27.5.26

எதனால் இரயிலில் தரும் உணவின் தரம் மிகவும் மோசமாக இருக்கிறது? & சரோஜா தேவி 01.

 

கேள்வி பதில்கள் : 

கீதா சாம்பசிவம்: 

1.இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருவது நல்லதா? நாட்டின் மக்கள் தொகை பெருகாமல் இருக்க உதவலாம். ஆனால் மற்ற விஷயங்களுக்கு இது பொருந்துமா?

# நாம் அச்சப்படும் அளவுக்கு இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து போகாது என்றும், இன்னும் ஒரு நூறு ஆண்டுகளில் அது மிகவும் குறைந்து போனால் அது பற்றி நாம் இப்பொழுது கவலைப்பட்டு பிரயோஜனம் இல்லை என்றும் நான் நினைக்கிறேன்.   

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் ஒரு மதம் எந்த காரணங்களுக்காகவும் அடியோடு அற்றுப் போய்விடாது.

2. சமீபத்திய சென்னை உயர்நீதிமன்றம் "அர்ச்சகர்களுக்கு அரசு சம்பளம் கொடுப்பதால் தட்டில் விழும் காசுகளுக்கு உரிமை கோரக்கூடாது." என்பது சரியானதா?

# அடுத்த பதிலைக் காணவும். 

3 அர்ச்சகர்கள்/பட்டாசாரியார்கள்/பூசாரிகள் ஆகியோருக்கு அதிகபட்சமாக 7500 ரூ தான் கொடுக்கிறார்கள். இதை நான் எங்க பூர்விக ஊரான பரவாக்கரையிலும் பார்த்தேன். அதுக்கும் அவங்க யார் மூலமாவது பிணைத்தொகை குறைந்த பட்சம் 10,000/- ரூயிலிருந்து அதிக பட்சம் 50,0000/- ரூ வரை பிணைத்தொகை கட்டணும். அப்படிக் கட்டினால் தான் அரசு சம்பளமே கொடுக்கும். அப்படி இருக்கையில் அர்ச்சகர்களுக்குக் கோயில் சம்பளம் கொடுப்பது என்பது அவங்களுக்கு எந்த விதத்திலும் உதவியாய் இருப்பதில்லை. ஆகவே அரசின் தலையீடு நியாயமானதா?

# சரி அல்ல என்று தான் எனக்குத் தோன்றுகிறது. ஏராளமாக தட்டில் காசு விழும் அர்ச்சகர்களுக்கு வேண்டுமானால் சில நிபந்தனைகள் தேவையாக இருக்கலாம்.‌ பெரும்பாலான அர்ச்சகர்கள் வறுமையில் வாடுகிறார்கள் என்பதே உண்மை. அவர்களுக்கு தட்டில் விழும் சொற்பப் பணம் அவசியத் தேவையாகக் கூட இருக்கும்.

4. இந்த ரீல்ஸ் என்னும் பெயரில் முகநூலில் பகிரும் வீடியோக்கள் அனைத்துமே வன்முறையை முக்கியமாகக் குடும்ப வன்முறையைத் தூண்டுவதாகவே இருக்கின்றன. இதை எப்படி அனுமதிக்கிறார்கள்?

கணவன், மனைவியையோ, அல்லது மனைவி கணவனையோ துன்புறுத்துவதாக வரும் வீடியோக்கள்.

# சமூக ஊடகங்களில் வரும் பதிவுகளுக்கு கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் சற்று தாராளமான உரிமைகள் இருக்கின்றன.  அதுபோக லட்சக்கணக்கான பதிவுகள் ஒவ்வொரு நிமிடமும் வருவதால் இதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது என்பது மிகவும் சிரம சாத்தியமான காரியம்.  மிகவும் ஆட்சேபிக்கத்தக்க வகையில் வரும் பதிவுகளுக்கு மட்டும் யாரேனும் முயற்சி எடுத்தால் தடை கொண்டு வர முடியும். இதற்கு மேல் செய்வதற்கு ஒன்றும் இல்லை.

5. மாமனார் அல்லது மாமியாரை மருமகள்கள் துன்புறுத்துவ்தாக வரும் வீடியோக்கள்.

