19.3.26

பூந்தோட்டமே சொந்தம் என்றால் நான் போவது எங்கே

 

 திடீரென்று பழைய வீட்டின் அருகே இருந்தவர் போனில் அழைத்து 'உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது இது உங்கள் வீட்டுப்பெயரா?' என்று மாமியார் பெயர் குறித்து கேட்க, 'ஆமாம்' என்று சொல்லி, அதை இங்கு அனுப்பச்சொல்லி, அது வந்ததும் படித்துப் பார்த்தால்  மாமியாரின் குடும்ப ஓய்வூதியம் தடைப்பட்டிருக்கிறது என்பதை சொன்ன கடிதத்தில் 'காரணம் நீங்கள் லைவ் சர்டிபிகேட் கொடுக்காததே' என்கிற அந்த வாசகத்தைப் படித்ததும்தான் நான்கைந்து மாதங்களாக அவருக்கு வரவேண்டிய ஓய்வூதியம் வரவேயில்லை என்பதும் கவனத்துக்கு வர,  'கடந்த ஜூன் மாதம் தபால் அலுவலகம் மூலமாக லைவ் செய்தோமே என்னாச்சு' என்று கேள்வியும் எழ, நண்பர்களிடம் விவரம் விசாரித்து, மறுபடி அதே மாதிரி தபால் அலுவலகம் மூலம் (வீட்டுக்கு வரவழைத்துதான்) லைவ் செய்யலாமா என்கிற எங்கள் யோசனையும் நிராகரிக்கப்பட்டதில், சரி நேரில் சென்று வந்துவிடுவதே உத்தமம் என்கிற எண்ணம் ஏன் அவ்வளவு தயக்கத்துக்குரியதாக இருந்தது என்றால் மாமியாரின் வயது 85 ஐத் தாண்டியதுதான் என்பதால், யோசித்தாலும் வேறு வழியில்லையே என்று சென்ற வாரம் வெள்ளிக்கிழமை அன்று செல்ல முடிவெடுத்தபோதே இன்னொரு வேலையும் காத்திருப்பதும் நினைவுக்கு வர, அதையும் முடித்து விடலாம் என்று முடிவெடுத்து, அதனோடு கூட இன்னொரு உறவினர் வீட்டுக்கு சென்று வர வேண்டிய கட்டாயம் இருந்ததையும் நினைவில் கொண்டு அங்கும் சென்று வரவும் திட்டமிட்டு, டிரைவருக்குச் சொல்லி விட்ட பிறகு கோர்ட் விஷயம் ஒன்றும் செல்ல வேண்டிய வேலை இருப்பது நினைவில் வந்தததென்றால் அது என்ன என்றால், நான் ஒரு பில்டரிடம் முன்பு ஏமாந்தேன் என்று சொன்னேனே, அவன் IP கொடுத்து விட்டான் என்று எனக்கு அலைபேசி கடுப்பேற்றி, 30 நாட்களுக்குள் கோர்ட்டுக்கு சென்றுவரச் சொன்ன காரணத்தால், அதையும் யோசிக்க வைத்து, அதையும் திட்டத்தில் சேர்க்க வைத்ததால், ஒவ்வொரு வேலையாக சீக்கிரம் முடிய வேண்டுமே என்று டிரைவர் வந்ததும் காலை ஒன்பதரைக்கு கிளம்பியபோது இன்னொரு வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டும் என்கிற கட்டாயத்தை உண்டு பண்ணிய ஒரு வேலை என் செல்லுக்கு வந்த எஸ் எம் எஸ்ஸில் , என் வங்கி கணக்கு அளவு மீறிவிட்ட காரணத்தால் நிறுத்தப்பட்டிருப்பதாகவும், சரி செய்ய உடனே என்னை வங்கிக்கு நேரில் வரச் சொல்லியும் வந்த அந்த எஸ் எம் எஸ் ஒரு புதிய வேலையையும் சேர்த்து விட்டதால், ஓய்வூதிய வேலை எவ்வளவுநேரம் பிடிக்குமோ என்கிற எண்ணத்தோடேயே உள்ளே போனால் நாங்கள் நினைத்ததற்கு மாறாக சீக்கிரமே அந்தத் வேலை முடிந்து விட்டதற்கு காரணம் கார்ஷெட் போன்ற இடத்தில் நான்கைந்துபேர் செல்லும் கையுமாக 'லைவ்' வேலையினை கவனித்துக் கொண்டிருந்ததுதான் என்பதும், அவர்களிடம் பேசியபோது இனி தபால் நிலையங்களில் 'லைவ்' கொடுக்க முடியாது என்பதையும் தெரிந்து கொள்ளவும் முடிந்ததால் செக்ஷனில் போய் லைவ் ஆனதைச் சொல்லி அரியர்ஸை காலாகாலத்தில் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்து விட்டு வெளிய வந்து கோர்ட்டை கேன்சல் செய்து விடலாமா, அதற்குத் தேவையான ஆவணம் எதுவும் கையில் இல்லையே என்று யோசித்துவிட்டு, சரி என்னதான் சொல்கிறார்கள், ஒரு நடைமுறையாவது தெரியுமே என்று முடிவு செய்து கோர்ட்டை அடைந்து, அவர்கள் மூன்று இடங்களில் உடம்பெல்லாம் கிசுகிசு மூட்டி சோதித்து, பாதி தூரம் சென்றபின் 'Pass எங்கே?'' என்று ஒருவர் கேட்டதில் ஒன்றும் புரியாமல் விழித்து அவரிடமே விளக்கம் பெற்று எதிரே இன்னொரு இடத்துக்குப்போய் நம் விவரங்கள் சொல்லி கம்பியூட்டரில் செலுத்தி ஒப்புகை சீட்டு பெற்று மறுபடியும் இந்த இடம் வந்து மறுபடியும் உடம்பெல்லாம் தடவப்பட்டு முதல் மாடியை அடைந்து, ஃபேமிலி கோர்ட்டில் IP செக்ஷன் இருக்கும் இடத்துக்கு கொஞ்ச நேரம் அலைந்து ஒருவழியாய் அங்கிருக்கும் ஒரு பணியாளரின் உதவியாலேயே இடமறிந்து உள்ளே சென்று முகவரி மாற்றத்துக்கு எழுதிக் கொடுத்து விட்டு, அவர்கள் 'அப்புறம் ஃபில் அப் பண்ணிக் குடுங்க' என்று சொன்னபடி கிளெயிம் பார்மையும் வாங்கி வரும் வழியில் நேரமாகி விட்டதால் மவுண்ட்ரோட் கீதம் ஹோட்டலில் லன்ச் முடித்து,  அங்கிருந்து உறவினர் வீடு சென்று அளவளாவி, காபி குடித்து கிளம்பி, வரும் வழியில் நேரமாகி விட்டாலும் எதற்கும் இருக்கட்டுமே என்று நுழைந்து,  என் வங்கிக்கும் சென்று அவர்களும் ஒத்துழைக்க, அவர்கள் சொன்ன ஃபார்மாலிட்டிஸ் அவ்வளவு முக்கியமில்லை என்று அறிந்தாலும், வந்ததற்கு அதையும் முடித்து வீடு திரும்பும்போது மணி மாலை ஆறு!

===================================================================================== 



13 ஆண்டுகளாக கோமாவில் உள்ள நிலையில், அவருக்கு பொருத்தப்பட்ட உயிர் காக்கும் கருவிகளை அகற்றி, கருணை கொலைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதுபோன்ற அனுமதி அளிக்கப்படுவது, நம் நாட்டில் இதுவே முதல்முறை
.

