2.3.26

"திங்க"க்கிழமை  ::   ஒரு எளிய மதிய உணவு -- J K C  ரெஸிப்பி

 

 ஒரு எளிய மதிய உணவு

வெங்காய தாள், கேரட் பருப்பு சாதம்.

(JKC)

என்ன விளையாட்டா? நம்முடைய முதல் திட உணவே பப்பு  புவா தானே! காக்காயை காட்டி  அம்மா ஊட்டி விட்டது வழக்கமான ஒன்று தானே? அதை பற்றி வேறு என்ன புதிதாக சொல்லப்போகிறீர்கள்?

பதிவு முழுதும் படித்து விட்டு சொல்லுங்கள். 

வடையை சாம்பாரில் முக்கி தோய்த்து சாப்பிடுவது ஒரு சுவை என்றால் சாம்பாரில் நன்றாக ஊற வைத்த சாம்பார் வடை மற்றொரு சுவை. அதே போன்று தான் பருப்பை சோற்றில் கலந்து சாப்பிடுவதற்கும் பருப்பும் அரிசியும் கலந்து ஒன்றாக வேக வைத்து சாப்பிடுவதும். பருப்பும் அரிசி சோறும் இரண்டரக் கலந்து தனி சுவையுடன் இருப்பது பருப்பு சாதம்.

எடுத்துக் கொண்ட பொருட்கள்.

கர்நாடக டீலக்ஸ் பொன்னி புழுங்கல் 1 டம்ளர்.

துவரம் பருப்பு டம்ளர்

பட்டை ஒரு இன்ச், கிராம்பு 1.

கருவேப்பிலை கொஞ்சம்

தக்காளி ½  

வெங்காயத்தாள் 4 எண்ணம்

கேரட் சிறிய துண்டு.

அரிசி பருப்பு இரண்டையும் கழுவி  ½ மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் குக்கரில் அரிசி, பருப்பு, காய்கள், கிராம்பு 1, பட்டை சின்ன துண்டு, கருவேப்பிலை, தக்காளி  எல்லாவற்றையும் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்.  விருப்பமிருந்தால் ½ டீஸ்பூன் மஞ்சள் பொடியும் சேர்க்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்க்க மறக்க வேண்டாம். நாங்கள் இங்கு ½ டீஸ்பூன் விளக்கெண்ணையும்  சேர்த்தோம். 

அடுப்பை பற்றவைத்து 3 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும். ஆறியபின் பரிமாறலாம். தாளிப்பு இல்லை, தேங்காய் துருவல் சேர்க்கவில்லை. நெய் உபயோகிக்கவில்லை. 

இதற்கு தொட்டுக்கொள்ள சின்ன சேம்பு ரோஸ்ட், தயிர் வெங்காயம், பப்படம், கோங்குரா ஊறுகாய் வைத்துக்கொண்டோம். பருப்பு சாதத்திற்கு தக்காளி தொக்கு, அல்லது தக்காளி சட்னி நல்ல காம்பினேஷன்.

பருப்பு…. சாதம் வேறு, பருப்புசாதம் வேறு, சரிதானே?

25 கருத்துகள்:

  1. கோயமுத்தூரில் பருப்பு சாதம் ஃபேமஸ் என்பார்கள். பண்ணணும் என நினைத்துக்கொண்டிருக்கிறேன். அவங்களும் பட்டைலாம் போடுவாங்களான்னு தெரியலை.

    விளக்கெண்ணெய் எதற்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​ஏன் எதற்கு என்று கேட்காமலேயே இருந்த ஒரு பழக்கம் துவரம் பருப்பு வேக விளக்கெண்ணெய் சேர்ப்பது. அதே நினைப்பில் பருப்பு சாதத்திற்கும் விளக்கெண்ணெய் சேர்க்க பட்டது. காயத்திற்கு பதில் என்றும் கொள்ளலாம்.

      Jayakumar

      நீக்கு
    2. து. ப வேகும் போது நன்றாக குழைந்து வர வேண்டி நல்லெண்ணையும் சிலர் சேர்ப்பார்கள். நீங்கள் விளக்கெண்ணை சேர்த்ததும் சரி. எங்கள் அம்மா வீட்டிலும் இதன் பயன்பாடு இருந்தது.

      நீக்கு
  2. சூப்பர் செய்முறை ஜெ கே அண்ணா.

    ஜெ கே அண்ணா கொங்கு சைடில் பருப்பும்சாதம் என்று செய்வாங்க. ரொம்ப நல்லாருக்கும். எனக்குப் பிடிக்கும். கிட்டத்தட்ட அதே போன்று...