மருமகளைத் துன்புறுத்தும் மாமியார் அல்லது மாமனார். இப்படியே வருகின்றன. அல்லது பொதுமக்கள் அவர்களுக்குள் போட்டுக் கொள்ளும் சண்டைகள், கூச்சல், கூப்பாடுகள், வன்முறைகளைத் தூண்டும் விதமாகப் பேசும் பேச்சுக்கள். இதை எல்லாம் அனுமதிக்கும் முன்னர் கொஞ்சமானும் யோசிக்க வேண்டாமா?

# முந்தைய கேள்விக்கான பதிலைக் காணவும். 

6. வன்முறை முன்னை விட இப்போது அதிகமாக இருக்கோ என்னும் நினைப்பு வருவதைத் தவிர்க்க முடியலை. இதுக்கு மக்கள் காரணமா? ஆட்சியாளர்கள் காரணமா?

# மக்கள் தான் காரணம். ஆனால் மக்களுக்கு மலிவான சந்தோஷங்களை எளிதில் காட்டி அவர்களைக் குற்றவாளிகளாகவும், காமாந்த காரர்களாகவும் ஆக்குவதில் அரசு அனுமதிக்கும் பல விஷயங்கள் துணை போகின்றன.

நெல்லைத்தமிழன் : 

1. ஒரு திருமணம் போன்ற விசேஷங்களுக்கு நீங்கள் செல்லும்போது, வித விதமாகச் சாப்பிடமுடியும் என்பது சந்தோஷத்தைத் தருமா இல்லை  உறவினர்கள் பலரையும் ஒரே இடத்தில் பார்த்து அளவளாவ (இது என்ன வார்த்தை?) முடியும் என்பது சந்தோஷமா?  இல்லை சிலர் போல, உணவுப் படங்கள் எடுத்து பதிவிடலாமா, காதையும் கண்ணையும் தீட்டிவைத்துக்கொண்டிருந்தால் பதிவில் எழுதலாம் என்று தோன்றுமா?   

# எல்லாம் தான் என்றாலும் , என் வரை, உறவுகளைச் சந்தித்து பேசுவதற்கு முதலிடம், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் புதிது புதிதாக இந்த கான்ட்ராக்டர்கள் செய்யும் சில அம்சங்களை ரசித்துப் பார்ப்பதும் வெறுத்துப் பார்ப்பதும் உண்டு. 

சாப்பாடு பெரும்பாலும் மூன்றாம் பக்ஷம் தான். என்றாலும் அதிலும் சில சமயம் சில புதுமைகள் விசேஷங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

2. எதனால் இரயிலில் தரும் உணவின் தரம் மிகவும் மோசமாக இருக்கிறது? 

#   ரயில் உணவு இப்போது சற்றுப் பரவாயில்ல என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் -- நீங்கள் இப்படிக் கேட்கிறீர்கள்.

 நிச்சயமாக விலை போகும் என்கிற நிர்ப்பந்தம் இருப்பதால் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் தராமல் இருப்பது புரிந்து கொள்ளக் கூடிய விஷயம் தான்.


3.  தடகளம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், நீச்சல் என்று தரம் பிரித்து அதில் மாத்திரமே சிலருக்கு பயிற்சி கொடுத்து அவர்கள் வெற்றிபெறச் செய்வது போல, ஏன் வாழ்க்கைக்குத் தேவையான கல்வியை மாத்திரம் தரம் பிரித்துக் கொடுப்பதில்லை?  ஸ்வீட் கடை வைக்கப்போகிற பையனுக்கு எதுக்கு தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியத்தில் பயிற்சி அளிக்கணும்? 12 வருடங்கள் எதற்கு பல்வேறு பாடங்களில் பயிற்சி?  

# படிக்கிற மாணவன் எதிர்காலத்தில் என்னவாக இருக்கப் போகிறான் என்பது தெரியாமல் இருக்கும்போது எல்லாவற்றிலும் கொஞ்சம் பயிற்சி கொடுத்து வைப்பது தானே முறை ?

4. உங்கள் அம்மா செய்முறைகளை நீங்கள் எழுதிவைத்துக்கொண்டுள்ளீர்களா? செய்முறைகளை ஆவணப்படுத்தாவிட்டால் வழி வழியாக வரும் செய்முறைகள் மறைந்துவிடும் அல்லவா?  

