திங்கள், 12 ஜனவரி, 2015

திங்கக் கிழமை 150112 :: கொத்தவரங்காய்க் கூட்டு.

      
தேவை: 
கொத்தவரங்காய் : கால் கிலோ. 
புளி : எலுமிச்சம்பழ அளவு.
வெல்லம் : ஆரஞ்சுப்பழ அளவு. (ஆட்சேபணை இல்லை என்றால்!) 
குழம்புப் பொடி : நான்கு டீஸ்பூன். 
தேங்காய் : ஒன்று. 
நல்லெண்ணெய் : ஐந்து டேபிள் ஸ்பூன். 
கடலைப் பருப்பு:  நான்கு டீஸ்பூன். 
அரிசி மாவு: நான்கு டீஸ்பூன். 
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், (எல்லாம்) சிறிதளவு 
உப்பு: தேவையான அளவு. 
மஞ்சள் தூள் : ஒரு சிட்டிகை. 
கறிவேப்பிலை : ஒரு ஈர்க்கு. 

கொத்தவரங்காயை காம்பு நீக்கி, நார் (இருந்தால்) நீக்கி, ஒரு செ மீ நீளத்திற்கு நறுக்கிக்கொள்ளவும். 
     


தேங்காயை உடைத்து, துருவி எடுத்துக்கொள்ளவும். 

நறுக்கிய கொத்தவரங்காயை, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, நன்றாகக் கலக்கி, ஒரு பாத்திரத்தில் இட்டு, காய் அமிழ (மூழ்கும் அளவுக்கு) தண்ணீர் விட்டு, குழம்புப் பொடியைப் போட்டு, நன்றாக வேகவிடவும். காய் வெந்ததும், புளியைக் கெட்டியாகக் கரைத்துவிட்டு, வெல்லத்தைச் சேர்த்து, (வெல்லம் வேண்டாம் என்றால் சேர்க்கவேண்டாம்) பெருங்காயத்தைக் கரைத்து, சேர்த்து,  கறிவேப்பிலையைப் போட்டுக் கலந்து, அரிசி மாவைக் கரைத்துச் சேர்க்கவும். 

வாணலியை அடுப்பிலேற்றி, எண்ணெய் இட்டு, கடுகு போட்டு, அவைகள் வெடித்ததும், உளுத்தம்பருப்பு, தேங்காய்த்துருவல் இவைகளை இட்டு, பொன்னிறமாக வறுத்து, கூட்டில் கூட்டணி சேர்க்கவும். 

கொத்தவரங்காய்க் கூட்டு தயார்! 

எச்சரிக்கை : 
ஒரு மாதத்தில் ஒரு நாள் மட்டும்தான் கொத்தவரங்காய் சாப்பிடலாம். அமாவாசை சமயத்தில் சாப்பிடலாம். பௌர்ணமி சமயத்தில் வேண்டாம். அடிக்கடி கொத்தவரங்காய் உண்பவர்களுக்கு, பித்தம் அதிகமாகி, வயதான காலத்தில், பைத்தியம் பிடிக்க சாத்தியம் அதிகம். 

(நான் சின்ன வயதில் அதிகம் கொத்தவரங்காய் சாப்பிட்டு வளர்ந்தவன். எங்கள் தோட்டத்தில் கொத்துக் கொத்தாகக் கொத்தவரங்காய் காய்த்துக் கொண்டிருந்தது. தெருவில் வந்து கேட்போருக்கெல்லாம் கூட ஒரு சேர் (280 gram) ஐந்து பைசா என்று விற்றிருக்கின்றோம். ஏழை மக்களுக்கு இலவசமாகக் கொடுத்திருக்கின்றோம். ஆனால் இப்போ எனக்கு பைத்தியம் இல்லை. கனவில் மட்டும்தான் பாயைப் பிறாண்டுகின்றேன்!) 
           

17 கருத்துகள்:

  1. ஹாஹா, இந்தக் கூட்டைப் புளி விடாமலும் பண்ணலாம். கொத்தவரைக்காய், கடலைப்பருப்புச் சேர்த்து உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக வைத்துக் கொண்டு, மாவு கரைத்து ஊற்றிக் கொண்டு தேங்காய் எண்ணெயில் கடுகு, உபருப்பு, மி.வத்தல், கருகப்பிலை, தேங்காய் வறுத்துப் போடலாம்.பொடி சேர்க்க வேண்டாம். புளி விட்டால் பொடி சேர்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. கொத்தவரங்காய் வத்தலை பொறித்து மழைக்காலத்தில் ரசம் சாதத்திற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அதன் டேஸ்டே தனிதான்! அருமை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. கொத்தவரங்காய் - ராஜஸ்தானில் இவை அதிகம்.