நீதிபதி கண்ணீர் : சுவாசிப்பதற்கும், உணவு அளிப்பதற்குமான குழாய் அவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. சுயநினைவு இல்லாமல் உள்ளார். டாக்டர்கள் கைவிட்ட நிலையில், ஹரீஷ் ராணாவுக்கான உயிர் காக்கும் கருவிகளை அகற்ற அனுமதி கோரி அவரது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை, நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அப்போது நீதிபதி பர்திவாலா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டார்.
"இது வெறும் சட்டம் சார்ந்த முடிவு அல்ல; அன்பு, மருத்துவம் மற்றும் அறிவியல் சார்ந்த முடிவு. உங்கள் மகனை கைவிடவில்லை. மாறாக அவர் கண்ணியத்துடன் இறக்க நீங்கள் அனுமதி கேட்டுள்ளீர்கள்," என்று ராணாவின் பெற்றோரை நோக்கி குறிப்பிட்டார்.  
கருணை கொலை தொடர்பாக, 2018ல் வழங்கப்பட்ட தீர்ப்பில், 'வென்டிலேட்டர் போன்ற உயிர் காக்கும் கருவிகளை அகற்ற அனுமதி இருந்தது. ஆனால், குழாய் மூலம் உணவு மற்றும் நீர் வழங்குவது சிகிச்சையா அல்லது அடிப்படை உரிமையா என்பதில் தெளிவு இல்லாமல் இருந்தது.  
தற்போது குழாய் வழி உணவும், மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியே என்றும் டாக்டர்கள் பரிந்துரைத்ததால், 'அதை நிறுத்திக் கொள்ளலாம்' என, உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின் கண்கலங்க வைக்கும் கடைசி காட்சிகளை விவரிக்கும் போஸ்ட்.

https://www.facebook.com/share/p/1EcbesVrDm/

===================================================================================

விஜயகாந்த் தொடர்ச்சியாக எஸ்.ஏ.சந்திரசேகர் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது சந்திரசேகரின் உதவியாளராக இருந்த செந்தில்நாதனை விஜயகாந்திற்கு மிகவும் பிடிக்கும். அவரது பணிவு, கடும் உழைப்பு அவருக்கு பிடித்து விட்டது. அவருக்கு ஒரு படம் நடித்து கொடுத்து அவரை இயக்குனராக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

ஒரு நாள் செந்தில்நாதனை அழைத்து "நான் ஒரு படம் நடித்து தருகிறேன். ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு நல்ல கதை எழுதி கொண்டு வா" என்று சொல்லி அவருக்கு ஒரு ஒட்டலில் அறையும் புக் செய்து கொடுத்தார். சில வாரங்களில் செந்தில்நாதன் கதையோடு வந்தார். அந்த கதையும் விஜயகாந்திற்கு பிடித்து விட்டது. செந்தில்நாதனுக்கு ஒரு தொகை முன்பணமாகவும் கொடுக்கப்பட்டது.

அப்போது விஜயகாந்த் 'காலையும் நீயே மாலையும் நீயே படத்தில் நடித்து வந்தார். செந்தில்நாதனுக்கு முன்பணம் கொடுத்த அன்று படப்பிடிப்பில விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் சகுணம் சரியில்லை என்று கூறி இந்த படத்தை டிராப் பண்ணிடலாம் என்று ராவுத்தர் கூறினார். அதற்கு விஜகாந்த் மறுத்து விட்டார்.

படப்பிடிப்புகள் நடந்தபோது படத்தில் இளம் ஜோடிகளாக நடித்த ஆனந்த், வாண விஸ்வநாத் காட்சிகள் படமானபோது விபத்து ஏற்பட்டு ஆனந்த் படுகாயம் அடைந்தார். இதனால் 2 மாதங்கள் படம் தடைபட்டது. இருவழியாக படம் முடிந்து இளையராஜாவிடம் பின்னணி இசைக்காக ஒப்படைக்கப்பட்டது. படத்தை பார்த் இளையராஜா 'இந்த படத்திற்கு ரீரிக்கார்டிங் பண்ணுவதே வேஸ்ட்' என்று சொன்னதாக ஒரு தகவல் பரவ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பணத்தை திருப்பி கேட்க தொடங்கினார்கள். இதனால் கோபம் அடைந்த விஜயகாந்த் இளையராஜாவை சந்தித்து படம் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும் நீங்கள் இசை அமைத்து கொடுங்கள் என்று கூறிவிட்டார்.

பின்னணி இசை கோர்ப்பு முடிந்ததும் படத்தின் பிரிவியூ ஷோ போடப்பட்டது. மிகுந்த மன உளைச்சலில் இருந்த விஜயகாந்த் அந்த ஷோவிற்கு போகவில்லை. காரணம் படத்தை பார்க்க அவர் விரும்பவில்லை. ஷோ முடிந்ததும் விஜயகாந்திற்கு போன் கால்கள் பறந்தது. சார் இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும், நீங்க பிரமாதமாக நடிச்சிருக்கீங்க என்றது போன்கால்கள்.
அதன்படியே படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வெள்ளி விழா கொண்டாடியது. அந்த படம் 'பூந்தோட்ட காவல்காரன்'.

பிளாஷ்பேக் - தினமலர் 

=====================================================================================

ஒருமுறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு...   பாடல் கேட்டிருக்கிறீர்களா?  1975 ல் வெளியான ஒரு படம் மயங்குகிறாள் ஒரு மாது.  
விஜயபாஸ்கர் இசையில் 'சம்சாரம் என்பது வீணை',  'வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம்' போன்ற நல்ல பாடல்களைக் கொண்ட படம்.  எஸ் பி முத்துராமன் இயக்கத்தில், முத்துராமன், சுஜாதா, தேங்காய், விஜயகுமார் நடித்திருக்கும் படம்.

திருமணத்துக்கு முன் விஜயகுமாரை காதலித்து, உடலுறவு கொண்டு கர்ப்பமாகி, அதைக் கலைக்கும் சுஜாதா பின்னர் முத்துராமனுக்கு மனைவியாகிறார்.  விஜயகுமார்-சுஜாதா தப்பு செய்த போட்டோக்களை கள்ளத்தனமாக எடுத்து தேங்காய் சுஜாதாவை பிளாக்மெயில் செய்கிறார்.  அவர் மனைவி சுஜாதாவின் கல்லூரித்தோழி.  பிளாக்மெயில் விஷயம் தோழிக்கு தெரியாது.  சங்கடம் போதாது என்று விஜயகுமாரும் அதே வீட்டுக்கு  டிரைவராக வந்து சேர்கிறார்.  தேங்காய் பணம் கேட்கும்போதெல்லாம் சுஜாதா முத்துராமனுக்கு தெரியாமல் (என்று நினைத்து)  பணம் எடுத்துக் கொடுத்துத் தவிக்கிறார்.  ஒருபுறம் விஜயகுமார், ஒருபெயரம் தேங்காய், நடுவில் சுஜாதா, அவர்களுக்கு பொதுவில் முத்துராமன்.  இந்தக் காட்சி அமைப்பில் வாணி ஜெயராம் குரலில் இந்தப் பாடல்.  பாடல் கண்ணதாசன்.

