செவ்வாய், 12 ஜனவரி, 2021

மறக்கவியலாத சிறுகதை - சீட்டு  - அப்பாதுரை

   சீட்டு

     சித்திரை மாதம் முதல் நாள். அதிகாலை ஆறு மணி இருக்கும். “விடிஞ்சா சித்திரை டோய்.. விசால நித்திரை டோய்” என்று ஏதோ முணுத்தபடி நல்லசிவம் பெரிய மரப்பெட்டியை எடுத்து ஒற்றை மாட்டு வண்டியில் வைக்க முயன்றார். பின்னால் ஓடி வந்த நரசிம்மன் பெட்டியின் பூட்டை அசைத்துப் பார்த்து “பூட்டியிருக்கு” என்றார். “ஆமாய்யா, என்னை நம்பலியா?” என்று சிரித்த நல்லசிவம் மறுபடி பெட்டியைத் தூக்கினார். “ஆச்சுயா, இதான் கடைசி பெட்டி..” என்று வண்டியில் இருந்த மற்ற நான்கு வரிசைகளைக் காட்டினார். வரிசைக்கு ஆறு என்று இருபத்து நாலு சிறிய பெட்டிகளைச் சுட்டினார்.

வண்டியில் பூட்டியிருந்த காளை ஏனோ முரண்டது. “ஹீய் ஹேய் ஹூவ்” என்று ஏதோ கூவியபடி காளையைத் தட்டிக் கொடுத்து வண்டியின் பாரத்தைச் சீராக்கினார் நரசிம்மன். பெட்டியை ஏற்றி வைத்து நல்லசிவம் பின்னால் உட்கார்ந்ததும் தானும் வண்டியின் முன்பகுதியில் உட்கார்ந்தார். சிவன் கோவில் மண்டபம் வரை சீராகச் சென்ற வண்டி சொல்லி வைத்தாற்போல் நின்றது. பெரிய பெட்டியை இறக்கி வைத்த நல்லசிவம், நரசிம்மனின் உதவியுடன் பெட்டியை மண்டப மேடையின் நடுவில் வைத்தார். இருவரும் மற்ற இருபத்து நான்கு பெட்டிகளையும் எடுத்து வந்து அருகில் வைத்தனர். ஒரு முறைக்கு இரு முறை அனைத்துப் பூட்டுக்களையும் ஒவ்வொன்றாக இழுத்துப் பார்த்த நரசிம்மன், "நான் சாட்சி நமசிவாயம்" என்றார் சிவன் சன்னதியைப் பார்த்து. தானும் சிவனைப் பார்த்து கும்பிட்டு "நான் சாட்சி நமசிவாயம்" என்றார் நல்லசிவம்.

மாட்டை வண்டியிலிருந்து கழற்றி கழனித்தொட்டி அருகே கட்டி வந்தார் நரசிம்மன். "மத்த கிராமத்துல இப்பல்லாம் எறிநாள் விரயம்னு பேசிக்கிறாங்க அண்ணாச்சி" என்றார்.

"ஆமாய்யா.. ஜனங்க இப்பல்லாம் நாகரிகம் அது இதுனு எதையோ சொல்லிக்கிட்டு திரியறாங்க.. நேத்து இன்னி வழக்கமாயா.. எறிநாள் எங்க முப்பாட்டனுக்கு நாலு முப்பாட்டன் அவனுக்கும் முப்பாட்டன் காலத்துலந்து நடக்குது.. அவங்க அறியாத நாகரிகமா.. எறிச்சீட்டு போட்டுப் பாக்காத வருசம் இல்லை பாத்துக்க.. இந்த நமசிவாயம் சாட்சி.. என்னமோ நேத்துப் பொறந்துட்டு நாலெழுத்து படிச்சதும் பாரம்பரியத்தை மறந்துடறாங்க.." என்று காசித்துண்டை உதறித் தரையில் விரித்து உட்கார்ந்தார் நல்லசிவம்.

"வெத்ல போடறிங்ளா?" என்று அவரருகே உட்கார்ந்த நரசிம்மன் தன்னிடமிருந்த வெற்றிலைப் பெட்டியை நீட்டினார். இருவரும் கிராம மக்கள் குழுமக் காத்திருந்தனர்.

ஏழரைக்கு கிராமத்தினர் குழுமத் தொடங்கினர். மொத்தம் இருபத்து நாலு குடும்பங்கள். ஒவ்வொரு குடும்பத்தினரும் கையில் ஒரு பையுடன் வந்திருந்தனர்.

சரியாக எட்டு மணிக்கு "பூட்டிழுக்க யாரு வராங்க?" என்றார் நரசிம்மன். "நான்" என்று முன்வந்த விடலைகளில் கோடித்தெரு ராஜேஸ்வரன் முந்திக்கொண்டான். "இன்னிக்கு எம்பொறந்த நாளு" என்றான் உற்சாகமாக. "சரி சரி வாடா சிங்காரம்" என்று அவனை அழைத்தார் நல்லசிவம். மேடையேறி வந்த ராஜேஸ்வரன், "எல்லாப் பெட்டியும் பூட்டியிருக்கு" என்று இழுத்துப் பார்த்துச் சொன்னான். "போய்க்கடா" என்றார் நல்லசிவம். கூட்டத்தில் சேர்ந்து கொண்டான் ராஜேஸ்வரன்.

