2.12.25

சிறுகதை : எங்கேயும் மனிதர்கள் - ஸ்ரீராம்

 

ஏழெட்டு மாதங்களுக்கு முன் 'விருட்சம்' அழகியசிங்கர், 'அசோகமித்திரன் நினைவு சிறுகதைப் போட்டி' ஒன்று நடத்தினார்.  அதற்கு அனுப்பிய என் படைப்பு பணப்பரிசை வெல்லாவிட்டாலும்,  பிரசுரத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.  

பரிசில்லா விட்டால் புத்தகத்தில் இடம் பெறாதோ என்ற சந்தேகத்தில் நான் 'கதையை விருட்சத்தில் (online) பிரசுரிக்க வேண்டாம், வேறு போட்டிக்கு அனுப்புவேன்'  என்று கேட்டுக் கொண்டேன்.  ஆனால் அவர் - அழகியசிங்கர் -  'அச்சிடப்படும் புத்தகம் நான்கு பகுதிகளில் ஒன்றில் இந்தக் கதையும் இடம்பெறும்' என்று சொல்லி, 'அப்புறம் உங்கள் இஷ்டம்' என்றார்.  புத்தகத்தில் வரும் என்றதும் சம்மதித்து விட்டேன்.

புத்தகமும் வெளியிடப்பட்டது.  நவம்பர் மாத நடுவில் மறுபடி அதே அண்ணா நூலக அரங்கில் விழா நடைபெற்றது.  அதே ரமணன் கையால் புத்தகம் பெற்றுக் கொண்டேன்.  அங்கு அசோகமித்திரனின் மகன் ரவிசங்கர் தியாகராஜன் அவர்களையும் சந்தித்தேன்.  கீதா அக்கா பற்றி அவரிடம் பேசிக் கொண்மடிருந்தேன்.  மேலும் மந்திரமூர்த்தி அழகு, நா பா மகள் எல்லோரும் வந்திருந்தனர்.  பழம்பெரும் எழுத்தாளர் ரஸவாதி மகள் வந்திருந்து, தந்தையார் புத்தகம் ஒன்றை வெளியிட்டார்.  

அரங்கில் பரிசு பெற்ற மற்ற கதைகள் அடங்கிய புத்தகங்களையும் ரஸவாதி எழுதிய ஆதார ஸ்ருதி நாவலையும் வாங்கி கொண்டேன்.  என் கதை இடம்பெற்ற புத்தகம் எனக்கு ஃப்ரீ!


முதல் இரண்டு படங்களும் திரு அசோகமித்திரன் புதல்வர் திரு ரவிசங்கர் தியாகராஜன், மற்றும் திரு நா பார்த்தசாரதி மகள் திருமதி மீரா பார்த்தசாரதி.


அரங்கில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள்.

மைதிலி நாராயணன் என்கிற ஷைலஜா கௌரவிக்கப்பட்டபோது 


ரவிசங்கர் தியாகராஜன் கௌரவிக்கப்பட்டபோது.  புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அப்பாவின் புகைப்படம் தனக்கு ரொம்பப் பிடித்திருப்பதாக சொன்னார்.  உடன் நிற்பவர்கள் மஞ்சள் சட்டையில் டாக்டர் பாஸ்கர் ஜெயராமன், அவர் அருகில் அழகியசிங்கர், பரிசு கொடுப்பவர் கல்கி முன்னாள் ஆசிரியர் திரு ரமணன்.

ரஸவாதியின் மகள் கௌரவிக்கப்பட்டார். அவர் தங்கள் குடும்ப மூத்த உறுப்பினர்களை மேடைக்கு அழைத்து கௌரவித்தார்.

ஏற்கனவே பேசி வைத்த சில சிறுகதைகள் பற்றி முக்கியஸ்தர்கள் சிலாகித்து பேசினார்கள்.

இனி கதை...

===========================================================================================


அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட் கதைகளின் வரிசை 26



எங்கேயும் மனிதர்கள் 
ஸ்ரீராம் 


நினைத்தபடியே ஆனது.