    தில்லியிலும் இவற்றை வைத்து சூக்கா சப்ஜி செய்வதுண்டு! அதிகம் சாப்பிடும் அவர்களுக்கும் ஒன்றும் ஆவதில்லை! கொத்தவரங்காய் பருப்புசிலி எனக்கும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  4. கொத்தவரங்காய் கூட்டைவிட பொறியல் அதன் சுவை மாறாமல் இருக்கும் என்று நினைக்கிறேன் எந்தக் காயைச் சமைத்தாலும் அதன் ஒரிஜினல் சுவை குறையக் கூடாது என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  5. சொன்னபடி செய்து பார்த்தால் கடலைப்பருப்பு நாலு டீஸ்பூன் மிச்சமிருக்கே?

    பதிலளிநீக்கு
  6. கொத்தவரங்காய் கிடைத்தால் செய்து பார்க்கலாம் தான்.... ம்ம்ம்...

    பதிலளிநீக்கு
  7. கொத்தவரங்காய் கூட்டு நல்லா இருக்கிறது. ஆரஞ்சுப்பழ அளவு வெல்லமா?

    ஊறவைத்த துவரம்பருப்பு மிளகாய்வற்றல், பெருங்காயம், தேங்காய் அரைத்து கலந்துசெய்யும் கொத்தவரங்காய் பருப்புசிலிதான் பிடிக்கும். குழந்தைகள் கொத்தவரங்காய் வடை என்று விரும்பி சாப்பிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  8. கொத்தவரங்காய் கூட்டு நல்லா இருக்கிறது. ஆரஞ்சுப்பழ அளவு வெல்லமா?

    ஊறவைத்த துவரம்பருப்பு மிளகாய்வற்றல், பெருங்காயம், தேங்காய் அரைத்து கலந்துசெய்யும் கொத்தவரங்காய் பருப்புசிலிதான் பிடிக்கும். குழந்தைகள் கொத்தவரங்காய் வடை என்று விரும்பி சாப்பிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  9. அப்பாதுரை, மிச்சமிருக்கும் கடலைப்பருப்பை ஊற வைத்து அல்லது தாளிப்பில் சேர்த்து வறுத்துக் கூட்டில் கலக்கவும். இங்கே செய்முறையில் கடலைப்பருப்பை எப்போச் சேர்க்கணும்னே சொல்லலை. ஆகவே நான்கு டீஸ்பூன் கடலைப்பருப்பு ஜாஸ்தி தான். :)

    பதிலளிநீக்கு
  10. அப்பாதுரை, மிச்சமிருக்கும் கடலைப்பருப்பை ஊற வைத்து அல்லது தாளிப்பில் சேர்த்து வறுத்துக் கூட்டில் கலக்கவும். இங்கே செய்முறையில் கடலைப்பருப்பை எப்போச் சேர்க்கணும்னே சொல்லலை. ஆகவே நான்கு டீஸ்பூன் கடலைப்பருப்பு ஜாஸ்தி தான். :)

    பதிலளிநீக்கு
  11. அதிகம் சாப்பிட்டால் பைத்தியம் பிடிக்கும் என்று சொல்லிவிட்டு, உங்களுக்கு பைத்தியம் பிடிக்கலை என்று சொன்னால் நாங்கள் நம்புவோமா என்ன?

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. // Chokkan Subramanian said...
    அதிகம் சாப்பிட்டால் பைத்தியம் பிடிக்கும் என்று சொல்லிவிட்டு, உங்களுக்கு பைத்தியம் பிடிக்கலை என்று சொன்னால் நாங்கள் நம்புவோமா என்ன?//

    டர்ர்ர்ர் டர்ர்ர்ர் .......... !

    பதிலளிநீக்கு
  14. கொத்தவரங்காய் ரிசிப்பி அருமை. செய்வதுண்டு ஆனல் குழம்பு பொடி போட்டு செய்வது புதிது. செய்து பார்த்தா போச்சு.....-கீதா

    பதிலளிநீக்கு
  15. கொத்தவரங்காஅய் போல உடம்பு அல்லே....என்ற பாடலும்னினைவுக்கு வந்தது

    பதிலளிநீக்கு
  16. அச்சுறுத்தலுடன் ஒரு அருமையான குறிப்பு :) !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!