன வாசு மாதிரித் தான் ஆயிடறாங்க. என்றாலும் என்னைப் பொறுத்தவரை நான் அவற்றை எல்லாம் ஒரு பாடமாகவே எடுத்துண்டேன். நம்ம குழந்தைங்களை அப்படி வளர்க்கக் கூடாது என்று நினைச்சுப்பேன். :)

    பதிலளிநீக்கு
  8. பலமுறை சிறிய அந்த எழுத்துருவைப்பெரிதாக்கிப் பார்த்து விட்டேன். மீண்டும் மீண்டும் அப்படியேதான் வருகிறது. மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  9. மனம் கனத்து விட்டது நண்பரே கோபம் உள்ள இடத்தில் குணம் இருக்கும் என்பது உண்மையே...

    பெயரில்கூட சஸ்பென்ஸ் வைத்து முடிவில் வெளிப்படுத்தியது அருமை.

    மகன் என்றாவது திரும்பி வந்து சீதையம்மாளை காணவேண்டும் என்பது எமது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல கதை. மனதைத் தொட்டது. தன் மகனின் நல்லதற்கு பாடுபடும் அப்பாவின் மனது எப்படி இருந்திருக்கும். கண்டிப்புடன் நடந்து கொள்வது சில சமயங்களில் எதிர் வினைகளையே தருகிறது!

    எழுத்துரு - பிரச்சனை தான் பலருக்கும் கடினமாக இருக்கும். நானே Copy செய்து Word file-l Paste செய்து, முழுவதும் Select செய்து, ஒரே எழுத்துரு, ஒரே அளவு மாற்றி தான் படித்தேன்!

    நெல்லைத் தமிழன் அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  11. கையில் வளையல் பொட்டு இருக்கலாம், மொட்டை கையாக இருக்கிறது.//

    கையில் வளையல் போட்டு இருக்கலாம்.

    எவ்வளவு கவனமாக படித்துப் பார்த்து திருத்தினாலும் சில பிழையுடன் வந்து விடுகிறது.

    நெல்லை தமிழன், 'கோபாத்தால் திருத்தம் ஏற்படாது, வருத்தம் தான் ஏற்படும் 'என்று வேதாத்திரி மகரிஷி சொன்ன கருத்து நினைவுக்கு கொன்டு வந்த கதைக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  12. ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க நெல்லைத் தமிழன். மனது மிகவும் வேதனை அடைந்துவிட்டது இறுதியில். கிருஷ்ணமூர்த்தியும் உயிரோடு இருந்திருக்கலாமோ என்று எண்ண வைத்துவிட்டது. அப்பா மகன் உறவையும் அது எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறது கதை. அருமை....



    பதிலளிநீக்கு
  13. நல்ல அருமையான கதை. மனதைத் தொட்ட கதை அதாவது அப்பா என்பவர் ஆண் பிள்ளைக்கு மிக மிக முக்கியம் என்பதை உணரலாம். பொதுவாகவே தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்றுதான் ஆண் பிள்ளைகளைச் சொல்லுவது வழக்கம். அப்பா இத்தனை ஸ்ட்ரிக்டாக இருந்தால் பெண் பிள்ளைகளின் மனது கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் ஆண் பிள்ளைகள் அளவுக்கு முரண்டு கூடுதல் ஆகாது. ஒரு வேளை அது அப்பா மகள், அம்மா பிள்ளை பிணைப்பு என்று சொல்லுவார்களே அதாகவும் இருக்கலாம்.

    அதுவும் பருவ வயதில் அப்பா என்பவர் ஆண் பிள்ளைக்கு மிகவும் தோழனாக இருப்பது அவசியம். யஞராமன் கிருஷ்ணமூர்த்தியின் அப்பா அந்தக்காலம் அப்படி இருந்திருக்கலாம்...ஆனால் அதிலிருந்து கிரஷ்ணமூர்த்தி தன் பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என்று கற்காமல் அப்பாவை ஐடியலாக எடுத்துக் கொண்டுவிட்டார் பாவம் அவர் மனதும் நல்லதுதான் ஆனால் பருவ வயது ஆண் பிள்ளைகளுக்கு அது தெரிய வேண்டுமே....

    எங்கள் வீட்டிலும் மிக மிக நெருங்கிய உறவினர் தம்பதிகள் இறுதியில் பேப்பரி எழுதி வைத்துத்தான் பேசிக் கொண்டார்கள். அதுவும் மனைவி கேன்ஸரில் இருந்தார்....இந்த தம்பதியரின் நிகழ்வுகளைப் பற்றித்தான் சீராம வுக்கு இரண்டாவது கதையாக ஆனால் கொஞ்சம் வேறாக கருவை மட்டுமெ டுத்துக் கொண்டு அனுப்பலாமா என்று ஸ்ரீராமிடம் கேட்டு அவரும் அனுப்பலாம் என்று சொல்லியும் நான் எழுதி முடிக்கவில்லை....ஹிஹிஹிஹி..

    நெல்லைத் தமிழன் வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    அழகான கதைக்கு...அப்படியே காட்சிகள் மனதுள் ஓடியது! அப்படி ஓடிய போது ஸ்க்ரீன் ப்ளே போல தோன்றியது...அதில் எனக்குத் தோன்றிய ஒன்று அவர்கள் இருவரும் போர்டில் எழுதித்தானே பேசிக் கொண்டார்கள் அப்போது கிருஷ்ணமூர்த்தி கடிதத்தில் சொல்லியதைச் சொல்லியிருந்தால் சீதா உடனே மன்னிப்பு தோன்றியிருக்காவிட்டாலும், கொஞ்சம் கொஞ்சமாக மாறி கிருஷ்ணமூர்த்தியை அவர் இறக்கும் முன்னரே மன்னிதிருப்பாளோ? அவரும் கொஞ்சம் நிம்மதியாக இறந்திருப்பாரோ இல்லை அதுவே அவருக்கு இன்னும் உயிர் வாழ வைத்து இருக்குமோ. இருவரும் சேர்ந்து என்றேனும் மகன் வருவான் என்று மகனுக்காகக் காத்திருந்திருப்பார்க்ளோ....என்றும் தோன்றியது....

    எழுதிய விதம் அருமை...மீண்டும் வாழ்த்துகள், பாராட்டுகள்! நெல்லை!!

    எங்கள் ப்ளாகிற்கும் வித விதமான மன்னித்தலை இங்கு தருவதற்கு நன்றி!!

    கீதா






    பதிலளிநீக்கு
  14. கிருஷ்ணமூர்த்தி உயிருடன் இருந்த போதே சொல்லியிருக்கலாமோ என்று ஏன் எனக்குத் தோன்றியது என்றால்......நான் சொன்ன தம்பதியரில் மனைவி இறந்துவிட..(கணவர்தான் இங்கு பிரச்சனை)..இப்போது அவர் நான் அவர் வீட்டிற்குச் சென்ற போதெல்லாம்...."கீதா லுக் லுக் (ஆங்கிலமும் ஹிந்தியும் கலந்துதான் பேசுவார்...) இந்த வீடியோவை பாரேன்....என்று தன் மனைவியின் வீடியோவைப் போட்டுக் காட்டுவார்....காட்டி அதில் குறிப்பிட்ட இடம் வரும் போது அதை பாஸ் செய்து லுக் கீதா ஹௌ ஷி லுக்ஸ்? கைஸே ஹே வோ? பஹுத் அச்சி ஹை ந!!! லுக் அட் தட் ஸ்மைல்..! " என்று இப்படி எல்லாம் ஒவ்வொரு வீடியோவாகப் போட்டுப் போட்டுக் காட்டுவார்...இப்படி போன பிறகு மருகுபவர் மனைவி உயிருடன் இருக்கும் போதே அன்பைக் காட்டாவிட்டாலும் அட்லீஸ்ட் பேசவாவது செய்திருக்கலாமே...இறுதியில் மனைவி ஹாஸ்பிட்டலில் இருந்த போது நான் பல நாட்கள் ஹாஸ்பிட்டலில் அவருடன் இருக்கும்படி யானது. ஒவ்வொருவரும் ஒரு முறை வைத்துக் கொண்டு போய்த் தங்குவோம். அப்போது கூட மனைவி கணவர் வர வேண்டாம்...இங்கு வந்தாலும் பேப்பரில்தான் எழுதிக் காட்டப் போகிறார்...எனக்கு இத்தனை வருடங்கள் பட்ட கஷ்டம் போதும் என்று அழுதது இன்னும் நினைவில் இருக்கிறது. அவரால் மன்னிக்க முடியவில்லை. தான் நோய்வாய்ப்பட்டு இருக்கும் போது கூட டார்ச்சர் என்று.

    எனவே நான் எல்லோரிடமும் அடிக்கடி சொல்லுவது. உயிருடன் இருக்கும் போதே அன்பு செய்யுங்கள் போன பிறகு மருகுவதோ, ஃபீல் பண்ணுவதோ, இல்லை கடமைக்காகவோ இல்லை பயந்தோ சில ரிச்சுவல்ஸ் செய்வதோ பலனில்லை. யாரிடமேனும் மனக்கசப்பு இருந்தால் உயிருடன் இருக்கும் போதே அதைத் தீர்த்துவிடுங்கள்....நாம் இறக்கும் போதும் யாருக்கும் நம்மால் மனது இப்படியான வேதனைகளுக்கு ஆளாகக் கூடாது என்று தோன்றும்...

    உங்கள் கதையைப் படித்ததும் அது நினைவிற்கு வந்தது. அவர் இறந்ததும், இதைப் பற்றி பதிவு எழுதி ஏனோ மனம் முடிக்க முடியாமல் தவித்து வைத்திருந்ததை... அதையேதான் கதையாக மாற்றி பாதியில் இருக்கு அதனால் ஸ்ரீராமுக்கும் அனுப்ப முடியவில்லை சீராம வுக்கு....

    மீண்டும் உங்கள் கதை இப்படியான பல எண்ணங்களை எழுப்பிவிட்டது...

    நன்றி நெல்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
  15. படம் முதலில் தெரியவில்லை..இங்கு நெட் ப்ராப்ளம் அதனால் படம் இன்டு மார்க் வந்தது...இப்போதுதான் பார்தோம்! செமையா இருக்கு நெல்லைத் தமிழன்..

    பாராட்டுகள் எங்கள் இருவரிடமிருந்தும்...

    பதிலளிநீக்கு
  16. கதை அருமை...
    படங்களும் அழகு....
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. மனதை இளக்கிய கதை பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  18. பாட்டுப் பாடி நடித்த அந்தக்கால தமிழ் சினிமா நாயகர்களைப்போல், படம்போட்டு கதையும் எழுதுகிறார் நெல்லை. அபூர்வப்படைப்பாளி. (சீதாவுக்குக் கையில் வளையலைக் காணோமே என்பதை கோமதி அரசு கவனித்திருக்கிறார்!)

    விதிக்கப்பட்ட கடைசிவரியை நோக்கிக் கதை வேகமாக ஓடினாலும், சீதாவின் கஷ்டம் பெருங்கஷ்டமாயிருக்கிறதே. நல்ல மனுஷியான சீதாவுக்கு, பிள்ளை போய், புருஷனும் போய், விடாது துரத்துகிறதே சோகம்?

    என்னதான் ப்ரச்சினைகள் தொடர்ந்தாலும், கீதா சொல்வதுபோல்க, உயிருடன் இருக்கும்போதே கணவனோ, மனைவியோ - யார் யாரிடம் மன்னிப்புகேட்கவேண்டுமோ அந்த நபர் ஒரு முறையாவது மனம்விட்டு பேசவேண்டும். அல்லது வருத்தம் தெரிவிக்கவேண்டும். ஆனால் இருவரும் இருதுருவமாகிவிட்ட நிலையில் மௌனம் பெரும் சுவரெனக் குறுக்கே விழுந்துவிடுகிறதே. இந்த பாழாய்ப்போன ஈகோ வேறு, மனுஷனைக் கடைசிவரை வேதனைக்குழியில் தள்ளிவிட்டுத்தான் போவேன் என்கிறது. மனித வாழ்வின் சிக்கலான முடிச்சுகள்..

    பதிலளிநீக்கு
  19. அற்புதமான கதையை வாசித்த நிறைவு ஏற்பட்டது.

    நான் வாசித்த வரை இது வரை பிரசுரமான இந்த வரிசை சீதா-ராமன் கதைகளில் இந்தக் கதை முதல் இடத்தை பிடித்திருப்பதாக உணர்கிறேன்.

    எழுத்து நடை அருமை. உரையாடலும் கதையுமாக கலந்து பிசைந்து தந்த அருமை.
    இவ்வளவு திறமை உள்ள நெ.த. ஏன் தனக்காக ஒரு தனி பிலாக் கொண்டு எழுதித் தள்ளமாட்டார் என்று ஏங்க வைக்கிற அருமை.

    ராமபத்திரன் என்கிற வாசு போலவே போக்குக் காட்டி கட்டக்கடைசியில் யக்ஞராமன் என்ற கிருஷ்ணமூர்த்தி -- உறுத்தாமல் கதைக்கு பாந்தமாக ஒட்டி வருகிறது.

    வலிய ராமன்-- சீதை மன்னிப்புகளை கதைக்காக கதை பண்ணாமல் இயல்பாக அந்த மன்னிப்பை எடுத்தாண்ட சிறப்புக்கு பாராட்டுகள். நம் கண்முன்னே நடப்பதைப் பார்ப்பதைப் போன்ற வாசிப்பை நிகழ்த்திய தேர்ந்த எழுத்தாளுமைக்கு வாழ்த்துக்கள்.

    முத்திரைக் கதை அந்தஸ்து பெறுகிற முத்தான கதை.

    மீண்டும் அன்பான வாழ்த்துக்கள், நெல்லைத் தமிழரே! விரைவில் தனி பிலாக் ஆரம்பித்து உங்கள் எழுத்துத் திறமைக்கு மேலும் மேலும் மெருகேற்றுங்கள்.

    பதிலளிநீக்கு
  20. வை கோபாலகிருஷ்ணன் (கோபு சார்) அவர்கள் எழுதியுள்ள பின்னூட்டம்

    (1)

    அன்புள்ள நெல்லை தமிழன் ஸ்வாமிஜி, வணக்கம்.

