31.8.26

திங்கக்கிழமை   :  தஹி வாலே ஆலூ - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 

ஹி வாலே ஆலூ

 ஹி வாலே ஆலூ சப்ஜிக்கு முக்கியமாச் சின்ன உருளைக்கிழங்கு தான் நல்லா இருக்கும். அது கிடைக்கலைனா வேறே வழி இல்லைனா பெரிய உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோல் உரித்துக் கொண்டு அதன் சைசுக்குத் தகுந்தாற்போல் நாலு அல்லது ஆறு துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும்.

ஒரு சாத்துக்குடி சைஸ் உருளைக்கிழங்கில் சுமார் 2 அல்லது 3 போதுமானது. ஆட்களைப் பொறுத்து ஒன்று கூட்டிக்கலாம் தேவையானால்.

சின்ன உருளைக்கிழங்கு எனில் சுமார் கால் கிலோ அல்லது பத்து/பதினைந்து உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.

இதில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய்த் தூள், சேர்த்து உருளைக்கிழங்கைக் கலந்து வைக்கவும். இது அவரவர் விருப்பம்  சாதாரண மி.தூள் அல்லது காஷ்மீரி மி/தூள். இதெல்லாம் இப்போத் தான் பிரபலமாக இருக்கு. நான் சமைக்க ஆரம்பிச்சப்போ எல்லாம் சாதாரண மிளகாய்த் தூள் தான் பயன்படுத்தினோம். இன்னும் சொல்லப் போனால் நான் காஷ்மீரி மிளகாய்த் தூளே வாங்கியதில்லை.

உருளைக்கிழங்குகளை எண்ணெயில் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். ஒரு சிலர் எண்ணெயில் பொரித்தெடுப்பார்கள். அது அவ்வளவாக எனக்குப் பிடிப்பதில்லை. சின்ன உருளைக்கிழங்கு கறிக்குச் செய்வதை விட இன்னும் கொஞ்ச நேரம் வறுத்துக் கொண்டு (கறுப்பாக ஆகாமல் பார்த்துக்கணும்.) தனியாக வைக்கவும்.

இதுக்குத் தேவையான மற்றப் பொருட்கள்.

நல்ல தயிராக மேல் ஆடையை நீக்காமல் இருந்தால் நல்லது. சுமார் அரை லிட்டர் எடுத்துத் தனியாக  வைச்சுக்கவும்.

மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி.

தனியாப் பொடி இரண்டு தேக்கரண்டி

வறுத்த சீரகப் பொடி ஒரு ;தேக்கரண்டி,

பெருங்காயத் தூள் தேவை எனில் அரைத் தேக்கரண்டி சேர்த்துக் கலந்து/கடைந்து வைக்கவும்.

இப்போது மசாலாப் பொருட்கள் தேவையானது.

தக்காளி நல்ல சிவந்த பழுத்த தக்காளி அல்லது கடையில் கிடைக்கும் தக்காளி ப்யூரி(விரும்பினால்) நான் தக்காளியைத் தான் வெந்நீரில் போட்டுத் தோலை உரித்துக் கொண்டு மிக்சி ஜாரில் போட்டுப் ப்யூரி எடுத்துக்கணும். பெரிய தக்காளி எனில் 2 சின்ன நடுத்தரத் தக்காளி எனில் 3 அல்லது 4.

ஒரு பெரிய வெங்காயம், சும்மாச் சின்னதாக நறுக்கிக்கலாம். ஏனெனில் இதை அரைக்கத் தான் பயன்படுத்தப் போறோம்.

பிடித்தமானால் பூண்டு ஒன்றிரண்டு பற்கள். (நான் பூண்டே சேர்க்கமாட்டேன்.)

வதக்கத் தேவையான சமையல் எண்ணை,

ஒரே ஒரு பச்சை மிளகாய்,

ஒரு அங்குலம் இஞ்சித் துண்டு தோல் சீவி. 