நரசிம்மன் அத்தனை பூட்டுக்களையும் சாவியுடன் களைந்து, பெரிய பெட்டியைத் திறந்து எல்லாரும் பார்க்கக் காட்டினார். வெள்ளைக் காகிதச் சுருள்கள். எறிச் சீட்டுக்கள். பெட்டியின் நடுவில் ஒரு பெரிய மரக்கரண்டியை வைத்துக் கிளறினார். "நமசிவாயம் துணை. நல்ல கணேசன் துணை, நாலு தோள் நாராயணன் துணை, அச்சமகல அம்மன் துணை, ஆறுமுகன் அவனே துணை" என்று உயர உயர இன்னும் உயரமாகக் கை தூக்கிக் கும்பிட்டார். கிராமத்தினரும் சேர்ந்து கொண்டனர்.

"தயாரா?" என்றார் நல்லசிவம். தங்கள் பைகளைத் தொட்டுக்காட்டிய குடும்பத்தினர் "தயார்" என்றனர்.

"வாங்க.. வந்து கிளறுங்க" என்ற நரசிம்மன் கரண்டியைப் பிடித்து பெட்டியிலிருந்த சீட்டுக்களை ஒரு பெரிய கிளறாகக் கிளறி ஒதுங்கினார். பிறகு நல்லசிவம். தொடர்ந்து குழுமியிருந்த மற்ற அத்தனை பேரும் முறையாகப் பெட்டியைச் சுற்றி வந்து சீட்டுக்கள் பெட்டியிலிருந்து விழாமல் கவனமாகக் கிளறி ஒதுங்கினர்.

"வீட்டுத் தலையாள் வந்து சீட்டெடுங்க" என்றார் நல்லசிவம். இருபத்து நாலு குடும்பங்களின் மூத்த ஆசாமிகள், ஆணோ பெண்ணோ, வந்து ஆளுக்கு ஒரு சீட்டெடுத்து ஒதுங்கினர்.

"கரும்பொட்டு யார் கிட்டனு பாத்து சொல்லுங்க" என்றார் நல்லசிவம்.

சீட்டைப் பிரித்துப் பார்த்தவர்களில், "எங்கிட்ட இருக்குண்ணே கருஞ்சீட்டு" என்றார் கோடித்தெரு கணபதிசாமி. அவர் பொதுவாகப் பிரித்துக் காட்டிய சீட்டின் நடுவில் கரும்பொட்டு இருந்தது.

நரசிம்மன் விரைந்து இருபத்து நாலு பெட்டிகளில் தேடி கணபதிசாமி என்று பெயர் எழுதியிருந்த பெட்டியை எடுத்து வந்தார். "வாங்கண்ணே, வந்து குலுக்குங்க" என்றார். கணபதிசாமி முன்வந்து பெட்டியை நன்றாகக் குலுக்கித் தரையில் வைத்தார். நரசிம்மனிடம் சாவியை வாங்கித் திறந்து உள்ளிருந்து ஒரு சீட்டை எடுத்து ஒதுங்கி நின்றார். "வாங்க வரிசையா" என்று தன் குடும்பத்தாரை அழைத்தார். வந்த நால்வரும் ஆளுக்கு ஒரு சீட்டு எடுத்து ஒதுங்கினர்.

"கரும்பொட்டு யார் கிட்டனு பாத்து சொல்லுங்க" என்றார் நல்லசிவம்.

சீட்டைப் பிரிக்கையில் சட்டென்று ராஜேஸ்வரன் "எங்கிட்ட இருக்கு கருஞ்சீட்டு" என்று குதித்தான்.

தன் குடும்பத்தில் பிறரை இழுத்துக் கொண்டு ஒதுங்கினார் கணபதிசாமி. "ஐயோ! அவன் குழந்தை.. எட்டு வயசு.. பிறந்த நாள் அதுவுமா.. வேணாம்.. அவனுக்கு பதிலா என்னை நடுவுல தள்ளுங்க" என்ற மனைவியை அடக்கினார்.

கிராமத்தினர் தங்கள் பைகளிலிருந்து ஆளுக்கு ஒன்றிரண்டு பெரிய கற்களை எடுத்து ராஜேஸ்வரன் மீது வீசுவதற்காக அவனைச் சூழ்ந்தனர்.

***

1948ல் The New Yorker பத்திரிகையில் வெளியான The Lottery என்ற சிறுகதை. ஷர்லி ஜேக்சன் எழுதிய இந்தச் சிறுகதை சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. படிக்கச் சுலபமாக இருக்கவேண்டி என் பாணியில் தமிழ்ப்படுத்தியிருக்கிறேன். (கதையின் கரு கலைக்கப்படவில்லை என்று நம்புகிறேன். அசல் கதை படித்தவர்களும் படிக்கப் போகிறவர்களும் ஒப்பவில்லையெனில் நானெடுத்துக்கொண்ட உரிமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்).