    கதையை நன்கு உருக்கமாகவும் வித்யாசமாகவும் எழுதியுள்ளீர்கள்.

    வாசிப்பவர் மனதைத் தொட்டு விடும் கதைதான்.

    படங்களும் தாங்களே வரைந்துள்ளது மேலும் சிறப்பாக உள்ளது.

    யாரோ சொல்லியிருக்கிறார்கள் ...... அந்த சீதைக்கு கைகளில் இரண்டு வளையல்களாகவது அணிந்திருப்பது போல படத்தில் காட்டியிருக்கலாம் என்று.

    பள்ளிக்கூடத்தில் பணியாற்றும், ஏழை வாத்யாரால் அது போல தங்க வளையல்கள் செய்து போட இயலாமல் இருந்திருக்கலாமோ என்னவோ ..... அல்லது ...... குடும்பக் கஷ்டங்களுக்காக, அந்தத் தங்க நகைகளை அடமானம் வைத்திருப்பார்களோ என்னவோ.

    கண்ணாடி அல்லது ரப்பர் வளையல்களாவது தங்கள் கைப்பட, அந்தக் கதாநாயகிக்குச் செய்து போட்டிருக்கலாமே என நான் நினைத்துக்கொண்டேன். :)

    >>>>>

    பதிலளிநீக்கு
  21. வை கோபாலகிருஷ்ணன் (கோபு சார்) அவர்கள் எழுதியுள்ள பின்னூட்டம்.

    (2)

    குழந்தைகளிடம் அவர்களின் பிற்கால நன்மையைக்கருதி கொஞ்சம் கண்டிப்பு அவசியம் தான். அதற்காக எதற்கு எடுத்தாலும் அடிக்கக்கூடாது. அடிக்க அடிக்க குழந்தையின் உடம்பு மரத்துப்போகும். பிஞ்சான அவர்களின் நெஞ்சுக்குள், அடிப்பவர் தந்தையேயானாலும் விஷமும் வெறுப்பும் மட்டுமே அதிகமாகிவிடும்.

    அறிவினை பிரகாசிக்க வைக்க படிப்பு ஓரளவுக்கு உதவுகிறது என்பது ஒத்துக்கொள்ளும் படியாக இருப்பினும், நன்கு படித்து அதிக மதிப்பெண்கள் வாங்குவதால் மட்டுமே ஒருவன் அறிவாளி ஆகிவிடுவது இல்லை என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும்.

    கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின், குணங்களையும், எதிர்பார்ப்புகளையும், நிலைமையையும் அழகுற வர்ணித்துச் சொல்லி விட்டீர்கள்.

    சீதாவுக்கு நீண்ட நாட்களுக்குப்பிறகு குழந்தை பிறந்து, அது வளரும் போது, இருபக்க தாத்தா பாட்டிகளும் கூடவே இல்லாமல், கவனமாக எல்லோரையும் சப்ஜாடாக மேலுலகத்திற்கு அனுப்பி வைத்து விட்டீர்கள்.

    அவர்கள் ஒருவேளை இருந்திருந்தால் இதுபோல தன் ’யக்ஞராமன்’ என்ற பெயரும் உள்ள கணவரையும், ஒரே மகனையும் பிரிந்துள்ள துயர் சீதாவுக்கு இல்லாமல் இருந்திருக்குமோ என்னவோ.

    முதன்முதலாகக் கதை எழுதியுள்ளதாகச் சொல்லியுள்ளீர்கள். இந்த முதல் கதையிலேயே உங்களின் முத்திரையைப் பதித்து விட்டீர்கள்.

    மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  22. சீதை 'ராம'பத்ரனை மன்னித்தாள் என்று வித்யாசமாக முடியும் என்று நினைத்தேன்...//யக்ஞராமன் என்ற கிருஷ்ணமூர்த்தி // என்று முடித்தது கொஞ்சம் ஏமாற்றம் தான்..... :-))
    இருவரும் எழுதிப் பேசும்போது இந்தக் கடிதத்தையும் அவர் காட்டியிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது...
    கண்டிப்பான பெற்றோருக்கு இந்தக் கதை ஒரு பாடம்!!

    பதிலளிநீக்கு
  23. நல்ல கதை. பிள்ளைகள் நன்றாக வர வேண்டுமென்கிற அதீதக் கவலையில் சிலர் காட்டும் அதிகப்படியான கண்டிப்பு கசப்பான பின் விளைவுகளைத் தந்து விடுகிறது.

    பதிலளிநீக்கு
  24. கதையை வெளியிட்ட எங்கள் பிளாக், ஸ்ரீராம் - நன்றி. அப்புறம் வந்து பதில் சொல்றேன்.

    அதீத கண்டிப்பு எப்போவும் இருந்திருக்கு. போனவாரம் பத்திரிகையாளர் சாவி (சா.விசுவனாதன்) அவர்களின் வாழ்க்கைக் கதையும், அவர் எழுதிய 'பழைய கணக்கு' அனுபவங்களையும் படித்துக்கொண்டிருந்தேன். அவர் பலமுறை வீட்டைவிட்டு ஓடிப்போயிருக்கிறார். அவரது அப்பாவின் கண்டிப்பு காரணமாக, நடந்தே கடலூர் வரை வந்திருக்கிறார் (கிட்டத்தட்ட 150 கி.மீ என்று நினைக்கிறேன்). அவர், பிற்காலத்தில் அப்படி ஓடிவந்தபின், நிறைய கஷ்டப்பட்டு பெரிய ஆளாக ஆகியிருக்கிறார்.

    ஆனந்த விகடனில் பல வருடங்களுக்கு முன்பு 'குளத்தூர் மணி ஐயர்' (??-திருனெல்வேலி பக்கம் என்று நினைக்கிறேன்) என்பவரைப் பற்றிப் படித்தேன். அவர் ஆசிரியராக இருந்து, ரொம்ப கடுமையாக குழந்தைகளிடம் நடந்துகொண்டதால், பசங்க ஒவ்வொருத்தரும் ஒரு நிலைமைக்கு வந்தவுடனே, குடும்பத்தைவிட்டு பிச்சுக்கிட்டுப் போயிட்டாங்க. அப்பா மேல அவங்க எல்லோருக்கும் அப்படி ஒரு வெறுப்பு. கடைசி காலத்தில், திருமணமாகாத பெண்ணின் (இவருக்காகவே திருமணம் செய்துகொள்ளவில்லை என்று படித்த ஞாபகம்) தயவில் இறக்கும்வரை கஷ்டப்பட்டார். அவருக்கு, வெறும் கண்டிப்பு, இப்படிப்பட்ட வெறுப்பை பசங்கள்ட விளைவிக்குமா என்பதே தெரியவில்லையாம்.

    பதிலளிநீக்கு
  25. //நான் வாசித்த வரை இது வரை பிரசுரமான இந்த வரிசை சீதா-ராமன் கதைகளில் இந்தக் கதை முதல் இடத்தை பிடித்திருப்பதாக உணர்கிறேன்.//

    என்னோட கருத்துப்படி ரஞ்சனி நாராயணனுக்கு முதலிடம். சிக்கென்று விஷயத்தை கன கச்சிதமாகப் பிடித்திருந்தார். அடுத்து தில்லையகத்து கீதா மற்றும் சேட்டைக்காரர்! சேட்டைக்காரரின் கதை சொல்லும் உத்தியே புதுமையானது. ஆகவே அவருக்குச் சிறப்புப் பரிசு! நெ.த. கதை நல்லாவே எழுதி இருக்கார். முன்னர் க.க.போவிலும் நல்லாக் கதை எழுதி இருந்தார். சமையலிலும் விதம் விதமாக் கலக்கறார். கொஞ்சம் இல்லை நிறையப் பொறாமையாவே இருக்கு! :)

    பதிலளிநீக்கு
  26. //அவருக்கு, வெறும் கண்டிப்பு, இப்படிப்பட்ட வெறுப்பை பசங்கள்ட விளைவிக்குமா என்பதே தெரியவில்லையாம்.//

    நெ.த. என் புக்ககத்தில் கண்டிப்போ, புத்திமதி சொல்வதோ கிடையாது என்பதோடு சொல்லவும் கூடாது! இது தெரியாமல் நான் கண்டிச்சும், புத்திமதி சொல்லியும் நிறைய வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கேன்! இன்னும் சொல்லப் போனால் என் குழந்தைகளே கூட நான் கண்டிப்புக் காட்டியது பற்றி இப்போவும் சொல்கிறார்கள். பொண்ணு அவ குழந்தைகளிடம் கண்டிப்பாய்த் தான் இருக்கா! ஆனாலும்! என்னைச் சொல்லுவா! :))))) இது எல்லாம் பரம்பரைச் சொத்துனு நினைக்கிறேன். அவங்க அவங்க குடும்பப் பழக்கங்களை ஒட்டி வரும்னு தோணுது!

    பதிலளிநீக்கு
  27. ஆனால் குழந்தைகளுக்கு எக்ஸ்போஷர் எனப்படும் வெளிப்படுத்தும் விதம் அல்லது வெளிக்கொண்டு வரும் தன்மை இருக்கணும். பலரிடமும் கலந்து பழகினால் தான் இது வரும்! இங்கே நண்பர்கள் இருப்பதாகக் காட்டினாலும் அவங்க பக்கத்துச் செய்தி எதுவும் தெரியலை. நண்பர்கள் வீடு வரை வரும் உறவாக இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே கண்டு பிடித்திருக்கலாம். யாரும் ஒருத்தருக்கொருத்தர் மனம் விட்டுப் பேசிக்கலை! :( ஆனால் சிலரிடம் பேச முடிவதில்லை! அதுவும் இருக்கு!

    பதிலளிநீக்கு
  28. //நான் வாசித்த வரை இது வரை பிரசுரமான இந்த வரிசை சீதா-ராமன் கதைகளில் இந்தக் கதை முதல் இடத்தை பிடித்திருப்பதாக உணர்கிறேன்.//

    கதை அனுப்பினவங்க எல்லாருமே நல்லாத்தான் எழுதியிருந்தாங்க. ஆனா, பொதுவா பெரியவங்க, சின்னக் குழந்தைகளைத்தான், 'வாவ்.. நல்லா நடக்கறயே.. வேகமா ஓடறயே..அப்பாவைவிட சுறுசுறுப்பா இருக்கயே' அப்படீன்னு பாராட்டுவது வழக்கம்தானே. எழுதினவங்களிலேயே, 'கதை எழுதும்' அனுபவம் அனேகமாக இல்லாதது என்னிடம்தான். அதனால ஜீவி சாரோட கருத்தை, அப்படித்தான் நான் எடுத்துக்கறேன் (எல்லோரும் அப்படித்தான் எண்ணியிருப்பார்கள்).

    கீதா சாம்பசிவம் மேடம் - உங்கள் கருத்தைப் படித்தபின்புதான் எனக்கு உடனே இதை எழுதணும்னு தோணினது. கோடு போட்டா ரோடு போடறவங்களோட என்னை கம்பேர் பண்ணலாமா?

    பதிலளிநீக்கு
  29. பெற்றோர்கள் அன்பு என்று நினைத்து காட்டும் கண்டிப்பு விபரீத பலன்களை தருகிறது முதல் கதையா நல்ல முயற்சி

    பதிலளிநீக்கு
  30. நான் வந்துட்டேன்ன்ன்ன்ன் திரும்ப வந்துட்டேன்ன்ன்ன்ன்ன் ... ஹா ஹா ஹா ஹா.... துக்கம்!!!!!

    பதிலளிநீக்கு
  31. சே..சே..சே.. எவ்ளோதான் கத்திக் கூச்சல் போட்டாலும் ஒரு பூஸ்குட்டிகூடத் திரும்பிப் பார்ப்பதில்லை:) சரி சரி இக்க்காலத்தில நமக்கு நாமே கைகுலுக்கிக்கொள்ள வேண்டியதுதேன்ன்ன்ன்:)...

    ஒரு விடுகதை.. இதுக்கு யார் பதில் சொல்லாட்டிலும்.. ஸ்ரீராமும்.. நெ.தமிழரும் பதில் சொல்லியே ஆகோணும்...

    வந்தார் போனார்... திரும்பி வந்தார்... இனிப் போனால் வருவீரோஓஓஓஓஓஓஓ?:)...

    -------------------------------
    சரி இனித்தான் போய் சீதை எதுக்கு ராமனை மன்னிச்சா எனப் பார்த்திட்டு வெரி சோரி படிச்சிட்டு வாறேன்:).

    பதிலளிநீக்கு
  32. முதலில் படத்துக்கு வருகிறேன், இரண்டாவது படம் அழகாகக் கீறியிருக்கிறீங்க, முதலாவதில் முகங்கள் மட்டுமே நன்றாக வந்திருக்கு.. ஏனையவை எல்லாம்.. நான் கீறுவதுபோலவே இருக்கு ஹா ஹா ஹா:).. இருப்பினும் வாழ்த்துக்கள்.. இப்படிக்கூட எல்லோராலும் கீற முடியாது.. அழகாய் இருக்கு.

    பதிலளிநீக்கு
  33. வித்தியாசமான சிந்தனையில் கதை எழுதியிருக்கிறீங்க. சிம்பிளா நகர்த்தியிருக்கிறீங்க.. இம்முறையும் எனக்கு சீதையில்தான் கோபம்... மகன் காணாமல் போனமைக்காக கணவரோடு பேசாமல் இருப்பது. முழுப்பழியையும் அவர்மேல் போட்டதாகி விட்டதே.. அது விதி.. அதுக்காக இருப்பதையும்[கணவரோடு பேசாமல்] இழந்திருக்கிறாவே இந்த சீதை. இப்படியும் சில மோட்டுத்தனமான முடிவுகளை எடுக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    கண்போனபின் சூரிய நமஸ்காரம்.. இந்த மன்னிப்பு.

    அழகாக ஆரம்பிச்சு அருமையா முடிச்சிருக்கிறீங்க வாழ்த்துக்கள்... எங்கே என் செக்கரட்டறி.. கொண்டு வாங்கோ அந்தப் பச்சைப் பொன்னாடையை.. போர்த்தி வரவேற்போம் சகோ நெ.தமிழனை... ஹையோ பழக்க தோசத்தில கூப்பிட்டுட்டேன்ன்ன்ன்ன்ன்... என் செக்கரட்டறியை இன்னும் இங்கின காணம்.. டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்(பிங் கலரில தாங்கோ).. என் கண்ணீர் துடைக்க:).

