சனி, 24 செப்டம்பர், 2022

ராஜேஸ்வரி "அம்மா". மற்றும் 'நான் படிச்ச கதை' ( JC )

 

8 கிளாஸ் குடிக்கச் சொல்வது அனைவருக்கும் பொருந்துமா?

உடல் ஆரோக்கியத்திற்காக தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று ஒரு பிரபலமான கருத்து உள்ளது. ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒவ்வொருவரின் நீர் தேவைகளும் மாறுபடும். உடல்நலனை பராமரிக்க எந்தளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது சிக்கலானது தான். அது பற்றி பார்ப்போம்.

ஒருவருக்கு எந்தளவு தண்ணீர் தேவை என்பது அவர் எந்த அளவு உடலுழைப்பில் இருக்கிறார், இருக்கும் இடத்தின் வானிலை, என்ன சாப்பிடுகிறார் மற்றும் எந்த வகையான உடல்நிலையில் இருக்கிறார் என்பதை பொறுத்து அமையும். இந்த எல்லா காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், ஒரு நாளை 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது பெரும்பாலானவர்களுக்கு பொருந்தாது.

நமக்கு தண்ணீர் தேவையா என்பதைச் சொல்ல ஏற்கனவே எளிதான வழி உள்ளது: அது தாகம். அதன் மூலம் தண்ணீர் குடித்து நீரிழப்பை விரைவாக நிரப்பலாம். எப்போது தண்ணீர் தேவை என்பதை தீர்மானிக்க நமது உடலில் கவனமாக கணக்கீடு செய்யும் அமைப்பு உள்ளது. அந்த குறிப்புகளை கவனித்து தண்ணீர் பருகினாலே போதும் நாம் நீரிழப்பின்றி சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

உடல் அளவுக்கேற்ப தண்ணீர்



latest tamil news

எந்தளவு தண்ணீர் தேவை என்பது நமது உடலின் அளவைப் பொறுத்தது. 2018ல் ஒரு ஆய்வின்படி, குழந்தைகளுக்கு பதின்ம வயதினரை விட குறைவான தண்ணீரே தேவைப்படும். பெரியவர்களுக்கும் சராசரியாக பதின்வயதினரின் அளவே தண்ணீர் தேவைப்படும். பாலூட்டும் பெண்களுக்கு மிகவும் அதிக நீர் தேவை. நமது செயல்பாடும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிகமாக உடற்பயிற்சி செய்தால், அதிகமாக வியர்க்கும். இதனால் இழந்த நீரின் அளவை நிரப்ப அதிக தண்ணீர் தேவைப்படும். நீர் மட்டும் தான் உடலுக்கு தேவையான தாதுப்புக்களை வழங்கும் என்றில்லை, அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிசன் அறிக்கையின்படி, நாம் உண்ணும் உணவில் இருந்து 20 சதவீத நீர்சத்தினை பெறுகிறோம்.

உருளைக்கிழங்கு, தர்ப்பூசணி, வெள்ளரி, பூசணி, சுரைக்காய் போன்றவற்றில் அதிக நீர்சத்து உள்ளது. டீ அல்லது காபி போன்ற கபின் பானங்கள் நீரிழப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. உண்மையில் அவ்வாறு செய்யாது. டீ, காபி பானங்களும் தினசரி நீர்சத்துக்கு ஓரளவு பங்களிப்பு செய்கின்றன. பொதுவாக தாகம் ஏற்படும் போது நீர் அருந்துங்கள். ஏனெனில் நாம் எத்தனை கிளாஸ் பருகுகிறோம் என்றெல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது என்பது தான் யதார்த்தம்

அதிகம் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்!


நமது உடலில் அதிகப்படியான தண்ணீர் சேரும் போது ஹைபோநெட்ரீமியா ஏற்படுகிறது. அதாவது ரத்தத்தில் நீரின் அளவு மிக அதிகமாகி, எலக்ட்ரோலைட்டுகளை, குறிப்பாக சோடியம் சமநிலையை இழக்கச் செய்யும். இதனால் தலைவலி, குழப்பம், குமட்டல் மற்றும் தசை பலவீனம் ஏற்படும். ஆனால் இந்த நிலை அரிதானது.

(நன்றி : தினமலர் ) 

= = = = =
பூமி வெப்பம் தரும் மின்சாரம்! 


பூமியின் ஆழப்பகுதி இப்போதும் வெடித்துப் பீறிடக் காத்திருக்கும் எரிமலைக் குழம்பாகத்தான் இருக்கிறது. இந்த வெப்பத்தை மின்னாற்றலாக மாற்றமுடியும். ஆனால், மேல் தரைப் பகுதியிலிருந்து பூமிக்கடியில் சில கிலோ மீட்டர்கள் தோண்ட வேண்டும். அதில் வெப்பத்தை கடத்தி மேலே கொண்டு வரும் கருவிகளை பதிக்கவேண்டும்.

இது மிகவும் செலவு பிடித்த காரியம் மட்டுமல்ல, அதிக காலம் எடுக்கக்கூடியது. ஆபத்தும் மிக்கது. இந்த சவால்களை சமாளித்து வெற்றிகரமாக பூமி வெப்ப மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்கிறது ஜீ.ஏ. டிரில்லிங். நிலத்தடி வெப்ப மின்சா, நிலையத்தை எங்கும் நிறுவ முடியும் என்கின்றனர் ஜீ.ஏ. டிரில்லிங்கின் ஆராய்ச்சியாளர்கள்.

அவர்களிடம் உள்ள 'பிளாஸ்மாபிட்' என்ற ஒரு புதிய கருவி, பூமிக் கடியில் பிளாஸ்மா கதிர்களைக் கொண்டு பூமிக்கடியிலுள்ள பாறைகளை துளையிட்டு 10 கி.மீ.,ற்கும் மேலே குழாய்க் கிணறு போல உருவாக்கிவிடும். அந்த ஆழத்தில் இருக்கும் தீராத வெப்ப ஆற்றலை வைத்து அனல் மின் நிலையத்தை தரைக்கடியிலேயே அமைக்கலாம் என்கின்றனர் ஜீ.ஏ.டிரில்லிங்கின் அதிகாரிகள்.

