நம் மூத்த பதிவர் (ஹாஹா) கீதா ரங்கன் அக்கா மற்றும் அவருடைய கணவருடன் ஒரு நாள் காரில் பிரயாணம் மேற்கொண்டோம். அன்று பல இடங்களைப் பார்த்தோம். அன்று ஷிவன சமுத்ரா என்ற இடத்திற்குச் சென்றோம், இரண்டு நீர்வீழ்ச்சிகளைப் பார்க்கலாம் என்று. அப்போது, அந்தப் பகுதியில் மிகவும் புகழ்பெற்ற மத்தியரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்றோம். நான் மத்தியரங்கம் கோயிலுக்குச் சில முறை சென்றிருந்திருக்கிறேன். பாலாலயம் ஆவதற்கு முன்பும் சென்றிருக்கிறேன். கடந்த இரண்டு வருடங்களாக பாலாலயத்தில் இருப்பதால், கோயில் மதிளை ஒட்டியே ரங்கநாதரையும் தாயாரையும் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். கடந்த இரண்டு முறையும் அவரைத்தான் தரிசனம் செய்தோம். கோயிலின் உள் செல்லவில்லை (பழுதுபாக்கும் பணிகள் தொடங்கிவிட்டதால்).
இந்தப் பதிவு சோழர் காலக் கோயில் என்று நான் நினைக்கும் சோமஸ்கந்தர் கோயில் பற்றியது என்றாலும், மத்தியரங்கம் ரங்கநாதர் ஆலயப் படங்களுடன் ஆரம்பிப்பது பொருத்தம் என்று நினைக்கிறேன் (வேறு எப்போது அந்தச் சந்தர்ப்பம் வரும் என்று தெரியவில்லை)
மத்திய ரங்கம் ரங்கநாதர் கோயில்
மத்தியரங்கம் ரங்கநாதர்
கோயில் பாலாலயத்தில் (அதாவது சம்ப்ரோக்ஷணம் அல்லது கும்பாபிஷேகம் நட த்துவதற்காக, கோயிலைப் புதுப்பிக்கும் பணி தொடங்கும். தேவையான வேலைகள் என்ன என்ன மேற்கொள்ளப்போகிறார்கள் என்பதைப் பொறுத்து, அந்த அந்தப் பகுதிகளுக்குச் செல்ல இயலாது. உதாரணமாக முழுக் கோயிலையும் புனருத்தாரணம் செய்வதாக நிச்சயித்து மூலவர் சன்னிதியையும் சரி செய்வதாக எண்ணினால், மூலவர் பாலாலயத்தில் இருக்கிறார் என்பதால் மூலவரை சேவிக்க இயலாது) இருக்கும்போது, மூலவரை ஒரு குடத்தில் ஆவாஹனம் செய்வர். பல கோயில்களில், மூலவரை ஓவியம் மூலம் ஆவாஹனம் செய்து, அதன் முன்பு உற்சவ விக்கிரஹங்களை வைத்து தினசரி ஆராதனைகள் செய்வர்.
ஓவியமே மூலவராகக் கொள்ளப்படுவதால், அதனை புகைப்படம் எடுக்கத் தடைசொல்வர் (சென்ற வருடத்தில் திருவாலி திருநகரியில், மற்றும் திருஅன்பில் திவ்யதேசங்களில் அந்த அனுபவம்). இங்கு, அதாவது மத்திய ரங்கத்தில், சயன மூர்த்தியாகவே ஆவாஹனம் செய்து வைத்திருந்தார்கள். அதனால் சேவித்த மனத் திருப்தி கிடைத்தது.
முதல் படம் ரங்கநாதர். இரண்டாவது படம் தாயார்.
ஒரு கோயிலுக்குச் செல்லும்போது, அங்குள்ள அர்ச்சா மூர்த்தியை, கல்லினால், அல்லது பொன்னால் வடிக்கப்பட்டது என்று நினைப்பதே தவறாம். அந்த அர்ச்சா மூர்த்தியே பெருமாள் என்ற எண்ணம் நம் மனதில் உதிக்கவேண்டும். பெருமாள் அந்த வடிவத்தில் நமக்குக் காட்சியளிக்கிறார் என்ற எண்ணமே நமக்கு இருக்கவேண்டும். அரச சபையில் இருக்கும்போது எவ்வளவு பய பக்தியுடன் இருப்போம், அதைவிட ஒரு படி மேலாகவே இறைவன் சந்நிதானத்தில் இருக்கவேண்டும். அதனால்தான் சப்தம் செய்யாமல் தரிசனம் செய்யவேண்டும் என்று சொல்கின்றனர். நான் பெருமாள் கோயிலைப் பற்றி எழுதியிருப்பது எல்லா ஆலயங்களுக்கும், சிவாலயங்களுக்கும் பொருந்தும். இலிங்க வடிவில் நமக்குக் காட்சியளித்தாலும், அங்கு சிவபெருமானே காட்சி தருகிறார். அதனால்தான் அவரை நோக்கிக்கொண்டு நந்ந்தியெம்பெருமான் பவ்யமாக இருக்கிறார். இந்த எண்ணம் நமக்கு இயல்பாக வரணும் (எனக்கு இப்போதான் வர ஆரம்பித்திருக்கிறது).