சென்றமுறை சரியாக வந்தானே என்று ஜி ஹெச்சில் அட்மிட் ஆகியிருக்கும் மாமாவுக்குத் துணையாய் இருக்கும் அத்தைக்கு இப்போதும் ஸ்விக்கி போட்டால் அத்தையால் வந்து வாங்கி கொள்ள முடியாமல் போக, ஸ்விக்கிக்காரரும் உள்ளே செல்ல முடியாமலும், எந்த இடம் என்று தெரியாமலும் குமாரிடம் போன் செய்து சண்டை போட்டுச் சென்றார். உணவும் நஷ்டம்.  அத்தைக்கும் வேலை ஆகவில்லை.

ஸ்விக்கியுடனான அனுபவங்கள் அவ்வளவு சிலாக்கியமாக இருந்ததில்லைதான்.

ஒருமுறை லதாவும் ஒருமுறை குமாரும் GH சென்று பார்த்து, உணவு கொடுத்து வந்தார்கள். வயதான காலத்தில் கீழே விழுந்து காலை ஒடித்துக்கொண்டு சர்ஜரி செய்துகொண்டிருக்கும் மாமாவுக்கு வயது 80. துணையாய் இருக்கும் அத்தைக்கே வயது 72. முடியாத நேரத்திலும் மாமாவுக்காக அலைந்தாள். இருவரும் அடித்துக் கொள்வதும் வேடிக்கையாக இருக்கும். ஆனாலும் அத்தை விட்டுக்கொடுக்காமல் சிரமம் பார்க்காமல் சேவை செய்வாள்.

இருந்த ஒரு மகனும் பத்துநாள் மலேரியாவில் 19 வயதில் அல்பாயுசில் போய்விட, சரியான வேலையும் இல்லாமல், உதவிக்கு ஆளும் இல்லாமல் கஷ்டப்படும் ஏழ்மைக் குடும்பம்.

பத்தாயிரம் சம்பளத்துக்கு வேலை பார்த்த மாமாவும் வயது, உடல்நிலை காரணமாக வேலைக்குச் செல்வதில்லை. சேமிப்பு என்றும் ஒன்றும் கிடையாது. அத்தையின் வயதைக் கணக்கில் கொள்ளாமல், அவள் குடும்ப நிலையை மனதில் கொண்டு ஒரு புண்ணியவான் அத்தைக்கு அவர் நடத்தும் நிறுவனத்தில் உதவியாளர் என்கிற பெயரில் வேலைக்கு வைத்திருந்தார். அங்கு வேலை செய்யும் பெண்களுக்கு ஊசி எடுத்துக் கொடுப்பது, துணி எடுத்துக் கொடுப்பது போன்ற வேலைகள். பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தார். அத்தை குடியிருக்கும் ஒண்டு குடித்தனத்துக்கே ஐந்தாயிரம் ரூபாய் வாடகை. ஏதோ வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. கொஞ்சம் வசதியான பக்கத்து வீட்டு ஆசிரியை ஒருவர் இருவர் மீதும் அனுதாபம் கொண்டு மாசாமாசம் அரிசி, பருப்பு, எண்ணெய வாங்கி கொடுத்து விடுவாள்.

“காசு இருந்திருந்தா வீட்டுக்கு பக்கத்தில தனியார் ஆஸ்பத்திரி போயிருப்பேன். நாலரை லட்சம் கேட்கறாங்க.. முடியாமத்தான் இங்க இவ்ளோ தூரம் ஜி ஹெச்சுக்கு வரவேண்டியிருந்ததது” – அத்தை புலம்புவாள். அத்தை, மாமா இருவருக்குமே GH என்றால் இளப்பம். இப்போது வேறு வழியில்லை.

பார்வையாளர் நேரம் பார்த்து இரண்டு மூன்று முறை பார்த்து வந்தாயிற்று. அவ்வப்போது அத்தைக்கு கைச்செலவுக்கு காசும் கொடுத்து வந்தாள் லதா.

அத்தை இன்று காலை லதாவுக்கு போன்செய்து கெஞ்சலாய் ஸ்விக்கி போடச் சொன்னாள். அதுதான் லதா மகனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். வேறு வழியின்றி குமாரும் ஸ்விக்கியில் ஆர்டர் செய்தான்.

“ஸார்.. ஸ்விக்கி”
“இன்னொரு நம்பர் கொடுத்திருக்கேனே.. அதுல பேசுங்க.. அவங்கதான் அங்க இருக்காங்க”

“கால் போகலை ஸார்”  - சென்னை ஆஸ்பத்திரிகளில் இது ஒரு கஷ்டம்.