(நன்றி : தினமலர் ) 
==================================================================================================


=====================================================================================================

தனக்கு கீழ் பணிபுரியும் ஊழியருக்கு இதைவிட சிறப்பாக என்ன செய்ய முடியும்..

பட்டினப்பாக்கம் ஆய்வாளர் ராஜேஷ்வரி அவர்களின் மனிதநேய பணி தொடர்கின்றது....

26/02/22ந் தேதி இரவு 9.30 மணியளவில் நான் பணியில் பட்டினப்பாக்கம் காவல் நிலைய சரகத்தில் பணியில் இருந்தபோது பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் திரு.சரவணன் முக்கில் ரத்தம் வடிந்து கொண்டு வந்தார்.

நான் அவரிடம் யாராவது அடித்துவிட்டார்களா? எங்கையாவது கிழே விழுந்துவிட்டாயா என்று கேட்ட போது இல்லை நான் சாப்பிட்டுக்கொண்டுருந்த போது தானாகவே மூக்கில் இருந்து இரத்தம் வந்தது| சரியாகிவிடும் என்று நினைத்தேன் ஆனால் சரியாகவில்லை அதே போல் தனக்கு ஏற்கனவே மூக்கில் இருந்து இரத்தம் வந்ததாகவும், அதை நான் யாரிடமும் கூறவில்லையென்றும் தற்போது அதிகமாக இரத்தம் வந்தால் உயிர் போய் விடுமோ என்று பயம் ஏற்பட்டது உடனே அம்மா ஞாபகம் வந்து என்னை எப்படி காப்பாற்றி விடுவிங்க என்று நினைத்து நீங்க இருங்கும் இடத்துக்கு தேடி வந்தேன் என்று கூறினர்.

தனக்கு சுகர் மற்றும் இரத்தம் அழுத்தம் அதிகம் இருப்பதாக தெரிவித்து மயங்கி விழந்தார். நான் உடனே என் வாகனத்தில் இருந்த துண்டை எடுத்து இரத்தத்தை துடைத்தேன். 108 வாகனம் வர தாமதம் ஆகும் என்பதால் உடனே என் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மைலாப்பூரில் உள்ள BSS மந்துவமனையில் சிகிச்சை எடுத்துச் சென்றேன்.

மருத்துவர் சிகிச்சை அளித்தார் இரத்தம் வருவது நிற்கவில்லை அங்கிருந்து ENT மருத்துவமனை, அபிராமபுரம் கொண்டுசெல்லப்பட்டது. உடனே மருத்துவர் சிகிச்சை அளித்தார் அவருக்கு உயர் அழுத்த இரத்த கொதிப்பு இருப்பதால் இரத்தம் வருகிறது சிறிது நேரம் தாமதமாக வந்திருந்தால் மூளைக்கு போகும் ரத்த நரம்பு வெடித்து உயிர்சேதம் ஏற்பட்டு இருக்கும் என்று தெரிவித்து உடனே சிகிச்சை அளித்து admit செய்தார் இரவு சுமார் 01.00 மணி வரை அவர் உடன் இருந்து மருத்துவர் தீவிர சிகிச்சை அளித்த பின் உடல நலம் முன்னேற்றம் ஏற்பட்டது.

காவலர்கள் அனைவரும் உடன் இருந்து கவனித்துக் கொண்டனர்.

காவலர் சரவணன் தனிமையில் வாழ்ந்துவருகிறார். உடன் யாரும் இருந்து கவனிக்க யாரும் இல்லை என்பதால் மறுநாள் மருத்துவமனைக்கு சென்று மருத்துவ Bill கட்ட 50.000|-எடுத்துச் சென்றேன்.

காவலர் Discharg, SUmmary மற்றும் Bill receipt யை எடுத்து வரும்படி கூறினேன். காவலர் பூபதி நான்காவவது மாடியில் இருந்து கீழ் தளத்தில் Bill கட்டும் இடத்திற்கு வந்து பணம் கட்டும் ரசிது கொடுத்தார்...

Billயை பார்த்ததும் அதிர்ந்து போனேன்.........

அவற்றில் நோயளி பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.

என்னை நோக்கி டாக்டர் திரு. மோகன காமேஸ்வரன் அவர்களடைய துணைவியார் வந்தார். பார்பதற்கு அம்மன் போன்று சிரித்த முகத்துடன் மகாலட்சுமி போன்று காட்சி அளித்தார்.

அம்மா Bill எவ்வளவு கட்டவேண்டும் என்றேன்.

என்னை கட்டி அனைத்துக்கொண்டு காவல்துறை செய்யும் தொண்டிற்கு ஈடு இணையில்லை. நீங்கள் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என்று கூறி பணம் வாங்க மறுத்துவிட்டார்.

டாக்டரிடம் நான் தாங்கள் காவலர் உயிரை காப்பாற்றினீர்கள் மேலும் பணம் வாங்க மறுக்கின்றீர்களே என்று கூறியபோது , இரவு நேரம் பணிமுடிந்து வீட்டுக்கு போகும் நேரத்தில் தன்னிடம் பணிபுரியும் காவலர் உயிருக்கு போராடும்போது அப்படியேவிட்டு விட்டு போகாமல் மேலும் 108 வாகனம் வரும் வரை காத்திருக்காமல் அவரை சரியான நேரத்தில் உங்கள் வாகனத்தில் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்து கூடவே நீங்கள் உங்கள் காவலர்களுடன் உடன் இருந்து அவரை கவனித்துக்கொண்டது மெய்சிலிர்க்க வைக்கிறது.

- நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார் -

====================================================================================

கும்மிடிப்பூண்டி, :புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த தியாகராஜன் -- சித்ரா தம்பதி மகள் தீக் ஷா, 10. தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.அவர் வசிக்கும் தெரு, பழுதடைந்து இருப்பதை காண்பித்து, பள்ளிக்கு சென்று வர முடியாத நிலையில் இருப்பதாகவும், தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, கொசு கடிக்கு ஆளாகி வருவதாகவும், தனக்கே உரிய மழலை மொழியில் அவர் பதிவிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.