# எழுதி வைத்துக் கொள்ளவில்லை. 

என் அம்மா பல விஷயங்களை மிகவும் நன்றாகச் செய்வார்கள் என்பது உண்மை என்றாலும் தனித்துவமாக வேறு யாருக்கும் தெரியாத பக்குவத்தில் எதையும் செய்ததில்லை என்பதால் எழுதி வைத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படவில்லை.

என் சகோதரிகள் ஏதாவது எழுதி வைத்துக் கொண்டிருக்கலாம் .  அது பற்றி எனக்கு சரியாகத் தெரியாது.

5.  மிஞ்சின காய்கறிகளைச் செலவழிக்க 'அவியல்' என்ற முறை மூலம் வழி கண்டுபிடித்ததுபோல, தனித்தனியாக ஒவ்வொரு பாத்திரத்தில் வைக்க பாத்திரம் இல்லாமல் காராபூந்தி, ஓமப்பொடி, வறுகடலை, ரிப்பன் பகோடா போன்றவற்றை ஒரே பாத்திரத்தில் வைத்து, பிறகு அந்த ருசி பிடித்துப்போய்தான் மிக்சர் என்ற ஒன்று வந்திருக்குமா?

# நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள் பட்சணங்களுக்கும் அது பொருந்துமோ என்னவோ.


படமும் பதமும் : 

நெல்லைத்தமிழன் : 


நான் வெளிநாடுகளுக்கு வேலை விஷயமாக சில நாட்களுக்குச் செல்லும் வழக்கம் அங்கிருந்தபோது இருந்தது. சில பயணங்கள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் அமைந்துவிடும். செல்லுமிடங்களில் நான் பழத்தையும், காலை உணவில் ப்ரெட் மற்றும் நான் கொண்டுபோயிருக்கும் எலுமிச்சை கார ஊறுகாயையும் வைத்துச் சமாளித்துக்கொள்வேன். ஆனால் பஹ்ரைன் திரும்பியவுடன், எவ்வளவு நேரமானாலும் (சில சமயங்களில் இரவு 9 மணிக்குத்தான் வீடு வந்து சேருவேன்), உடனே சுடச் சுட சாதம், வெந்தயக் குழம்பு மற்றும் அவசரத்துக்கு உருளை ரோஸ்ட் செய்து சாப்பிடுவேன். அப்புறம்தான் உயிர் வந்தமாதிரி இருக்கும்.


பஹ்ரைனில் எங்கள் வீட்டிற்கு அருகிலேயே நிறைய இனிப்புக் கடைகள் உண்டு. அவங்க நிறையச் செய்து பல ஹோட்டல்களுக்கும் சப்ளை பண்ணுவாங்க. உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். அங்க இமர்த்தி என்று சொல்லப்படும் ஜாங்கிரி கிடைக்கும். நிறத்தைப் பார்க்கும்போது அழகாக இருக்கும். நான் அவங்களுக்கு தோஸ்த் என்பதால் எப்போதும் அவங்க என்ன இனிப்பு, காரம் செய்துகொண்டிருந்தாலும் அவர்களுடைய பெரிய சமையலறைக்குச் செல்வேன். அங்க இருந்தவர், எனக்கு எப்படி ஜாங்கிரிக்குச் சுத்துவது என்று கற்றுத் தருகிறேன் என்று ஆரம்பித்தார். எனக்குத்தான் தயக்கம். தயாரிப்பு என்னால் கெட்டுப்போயிடக்கூடாது என்று. அதனால கத்துக்கலை. 


ஆரம்பத்துல நான் ஜாங்கிரி வாங்கிக்கொண்டிருந்தேன். பிறகு எப்படிச் செய்கிறார்கள் என்ற தொழில் தெரிந்தபிறகு விசேஷ நாட்களில் வாங்குவதில்லை. உதாரணமா, தீபாவளி வருது என்றால், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே ஜாங்கிரி கூடு செய்துவிடுவார்கள். பொரித்து ஆறிய பிறகு சாக்கில் கட்டி, பரணில் போட்டுவிடுவார்கள். பிறகு தீபாவளியை ஒட்டி, தங்களுக்கு வரும் ஆர்டரைப் பொறுத்து, கூட்டை திரும்பவும் சூடு செய்து, ஜீரா தயார் செய்து அதில் போட்டு ஊறவைத்து எடுத்துவிடுவார்கள். எப்போதுமே கிச்சன் பக்கம் போகாமல் இருப்பது நல்லது இல்லையா?