    பதிலளிநீக்கு
  34. நீங்க வருவீங்கன்னு நினைக்கலை (வெகேஷன்ல இன்னும் இருக்கறதுனால). அதனால நானே நீங்கள் கதையைப் படித்திருந்தால் ஒரு வார்த்தை உபயோகப்படுத்தியிருப்பீர்கள் என்று எழுத நினைத்தேன். ஆனால் உங்கள் பின்னூட்டத்தில் அந்த வார்த்தையை நீங்கள் உபயோகப்படுத்தாதது எனக்கு ஆச்சர்யம்தான் அதிரா. அந்த வார்த்தை, 'வெருட்டிடக்குடா' ('குழந்தையை வெருட்டிடக்குடா' என்று சொல்வீர்கள் என நினைத்தேன்)

    பதிலளிநீக்கு
  35. துரை செல்வராஜு சார்.. வருகைக்கு நன்றி. பதின்ம வயதில், பசங்க பெரும்பாலும் அவங்க அப்பாவிடம் ஒட்டுதலாக இருக்கமாட்டார்கள். ஏன்னா, அப்போ உடலும் மாறுவதால், மனமும் மாறும். புதிய சிந்தனை, உத்வேகம் -- ஆனால் அப்பா 'இது சரி, இது தப்பு' என்று குற்றம் கண்டுபிடிக்கும் குணம். பெண்ணுக்கு அந்த பதின்ம வயதில் அப்பாவுக்கு கூடுதல் ஒட்டுறவு ஏற்படும் (தான் நட்ட விதை, செடியாவதைப் பார்க்கும் சந்தோஷம்). இன்னொரு முக்கியக் காரணமா நான் நினைக்கறது. பெண், வளரும்போதே அவளின் மெச்சூரிட்டி லெவல் மிக அதிகம், அதாவது 'தாயின் அன்பை, குணத்தை' அவள் மிக இளம் வயதிலேயே பெற்றுவிடுகிறாள். அதனால் அப்பாவின் தவறுகளை இயல்பாக அவள் புரிந்து மன்னித்துவிடுவாள். பையன் என்பவன் அடுத்த தலைவனாக ஆகப்போகிறவன். டிஸ்கவரி சேனல் பார்க்கும்போது, விலங்குகளிலும் இந்த இயல்பை நோக்கியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  36. துரை செல்வராஜு சார்... சாவி 'பழையகணக்கு' புத்தகத்தில் எழுதுகிறார். அவர் வீட்டைவிட்டு நடந்தே சென்றுவிட்டார். 6 மைல் நடந்து 'கலவை' கிராமத்தைக் கடந்தபின், நடக்கமுடியாமல் (சிறுவயது) ஒரு மாட்டுவண்டிக்காரனிடம், தான் வண்டி ஓட்டுகிறேன், நீங்கள் தூங்குங்கள் என்று சொல்லி வண்டி ஓட்டிக்கொண்டு இன்னும் தூரம் சென்றதும், பஸ்ஸை வாடகைக்கு அமர்த்தி இவரைத் தேடிக்கொண்டுவந்த அவரது அப்பா சொல்கிறார்,

    "உன்னை அடித்தது தப்புதான், அதற்காக இப்படியா சொல்லாமல் வந்துவிடுவது? ஊரில் ஒரு கிணறு பாக்கியில்லாமல் தேடிப்பார்த்துவிட்டோம். எனக்கு நீ ஒரே மகன். பிள்ளைப்பாசம் கேட்கவில்லை. அன்பினால்தானே அடித்தேன். நீ இப்படிச் செய்யலாமா? உன்னைக்காணாமல் உன் அம்மா புலம்பிக்கொண்டிருக்கிறாள். வண்டியைவிட்டு இறங்கிவா. வீட்டுக்குப் போகலாம்" என்று அழைத்தார். சாவியும் பிகுபண்ணிக்கொண்டு பிறகு திரும்பிச்செல்கிறார்.

    ஆடின காலும், பாடின வாயும் நில்லாது என்பதுபோல், இதுபோல் பலமுறை சாவி வீட்டைவிட்டு ஓடிப்போயிருக்கிறார்.

    இந்தப் புத்தகத்தைச் சென்ற வாரம்தான் படித்தேன். கதை எழுதி எங்கள் பிளாக் ஸ்ரீராமுக்கு நாலு மாதங்கள் முன்னமேயே அனுப்பிவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  37. கருத்துக்கு நன்றி கோமதி அரசு மேடம். யாரும் பார்க்காத 'வளையல்' படத்துக்குப் போடாததைச் சுட்டிக்காண்பித்ததற்கு நன்றி, பாராட்டுகள். இரண்டு படங்களிலும் வளையல் போட விட்டுப்போய்விட்டது. (முதலில் சும்மா, கணவனுடன் தனித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, வளையல் சத்தம் பிறருக்குக் கேட்கக்கூடாது என்பதற்காக அவர் கழட்டிவைத்துவிட்டார்களோ என்னவோ என்று சொல்லலாமா என்று யோசித்தேன். இரண்டாவது படத்திலும் அப்படியே வளையல் போடவில்லை. அதனால் சாக்கு சொல்லமுடியாது).

    கடிதம் எழுதியதைச் சொல்லாததுதான் இயல்பாக இருக்கும். அவர், தனது தவறை உணர்ந்து தண்டனையை ஏற்றுக்கொள்கிறார். 'தண்டனையை நீக்கு' என்று கேட்பது (கடிதம் படிக்கச்சொன்னால் அதுதான் அர்த்தம்) பாத்திரத்தின் இயல்பாக இருக்காது. (ஒருவேளை நானாக இருந்திருந்தால் அவர் நடந்துகொண்டதுபோல்தான் நடந்திருப்பேன்)

    கடிதம் என்றுமே படிக்கப்படாமல் இருந்திருந்தால் poetic justice கதைக்குக் கிடைத்திருக்காது.

    பதிலளிநீக்கு
  38. நன்றி கீதா சாம்பசிவம் மேடம், உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும். 'கோபப்படக்கூடாது' என்பதை நான் பல வருடங்களாகத் தெரிந்துகொள்ளவே இல்லை (இப்போது மட்டும் என்ன வாழுதாம் என்று என் ஹஸ்பண்ட், இதைப் படித்தால் மனதில் நினைத்துக்கொள்வாள்). ஆனால் சமீபகாலமாக, பையன் கிட்ட மாத்திரம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கேன்.

    பதிலளிநீக்கு
  39. கில்லர்ஜி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பொதுவா கதைகள்ல கூட நம்ம எல்லாருக்கும் பிறருக்குத் துன்பம் நடந்துடக்கூடாது, அநியாயம் நடந்துடக்கூடாது என்று நினைப்பது நம்முடைய மனதின் செழுமையைத்தான் காண்பிக்குது.

    பதிலளிநீக்கு
  40. வெங்கட், உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  41. "கோபத்தால் திருத்தம் ஏற்படாது, வருத்தம் தான் ஏற்படும் 'என்று வேதாத்திரி மகரிஷி சொன்ன கருத்து" - இதை இப்போதுதானே படிக்கிறேன் கோமதி அரசு மேடம். நிச்சயம் 15-20 வருடங்களுக்கு முன்பு படித்து, கடைபிடித்திருந்தால் கோபம் இல்லாத குணம் வந்திருக்கும் (என் அம்மா சொல்லுவார்கள். 'பொறந்தபோது வர்ற குணம், மட்டையால கட்டினாலும் போகாதுன்னு)

    பதிலளிநீக்கு
  42. //கண்போனபின் சூரிய நமஸ்காரம்.. இந்த மன்னிப்பு.// சரியான கருத்து! நானும் முதலில் "கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்!" தேவையா என்றே எழுதினேன். பின்னர் வேண்டாம்னு அதை எடுத்துட்டுக் கதை பண்ணிட்டுப் போயிட்டேன். :) நீங்கள் சொன்னதற்குப் பின்னர் இப்போச் சொல்றேன். இனிமேல் மன்னித்தால் என்ன? மன்னிக்காவிட்டால் என்ன? போனவர் துக்கத்தோடேயே போய் விட்டார். கடைசிப் படுக்கையில் மன்னித்திருந்தாலும் ஒரு அர்த்தம் இருந்திருக்கும்!

    பதிலளிநீக்கு
  43. தில்லையகத்து கீதா ரங்கன் - உங்கள் கருத்துக்களைப் படித்துப்பார்த்தேன். நன்றி.

    அப்பாவுக்கு பெரும்பாலும் பெண் பிள்ளையிடம் ஒட்டுதல் ஜாஸ்தி. பையனிடம் அன்பு அதிகமாக இருக்கும், கவலை அதிகமாக இருக்கும், நல்லா வரணுமேன்னு இன்னும் ஜாஸ்தி தோன்றும், அதனால் கண்டிப்பும் ரொம்ப ஜாஸ்தியாகவே இருக்கும். இது male domination societyல இயல்பான விஷயம்தான்.

    'பேப்பரில் எழுதித்தான் பேசுவார்கள்' - இதுபோல் சிறிய காரணங்களுக்காக, அல்லது பிரெஸ்டிஜ் காரணமாக, 'தன்னை சந்தேகப்பட்டுக் கேட்டுவிட்டாரே' போன்ற காரணங்களுக்காக, தம்பதிகள் கடைசிவரை பேசாமல் இருந்த செய்திகளையெல்லாம் படித்திருக்கிறேன். மனித மனம் விசேஷமானது.

    கடிதத்தை முன்னமேயே காட்டியிருந்தால் - காட்டியும் மனைவி அவரை மன்னிக்காமலிருந்தால் - விடை தெரியாத கேள்விகள்தான்.

    நீங்கள் எழுதியிருக்கும் செய்தியும் (கணவர், மனைவி இறந்தபின், போட்டோ,காணொளி கண்டு மருகுவது) பரிதாபகரமானதுதான்.

    "யாரிடமேனும் மனக்கசப்பு இருந்தால் உயிருடன் இருக்கும் போதே அதைத் தீர்த்துவிடுங்கள்..." - இதனை மிகவும் ரசித்தேன். ஏற்றுக்கொள்ளவேண்டிய அறிவுரை.

    படங்கள் எனக்குத் திருப்தியாக அமையவில்லை. அதனால், வேறு படங்கள் அனுப்பலாமா, அல்லது அந்தப் படங்களுக்கு வண்ணம் தீட்டி அனுப்பலாமா என்று சென்ற மாதம் யோசித்தேன் (கதை அனுப்பி 4 மாதமாகிவிட்டது). அப்புறம், அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

    உங்கள் கருத்துக்கும் ரசனைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  44. வருகைக்கு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

    நன்றி திண்டுக்கல் தனபாலன்.

    நன்றி ராஜி.

    பதிலளிநீக்கு
  45. நன்றி பரிவை சே குமார்.

    பாராட்டுக்கு நன்றி அசோகன் குப்புசாமி

    நன்றி விஜய்.

    பதிலளிநீக்கு
  46. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏகாந்தன்.

    பொதுவா ஆண்கள்டதான் ஈகோ ஜாஸ்தியா இருக்கும். பெண்கள் பெரும்பாலும் விட்டுக்கொடுத்துப் போகிறவர்கள்.

    பெரும்பாலும் பெண்கள், தங்கள்/கணவனின் குடும்பம், தன் குழந்தைகள் இவற்றிர்க்காக மிகவும் விட்டுகொடுத்து அனுசரித்துப் போவதால்தான் இந்தியாவில் 'குடும்பம்' என்ற கட்டு, குலையாமல் இருக்கிறது. சமூகக் கட்டுப்பாடுகளாலும், பெண்கள் இவ்வாறு 'குடும்பம்' பெருமை குலையாது தியாகம் செய்யவும் செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  47. ஜீவி சார், உங்கள் வருகைக்கும், 'ஊக்கப்படுத்தவேண்டும்' என்ற எண்ணத்தில் சொல்லப்படும் பாராட்டுகளுக்கும் நன்றிகள் பல. 'ராமபத்ரன்'-இதனைச் சரியாகக் கோடிட்டுக் காண்பித்ததற்கும் நன்றி. நீங்கள், 'முத்திரைக் கதை' என்று எழுதியிருப்பது நான் படித்த செய்தியை நினைவுபடுத்திற்று.

    சாவி அவர்கள் விகடனில் இருந்தபோது, 'ஜெயகாந்தன்' தன்னுடைய எல்லாக் கதைகளுமே முத்திரைக் கதைகளாகத்தான் ஸ்டாம்ப் செய்யப்படவேண்டும் என்று சொல்லித்தான் கதை அனுப்புவாராம். Very capable and extraordinary writerஆக இருந்தபோதிலும், விகடன் ஆசிரியர் 'பாலசுப்ரமணியம்' அவர்கள் ஜெயகாந்தன் அவர்களின் இந்த கண்டிஷனை ஒத்துக்கொண்டு ஜெயகாந்தனின் எல்லாக் கதைகளையும் முத்திரைக் கதைகளாகவே பிரசுரம் செய்தாராம். இந்த முத்திரைக் கதை கான்செப்டை விகடனுக்குக் கொண்டுவந்த சாவி அவர்கள் ஜெயகாந்தன் மேல் மிகப் பெரிய மரியாதை வைத்திருந்தபோதும் (அவர்தான் ஜெயகாந்தனின் கதையைப் பார்த்துவிட்டு, அவரை விகடனுக்கு எழுதியனுப்பச்சொன்னாராம். அதற்கு ஜே.கே, அது பிராமணாள் பத்திரிகை, என் எழுத்தெல்லாம் போடமாட்டார்கள் என்று சொல்ல, வற்புறுத்தி கதை எழுதிவாங்கி, ஆசிரியரிடம் காண்பித்து 'எடிட் செய்யக்கூடாது' என்று சாவியே சொல்லி, அப்படியே நேரடியாக பிரசுரத்துக்கு அனுப்பினாராம்.), 'முத்திரை கதை' என்று குத்தும் உரிமை ஆசிரியருடையது, அதை எழுத்தாளர் எப்படி கண்டிஷனாகச் சொல்லலாம் என்று நினைத்தாராம். சாவிதான், விகடனில் பேச்சுத் தமிழைக் (அதாவது 'உபயகுசலோபரி' போன்ற வடமொழிச் சொற்கள் நிறைந்த - பிராமணாள் பாஷை என்று கருதப்படுகிற தமிழை மாற்றி) கொண்டுவந்தது.