“வார்டுக்கே போய்க்கொடுக்கலாமே.. நேற்று அப்படிதான் கொடுத்தாங்க”

“தெரியல ஸார்.. இவங்களோட நித்யப்படி ரோதனை. இன்னிக்கி இங்க உள்ளேயே விட மாட்டேங்கறாங்க”

அத்தைக்கு போன் அடித்தான்.

“ஆங்.. குமார்.. மாமா ரிப்போர்ட் வாங்க 'லேபு'க்கு வந்திருக்கேன். என்ன விஷயம்?”

“ஸ்விக்கி வந்துடுச்சு அத்தை”

“அச்சச்சோ.. இதோ போறேன்”

குமார் ஸ்விக்கிக்காரருக்கு பேசி அவரைக் கொஞ்சம் காத்திருக்கச் சொன்னான்.

“அட என்னங்க.. இன்னும் நிறைய இடத்துக்கு போகணும்.. சீக்கிரம் வரச் சொல்லுங்க..”

“இருப்பா..  மூணாவது மாடில இருக்காங்க….”

லிஃப்ட் உபயோகிக்கத் தெரியாது, படியில்தான் இறங்கி வருவாள் என்று அவனிடம் சொல்லவில்லை குமார்.

கொஞ்ச நேரம் சென்றது.

அத்தைக்கு ஃபோன் செய்தால் அவள் பதட்டத்திலிருந்தாள். “எங்கே வந்திருக்கேன்னே தெரியல குமார். சுத்திச் சுத்தி வரேன். ஒரே இடத்தையே சுத்தற மாதிரியும் இருக்கு.. அவர் இருக்கற வார்டு நம்பரும் தெரியலை…”

“காலுக்கு சர்ஜரி நடந்து எங்கே இருப்பாங்கன்னு விசாரிச்சுட்டு அங்க போங்க அத்தை”
கொஞ்ச நேரம் கழித்து ஃபோன் செய்தால் விசாரித்து சென்று கொண்டிருப்பதாக சொன்னாள். லிப்டுகளில் ஏறவே முடியாத அளவு கூட்டம் என்றாள். படியேறி படியேறிதான் செல்ல முடிகிறது என்றாள். மாமா வார்டுக்கு சென்று ரிசல்ட் கொடுத்து விட்டு உணவு வாங்க வரவேண்டும். குமாருக்கும் பதட்டமானது.

‘என்ன சொல்லி ஸ்விக்கியை சமாளிக்க’

எதிர்பார்த்தபடியே ஸ்விக்கி பொறுமை இல்லாமல் சத்தம் போட்டான். “உங்க ஒருத்தருக்காக எவ்வளவு நேரம் நான் லோல் படறது? வீட்ல உட்கார்ந்துகிட்டு எங்க கஷ்டம் தெரியாம விளையாடறீங்களே..”

குமாருக்கும் கோபம் வந்தது. காட்டிக் கொள்ள முடியவில்லை. காரியம் முக்கியம்.

“ஸார்.. கீழே ரிஸப்ஷன் மாதிரி இருக்கற இடத்துல பேர், வார்டு சொல்லி கொடுத்துட்டு போயிடுங்க.. நான் அத்தையை வந்து வாங்கிக்க சொல்றேன்.. பாவம் அவங்களுக்கு 72 வயசு.. காலைலேருந்து ஒண்ணும் சாப்பிடலை. ..”

“இதையே சொல்லுங்க… இதற்கெல்லாம் நான் என்ன செய்ய முடியும் சார்.. சீக்கிரம் வந்து வாங்கிக்க சொல்லுங்க…”

கொஞ்சநேரம் கழித்து மறுபடி ஸ்விக்கிகாரனிடமிருந்து போன் வந்தது.

“சார்… ரிஸப்ஷன்ல கொடுத்திருக்கேன்.. சொல்லி வாங்கிக்குங்க”
அப்பாடி..

பத்து நிமிடத்தில் மறுபடி போன்.

“ஸார்.. நான்தான். ரிஸப்ஷன்ல வாங்கி வைக்க மாட்டார்களாம்… கூப்பிட்டு திருப்பி கொடுத்துட்டாங்க”

அய்யய்யோ…

அத்தைக்கு ஃபோன் செய்தால் காலே போகவில்லை. மறுபடி இவனுக்கே போன் செய்தான் குமார்.