எனக்கு உணவில் காம்பினேஷன் இருந்தால்தான் பிடிக்கும். மனைவியும் ஒரு காம்பினேஷன் வைத்திருக்கிறார் (கண்டதிப்பிலி சாத்துமது, பருப்புத் தொகையல் என்பது போல). ஆனால் நான் என்னுடைய காம்பினேஷன் மாத்திரமே செய்யச் சொல்லுவேன் (ஏனென்றால் நான் ஜனநாயகவாதி). வெண்பொங்கல் செய்தால் முள்ளங்கி சாம்பார். ஒருவேளை முள்ளங்கி இல்லை என்றால், புதிதாகத் தயார் செய்த எலுமிச்சை கார ஊறுகாய்.  மோர்க்குழம்பு செய்தால், கத்தரி புளிக்கூட்டு, உருளை அல்லது சேப்பங்கிழங்கு ரோஸ்ட்,  வெந்தயக் குழம்பு என்றால், கீரைக்கூட்டு... என்று ஒரு லிஸ்ட் வைத்திருக்கிறேன். அப்படித்தான் வீட்டில் தயார் செய்வார்கள்.  மனைவி வீட்டில் வெண்டைக்காய் புளிக்கூட்டு, கத்தரி வதக்கல் போன்றவை தயார் செய்வார்கள். ஆனால் நான் அவற்றை விரும்புவதில்லை. கத்தரிக்காய்னா, பாசிப்பருப்புக் கூட்டு, புளிக்கூட்டு அல்லது பொடி அடைத்த-தூவிய இல்லை கரேமது. இப்படி ஜனநாயகவாதியா இருந்திருக்கிறேன்.


ஸ்ரீராம் பகிரும் படங்கள் 


எவ்வளவு வழிந்தாலும் தரையோ, கால்களோ ஈரமாகவில்லை!







KGG பக்கம் : 

திடீர் தொடர் கதை. 

கதை பெயர் : SAROJA DeVi 
கொஞ்சம் வில்லங்கமான பெயர்தான். ஆனால் - பயப்பட எதுவும் இல்லை. 

01 : " நான் யார் தெரியுமா? " 

அன்று காலைதான் ESKS private detective ஏஜென்ஸியில், தனியார்  துப்பறிவாளராக பதிவு செய்து வந்திருந்தான் பா பா. துப்பறிபவர் என்பதால், அவனைப் பற்றி முழு விவரங்கள் நமக்கு இப்போது தெரியவில்லை. பெயரே உண்மை பெயரா அல்லது புனைபெயரா என்று கூட தெரியாத நிலையில், தொடங்குகிறோம். 

பதிவு செய்து வெளியே வந்த உடனேயே, அந்தக் காலத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய் சங்கர் போல சுற்று முற்றும் எச்சரிக்கை பார்வை பார்த்தபடி வெளியே வந்தான். அப்பொழுது அவனை ஏதோ ஒரு பனிப்புயல் கடந்து விரைவாக சென்றது போல ஓர் உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. 

வீட்டுக்கு வந்து மொபைல் ஃபோனை எடுத்தவுடன், தெரியாத எண்ணிலிருந்து ஒரு வாட்ஸ் ஆப் செய்தி வந்தது. 

" நண்பரே! உங்கள் வேலைக்கு மிகவும் பயன்படும் ஒரு சாதனம் பற்றித் தெரிந்துகொள்ள, கீழ்க்கண்ட QR கோடுக்கு 50 ரூ அனுப்புங்கள். உங்களை நேரில் வந்து சந்திக்க நாளை ஒரு appointment நேரம் கொடுங்கள். வந்து விவரமாக சொல்கிறேன்." 



பா பா பதில் செய்தி அனுப்பினான் :

" ஐயா நீர் யார் என்பதே எனக்குத் தெரியாது. உங்களுக்கு நான் யார் தெரியுமா? என் பெயர், என்ன வேலை என்று தெரியுமா?  "

உடனே வந்தது ஒரு பதில். 