கதை வெளியான புதிதில் ஷர்லி ஜேக்சனுக்கும் ந்யூ யார்கர் பத்திரிகைக்கும் கண்டனங்கள் நிறைய வந்தன. தனிப்பட்ட நிலையில் சுயமாகச் சிந்தித்து செயல்படும் மனித மனம், குழுவாக இருக்கையில் தனித்துவத்தை இழந்து குழுவின் சிந்தனைக்குக் கட்டுப்படுகிறது என்ற கருத்தை வெளிப்படுத்த விரும்பியதாக விளக்கம் சொன்னார் ஷர்லி ஜேக்சன்.

வெளிவந்த கட்டத்தில் கடுமையாக விமரிசிக்கப்பட்டாலும் காலப் போக்கில் இந்தக் கதையின் ஆழமும் பரிமாணங்களும் பலவிதமாக அளக்கப்பட்டிருக்கின்றன. சிறுகதையின் கடைசி வரியில் அவர் எழுதிய "they were upon her" அமெரிக்கச் சிறுகதை உலகின் மிகப் பிரபலமான கடைச் சொற்களாகக் கருதப்படுகின்றன.

***

நான் படித்த மறக்கவியலாத சிறுகதை.

51 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம்.
    24 பெட்டிகள் கதையின் நடை மிக அற்புதம்.
    அதென்ன கல் எறிவது!!!
    அப்பாதுரைன்னா அதிர்ச்சி யா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே ! நல்லா கேளுங்க நியாயத்தை!

      நீக்கு
    2. just curious.. நாய் மீது கல்லெறிந்தான் என்ற வரி உங்களுக்கு அதிர்ச்சியைத் தருகிறதா?

      நீக்கு
    3. நல்ல கேள்வி.  நாய் வேறு நாம் வேறு!  அதாவது நாய்க்கொரு நியாயம், நமக்கொரு நியாயம்.

      இப்படிச் சொல்லலாம்...   நாய் மீது நாயே கல்லெறிவதில்லையே...  இங்கு மனிதன் மீது மனிதன்!

      நீக்கு
    4. அது அதிர்ச்சியைத் தரணும் ஆனால் தருவதில்லை. மனித மனமே விசித்திரமானது.

      கீதையின் பிரகாரம் எல்லா ஆன்மாக்களும் ஒன்றே..அதாவது என்னில் இருப்பதைப் போன்றதுதான் விலங்கினத்தின் ஆன்மா. செய்த வினைகளைக் கழித்து ஆன்மா வேறு ஒரு வடிவில் புகுந்துகொள்கிறது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற மனநிலையை நோக்கித்தான் நாம் முன்னேறணும்.

      ஆனால் பாருங்க, நாம், நமக்கே உரித்தான நியாய தர்மங்களை இதுதான் சரி என்று கற்பித்துக்கொள்கிறோம்.

      பாரதகால நியாய தர்மங்கள்படி, நம்மை எதிர்க்கும் எதன் மீதும் நம் வீரத்தைக் காண்பிக்கலாம், எதிர்க்காத பணியக்கூடிய இடத்தில் வீரத்தைக் காண்பிப்பது பெரும் பாவம். ஆனா எதிர்க்காத பெண்களிடம் வீரம் கோபம் காண்பிக்கும் மனம், ஆபீசில் நியாயமோ இல்லையோ மேலதிகாரின்னா பம்முகிறது.

      நீக்கு
    5. //msuzhi12 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 11:02
      just curious.. நாய் மீது கல்லெறிந்தான் என்ற வரி உங்களுக்கு அதிர்ச்சியைத் தருகிறதா?//

      நான்லாம் ஹைவேஸ்லயே கணவரை 30 இல் காரோட்ட சொல்லுவோர் சங்கம்  :)இந்த கதைக்கு பழைய ஏஞ்சலா இருந்தா தேம்பி அழுது புரண்டிருப்பேன் .இப்போ எல்லாம் சகஜமாகிடுச்சி .இந்த கதைக்கு முகப்புத்தகத்தில் சரியாக விவாதம்/ டிஸ்கஷன்ஸ்  நடந்திருக்கும் என்று நம்புகிறேன் 

      நீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...
    நலம் எங்கும் வாழ்க...

    பதிலளிநீக்கு
  3. சித்திரைப் பொங்கல் நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் போது -

    கல்..
    செங்கல் கூட அல்ல..
    கடைவாய்ப் பற்களை நொறுக்கும் கருங்கல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூரியன் ஒருபக்கம்எழும்போது இன்னொருபக்கம் விழுகிறான்!  (ஆ...   என்ன தத்துவம்!)

      நீக்கு
    2. சூரியன் ஒருபக்கம்எழும்போது
      இன்னொருபக்கம் விழுகிறான்!
      காலைப் பனி என்ன
      அவனுக்கு வோட்காவோ?