“அங்க யாராவது பேஸிக் சர்வன்ட்ஸ் இருந்தால் அவங்க கிட்ட கொடுத்து கொடுக்கச் சொல்லுங்க.. அவங்க கிட்ட ஃபோனைக் கொடுங்க நான் பேசறேன். இடம் சொல்லி கொடுக்கச் சொல்றேன். காசு கொடுக்கறேன்னு பேசிப் பார்க்கறேன்.”

ஸ்விக்கிக்காரர் சிலரை அணுகுவது ஃபோனில் கேட்டது.

“ஸார்.. யாருமே வாங்க மாட்டேங்கறாங்க.. எனக்குதான் லேட்டாகுது.. இன்னிக்கி இப்படி ஒரு ஆர்டரை எடுத்து நான் லோல்படறேன்.. ச்சே…”

குமாருக்கு சங்கடமாயிருந்தது.

அம்மா வேற, ‘என்ன ஆச்சு, என்ன ஆச்சு, அத்தை கைக்கு சேர்ந்துடுச்சா’ என்று கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தாள்.

“பக்கத்துல இருக்கும் டீக்கடைல, பிஸ்கட் கடைலயாவது பேர் சொல்லி கொடுத்துட்டு போங்க ப்ரதர்…. அவங்களை வந்து வாங்கிக்க சொல்றேன். அவங்களுக்கு ஃபோனும் போகமாட்டேங்குது… எனக்கும் சங்கடமா இருக்கு “

கொஞ்ச நேரம் கழித்து ஃபோன் வந்தது. “ஒரே ஒரு கடைதான் இருக்கு. அங்கேயும் யாரும் வாங்க மாட்டேங்கறாங்க… நான் என்ன சார் செய்யட்டும்”

“ரோட்ல இருக்கும் கடைல கொடுக்க முடியுமா?”

“விளையாடறீங்களா… எந்தக் கடைன்னு கொடுத்து என்ன அடையாளம் சொல்ல? அவங்கதான் எப்படி வருவாங்க?”

வேறு வழியில்லை. குமார் ஒரு முடிவுக்கு வந்தான்.

“ஓகே.. பரவாயில்லை. நீங்க போங்க ப்ரதர்.. உங்களுக்கும் தொந்தரவு. நான் மறுபடி வேற போட்டுப் பார்க்கறேன். கொஞ்ச நேரம் கழித்தாவது அங்க நிலைமை சரியாகுதான்னு பார்த்துக்கறேன். வேறென்ன செய்ய?” காசு போனாலும் இந்த சங்கடத்திலிருந்து விடுபட்டால் போதும் என்று தோன்றியது.

எதிர்முனை போன் வைக்கப்பட்டு விட்டது.

லதா புலம்பினாள். “என்னடா… காசும் வேஸ்ட்.. அத்தைக்கு இவ்வளவு பக்கத்துல சாப்பாடு வந்தும் கைல சேர்க்க முடியலை…”

“நான் என்னம்மா செய்ய.. உங்க அத்தை படுத்தறது அப்படி இருக்கு” காரணம் இல்லாமல் குமாருக்கு அத்தை மேல் கோபம் வந்தது.

“அப்படி சொல்லாதடா.. பசியில இருக்கற அத்தையை நெனச்சா பாவமா இருக்கு.. அவங்க வயசு என்ன? நம்மள மாதிரி சின்ன வயசா? பசி தாங்க மாட்டா… மாமாவை பார்த்துக்கற அலைச்சல் வேற.. பக்கத்திலயா இருக்கு ஜி ஹெச்? நம்மளாலும் உடனே உடனே போக முடியல.. ஏதோ நம்மளால ஆன உதவியை செய்யலாம்னு பார்த்தா..”

அத்தைக்கு பேச லதா முயற்சித்துக் கொண்டேயிருந்தாள். லைன் போகாமல் கீழே வைத்தாள். மறுபடி முயன்றாள்.

“அவன் போயிருப்பானாடா? கேட்டுப்பாரேன்.. பக்கத்துல அடுத்த ஆளுக்கு கொடுத்துட்டு திரும்ப வரும்போது ட்ரை பண்ணுன்னு சொல்லிப் பார்க்கலாமா?”

“போம்மா… போகாத ஊருக்கு வழி தேடிட்டு.. அவன் கத்து கத்துன்னு கத்தறான்”

லதா மறுபடி முயன்றுகொண்டே இருந்தாள்.