    எப்பேர்ப்பட்ட ஜாம்பவான்கள் பத்திரிகை உலகிலும், எழுத்துலகிலும் இருந்திருக்கிறார்கள். அந்தக் காலம் எழுத்துலகப் பொற்காலம்தான்.

    பதிலளிநீக்கு
  48. கோபு சார் - உங்கள் சிறுகதையின் மூலம்தான் இந்த 'சீதை ராமனை மன்னித்தாள்' தொடர் ஆரம்பித்தது. நான் அப்போது எழுதிய கதை, நன்றாக வந்துவிட்டதாக எனக்கு மனதில் தோன்றியது (உண்மையில், கதை தன்னை எழுதிக்கொள்ளும் என்ற சொற்றொடர் உண்மைதான். நான் எழுதிய இரண்டு கதைகளும் அப்படித்தான் வந்தன). நீங்கள் அதனைப் படிக்கவேண்டுமே என்ற ஆவல். கதை வெளிவர, 4 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நீங்களும் தற்போதெல்லாம் வலையுலகப் பக்கமே வராமல், காணக்கிடைக்காதவராக ஆகிவிட்டீர்கள். அதனால் உங்களுக்கு செய்தி அனுப்பிப் படிக்கச் செய்தேன். உங்கள் பின்னூட்டத்தை மெயிலில் அனுப்பியதற்கு நன்றி. தொந்தரவு செய்கிறோம் என மனது சொன்னாலும், சின்னப் பையன் மணல் விளையாட்டை பெரியவர்கள் பார்க்கவேண்டும் என்று எண்ணுவதுபோல், உங்களுக்கு மெசேஜ் அனுப்பினேன். கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  49. கோபு சார் - பெண்ணுக்கு வளையல் போடாதது, ஓவியரின் தவறுதான்.

    குழந்தைகளை அடிப்பதைப் பற்றிய உங்கள் கருத்து மிகவும் சரி. என் அம்மாவும் சொல்லுவார்கள், வெறும் முக பாவத்திலேயே அல்லது வெறும்ன மிரட்டுவதன் மூலமே குழந்தைகளின் தவறுகளைச் சரி செய்யவேண்டும், கையை எந்தக் காரணம் கொண்டும் ஓங்கக்கூடாது என்பார்கள். (ஆனால், சொல்வது யார்க்கும் எளிதல்லவா. முன்கோபம் கொண்டவர்கள் எப்படி இந்தமாதிரி அறிவுரைகளைக் கேட்டு நடப்பது?)

    'மதிப்பெண்கள் வாங்குவதால் அறிவாளி கிடையாது' - இது முற்றிலும் உண்மை. வகுப்பில் வாங்கும் ரேங்குகளுக்கும், வாழ்க்கையில் பிரகாசிப்பதற்கும் ரொம்பவும் சம்பந்தம் கிடையாது. 'அவரவர் விதி வழி அடைய நின்னனரே' என்பதுதான் சரி.

    உங்கள் கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி கோபு சார்.

    பதிலளிநீக்கு
  50. வருகைக்கு நன்றி மிடில் கிளாஸ் மாதவி. சீதா, ஏன் மகனை (ராமபத்ரனை) மன்னிக்கவேண்டும்? சிறுவன், அறியாத வயதுத் தவறு (ஓடிப்போவது). கணவனை மன்னிப்பதுதான் சரி. எனக்கு கதைத் தலைப்பு வைக்கும்போது, என் பையனிடம் அடிக்கடி சொல்லும் 'கோபம் பாபம் பழி' என்ற வார்த்தைகள்தான் ஞாபகத்துக்கு வந்தன.

    பதிலளிநீக்கு
  51. வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி அவர்கள். 'அதீதக் கண்டிப்பு' பிரயோசனப்படாதுதான்.

    பதிலளிநீக்கு
  52. சாவியல்ல. மணியன்.

    ஆனந்த விகடன் நூலகத்தில் ஜெயகாந்தனின் 'ஒரு பிடிச் சோறு' என்ற சிறுகதைத் தொகுப்பை தற்செயலாகப் படித்த மணியன், அதை விகடன் ஆசிரியர் பாலுவிடம் கொண்டு போய்க் கொடுத்து படித்துப் பாருங்கள் என்றார். பாலுவும் அந்த சிறுகதைத் தொகுப்பைப் படித்து விட்டு அசந்து போய் இவர் நம் பத்திரிகையில் எழுத வேண்டுமே என்று ஆசைப்படுகிறார்.

    உடனே மணியன் ஜெ.கே.யைத் தேடிச் சென்று ஆனந்த விகடனுக்கு நீங்கள் எழுத முடியுமா?' என்று கேட்டுக் கொள்கிறார்.

    அதற்கு பதிலாக, "ரொம்ப சரி. நான் எழுதிக் கொடுப்பவற்றில் என் அனுமதி இல்லாமல் எதையும் நீங்கள் நீக்கக் கூடாது. அப்படியென்றால் எழுதுகிறேன்." என்று எதிர்க் கேள்வி போடுகிறார்.

    அவர் தான் ஜெயகாந்தன். எழுத்தாளரின் சுயமரியாதையை தன் இளம் வயதிலேயே தூக்கிச் சுமந்தவர் அவர்.

    பதிலளிநீக்கு
  53. மீள்வருகைக்கு நன்றி கீதா சாம்பசிவம் மேடம். உங்கள் புக்ககத்தின் VISIONஐப் பாராட்டுகிறேன். இதைத்தான் 'மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்' என்று SIMPLEஆச் சொல்லிடறாங்க.

    நம்ம குழந்தைகள் நாம் செய்வதை வெறுத்தாலும், அவங்க நம்மகிட்டேருந்துதான் கத்துக்கறாங்க. அதனால அவங்க வாழ்க்கையிலும் நாம செய்வதைத்தான் அவங்க ஃபாலோ பண்ணுவாங்க. அதனால உங்க பெண் கொஞ்சம் கண்டிப்பாக இருப்பதில் வியப்பில்லை.

    பதிலளிநீக்கு
  54. ஜி.எம்.பி சார்.. உங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  55. ஆச்சரியம் நெல்லை... நானும் இப்போது சாவியின் பழைய கணக்கு (சந்தியா பதிப்பகம்) படித்துக் கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  56. வாங்க அதிரா. இப்போவும் வந்துட்டு காணாமல் போயிடுவீங்களா அல்லது வெகேஷன் முடிஞ்சு வந்தாச்சா?

    "வந்தார் போனார்... திரும்பி வந்தார்... இனிப் போனால் வருவீரோஓஓஓஓஓஓஓ" - டக்கென்று மனதில் விடை வரவில்லை, ஆனால் தெரியும். இது, உங்களுக்கும் பொருந்தும் போலிருக்கிறதே. போன வாரமோ அதற்கு முந்திய வாரமோ 'வந்தார்' அப்புறம் 'போனார்'. இன்று 'திரும்பி வந்தார்'. இனிப் 'போனால்' எப்போ 'வருவீரோஓஓஓஓ'

    ஓவியத்தைப் பற்றி நீங்கள் எழுதியுள்ளது சரிதான். எனக்குத் திருப்தி இல்லாதவை இந்த இரண்டு ஓவியங்களும். கதை எழுதின உடனே (அதாவது 4 மாதங்களுக்கு முன்பு, as if நாளைக்கே வெளியிட்டுடுவார் என்று எண்ணிக்கொண்டு) அவசர அவசரமாக வரைந்தேன். இதுக்கு மாடல் படம், ஒரு ஜோக்கிலிருந்தும் இன்னொரு கதையிலிருந்தும் எடுத்தேன்.


    உங்கள் கருத்துக்கு நன்றி.. அது சரி, 'பச்சைப் பொன்னாடை' எனக்குப் பிடிக்க நான், ஜெயலலிதா கட்சியில் அல்லவா இருக்கவேண்டும். எனக்குப் 'பச்சையும்' வேண்டாம், 'மஞ்சளும்' வேண்டாம் - நான் பொன்னாடை நிறத்தைச் சொன்னேன்ன்ன்ன்.

    பதிலளிநீக்கு
  57. சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் 'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' என்ற நூலில் ஜெயகாந்தனைப் பற்றிய கட்டுரையில் நானும் இதையெல்லாம் விவரமாக எழுதியுள்ளேன்.

    இந்த மாதிரி விஷயங்களில் உண்மை எது என்று தெரிந்து கொள்ள சம்பந்தப்பட்டவர் கொடுத்த பேட்டிகளில் ஏதாவது இருந்தால் அதுவே அவரது வாக்குமூலமாகக் கொண்டு முடிவுக்கு வர வேண்டும். என் கட்டுரைகள் பல அப்படியானவையே.

    பதிலளிநீக்கு
  58. ஸ்ரீராம் - என்னிடம் இருப்பது 'சாவி பப்ளிகேஷன்ஸ்' வெளியிட்ட 'பழைய கணக்கு'. இன்னொன்றும் 'சாவி-85 ராணி மைந்தன் எழுதியது' அவர்கள் வெளியீடுதான். இரண்டுமே சாவியின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள்தான். ரொம்ப interesting. எடுத்தால், தொடர்ந்து படிக்கவேண்டும் என்று தோன்றுகின்ற நிகழ்வுகள். இதுபோலவே சாவி அவர்கள் எழுதிய, நவகாளி யாத்திரை, சிவகாமியின் செல்வன்-காமராஜரைப் பற்றியது - ரொம்ப நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  59. ஜீவி சார் - 'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' புத்தகம் இன்னும் நான் வாங்கவில்லை. படிக்கவேண்டிய லிஸ்டில் இருக்கிறது. இதில், சாவி அவரது வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளை எழுதும்போது குறிப்பிட்டுள்ளார். இது வெளியானபோது சாவியும், ஜெயகாந்தனும், விகடன் ஆசிரியராக பாலசுப்ரமணியம் அவர்களும் இருந்தனர். அதனால் அதில் ஒரு நம்பகத்தன்மை இருந்தது.

    பதிலளிநீக்கு
  60. சாவி சார் எழுதிய புத்தகமா, அவரது வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய அந்தப் புத்தகம்? தெரிந்து கொள்ள ஆவல்.
    புத்தகத்தின் பெயர் என்ன?..

    வேறு யாராவது தொகுத்ததென்றால் விஷயமே 'சப்'பென்று போய்விடும்.

    பதிலளிநீக்கு
  61. ஜீவி சார்... மணியன் பற்றிய பின்னூட்டத்தை இப்போதுதான் படித்தேன். அப்புறம் ஏன் 'சாவி' அவர்தான் இதனைச் செய்ததாக எழுதியிருக்கிறார்? 78-85கள்ல, சாவிக்கும் மணியன் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு உண்டு என்பதும், இவர் 'சாவி' பத்திரிகையும், அவர் 'இதயம் பேசுகிறது மணியன்' பத்திரிகையும் ஆரம்பித்து நடத்தினார்கள் என்பதும் தெரியும். நான் சாவி, இ.பேசுகிறது, இன்னொரு பத்திரிகையான மயன் (மணியன் அவர்கள் வெளியிட்டு - எம்.எஸ்.உதயமூர்த்தியும் அதில் உண்டு என நினைக்கிறேன், ஆதரவில்லாமல் நிறுத்தியது) போன்ற பல பத்திரிகைகளை அப்போது படிப்பேன் (பாட புத்தகத்தைத் தவிர)

    ஒரு கேள்வி - மணியன் 'தன்வரலாறு' எழுதியிருக்கிறாரா? என் intuition (தவறாக இருக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது) சாவி மணியனைவிட உண்மையைச் சொல்லுகிறவர் என்ற பிம்பம் ஏற்படுத்துகிறது (கோபமுள்ளவன் குணவான்). மணியனின் 'பயணக் கட்டுரைகள்' இப்போது யார் வெளியீட்டில் கிடைக்கிறது?

    பதிலளிநீக்கு
  62. சாவி சாரின் இளமை வாழ்க்கை பற்றி, அவரின் துணிச்சலைப் பற்றி, குடும்ப சோகத்தைப் பற்றி எழுத எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. திருக்குறள் கதைகள் என்று ஆவியில் வாராவாரம் மணியனும், சாவியும் போட்டிப் போட்டுக் கொண்டு எழுதினார்கள். அது தமிழ் எழுத்துலகின் பொற்காலம்.

    பதிலளிநீக்கு
  63. ஜீவி சார் - சாவி அவர்கள் எழுதிய 'பழைய கணக்கு' 164 பக்கமுள்ள, சுமார் 40 அவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை (ஒவ்வொரு நிகழ்வும் 3-4 பக்கம் வரும்படியாக) அவரே சுவையாக எழுதியது. (பழைய கணக்கு, சாவி பப்ளிகேஷன்ஸ்). இன்னொன்று, சாவி அவர்கள் 85 வயதானபோது, அவருடைய அடிப்பொடியான ராணி மைந்தன் அவர்கள், சாவி அவர்களிடம் 6-7 மாதமாக ஒவ்வொரு நிகழ்ச்சியாகச் சொல்லிக்கேட்டு அதனைப் புத்தக வடிவமாக்கினது. அதுவும் சாவி பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டது. சாவி-85. இதற்குப் பண உதவி செய்தது, ஓபுல் ரெட்டி-இந்தோ நிப்பான் லிமிடட் மற்றும் திருமதி ஞானாம்பா அவர்களைக்கொண்ட சாரிட்டபிள் டிரஸ்ட். இந்தப் புத்தகத்துக்கு கருணானிதி, ஏவிஎம் சரவணன், விகடன் ஆசிரியர், எம்.ஏ.எம் ராமசாமி செட்டியார் போன்றோர் முன்னுரை எழுதியிருக்கிறார்கள். அதனால் authentic என்றுதான் நம்புகிறேன். 80 தலைப்புகளில், 370 பக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  64. சாவி சாரைப் பற்றி நினைத்து நினைத்து பிரமிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.

