செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

கேட்டு வாங்கிப்போடும் கதை :: மூணே மூணு வார்த்தை - வேணுகோபாலன் (சேட்டைக்காரன்) சீதை 15




     இந்த வார சீதா -ராமன் மன்னிப்புக் கதையில் இடம்பெறும் படைப்புக்குச் சொந்தக்காரர்   சேட்டைக்காரன் . (வேணுஜி)


    இந்தத் தலைப்பை வைத்து இப்படி ஒரு கதையைப் படைக்க வேணுஜியால் மட்டுமே முடியும்!







====================================================== 



மூணே மூணு வார்த்தை

வேணுகோபாலன் (சேட்டைக்காரன்) 




எம்.டி சந்தானத்தின் முகம் கிண்டிப்போன மைதாதோசைபோலக் காணப்பட்டதை, அறைக்குள் நுழைந்த அரை நொடியில் அக்கவுண்டண்ட் ஆராமுதன் கண்டுகொண்டார்..


சந்தானகோபாலகிருஷ்ணன் என்ற சந்தானம், ஆசை ஆசையாய்  ஆரம்பித்த ’சந்தான் இன்ஃபோடெக்’ ஸாஃப்ட்வேர் கம்பனி சில வருடங்களிலேயே ’நொந்தான்’ இன்ஃபோடெக் ஆகிவிட்டது. யூரோவும், டாலரும் வந்து குவியும் என்ற கனவெல்லாம் காணாமல்போய், தினசரி நியோரோபின் சாப்பிட்டால்தான் தூக்கமே வருகிறது. போதாக்குறைக்கு டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகி சந்தானம்போன்ற சாஃப்ட்வேர் கம்பனி வைத்திருப்பவர்களுக்கு ஜனாதி’பேதி’யாகி விட்டிருந்தார். 


காதுகுடைவது, மூக்கைச் சிந்துவது நீங்கலாக மீதமுள்ள அனைத்துக்கும் ஸாஃப்ட்வேரும் மொபைல் ஆப்பும் தினசரி வெளிவந்து சந்தானத்துக்கு ஆப்புமேல் ஆப்பு வைத்துக் கொண்டிருந்தன. புதிதாக ஏதாவது யோசித்து செய்யாவிட்டால், கந்தன்சாவடியிலிருந்த ஜாகையைக் காலிசெய்துவிட்டு ஏதாவது சுங்கச்சாவடியில் நின்று வெள்ளரிப்பிஞ்சு விற்க வேண்டி வரலாம் என்பதும் சந்தானத்துக்குப் புரிந்தே இருந்தது.

 
”கூப்பிட்டேளா?” பழைய படத்து எஸ்.வி.சுப்பையாபோல பவ்யமாகக் கேட்டார் ஆராமுதன்.

 
”கோர்ட்டு டவாலி மாதிரி மூணுவாட்டி கூப்பிட்டேன்,” சந்தானம் இரைந்தான். “அதென்னாங்காணும், ஆத்துக்காரியும் சரி; அக்கவுண்டண்டும் சரி; கூப்பிட்ட உடனே வர மாட்டேங்கறீங்க?”


“கேஷ் டேலி ஆகலையேன்னு பார்த்திண்டிருந்தேன்.”


”நீர் வந்ததுலேருந்து கேஷ் காலிதான் ஆயிண்டிருக்கு; டேலி ஆனதேயில்லை,” கரித்துக் கொட்டினான் சந்தானம். “அது போகட்டும், அதென்ன ஆடிட்டர் ஆபீஸுக்குப் போன் பண்ணி, அந்தப் பொண்ணு ப்ரீத்தி கிட்டே ‘பதினெட்டா இருபத்தெட்டா’ன்னு கேட்டீராமே? அம்பத்தெட்டு வயசுலே அவளுக்கு பதினெட்டா இருந்தாலும் இருபத்தெட்டா இருந்தாலும் உமக்கென்ன ஓய்?”


”சாயிராம் சாயிராம்!” ஆராமுதன் கன்னத்தில் போட்டுக்கொண்டார். “நான் ஜூலை மாசத்துலேருந்து நமக்கு GST பதினெட்டு பர்சன்டா இருபத்தெட்டு பர்சன்டான்னு கேட்டேன் ஸ்வாமி!  நான் போயி அந்தப் பொண்ணோட வயசையெல்லாம் கேட்பேனா?”