ஒரு புறம் வேடன் மறுபுறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே
அழகிய கலைமான் அழகிய கலைமான்

ஒரு புறம் வேடன் மறுபுறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே
அழகிய கலைமான் அழகிய கலைமான்

ரகசிய இதயம் பலவகை துயரம்
அவனருள் கிடைத்தால் துயரங்கள் விலகும்

ஒரு புறம் வேடன் மறுபுறம் நாகம்

உண்மையைச் சொன்னால் சன்னிதி திறக்கும்
ஒவ்வொரு மானுக்கும் நிம்மதி கிடைக்கும்

யாரறிவாரோ ஊமையின் கனவு
யாரறிவாரோ ஊமையின் கனவு
மானுக்கும் உண்டு ஒரு வகை மனது

ஒரு புறம் வேடன் மறுபுறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே
அழகிய கலைமான் அழகிய கலைமான்

பாட நினைத்தது பைரவி ராகம்
பாடி முடித்தது யாவையும் சோகம்

மானும் நினைத்தது மங்கலம் பாட
மானும் நினைத்தது மங்கலம் பாட
மயங்கி விழுந்தது சங்கமமாக

ஒரு புறம் வேடன் மறுபுறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே
அழகிய கலைமான் அழகிய கலைமான்

பெண்ணாய் பிறந்தால் பேதமை உள்ளம்
பேதமையாலே விளைந்தது கள்ளம்

கண்ணா உனது கருணையை காட்டு
கண்ணா உனது கருணையை காட்டு
காரிகை வாழ்வினில் நிம்மதியூட்டு

ஒரு புறம் வேடன் மறுபுறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே
அழகிய கலைமான் அழகிய கலைமான்

ரகசிய இதயம் பலவகை துயரம்
அவனருள் கிடைத்தால் துயரங்கள் விலகும்

ஒரு புறம் வேடன் மறுபுறம் நாகம் 
 


=============================================================================================

ஒரு அறிமுகம்....

18-ஆம் நூற்றாண்டு தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டம். பலம் வாய்ந்த மொகலாய, விஜயநகர அரசுகள் சிதறுண்டு மராட்டியர்கள், ஹைதராபாத் நிஜாம், ஆற்காடு நவாப், திருவிதாங்கூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை தனி யரசுகள், எழுபத்தியிரண்டு பாளையங்கள் எனத் தென்னிந்தியா ஒரே நேரத்தில் பல சுதந்திர அரசுகளைக் கொண்டிருந்தது. இவை போதாதென்று தனி நபர்கள் தலைமையில் இயங்கிய கூலிப் படைகள். இந்தத் தனியரசுகள் ஒன்றுக்கொன்று போரிட்டுக் கொண்டு தென்னகத்தைப் பெரும் கலவரப் பூமியாக மாற்றியிருந்தன. கலைத்துப் போட்ட சீட்டுக்கட்டுகளைப்போல், நம் அரசர்கள் இருப்பதை அறிந்த ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துக்கீசியம், லத்தீன் பேசும் ஐரோப்பிய வணிகர்கள், வழிவழியாக வந்த அரசுரிமை பெற்றவர்களை ஓரம் தள்ளிவிட்டு, இந்தியாவின் ஆட்சியாளர்களாக மாற முயற்சி செய்த நேரமது.

அக்காலகட்டத்தில் பெரும்பாலான அரசுகளை வழிநடத்தியவர்கள் அதன் அமைச்சர்களும், தளபதிகளும்தான். துபாஷ்கள் என்ற புதிய அதிகாரவர்க்கம் ஒன்று தங்களது மொழிபெயர்ப்புத் திறமையால் பலம் பெற்றனர். துபாஷ்கள் இன்றி ஐரோப்பியர்களின் எந்த நடவடிக்கையும் இருக்காது.

அமைச்சர்களையும், துபாஷ்களையும் அனுசரித்தே ஆட்சி நடத்த வேண்டிய சூழலில் உள்நாட்டு அரசர்களும், ஐரோப்பியர்களும் இருந்தனர்.

தென்னிந்தியாவின் அமைதியையும், சுதந்திர அரசர்களுக்கிடையில் இருந்த ஒற்றுமையின்மையையும் துபாஷ்கள்மூலம் தெரிந்துகொண்டு ஐரோப்பிய அரசர்கள் அடுத்த நகர்வுகளைத் தீர்மானித்தனர். அந்நிய மொழி தெரிந்த துபாஷ்கள், நம் ஊர் அரசர்களிடம் நேரடியாகப் பேச வழி யில்லாததால் அமைச்சர்கள், தளபதிகள் மூலமாகக் காய் நகர்த்தினர்.

விஜய நகர அரசனைவிட அவனது தளபதி விஸ்வநாத நாயக்கர், தென்னிந்தியாவின் தலைவிதியை நிர்ணயிப்பவராக இருந்தார். விஸ்வநாத நாயக்கரை வழி நடத்தியது அரியநாத முதலியார் என்னும் அமைச்சர். ஆற்காடு நவாப்பை வழி நடத்தியது அவரது மரு மகன் சந்தா சாகிப். ராமநாதபுரம் அரசர்களை வயிரவன் சேர்வை, வெள்ளையன் சேர்வை, பிச்சைப் பிள்ளை, முத்திருளப்பப் பிள்ளை போன்ற அமைச்சர்கள் வழிநடத்தினர். புதுக்கோட்டை அரசரைத் தஞ்சையில் அமர்ந்துகொண்டு பிளாக்பர்ன் என்ற ஆங்கிலேயத் தளபதி வழிநடத்தினான்.

தஞ்சாவூர் மராட்டிய அரசனைவிட அவனது தளபதிகள் முராரி ராவும், மானோஜியும் பலம் வாய்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். மைசூர் உடையார் அரசரைவிட அமைச்சர் பூர்ணய்யாவின் வார்த்தைக்கு மதிப்பு அதிகம். அமைச்சர் சிவசுப்ரமணிய பிள்ளை யின் வார்த்தைகளைக் கட்டபொம்மன் மீறியதில்லை.

வாணிகம் செய்ய இந்தியா வந்த வெளிநாட்டவர்கள் இங்கிருந்த சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொண்டனர். கிடைத்த மிளகு, ஏலம், லவங்கம், தென்னிந்தியாவில் பனை வெல்லம், பருத்திக்கு ஐரோப்பியாவில் மிகுந்த தேவையிருந்தது. இங்கு வாழ்ந்த அரசர்களின் வாழ்க்கைமுறை, படோடபம், செல்வம் அவர்கள் நாட்டு அரசர்களின் வாழ்க்கைத்தரத்தோடு ஒப்பிடுகையில் மிக உயரியதாக இருந்தது. ஐரோப்பிய மத குருக்கள், தங்கள் பங்கிற்கு, இங்குள்ள சூழலை விரிவாகத் தங்கள் தலைமையகங்களுக்குக் கடிதமாக எழுதினர். வெளிநாட்டிலிருந்து இரண்டு மாதக் கடல் பயணத்தில் இந்தியாவிற்கு வந்து சேரக் கப்பல் போக்குவரத்தும், கடிதப் போக்குவரத்தும், தென்னிந்தியாவின் கட்டுப்பாடற்ற சுதந்திரத்திற்கு முடிவுகட்டத் தலைப்பட்டன.