    நான் கோயம்புத்தூரில் இருந்தப்ப தெரிந்து கொண்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. பொதுவாகப் பருப்பு சாதம் என்றால் நம் வீடுகளில் துவரம் பருப்பை நன்றாக வேக வைத்துச் சிறிது உப்பு சேர்த்துச் சாதத்தில் கொஞ்சம் நெய் விட்டுக் கலந்து சாப்பிடுவது. அது ஒரு தனிச் சுவை.

    கேரளத்தில் செய்யும் பருப்பு - பரிப்புக்கறி தாளிதத்தோடு செய்யப்படுவது பாசிப்பருப்பில் பெரும்பாலும். தேங்காய் ஜீரகம் என்று..... அதுவும் நன்றாக இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அந்தச் சேம்பு ரோஸ்ட் ஈர்க்குது, அண்ணா. ரொம்ப அழகா even ஆகக் கட் செய்து....நல்லாருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேப்பங்கிழங்கு ரோஸ்ட்.

      சேப்பங்கிழங்கை கழுவி தண்ணீரை வடித்து இட்லி தட்டில் வைத்து இட்லி போல் ஆவியில் வேகவிடவும். வெந்தவுடன் இறக்கி தோலை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

      மிளகாய் தூள், மஞ்சள் தூள், கடலை மாவு அல்லது கார்ன் பிளவர், உப்பு ஆகியவற்றைக் கலந்து சேப்பங்கிழங்கு துண்டுகளை அதில் பிரட்டி உதிரி உதிரியாக எடுத்து வைக்கவும். வாணலியில் கொஞ்சம் எண்ணை விட்டு சேப்பங்கிழங்கு துண்டுகள் நான்கு நான்காக ஒட்டாமல் வடாம் பொறிப்பது போல் பொறிக்கவும். இவ்வாறு கொஞ்சம் பொறுமையுடன் எல்லா சேப்பங்கிழங்குகளையும் பொரித்து எடுக்கவேண்டும். பொறித்து மீதியாகும் எண்ணையை சிங்கில் கொட்டிவிடுங்கள்.

      நீக்கு
    2. இட்லித் தட்டில் எத்தனை நிமிஷம் வைப்பீர்கள்?  

      நீக்கு
    3. சேப்பங்கிழங்கு வெந்தால் தோல் சுருங்கி உரிப்பதற்கு தோதாக வரும். அது வரை வேக விடவேண்டும்.

      சாதா சேப்பங்கிழங்கை தோல் சுரண்டி வருத்தால் கல் போல ஆகும். ஆகவே வேகவைத்த கிழங்கு தான் சரி.

      நீக்கு
    4. நீங்க சொல்றதைப் பார்த்தா திறந்து பார்த்து செக் செய்து தேவையானால் மறுபடி வைக்க வேண்டும்.  சரியா?  15 நிமிஷம் ஆகுமா?  இல்லை விசில் உண்டா?

      நீக்கு
    5. இட்லி வெந்ததா என்று எப்படி தெரிந்து கொள்வீர்கள் அது போல் தான். சேப்பங்கிழங்கு நான் வெந்துட்டேன் என்று விசில் அடிக்காது.

      நீக்கு
  5. மிகவும் எளிய ரெசிபியாக இருக்கிறதே? லன்ச் பாக்ஸ் ஸ்பெஷல் எனலாம். காரத்திற்கு எதுவும் சேர்க்கவில்லையே? த்க்காளியை வதக்காமல் சேர்த்திருக்கிறீர்கள். தக்காளி, வெங்காயம் இவைகளை பச்சையாக சேர்ப்பதற்க்கும், வதக்கிவிட்டு சேர்ப்பதற்கும் சுவையில் வேறுபாடு உண்டு. இதை இப்படித்தான் செய்ய வேண்டுமா? என்னடா கேள்விகளாக இருக்கிறதே? என்று தோன்றுகிறதோ? மீண்டும் கேள்வி, ஹி ஹி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பச்சையாக சேர்க்கும் தக்காளி, வதக்கி சேர்க்கும் தக்காளி
      ​இவை இரண்டும் பதார்த்தத்தின் மணத்தில் மாற்றம் உரைக்கும். ஆனால் இங்கு தக்காளியை குக்கரில் சோறுடன் வேகவைக்கும்போது தக்காளி காணாமல் கரைந்து விடும். அதன் சிறிய புளிப்பு மட்டுமே சோற்றில் இருக்கும்.