    எதையும் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு வாழத் தெரிந்தவர். எந்த இழப்பிலும் அசந்து போய் விடாமல் மீண்டும் மீண்டும் துளிர்த்து தன் இருப்பபைத் தெரியப்படுத்தியவர்.

    எதை தட்டச்சு செய்தாலும் உடனே என் கணினியில் டெலிட் ஆகி விடுகிறது. பிறகு அவர் பற்றி விவரமாக ஒரு கட்டுரை எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  65. விவாதம் ஜெயகாந்தன், சாவி என்றெல்லாம் ஓடுவது நன்றாக இருக்கிறது.

    ஜெயகாந்தன் என் பதின்ம வயதிலேயே நான் தீவிர இலக்கியத்துக்குள் ப்ரவேசிக்கக் காரணமானவர். அவருடைய ‘வாழ்க்கை அழைக்கிறது’ நாவலைத் தற்செயலாகப் படிக்க நேர்ந்து அசந்துபோனேன். அதற்கப்புறம் வணிகப்பத்திரிக்கைகளில் சும்மா பேருக்கு எழுதிக்கொண்டுபோகும் எழுத்தாளர்களிடமிருந்து விலகிவிட்டேன். தன் கலையின்மீது அவருக்கிருந்த கர்வம், அப்போதிருந்த ஒரு கன்சர்வேடிவ் சூழலிலும் அதனைத் தயங்காது நேர்மொழியில் வெளிப்படுத்தியவிதம், இளம் வயதில் அவர்மீது ஒரு கவர்ச்சியை ஏற்பத்தியிருந்தது. வணிகப்பத்திரிக்கைகளோடு அவர் அவ்வப்போது சண்டைபோட்டாலும், குமுதத்தில் எழுபதுகளின் இறுதியில் அவர் எழுதிய நடுப்பக்கக் கட்டுரைகள் மேலும் என்னை வசீகரித்தன. சோவின் துக்ளக்கில் அவர் தொடராக எழுதிய ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ ரஸமான எழுத்து. அவருடைய முன்னுரைகளும் சுவாரஸ்யமானவை;
    ஆழமானவை; அவரது சமூகப்பார்வையை நேரடியாக வெளிப்படுத்துபவை. ‘ஜெயகாந்தனின் முன்னுரைகள்’ தனியாக ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டதாக நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயகாந்தனின் முன்னுரைகள் என்று தனிப் புத்தகம் இருக்கிறது ஏகாந்தன் ஸார். கவிதா பப்ளிகேஷன்ஸ். செம விலை!!!

      :)))

      நீக்கு
  66. ஜீவி சார்.. நீங்கள் எழுதியிருப்பது ("பிரமிக்க எத்தனையோ") உண்மைதான். நான் ரொம்ப ஆச்சர்யமாகக் கருதுவது, பாலசந்தர் அவர் பெண்ணுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்ததுபோல், தன் பெண்ணுக்கு இயற்கையின் விதியால் கணவர் விமானப் பயணத்தில் இறந்தபோது (என் நினைவு சரியாக இருந்தால், இரண்டாவதாக அந்தப் பெண்ணை மணந்துகொள்ளவேண்டி, தானே கேட்டு வந்தவர், அதே விபத்தில் தன் மனைவியை இழந்தவர்) அவருக்கு பாலசந்தரையொட்டி, தன் மகள் சம்மதம் கேட்டுத் திருமணம் செய்துவைத்தவர். 'சாவி' பத்திரிகை நடத்துவதற்காகவே பிறந்தவர், அதனால் பெரு நஷ்டம் அடைந்தபோதும் திரும்பித் திரும்பி அதிலேயே இறங்கியவர். அவருடன் பணியாற்றிய ரவி பிரகாஷ் (தற்போது விகடனில்) சாவியைப் பற்றி எழுதியவைகளையும் படித்திருக்கிறேன். (அந்தக் காலத்தில் நான், என்னடா மணியன் எம்ஜியாரோட என்றால், சாவி கருணானிதியோடு இருக்கிறார் என்று நினைத்திருக்கிறேன். பிற்காலத்தில் அதேபோல்-ஆளுமையை compare செய்யவில்லை-பாக்கியராஜ் எம்ஜியாரோடு, டி.ராஜேந்தர் கருணானிதியோடு, இருவரும் பாக்யா, உஷா என்று பத்திரிகை நடத்தியவர்கள்)

    பதிலளிநீக்கு
  67. ஏகாந்தன் - நீங்கள் என்னைவிட நிறைய இத்தகையவைகளைப் படித்திருக்கிறீர்கள். ஜெயகாந்தனின் 'நடுப்பக்கம்' படித்த ஞாபகம் இல்லை. (சம்பந்தமே இல்லாத ஒரு கேள்வி. ரொம்ப நாளாகத் தெரிஞ்சுக்கணும்னு நினைத்தது. குமுதத்தில் ஓவியர் செல்லம் அவர்கள் வரைந்த தொடர் ஒன்று வந்தது. அதில் 'இடியாப்பம் விற்பதாக' ஒரு வாரத்தில் படித்திருக்கிறேன். அதுதான் குமுதத்தைப் பற்றிய என்னுடைய முதல் நினைவாக இருக்கிறது. அப்போதுதான் 'இடியாப்பம்' என்ற வார்த்தையையே முதன்முதலாகக் கேள்விப்பட்டது. அது எந்த வருடம் வந்தது என்பதைத் தெரிந்துகொள்ள ஆசை)

    ஜெயகாந்தன் அவர்களின் 'ஆளுமையையும்' 'வித்யா கர்வம்' (நேர்மறையாகச் சொல்லியிருக்கிறேன்), எளிய மக்களைப் பற்றிய அவரது அனேகமான எல்லாப்படைப்புகள்-இதெல்லாம் சொல்ல எனக்குத் தகுதியில்லை.

    பதிலளிநீக்கு
  68. ஆரம்பகாலங்களில் முன்னுரை என்பது கதைப் புத்தகங்களுக்கு ஒரு ஃபார்மாலிட்டி மாதிரி தான் இருந்தது.
    எதைப் பற்றிய புத்தகம் இது, புத்தகத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்பதை லேசாகக் கோடி காட்டுகிற மாதிரி முன்னுரையில் சொல்வது வழக்கம். புததகக் கடையில் புத்தகம் பார்த்து புரட்டியவுடன் கண்ணில் படுவது முன்னுரை தான். அதனால் முன்னுரையை எடுப்பாக சிறப்பாக வெளியிடுவது வழக்கமாயிற்று. இந்த முன்னுரை எழுதும் பணியை யாராவது பிரபலமானவர் செய்தால் புத்தகத்திற்கு மதிப்பு கூடும் என்ற யதார்த்த கணிப்பு பிற்காலத்தில் வந்தது. சில பிரபலங்கள் புத்தக உள்ளடக்களிலிருந்து விலகி தங்களுக்குத் தெரிந்ததையெல்லாம் தன் முன்னுரையில் திணிக்க ஆரம்பிக்க அப்படியான முன்னுரைகளின் மேல் வாசிப்பவர்க்கு சலிப்பே தோன்ற ஆரம்பித்தது. நூல் விற்பனையை அதிகரிக்க, பதிப்பகங்களே தங்கள் சொந்த கித்தாப்பில் சில பிரபலங்களிடம் பேருக்காக முன்னுரை எழுதி வாங்கும் பழக்கமும் இடையில் இருந்தது. நகைக்கடைகளுக்கு பிரபல சினிமா புள்ளிகள் தோன்றும் விளம்பரங்கள் தொலைக்காட்சியில் வருகிறதே, அந்த மாதிரி. கமலஹாசன் போன்றார்கள் புத்தகங்களுக்கு முன்னுரை எழுதினால் அதன் விற்பனை எகிறும் என்கிற கணக்கு போலத் தான் இதெல்லாம்.

    இந்த வாலாயமான பழக்கங்களையெல்லாம் புறந்தள்ளி மண்மூட வைத்தவர் ஜெயகாந்தன் தான். அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு,'ஒரு பிடிச் சோறு' நூலுக்கு மட்டும் மஞ்சரி பத்திரிகை ஆசிரியராக இருந்த தி.ஜ.ர. முன்னுரை எழுதியிருக்கிறார். கவியரசர் கண்ணதாசன் அந்த நூலுக்கு கவிதை வாழ்த்துரை அளித்திருக்கிறார். கடுமையான பொருலாதார நெருக்கடிகளுக்கு நடுவே எழுத்தாளர் விந்தன் 'புத்தகப்பூங்கா' என்ற பதிப்பகத்தை ஆரம்பித்து ஜெயகாந்தனின் இந்த முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். விந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'முல்லைக் கொடியாள்' நூலுக்கு முன்னுரை எழுதியவர் கல்கி அவர்கள்.

    'என் நூலுக்கு நெருக்கமானவர்கள் என்னைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது' என்ற உண்மையில் சொல்கிறேன், என் நூலுக்கு முன்னுரை எழுத என்னை விடப் பொருத்தமானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது' என்று டிக்கேர் செய்து விட்டு தன் நூல்களுக்கு அழகான முன்னுரைகளை எழுதிக் குவித்தவர் ஜெயகாந்தன். அவர் தன் நூல்களுக்கு எழுதிய முன்னுரைகளே இலக்கிய அந்தஸ்த்து பெற்று, அவரின் முன்னுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்திருக்கின்றன. அந்த அளவுக்கு ஜெயகாந்தனின் முன்னுரைகள் பிரசித்தம். அதுவும் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' 'சில நேரங்களில் சில மனிதர்கள்'
    'கோகிலா என்ன செய்து விட்டாள்?' நூல்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகள் அடடா என்று வியந்து வாசிப்பவர்களை ரசிக்க வைக்கும்.

    இப்போதைக்கு இது. 'பொதுவாக முன்னுரைகளை யாரும் கண்டுகொள்வதில்லை' என்ற நிலையைப் புறக்கணித்து, முன்னுரைகளைப் பற்றி கூட நிறைய எழுத இருக்கிறது என்ற விழிப்புணர்வை பதிவுலகில் ஏற்படுத்திய ஸ்ரீராமிற்கு நன்றி.

    பிரபலமான முன்னுரைகளைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். சொல்ல முயற்சிக்கிறேன்.

    -- எங்கள் பிலாக் பழைய பதிவு ஒன்றில் நான் போட்டிருக்கிற பின்னூட்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி ஸார்.... எங்கள் ப்ளாக்கில் முன்னுரைகள் பற்றி பதிவிடத் தொடங்கியதையும், அதிலும் முதலில் பாரீஸுக்கு போ ஜேகே முன்னுரையை வெளியிட்டதைச் சொல்ல நினைத்தேன். நீங்களே நினைவு படுத்தி விட்டீர்கள்.

      நீக்கு
  69. வை கோபாலகிருஷ்ணன் (கோபு சார்) அவர்கள் எழுதியுள்ள பின்னூட்டம்

    (3)

    //குழந்தைகளை அடிப்பதைப் பற்றிய உங்கள் கருத்து மிகவும் சரி. என் அம்மாவும் சொல்லுவார்கள், வெறும் முக பாவத்திலேயே அல்லது வெறும்ன மிரட்டுவதன் மூலமே குழந்தைகளின் தவறுகளைச் சரி செய்யவேண்டும், கையை எந்தக் காரணம் கொண்டும் ஓங்கக்கூடாது என்பார்கள். //

    நான், மிகவும் கோபக்காரரான என் அப்பாவுடன் சேர்ந்து வாழ நேர்ந்ததே என் 25 வயது வரை மட்டுமே. என் பத்து வயதுக்குள் ஒரேயொரு நாள் அவரிடம் மிகவும் பலத்த அடிகள் வாங்கியுள்ளேன். அடி என்றால் கொஞ்ச நஞ்ச அடி அல்ல. போட்டுத் துவைத்து விடுவார். பேச்சு மூச்சே நின்று விடும்.

    என் அம்மா + அண்ணாக்களை ஒப்பிடும்போது நான் அவரிடம் அடி வாங்கியது மிக மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும். நான் அவரிடம் அன்று அடி வாங்கியதற்கான காரணமும் மிகவும் அல்பமானது மட்டுமே. அவர் தூங்கிக்கொண்டிருந்தபோது நான் ஏதோ சப்தப்படுத்தி என் அம்மாவிடம் அழுது புலம்பி பிடிவாதம் பிடித்து ஏதோ தீனி வாங்கிக்கொள்ள முயன்றுள்ளேன்.

    தூக்கம் கலைந்த அவர் என்னை அவரின் கால்களுக்கு இடையே அமுக்கிக்கொண்டு சாத்து சாத்து என்று சாத்திவிட்டார். அவரிடம் அப்பா என்ற என் பிரியமும் பாசமும் அத்தோடு அன்றோடு எனக்குப் போய் விட்டது. கடைசிவரை, அவர் காலம் ஆகும் வரை (1975) ஏதோவொரு மரியாதையும், பயமும் மட்டுமே எனக்கு அவரிடம் இருந்து வந்தது.

    >>>>>

    பதிலளிநீக்கு
  70. வை கோபாலகிருஷ்ணன் (கோபு சார்) அவர்கள் எழுதியுள்ள பின்னூட்டம்.

    (4)

    //(ஆனால், சொல்வது யார்க்கும் எளிதல்லவா. முன்கோபம் கொண்டவர்கள் எப்படி இந்தமாதிரி அறிவுரைகளைக் கேட்டு நடப்பது?)//

    நானும் முன்கோபக்காரன் மட்டுமே. ஆனால் என் பிள்ளைகள் மூவரையும் நான் பலமுறை கண்டித்தது உண்டு, நல்ல பல அறிவுரைகள் சொல்லியது உண்டு. நான் சிறுவயதில் பட்ட சிரமங்களையும், குடும்பத்தின் வரவு செலவுகள் + கஷ்ட நஷ்டங்களைச் சொல்லிப் புரியவைத்ததும் உண்டு. இன்றுவரை நான் அவர்களிடம் கை நீட்டியது என்பது கிடையவே கிடையாது.