தென்னிந்தியாவின் சில சிற்றரசுகள் தங்களது சுதந்திர உணர்வைக் காப்பாற்றிக்கொள்ள இறுதிக் கட்டப் போரைப் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் அறிவித்தன. 1799 ஆம் ஆண்டு மே மாதம் 4-ஆம் தேதி திப்பு சுல்தான் ஸ்ரீரங்கப் பட்டினத்தில் கொல்லப்பட்ட பின்பு அடுத்த 160-ஆவது நாளில் கட்டபொம்மன்  தூக்கிலிடப்பட்டார். துந்தாஜி வாக், மருது பாண்டியர்கள், ஊமைத்துரை, சிவத்தையா, கோபால் நாயக்கர், பொம்மை நாயக்கர் எனப் போராளிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தூக்கிலிடப்பட்டனர். சின்ன மருதுவின் பன்னிரண்டு வயது மகன் துரைசாமியோடு சேர்த்து திண்டுக்கல், வாராப்பூர், கோயம்புத்தூர், நாங்குநேரிப் போராளிகள் எழுபத்தி இரண்டு பேர் மலேசியாவிலுள்ள பினாங்குத் தீவிற்கு நாடு கடத்தப்பட்டனர். சிவகங்கை அரசரும், பெரிய மருது சேர்வைக்காரரின் மருமகனு மான வெங்கம் பெரிய உடையணத் தேவர், சுமத்திரா தீவிலுள்ள பென்கோலனுக்கு போராளிகளின் நாடு கடத்தப்பட்டார். வருடத்திற்கு ஒருவராகப் போராளிகள் கொல்லப்பட்டனர். வீழ்ச்சியினால், மீதம் இருந்த சிற்றரசுகள் தங்களது சுதந்திரத்தை இழந்தன. ஆங்கி லேயர்களுக்கு அடிபணிந்து போயின. கிராமங்கள் பொருளாதாரத்தை இழந்தன.

குழந்தைகளைப் பிணைக் கைதிகளாக மாற்றுவதும், தனக்கு எதிரானவர்களை நாடு கடத்துவதும், பொது இடங்களில் தூக்கிலிடு வதையும், தேடப்படுபவர்களை உயிருடன் பிடித்துக் கொடுத்தால் சன்மானத் தொகையும், அவர்களைப் பிணமாகக் கொண்டுவந்தால், அதில் பாதிப்பணமும் தரும் நடைமுறைகளை ஆங்கிலேயர்கள் தென்னிந்தியாவில் 18-ஆம் நூற்றாண்டில் முதன் முறையாக அறிமுகப்படுத்தினர்.

- 1801 நாவல் - டாக்டர் ,மு. ராஜேந்திரன் இ. ஆ. ப முன்னுரை  -

========================================================================================


வடிவுக்கரசி மிரட்டி இருக்கிறார் என்று சொல்லலாமா?  அங்கே பெரிய விளம்பரங்களுடன் ராதிகாவின் தாய்க்கிழவி வேஷம் பேசப்பட்டுக் கொண்டிருக்க, இங்கே வடிவுக்கரசி விளம்பரமில்லாமல் நூறு வயதுக்கும் மேற்பட்ட கிழவியாக நடித்து பயமுறுத்தி இருக்கிறார்.

நிதானமான நடிப்பு.  பார்வையிலேயே நடிக்கிறார்.

வசனமே கிடையாது.   விபரீதமான கதை அமைப்பு.  நாமொன்று நினைக்க முடிவொன்றாய் இருப்பதும் எதிர்பார்க்கக் கூடியதே..   இரண்டாம் பாகம் வேணுமில்லோ..

========================================================================================

அம்மா மறைந்த உடன் அப்பா 'ஹேமாஞ்சாலி' என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிட்டார்.  அதனோடு கூட,  மறைந்த மனைவியுடன் தொடர்பு கொள்ள நிறைய முயன்றார்.  ஓஜோ போர்ட், ஆவியுலக ரவிச்சந்திரனுக்கு கடிதம், இறந்த மனைவியுடன் பேசியதாகச் சொன்ன ஆர் வி லக்ஷ்மண் புத்தகம்...  இப்படி...

காஞ்சி மடத்துக்கும் சில சந்தேகங்களை எழுதி கேட்டிருந்தார்.  அங்கிருந்து வந்த பதில்..


===========================================================================================

வீட்டிலேயே இருந்திருக்கலாம் 
என்று தோன்றுகிறது 
வீட்டிலிருந்தால் 
ஒரு மாமியார், ஒரு நாத்தனார் 
வெளியில் பலர்.


ஓவியனின் பார்வையில் 
படமாய் உறைந்தேன் 
பேப்பரில்.

புத்தகம் திறந்ததும் 
புத்துயிர் பெறுகிறார்கள் 
கதை மாந்தர்கள்

==============================================================================================



மனிதனின் மறுபக்கம்..
ரஜினியின் வெளிவராத படம்.
பாலச்சந்தருக்கு அந்தச்செய்தி கேட்டதுமே ஒரு மாதிரி ஆகி விட்டது. புது வீடு கட்டி அதில் வைத்திருந்த பாலச்சந்தரின் பெரிய போட்டோவை அதில் கலந்து கொண்ட பாலச்சந்தரை பெருமைப்பட வைத்த அந்த போட்டோவை ரஜினி உடைத்துப்போட்டார் என்பது தான் அது.
'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் அனந்துவோடு சண்டை என்பதும் அவர் காதுகளுக்கு வந்து கொண்டு தான் இருந்தது. நினைத்தாலே இனிக்கும் டப்பிங் பேச வர வேண்டியது. வேறு ஒரு ஷுட்டிங்கிலிருந்த அவர் வரவேயில்லை.
ரஜினிகாந்த் பாலச்சந்தரின் பார்வையில் இப்படிப்பட்ட ஆளேயில்லை. அபூர்வராகங்கள் ரிலீசுக்குப்பின் ஒரு நாள் கே.பியை தேடிவருகிறார் ரஜினி. என்ன விஷயம் என்கிறார் கே.பி. "இல்லை..போன வருடம் இதே நாளில் நீங்கள் எனக்கு பெயர் வைத்தீர்கள்..ஆசிர்வாதம் வாங்க வந்தேன்". கேபிக்கு ஆச்சர்யம். வேறு எந்த புதுமுக நடிகனோ, நடிகையோ இப்படி வந்ததில்லை. அப்படி ஒரு நடிகரா இப்படி அடம் பிடிக்கிறார். எரிந்து விழுகிறார். மதுரையில் நடந்த திரிசூலம் விழாவிற்கு போய் விட்டு வரும் போது தகராறு.
ரஜினியின் சகோதரர் நாகேஸ்வரராவை அழைத்து கேட்கிறார் கே.பி. ரஜினியின் மாற்றம் குறித்துகேட்க அவரோ "பெரியண்ணனை கண் முன்னே வரவேண்டாம்" எனச்சொல்வதாக சொல்கிறார். "நீங்கள் அவர் கூடவே எப்போதும் இருங்கள்.." ஆனால் அவர் அன்றிரவே பெங்களூர் போய்விடுகிறார்.
பாலச்சந்தரை தேடி ஸ்ரீப்ரியா வருகிறார். "ரஜினியை காப்பாற்ற உங்களால் மட்டுமே முடியும்" ஸ்ரீப்ரியாவின் அந்த கோரிக்கையில் இருந்த அக்கறை கே.பிக்கு உறைத்தது. தந்தையாக தான் நிற்க வேண்டிய இடம் இது.
ரஜினியை சந்திக்கிறார் கே.பி. கே.பியின் கைகளை பிடித்துக்கொண்டு அழுகிறார் ரஜினி.
"என்னை ஏன் சார் ரஜினிகாந்த் ஆக்கினீர்கள். புகழின் வெளிச்சத்தை என்னால் தாங்கமுடியவில்லை..." ஒரு குழந்தையின் பரிதவிப்பாக ரஜினியிடம் கண்ட கே.பி நிலைமையை ஆராய்கிறார். ஓய்வில்லாத படப்பிடிப்பு. வரும் படங்களையெல்லாம் ஒத்துக்கொள்வது.
ரஜினியை நேரே டாக்டர் ஆர்.எஸ்.ராஜகோபாலிடம் கொண்டு போகிறார் கே.பி. அவர் பார்த்துவிட்டு "ஓய்வில்லாமல் இருப்பதால் பிபி எகிறி இருக்கிறது. ரெஸ்ட் எடுக்க வேண்டும்"
கே.பியே எல்லா இயக்குனர்களையும் அழைத்து கன்வின்ஸ் செய்கிறார். டாக்டர் செரியனிடம் அட்வைஸ் கேட்கப்படுகிறது. ஓய்வுக்குப்பின் கொஞ்சம் நார்மலாகிறது. பின் நின்று போன படங்களை முடித்துக்கொடுக்கிறார் ரஜினி.
கே.பி ரஜினியை வைத்து கொஞ்சம் எடுத்திருந்த 'மனிதனின் மறுபக்கம்' தேதிக்கு வேண்டி காத்திருக்கிறது. வேறொரு படமும் நிற்க பாலச்சந்தர் கலாகேந்திராவிடம் பேசி தன் படத்தை நிறுத்துகிறார். அந்தப்படத்தில் நடிக்கிறார் ரஜினி. அது தான் தர்மயுத்தம்.
மனிதனின் மறுபக்கத்தில் சினிமா இயக்குனராக ரஜினி, கீதாவுடன் நடிக்க இருந்தார். ஒரு பாடலும் படமாக்கப்பட்டிருந்தது. அதோடு படம் நிறுத்தப்பட்டது.
பாலச்சந்தர் அன்று ஒரு அட்வைஸ் செய்தார்.
"இனி நீ ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டுமே ஒத்துக்கொள்ள வேண்டும்".
இன்று வரை அதை கடைபிடித்ததால் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார். எல்லா மனிதனின் வாழ்விலும் மனிதனின் மறுபக்கம், தர்மயுத்தம் இவையெல்லாம் இருக்கிறது தானே....