“கேட்டுப்பாருடா”

“நமக்கே மனசாட்சி இல்லையாம்மா?”

கொஞ்ச நேரம் கழித்து லைன் கிடைத்தது. அவள் பேசுவதைக் கேட்ட குமார் அம்மாவிடம், “அம்மா.. அத்தை எப்போ ஃப்ரீ ன்னு கேளு.. இல்லை, கீழயே வெயிட் பண்றாளான்னு கேளு.. நான் புதுசா ஒண்ணு போடறேன். இருந்து வாங்கிட்டு போகச்சொல்லு..  ஏதாவது அடையாளம் சொல்லி அங்க நிக்கறேன்னு சொல்லச் சொல்லு..”

“அத்தையே உன்கிட்ட பேசணும்ங்கறா..”

குமார் போனை வாங்கினான்.

“குமார்.. இங்க ஒரு ஸ்விக்கிகாரர் நிக்கறார். அவர்தானா?”

“சரியாப்போச்சு… அவர்லாம் இல்லை. அவர் அப்பவே போயிருப்பார் அத்தை… . முக்கால் மணி நேரம் ஆகுது..”

“இல்லப்பா.. என்னையே பார்க்கறாரு..”

“இப்போ யார் போட்டிருக்கங்களோ.. பாவம் அவர் கஸ்டமர் நீங்களான்னு பார்ப்பார். சொல்லுங்க அத்தை. எந்த இடத்துல நிக்கறீங்கன்னு ஒரு அடையாளம் சொல்லுங்க.. நான் புதுசா ஒண்ணு போடறேன். பத்து அல்லது பதினைந்து நிமிஷத்துல வந்துடும்”

குமாரின் தொலைபேசி ஒலித்தது. எடுத்தான். ஸ்விக்கி!
“சார்… என் எதிர்ல ஒரு அம்மா நிக்கறாங்க… பச்சை புடவை கட்டி இருக்காங்க.. அவங்களான்னு கேளுங்க…”

“அடப்பாவி.. இன்னுமா இங்க இருக்கீங்க?”

“அந்த அம்மாவுக்கு 72 வயசு, கால் சரி இல்லன்னீங்க.. காலைலேருந்து ஒண்ணும் சாப்பிடலை, பசிங்கறீங்க.. எப்படி சார் போறது? மனசு வரமாட்டேங்குது.. கஷ்டமா இருக்கு. எனக்கும் நேரம் ஆவுது.. போகவும் முடியல, இருக்கவும் முடியல.. அவஸ்தையா இருக்கு.. இப்பவாவது முடிஞ்சா நிம்மதி”

பேசிக்கொண்டே ஸ்விக்கிகாரன் இல்லை, ஸ்விக்கிக்காரர் அந்தப் பெண்ணிடம் நெருங்கி இருக்க வேண்டும். அத்தையின் ஃபோனிலும் அவன் இல்லை, அவர் குரல் கேட்டது. “நீங்க வித்யாங்களா?”  அத்தையின் ‘ஆமாம்’ என்னும் குரலும் கேட்டது.

குமார் பேச்சிழந்து நெகிழ்ந்து போனான்.

ஸ்விக்கியில் டெலிவரி ஆள் பெயர் என்ன பார்த்தோம் என்று சட்டென்று தேடிப்பார்த்தான்.

“ரொம்பத் தேங்க்ஸ் மாரி.. ரொம்பத் தேங்க்ஸ். நீங்க இவ்வளவு நேரம் இருப்பீங்கன்னு எதிர்பார்க்கலை. அப்பவே போயிருப்பீங்கன்னு நெனச்சேன். தப்பா நெனச்சுக்காதீங்க.. உங்க ஜி பே நம்பர் சொல்லுங்க..”

“அதெல்லாம் வேணாம்ங்க.. செஞ்சா நல்லவன், இல்லன்னா கெட்டவனா.. நானும் போயிருப்பேன். ஏதோ மனசு கேட்கலை.. இனிமேதான் மத்தவங்களை பார்க்கணும். அவங்கள்லாம் வீட்டு அட்ரஸ்தான்.. இவ்வளவு கஷ்டத்துல இருக்க மாட்டாங்க..”

ஃபோன் கட் ஆனது.