இப்போது மசாலாவுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களை எண்ணெய் விட்டு வதக்கிக் கொண்டு அரைத்து எடுத்து வைச்சுக்கலாம். அல்லது பச்சையாகவே அரைச்சு விட்டுப் பின்னர் எண்ணெயில் அந்த மசாலாவைப் போட்டு நன்கு சுருள எண்ணெய் கசியும் வரை வதக்கிக்கலாம்.

நடுவில் நேரம் கிடைக்கையில் தயிர், மஞ்சள் பொடி, உப்பு,  பெருங்காயப்பொடி, மிளகாய்ப் பொடி அரை தேக்கரண்டி, மல்லிப் பொடி ஒரு தேக்கரண்டி, ஜீரகப் பொடி அரைத் தேக்கரண்டி அந்தத் தயிரில் சேர்த்து நன்கு கடைந்து வைத்துக்கொள்ளவும்.

இப்போ ஒரு நல்ல வாயகன்ற கடாய் அல்லது வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு காய்ந்ததும் சர்க்கரை ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கொண்டு அது உருகிக் கருகும்போது சீரகம், சோம்பு சேர்த்துக் கொண்டு பெருங்காய்ப் பொடியும் தேவையானால் போட்டுக்கவும்.

பாதி பெரிய வெங்காயம் எடுத்துக் கொண்டு பொடியாக நறுக்கி முன்னரே தயாராக வைச்சுக்கணும். அதை இப்போக் காய்ந்த எண்ணெயில் போட்டுக் கண்ணாடிப் பதம் வரும் வரைக்கும் நன்கு வதக்கவும்.

தேவையானால் அவரவர் காரத்துக்கு ஏற்றபடி இன்னும் கொஞ்சம் மி.தூள், மல்லித்தூள், சீரகத்தூள் அரைத் தேக்கரண்டி சேர்த்து. அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைப் போட்டு நன்கு கிளறவும் அடுப்பைக் கொஞ்சம் பெரிதாகவே வைத்துக் கொண்டு கிளறிக்கலாம். தேவையானால் வெண்ணெய் கொஞ்சம் சேர்க்கலாம். இது வெண்ணெய்/எண்ணெய் பிரிந்து விழுது சுருள வரும்வரைக்கும் வதக்கணும். இப்போக் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். 

இப்போது வறுத்துத் தனியாக வைச்சிருக்கும் உருளைக்கிழங்குகளை கொதிக்கும் குழம்பில் (க்ரேவி) சேர்க்கவும். நன்கு கிளறவும். உருளைக்கிழங்கு உடையாமல் பார்த்துக்கவும். தேவையானால் ருசி பார்த்துவிட்டுக் காரம் சரியா இருக்கானு பார்த்துட்டுத் தேவையானால் காரம், உப்புச் சேர்க்கலாம்.

ஆனால் கட்டாயமாக கரம் மசாலா க்ரேவியின் அளவுக்குத் தக்கவாறு ஒரு தேக்கரண்டி சேர்க்கலாம். நன்கு சேர்ந்து கொதிக்கையில் கசூரி மேதி இரண்டு தேக்கரண்டி எடுத்துக் கைகளால் கசக்கிச் சேர்க்கவும். வீட்டில் பச்சைக் க்ரீம்  இருந்தால் அல்லது கடையில் ஸ்ப்ரேயரோடு கிடைக்கும் க்ரீம் இருந்தால் அதைக் கீழே இறக்கியதும் சுற்றிக் கோலம் போட்டாற்போல் போட்டுவிட்டுக் கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். இப்போது உங்கள் தஹி ஆலூ தயார். சமைத்த சூடான சாதம், சப்பாத்தி, பராட்டா, பூரி ஆகியவற்றோடு சேர்த்துச் சாப்பிடலாம்.