 கேபி ரஜினியை வைத்து எடுத்த 'மனிதனின் மறுபக்கம்' அதற்கு எடுத்த ஒரு பாடல் காட்சியை பின்னர் 'யுத்தகாண்டம்' என்ற படத்துக்கு உபயோகித்துக் கொண்டார்களாம்.

'மனிதனின் மறுபக்கம்' படத்தின் தலைப்பை மட்டும்  சத்யஜோதி நிறுவனத்தார் வாங்கி, 'நிறக்கூட்டு' என்ற ஒரு மலையாள த்ரில்லர் படத்தை தமிழில் எடுத்தனர்.  சிவகுமார், ராதா, ஜெயஸ்ரீ நடித்த அந்தப் படத்தை இயக்கியவர் கே. ரெங்கராஜ்.  இளையராஜா இசையில் நான்கு பாடல்களுமே ஹிட்.  அதில் சித்ரா பாடிய வைரமுத்து பாடல் இன்று. 

மனைவியைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட சிவகுமாருக்கு மரணதண்டனை விதிக்கிறது நீதிமன்றம்.  தூக்கு தண்டனைக்கு  முதல்நாள்  சிறையிலிருந்து தப்பும் சிவகுமார் உண்மைக் குற்றவாளியைப் பழி வாங்குகிறார்.  மனைவியின் தங்கை ஜெயஸ்ரீக்கும் உண்மையை எடுத்துச் சொல்கிறார்.

சந்தோம் இன்று சந்தோம்
இந்த பொன்வீணையில் பொங்கும் சங்கீதம்
சந்தோம் இன்று சந்தோம்
இந்த பொன்வீணையில் பொங்கும் சங்கீதம்
உன் வார்த்தை செந் தேனா
நான் மாட்டேன் என்பேனா

சந்தோம் இன்று சந்தோம்
இந்த பொன்வீணையில் பொங்கும் சங்கீதம்

மாலை சூடிடும் முன்னே
இவள் காதல் நாயகி
மாலை கூடினால் கண்ணா
இவள் காவல் நாயகி
சுகமா…..ஹா…..ஹா….உறவை மீட்டுவோம்
சுகம் தீராமல் இரவை நீட்டுவோம்

உன்னை ஒரு பூ கேட்கவே
ஓடிவந்தேன் இங்கே
பூந்தோட்டமே சொந்தம் என்றால்
நான் போவது எங்கே

சந்தோம் இன்று சந்தோம்
இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்

உன்னைக் கேட்கவே வந்தேன்
ஒரு ஆசை வாசகம்
நீயோ என்னிடம் கேட்டாய்
ஒரு காதல் யாசகம்
அதை தாளாமல் மனமோ துள்ளுது
இந்த போராட்டம் சுகமாய் உள்ளது

தெய்வம் வந்து என்னை கண்டு
தேதி ஒன்று கேட்கும்
கட்டி வைத்த நெஞ்சுக்குள்ளே
கெட்டிமேளம் கேட்கும்

சந்தோம் இன்று சந்தோம்
இந்த பொன்வீணையில் பொங்கும் சங்கீதம்
சந்தோம் இன்று சந்தோம்
இந்த பொன்வீணையில் பொங்கும் சங்கீதம்
உன் வார்த்தை செந் தேனா
நான் மாட்டேன் என்பேனா

சந்தோம் இன்று சந்தோம்
இந்த பொன்வீணையில் பொங்கும் சங்கீதம் 

===============================================================================================


ஜோக்ஸ்....



"அப்பா..  அவன் மூக்கு வேடிக்கையா இருக்கு பார்.."

"ச்சீ அசடு..  அப்படி சொல்லக்கூடாது..  அவர் மூக்கு என்று சொல்லணும்"









75 கருத்துகள்:

  1. சாண்டில்யனாக முயன்று முதல் பகுதியில் ஒரு வாக்கியத்தில் உங்கள் ஒரு நாள் அனுபவத்தை அடக்க முயன்றிருக்கிறீர்கள்.

    எப்படியோ அன்றைய வேலைகள் முடிந்ததே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...  முடிந்ததாக கணக்குதான்.  அந்த கோர்ட் சமாச்சாரம் இழுபறிதான்.

      நீக்கு
    2. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

      இப்போது பூரண நலமாகி இருக்கிறீர்களா? கால் முட்டிகளில் வலிகள் எப்படி உள்ளது? மருந்துகள் ஏதேனும் விடாமல் எடுத்துக் கொள்ளுங்கள். தங்களுக்கு நன்கு குணமாக நானும் இறைவனை பிரார்த்திக்கிறேன். யுகாதி வாழ்த்துகள். நன்றி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. நன்றி கமலா ஹரிஹரன் மேடம். இது சரியாக ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் என்று தோன்றுகிறது. இருந்தாலும் மன வலிமையில் நடைப்பயிற்சி, நீச்சல், க்ரியா போன்றவற்றைச் செய்கிறேன். வெளியில் நடக்கும்போது மனதில் பயம், வழுக்குமோ என்று. இதில் இரண்டு நாட்கள் சென்னைப் பயணம்.

      நீக்கு
    4. ஆமாம். இப்படிபட்ட அடிகள் விழுந்தால் பழையபடி சரியாக ஒரு வாரமென்ன, ஒரு மாதமே ஆகும். நானும் இதுபோல் நிறைய அடிகளை வாங்கி அனுபவித்துள்ளேன. எனக்கும் பட்ட அடிகளின் நினைவில் வெளியில் நடக்கவே அஞ்சுகிறேன். ஆனால், இந்த "ஆசைகள்" வலுக்கட்டாயமாக நம்மை இழுத்துச் சென்று மறுபடியும் அடி வாங்கித் தருகின்றன. அப்படிச் செல்லாவிட்டால், வீட்டிலேயே அடிகளை கொடுக்கின்றன. தவிர்க்க இயலவில்லை. உங்கள் மன உறுதிக்கு வாழ்த்துகள். எனினும் கவனமாக இருங்கள். நன்றி.