அங்கு அத்தை, கையிலிருந்து ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினாள். அவன் லட்சியம் செய்யாமல் கிளம்பிச் செல்ல, அத்தை சொன்ன “நல்லாயிருக்கணும் தம்பி” அவன் காதில் கூட விழுந்திருக்காது.

42 கருத்துகள்:

  1. அபாரம்! சமீபத்தில் படித்த கதைகளில் ஆகச்சிறந்தது.
    //அதெல்லாம் வேணாம்ங்க.. செஞ்சா நல்லவன், இல்லன்னா கெட்டவனா..// this is where it stands out!! Bravo.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க TVM..  நன்றி...   ஆனாலும் பாருங்க..   பரிசு பெற்ற பதினைந்து பேர் லிஸ்ட்ல இது இல்லை!!! 

      நீக்கு
    2. பதிப்பாசிரியர் அளவுகோல் அப்படி! அசோகமித்ரனே எழுதியிருந்தால் கூட (ஆசிரியர் பெயர் மாற்றியிருந்தால்) பரிசு வாங்காமல் போயிருக்கக்கூடும் :-) சார்லி சாப்ளின் போலத்தோற்றமளிப்பவர்களுக்கான போட்டியில் உண்மை சார்லியே தோற்றுப்போனதாகவும் படித்திருக்கிறோம்! Art and literature aren't exact science, anyway.

      நீக்கு
    3. ஹா.. ஹா... ஹா... இதுபோல ஒரு மாணவர் விழாவில் கண்ணதாசன் கவிதை!

      நீக்கு
    4. ஆமாம்! இந்தக்கூத்தும் நீங்கள் சொன்னவுடன் நினைவுக்கு வருகிறது; கவிதை மாறாட்டம் ! Brand value , வாத்யாரே!

      நீக்கு
  2. பதில்கள்
    1. ஆம்.  உண்மையா வேலை செய்யறவங்க எல்லோருக்கும் இருப்பது.

      நீக்கு
  3. நல்லதொரு சிறுகதை..... பாராட்டுகள்..... புத்தகத்தில் இடம் பெற்றதற்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  4. கீதாம்மா வீட்டில் திரு ரவி சங்கர் அவர்களைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன் ஆறு மாதம் முன்னர்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? நல்லா பேசினார். பழகுவதற்கு எளிமையானவர், இனிமையானவர்.

      நீக்கு
  5. மிக வித்தியாசமான தீம், கதைக் களம்.

    அனைவரின் அவஸ்தைகளையும் சிறுகதையில் கொண்டுவந்துவிட்டீர்கள். மிக அருமை. பாராட்டுகள்.

    கொடுத்தால் நல்லவன், இல்லாவிட்டால் கெட்டவன். ஒருவனை ஜட்ஜ் பண்ணுவதும் நம்மைப் பொறுத்து என்று ஆகிவிட்டதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...  அன்றாட வாழ்வில் திடீரென இப்படி சில "மனிதரை" சந்திக்கும்போது மனதில் சில்லென்று ஒரு நம்பிக்கைப் பூ பூக்கும்!

      நீக்கு
  6. பதில்கள்
    1. முருகா முருகா...  வாங்க செல்வாண்ணா ..  வணக்கம்.

      நீக்கு
  7. ஸ்ரீராம், இந்த அருமையான கதை முதல் லிஸ்டிற்குள் ஏன் வரவில்லை என்று எனக்கு ஆச்சரியம். ஏனென்றால் நான் அங்கு வெளியான கதைகளை வாசித்தேன்!

    ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. பக்குவப்பட்ட எழுத்து லாகவம்.

    பாராட்டுகள், ஸ்ரீராம். புத்தகத்தில் வந்ததற்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...  நன்றி பாராட்டுக்கு.  நம் கண்களுக்கு நன்றாய் தெரியும் கதை, நீதிபதிகளுக்கும் அப்பீலிங் ஆக இருக்கணும் இல்லையா?!!

      நீக்கு
    2. // எழுத்து லாகவம்.//

      லாகவமா லாவகமா?!!

      நீக்கு
    3. லாவகம்.....ஹீஹிஹீஹி....

      தட்டச்சும் போது இப்படி மாறிவிடுகிறதே!!!