    அவர்களின் படிப்பில்கூட கணக்கு தவிர எந்தப்பாடங்களிலும் 100 க்கு 100 வாங்கணும் என நான் எதிர்பார்த்ததும் கிடையாது. முதல் 10 ரேங்குகளுக்குள் வரப்பாருங்கள் என்று மட்டுமே சொல்லி வளர்த்தது உண்டு. பாடங்கள் எதையும் அப்படியே ஒப்பித்து பரீக்ஷையில் எழுதாதீர்கள். புரிந்துகொண்டு சொந்த நடையில் எழுதப்பாருங்கள் என்று மட்டுமே சொல்லுவேன்.

    பதிலளிநீக்கு
  71. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  72. உங்கள் நினைவுகள் சரி தான், நெ.த.

    அடுத்து அவர் ஆசிரியராக நேர்ந்த பத்திரிகைக்கு 'குங்குமம்' என்று பெயரிட்ட மாமனிதரும் சாவிதான்.

    பதிலளிநீக்கு
  73. கோபு சார்.. உங்கள் மீள் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.

    என் அப்பாவும் கோபப்படுவார், ஸ்கேலால் மூன்று முறை-3ஆவது படிக்கும்போது, 4ஆவது படிக்கும்போது, அப்புறம் 8வது படிக்கும்போது. அது, 'ஒழுக்கம்' சார்ந்தவைகளுக்குத்தான். 8வதுக்கு அப்புறம் என்னை எப்பயாச்சும் திட்டுவதோடு சரி. 9வதிலிருந்து, படிப்புக்காக என் அப்பா என்னைத் திட்டிப் பார்த்ததே இல்லை. அவரை நான் மிகவும் மிஸ் பண்ணுகிறேன். (அவருக்கு நான் உபயோகமானவனாக இல்லாதிருந்தபோதிலும், அவருக்கு என்னைத்தான் மிகவும் பிடிக்கும். அதை எண்ணும்போதெல்லாம், 'உவத்த நீர் போல எந்தன் உற்றவர்க்கு ஒன்றுமல்லேன்' என்ற திருமாலைப் பாசுரம்தான் என் நினைவில் வரும்)

    பதிலளிநீக்கு
  74. உண்மைதான். இளம் வயதில், கையில் காசில்லாத நிலையிலும் எப்படியோ புத்தகங்கள் கைக்கு வந்து சேர்ந்தன. இலக்கியத்தைப்பற்றிப் பேசுவோர்கூட என் பக்கத்தில் இருந்ததில்லை. ஆனால் இலக்கிய எழுத்துக்கள் எப்படியோ என்னை வந்தடைந்தன. ‘கண்ணதாசன்’ என்ற பெயரிலேயே கண்ணதாசன் நடத்திய இலக்கிய இதழ்பற்றிக் கேள்வியுற்று (எழுபதுகள்), அதனை புதுக்கோட்டையில் ஒரு கடையில் தற்செயலாகப் பார்த்து வாங்கி (குமுதம் 55 பைசா, கல்கண்டு 15 பைசா விற்ற அந்தக்காலத்தில் கண்ணதாசன் மாத இதழ் ரூ.2 ஆக இருந்தது!) வீட்டுக்கு எடுத்துவந்தபோது ‘கண்டதையெல்லாம் வாங்கி காசக் கரியாக்கிட்டு வந்து நிக்கறயா!’ என்று வீட்டில் அம்மாவிடம் திட்டு வாங்கி முழித்திருக்கிறேன். அது ஒரு கனாக்காலம்! இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

    ஜெயகாந்தனுடனான ‘சண்டை’ ஒன்றிற்குப்பின் அவரை சமாதானப்படுத்துவதற்காக குமுதம் இந்த நடுப்பக்க ஆஃபரைக் கொடுத்ததாகப் பின்னர் கேள்விப்பட்டேன் - கூடவே ‘இந்த இரண்டு பக்கங்களில் நீங்கள் விரும்புகிற விஷயம்பற்றி, உங்களது அனுபவம் பற்றி என்று எதுவேண்டுமானாலும் எழுதுங்கள். நாங்கள் எடிட் ஏதும் செய்யமாட்டோம்! -என்கிற உத்தரவாதத்துடன். அந்தத் தொடரில், தன் அப்பாவின்மீது தனக்கிருந்த மதிப்பு, ப்ரியம் பற்றி அவர் எழுதிய உருக்கமான ’‘ ஆனால் அது அவர்களுக்குத் தெரியாது !’’ என்கிற கட்டுரை இன்னும் நினைவில் இருக்கிறது. இன்னொன்று: ‘’ஆஹா! நான் ஃபெயில் ஆயிட்டேன்!’’

    ஓவியர் செல்லத்தின் ‘இடியாப்ப’க்கதையை/ தொடரைப் படித்ததாக நினைவில்லை.

    பதிலளிநீக்கு
  75. ஆஆஆஆவ்வ்வ் இதென்ன இங்கு இன்னொரு கதை ஓடிக்கொண்டிருக்குதோ...

    ///நெல்லைத் தமிழன் said...
    நீங்க வருவீங்கன்னு நினைக்கலை (வெகேஷன்ல இன்னும் இருக்கறதுனால).///
    அப்பூடி நீங்களாகவே ஒரு முடிவுக்கு வந்திடக்குடா சொல்லிட்டேன்ன்:)..

    ஒன்பது மணியாகிட்டுது என டக்குப்பக்கென குட்நைட் சொல்லிட்டு நித்திரைக்கு ஓடிடாதீங்கோ.. அது ஒரு சிம்பிள் விடுகதை தான் ஈசியா கண்டுபிடிக்கலாம் சொல்லிட்டுத் தூங்குங்கோ இல்லையெனில்.. கெட்ட கெட்ட கனவா வரும் சொல்லிட்டேன்ன்...:)

    ஸ்ரீராம் இங்கின வந்தாரோ இப்ப?:) இல்ல நான் வந்து போனபிறகு அவர் வந்தமாதிரி ஒரு பீலிங்ஸ்ஸா இருந்துது..:) ஆனா என் விடுகதைக்கு பதில் சொல்லாமல் ஓடிட்டார் அதுதான் கேட்டேன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா... வாங்கன்னு வரவேற்று கண்டுகொண்டால் மறுபடியும் காணாமல் போய்விடுவீர்களோ.. அந்த பயம்தான்!

      நீக்கு
  76. டாங்ஸ் கீதாக்கா... அதேதான் இப்போ பலபேர் கண்போனபிந்தானே சூரிய நமஸ்காரம் என ஒன்று இருப்பதையே அறிகிறார்கள்... இக்கதையிலும் அப்படியே.. இந்த சீதை நினைத்திருந்தால், கணவர் சொல்லுக்கேட்கமாட்டார் கோபக்காரர் எனில், மகனை தனக்குள் நன்கு அணைத்து தன் அன்பை அதிகம் கொட்டி இருக்கலாம்... அதனால தாய்க்காக பிள்ளை பொறுத்துப்போக வாய்ப்பிருந்திருக்கும்...

    இது கணவர் மேல் பழிபோட்டு, தானும் கோபமாக இருந்து வாழ்க்கையில் என்னத்தைக் கண்டிட்டா?..

    நெல்லைத்தமிழன் சொன்னதை மறந்திட்டேன்ன்ன்:) யேஸ் யேஸ் ஓவரா வெரிட்டப்படாது குழந்தைகளை.. ஏன் பெரியவர்களையும்கூட:).. அன்பாலதான் அடக்க நினைக்கோணும்.. முடியாதபட்சத்தில் எல்லாம் தலைவிதி என அமைதியா இருப்பதுதான் உத்தமம்ம்ம்ம்ம்ம்:).

    பதிலளிநீக்கு
  77. எங்கட கோபு அண்ணனுக்கு என்ன ஆச்சு? ஏன் நேரடிப் பின்னூட்டம் கொடுக்கிறார் இல்லை?..

    பதிலளிநீக்கு
  78. அன்பு நெல்லைத்தமிழன் நேற்றே படித்துவிட்டு முகனூலில் கருத்திட்டேன்.
    அன்பு ப்ளாகருக்குப் போகமுடியாமல் தொந்தரவு. இப்போது கணினிக்கு வந்தேன். தாமதத்துக்கு மன்னிக்கவும்.
    அடித்து வளர்க்கும் தந்தைகள் பிள்ளைகளால் பலன் அடைவதில்லை.
    நானும் குழந்தைகளை அவர்கள் எல்லை மீறி விஷமம் செய்யும்போது முதுகில் வைத்தது உண்டு. இப்போது வருத்தமாக இருக்கிறது. இதைவிடக் கண்டிப்பான ஒரு தந்தையையும் பார்த்திருக்கிறேன்.
    அவருடைய மகன் பதினாறு வயதிலியே வீட்டை விட்டுப் போய் விட்டான்.

    உங்கள் சீதையும் ராமனும் மனதால் உடலால் பிரிந்தது கொடுமை.
    ஆனால் யதார்த்தம் அதுதான்.
    துன்பப்ப் படுத்தினால் துன்பம் தான் விளையும். இழந்தவள் சீதையே.

    யக்னராம கிருஷ்ணமூர்த்தி பாவப்பட்ட மனிதர்.
    சீதை மன்னித்த ராமர்களில் நலிந்தவர்.

    என் வீட்டுக்காரர் குழந்தைகள் மேல் ஒரு
    விரல் கூடப் படக்கூடாது என்பதில் மும்முரம் காட்டுவார். கோவித்ததும் கிடையாது. இரண்டு பசங்களுக்கும்
    அப்பா மேல் அளவிட முடியாத பாசம்.
    நான் கண்டிப்பதெல்லாம் விழலுக்கு இறைத்த நீர்.
    மிக அருமையான கதையை எழுதி எல்லோர் எண்ணங்களையும் கிளறி இருக்கிறீர்கள்.
    மனம்னெலகிழ்கிறது. நெஞ்சம் நிறை வாழ்த்துகள். ஸ்ரீராமுக்கும் உங்களுக்கும்.

    பதிலளிநீக்கு
  79. //ஆஷா போஸ்லே அதிரா நினைவு வந்தது. அவருக்கு செல்லமாச்சே! அவர் வந்ததும்தான் பகிர நினைத்தேன். ஆனால் இன்றைய சூழலுக்கு படங்களைப் பொருத்தமாக உபயோகிக்க முடியும் என்று தோன்றியதால், ஏற்கெனவே போடவிருந்த படங்களை அடுத்த வாரத்துக்கு ஒத்திப்போட்டு, இன்று இதைப் பகிர்கிறேன்.//

    பூனை பதிவை பதிந்து விட்டார் ஸ்ரீராம் அதை படித்து விடுங்கள் .
    எல்லோரும் உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்தோம்.

    பதிலளிநீக்கு
  80. அதிரா.. கடந்த ஞாயிறு படங்கள் பார்க்கவில்லையா?!!

    பதிலளிநீக்கு
  81. அடடே... கோமதி அரசு மேடம்.. நீங்களும் நானும் ஒரே சமயத்தில் ஒரே விஷயத்தைப் பற்றிப்பின்னூட்டம்!

    பதிலளிநீக்கு
  82. கதை அருமை நண்பரே...



    இறுதிவரை உறுதி செய்யப்படாத காதல்... http://ajaisunilkarjoseph.blogspot.com/2017/08/blog-post_21.html

    பதிலளிநீக்கு

  83. அருமையான கதை

    நகைச்சுவை எண்ணங்கள் சில...
    http://www.ypvnpubs.com/2017/08/blog-post_22.html

    பதிலளிநீக்கு
  84. அப்பா கண்டிப்பானவர் என்றால் ,அம்மா பாசத்தைக் காட்டி வளர்த்து இருந்தால் ,பையன் ஓடியிருக்க மாட்டேனே,எனவே மன்னிக்கும் தகுதி சீதாவுக்கு இல்லை :)

    பதிலளிநீக்கு
  85. ஹா ஹா ஹா நான் என்ன விருப்பப்பட்டா காணாமல் போகிறேன், அது தானா நடக்குது ஸ்ரீராம்:) ஒரு ஒப்புதலுக்கு உள்ளேன் ஐயா எனச் சொல்லிப்போவது எனக்கு விருப்பமில்லை.. வந்தா ஒழுங்கா படிச்சு கொமெண்ட்ஸ் போட்டு கலந்து பேசிப் போகோணும் அது முடியாது எனும்போது கொஞ்சம் ஒதுங்கிப்போய் திரும்ப வந்துட்டனே... நாரதர் கலகம் ஆற:)ம்பம்ம்ம்ம்ம்ம்:).. ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  86. இதோ போகிறேன் பூஸாருக்கு கைகொடுக்க.. கோமதி அக்கா.. ஸ்ரீராம்.

    //ஸ்ரீராம். said...
    அதிரா.. கடந்த ஞாயிறு படங்கள் பார்க்கவில்லையா?!!///
    ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அப்போ டாலிங்குஜி முடிஞ்சிடுச்சாஆஆஆஆஆஆஆஆ?:) ஹையோ இந்த சந்தோசத்தைக் கொண்டாட ஆரையாவது தேம்ஸ்ல தள்ளோணும்போல வருதே:).. சே..சே.. இந்நேரம் பார்த்து அஞ்சு அருகில் இல்லயே:)...

    ஆபத்துக்கு உதவாப்பிள்ளை....
    அரும்பசிக்கு ..

    அது ஒண்ணுமில்லே சிட்டுவேஷன் சோங் பிபிசி லபோகுதூஊஊஊஊஊஉ:)

    பதிலளிநீக்கு
  87. கதையைவிட கருத்துரைகள் அதிகம்! த ம 16

    பதிலளிநீக்கு
  88. மீள்வருகைக்கு நன்றி ஆதிரா. (பார்த்து நாளாகிட்டுது. அதனால பெயரில் குழப்பம் வரத்தான் செய்யும்).

    அதான் விடுகதைக்கு விடையைச் சொல்லிட்டேனே. (இக்க்காலத்தில நமக்கு நாமே கைகுலுக்கிக்கொள்ள வேண்டியதுதேன்ன்ன்ன் - இப்படிச் சொன்னதுனால, விடை 'அதிரா' என்று சொல்லுவதுதான் எனக்கு Safe)

    "இது கணவர் மேல் பழிபோட்டு, தானும் கோபமாக இருந்து வாழ்க்கையில் என்னத்தைக் கண்டிட்டா?" - இது உணர்வுபூர்வமானது. வாழ்க்கையில் என்ன கண்டுவிட்டார் என்று கேட்கறீங்க. இங்க பெரும்பாலும் எல்லாரும் உணர்ச்சிபூர்வமாத்தான் வாழ்க்கையை வாழறாங்க. கடைசி காலத்துலதான் எல்லாரும் புரிஞ்சுக்கறோம்... என்னடா வாழ்க்கை வாழ்ந்தோம்னு.