"உங்கள் பெயர் : so & so (சரியான பெயர் இருந்தது - இங்கே கொடுக்கவில்லை) 
நீங்கள் ESKS துப்பறியும் நிறுவனத்தில் இன்று காலை 10. 40 க்கு ஒரு துப்பறிவாளராக இன்று காலை வேலையில் சேர்ந்துள்ளீர்கள்" 

உரையாடல் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்ந்தது. 

" அட! நீங்கள் அந்த ESKS நிறுவன ஆளா? "

" இல்லை " 

" அப்போ எப்படி என்னைப் பற்றிய விவரங்கள் உங்களுக்குத் தெரிய வந்தது? " 

" அது பற்றி நாளை நேரில் சந்திக்கும்போது விவரமாக சொல்கிறேன்." 

" சரி. ஐம்பது ரூபாய் அனுப்புகிறேன். நாளைக் காலை பத்துமணிக்கு வந்து சந்திக்கவும். என் விலாசம் தெரியுமா?"

" உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விலாசத்தில்தானே இருக்கிறீர்கள்? "

" ஆமாம். " 

" அப்போ நாளைக் காலை சரியாக பத்து மணிக்கு வருகிறேன். "

" இருங்க என்னுடைய ஆதார் அட் .. " 

" எல்லாம் நாளை சொல்கிறேன்" 

(தொடரும்) 

= = = = = = = = = = 


15 கருத்துகள்:

  1. சிறிய தொடர் என்றாலும் நல்லா ஆரம்பிச்சிருக்கீங்க.

    டேட்டா திருடர்களைப் பற்றிய தொடர் போலிருக்கிறது. பொருத்தமான படம்.

    பதிலளிநீக்கு
  2. கேள்விக்கும் பதிலுக்கும் நிற வித்தியாசம் கொடுக்க மறந்துவிட்டீர்களா?

    பதிலளிநீக்கு
  3. தேவலோக எஃபெக்ட் வருவதற்கு உபயோகிக்கும் டிரை ஐஸில் வரும் புகை குளிர்ச்சியாக இருக்கும் என நினைத்துக்கொண்டிருந்தேன். நடுக் கூடத்தில் எதற்கு பொங்கல் பானை எஃபெக்ட் கொடுத்திருக்கிறார்கள்? ஶ்ரீராம் விளக்குவாரா?

    பதிலளிநீக்கு
  4. அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார் சம்பளம்... இதில் மதமாற்ற அரசியல் இருக்கிறது. எம்பிக்கள், எம் எல் ஏக்கள், கவுன்சிலர்கள், மந்திரி மேயர் முதலான பணிக்ளில் இருப்பவர்கள் ஊழல் செய்கிறார்கள், அதனால் அவர்களுக்கு மாதம் பத்து ரூபாய்தான் சம்பளம் என அரசு அறிவிக்கலாமே.

    தாசில்தார்கள் முதற்கொண்டு அரசுப் பணியில் உள்ளவர்கள் லஞ்சம் வாங்குவதால் ஓய்வூதியம் கிடையாது, மாதச் சம்பளம் இரண்டு ரூபாய்கள் என அரசு அறிவித்தால் பொதுமக்கள் சந்தோஷப்படுவரே.

    பழைய முதலமைச்சருக்கு மாத்திரம் சம்பளம் கொடுக்கலாம். அவர் ஏழை. மொத்தமே இந்த எழுபது வருட மக்கள் பணியில் ஐம்பதாயிரம் ரூபாய்தான் சேர்த்திருக்கிறார். வீடு நிலம் வாகனம் என எதுவும் இல்லாத ஏழை.

    பதிலளிநீக்கு
  5. குழந்தைகளின் எண்ணிக்கை பற்றி கவலைப்பட வேண்டியது முதலில் பெற்றோர். ஒரு மத்த்தைச் சார்ந்தவர்கள், எல்லாம் மேலே உள்ளவன் பாத்துக்குவான்னு பெத்துக்கறாங்க. ஒரு மத்த்தைச் சார்ந்தவர்கள், நமக்கு ஏன் கஷ்டம், நாட்டுக்கும் வீட்டிற்கும் நம் சொந்த சௌகரியத்துக்கும் கஷ்டம் என ஓரிரண்டோடு நிறுத்திவிட்டு, பிறகு நாட்டைப் பற்றி, சமூகத்தைப் பற்றிக் கவலைப்படுகிறோம்.