      கீதா

      நீக்கு
    4. நீங்கள் சொல்வது சரிதான்....அந்த அப்பீலிங் பத்தி....ஆனால் இப்படிப் பாருங்கள்.....ஒவ்வொரு கதையையும் வாசிக்கும் போது, பல வித கோணங்களில் ஆராய வேண்டும் இல்லையா...கரு, எழுதிய விதம், நடை, எழுத்தின் பக்குவம் என்று? என்னவோ போங்க...எனக்கு இது புரிவதில்லை.

      என் நட்பு ஸ்ரீராம் என்பதால் நான் வக்காலத்து வாங்கவில்லை.

      கீதா

      நீக்கு
    5. கீதாஜீ,
      First thought is God's thought! லாகவம் என்பதே சரி. சமஸ்க்ரிதத்தில் லகு என்றால் எளியது (easy -as in- light weight ). அவ்ளவ் ஈஸியா, அனாயாசமா, அசால்ட்டா, சிரமப்படாம - என்பதைக்குறிக்க லாகவம்.

      இதன் எதிர்ப்பதம் குரு (என்றால் heavy weight ). இரண்டையும் சேர்த்து: லாகவமா எழுதிட்டீங்க குரு :-)

      நீக்கு
    6. நன்றி திருவாழிமார்பன். இதன் அர்த்தமும் தெரியும்....வீட்டில் லகுவாக என்பது ரொம்பவே பயன்படுத்தும் சொல். எங்கள் வீட்டில் லாகவம்னு சொல்லிச் சொல்லியே எனக்கு அது மனதில் பதிந்துவிட்டது. ஆனால் தமிழில் லாவகம் அப்படித்தான் சொல்லணும் என்று முன்பு யாரோ ஒருவர் சொல்லிட அது மனதில் ஏறினாலும் அடிக்கும் போது லாகவம் என்றே வந்துவிடும்.

      விளக்கியதற்கு நன்றி. இனி லாகவம்னே சொல்லிட்டா போச்சு குழப்பம் இல்லாமல்!!

      கீதா

      நீக்கு
    7. ஜீ! வேண்டாமே மீ ரொம்பச் சின்னப் பொண்ணு கேட்டேளா!!!

      கீதா

      நீக்கு
    8. அப்படியே ஆகட்டும்; ஆமென் :-)

      நீக்கு
    9. // என் நட்பு ஸ்ரீராம் என்பதால் நான் வக்காலத்து வாங்கவில்லை. //

      அது தானா வந்துடும் கீதா!

      நீக்கு
    10. // சமஸ்க்ரிதத்தில் லகு என்றால் எளியது //

      அப்படி சொல்வார்கள்.  ஆனால்  லாவகமாக என்பதுதான் சரி என்றும் சில இடங்களில் படித்திருக்கிறேன் வாத்யார்!

      நீக்கு
    11. ஶ்ரீநிவாசன் சார்.. ஒரு நல்ல விஷயத்தை எடுத்துக்கொண்டதற்குப் பாராட்டுகள். லாகவம் என்பது சரி. லாவகம் என்பது தவறு. லாகவம் தமிழ் சொல் அல்ல. ல எழுத்தில் தமிழ்ச் சொல் தொடங்காது. நாம் தமிழ்ப்படுத்துகிறோம் என நினைத்து இ சேர்த்து இலாகவம் என எழுதி, தமிழில் எழுதிவிட்டோம் என நினைக்கிறோம். இதற்கான தமிழ்ச்சொல் வாகு. இடம் நமக்கு வாகாயிருக்கைமா, இந்தப் பெண் வாகா? (தோதுப்படுமா வும் தமிழல்ல)

      நீக்கு
  8. இதை அப்போதே உங்க கிட்ட சொன்னேன் என்று நினைவு.

    மற்ற கதைகள் நன்றாக இருந்திட, நம் கதை முன்னால் வந்து (ஏதோ ஒரு காரணத்திற்காக!!!!.....), மற்ற நல்ல கதைகள் பின் தள்ளப்பட்டாலும் எனக்கு மனம் ரொம்ப குறுகுறுக்கும். பரிசை ஏற்க மனம் ஒப்பாது. நம் கதை அதற்குத் தகுதியானதா அதாவது மற்ற கதைகளோடு போட்டியிடும் போது என்ற எண்ணம் வந்து கொண்டே இருக்கும். சமீபத்தில் எனக்கு, என் எழுத்து, பரிசு என்று வந்த போது இந்த எண்ணம் வந்து கொண்டே இருக்கிறது.