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை வணக்கம். எறிகல் விரயம் என்றால் என்னவென்று தெரியாததால் கதாசிரியர் ஏற்படுத்த நினைத்த அதிர்ச்சி கிடைக்கவில்லை. அந்த சம்பிரதாயத்தை கோடிட்டாவது காட்டியிருங்கலாம். நடையும், விவரிப்பும் பிரமாதம். எ.பி.வாசகர்கள் கிராம கதையைத்தான் விரும்புவார்கள் என்று நினைத்து விட்டாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த கிராமத்தில் நல்ல நாள் அதுவுமாக அடுத்தவர் மேல் கல்லெடுத்து எறிகிறார்கள்?...

      ஒரு சில சமூகத்தினர் திருவிழா நாட்களில் தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்கிறார்களே தவிர சீட்டு குலுக்கிப் போட்டு மற்றவர்களை அல்ல!..

      நீக்கு
    2. ஆனாலும் இதற்குள் ஏதாவது விஷயம் இருக்கலாம்!..

      நீக்கு
    3. நம்மூருடன் சமபந்தப் படுத்திக் கொள்ளாமல் படிக்கலாமோ?

      நீக்கு
  5. "தனிப்பட்ட நிலையில் சுயமாகச் சிந்தித்து செயல்பட முடியாத மனித மனம் தான், குழுவாக மாறுகையில் ஆட்டு மந்தையாக மாறி விடும்" என்ற கருத்தை வெளிப்படுத்த விரும்பியதாக விளக்கம் தந்து இருக்கலாம் ஷர்லி ஜேக்சன்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழுவாக இருக்கையில் தனிமனித தவறுகள் கவனிக்கப்படாது என்று தோன்றி இருக்கலாம்.

      நீக்கு
  6. எட்டு வயது பாலகன் என்று தெரியும்போது கல்லையும் காலில் வைத்துவிட்டு வரும்படி ஏதாவது மாறுதல் இருக்கலாம் முரட்டு அடி இருக்காது என்று நான் கற்பித்துக் கொள்கிறேன் எதற்கும் ஒரு நியாயம் இருக்கலாம் என் மனதில் இப்படித்தான் பட்டது அருமையான நடை கதை அன்புடன்

    பதிலளிநீக்கு
  7. இந்த சீட்டு கதை, விளக்கம் கொடுக்கலைனா தமிழில் சுயமாக எழுதிய கதையாகத்தீன் தோன்றியிருக்கும். மொழி நடை சிறப்பு.

    பொதுவா மனித மனம் இந்தக் கதையை, ஐயோ.. எவ்வளவு கொடூரம் என்று பொதுவில் சொல்லத்தான் விரும்பும். அது ஹிப்போக்ரசி என்பது என் எண்ணம். எல்லையில் சீனாவுடன் மோதல் என்ற செய்தியில் இல்லாத நுண்ணுணர்வா? அங்ஙயும் ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தின்மீதோ இல்லை தனியாக அகப்படுபவன்மீதோ இதே வன்முறையைத்தானே காண்பிக்கிறது. இதில் ஒருவித மன வக்கிரம்... அது இன்னொரு வகையான ஜஸ்டிஃபிகேஷன். இல்லை கொசுக்கள் படையெடுத்தால் சாத்வீகமா கொசுவலைக்குள் முடங்குவதை விட்டுவிட்டு பேட்டால் கொல்வதிலும் ஒரு அற்ப கொடூரத்தை நாம் காண்பிப்பதில்லையா?

    இந்த கான்சப்டை முன்னமே படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாரசியமான பின்னூட்டம்.

      கொடூரம் என்பது ஒரு கண்ணோட்டம் (அதன் பின்னால் இருக்கும் வினை, வினைப்பயன்..) என்று இதை உரித்துக் கொண்டு போகலாம். இதில் நியாயம் இருக்கிறதா இல்லையா, அல்லது இதுவே ஒரு நியாய நிலைப்பாடா என்ற கேள்விகள் இன்னும் சிக்கலானவை.

      இந்தக் கதையை சில உலக நாடுகள் எதிர்கொண்ட விதத்தைப் பார்த்தால் மனித மனம் நியாய நிலைப்பாடுகளை எப்படி வகுக்கிறது/ஏற்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.

      அமெரிக்கா இந்தக் கதையை ஏற்றது - ந்யூயார்கர் பத்திரிகை விற்பனை பஞ்சத்தில் கூட இப்படி அடிபடவில்லை.. இருந்தாலும் கதாசிரியரைக் கைவிடாமல் கருத்தை பலவாறாக விமரிசிக்க அனுமதித்தது (கதை இன்றைக்கு classic என்று கருதப்படுவதற்கு இது ஒரு காரணம்). அமெரிக்க பார்வை இது தான்: மிக மிக பாதுகாப்பானது நாம் நினைக்கும் இடங்களில் கூட அக்கிரமங்கள் அல்லது அக்கிரமம் என்று நாம் கருதும் நிகழ்வுகள் நடக்கின்றன. ஷர்லி இந்தக் கருத்தை மீண்டும் மீண்டும் பலவித பார்வைகளில் வலியுறுத்தினார். கல்லெறி என்பது ஒரு metaphor. சீர்கேடுகளை கும்பலோடு சேர்ந்து செய்கிறோம் என்பது அவர் கருத்து. அமெரிக்காவில் அப்போது நிலவி வந்த வெள்ளை-கறுப்பு நிறம் தொட்ட இனப்பிரிவினையை வலியுறுத்தியதாக யாரும் சொல்லவில்லை - ஆனால் 1985ல் அப்படி ஒரு கண்ணோட்டத்தை யாரோ கொண்டு வர, இந்தக் கதை உயர்நிலைப் பள்ளி பாடங்களில் நீக்கப்ப்ட்டது (கதை வந்து ஏறத்தாழ 40 வருடங்களுக்குப் பிறகு!)