      நீக்கு
  2. கருணைக்கொலை வருத்த நிகழ்வு. நீதிபதி பர்திவாலாவின் மனிதநேயம் நெகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  அந்த குடும்பத்தினரின் மனநிலை....

      நீக்கு
    2. ஒன்று பணம் செலவழிக்கணும். End result தெரியாமல் செலவழிக்கணும்னா மைக்கேல் ஷூமேக்கர் அளவு பணம் இருக்கணும். கண் முன்னே தெரியும் உயிரின் கஷ்டம். இந்த நிலைக்குப் போகாமல் அதுவாகவே உயிர் பிரிந்திருந்தால் எல்லோருக்கும் மன நிம்மதியாக இருந்திருக்கும்.

      நீக்கு
    3. சட்டென மனம் வருவதில்லை.  சில இடங்களில் சாரிட்டி மருத்துவமனைகள் இருந்திருக்கலாம்.

      நீக்கு
  3. பூந்தோட்டக் காவல்காரன்... எந்தப் படம் வெற்றிபெறும் என்பதைச் சொல்வது கடினம். இளையராஜா தவறா அனுமானித்த இன்னொரு படம் இதுபோல (மு.ம படம் கேள்விப்பட்டிருக்கேன்).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.  கணிப்புகள் தவறுவதுண்டு.

      நீக்கு
  4. 1801 முன்னுரை.... வரலாறு... ஆனால் நம் மனதில் துயரமேற்படுத்தும் நிகழ்வுகள். பாரத்த்தின் நிலையை மாற்றிப்போட்டன.

    பதிலளிநீக்கு
  5. அப்பாவிற்கான காஞ்சி மடத்தின் பதில் ஒரு பொக்கிஷம். இதை இவ்வளவு வருடங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறீர்களே. சபாஷ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் அப்பாதான் காரணம்.  அவர் பாதுகாத்து வைத்து அனுப்பியதுதான் காரணம்.  என் மகன்கள் இருவரும் பிறந்த தின நாட்காட்டி பக்கம் கிழித்தது பத்திரமாக பாதுகாத்து வைத்துள்ளார்.  எங்களுக்கு அனுப்பி பாதுகாப்பாக வைக்கச்சொன்னார்.

      நீக்கு
  6. ஸ்ரீராம், என்ன திடீர்னு தலைவர் பாணி!!! மூச்சு வாங்குது. முழுசும் வாசிப்பதற்குள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இருங்க வரேன்...யுகாதி இன்று!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா.. வாங்க கீதா... எப்படி இருக்கு! பொறுமை இருக்கா?

      நீக்கு
    2. ஆமாம்... உகாதிக்கும் கீர க்கும் என்ன சம்பந்தம்னு கேக்கப்படாது கேட்டேளோ?

      நீக்கு
    3. கன்னட தேசத்தில் இருப்பதால் 'ஊருடன் ஒத்து வாழ்!'!!

      நீக்கு
  7. செவ்வாயில் வரும் ஒருவரும் நினைவுக்கு வருகிறார்! முதல் பகுதி வாசிக்கறப்ப!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யார் அது? ஆனால் கீதா.. இப்படி எழுதியதால் சில விவரங்களை என்னால் விவரமாக எழுத முடியவில்லை!

      நீக்கு
    2. விட்ட விவரங்களைத் தனிப் பதிவாக்குங்க ஸ்ரீராம்.!!!!

      நான் பதிவுல ஒரு 4, 5லைன் சேர்த்து எழுதினப்ப நீங்களே பெயர் சொல்லி அப்படி இருக்குன்னு சொன்னீங்களே!!!!!

      செவ்வாய் கதைப் பகுதி!!! க்ளூ!

      கீதா

      நீக்கு
    3. பின்ன?  விட்றுவோமா?!!

      நீக்கு
  8. என்னதான் எல்லா வேலைகளும் முடிக்க முடிந்தாலும் ஒரு நாள் முழுக்க ஆகிவிட்டதே! உறவினர் வீட்டு விஸிட் மற்றும் லஞ்ச் தவிர மற்ற விஷயங்கள் இண்டர்நெட்டிலேயே முடிக்கும் காலம் என்றுதான் வருமோ?
    பி.கு: வயலட் சட்டையுடன் ஹோட்டலுக்கும் முன்னால் நிற்பவர் யாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சூர்யா..  அவர் என்னைப்போன்ற ஒருவர்!!!  சாட் ஜிபிடி உபயம்!  இன்டர்நெட்டில் முடித்ததுதான் ஒன்றில் தப்பாகி.  நேரில் செல்ல வேண்டி இருந்தது. 

      கோர்ட் கேட்கவே வேண்டாம். 

      உறவு? 

      வேற வினையே வேண்டாம்!!!

      நீக்கு
  9. ஒரு பதிவுல நானும் ஒரு சின்ன பத்தி 4 - 5 லைன் சேர்த்துக் கொடுக்க....மூச்சு வாங்கினீங்கல்ல!!!!! இருங்க இருங்க நானும் ஒரு பதிவே இப்படிப் போடறேன்!!!!! ஹாஹாஹாஹா!!!!!! இது சும்மா கலாய்த்தல் உங்களை!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் சில விஷயங்களை நிறைவேற்ற முயலும்போது சில விஷயங்களை இழக்க வேண்டி வருகிறது.  விட்டுப்போன விவரங்கள் ஒருபுறம், இதை நான்கைந்து பதிவுகளாகக் கொடுத்திருப்பேன்!!!

      நீக்கு
  10. வாரா வாரம் என்ன புதுமை செய்வது என்று இன்று பழைய பாணிக்கே திரும்பி விட்டீர்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய பாணியா?  இன்றா?  எதை வைத்து சொல்கிறீர்கள்?  வாங்க பானு அக்கா...

      நீக்கு
    2. Yes, except songs same old Thursday stuff, good though.

      நீக்கு
    3. பாடல்கள் இந்த வியாழனில்தான் இடம் பிடித்திருக்கின்றன என்கிறீர்களா?  சென்ற வியாழனும் இப்படித்தான் இருந்தது.   உங்கள் கணிப்பு எதை வைத்து என்று புரியவில்லை!  ஆனால் அதில் எனக்கு குறையில்லை.  என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆவல்.  அவ்வளவுதான்.

      நீக்கு
  11. ஓரு நாள் மூச்சுவிடக் கூட நேரமில்லாமல் சுற்றியதை இப்படி மூச்சுவிடாமப் படிக்கறாப்ல கொடுத்ததை ரசித்தேன் ஸ்ரீராம்.

    இப்படி முன்ன, பதிவுலகம் வந்த புதிதில் ஒரு சம்பவத்தை நான் எழுதி பதிவாகப் போடும் முன்னரே துளசிக்கு அனுப்பிக் கேட்பேன் இல்லையா, அப்படி, கேட்டப்ப, அவரோ இப்படிப் போட்டா எல்லாரும் வாசிப்பாங்களான்னு யோசிச்சுப் போடு என்றுசொல்லிட, நானோ "மண்ணில் இந்தக் காதல் " பாட்டை உதாரணமாக விட....அது பாடல் அவர் பாடுவதையும் நீ எழுதறதையும் ஒன்றாகச் சொல்ல முடியாதென்பதோடு இப்பதான் பதிவுலகத்துல காலடி வைச்சிருக்கோம் என்பதால், ஏற்கனவே கருத்துகள் இல்லாததோடு வாசகர்களை வரவழைக்கணுமே தவிர விரட்டறா மாதிரி இருக்காம பின்னாடி வாசிக்கறவங்க வந்த பிறாகு வைச்சுக்கலாம்னு சொல்லி அங்கங்க கட் பண்ணிப் போடுன்னு சொல்ல, கட் பண்ணி போட்ட நினைவு! ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி.. நீங்களும் நல்லா முயற்சிக்கறீங்க பின்னூட்டத்தில்!