”ஓ! அப்படியா? நான்கூட நீர் ப்ரீத்தியோட வயசைத்தான் கேட்டீரோன்னு நினைச்சுட்டேன்.”


“எதுக்குக் கேட்கணும்? அதான் மூஞ்சியைப் பார்த்தாலே முப்பது முப்பத்திரெண்டு இருக்கும்னு பட்டுன்னு தெரியறதே!”


”இதெல்லாம் கரெக்டாக் கண்டுபிடியும்; ஆனா, யார்கிட்டேயிருந்து எவ்வளவு பணம் வரணும்னு கேட்டா இஞ்சிதின்ன எருமைமாதிரி முழியும்.”


“சார், அது இஞ்சிதின்ன குரங்கு சார்!”


”இதையாவது ஒத்துண்டீரே, ரொம்ப சந்தோஷம்!”


”சரி, என்ன விஷயமாக் கூப்பிட்டேள் சார்?”


”இன்னிக்கு முதல் வேலையா ஒரு மீட்டிங் போடணும்! நீரும் வந்து உட்காரும்.”


“பேங்க் போகணுமே?” ஆராமுதன் தலையைச் சொரிந்தார்.


“அதான் பணம் போடறதுமில்லை; எடுக்கிறதுமில்லையே!,” மண்சட்டியில் வறுபட்ட மக்காச்சோளம்போலப் பொரிந்தான் சந்தானம். “தினமும் எதுக்குப் பையைத் தூக்கிட்டு பால்வாங்கப் போறதுமாதிரி பேங்குக்குப் போறீர்? ஒழுங்கா மீட்டிங் அட்டெண்ட் பண்ணும்.”


சந்தானத்தின் முகம் டீக்கடை பஜ்ஜிபோலச் சிவந்திருந்தது. இன்னொரு ‘இன்ஃபோசிஸ்’ ஆகியிருக்க வேண்டிய தன்னுடைய கம்பனி, இப்படியே போனால் ‘அவுட்ஃபோசிஸ்’ ஆகி அகாலமரணமடைந்து விடுமென்று உணர்ந்த சந்தானம், ’இன்றைக்கு இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டும்’ என்ற முடிவோடுதான் ‘மீட்டிங்’ என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்திருந்தான். 


” நான் எதுக்கு….?” ஆராமுதன் நீட்டி முழக்கினார்.
 
”நாள்முழுக்க 200பக்க நோட்டுல ‘சாயிராம் சாயிராம்’னு எழுதிண்டிருக்கீர்! ஒரு நாள்வந்து மீட்டிங்ல உட்கார்ந்தா என்ன குடிமுழுகிடும்?”

 
”சரி, நான் போயி நோட்டை எடுத்துண்டு வர்றேன்!”
 
’சாயிராம் நோட்டா? கொன்னுடுவேன்!”
 
”இல்லை சார்! ஆபீஸ் நோட்! குறிச்சுக்க வேண்டாமா?”
 
”அதான் எல்லாருமாச் சேர்ந்து கம்பனிக்கே நாள் குறிச்சாச்சே!” பாலகிருஷ்ணா படத்து வில்லன்போல இரைந்தான் சந்தானம். “நீர் வவுச்சர்லே எழுதற நரேஷனைப் படிச்சாலேயே எனக்கு எமோஷன் வர்றது. ஒண்ணும் குறிக்க வேண்டாம். எல்லாரையும் கூப்பிடும்.”


”எல்லாரையுமா? எழுப்பக் கொஞ்சம் நேரமாகுமே?”
 
”என்னது?”
 
”இல்லை; முக்கியமான வேலையிலே இருப்பா! சீட்டுலேருந்து எப்படி எழுப்பறது?”

 
”முக்கியமான வேலையா?” எரிந்து விழுந்தான் சந்தானம். “எந்தப் புதுப்படத்துக்கு டோரண்ட் வந்திருக்குன்னு பேசிட்டிருப்பாங்க; இல்லாட்டி வாட்ஸாப் பண்ணிட்டிருப்பாங்க,” 


“அப்படியெல்லாம் அபாண்டமாப் பேசாதீங்கோ,” ஆராமுதன் கண்கலங்கி நீராமுதனானார். “எப்பப் பார்த்தாலும் உங்களைப் பத்தித்தான் பிக்-பாஸ், பிக்-பாஸ்னு பேசிண்டிருக்கா தெரியுமா?”