      இந்தக் கதையை தென்னாப்பிரிக்கா நாடு ban செய்தது - கதை தென்னாப்பிரிக்காவில் அப்போது வழக்கில் இருந்த apartheidக்கு எதிரான கதை என்று அந்த அரசாங்கம் நம்பியது. கதையின் கொடூர்ம் அவர்களைப் பாதிக்கவே இல்லை. மறைமுகமாக அரசாங்கக் கொள்கைகளைத் தாக்குவதாக அவர்கள் எடுத்துக் கொண்டார்கள்!


      நீக்கு
  8. ஆனாலும் நம்ம கிராமத்தில் நடப்பதைப் போலக் காட்டியதுதான் மனதில் ஒட்டவில்லை. அடிப்படை மனித உணர்வு கோவில், சாமி என்று வாழும் கிராமத்தவரிடம் இன்றும் உண்டு

    ஷியா பிரிவு முஸ்லீம்களைப் போல, கோவை சௌடேஸ்வரி அம்மனுக்கு கத்தி போடுவது என்றொரு விழா உண்டு. அதை இந்தக் கதை நினைவுபடுத்திற்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம கிராமத்தில் தான் நரபலியும் கொடுத்தார்கள் :-)

      நீக்கு
    2. மைசூர் சௌடேஸ்வரி கோவில் கத்தி போடுவது கேள்விப்பட்டிருக்கிறேன்; கோவையிலுமா?

      நீக்கு
  9. உண்மைதான். காபாலிகர் நரபலி.... கோவில்களிலும் பலியிடும் வழக்கத்தின் தொடர்ச்சியாகத்தான் குங்கும்ம் கலந்த சாதம் பலிபீடத்தில் வைக்கப்படுகிறதோ? கவிமணியின் கவிதையான

    ஆட்டின் கழுத்தை அறுத்துப் பொசுக்கிநீர்
    ஆக்கிய யாகத்து அவி உணவை
    ஈட்டும் கருணை இறையவர் கையில்
    ஏந்திப் புசிப்பரோ கூறுமையா

    பாடல் நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
  10. ஜீரணிக்கக் கஷ்டமா இருக்கு! :(

    பதிலளிநீக்கு
  11. என்னால் ர்சிக்க முடியவில்லை

    பதிலளிநீக்கு
  12. ///கதையின் கரு கலைக்கப்படவில்லை என்று நம்புகிறேன். அசல் கதை படித்தவர்களும் படிக்கப் போகிறவர்களும் ஒப்பவில்லையெனில் நானெடுத்துக்கொண்ட உரிமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்).//
    என்னை போன்ற சில  prodigies கட்டாயம் அசல் கதையை தேடி படித்திருப்பார்கள் என்ற உங்கள் நம்பிக்கைக்கு ஒரு சல்யூட் 

    பதிலளிநீக்கு
  13. ஒரு விஷயத்தை குறிப்பிடவில்லை அல்லது என் கண்ணில் படவில்லையா ?அது இந்த எறி கல் /லாட்டரி சீட்டு இவற்றின் பின்புலம் காரணம் ..ஹார்வெஸ்ட் விளைச்சல் நலல இருக்கணும்னு செய்யப்படுவதா ?

    பதிலளிநீக்கு
  14. இந்த மாதிரி சம்பவங்களுக்கு நிறைய உதாரணங்களை நம் கிராமங்களிலும் வெளி நாடுகளிலும் நடப்பதை எழுதலாம் .உதாரணங்கள் என் பின்னூட்டத்தை படிப்போருக்கு  //ரணங்கள் // ஆகிடக்கூடாது :) ஆகையால் எல்லாரும் சந்தோஷமாக இருக்கணும்னு நினைச்சி எக்ஸ்சாம்பிள்ஸை இங்கே எழுதலை .மேலும் இதே போன்ற குழு மனப்பான்மையில்தான் ஜெர்மனியும் இருந்தது 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. brilliant observation அதிகம் சொல்லாமல் அதிகம் சொல்லிட்டிங்க்..

      நீக்கு
  15. படுமட்டமான கதை! இதற்கெல்லாம் மொழிபெயர்ப்பு அவசியமற்றது! கதை எனக்கு சரியா புரியலை. காரணம்? ஒரு சில மாதிரி நிகழ்வுகளை எல்லாம் என்னால் கற்பனை பண்ண முடியாது. வாழ்க்கையில் எந்தவகையிலும் நான் எல்லாம் "அப்யூஸ்" பண்ணப் படவில்லை. அது என் அறியாமைக்கு காரணமாக இருக்கலாம்..