      நீக்கு
  12. என்ன ஆச்சர்யம் ஸ்ரீராம் தன் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்! முன்பு தன் புகைப்படத்தை வெளியிடாத நெல்லை இப்பொதெல்லாம் தன் புகைப்படங்களை வெளியிடுவதைப் பார்த்த பாதிப்பா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றாக உற்றுப் பாருங்கள்.. நானா அது?!

      நீக்கு
    2. இரவு வரும்பொழுது கண் மசமஸ்வென்று ஆகி விடுகிறது.

      நீக்கு
    3. கண்களை சோதிக்க வேண்டுமோ...

      நீக்கு
  13. "மயங்குகிறாள் ஒரு மாது" படம் பார்த்திருக்கின்றேன். நல்ல பாடல்கள். "சம்சாரம் என்பது வீணை" கூட இந்தப் படத்தில்தானே? இசையமைப்பாளர் ஒரு பெரிய ரவுண்ட் வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் பெரிய அளவில் இந்தப் படத்திற்கு அப்புறம் சோபிக்கவில்லை.
    விஜயகுமாரும் தேங்காயும் இவ்ளாம் பெரிய பெல் பாட்டம் போட்டுக்கொண்டு வருவதை இக்காலக் குழந்தைகள் பார்த்தால் சிரித்து விடுவார்கள். எனக்கே கூட எப்படி அந்தக் காலத்தில் நான் இப்படி ஒரு அடிக்கு மேல் பாட்டம் வைத்துப் பேண்ட் போட்டுக்கொண்டேன் என்று நினைக்கும்போது மலைப்பாகவும் சிரிப்பாகவும் இருக்கும் 😆

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஜயபாஸ்கர் வெற்றிகரமான கன்னட இசையமைப்பாளர்.  அங்கு நிறைய படங்களை பண்ணி இருக்கிறார்.  தமிழிலும் நிறையவே இசை அமைத்திருக்கிறார்.

      ஆமாம்.  அது ஒரு பேஷன்!  நானும் பயங்கரமா பாட்டம் வச்சு பேண்ட்ஸ் போட்டிருக்கேன்.  அது அப்போதைய பேஷன் அவ்வளவுதான்.  வயிற்றுக்கு மேல் பெல்ட் போட்டு நெஞ்சு வரை பேண்ட் இருக்கும்.  யாரானா படத்தில் 'யே.. ஸாரா ஜமானா' பாடலில் அமிதாப்பைப் பாருங்கள்!

      நீக்கு
    2. அந்த படத்தை கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு முன்பு தொலைகாட்சியில் பார்த்தேன். படத்தில் தேங்காய் ஸ்ரீனிவாசன் வில்லன்..ரொம்ப கஷ்டப்பட்டு, நம்மையும் கஷ்டப்படுத்துவார். அவருக்கு ஜோடி ஃபடாஃபட் ஜெயலட்சுமி. என்ன கொடும சரவணா!

      நீக்கு
    3. அது அந்த காலம் பானு அக்கா.  அப்போது பார்த்திருந்தால் சாதாரணமாகத்தான் இருந்திருக்கும்.  தேங்காய் பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். 

      இதில் புதுமைக் கருத்தை கவனித்தீர்களா?  சந்தர்ப்பவசத்தால் கற்பிழந்த பெண்ணை அறிந்தே மணக்கும் நாயகன்.

      நீக்கு
  14. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்வோம். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கமும் பிரார்த்தனைகளும்.

      நீக்கு
  15. இன்று லீவு என்பதால் வேலைகள் கூடுதல். பின்னாடி வருகிறேன், ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  16. Life certificate, சம்பந்தபட்டவருக்கு எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ அந்த வங்கியில் சென்று கொடுத்து விடலாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் அலைச்சல்தானே...   சில வருடங்களாக போஸ்ட் ஆபீசில் சென்று கொடுக்கலாம் - எந்த ஊரில் இருந்தாலும்.  அல்லது போஸ்ட்மேனிடம் சொன்னால் அந்த மெஷினை வீட்டுக்கு எடுத்து வருவார், வீட்டிலேயே செய்து விடலாம்.  70 ரூபாய் சார்ஜ்.  போஸ்ட்மேனுக்கு ஒரு ஐம்பது ரூபாய் அன்பளிப்பு கொடுப்போம்!

      நீக்கு
  17. ரஜினி பற்றிக் கேள்விப்பட்ட விஷயம்தான். ஆனால் பாலசந்தர் படத்தை உடைத்தார் என்பது இது வரை நான் கேள்விப்படாதது. கேபி மட்டும் அந்தச் சமயத்தில் உதவாவிட்டால் ரஜினி இன்றைக்கு இந்த இடத்தில் இருந்திருக்க முடியாது. சும்மா சொல்லக்கூடாது...ரஜினியும் கேபிக்கு எவ்வளவோ திருப்பிச் செய்திருக்கின்றார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் உண்மைதான்.  ரஜினி அமிதாப்பையே கடனிலிருந்து மீட்டிருக்கிறார்.

      நீக்கு
  18. /வெளியான ஒன்பதாம் மயங்குகிறாள் ஒரு மாது. /
    "ஓன்பதாம்".........புரியவில்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும். டைப்போ. 'ஒரு படம்' என்றிருக்க வேண்டும்.

      நீக்கு
  19. உங்கள் அப்பாவுக்கு காஞ்சி மடத்திலிருந்து வந்த கடிதத்தில் என்ன இருந்தது என்று எழுதியிருக்கலாம். புரிந்து கொள்ள சிரமமான எழுத்து. நான் புரிந்து கொண்டது:
    தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் வருமாறூ:
    1. இறந்தபின் அந்த வீட்டில் வாசம் செய்யாது
    2. இறந்தவர்கள் உற்றார் உறவினர்களைதொடர்பு
    3. கொள்வது கிடையாது
    4. ஆவிகளுடன் பேசுவதை,சொல்வதை நம்பலாம்
    5.மரணத்திற்கு பின்பு எல்லாம் அழிவது உண்மை
    6. கருட புராணத்தில் ஆத்மா பற்றி சொல்வது சரியே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகத்தான் படித்திருக்கிறீர்கள்.

      நீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள். யுகாதி என்பதால், இன்று வீட்டு வேலை அதிகமென்றாலும், முதலில் உங்களின் முதல் பகுதி சுற்றலை முழுவதும் மூச்சுவிடாமல் படித்து ரசித்தேன். சுவாரஸ்யமாக இருக்கிறது.

    முன்பு என் பதிவொன்றில், ஒரு பாராவுக்கு இப்படி நிறுத்தாமல் நான் எழுதியதற்கு நம் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் "ஒரு வரியே இவ்வளவு நீளமா?" என அதிசயப்பட்டு ஒரு கமெண்ட் தந்திருந்தார். இப்போது என்னைச் சொல்லப் போகிறாரோ என நினைக்கிறேன்.

    விடாமல் சென்றதில்/ சொன்னதில் உங்களின் விட்டுப்போன பல வேலைகள் அன்று நல்லபடியாக முடிந்திருப்பதில் சந்தோஷமடைகிறேன். பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்ததற்கும், பொறுமையாகப் படித்ததற்கும் நன்றி கமலா அக்கா..  அப்புறமா வாங்க...  ஆனா வாங்க!!!

      நீக்கு
    2. யுகாதிக்கு என்ன என்ன வேலைகள், என்ன என்ன செய்தார்னு பதிவு கஹ மேடம் போடுவாங்களா? அவர் சொன்ன toneல், நான் பெரிய இலைச் சாப்பாட்டு ஐட்டங்களைக் கற்பனை செய்கிறேன்.