அந்த வீடியோ, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், பார்வைக்கும் சென்றது. கலெக்டர் உத்தரவின்படி, உடனடியாக அந்த தெருவில், 480 மீட்டர் நீளத்திற்கு, பேவர் பிளாக்' சாலை அமைக்க அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 17.61 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. நிதி ஒதுக்கப்பட்ட விபரத்துடன், தாசில்தார் கண்ணன், பி.டி.ஓ., வாசுதேவன் ஆகியோர் சிறுமி தீக் ஷாவை நேற்று காலை சந்தித்தனர்.சிறுமியிடம் விபரத்தை தெரிவித்து, உடனடியாக சாலை அமைக்கப்படும் என உறுதியளித்து, அவரை பாராட்டி சென்றனர்.

==================================================================================================


 

நான் படிச்ச கதை  (JC)

வானவர்கள் செல்லும் இடங்கள்

கதையாசிரியர்: தோப்பில் முஹம்மது மீரான்

 

முன்னுரை.

 

யு ஆர் அனந்த மூர்த்தி என்ற பிரபல கன்னட  எழுத்தாளரின் நாவல் சமஸ்காரா. 1970 ல் பட்டாபிராம் ரெட்டியின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் கிரிஷ் கார்னாட் நடித்து திரைப்படமாகவும் வெளிவந்து தேசிய விருது உட்பட பல  விருதுகளையும் பெற்றது.

கர்நாடகாவில் மேற்கு மலைப்பகுதியில் உள்ள துவாரகசமுத்திரா என்ற கிராமம். நாரணப்பா ஒரு பிராமணன் என்று சொல்ல முடியாத ஒரு மாத்வ பிராமணன். குடி, புலால் உண்ணல், விலைமாதர் என்று சகல கெட்ட பழக்கங்களையும் கொண்டவன். பக்கத்து கிராமத்துக்கு போனவன் திரும்பி வந்து இரண்டு நாள் நோயுடன் அவதிப்பட்டு இறந்து விட்டான். சடலத்தை எந்த முறைப்படி சமஸ்க்காரம் செய்வது என்பதே பிரச்சினை. ஒரு சாரார் பிராமண முறைப்படி என்றும் ஒரு சாரார் இல்லை அவன் வாழ்ந்தது பிராமண முறை இல்லை ஆகவே புதைக்கவேண்டும் என்றும் வாதித்துக்   கொண்டிருந்தனர்.

அவ்வூரில் வாழும் பிராணேஷாசார்யா (கிரிஷ் கர்னாட்) ஆச்சார சீலர். எல்லோருக்கும் குருபிரம்மச்சர்யத்தை  கடைபிடித்து வியாதிக்கார மனைவியையும் போற்றி வாழ்பவர். ஊரில்  உள்ளவர் பிராணேஷாசாரியாரிடம் தீர்மானம் எடுக்கும் பொறுப்பை விடுகிறார்கள். சாஸ்திரங்களை ஆராய்ந்து என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள், நாங்கள் காத்திருக்கிறோம் என்கிறார்கள். 

ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் பிராணேஷாசார்யாவும் நாரணப்பாவின் வைப்பாட்டியான சந்திரியிடம் வீழ்ந்து விடுகிறார். அவருடைய புனிதமும் போய்விடுகிறது. சந்திரியின் முஸ்லீம் நண்பர்கள் சடலத்தை எரியூட்டுகிறார்கள். கிராமத்தில் பிளேக் பரவுகிறது. 

இந்தக் கதையின் அடிப்படையில்தான் வானவர்கள் செல்லும் இடங்கள் தையும் செல்கிறது.  கதையில் இறந்தவர் முஸ்லீம் ஆனாலும் இறந்த ஊரில் உள்ள முஸ்லீம் மயானத்தில் அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது. கடைசியில் ??

கதைச்சுருக்கம்

இறந்துவிட்ட, வெளியூர்வாசியான ஷேக் அப்துல்லா மகன் அஹமது கபீர் என்பவருடைய மய்யம் அடக்கம் செய்வது தொடர்பான ஜமாஅத் (ஊர்) நிர்வாக சபை முதலில் இரண்டுமுறை கூடியது. முதல் இரு முறை நடந்த பேச்சு வார்த்தையிலும் எந்த முடியும் ஏற்படாமல் கூட்டம் கலைக்கப் பட்டதால் மூன்றாவது சுற்றுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. ஜமா அத் தலைவரும் செயலாளரும் முரண்பாடான கருத்துக்களுடையவர் களாகியிருந்ததின் நிமித்தம், உறுப்பினர்களில் பலர் இரு அணிகளாக நின்று காரசாரமாக விவாதித்தனர். காலையில் நடந்த முதல் கூட்டத்தில் கடுமையான விவாதங்கள் நடந்ததே தவிரப் பேச்சில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாமல் கூட்டம் கலைக்கப்பட்டது. இறந்துவிட்ட அஹமது கபீரின் பேரில் அனுதாபம் கொண்ட சிலருடைய வேண்டுகோளின்படி மதிய உணவுக்குப் பின் மீண்டும் நடந்த இரண்டாவது சுற்றுக் கூட்டத்தில் உறுப்பினர்களில் சிலர் திடீரென அணி மாறிவிட்டனர். மாலைவரை நடந்த இரண்டாவது சுற்றுக் கூட்டத்தில் அணிமாற்றம் ஏற்பட்டதினால் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் சபை மீண்டும் கலைக்கப்பட்டது. சில நடுநிலை உறுப்பினர்கள் விடுவித்த வேண்டுகோளையும், இறந்தவருடைய உறவினர்களின் தாழ்மையான விண்ணப்பத்தையும், இறந்தவர்களின் மகன் கொடுத்த மூன்றாவது மனுவையும் கருத்தில் கொண்டு காலையில் முதல் சுற்றுக் கூட்டம் நடந்த அலுவலக முதல் மாடியில் மூன்றாவது சுற்றுக் கூட்டமும் நடந்து கொண்டிருந்தது.

இறப்பு முந்தைய இரவு 10 மணிக்கு நிகழ்ந்ததால் அதிகாலையில் அடக்கம் நடைபெறும் என நம்பி பறந்தடித்து வந்த உறவினர்கள் உண்ணாமலும் பருகாமலும் ஒரே நிலையாக நின்று அலுத்துப் போயினர். நடந்து கொண்டிருக்கும் மூன்றாவது சுற்றுப் பேச்சில் எப்படியாவது ஜமாஅத் நிர்வாகிகள் சாதகமான முடிவுக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு, இறந்தவரின் உறவினர்களிடையே நிலவியது.