      Jayakumar

      நீக்கு
    2. ​மசாலா பொருட்கள் வெள்ளைக்காரனுக்கேற்ற காரத்தைக்கொடுக்கும். (பட்டை, கிராம்பு). வேண்டும் என்றால் குருமிளகு பொடி தூவி ஒரு ஸ்பூன் நெய் விட்டு பெருமாள் கோயில் மிளகு சாதம் பிரசாதம் போல் செய்து சாப்பிடலாம்.

      நீக்கு
  6. சேம்பு ரோஸ்ட் சூப்பர்!

    பதிலளிநீக்கு
  7. சேம்பு எல்லாம் இளமையில்
    சாப்பிட்டது தான்...

    இப்போது ஒதுக்கியாயிற்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய பத்தியத்திற்கேற்ப கிராம்பு, பட்டை தக்காளி இவற்றை எடுத்துவிட்டு நெய் கலந்து உண்ணலாம்.

      நீக்கு
  8. இன்றும் இணைப்பு ஒன்று இணைக்க மறந்து விட்டேனே... அடடா.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னிக்குப் பதிவிலே வேறே எதுவும் இல்லையேனு கேட்க இருந்தேன். ஸ்ரீராமே பதில் சொல்லிட்டார்/ நேற்றெல்லாம் காணாமல் போயிருந்தார். வழக்கமான திங்கள் கிழமை "திங்கு"ம் பதிவுடன் எளிமையாக இருக்கு.

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவாக பருப்புசாதம் செய்முறை படங்களுடன் நன்றாக உள்ளது. தொட்டுகையாக பப்படம், சேம்பு கறியென.. ஆகா இது போதுமே..! நமக்கு. சுவையாகவும், எளிதாகவும் இருக்கிறது. எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு இந்த பருப்பு சாதமும், அப்பளம், வெண்டை பொரியல் என செய்து விட்டால் போதும்.அவர்களும் ரகளை பண்ணாமல் சாப்பிட்டு விடுவார்கள்.

    நானும் முன்பு இதே போல்பா பருப்புக்கு பதில் து. ப வைத்து பொங்கல் மாதிரி செய்திருக்கிறேன்.(சீரகம், மிளகு, இஞ்சியுடன் சேர்த்து) அந்த காரசாரங்கள் அவ்வளவாக அவர்களுக்கு சமயங்களில் பிடிக்கவில்லை. சமயங்களில் படுத்தாமல் சாப்பிடுவார்கள். (அவர்களின் மூடைப் பொறுத்தது அது.) ஆனால் இது போல செய்தால் குழந்தைகளுக்குப் பிடிக்குமென நினைக்கிறேன். சில காய்கள் தவிர்த்து அவர்களுக்கு ஏதும் பிடித்தமில்லை.(இதிலும் காரட் போடாமல் அவர்களுக்குச் செய்ய வேண்டும்.) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொங்கு மண்ணின் அர்சீம்பருப்பு சாதம், ஆனால் காய்கள் , மி.தூ. ம.தூ. நெய், தாளிப்பு, காய்கள் வதக்கல் இவை இல்லாமல். தக்காளியும், வெங்காயத் தாளும், காரட்டும் மட்டும் சேர்த்துப் பண்ணி இருக்கீங்க. சிம்பிளாக வயிறு பாரமாக இல்லாமல் உணரச் செய்யும். நான் இங்கே அடிக்கடி பொங்கல் பண்ணிச் சாப்பிடுவேன். தொட்டுக்கத் தக்காளிச் சாற்றிலேயே வெங்காயம், ப.மி.குடை மிளகாய், கத்திரிக்காய் போன்றவை வதக்கிச் சேர்த்துக் கொஞ்சமாக சாம்பார்ப் பொடி, உப்பு, பெருங்காயப் பொடி சேர்த்துக் கொதிக்க விட்டுப் பண்ணிப் பொங்கலுடன் சேர்த்துச் சாப்பிடுவேன். கருகப்பிலை, கொ.மல்லியெல்லாம் உண்டு.

      நீக்கு
  11. சைனீஸ் ஃப்ரைட் ரைஸுக்கும் இந்த ஷாலட்ஸ் எனப்படும் வெங்காயத் தாள், பார்ஸ்லி போன்றவை சேர்ப்பார்கள். நான் காய்கறிகள் சேர்த்த கலந்த சாதத்தில் சேர்ப்பேன். சாஸெல்லாம் சேர்ப்பதில்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!