      நீக்கு
  21. ஜோக்குகள் பரவாயில்லை. ஆஃபிசில் தூங்கும் ஜோக் படிக்கும் பொழுது இந்தக் கால நடைமுறை நினைவுக்கு வருகிறது. சில ஐ.டி. கம்பெனிகளில் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு எல்லோரும் கண்டிப்பாக தூங்கித்தான் ஆக வேண்டும் என்று ரூல், என்றும், அதனால் அந்த கம்பெனிகளில் சாப்பாட்டு இடைவேளைக்குப் பிறகு அரை மணி நேரம் விளக்குகளை அணைத்து விடுவார்கள் என்றும் கேள்வி. அதற்கு பவர் நாப் என்று பெயராம். பவர் நாப்பிற்குப் பிறகு மிகவும் ஃப்ரெஷாக உணர்வார்களாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், படித்திருக்கிறேன்!

      நீக்கு
  22. அனைவருக்கும் உகாதி வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  23. இந்தியாவில் பகலாக இருக்கும் பொழுது இங்கே இரவு என்பதால், நேற்று இரவு எ.பி.யில் பின்னூட்டம் இட்டு விட்டு சென்று விட்டேன். இன்று மீண்டும் திறந்தபொழுதுதான் நெல்லை தமிழன் அவர்களுக்கு அடி பட்ட செய்தியை பார்த்தேன். இப்போது எப்படி இருக்கிறீர்கள்? டாக்டரிடம் சென்றீர்களா? கிரியா செய்யலாம், நீச்சல், நடை யோசித்துக் கொள்ளவும். Take care.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை மேடைக்கு அழைக்கப்படுகிறார்!

      நீக்கு
  24. வணக்கம் சகோதரரே

    /அப்புறமா வாங்க... ஆனா வாங்க!!//

    வேலைகளின் நடுவிலோ இல்லை வேலைகள் முடிந்த பொழுதிலோ வந்து விடுவேன். ஆனால், இப்போதே இந்த ஒன்றுக்கு மட்டும் வந்து விட்டேன்.

    இந்த மயங்குகிறாள் ஒரு மாது படம் அந்த காலத்தில் A முத்திரைப் பெற்ற படம். நான் திருமணமாகாமல் அம்மா வீட்டில் இருந்த போது, நானும் என் அம்மாவும் மட்டும் ஒரு தியேட்டருக்கு ஒரு பக்திப்படம் (படம பெயர்நினைவில் இல்லை.) பார்க்கப் போனோம். அதறகு செல்லும் போதே தாமதமாகி விடவே படம் ஆரம்பித்து விட்டார்கள். எங்களுக்கு படம் ஆரம்பித்தப்பின் படம் பார்க்க பிடிக்காது. எனவே பிறகு அந்தப் படத்தை பிறகு ஒருநாள் பார்க்கலாம் என முடிவு செய்து அருகிலேயே உள்ள ஒரு திரையரங்கில் இந்தப்படம்( ம. ஒ. மா) போட்டிருப்பதை கண்டு இதற்கு சென்று வந்தோம்.

    வீட்டுக்கு வந்ததும் எங்களிருவருக்கும் எங்கள் அப்பாவிடமிருந்தும். அண்ணாவிடமிருந்தும் ஒரே திட்டுக்கள் மயம். "எப்படி இவளை இந்தப் படத்திற்கு அழைத்துப் போனாய்.?" என்று அப்பா கத்த, அண்ணா" நீ அந்தப்படம் பார்க்க கூடாது என உனக்குப் புரியாதா" என திட்ட இந்தப்படத்தை மறக்கவே இயலாமல் போனது.( இப்போதுள்ள படங்களை பார்க்கும் பார்க்கும் போது, இதற்கு ஏன் அந்த முத்திரை தந்தார்கள் என்ற நினைப்பு வருகிறது.) ஆனால், இப் படத்தின் பாடல்கள் அவ்வளவு இனிமை. இலங்கை வானொலியில் அடிக்கடி இந்தப்படத்தில் பாடல்களை கேட்டு ரசித்திருக்கிறேன்.( ஒருவேளை இந்தப்படத்தை ஏன் பார்த்தோமென அவ்வளவு திட்டுக்கள் வாங்கியதால், இப்படத்தின் பாடல்களை கேட்க சுவாரஸ்யம் வந்ததோ என்னவோ.? மனப்பாடமாகும் வரை கேட்டு ரசித்துள்ளேன். :))).) இப்போது இங்குப் பார்த்ததும் மறக்கவியலாத என் மலரும் நினைவும் எழுந்தது. பிறகு கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாரசியமான நினைவுகள் கமலா அக்கா.  அந்தக் காலத்தின் A முத்திரைப் படங்கள் இந்தக் கால U முத்திரைப் படங்களை போலதான் இருக்கும்.  சரியாகத்தான் சொல்கிறேனா?

      விஜயபாஸ்கர் இனிமையான இசை அமைப்பாளர்.  ஏகப்பட்ட மெலடி கொடுத்திருக்கிறார்.

      நீக்கு
  25. வீட்டிலேயே இருந்திருக்கலாம்
    என்று தோன்றுகிறது
    இருந்திருந்தால்
    இனிய என்னவர்
    மாமியார், நாத்தனார்
    மற்றும் தோழிகளென்ற
    நெருக்கங்களுடன்
    நாட்கள் நகர்ந்திருக்கும்

    விதி யாரை விட்டது?
    ஓவியனின்
    வக்கிரப் பார்வையில்
    படமாய் உறைந்தேன்
    புத்தகப் பக்கங்களில்
    பொத்தி வைத்ததெல்லாம்
    கடை விரிக்கப்பட்டது
    பலர் பார்வைபட்டு
    சின்னாப் பின்னமாகிறார்கள்
    கதைகளில் உலாவிய என்
    மனவெளி மாந்தர்கள்

    (எனக்குத் தோன்றிய சில திருத்தங்களுடன். பொதுவெளிப் பகிர்தலின் ஆபத்து இது தான்!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்...

      // பொதுவெளிப் பகிர்தலின் ஆபத்து இது தான்! //

      உண்மைதான்!

      நீக்கு
  26. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....

    வியாழன் கதம்பம் நன்று. ஒரு நாளில் நடந்த நிகழ்வுகள், அனுபவங்கள் நன்று. ஒவ்வொரு இடத்திலும் கிடைக்கும் அனுபவங்கள் பேசு பொருளாகவே இருக்கின்றன.

    மற்ற பகுதிகளும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  27. தடை எடுப்பு
    உயிர் விடுப்பு...

    நீதிபதி கண்ணீர்
    மனதைக் கலங்கச் செய்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  கண்கள் கலங்கியதாலேயே அந்த பெற்றோரின் பாசத்தை,  ஆதங்கத்தை, பரிதவிப்பை இங்கு பதிவு செய்தேன்.

      நீக்கு
  28. வியாழன் கதம்பம் சிறப்பு!..
    (ஆகத்தான் இருக்கும்!...).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  நேற்று அவசரமாக அந்த முதல் பகுதியை எழுதி முடித்ததும் எனக்கு நினைவுக்கு வந்த முதல் நண்பர் நீங்கள்தான்.  உங்கள் பதிலை யூகித்திருந்தேன்.  உங்கள் கண்கள் நினைவுக்கு வந்தன!

      நீக்கு
  29. பூந்தோட்டக்காவல்காரன் செய்திகள்
    வேறொன்றையும் சொல்ல வேண்டியது

    அடுத்து சிறைப்பறவையா!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!