அடக்கம் செய்ய முடியாது.

எக்காரணம் கொண்டும் ஜமாஅத் கபர்ஸ்தானில் அடக்கம் செய்யக் கூடாது என்பதில் தலைவர் பிடிவாதமாக இருந்ததற்கு அவருக்கே உரிய சில காரணங்களை முன்வைத்தார்.

உயர்தர மக்களை அடக்கம் செய்யும் வடபக்கம் உள்ள கபர்ஸ்தானில் இடம் வாங்கி இந்த மய்யத்தை நல்லடக்கம் செய்ய வேண்டுமென்ற காரியதரிசியின் அடம்பிடிப்பு தலைவரை மனக்குழப்பத்திற்கு உள்ளாக்கியது.

நடுநிலையாளர்களான உறுப்பினர்கள், வடபக்கம் இல்லாவிட்டாலும் நடுத்தர மக்களை அடக்கம் செய்யும் தென்புற கபர்ஸ்தானிலாவது இடங்கொடுக்க வேண்டுமென்ற கருத்தை முன்வைத்தனர். அதை மூன்றாவது சுற்றுக் கூட்டத்தில் பரிந்துரைக்கவும் செய்தனர்.

பெரிய மருத்துவமனையில் இறந்த அனாதைகள், யாசகர்களாக வந்து பள்ளிவாசலில் தங்கி இருக்கையில் திடீரென இறந்துவிடுகிற முஸாபிர்கள், ஜமாஅத்தில் உள்ள அடிமட்ட ஏழைகள் முதலியோரை அடக்கம் செய்யும் கீழ்ப்புறமுள்ள அனாதை கபர்ஸ்தானிலாவது இடங்கொடுக்க வேண்டுமென ஒரு முதிய உறுப்பினர் சொன்ன யோசனையும் நிராகரிக்கப்பட்டது.

வாத எதிர்வாதங்களின் வால் நீண்டு நீண்டு, இறந்துபோன முந்தைய இரவு நேரமான மணி பத்தைத் தொட்டது. வெளியூரிலிருந்துதுட்டிக்குவந்தவர்களில் சிலர் ஒரு முடிவும் ஏற்படாததால் கடைசி பஸ்களைப் பிடித்து தத்தம் ஊர்களுக்குப் புறப்பட்டுப் போயினர்.

இறந்தவருடைய சொந்த ஊரில் கொண்டு போய் அடக்கம் செய்யட்டுமே, என்று காலையில் நடந்த முதல் சுற்று கூட்டத்தில் எதிர்பாகம் தெரிவித்த கருத்தின்படி இறந்தவருடைய மகன் 70 மைலுக்கு அப்பால் உள்ள பாட்டனார் பிறந்த ஊருக்கு வாடகைக் காரில் பறந்தார்.

ஊரை அடக்கி ஆளும் ஜமாஅத் காரியதரிசியிடம், விண்ணப்பம் கொடுத்துவிட்டுக் கைகட்டிப் பணிவாக நின்றார், சாதகமான பதிலை எதிர்நோக்கி.

காரியதரிசி தண்டியான திருமணப் பதிவேடு, சுன்னத் பதிவேடு, பிறப்பு இறப்புப் பதிவேடு போன்ற ஆவணங்களைப் புரட்டிப் பார்த்தார். ஷேக் அப்துல்லா மகன் அஹமது கபீர் என்ற ஒரு பெயர் காலம் கருமையாக்கிய அந்த ஆவணக் காகித வரிகளில் எங்குமே தென்படவில்லை.

உன் வாப்பாவின் பெயர் எங்கள் ஊர் ரிக்கார்டில் இல்லப்பாஎன்று சொல்லிக் கைவிரித்தார்.

உன் வாப்பா எங்கள் ஜமாஅத்தை சேர்ந்தவரல்ல. அவர் பெயரில் ஊர் தலைக்கட்டு வரி இல்லை, மீலாது விழாவிற்கு நன்கொடை கொடுத்த ரசீது இல்லை. காதர் வலியுல்லா சந்தனக்கூடுக்கு நேர்ச்சை கொடுத்தவர்கள் பேரில் அவர் பெயர் இல்லை. இப்படி இருக்க எங்கள் ஜமாஅத் கபர்ஸ்தானில் அடக்கம் செய்ய எப்படி இடம் தருவோம்?”. காரியதரிசியின் பதிலைக் கேட்டுவிட்டுத் திரும்பி வந்து சில உறுப்பினர்களை மீண்டும் அணுகிய பிறகுதான் இரண்டாவது சுற்றுக் கூட்டம் நடந்தது.

மௌத்தாய்ப்போன அஹமது கபீர் கடந்த 50 ஆண்டு காலமாக இந்த ஜமாஅத்திலே தங்கி வருபவரென்றும், பள்ளிவாசல் விஸ்தரிப்புக்கு நன்கொடை வழங்கியது மட்டுமல்லாது, வடபக்கம் உள்ள கபர்ஸ்தானை விரிவுபடுத்த நிலம் வாங்கப் பணம் வசூல் செய்யும் கமிட்டியுடன் சேர்ந்து பல ஊர்களில் வசூலுக்குப் போனது ஊராருக்கும் தனக்கும் தெரியும் என்று மூன்றாவது சுற்றில் காரியதரிசி அடித்துப் பேசினார். அதனால் அவர் மய்யத்தை வடபக்கம் உள்ள கபர்ஸ்தானில் அடக்கம் செய்ய வேண்டுமென்றார்.