    பதிலளிநீக்கு
  89. வருகைக்கு நன்றி வல்லிம்மா.

    "அடித்து வளர்க்கும் தந்தைகள் பிள்ளைகளால் பலன் அடைவதில்லை" - எந்தத் தந்தைதான் பிள்ளைகளால் பலன் பெற்றிருக்கிறார்? பிள்ளைகளுக்கு அன்பு காண்பிக்கவும் தெரியாது, அந்தப் பக்குவம் வரும்போது தந்தை பெரும்பாலும் மறைந்திருப்பார்.

    ஒருவர் கண்டிப்பு காண்பிக்கும்போது இன்னொருவர் கண்டிப்பே காண்பிக்காமல் சாஃப்டாகத்தான் இருப்பார். ஒருவேளை நீங்கள் ரொம்ப சாஃப்டா எதுக்கும் திட்டாமல் இருந்திருந்தால், ஒருவேளை, அவர் ரொம்ப கடுமை காட்டியிருக்கலாம். என்ன இருந்தாலும் அவரவர்களுக்கு உரிய குணம் என்று ஒன்று இருக்குமல்லவா. சாத்வீக குணம் இருந்தால், கடுமை காட்டமாட்டார்கள்.

    "சீதை மன்னித்த ராமர்களில் நலிந்தவர்." - உண்மைதான். தெரிந்தே தவறு செய்யவில்லை யஞ்ஞராமன்.

    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  90. நன்றி 'கரையோரம் சிந்திய கவிதைகள்' - முதல் முறையாக உங்களை இங்கு பார்க்கிறேன்.

    நன்றி ஜீவலிங்கம் யாழ்பாவாணன்.

    பதிலளிநீக்கு
  91. வாங்க பகவான்ஜி. என்ன இப்படிச் சொல்லிட்டீங்க. 'பையன்' அப்பாவைக் கொண்டு பிறந்திருந்தால், அந்தப் பெண் என்ன செய்வாள்? சீதை என்ற பெயரைக் கேட்டாலே எனக்கு, 'ஐயையோ நானும் ஓர் பெண்ணாய்ப் பிறந்ததை' என்ற பாடல்தான் எனக்கு ஞாபகம் வரும். பெண்களின் கஷ்டம் அநுதாபத்துக்குரியது.

    பதிலளிநீக்கு
  92. வருகைக்கு நன்றி புலவர் இராமானுசம் ஐயா. ஒரு பின்னூட்டத்தில் 'சாவி'யை நான் தொட்டதால், 'விடாது கருப்பு' என்பதுபோல, சாவி அவர்களின் வாழ்க்கைப் பயணம் என்று பின்னூட்டங்கள் விரிந்துவிட்டன. சாவி சாருக்கு அத்தனை பெருமையும் 'தகும்' 'தகும்'.

    பதிலளிநீக்கு
  93. அதிரா... சர்வ சாதாரணமாக விவேகசிந்தாமணி பாடலைக் கோடி காண்பித்துச் சென்றுவிட்டீர்கள். Brilliant.

    ஆபத்துக் குதவாப் பிள்ளை அரும்பசிக் குதவா அன்னம்
    தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
    கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
    பாபத்தைப் போக்காத் தீர்த்தம் பயனிலை ஏழும் தானே.

    இதுல 'கோபத்தை அடக்கா வேந்தன்' என்பதை, 'கோபத்தை அடக்கா குடும்பத் தலைவன்' என்றும் பொருள்கொள்ளலாம். 'குருமொழி கொள்ளாச் சீடன்' என்பதை, 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்பதைப் புரிந்துகொள்ளாத மகன் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  94. பாராட்டுக்கள் நெல்லை தமிழன்! நல்ல கதை. நேற்று முதல் இன்று மதியம் வரை நெட் வேலை செய்யவில்லை. அதனால் உடனே பின்னூட்டம் இட முடியவில்லை.

    எங்கள் தூரத்து உறவில் ஒருவர் இப்படித்தான் மிகவும் கண்டிப்பாக இருப்பார். வீட்டில் இட்லி, தோசை செய்தால் கண்டிப்பாக சட்னி, சாம்பார் மிளகாய் பொடி என்று எல்லாம் செய்ய வேண்டும். சப்பாத்தி என்றால் குருமா.. அவர் மனைவி அவருடைய ஷூவை தினமும் பாலிஷ் செய்து ரெடியாக வைக்க வேண்டும். குழந்தைகளை பச்சைத் தண்ணீரில்தான் குளிப்பாட்ட வேண்டும்,அதுவும் தினசரி இரண்டு முறை. இப்படி சாப்பாட்டு விஷயம் முதல் குழந்தைகள் வளர்ப்பு வரை எல்லாவற்றிலும் கடும் நிபந்தனைகள். குழந்தைகள் தவறு செய்தல் பெல்ட்டால் அடிப்பது..அவருடைய இந்த அதீத கண்டிப்பை தாங்க முடியாத அவர் மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுதே வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டான்.

    இப்படி அதீத கண்டிப்பில் வளரும் குழந்தைகள் குறிப்பாக ஆண் குழந்தைகள் வீட்டை விட்டு ஓடா விட்டாலும், தன்னம்பிக்கை குறைந்தவர்களாகவும், சுயமாக முடிவு எடுக்க முயாதவர்களாகவும்தான் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  95. மனதை வருடிப் போன கதை. படித்ததும் எல்லாரையும் மன்னிக்கத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  96. பின்னூட்ட கருத்தாடல் அபாரம்.

    பதிலளிநீக்கு
  97. ஒரு முறை ஜீவியிடம் "ஜெயகாந்தன் அப்படி என்ன சாதித்து விட்டார்?" என்று கேட்ட நினைவு. வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  98. //அதாவது 4 மாதங்களுக்கு முன்பு, as if நாளைக்கே வெளியிட்டுடுவார் என்று எண்ணிக்கொண்டு)

    :-)

    இரண்டாவது படம் நன்றாகவே இருக்கிறது. முதல் படம் பரவாயில்லை.

    பதிலளிநீக்கு
  99. என் அப்பாவுவின் அடி உடை திட்டுக்குப் பயந்து வீட்டை விட்டு ஓட நினைத்ததுண்டு. என் அப்பாவை மனதாராமல் திட்டியதும் உண்டு.

    என் அனுபவங்களை வைத்து சில வருடங்களுக்கு முன் தந்தை சொல் என்று ஒரு கதை எழுதினேன்.. கற்பனையாக இருந்தாலும் என் தங்கைக்குப் புரிந்துவிட்டது.. ஓவென்று அழுது எனக்கு ஒரு கடிதம் அனுப்பினாள். அவளை சமாதானம் செய்வதற்குள் போதுமென்றாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  100. உங்கள் பாராட்டுக்கு நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்.

    இதுமாதிரி கதை எழுதும்போது, உண்மையாக நம்முடைய மனநிலை எப்படி இருக்கிறது, நாம் எப்படி நடந்துகொள்கிறோம், எப்படி நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் மனது சிந்திக்கிறது. அதுதான் இந்தக் கதை எழுதும்போது என்றுடைய அனுபவம். இதைவிடவும் நிலைமை மோசமாகிவிடலாம் (அதையும் எழுதிப்பார்த்து பின்பு அந்தப் பாதையில் கதையைக் கொண்டுசெல்லவில்லை. அப்பா அடிக்கும்போது, பையன் தடுக்க நினைத்துத் தள்ளிவிடுகிறான், அப்பா, மேசையின் முனை தலையில் பட்டு இறந்துவிடுகிறாள்... இந்தப் புலத்திலும் கதையைக் கொண்டுசென்று, ராமபத்ரன் என்ற வாசுவை ஒரு சமயத்தில் சீதை மன்னிப்பதுபோல் எழுதலாம். ஆனால் அந்தச் சாதாரண குடும்பத்தில் இந்த மாதிரி ஒரு நிகழ்வைப் புகுத்த என் மனது ஒப்பவில்லை. அதனால் எழுதியவற்றை நீக்கி வேறு வழியில் கதையைக் கொண்டுசென்றேன்)

    கோமதி அரசு மேடம் சொன்னது என் மனதில் நிற்கிறது. "கோபத்தால் திருத்தம் ஏற்படாது வருத்தம்தான் ஏற்படும்".

    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  101. அப்பாதுரை சார்... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள் எழுதியது என் மனதைப் பாதித்தது.

    உங்கள் தளத்தில் அந்தக் கதை(?)யைப் படித்தேன்.ஒரு கதையோ அல்லது இடுகையோ, நம் வாழ்க்கைக்கு உபயோகமான ஒன்றைத் தெரிந்துகொள்ளச் செய்யும்போது நான் அடையும் திருப்திக்கு, பசியுடன் இருக்கும் ஒருவன், நல்ல சுருசியான உணவை உண்டபின் கிடைக்கும் திருப்திக்குத்தான் இணையாகச் சொல்லமுடியும். நீங்கள் எழுதிய "தந்தை சொல்" ஒரு சிறந்த கதை. Well Done.

    'தவறுகளிலிருந்துதான் எளிய மனிதர்களான நாம் பாடம் கற்றுக்கொள்ள முடியும்'. சில சமயம் கோபம் நம்மை எப்படி ஆட்கொண்டுவிடுகிறது என்பதை, அதன் விளைவுகளெல்லாம், கொஞ்ச காலம் கடந்து நம்மை உரசும்போதுதான் தெரிந்துகொள்ளமுடிகிறது. வாழ்க்கையில் திருத்தமுடியாத தவறுகளைச் செய்துவிடக்கூடாது, அதுவும் கோபத்தில், என்பதுதான் என்னுடைய தின ப்ரார்த்தனையில் ஒன்று.

    நான் சமயத்தில் என் குழந்தைகளிடம் சொல்லுவேன், 'நான் செய்வது தவறு என்று நீங்கள் என்னவெல்லாம் நினைக்கிறீர்களோ, அதை என்னிடம் சொல்லுங்கள், நான் அதைத் தவறு என்று நினைத்தால் ஒத்துக்கொள்கிறேன். அதே சமயம் நீங்கள், நான் செய்வது தவறு என்று நினைப்பதை உங்கள் வாழ்க்கையில் எப்போதும் செய்யாதீர்கள்'.

    நன்றி அப்பாதுரை சார்.

    பதிலளிநீக்கு
  102. விரைவில் இன்னொரு கதை எழுதுவேன். அதில் நீங்கள் 'நன்றாயிருக்கிறது' என்று சொல்லும்படியான இரண்டு ஓவியங்களையும் வரைவேன். (எனக்குத் திருப்தி தரும் ஜெ. ஓவியத்தை, எங்கள்பிளாக் ஸ்ரீராம் வெளியிடுவாரா என்பது எனக்குச் சந்தேகம்தான்) 'படத்தைப் பற்றிய' உங்கள் கருத்துக்கு நன்றி அப்பாதுரை சார்.

    பதிலளிநீக்கு
  103. கதை ரொம்ப அருமையாய் இருக்கு...

    இது போல் தொடர்ந்து பல கதைகள் எழுதி உங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள்....

    (பதிவு போட்ட உடனே படித்து. ..கருத்தும் கொடுத்தேன்...ஆனால் அன்று வரவில்லை...இன்று மீண்டும் வாசிக்கும் போது இத்தனை கருத்து மலையுனுள் நம்மது இல்லைனா பராவில்லை என்று தான் தோணியது..

    இருப்பினும் கொடுத்துவிட்டேன்...)

    பதிலளிநீக்கு
  104. கீதா சாம்பசிவம் மேடம்... இதற்கு மட்டும் பதில் எழுதலை.

    "இனிமேல் மன்னித்தால் என்ன? மன்னிக்காவிட்டால் என்ன? போனவர் துக்கத்தோடேயே போய் விட்டார். கடைசிப் படுக்கையில் மன்னித்திருந்தாலும் ஒரு அர்த்தம் இருந்திருக்கும்!"