    இதற்கு தீர்வு, சிறுபான்மையினர் என்ற பெயரில் இருக்கும் எல்லாச் சலுகைகளையும் ஒழிப்பதுதான். அரசின் உதவி சரிசம்மாக எல்லாக் குடும்பத்திற்கும் போகணும். பத்து குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு என்ன கொடுக்கிறதோ அதையே குழந்தைகள் இல்லாத ஓரிரு குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கும் கொடுக்கணும்.

    யூகேயில் அரசின் நலத் திட்டங்களால் விளைந்த அனர்த்தங்களை அங்கு முதல் முறையாகச் சென்றிருந்தபோது உள்ளூர் பத்திரிகையிலும், பிறர் சொன்னதைக் கேட்டும் தெரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
  6. நம் நாட்டில் ஜனத்தொகையை இப்போதுதான் கட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறோம், இதில் அரசியல், மதம், மருத்துவம் போன்ற காரணங்களை காட்டி அதிகம் குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் எ ன்கிறார்கள். சம்பந்தபட்ட இளைய தலைமுறையோ திருமணம் செய்து கொள்ளவே யோசிக்கும் பொழுது குழந்தைகளுக்கு எங்கே போவது?

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....

    கேள்விகள் மற்றும் பதில்கள் நன்று..... Reels - சுதந்திரம் தவறாக பயன்படுத்த உதவும் என்பதற்கான சாட்சி. அரசு முயன்றாலும் எல்லா reels ஐயும் வெளியிட தடை செய்ய முடியாது. Democratic நாடுகளில் இது சாத்தியமல்ல. North Korea மற்றும் China போன்ற நாடுகளில் மட்டும் நடக்கும்.

    இரயிலில் உணவின் தரம் - லாபம் மட்டுமே வேண்டும், அதுவும் செலவு அதிகம் (ஊழல்) எனும்போது லாபம் ஈட்ட ஒரே வழி தரத்தைக் குறைப்பது மட்டுமே.

    பதிலளிநீக்கு
  8. கதை - பெயர் கொஞ்சம் விவகாரமாக இருந்தாலும் தொடக்கம் நன்றாகவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. வெளியூரிலிருந்து திரும்பினால் எந்நேரம் ஆனாலும் சமைத்து சாப்பிடுவது - நல்லது. பல சமயங்களில் நாக்கு செத்துப்போய் திரும்பி வந்து வீட்டில் சுடச் சுட சாதம், வெத்த குழம்பு, சுட்ட அப்பளம் கிடைத்தால் கூட தேவாமிருதமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  10. நான் சமீபத்தில் கலந்து கொண்ட திருமணத்தில் மணமகளை மாலை மாற்ற அழைத்து வந்த பொழுது இப்படி டிரை ஐசினால் புகை வரச் செய்தார்கள். பார்க்க நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  11. கதை நன்றாக துவங்கி இருக்கிறது இருந்தாலும் பெயரை மாற்றுங்கள், எ.பி.க்கு என்று ஒரு தரம் இருக்கிறது. மேலும் பெண்கள் சரோஜா தேவி படிக்கிறேன் என்று சொல்ல முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரோஜா தேவி படம் பார்க்கிறேன் என்று சொல்வது ஏடாகூடமாக இருக்காதா?

      நீக்கு
  12. ரீல்ஸில் வன்முறையா? என் கண்ணில் அப்படி ஏதும் படவில்லையே? காமெடிதான் நிறைய பார்க்க கிடைக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. //உங்கள் அம்மா செய்முறைகளை நீங்கள் எழுதி வைத்துக் கொண்டுள்ளீர்களா?// எந்த காலத்தில் இருக்கிறீர்கள் நெல்லை? எழுதி வைத்துக் கொள்ளும் காலமெல்லாம் மலையேறி விட்டது, இது யூ டியூப் யுகம்.

    பதிலளிநீக்கு
  14. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!