தலைவர் அணியைச் சார்ந்த உறுப்பினர் ஒருவர் சடாரென எழும்பினார். “பள்ளிவாசல் விஸ்தரிப்பிற்கு நன்கொடை வழங்கியதும், வடபுற கபர்ஸ்தானுக்கு நிலம் வாங்க வெளியூர் சென்று பணம் வசூல் செய்ய ஒத்துழைத்ததும் உண்மைதான். அதற்காக வெளியூர்வாசியான இவரை இங்கு அடக்கம் செய்வதற்கும் இடம் கொடுக்க முடியுமா? ஆனால் இறந்தவருடைய மகன் செய்த குற்றத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த ஜமாத்தில் உள்ள ஒரு விதவைப் பெண்ணைக் கடத்திக் கொண்டுபோய்ப் பதிவுத் திருமணம் செய்தது இந்த ஜமா அத்தையும் ஷரீஅத்தையும் மீறின செயல்

சிறிது சிந்தனைக்குப்பின் காரியதரிசி எழும்பினார். ஜமா அத்தையும் ஷரீஅத்தையும் மீறியது இறந்தவரல்ல. மீறிய அவருடைய மகன் அப்துந் நாசர் இறந்திருந்தால், இந்தக் கேள்வியை எழுப்ப வேண்டியதுதான். மகன் செய்த தவறுக்காக ஒரு முஸ்லிம் மய்யத்தை இப்படிப் போட்டு வைப்பது ஷரீயத்படி ஆகுமா? கோபாவேசக் குரலாகயிருந்தது காரியதரிசியுடையது. காரியதரிசியின் சட்டக் கேள்விக்குப் பதில் தெரியாமல் தலைவர் அணி உறுப்பினர்களும் மற்றவர்களும் திணறி முழித்தபோது முதிய உறுப்பினர் ஒருவர் தனக்கு உடன் தோன்றிய ஒரு யோசனையைப் படக்கென்று சொன்னார்.

மெளலானா மெளலவி அப்துல் ஹை காதிரியை கூப்பிட்டு இந்த சிக்கலுக்குபத்வா’ (தீர்ப்பு வழங்கச் சொல்வோம்.

பள்ளிவாசல் இமாமும் மேடைப் பிரசங்கியுமான மெளலானா மெளலவி அப்துல் ஹை காதிரி அவர்களை உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பி அழைத்து வந்த நேரம் அலுவலகச் சுவரில் தொங்கி, நாக்கு ஆட்டிக் கொண்டிருந்த வட்ட மணி 12 என உணர்த்தி மூச்சு அடக்கியது.

மெளலவி சாப், ஒரு சிக்கலான பிரச்சினை! தாங்கள் ஒரு பத்வா தரவேண்டும். மகன் செய்த தவறுக்கு, நேற்று இரவு பத்து மணிக்கு இறந்த முஸ்லிமான ஒரு தகப்பனாரின் மய்யத்தை வெளியூர்க்காரர் என்று சொல்லி இன்று இரவு பன்னிரண்டு மணிவரை அடக்கம் செய்ய இடம் கொடுக்காமல் போட்டு வைத்திருப்பது ஷரீயத் சட்டப்படி ஆகுமா? ஆகாதா? முதல் கேள்வி எழுப்பியது காரியதரிசி.

ஆகும் என்று சொல்வதா? ஆகாதென்று சொல்வதா? ஒன்றும் பிடிபடவில்லை. தலைவரா? காரியதரிசியா? சிங்கத்திற்கும் கரடிக்கும் இடையில் மாட்டிக் கொண்ட அச்ச உணர்வு அவரை வரிந்து கட்டியது.

சரி, உங்கள் தரப்புக் கேள்வி?

பள்ளிவாசல் புத்தகத்தில் பதிவாகாமல் இரண்டு முஸ்லிம் சாட்சிகளின் முன்னிலையில் மெளலவி நிக்காஹ் செய்து கொடுக்காமல் இறந்தவரின் மகன் பதிவுத் திருமணம் செய்து கொண்டதை ஷரீயத் சட்டப்படி ஏற்றுக் கொள்ளலாமா, கூடாதா?

காரியதரிசி அணியிலுள்ள ஓர் உறுப்பினர் குதித்து எழுந்து சொன்னார். “பதிவுத் திருமணம் செய்தாலும் தனியாக மெளலவியை வைத்து நிக்காஹ் செய்து கொண்டால் ஷரீயத்படி ஏற்றுக் கொள்ளத்தக்கதுதானே?”

வெகு நேரம் போட்டு வைப்பதும், அடக்கம் செய்ய இடம் கொடுக்க மறுப்பதும் தவறெனத் தெரிந்தும், இது ஒரு சிக்கலான சட்டப் பிரச்சினைஎன்று துவங்கி, கிதாப்பு (நூல்) பார்க்காமல் பத்வா சொல்ல முடியாது என்று கூறி மெளனமானார், மெளலானா மெளலவி.

கிதாபு கையில் இல்லை. தலாக் சொல்லிவிட்ட என்னுடைய முதல் மனைவியின் வீட்டில் மாட்டிக்கொண்டதுஎன்று கூறி பொந்திலிருந்து தலையை உருவி எடுக்க முயன்றார்.

அப்படியானால் இந்த மய்யத்தை என்ன செய்வது?”முதிய உறுப்பினர் கேட்ட கேள்விக்கு, ஜமாஅத் நிர்வாகம் முடிவு செய்யட்டும் என்று கூறி மெளலானா மெளலவி இருக்கையை விட்டு எழும்பினார்.

இறந்தவருடைய மகன் ஜமாஅத் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கத்தினார்.

மெளலவி சாப், கிதாபு பார்க்காமல் உங்களுக்கு ஒரு பத்வா சொல்ல முடியாது. இருக்கட்டும். என்னுடைய ஒரு கேள்விக்கு மட்டும் பத்வா சொல்லுங்கள். பள்ளிவாசலை ஒட்டிய கபர்ஸ்தானில் அல்லாமல் வெளியே அடக்கம் செய்யப்படுவோரின் புதைகுழிக்குள் கேள்வி கணக்கு கேட்க முன்கர், நக்கீர் (வானவர்கள்) வருவார்களா?”

 மௌலானா மெளலவி மெல்லச் சொன்னார், “எங்கும் வருவார்கள்.’’

முடிவு?” முதிய உறுப்பினர் கேட்டார்.

தலைவர்நமது ஜமாஅத் கபர்ஸ்தானில் வெளியூர்வாசிகளின் மய்யங்களை அடக்கம் செய்ய முடியாது.”  மணி ஒன்றாகி விட்டது. இப்போதாவது போய் படுத்தால்தான் சுபுஹ் தொழுகைக்கு எழும்ப முடியும். இத்துடன் கூட்டம் கலைக்கப்படுகிறது

தலைவர் வெடுக்கென்று எழும்பி நடந்தார்.