“உமக்கு Journal நாலெட்ஜ்தான் கிடையாதுன்னா, ஜெனரல் நாலெட்ஜும் கிடையாதா?” சந்தானத்துக்கு அந்தக் கோபத்திலும் சிரிப்பு வந்தது. “அவா பிக்-பாஸ் ரியாலிட்டி ஷோ பத்திப் பேசிண்டிருக்கா வோய்!”


”ஓஹோ!”


”என்ன ஓஹோ! போய் எல்லாரையும் கூப்பிடுங்க. அசந்து  தூங்கிட்டிருப்பாங்க; தண்ணியடிச்சு எழுப்புங்க!”
 
”சாயிராம்! இன்னிக்கு வியாழக்கிழமை! தண்ணியடிச்சா தப்பு!”

”ஓய், அவங்க முகத்துல தண்ணியடிச்சு எழுப்புங்கய்யா!” சந்தானத்துக்குக் கோபம் கட்டுக்கடங்காமல் போனது. “உமக்கு யாரு ஆராமுதன்னு பேர் வைச்சது; சரியான போராமுதன்யா நீர்.”

சிறிது நேரத்தில் எல்லாரும் மீட்டிங் ரூமில் வந்து உட்கார்ந்து கொண்டார்கள். சந்தானம் நடுநாயகமாக அமர்ந்தான்.


“குட்மார்னிங் சார்!” என்றார்கள் கோரஸாக.


“இதுல ஒண்ணும் குறைச்சலில்லை,” தயிர்ப்பச்சடியில் தாளித்துக் கொட்டிய கருவேப்பிலைபோலப் பொரிந்தான் சந்தானம். ”இன்னியோட நம்ம கம்பனி ஆரம்பிச்சு அஞ்சு வருஷம் முடியப்போகுது.”


ஆராமுதன் உச்சுக்கொட்டினார்.



“எதுக்கு உச்சுக்கொட்டறீங்க? நான் என்ன எங்க தாத்தா செத்துட்டார்னா சொன்னேன்?”


“சாரி சார்!”


”அதை விடும்! முதல்ல எல்லாரும் அவங்கவங்க செல்போனை ஸ்விட்ச்-ஆஃப் பண்ணுங்க! குறிப்பா சேல்ஸ் டிபார்ட்மெண்ட் மறக்காம ஆஃப் பண்ணுங்க!”

 
”எதுக்கு சார்?’ சேல்ஸ் மேனேஜர் வினவினார். “நம்ம கம்பனிக்கு எவன் சார் போன் பண்ணப்போறான்?!”
 
”வெளங்கிடும்,” சந்தானம் சீறினான். “அதுக்குத்தான் இந்த மீட்டிங். இந்த ஆபீஸ் பிஸியாகணும். உங்க எல்லாரோட போனும் எப்பவும் பிஸியா இருக்கணும். அதுக்கு ஒரு ஐடியா சொல்லுங்க!”

 
”வெரி சிம்பிள் சார்,” சீனியர் டெவலப்பர் சிந்தாமணி கூவினாள். “நான் இந்த நம்பரை என் ஃப்ரெண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ் எல்லாருக்கும் கொடுத்திடறேன் சார்.”
 
”சிந்தாமணி! உனக்கு இது எத்தனாவது மாசம்?”
 
”சார், இன்னும் கல்யாணமே ஆகலை சார்!”
 
”கருமம்! அதையா கேட்டேன். கம்பனியில ஜாயின் பண்ணி எத்தனாவது மாசம்?”
 
”மூணு மாசம் சார்!”
 
”மூணு மாசம்னு பெருமை வேறயா?” சந்தானம் தலையிலடித்துக் கொண்டான். ”சரிவிடு, இந்த மூணு மாசத்துல ஒரு கிளையண்டையாவது கரெக்டா ஹேண்டில் பண்ணினியா?”

 
”அதையேன் சார் கேட்கறீங்க? கிளையண்ட் ’கால்’ பண்ணினாலே எனக்கு ‘பக்பக்’னு இருக்குது சார்.”

 
”ஏன் இருக்காது? எழுதுற புரோகிராம் எல்லாத்திலேயும் இவ்வளவு  Bug இருந்தா ‘பக்பக்’னுதான் இருக்கும்.”
 
”சார், நாம மீட்டிங் நடத்தற விதமே சரியில்லை சார்,” என்றான் அசோகன்.
 
”அட, அனலிஸ்ட் அசோகனா? நம்ம மீட்டிங்குல என்ன தப்பு?”
 