    இது எனக்குப் புரிந்து கொள்ள முடியாத அந்த வகை..

    கொஞ்சம் ரிசேர்ச் செய்து ..

    Found this in Wikipedia..

    ***In the morning of the lottery, the townspeople gather shortly before 10 a.m. in order to have everything done in time for lunch. First, the heads of the extended families each draw one slip from the box, but wait to unfold them until all the slips have been drawn. Bill Hutchinson gets the marked slip, meaning that his family has been chosen. His wife Tessie protests that Mr. Summers rushed him through the drawing, but the other townspeople dismiss her complaint. Since the Hutchinson family consists of only one household, a second drawing to choose one household within the family is skipped.

    For the final drawing, one slip is placed in the box for each member of the household: Bill, Tessie, and their three children. Each of the five draws a slip, and Tessie gets the marked one. The townspeople pick up the gathered stones and begin throwing them at her as she screams about the injustice of the lottery. **

    Shirley Jackson must have been abused when she was growing up or in her child hood. Probably sexually molested by some animals around. Only abused victims end up coming up with "cruel" stories like this.

    Worst of all, Nellai thamizan's defense for this garbage!!!

    ***பொதுவா மனித மனம் இந்தக் கதையை, ஐயோ.. எவ்வளவு கொடூரம் என்று பொதுவில் சொல்லத்தான் விரும்பும். அது ஹிப்போக்ரசி என்பது என் எண்ணம்.**

    yeah right! Just because it was translated by Mr. Appadurai, you do not have have to defend this kind of stories written by sick people!

    What he means by hypocrisy here??!!!

    ***எல்லையில் சீனாவுடன் மோதல் என்ற செய்தியில் இல்லாத நுண்ணுணர்வா? அங்ஙயும் ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தின்மீதோ இல்லை தனியாக அகப்படுபவன்மீதோ இதே வன்முறையைத்தானே காண்பிக்கிறது. இதில் ஒருவித மன வக்கிரம்... அது இன்னொரு வகையான ஜஸ்டிஃபிகேஷன். இல்லை கொசுக்கள் படையெடுத்தால் சாத்வீகமா கொசுவலைக்குள் முடங்குவதை விட்டுவிட்டு பேட்டால் கொல்வதிலும் ஒரு அற்ப கொடூரத்தை நாம் காண்பிப்பதில்லையா?
    இந்த கான்சப்டை முன்னமே படித்திருக்கிறேன். ***

    He is comparing apples and oranges!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை தமிழில் தர நான் சில உரிமைகளை எடுத்துக் கொண்டேன். முக்கியமாக ஷர்லியின் கதையில் “அடி” படப்போவது அதிகம் பேசும் குடும்பத்தலைவி.. அதை பிள்ளை “அடி” படப்போவதாக மாறரிய என் வக்கிர்ம் கதையின் பிலிவைக் குலைத்து விட்டது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. abuse செய்யட்டால தான் இது போல் கற்பனை செய்யமுடியும் என்பது ஒருவருடைய தனிப்பட்ட பார்வை, அவ்வளவு தானே வருண்..? இந்தக் கற்பனை ஜேக்சனுக்கு ஏன் வந்தது எப்படி வந்தது என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

      நீக்கு
    3. கதையை தமிழில் தர நான் சில உரிமைகளை எடுத்துக் கொண்டேன். முக்கியமாக ஷர்லியின் கதையில் “அடி” படப்போவது “அதிகம் பேசும்” குடும்பத்தலைவி.. அதை பிள்ளை “அடி” படப்போவதாக மாற்றிய என் வக்கிர்ம் கதையின் பொலிவைக் குலைத்து விட்டது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    4. தனக்கு என்று வரும் வரை “கொடுமை” ஒரு உணர்வாகவோ செயலாக்க வேண்டிய ஒரு எண்ணமாகவோ தெரிவதில்லை என்பதை நெல்லையின் சீன மற்றும் angelந் ஜெர்மனி மேற்கோள்கள் எடுத்துக் காட்டுவதாக நினைக்கிறேன்.

      மிகப் பாதுகாப்பான இடங்களில் மிகக் கொடூரமான abuseகள் நடக்கின்றன என்று ஷர்லி விளக்கம் சொன்னதாகப் படித்திருக்கிறேன்.

      நீக்கு
    5. @ வருண் உங்க
      ///வாழ்க்கையில் எந்தவகையிலும் நான் எல்லாம் "அப்யூஸ்" பண்ணப் படவில்லை. ///
      பின்னூட்டம் படிச்சதில் இருந்து குறுகுறுன்னு ஒரு கேள்வி கேட்கணும்னு தோனிட்டிருந்தது ..இதோ கேட்கறேன் ..உங்களை சின்னத்தில் கூட யாரும் அடிச்சதோ கிள்ளினதோ கிடையாதா ?????????அப்படின்னா நீங்க லக்கி தான் .நான் 5 /6 வயசிருக்கும்போது ஸ்கூல் hm மகன் காலேஜ் படிச்சிட்டிருந்த எருமைமாடு என் தலை நங்குன்னு குட்டுவான் .எவ்ளோ வலிக்கும் தெரியுமா.நானா மட்டுமில்லை இன்னும் ரெண்டுமூனுபேருக்கும் கொட்டுவான்  ..இப்போ அதெல்லாம் கூட சைல்டு அபியூஸ் இல் வருது .ஒருகாலத்தில்  ஊருக்குப்போய் அவனைத்தேடி பத்து விரலிலும் இரும்பு மோதிரம் போட்டு கொட்டணும்னு யோசிப்பேன் .