அப்துந் நாசர் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டை நோக்கி நடந்தார் என்றாலும் அவரால் நடக்க முடியவில்லை. தலைக்குள் பல நூறு கேள்விகள். பள்ளிவாசல் விஸ்தரிப்புக்கு இரவு பகலாகப் பணியாற்றியவரும், வடபுறமுள்ள கபர்ஸ்தானத்தில் இடப்பற்றாக்குறை வந்தபோது பக்கத்து தோப்புக் காரனிடமிருந்து இடம் வாங்கப் படாதபாடுபட்டவருமான வாப்பாவின் உடலை எங்கு, எப்படிஅடக்கம் செய்வது?

ஒரு கை தோளைத் தொட்டதை உணர்ந்த அப்துந் நாசர் திரும்பிப் பார்த்தார். பரிச்சயமானவர்தான். பிளாட்பாமில் செருப்பு கடை வைத்திருப்பவர்.

விபரம் தெரியாத பிள்ளையாய் இருக்கிறீயே. ஜமாஅத் நிர்வாகம் தாமதப்படுத்தினால் வீச்சம் வெச்சிருப்பா. தலைவரை இரவே தனியாய் போய்ப்பாரு. நாளை காலை 8 மணிக்கெல்லாம் வடபுறமுள்ள கபர்ஸ்தானில் உன் வாப்பா மய்யத்தை சிறப்பாக அடக்கம் செய்யலாம். தீவுக்காரங்களல்லாம் தனியாய் போய் பாப்பாங்க

தனியாய்ப் போய் பார்க்கிறேன் என்று கூறி அப்துந் நாசர் அவரை மடக்கிவிட்டார்.

தனியாகச் சந்திக்க வரும் அப்துந் நாசரை எதிர்நோக்கி தலைவர் சுபுஹ் (காலை) பாங்கு சொல்லும் வரை வீட்டுத் தலைவாசலைத் திறந்திட்டுக் கொண்டு விழித்திருந்தார்.

முன்கர், நக்கீர் எங்கும் வருவார்கள்!

வீட்டிற்கு நடக்கையில் மெளலானா மெளலவி சொன்னது அப்துந் நாசரின் மனதில் வியாபித்துக் கொண்டிருந்தது.

எங்கும் வருவார்களானால் அங்கும் வருவார்கள்.

கடற்கரை புறம்போக்கில் ஒரு மண்திட்டையும் தலைப்பக்கமும் கால்பக்கமும் இரு மீசான் பலகைகள் நாட்டப்பட்டிருப்பதையும் விடிந்த பொழுதில் ஜமாஅத்தார் கண்டதைத் தலைவரிடம் சொன்னார்கள், சொன்ன அன்றைய லுகர் தொழுகைக்கு இமாமாக நின்று தொழ வைத்தவர் உடனடியாக தலைவராக  நியமனம் பெற்று வந்த மவுலவி அப்துல் ஜப்பார் உலவி அவர்கள்!

கதை ஆய்வு.

அப்துல்கலாம் பேய்க்கரும்பு என்ற இடத்தில் அரசு புறம்போக்கில் அடக்கம் செய்யப்பட்டது நினைவில் வருகிறதா?

வாழும் முறையையும் சட்டங்களால் வரைமுறை செய்து, வாழக் கட்டுப்படுத்தும், ஆப்ரகாம் வழி வந்த மதங்களைப் பின்பற்றும் தமிழ் மக்களுக்குள்ளும் எத்தகைய முரண்பாடுகள் உள்ளன என்பதை எடுத்துக்காட்டும் கதை இது.

முன்பே நுகம் - ச் சிறுகதையில் கிறிஸ்துவ சமுதாயத்தில் நிலவும் அவலங்களைக் கண்டோம். இந்தக் கதையில் முஸ்லீம்  சமுதாயத்தில் உள்ள முரண்பாடுகள் எடுத்துக்  காட்டப்பட்டிருக்கின்றன. இரண்டு கதைகளுமே  அந்த அந்த மதங்களைச் சார்ந்தவர்களால் எழுதப்பட்டவை. இரண்டு கதைகளிலும் உயர்ந்தோர், தாழ்ந்தோர் பாகுபாடு உண்டு.  இரண்டு கதைகளும் விருப்பு வெறுப்பின்றி நடந்தது என்ன என்பதை மூன்றாம் மனிதர் பார்வையில் விவரிப்பவை. மீரான், அவருடைய கதா பாத்திரங்கள்  நிஜ மனிதர்கள் தான் என்று ஒரு பேட்டியில் கூறுகிறார்.

கடைசி வரையிலும் லஞ்சம் கொடுக்க மறுத்த அப்துந் நாசரை பாராட்டலாம்.

முழுக்கதையின் சுட்டி. தோப்பில் முஹம்மது மீரான்

ஆசிரியர் பற்றிய குறிப்பு.

தோப்பில் முகமது மீரான் (1944-2019 கன்னியாகுமரி மாவட்டத்தில், தேங்காப்பட்டினம் என்ற ஊரில் பிறந்தார். இவர் 5 புதினங்களையும் 6 சிறுகதைத் தொகுப்புகளையும் சில மொழிபெயர்ப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது புதினம் சாய்வு நாற்காலி 1997 இல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.

தேங்காய்ப்பட்டனத்தில் தான் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி ஒரு பேட்டியில் தெரிவித்த தோப்பில், "நாங்க வாழ்ந்த பகுதியில், உயர்நிலை மக்கள் இருந்தாங்க. புராதனமான பள்ளிவாசல் ஒன்று இருக்கும். பொருளாதார அளவில் உயர்ந்திருந்த சிலர், தாங்கதான் அரேபியால இருந்து வந்தவங்க, குடும்பப் பாரம்பரியம் உள்ளவங்க என்கிற எண்ணத்தில், பள்ளிவாசலைச் சுற்றி வாழ்ந்துக்கொண்டு இருந்தாங்க. ஊருல ஒரு சுடுகாடு இருக்கு. அதை ஒட்டிதான் எங்க மூதாதையர் குடியிருக்காங்க. அந்த இடத்துக்குப் பேர்தான் தோப்பு. எங்க வீட்டு மதிலுக்குப் பின் பக்கம்தான் சுடுகாடு. தோப்பு என்கிற அந்த இடம் ஊரிலேயே பிற்படுத்தப்பட்டு ரொம்ப மோசமான இடமாகக்  கருதப்பட்ட காரணத்தினாலதான் புரட்சியா தோப்பில் முகம்மது மீரான்னு பேர் வைச்சுகிட்டேன்" என்று தெரிவித்தார்.