”இப்பல்லாம் டீ, பிஸ்கெட் எதுவுமே வர்றதில்லை சார். எதையுமே ஒரு புரொசீஜராப் பண்ணனும் சார்.”
 
”அடேய், இவங்க எழுதுற புரொசீஜரை ஒழுங்கா அனலைஸ் பண்ணி  நீ டிக்கெட் போட்டிருந்தா, நான் இன்னொரு பில் கேட்ஸ் ஆகியிருப்பேண்டா! இப்படியே போனா, ஃபீனிக்ஸ் மால்லே போயி  நான் பார்க்கிங் டிக்கெட் போட வேண்டிவரும் போலிருக்கேடா!”
 
”ஒண்ணு சொல்லட்டுமா?” ஆராமுதன் பேசினார். “உங்க ஜாதகத்தை எடுத்துண்டு ஒரு நடை கடலங்குடி போய்ட்டு வந்திருங்கோ! அப்படியே கும்பகோணம் போயி நவகிரஹ ஸ்தலங்களை ஒரு ரவுண்டு வந்து தோஷ நிவர்த்தி பண்ணினீர்னா.....”
 
”பேங்க்ல மிச்சமிருக்கிற சொச்ச ரூபாயும் செலவாயிடும். அப்புறம் கபாலீஸ்வரர் கோவில் வாசல்லே உட்கார்ந்து நான் பிச்சையெடுக்கிறேன். நீர் அக்கவுண்ட்ஸ் எழுதும்.”
 
”எங்களை என்னதான் பண்ணச் சொல்றீங்க?” சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் பீட்டர் கவலையுடன் வினவினான்.
 
”அடேய், காலைல பத்துமணியிலேருந்து சாயங்காலம் ஏழுமணிவரை சர்வர் ரூமுல நீ என்ன பண்ணறேன்னு சொல்லுடா முதல்லே! இந்தியாவுலேயே ஃபேஸ்புக், ட்விட்டர் பார்க்கிறதுக்கு சம்பளம் கொடுக்கிற ஒரே கம்பனி சந்தான் இன்ஃபோடெக் தாண்டா!”
 
ஊஹும்! கம்பனி உருப்படுவது குறித்து யாருக்கும் கிஞ்சித்தும் கவலையிருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே, சந்தானமே தனது மனதிலிருப்பதை வெளிப்படையாகச் சொல்லிவிட முடிவு செய்தான்.
 
”இந்த ஆபீஸ் திரும்பவும் பரபரப்பா இருக்க நான் ஒரு ஐடியா வைச்சிருக்கேன்!”
 
”ஸார், இங்கே ஏதாவது ஹோட்டல் ஆரம்பிக்கப் போறீங்களா சார்?”
 
”ஆமா ஆராதனா! ஸாஃப்ட்வேர் கம்பனியை சாப்பிடுவோர் கம்பனியாக்கப்போறேன். உன் புத்தி போகுது பாரு!”


“என்ன சார் இது?”ஆராதனா சிணுங்கினாள். “எல்லார் முன்னாலேயும் என்னை இப்படி embrace பண்ணாதீங்க ஸார்.”


”நாசமாப்போச்சு!” சந்தானம் கூச்சலிட்டான். “அது embrace இல்லை; embarass. ரெண்டு வார்த்தை இங்கிலீஷ் தெரியாததுங்கல்லாம் டெவலப்பர், டீம் லீடர்னு வந்தா உருப்படுமா கம்பனி?”
”சும்மாயிரு ஆராதனா! சார், என்ன ஐடியான்னு சொல்லுங்க சார். நீங்க கோடு போடுங்க; நாங்க ரோடே போடறோம் சார்.”
 
”இத பாருங்க! கோடு பத்தியெல்லாம் பேசவே உங்களுக்கு அருகதை கிடையாது. ஒரு புரோகிராமிலேயாவது ஒழுங்கா ’Code’ எழுதியிருப்பீங்களா? இந்த லட்சணத்துல ரோடு போடுவீங்களாம். கூடிய சீக்கிரம் நாமல்லாம் நூறு நாள் வேலைத் திட்டத்துக்குத்தான் போகணும். அப்புறம் எல்லாரும் ரோடுதான் போட்டாகணும்.”
 
“சார், அவ அப்படித்தான் சார்! நீங்க உங்க ஐடியா சொல்லுங்க சார்!”
 