ஆழ்வார் ஆச்சார்யார்கள்.
இணையத்தில் பார்த்த மத்தியரங்கம் ரங்கநாதர் மூலவர் (பாலாலயத்திற்கு முன்பு சென்றிருந்த சமயங்களில் சேவித்திருக்கிறேன். இப்படித்தான் இருப்பார்)
பொதுவா மத்தியரங்கம் ரங்கநாதரைச் சேவித்த பிறகு சத்யாகாலம் செல்வோம். அது வைணவர்களுக்கு, அதிலும் வடகலை சம்ப்ரதாயத்துக்கு மிக முக்கியமான தலம். திருவரங்கத்தில் கலாபக் காலத்தின்போது சுருதப்பிரகாசிகா நூலையும், சுருதப்பிரகாசிகா பட்டரின் இரு குமாரர்களையும் அழைத்துக்கொண்டு திருவரங்கத்திலிருந்து புறப்பட்ட வேதாந்த தேசிகர், காடு மலையைத் தாண்டி, கர்நாடகா வந்து சேர்ந்தார். அவர் சத்யாகாலம் க்ஷேத்திரத்தில் பல வருடங்கள் தங்கியிருந்தார். (அந்தச் சமயத்தில் வேதாந்த தேசிகரை விட மிக மூத்தவரான பிள்ளைலோகாச்சார்யார், அழகிய மணவாளன் விக்ரஹ மூர்த்தி மற்றும் ஆபரணங்களுடன், ஸ்ரீரங்கம் உற்சவரைப் பாதுகாக்க மதுரை நோக்கிச் சென்றார்) சத்தியாகாலக் கோயில் பற்றியும் அங்கு இருக்கும் காவிரி நதி பற்றியும் எழுதும் சந்தர்ப்பம் இதுவல்ல. அன்று நாங்கள் சத்யாகாலம் போகவில்லை. ஆனால் கொஞ்சம் நடக்கும் தூரத்தில் இருந்த இந்த சிவாலயத்திற்குச் சென்றோம். காரணம் நுழைவாயில் மீது இருந்த பெரிய நந்தியும் கோயிலின் பழைமைத் தோற்றமும். இந்த சோமஸ்கந்தர் கோயிலுக்கு நாங்கள் இதுவரை சென்றதில்லை. அன்றைக்கு எங்களுக்கு தரிசனம் வாய்க்கணும்னு இருந்திருக்கு. அதனால் அந்த வழியில் காரை நிறுத்திவிட்டு கோயிலுக்குள் சென்றோம்.
இந்தக் கோயில் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் விஸ்தாரமாக அமைந்துள்ளது. காலம், அதன் பழம் பெருமையைக் குறைத்திருந்தாலும், அப்போதிருந்த சந்நிதிகள், பிரம்மாண்டமான நுழைவு வாயில், தமிழக கோயில்களில் காணப்படுவது போல, நுழைவாயில் இருபுறமும் ஆடும் அப்ஸரஸ் பெண்கள், அதேபோன்ற டிசைன் என்ற ஒரு உணர்வைக் கொடுத்தது. என்ன வித்தியாசமாகத் தோன்றியது என்றால், பல கல்வெட்டுகள் பெயிண்ட் அடிக்கப்பட்டுக் கிடந்தது. தமிழ் கல்வெட்டுகள் என்பதால் பொதுவாக கல்வெட்டுகளுக்கு முக்கியத்துவம் கிடையாமல் இருந்தது.