இஸ்லாமிய வாழ்வைப் பற்றி எழுதும்போது ஒன்று புனிதப் படுத்துகிறார்கள். அல்லது அவதூறு செய்கிறார்கள். இரண்டையும் செய்யாமல், அப்படியே எழுதியவர் தோப்பில்." என்கிறார் கவிஞர் மனுஷ்யபுத்திரன்.

இவரது படைப்புகளில் மிகவும் பிரசித்தி  பெற்றதுஒரு கடலோர கிராமத்தின் கதை”. பாடபுத்தமாகவும் கேரள பல்கலைக்கழகத்தில் இருந்தது.

39 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  2. போக்குவரத்து காவலர், ஆய்வாளர் ராஜேஸ்வரி இருவரது மனித நேயம் நெகிழ வைக்கிறது! இவர்களைப்போன்றவர்களால் தான் பூமியில் இன்னும் மழை பொழிந்து கொண்டிருக்கிறது!

    பதிலளிநீக்கு
  3. பொதுவாக எந்த மருத்துவரைப்பார்த்தாலும் தினமும் 2 லிட்டர் தண்ணீர் அருந்தத்தான் சொல்லுகிறார்கள். சிறுநீரகத்தில் பிரச்சினைகள் இருந்தால் மட்டுமே அருந்தும் தண்ணீரின் அளவை நாங்கள் குறைக்கச் சொல்லுவோம்" என்று சொல்லுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அக்கா.  சமீபத்தில் ஒரு 75 வயது பாஸ்டரை சந்தித்தேன்.  அவரை தினம் அரை லிட்டர் தண்ணீர்தான் குடிக்கச் சொல்லி இருக்கிராறாராம் அவர் மருத்துவர்.

      நீக்கு
  4. கதை கவர்ந்தது. பதிவுக்கு தன்றி ஜெயகுமார் சார். இதுபற்றி எழுத நினைக்கிறேன். பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன எழுத நினைத்திருக்கிறீர்கள் நெல்லை?

      நீக்கு
    2. மிக்க நன்றி கருத்துரை ஒன்றும் கூறவில்லையே 

      Jayakumar

      நீக்கு
    3. சட்னு நினைவுக்கு வரலை. பிறகு ஞாபகம் வந்துவிட்டது. நம்ம ஊர்ல, பணக்காரனுக்கு தனி இடம், மிடில் கிளாஸுக்கு தனி இடம், ஏழைகளுக்குத் தனி இடம் என்று இந்தக் கதைல தோப்பில் (அப்போவே) சொல்லியிருக்கிறார். என் அம்மாவை பஹ்ரைனுக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு காண்பிக்காத இடம் எதுவுமே இருக்கக்கூடாது என்று அதுவரை செல்லாத இடங்களுக்கெல்லாம் சென்றிருந்தேன் (அம்மாவைக் கூட்டிக்கொண்டு). அதில் பார்த்த ஒரு இடம், அரச குடும்பத்தினரை அடக்கம் செய்யும் இடம். அங்கு யாருக்குமே அடையாளம் கிடையாது. 6க்கு 3 என்று நினைவு. அந்த இடம் முழுவதும் இப்படித்தான் இருந்தது. அங்கே படமும் எடுத்துக்கொண்டேன். பிறகு பகிர்கிறேன். உண்மையான முஸல்மான்கள் அரபு தேசங்களில் மட்டும்தான் உண்டு. கில்லர்ஜி, வேறு கருத்து இருந்தால் கூறலாம்.

      நீக்கு
    4. //கருத்துரை ஒன்றும் கூறவில்லையே // - இது ஒரு மதத்தில் நடக்கும் கதை. அதனால் கருத்து எழுதினால் சார்புள்ளதாகப் போய்விடும் அபாயம் இருக்கிறது.

      கதை ரொம்ப நல்லா, உண்மை நிகழ்வுகளை எழுதுவது போல எழுதியிருக்கிறார். இத்தகைய 'நான் படித்த கதை' பகிர்வுகள் எபிக்குப் பெருமை சேர்க்கின்றன என்பது என் நம்பிக்கை

      நீக்கு
    5. சில சமயங்களில் அரசியலாகிவிடும்!

      நீக்கு
  5. மருத,துவரின் மனித நேயமும் கவர்ந்தது. வாழ்க காவல்துறை மற்றும் உதவியவர்கள்.... நெல்லை.. மேல் கருத்தும்

    பதிலளிநீக்கு
  6. இன்றைய செய்தித் தொகுப்பு அருமை..

    மனிதாபிமானம் இன்னும் தழைத்திருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  7. தண்ணீர் குடிப்ப்து பற்றி சொல்லியிருக்கப்படும் குறிப்புகள் நல்ல குறிப்புகள். ஒவ்வொருவது தேவையும் அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப மாறுபடும் என்பதே...

    பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் அருமை என்றால் ராஜேஸ்வரி அம்மாவும் மருத்துவரும் கண்கலங்க வைத்துவிட்டனர். மனித நேயம் வாழ்க...எல்லாம் மறைந்துவிட்டது நம் நாடு மோசமாகப் போகிறது உலகம் மோசமாகப் போகிறது என்று புலம்புவதை விட இப்படியானவர்களைப் பார்த்து பெருமிதம் கொள்வோம், உலகம் மோசமாகவில்லை என்று நினைப்போம். கடலூர் காவலர் உட்பட ...இப்படிப் பலரும் இருக்கிறார்கள் நம் கண்களில் நெகட்டிவ் செய்திகள்தான் அதிகம் படுகின்றன ...மனமும் அப்படித்தானே எதிர்மறையை டக்குன்னு பிடிச்சுக்குது...