”ஓகே! ஆல் ஆஃப் யூ லிஸின் கேர்ஃபுல்லி! நீங்கல்லாம் டிவி சீரியல் பார்க்கறீங்கதானே?”
 
”ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்!” என்று அனைவரும் கூவினார்கள். “நாம டிவி சீரியல் எடுக்கப்போறோமா சார்? பிக்-பாஸ் மாதிரி புதுசாப் பண்ணுங்க சார்.”
 
”நாம பிக்-பாஸ் எடுத்தா யாரையும் எவிக்ட் பண்ணத்தேவையில்லை; ஆடியன்ஸ் அவங்களே எவிக்ட் ஆயி அந்தமானுக்குப் போய் செட்டில் ஆயிடுவாங்க,” சந்தானம் அலுத்துக்கொண்டான். “நாம டிவி சீரியல் எழுதற சாஃப்ட்வேர் தயார் பண்ணப்போறோம்.”

 
”என்னது?”
 
”யெஸ்! ஒரு நிமிஷம் நம்ம டிவி சீரியல் எழுத்தாளர்களோட நிலைமையை யோசிச்சுப் பாருங்க! குறைஞ்சது ஆயிரம் எபிசோட் எழுதணும். அதுல ஒரு பத்துப் பேருக்குக் கல்யாணம் ஆகணும். அதுல பாதிப் பேருக்காவது குழந்தை பொறக்கணும். ஒண்ணு ரெண்டு பேரு பிரசவத்துல சாவணும். மாமியார், புருஷன், நாத்தனார், சித்தி, பெரியம்மா, கொள்ளுப்பாட்டின்னு நிறைய பேர் கொடுமைப்படுத்தணும். போலீஸ் ஸ்டேஷன், ஆஸ்பத்திரி, எவ்வளவு இருக்கு? ஏதோ கதை இருக்கிறா மாதிரித் தெரியணும் ஆனா இருக்கப்படாது. டப்புன்னு டிவிக்காரங்க ஒரு இருபது எபிஸோடுக்கு எக்ஸ்டென்ஷன் கொடுத்தா, புதுசா ஏதாவது பிரச்சினையை ஆரம்பிச்சு, குடும்பத்தைக் கெடுக்கணும். செவ்வாய், வெள்ளிக்கிழமைன்னா, விளக்கு வைக்கிற நேரத்துல ‘நீ நாசமாப் போயிடுவே, மண்ணாப் போயிடுவே, விளங்காமப் போயிடுவே’ன்னு மங்களமா நாலு வார்த்தை சேர்க்கணும். இதையெல்லாம் பண்ணறதுக்கு ஒவ்வொரு டிவி சீரியல் எழுத்தாளரும் எவ்வளவு கஷ்டப்படுவாங்க?”

 
சந்தானம் சொல்லச் சொல்ல, சீரியல் பார்க்காமலேயே அத்தனை பேரும் கண்கலங்கினார்கள். ஆராமுதன் வாய்விட்டே அழுதுவிட்டார்.
 
”ஆமா சார்! நேத்து பூசணிமலர் சீரியல்லே கூட ஒரு சாவு சார்! தொண்ணூத்தி ஒம்பது வயசுல அந்தப் பாட்டி அகால மரணம் சார்! நம்ம வீட்டுல நடந்தா பத்து நாளோட முடிஞ்சிடும் சார்! சீரியல்னா இதை வைச்சு பத்துமாசம் ஓட்டணும் சார்! ரொம்பக் கஷ்டம் சார்!”
 
”அதுக்குத்தான் நானே எழுதி முடிச்சிருக்கிற இந்த ஸாஃப்ட்வேர்!” என்று லாப்-டாப்பை முடுக்கினான் சந்தானம். “இந்த ஸாஃப்ட்வேருல கேரக்டர் பேரு, மத்த கேரக்டரோட என்ன உறவு, எத்தனை எபிசோட் உசிரோட இருக்கணும், எப்படி மண்டையைப் போடணும்னு எண்ட்ரி பண்ணிட்டாப் போதும். எத்தனை எபிசோட் வேணும்னு சொல்லிட்டு, பிரிண்டர்லே கனெக்ட் பண்ணினா, அதுபாட்டுக்கு வசனத்தோட அடிச்சுத் தள்ளிட்டே இருக்கும்.”
 
”வாவ்!”
 