      நீக்கு
    6. I am not here to brag about how great my childhood was!

      Shirly Jackson's relationship with her mom

      ****Her relationship with her mother was strained, as her parents had married young and Geraldine had been disappointed when she immediately became pregnant with Shirley, as she had been looking forward to "spending time with her dashing husband"****

      I have seen mothers like her mom, they give important to themselves over their children. Especially in western culture, there is nothing wrong in it. Because you are the most important person to yourself. Getting away from their children makes them happy (REALLY). I did not have a mother like that. I am the most important person to her than herself. I am not trying to say my mother is better than other mothers. I never felt anything like that in my life.

      If you believe that your mother is not fair to you and that she loves someone else more than you, there is a problem. At least I believe that there is a problem.

      If Shirley feels that her mother loves her LESS than her son, it can make her stronger and "sick" as well. She can not be empathetic or compassionate like I AM. She can be a "creator" and of course "successful" in the materialistic world!

      நீக்கு
  16. ***Jackson was raised in Burlingame, California, an affluent suburb of San Francisco, where her family resided in a two-story brick home located at 1609 Forest View Road.[18] Her relationship with her mother was strained, as her parents had married young and Geraldine had been disappointed when she immediately became pregnant with Shirley, as she had been looking forward to "spending time with her dashing husband".[19] Jackson was often unable to fit in with other children and spent much of her time writing, much to her mother's distress. Geraldine made no attempt to hide her favoritism towards her son, Barry, who explained his mother's antagonism towards Shirley by saying, "[Geraldine] was just a deeply conventional woman who was horrified by the idea that her daughter was not going to be deeply conventional."[20] When Shirley was a teenager, her weight fluctuated, resulting in a lack of confidence that she would struggle with throughout her life***

    பதிலளிநீக்கு
  17. என்ன இது? உலகின், கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கதை என ஸ்லாகிக்க, என்ன இருக்கிறது? சர்ச்சைக்குரிய கரு என்பதாலேயே கைதட்டலா, புகழா? (இதுவரை எத்தனையோ கதைகளில் அப்படி நிறைய எழுத்தாளர்களால் எடுத்தாளப்பட்டிருக்கும்.) ஒருவேளை கதைநடையா.. அல்லது பிரசுரிக்கப்பட்ட காலகட்டமோ? ஒரிஜினல் படிக்காததால் impact-ஐ மனசில் முழுசாக வாங்கிக்கொள்ள முடியவில்லை. விமரிசிப்பதிலும் கஷ்டம்.

    தமிழ்ப்படுத்தப்பட்ட-அல்லது ’தமிழ்நாடுபடுத்தப்பட்ட’ கதை விறுவிறுக்கிறது. ஆனால் கிறுகிறுக்க வைக்கவில்லை. வன்மம், வக்கிரம், கொடூரம் எல்லாம் மலிந்துபோய்விட்ட இந்தக் கேடுகெட்ட காலகட்டத்தில் மனம் மரத்துப்போயிருக்கும் என்பதும் காரணமாயிருக்கலாம்.

    //..தனிப்பட்ட நிலையில் சுயமாகச் சிந்தித்து செயல்படும் மனித மனம், குழுவாக இருக்கையில் தனித்துவத்தை இழந்து குழுவின் சிந்தனைக்குக் கட்டுப்படுகிறது என்ற கருத்தை..//

    பின்னே? குழுவாக இருக்கையிலும் தனித்துவத்தைக் காட்டினால் மொத்துப்பட வேண்டியிருக்குமே!

    //.. சிறுகதையின் கடைசி வரியில் அவர் எழுதிய "they were upon her" அமெரிக்கச் சிறுகதை உலகின் மிகப் பிரபலமான கடைச் சொற்களாகக் கருதப்படுகின்றன.//

    ”they were upon him" என்பதாகக் கொண்டுவந்து முடித்திருந்தால்.. உலகின் மிகப் பிரபலமான கடைச்சொற்களாக அவை ஆகியிருக்குமா?

    பதிலளிநீக்கு
  18. எல்லாமே பலே கேள்வி..

    "கருதப்படுகின்றன" என்கிற சொல்லே சர்ச்சைக்குரியது தானே - யார் அப்படி கருதுறாங்கனு யாருமே சொல்லமாட்டாங்க.. ஆனா கருதப்படுகிறதுனு மட்டும் சொல்வாங்க :-)

    "தமிழ்நாடுபடுத்தப்பட்ட"... நல்லாருக்கு.



