Nokkal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Nokkal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10.11.14

'திங்க'க்கிழமை : நொக்கல் மற்றும் சம்பாரப் புளி




                                                                     
 
ஒரு சமையல் புத்தகம் கண்ணில் பட்டது. 1971 ஆம் வருடம் எழுதப்பட்டது. மறு பதிப்புகள் வந்து கொண்டே இருக்க, என் கையில் இருப்பது 2001ம் வருட பதிப்பு.

நிறைய ரெசிப்பிகள் ரொம்பப் பழைய முறையாக இருக்கிறது.

அதில் இந்த நொக்கல் என்ற பெயரில் இருக்கும் வஸ்துவை நான் கேள்விப் பட்டதுகூட இல்லை என்பதால் அதனை இங்கு பகிர்கிறேன்.

(கீதா சாம்பசிவம் மேடம், உங்களிடமிருந்து பத்து வரிகளுக்குக் குறையாமல் கமெண்ட் எதிர்பார்க்கிறேன்)

=============================================

தேவையான பொருட்கள் :
 
1. கடலை மாவு  -  கால் படி.
2. அரிசி மாவு      -  கால் ஆழாக்கு.
3. நெய்                 -  4 ஸ்பூன்.
4. ஏலக்காய்         -  4
5. சர்க்கரை          -  ஒன்றரை ஆழாக்கு
 
செய்முறை :
 
கடலை மாவையும். அரிசி மாவையும் நெய் சேர்த்தும், நீர் விட்டும் கெட்டியாகப் பிசைந்து, காராசேவுக் கரண்டியில் தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். (அட, இதுவா?!!!!) சர்க்கரையை ஒரு கரண்டி நீர் விட்டு, முற்றின பாகு வைத்து ஏலக்காய்ச் சேர்த்து பொரித்துப் போட்ட காராசேவைக் கொட்டி நன்றாகக் கிளறி, ஒரு தாம்பாளத்தில் கொட்டி ஆற வைக்கவும்.

இதே போல மைதாவைப் பிசைந்து, பூரிகளாக இட்டு டைமண்ட் துண்டுகளாக்கி எண்ணெயில் பொரித்து, சர்க்கரைப் பாகில் போட்டு எடுக்கலாம்.

ஒரு ஆழாக்கு என்பது சுமாராக 200 கிராம். 5 ஆழாக்கு 1 லிட்டராம்.

===========================
 
ரொம்ப ஈஸியா இருக்கு இல்லே?

ஆனால் படித்த உடன் இது என்ன வஸ்து என்று தெரிந்து விட்டது. என்னுடன் பணிபுரிந்த ஒருவர் ஒருமுறை என்னிடம் " 'பொம்பே லகடி' சாப்பிடுவியா, பிடிக்குமா?' என்று கேட்டார். என்னவென்றே தெரியாததால் "ம்...." என்று ஆவலுடன் தலையாட்டி வைத்தேன்.
 
                                                            
                                                     
 
அவர் வாங்கி வந்தது சிறு சதுரங்களில் மைதா மாவு ஸ்வீட் பிஸ்கட் போல இருந்தது. அதைத்தான் அப்படிச் சொல்வார்களாம். என் இன்னொரு நண்பர் அதை 'கஜகஜா' என்றார். நான் இப்போதும் கடைகளில் அதைப் பார்க்கிறேன். கடைக்காரர் அதற்கு வேறு பெயர் சொல்வர். அது இப்போது 'சட்' டென நினைவுக்கு வரவில்லை.
 
எப்போதாவதுவாங்க வேண்டும் என்றால் அதைக் கைகாட்டி வாங்கி விடுவேன்! ஏனென்றால் அது என் சிறுவயது ஞாபகங்களைத் தருவதால்!
 

                
 
 
சிறுவயதில் பரீட்சைக்குப் படிக்கும்போது மதியம் அம்மா தூங்கிக் கொண்டிருக்கும்போது நான் நைஸாய் கிச்சன் சென்று மைதா மாவு எடுத்து, காரப்பொடி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து காரமாகவும், வெல்லத்தை நீரில் கரைத்து அதில் மாவைப் பிசைந்து ஸ்வீட்டாகவும் பிசைந்து சிறு சிறு சதுரங்களாக்கி அல்லது வெவ்வேறு வடிவங்களில் ஆக்கிக் கொண்டு தோசைக் கல்லில் இட்டு எடுத்து விடுவேன். அல்லது தாளிக்கும் கரண்டியில் எண்ணெயிட்டு அதில் பொரித்து எடுத்துக் கொண்டு வந்து கொறித்துக் கொண்டே படிப்பேன்!  அம்மா எழுந்து வந்து பார்க்கும்போது அந்த மாதிரி செய்த சுவடே இருக்காது! ஆனாலும் எப்படியோ கண்டுபிடித்து, அருகில் வந்து செல்லமாய்த் தலையில் குட்டுவார். அது நினைவுக்கு வந்தது.

சரி, தலைப்பில் இரண்டு வஸ்த்துக்கள் சொல்லி இருக்கிறேனே, இப்போ அந்த ரெண்டாவது பெயரை உடைய சம்பாரப் புளி!
அதை வேணும்னா அடுத்த வாரம் பார்ப்போமா?


பின் குறிப்பு : படங்கள் இணையத்திலிருந்து எடுத்தது. நான் செய்த மைதா மாவு பிஸ்கெட்டுகள் இப்படி இருக்காது!