இந்தக் கோயிலின் தோற்றம், அமைப்பு எல்லாமே எனக்கு சோழர் காலக் கோயில்களை நினைவுபடுத்தியது. அதனால் இந்தத் தொடரிலேயே இந்தக் கோயிலையும் நுழைத்துவிட்டேன். சாளுக்கியர்களை வென்றபோது கர்நாடகாவின் பகுதிகளையும் சோழர்கள் ஆண்டனர். அதனால் அவர்களுடைய கலைகளும் கர்நாடகாவில் பரவின. 10ம் நூற்றாண்டில் (970களில்) கர்நாடகப் பகுதிகளை இராட்டிரகூடர்கள் ஆண்டனர். அதைத் தொடர்ந்து மேலைச் சாளுக்கியர்கள் வசம் இந்தப் பகுதி வந்தது. தைலபன் என்ற அரசன் சாளுக்கியர்களில் முதல்வன். முதலில் மான்யகேடம் தலைநகராக அமைந்தது. பிறகு அவர்கள் ‘கல்யாணி’ நகரை தலைநகராகக் கொண்டனர். ஆனால் கர்நாடகப் பகுதியில் கிபி 4ம் நூற்றாண்டிலிருந்து 10ம் நூற்றாண்டுவரை ஆண்ட கங்கமன்னர்களில் ஆட்சியே பொற்காலம் என்று கூறப்படுகிறது. கன்னட இலக்கியத்திற்கும் சிற்பக்கலைக்கும் அவர்கள் அடித்தளம் இட்டனர். அவர்கள் முதலில் கோலார் பகுதியையும் பிறகு தலக்காடையும் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். அவர்கள் சமண சமயத்தை ஆதரித்தனர். அவர்கள் காலத்தில்தான் (10ம் நூற்றாண்டு) சிரவணபெலகோலாவில் கோமதீஸ்வரர் சிலை நிறுவப்பட்டது. பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் தஞ்சையிலிருந்து சோழ அரசர்கள் கங்கர்களை/மேலைச் சாளுக்கியர்களைத் தோறடித்து இந்தப் பகுதியைக் கைப்பற்றி அவர்கள் கீழ் கொண்டுவந்தனர். கிபி 987ல்ருந்து கிபி 1120 வரை இந்தப் பிரதேசம், குறிப்பாக கங்கவாடி பகுதி (இன்றைய மைசூர், மாண்டியா, கோலார் மற்றும் பெங்களூர் பகுதிகள்) சோழ அரசர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. 1120ல் ஹொய்சாள அரசன் விஷ்ணுவர்தன், சோழர்களைத் தோற்கடித்தான். சோழர்கள் நிறைய கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள். பெங்களூர் அல்சூரில் சோமேஸ்வரர் கோயில், தொட்டமளூர் அப்ரமேயர் கோயில், தலக்காடு வைத்தீஸ்வரநாதர் கோயில் போன்றவைகள் உட்பட.
சிரவணபெலகோலா கோமதீஸ்வரர். இன்னும் இந்த இடத்திற்குச் செல்லும் சந்தர்ப்பம் வரவில்லை. இரண்டு படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அது எதனால் என்று தெரியவில்லை. காலத்தாலா இல்லை வேறு இடத்திலும் இதேபோன்ற பாஹுபலி சிலை இருக்கிறதா என்பது புரியவில்லை.
வாருங்கள் இனி சோமாஸ்கந்தர் கோயில் படங்களைப் பார்ப்போம்.
நாங்கள் சென்ற நுழைவாயில்.
நுழைவாயிலின் மேலே பெரிய நந்தி சிற்பம்.
நுழைவாயிலின் சுவற்றில், விநாயகர், எட்டு கரங்களுடன் கூடிய துர்க்கை(?)
நுழைவாயிலின் இரு புறத்திலும் உள்ள ஆடல் மகளின் சிற்பத்திற்கு மேலே
அழகிய சிறிய அளவிலான சிற்பங்கள் மாலை கோர்த்ததைப் போல அமைக்கப்பட்டிருந்தன.
பெண் சிற்பத்தைப் பார்த்த உடனேயே தென்னிந்தியப் பெண் என்று தெரிகிறதல்லவா?
யானையைத் தாக்கும் சிம்ஹம்.
இந்த மாதிரி சிலைகளுக்கு/சிற்பங்களுக்கு யாரேனும் போஸ் கொடுப்பாங்களோ?
அங்கிருந்த பூஜாரியின் அனுமதியுடன் சிவன் சன்னிதியைப் படங்கள் எடுத்தேன். மிக அழகிய உருவம். அங்கிருந்த சிற்பங்கள் எல்லாமே என் கண்ணைக் கவர்ந்தன.
சோமஸ்கந்தர் மூலவர் தெளிவாகத் தெரியும் படம் இது. துவாரபாலகர்களும்
தெரிவர். இந்த சோமேஸ்வர லிங்கம் ரங்கநாதர் கோயிலுக்கும் முந்தைய காலத்தையதாம்.
தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
ஆமாம்… பாண்டியனின் மீன் சின்னம்தான். அது எப்படி இங்கு வந்தது? அடுத்த வாரம் விடை தெரியும்.
சிவனைத் தரிசனம் செய்துவிட்டோம். இன்னும் அம்மனை தரிசிக்காமல் இருக்கலாமா? சிவன் கோயில் பட்டர், எங்களிடம், அம்மன் சந்நிதிக்குச் சென்று அங்கு அம்மனையும் அவர் முன்னால் இருக்கும் ஸ்ரீசக்கரத்தையும் தரிசியுங்கள். அங்குள்ள பூஜாரியிடம் உங்கள் குறைகளைச் சொன்னால் பிரஸ்னம் பார்த்துத் தீர்வு சொல்லுவார். அவர் மிகவும் புகழ் பெற்றவர் என்று சொன்னார். அடுத்த வாரம் மிகுதிப் பகுதியைப் பார்க்கலாம்.
(தொடரும்)
கோயில் படங்கள் தெளிவாக இருக்கின்றன. பார்க்கும்போதே மனிதர்கள் சில சிற்பங்களையும், கோயில் சுவர், மற்றும் கூரைகள் ஆகியவற்றை சிதைத்திருப்பது தெரிகிறது.
பதிலளிநீக்குJayakumar