    பதிலளிநீக்கு
  19. பிற மொழிக்கதையை அப்படியே வரிக்கு வரி மொழிபெயர்ப்பது முறையா?
    அல்லது கொஞ்சம் உரிமை எடுத்துக்கொண்டு மொழியாக்கம் செய்வது முறையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையின் ஜீவனை உள்வாங்கிக் கொண்டு நாமாக மொழி ஆக்கம் செய்வதையே சரி என்று என் கருத்து.

      நீக்கு
    2. வரிக்குவரி மொழிபெயர்த்தால், கதை பெயர்ந்துவிடும்! கதையின் ஆன்மாவை, சம்பவ, உரையாடல் தளங்களை, தாக்கத்தை உள்வாங்கிக்கொண்டு, கொஞ்சம் உரிமையும் எடுத்துக்கொண்டு நம் மொழிக்கு மெல்லக் கொண்டுவந்து இறக்குவதே உத்தமம். நன்றாகவும் அமையும்.

      நீக்கு
  20. சிறுகதையைப் பொறுமையாகப் படித்த, பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.. (நீண்ட நாள் கழித்து வருனுடன் வாதம்.. :-)

    பதிலளிநீக்கு
  21. நான் இப்பொழுதுதான் படித்தேன் மனதை நெகிழவைத்தது.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம்ங்க அப்பாதுரை! விளக்கத்திற்கு நன்றி. மனிதன் வரையுறுக்கும் சட்டதிட்டங்கள் எனக்கு எப்போதுமே புரிவதில்லை. லாட்டரி போட்டு எடுத்து ஒரு ஆளை பலிகொடுப்பதெல்லாம் சுத்தமாக விளங்காதது. விளங்காதது எல்லாம் நடக்கத்தான் செய்யுது. ஒரு சிலவற்றை புரிந்துகொள்ள நாம் வளரும் சூழல் மிகவும் முக்கியம்.

    ஒரு ஜானகிராமன் சிறுகதையில், ஒருத்தர் வாங்கிய கடனைத் திருப்பி கொடுக்கப் போவாரு. கடன் கொடுத்தவர் வீட்டில் போய், அவரிடம், அண்ணா பணம் கொண்டு வந்துருக்கேன், வட்டியோடனு சொல்லுவாரு. தூங்கும் முன்னால, பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு, காலையில் பணம் திருப்பி கொடுத்ததற்கான டாக்குமென்ட்ஸ் எல்லாம் சரி செய்யலாம்னு கொடுத்து விட்டு. காலையில் எழுந்து அவரிடம் டாக்குமென்ட்ஸ் எல்லாம் எழுதலாம்னு உட்காரும்போது, "பணம் எங்கே?"னு அந்தாளு கேட்பான். இவரு இரவு உங்களிடம் தானே கொடுத்தேன் அண்ணா, பெட்டியில்தான் வச்சீங்கனு கெஞ்சுவார் கூத்தாடுவார். ஆனால் அந்தாளு இவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது போல் முத்திரை கொட்டி அனுப்பி விடுவார். மனிதர்களில் இதுபோல் இருக்கத்தான் செய்றாங்க, அண்ணன் தங்கை, அண்ணன் தம்பினு பாசம் பந்தம் என்று உருகியவர்கள் எல்லாம் பங்காளியாக ஆகி வெட்டு குத்துனு வந்து நிற்பதை பார்க்கத்தான் செய்றோம்.

    ஒரு சிலர் செய்வது, ஒரு சில நிகழ்வுகள் (கதைகளிலும்கூட) நம்மாள் ஏற்றுக்க முடியாது. இது இயற்கை. மனிதர்கள் பலவகை. ஒரு சிலர் தனக்குனு வந்தால்தான் உணருவாங்க. ஒரு சிலர் மற்றவர் நிலையில் தம்மை நிறுத்திப் பார்ப்பார்கள். ஒரு சிலர் ரெண்டுமே செய்ய மாட்டாங்க. எது சரி, எது சரியல்ல என்பதையும் விவாதிக்கலாம். ஆனால் "இது பிடிக்கலை"னு சொல்றது எளிது. பிடிக்காததை "பிடிக்கவில்லை"னு சொல்லக்கூட பலர் யோசிப்பாங்க. ஏன்னா நம்ம எல்லாம் பச்சை குழந்தை இல்லை உள்ளதை உள்ளபடி சொல்ல. இப்படி சொன்னால் அவரு என்ன நினைப்பாரோ? தப்பா நெனச்சுக்குவாரோ? அதனால் ஒன்னும் சொல்லாமல் போயிடுவோமேனு ஒரு சிலர். பிடிக்காததைத் தவிர்த்து பிடித்த ஒரு சில பகுதியை மட்டும் விமர்சித்துவிட்டுப் போவவர்கள் ஒரு சிலர்..இப்படி வளர்ந்த நாம் கால சூழல் இதற்கெல்லாம் ஏற்ப நாம் உணருவதை அப்படியே சொல்ல முடியாமல் நம் ஒரிஜினாலிட்டியை இழந்துதான் போய் விடுகிறோம்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சிறுகதை கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகும் படிப்பவர்களை பாதிக்கிறது என்றால் அதில் வாசகருக்கு வெற்றி எழுதியவருக்கும் வெற்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!