    அதனால்தான், உங்கள் கதையும் மற்ற கதைகளும் அங்கு வந்திருந்த போது, நான் வாசித்ததால் எழுந்த எண்ணம், உங்கள் கதைக்குக் கிடைக்கவில்லையே என்ற எண்ணம் ரொம்பவே தோன்றியது ஸ்ரீராம். வருத்தமாகவும் இருந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அப்படி தோன்றவில்லை. எனினும் இதை இப்படியே விட்டு விடுவோம் கீதா.

      நீக்கு
    2. ஶ்ரீராம்... கதை மிக அருமை, தீம் சூப்பர், முடிவும் நன்று.இருந்தாலும் கதையின்ஒரு சில பத்திகள் வரை என்ன சொல்ல வருகிறது எனத் தெரியலை, ஆரம்பமும் எனக்கு சரியானதாத் தோணலை. இருந்தாலும் கதைக்களன் வித்தியாசமானது. எளிய மனிதர்களுக்குள்ளும் மாரல் ரெஸ்பான்சிபிலிட்டி, இரக்கம் உண்டு என்பதை நல்லா கொண்டுவந்திருக்கீங்க. நாம, உணவைத் திறந்து பசியில் சாப்பிட்ட டிரைவர்கள் பற்றிய காணொளிதான் பார்த்திருப்போம். நல்லதைச் சொன்னதால் கதை மிளிர்கிறது. ஒரு சில அனுபவங்கள் சம்பவத்தைக் கதையாக்கிவிடுகிறது அல்லவா?

      நீக்கு
  9. இது மாதிரி வயசானவங்க லோல் படற கதை
    எல்லாம் மனதுக்கு இதமளிப்பது இல்லை..

    ஆனாலும் இந்தக் கதை வித்தியாசம் - ஸ்ரீராம் கை வண்ணத்தில்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடைமுறையில் இருப்பதுதானே செல்வாண்ணா...  நன்றி.  எல்லோரும் நல்லவரே..  - அவரவருக்கு. 

      எல்லோருக்கும் நல்லவர் என்பது சமயங்களையும் சந்தர்ப்பங்களையும் மனோ தர்மத்தையும் பொறுத்தது!

      நீக்கு
  10. எங்கே அந்த டைரக்டரைப் போல
    சாப்பாடு வாங்கி வருவதற்குள்
    மூதாட்டியை போட்டுத் தள்ளி விடுவீர்களோ
    என்று சந்தேகம் வந்தது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... ஆனால் டைரக்டர்? ஒதுக்கும், பிதுக்கும் இயக்குநரா?

      நீக்கு
  11. படங்களோடு கொடுத்திருப்பது நல்லாருக்கு ஸ்ரீராம், முக்கிய நபர்களை, அசோகமித்திரன் அவர்களின் மகனை இங்கு அறிமுகப்படுத்தியதும் சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. அதெல்லாம் வேணாம்ங்க.. செஞ்சா நல்லவன், இல்லன்னா கெட்டவனா//

    இந்த வரி.....ரொம்ப யதார்த்தம்.

    நேற்று கூட மகனிடம் பேசிக் கொண்டிருந்த போது வீட்டு நிகழ்வுகள் குறிப்பாக அவனைப் பற்றிச் சிலர் சொல்வது பற்றி அவனிடம் சொல்லாமல் ஆனால் பொதுவாக இதைச் சொல்லிக் கொண்டிருந்தேன். செஞ்சா நல்லவங்கன்னு சொல்லிடும் சமூகம். செய்யலைனா ஏன்? எதிராளியின் சூழல் என்னவோ என்றெல்லாம் யோசிக்காமல் சமூகம் சொல்லிவிடும் வார்த்தை கெட்டவன், இல்லைனா திமிர் பிடிச்சவன், அவன் அப்படித்தான் கண்டுக்க மாட்டான் என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாமும் அந்த நிலையில் நின்று யோசிப்பதனால்தானே இந்த வரி வருகிறது!!!  இல்லையா?

      நீக்கு
  13. புதிய முன் இணைப்பு நெகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  14. சுவிக்கி ஊபர் மாதிரியான நடைமுறைகளில்
    நான் ஈடுபட்டதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி செல்வாண்ணா..  நல்ல விஷயம்.  ஆனால் எல்லோராலும் இப்படி இருக்க முடியாதேண்ணா...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!