    கீதா

    பதிலளிநீக்கு
  8. எங்கள் ஊர் பேச்சு வழக்கு அதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் சில சொற்கள். தேங்காய்ப்பட்டணத்துக்காரர் என்பதாலோ என்னவோ தோப்பில் என் மனதிற்குப் பிடித்தமானவர். அவர் எழுதிய இக்கதை முன்பு வாசித்ததில்லை.

    தண்டி -

    அருமையான கதை. ஜெகேசி அண்ணா சொல்லியிருப்பது போல் நுகம் கதையும் நினைவுக்கு வந்தது.

    மனிதர்கள் வாழும் போதுதான் ஏற்றத் தாழ்வுகள் என்றால் இறந்த பிறகும்!!

    இன்னும் சில இடங்களில் இருக்கின்து இப்படியானவை..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமஸ்காரா பார்க்கவில்லையா?

      நீக்கு
    2. நான் 7ம் வகுப்பு படிக்கும்போது இந்தத் திரைப்படம் தாளவாடியில் பார்த்தேன். அப்போ ஒன்றும் புரியலை. ஒரு திரைப்படத்துக்கு விருது கிடைக்கணும்னா, முக்கிய கண்டிஷன், படம் மெதுவா ஊரணும், பாத்ரூம் போயிட்டு வந்தாலும் கதை நகர்ந்திருக்கக்கூடாது, சமூகத்தைச் சாடுவது போல இருக்கணும், படம் பார்க்கும்போது பெரும்பாலான சமயங்களில் கொட்டாவி வரணும். ஹா ஹா ஹா

      நீக்கு
    3. சமஸ்காரா பார்க்கவில்லையா?//

      பார்த்தேன்...இதுவே பாருங்க தண்டி ன்னு மட்டும் வந்தது அதன் பின் போன்ற என்பதற்கும் தண்டிக்கும் இடையே வந்திருக்க வேண்டும் விட்டுப் போச்!!!

      கீதா

      நீக்கு
    4. நெல்லை - ஹாஹாஹா....நான் (ங்க) அதான் எங்க வீட்டு வாண்டுகள் எங்கள் குழுவில்!!! இந்த மாதிரி படங்களை நட்டு போல்ட்டு நு நான் பெயர் வைச்சு எல்லோரும் சொல்வோம்...அதாவது நட்டை கழட்டுவது வரை பாதி படம் போடுவது அடுத்த பாதி

      கீதா

      நீக்கு
    5. ஹையோ இன்னிக்கு என்னாச்சு ரெண்டு மூன்று கருத்துகள் விடு பட்டு விடுபட்டு அர்த்தமே இல்லாமல் வந்துட்டுருக்கு

      கீதா

      நீக்கு
    6. சமஸ்காரா - பார்த்து....அது ஆச்சு....டிடி ல ன்னு நினைக்கிறேன்....படம் ம்ம்ம்ம்ம்ம்...தான்.

      கர்நாடகாவில் ரொம்ப உள்ளே இன்னும் சில இருக்கின்றனதான்..... எங்கள் வீட்டருகிலேயே பார்க்கிறேன்.

      கீதா

      நீக்கு
    7. ஒரு கருத்து மிஸ்ஸிங்க்...ஸ்ரீராம் முடிஞ்சா பாருங்க உள்ளார இருக்கான்னு

      கீதா

      நீக்கு
  9. கண் முன் விரிகிறது கதை.

    இறந்தவரை வைத்துக் கொண்டு பங்காளிச்சண்டை ந்டப்பதும். சொத்துப் பிரிப்பது நடக்கா விட்டால் கிரியை செய்ய முடியாது என்றும் போட்டுவைத்த நிகழ்வுகளும் உண்டு. இருக்கும் போது கூட இடம் கிடைத்துவிடுகிறது. வீடு என்று ஆனால் இறந்த பிறகு இடத்த்திற்கு என்ன விதிமுறைகளோ...

    அருமையான கதையில் கதைமாந்தர்கள் உண்மையில் நடப்பதுதான்.

    ஒவ்வொரு சமூகத்திலும் எத்தனை விதிகள்.!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கிலாந்தில் ஒரு பெரும் பணக்காரர், தனக்காக மிக அழகான கல்லறையும் கட்டிவைத்திருந்தார். கடைசியில் அவர் இறந்தது அவருடைய லாக்கர் அறையில். தன் சுண்டு விரலில் ரத்தம் வரச் செய்து, உலகப் பெரும் பணக்காரன், பசி, தாகத்தினால், பணம், சொத்து சூழ தனிமையில் இறக்கிறான் என்று சுவரில் எழுதிவைத்திருந்தாராம். அவர் கத்தியும் யாரும் அவரை விடுவிக்க வரலை, அத்தனை பெரிய மாளிகையில்.

      நீக்கு
    2. உண்மையில் கதை மனதை மிகவும் அசைத்தது.

      நீக்கு
    3. ஆமாம் ஸ்ரீராம் ரொம்பவே..

      கீதா

      நீக்கு
  10. இப்படி உண்மைக் கதை மாந்தர்கள், உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உண்மையாக எழுதப்பட்ட கதைகள் ஒவ்வொரு காலகட்டத்தின் சமூகங்கள் பற்றியும் நிகழ்வுகள் பற்றியும் அறிய முடிகிறது. வரலாற்றை விட இப்படியான பல கதைகள் சமூகம் பற்றிய உண்மையைச் சொல்லுகின்றனவோ என்றும் எனக்குத் தோன்றும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. பாசிட்டிவ் செய்திகள் எல்லாம் மனித நேயத்தை சொல்கிறது, அருமை.

    பதிலளிநீக்கு
  12. படித்த கதை பகிர்வு அருமை. சமஸ்காரா படம் பார்த்து இருக்கிறேன்.
    தோப்பில் முஹம்மது மீரான் கதைகளும் படித்து இருக்கிறேன்.

    ஆசிரியர் பற்றிய குறிப்பு பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாசிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.

    கதை பகிர்வும் ஆசிரியர் பற்றிய குறிப்பும் நன்றாக உள்ளது. கதையை படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. தோப்பில் முகமது மீரான் கதைகள் படித்திருக்கிறேன் உண்மை சம்பவங்களை மிகவும் அருமையாக எழுதுவார். இன்றைய பகிர்வில் அவர் கதையும் இடம் பிடித்தது நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!