    எனக்குத் தெரிந்தவர், தன் மரணப்படுக்கையில், தன் மூத்த மருமகளிடம், 'நான் உன்னை ரொம்பப் படுத்திவிட்டேனோ ..யா' என்று கேட்டார். அதற்கு அந்த மருமகள், 'அதுனால என்னம்மா' என்று பதில் சொன்னார். (பிறகு என்னிடம் சொல்லும்போது, அந்த சமயத்தில் மாமியார் வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்? இந்த 'படுத்தக்கூடாது' என்ற எண்ணம் முதலிலேனா வந்திருக்கணும் என்றார்)

    செய்த செயலைப் பொறுத்துத்தான் 'மன்னிப்பு' என்பதெல்லாம். நானும் என் பசங்க, 'சின்ன வயசுல நீங்க இதை இப்படிப் பண்ணினீங்க' என்று இப்போது குறை சொல்லும்போது, 'அப்பாவை மன்னிச்சுடுடா. அப்ப எனக்குத் தெரியலைடா' என்று சொல்லிவிடுவேன். அதற்கு என் பெண், 'இப்படி Sorry கேட்டு என்ன use. இப்போவும் நீங்க சொல்ற சில விஷயம் பிடிக்காது. பின்னால இதைச் சொன்னால், அப்போவும் 'Sorry மன்னிச்சுக்கோ'ன்னு சொல்லிடுவீங்க' என்று சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
  105. //மீள்வருகைக்கு நன்றி கீதா சாம்பசிவம் மேடம். உங்கள் புக்ககத்தின் VISIONஐப் பாராட்டுகிறேன். இதைத்தான் 'மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்' என்று SIMPLEஆச் சொல்லிடறாங்க.//இதன் பலாபலன்களை இன்றளவும் அனுபவிப்பதால் என்னால் இதை ஏற்க முடியவில்லை. சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லியே ஆகணும். அதே போல் குழந்தைகளிடம் கொஞ்சம் கண்டிப்புக் காட்டவில்லை எனில் பிடிவாதமும், நினைத்ததைச் சாதிக்கும் குணமும், பெரியோரிடம் அவமரியாதை காட்டுவதும் தான் நிலைக்கிறது! தவறுகளை ஆசிரியர்களோ வீட்டின் மற்றப் பெரியவர்களோ பார்த்துக் கண்டித்தால், "நீ யார் கண்டிக்க? உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ!" என்பார்கள்! ஆகவே சின்ன வயதிலிருந்தே செல்லம் கொடுக்கும் அளவுக்குக் கண்டிப்பும் காட்ட வேண்டும். மற்றபடி "குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை!" என்பதில் எனக்குப் பெரிய அளவில் நம்பிக்கையும் உண்டு. அதைக் கடைப்பிடிக்கவும் செய்வேன்; செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  106. அந்தப்பிள்ளை லோல்பட்டுவிட்டு திரும்ப வருவதுதான் முன்பெல்லாம் ஸகஜம். அப்பாவோ,அம்மாவோ போயிருப்பா. இது என்னடான்னா இரண்டுபேர் ஸகஜநிலைையையும் முழுங்கி, ஆளும் போயி, அவளையும் கடைசிநேரத்தில் எவ்வளவு வருஷம் கழித்து படிக்கிறாளாம். ஊர் உலகத்திலே அப்பன்காரங்க இப்படிதான். இப்பொ என்ன பொண்ணே ஓடிப்போரா என்ன சொல்லமுடியும். ஒரு பாமர பாட்டி இந்தக்கதையைப் படித்துவிட்டு அபிப்ராயம் இப்படி சொல்லுவாள். ரொம்ப சோகம். பையன் வந்துடணும்.
    நான் மிகவும் உடல்நிலைஸரியில்லாது இருக்கிறேன். கண்டிப்பு கூடாதது இல்லை. அன்பும் கொடுத்திருந்தால் அது வேறு மாதிரி. நெ.தமிழன் கதையோ கொக்கோ. பாராட்டுகள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  107. உடம்பு சரியில்லாதபோதும் உங்கள் நேரத்தைச் செலவழித்து கதையைப் படித்துக் கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி காமாட்சியம்மா. உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    விரைவில் நலமுற்று, இரண்டு உணவுப் பதிவு 'சொல்லுகிறேன்'இல் எழுதுங்கள். எனக்கும் இன்னும் ஒரு வாரத்துக்குள் 3-4 நாள் விடுமுறை வரும். அப்போது செய்துபார்க்கத் தோதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  108. இன்றைக்குத்தான் உங்கள் கருத்தைப் பார்த்தேன் அனுராதா பிரேம்குமார். வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  109. முதலில் நெல்லைத் தமிழனுக்குப் பாராட்டுக்கள் கேட்காமலேயே கதையை எழுதி அனுப்பியதற்கு. கதையை படித்து உள்வாங்கிக் கொண்டு கருத்துரையை எழுதிவிட்டு பிறகு பின்னூட்டங்களை படித்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஸ்ரீராம், உங்கள் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களை தொகுத்துப் போட்டாலே சுவாரஸ்யமான ஒரு புத்தகம் கிடைக்கும் போல!

    நிற்க.
    பின்னூட்டங்கள் எங்கெங்கோ போய் -மிக மிக சுவாரஸ்யம் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும் - காமாஷிமா மூலம் மறுபடியும் கதைக்கு வந்துவிட்டது. இது நான் இந்தக் கருத்துரையை எழுதும் சமயத்து நிலவரம்.

    அதீத கண்டிப்பான அம்மா, அப்பா இருவருமே மறைமுகமாக வெறுக்கப்படுகிறார்கள் என்பதை பல வீடுகளில் பார்த்திருக்கிறேன். அப்பா கண்டிக்கும் போது அம்மா பரிந்து பேசலாம். அப்பா முன் இல்லையென்றாலும் குழந்தைகளிடம் தனியாகச் சொல்லலாம். என்னுடைய பாணி இதுதான்.தவறில்லை. நிறைய எழுதிவிட்டார்கள். நானும் அதையே திருப்பிச் சொல்ல விரும்பவில்லை.

    ஒரே ஒரு விஷயம் ஒப்புக்கொள்ள முடியவில்லை: பிள்ளை வீட்டைவிட்டு ஓடிப்போய் கணவரும் போன பிறகு யாரை மன்னித்தாள் சீதா? கதை தான் என்றாலும் கதாபாத்திரங்களை காரணமில்லாமல் சாகடிப்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்கள் கதை என்றில்லை. இது பொதுவான கருத்து. அட்லீஸ்ட் பிள்ளை திரும்பி வந்திருந்தால் அந்த மன்னிப்பிற்கு ஒரு அர்த்தம் இருந்திருக்குமோ என்னவோ.

    ஒவ்வொரு கதை படிக்கும்போதும் இதுதான் சிறந்தது என்று தோன்றலாம். அப்படித்தான் ஜீவி ஸாரும் எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் என் கதையை நம்பர் ஒன் என்று சொன்னதற்கு கீதாவிற்கு நன்றி சொல்லுகிறேன். மறுபடியும் நான் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற ஊக்கத்தை உங்கள் பாராட்டு அளிக்கிறது கீதா. நன்றி!

    பதிலளிநீக்கு
  110. படங்கள் நன்றாக வந்திருக்கின்றன நெல்லைத் தமிழன். முதலிலேயே பாராட்டியிருக்க வேண்டும். ஸாரி. பாராட்டுக்கள். கோமதி ஒரு ஓவியரின் மனைவி என்பதை நிரூபித்துவிட்டார். அவருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு!

    பதிலளிநீக்கு
  111. இன்றுதான் உங்கள் பின்னூட்டம் படித்தேன் ரஞ்சனி நாராயணன் மேடம். மிகுந்த அனுபவம் உள்ள எழுத்தாளர் நீங்கள். கருத்துச் சொன்னதற்கு நன்றி.

    'தான்இறப்பதற்கு முன், கணவன் தன் குழந்தை வீட்டைவிட்டுப் போய், தன் வாழ்க்கையின் அர்த்தம் இல்லாமல் செய்துவிட்டாரே' என்றெழுந்த கோபத்தை மறக்கும், தன் கணவரை மன்னிக்கும் வாய்ப்பு கிடைத்ததுதான் 'கடைசி வரிகளை நோக்கிக் கதை சென்றதன் அர்த்தம்' என்று தோன்றியது. பையன் திரும்பி வருகிறான் என்றெல்லாம் கதையை நகர்த்தினால், நாடகமாகிவிடும் என்பது என் எண்ணம்.

    நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும். எல்லோரும் ஆவலுடன் படிப்போம். ஆனாலும் நீங்கள் என்ன எழுதினாலும் என் மனதில் உங்களைப் பற்றி நினைக்கும்போது, 'அரியலூர் அடுக்குதோசை' என்பதுதான் ஞாபகம் வரும். தளங்களுக்கு வந்த புதிதில் படித்த இடுகைகள் அவை, இயல்பான நிகழ்வுகள், அதைச் சொல்லிப்போன விதம், என்னை மறக்கவொட்டாமல் செய்துவிட்டது. அதைவிட்டால், உங்களது, ஆங்கிலம் போதித்த அனுபவங்கள்.

    அடுத்தமுறை, கதையைவிட, படங்கள் அட்டஹாசம் என்று சொல்லும்வகையில் படம் வரைய முயற்சிப்பேன்.

    பதிலளிநீக்கு
  112. ஸ்ரீராம்! உங்களுக்கு அரியலூர் அடுக்கு தோசை என்றால் எனக்கு 'தோழி' பத்திரிகை.

    பதிலளிநீக்கு
  113. என் எழுத்துக்களை ரசிப்பதற்கு எப்படி நன்றி சொல்லப்போகிறேன், நெல்லைத் தமிழன்? நன்றி, நன்றி, நன்றி.
    நன்றி ஜீவி ஸார்.

    பதிலளிநீக்கு
  114. கதை மனதை என்னமோ செய்தது .காரணம் நான் இப்படிபட்டோரை பார்த்திருக்கேன் .இந்த முரட்டு தந்தை போல பலர் இன்னும் இருக்காங்க ..அப்பா கூட வேலை செய்தவர் மகன்களை மூர்க்கமாக அடிப்பாராம் அதில் வெறுத்துப்போய் இரண்டு மகன்களும் தவறான பாதையை தேர்ந்தெடுத்து வழிதப்பிய ஆடுகளாயிட்டாங்க தந்தை இறக்கும்வரை அதற்க்கு பிறகும்திருந்தவில்லை :( கோபத்தினால் முரட்டு குணத்தால் என்னத்தை சாதித்தார் அந்த தந்தை ..அன்பாய் நடத்தியிருந்தா ஓரளவு ஊர் மதிக்கும் பிள்ளைகளாகவாவது இருந்திருப்பாங்க ..பைபிளில் பழைய ஏற்பாட்டில் ஓரிடத்தில் இருக்கு வீட்டுக்கு அடங்காத பிள்ளையை தகப்பன் ஊர் பெரியோர் முன் ஒப்படைச்சி என்னவேனும்னாலும் செஞ்சிக்கோங்க (கல்லால் அடிங்கன்னு ) பெர்மிஷன் தருவாராம் தந்தை அப்போ அந்த காலத்தில் இருந்தே இந்த முரட்டு தந்தை மகன் லடாய் இருந்திருக்கு போல
    நானறிந்த இன்னோர் தந்தை கண்டித்தே நல்ல மகனை நாசமாக்கிட்டார் :( சில விஷயங்கள் குறிப்பா நண்பர்களுடன் செல்வது நட்புக்களை வீட்டுக்கு அழைப்பது அந்தந்த வயதுக்குரிய சந்தோஷங்கள் அதை அனுபவிக்க விடணும் பிள்ளைகளை இல்லேனா இப்படி வாசுக்கள் பெருகக்கூடும் ..அட்லீஸ்ட் சீதாவாவது கொஞ்சம் கூடுதலா வாசுவிடம் அன்பு செலுத்தியிருக்கலாமோ என்று தோணுது ..
    இங்கே வெளிநாட்டில் கையை நீட்ட முடியாது காப்பு ரெடியா வரும் கைக்கு ...அப்படியும் நம்ம இந்தியர் கொஞ்சம் வெளிக்காட்டி மாட்டியிருக்காங்க ...பிள்ளைங்க நேரே சைல்ட் அபியூஸ் லைனுக்கு கால் போட்ருவாங்க அதனால் கொஞ்சம் பயத்தோடதான் இருக்காங்க ..இன்னும் சில இந்தியர் தண்ணி கழுவி விட்ட மாதிரி ஒன்றுமே கண்டுகொள்வதில்லை இதனாலும் பிரச்சினைகள் தான் :(
    என்னைப்பொறுத்தவரை அன்புடன் கூடிய லேசான கண்டிப்பு இருந்தாலே போதும் ..ஒரு பிள்ளை தன தந்தையை கண்டு பயப்படுகிறான் என்றால் அதைவிட கொடுமை வேறில்லை ..


    சீதாவும் காலம் கடந்து மன்னித்ததில் என்ன பயன் இறக்கும்வரை :(பேசாமல் அனுப்பி வச்சிட்டாரே கணவரை

    இதனால்தான் எப்பவும் கோபத்தை வெறுப்பை மட்டும் வைத்திருக்கக்கூடாது நாம் எதிராளியை மன்னிக்கும் நாளில் அவர் அதை ஏற்கும் நிலையில் இருப்பாரோ என்னவோ :(


    பல குடும்பங்களில் நான் பார்த்ததை இங்கே கதையாக காட்சிப்படுத்தி விட்டீர்கள் ..அப்புறம் அந்த
    படங்கள் எல்லாம் நல்லா வந்திருக்கு ..வளையல் என்று எல்லாரும் குறிப்பிட்டு சொல்லும்போது அப்போவும்இப்பவும் எனக்குள்ள பழக்கம் வளையல் போட மறந்திருவேன் :) ஒருவேளை உங்க கதாநாயகி சீதா என்னை மாதிரியோ :) லாங் ஸ்லீவ்ஸ் போடும்போது வளையல் போடடாட்டியும் தெரியாது :) then புடவை முந்தானையை கைமேல் போட்டு வரைஞ்சிருந்தா வளையல் போடலைன்னாலும் தெரிஞ்சிருக்காது

    அப்புறம் மெட்டியும் மிஸ்ஸிங் :)

    உங்களை மாதிரியே கதைக்கு நானே படம் வரையணும்னு யோசிச்சி வச்சிருந்தேன் நேரம் கிடைக்க மாட்டேங்குது :) கதைக்கும் படத்துக்கும் :)

    பதிலளிநீக்கு
  115. வருகைக்கு நன்றி ஏஞ்சலின். கதையைப் படித்துக் கருத்திட்டமைக்கு நன்றி.

    நீங்கள் முரட்டுக்குணம் உடைய தகப்பனைப் பற்றி சொல்லியிருப்பது உண்மைதான். 'கோபம்' என்பதே ஒருவரது பலவீனம்தானே. அதை, சிறிது நேரம் கழித்து (அதாவது கோபத்தினால் விளைவு ஏற்பட்டபிறகு) புரிந்துகொள்வதால்தான், தான் கோபப்பட்ட நபரிடமே அன்பைப் பொழிந்து, 'கோபம்' வந்த காரணத்தையே dilute ஆக்கி, purposeஏ இல்லாமல் செய்துவிடுவார்கள். 'முன்னேறிய நாடுகளில், குழந்தைகளை அடிப்பது தடை செய்யப்பட்ட ஒன்று, அவர் 16-18 வயது ஆகிவிட்டால் பெரியவர் ஆகிவிடுவார், அவருடைய வாழ்க்கை முடிவுகளை அவரே எடுத்து அதன் விளைவையும் அனுபவிக்கும் நிலைமைக்கு ஆளாவார். பெற்றோரின் கடமை என்பது அங்கு இல்லை. இங்கு, இறக்கும் வரையில், மகனுக்கு 70 வயது ஆகியிருந்தாலும் அவன் குழந்தைதான். அப்போதும் அப்பாவை எதிர்த்துப் பேசாத கலாச்சாரமாகத்தான் இந்த பூமி அப்போது இருந்தது.

    உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!