பி.கு. சின்ன உருளைக்கிழங்கை வதக்கும் முன்னர் என் நாத்தனார் அவற்றில் ஒரு பெரிய தைக்கும் ஊசியை வைத்து நாலாபுறங்களிலும் துளைகள் போடுவார். இது எல்லாம் ரொம்பவே பொறுமையாகச் செய்யணும். இல்லைனா உ.கி. உடைஞ்சு நசுங்கிடும். பின்னர் அவற்றைக் கொதிக்கும் மசாலாவில் போட்டுக் கொதி விடும்போது காரம் எல்லாம் அந்தத் துளைகள் வழியாக உள்ளே போய்  இறங்கும்.

நல்ல பிஞ்சு வெண்டைக்காய் பொதுவாக வடமாநிலங்களில் ஒரே சீராகக் கிடக்கும். அவற்றை வாங்கிக் கழுவிக் காய வைத்துவிட்டு (துணியால் துடைச்சு) பின்னர் நுனியை மட்டும் கீறி விட்டு வெண்டைக்காயை இரண்டாகப் பிளந்து உள்ளே காரப்பொடி+மல்லிப் பொடி+மஞ்சள் பொடி+சீரகப் பொடி+ கரம் மசாலா+ உப்பு+ பெருங்காயம் சேர்த்தக் கலந்த மசாலாப் பொடியை அடைத்துவிட்டுச் சிறிது நேரம் வைத்துவிட்டு வாணலியில் கொஞ்சமாக எண்ணெய் விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு வதக்கி எடுத்துக் கொண்டு மற்றவை இதே போல் க்ரேவி செய்து கொண்டு பரிமாறும் முன்னர் வெண்டைக்காய் போட்டுக் கிளறிவிட்டுப் பரிமாறலாம். கொத்துமல்லி எல்லாம் தூவித் தயாராக வைச்சுக்கணும். ஏனெனில் வெண்டைக்காயை முன்னாடியே போட்டுட்டாப் பின்னர் அது உள்ளே போய் ஊறிக் கொழகொழவென ஆக வாய்ப்பு இருக்கு.

=======================================================================================

குறியீடு 




நீ பிறந்தபோது உன் பளபளப்பில் பூரித்துப் போயிருப்பார் உன் தயாரிப்பாளர்.
உன்னை வாங்கியபோது பெருமையில் வீங்கியிருப்பார் உன் உரிமையாளர். வெளியாள் யாரையும் தொட்டுக்க கூடப் பார்க்க விட்டிருக்க மாட்டார்.
ஏ ஸி என்ன... கண்ணாடி என்ன.. மெத்தென்ற இருக்கைகள் என்ன... கதவை அறைந்து யாரும் சாத்தினால் கூட கண்கள் கலங்கும்..
உன் ஒவ்வொரு பயணத்துக்குப் பின்னும் உன்னை அன்புடன் நீராட்டி அக்கறையுடன் துடைத்திருப்பார் உன்னைப் பெற்றவர்!
நணபர்களுக்கும் உறவினர்களுக்கும் நீ ஒரு பெருமையின் சின்னமாய் அந்தஸ்தின் அடையாளமாய் காட்டப்பட்டிருப்பாய்.
வெளியில் நிறுத்தும்போதும் வெயிலில் நிறுத்தத் தயங்கியிருப்பார்.
எல்லாம் உன் இளமை தீரும் வரைதான்... உன்னால் பயன் கிடைக்கும் வரைதான்.
அப்புறம்...
நீ கைவிடப்பட்டாய்....
மழையில் நனைந்தாய்.. வெயிலில் உலர்ந்தாய் .. கவனிப்பாரின்றி வாடினாய்..
இன்று -
உன்னைத் சீந்துவார் யார்? மூலையில் எறிந்திருக்கிறார்கள்... தொழுநோயாளியைக் கண்டவர் போல் விலகிச் செல்கிறார்கள்..
அன்பான வார்த்தைகள் சொல்ல வாயில்லை; ஆறுதலாய் தடவிக் கொடுக்க கைகள் இல்லை!
உனக்கு மட்டுமா இந்த நிலைமை? சமயங்களில் எங்களில் சிலருக்கும்தான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!