”அது மட்டுமில்லே! ஒரு எபிசோட் பத்தி மூணே மூணு வார்த்தை எண்டர் பண்ணினாப் போதும். அதுபாட்டுக்கு ஸீன் -பை -ஸீன் வசனத்தோட, எந்தெந்தக் கேரக்டர் என்னென்ன பேசணும்னு ஃபுல் ஸ்க்ரிப்டோட அடிச்சுத் தள்ளிடும்.”
 
”சார், இதுக்கு ரெடியா ஒரு கிளையண்ட் இருக்காங்க சார்!”  சேல்ஸ் மேனேஜர் உற்சாகமானார். ”உத்தமன்’ டிவின்னு ஒண்ணு புதுசா லாஞ்ச் பண்ணறாங்க சார்.”
 
”அப்படியா? யாரோடது?”
 
”பிச்சுவா பக்கிரி க்ரூப் சார்!”
 
”பிச்சுவா பக்கிரியா?”
 
”தெரியாதா? என்னா சார் நீங்க? அவர் எவ்வளவு பெரிய ரவுடி தெரியுமா? கள்ளக்கடத்தல், கள்ள மார்க்கெட்டு, சாராயம், கஞ்சா, கட்டப்பஞ்சாயத்துன்னு எவ்வளவு பண்ணியிருக்கார் தெரியுமா? சமீபத்துல கூட கள்ளநோட்டு வைச்சிருந்தார்னு அரெஸ்ட் பண்ணினாங்க சார். இது வரைக்கும் பண்ணின சமூகசேவை போதாதுன்னு புதுசா ஒரு டிவி ஆரம்பிச்சிருக்காரு சார்! சாதிமதமற்ற சமுதாயத்தை அமைக்க ஒரு கட்சிகூட ஆரம்பிக்கப்போறதா நேத்து அவங்க ஜாதிக்கட்சி மாநாட்டுல பேசினாரு சார்!”
 
”அட அப்படியா?”
 
”என்கிட்டே கூட ஒரு ரெண்டாயிரம் எபிசோட் வர்ற மாதிரி ஒரு சீரியல் வேணும். தெரிஞ்ச எழுத்தாளர் இருந்தா சொல்லுங்கன்னு சொன்னாரு சார்!”
 
”ரெண்டாயிரம் எபிசோடா? ஹாஹாஹா!” என்று சிரித்தான் சந்தானம். அடுத்த நொடியே பிரிண்டரிலிருந்து காகிதவெள்ளம் பீறிட்டுக் கிளம்பியது. அனைவரும் திறந்தவாய் மூடாமல் திகைத்திருந்தார்கள்.
 
”சார்! இதென்ன மந்திரமா மாயமா? ரெண்டாயிரம் எபிசோடை ஒரேயடியா அடிச்சுத் தள்ளிடுச்சே சார்!”


”இத்தனைக்கும் நான் மூணே மூணு வார்த்தைதான் எண்டர் பண்ணினேன்.”
 
”அப்படியா? என்ன வார்த்தைங்க சார்?”


 
”சீதை ராமனை மன்னித்தாள்.”





தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கே...


45 கருத்துகள்:

  1. சீதை ராமனை மன்னித்தாள்..

    இல்லேன்னா இந்த மாதிரி ஒரு கதை கிடைக்குமா...ங்காணும்!?..

    நன்னா சொன்னேள் போங்கோ!..

    எங்கே ஓய்.. போறது?.. வயசான காலத்துல பேஸ்புக்கும் வாட்ஸப்பும் தானேய்யா.. பூஸ்டப்..

    அண்ணா.. உங்க முகம் இப்பத்தான் பேரன் லவ்லி போட மாதிரி மின்றது!..

    சரி.. சரி.. அடுத்த வேலை இருந்தா போய் கவனியும்!..
    அப்புறமா மறுபடியும் இந்தக் கதைய ஒரு தரம் படிக்கணும்!..
    நன்னா எழுதியிருக்கான் புள்ளையாண்டான்!..

    பதிலளிநீக்கு
  2. காலையில் கலகலப்பான கதை..

    மிகவும் ரசித்தேன்.. வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  3. காலையில் கலகலப்பான கதை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  4. வி.வி.சி.விவிசி. நல்ல நகைச்சுவை. காலை வேளையில் அருமையான சுவையான கதை இல்லை இல்லை நிகழ்வு!

    பதிலளிநீக்கு
  5. இப்படி சிந்திக்க சேட்டை அண்ணாவால் மட்டுமே முடியும்!

    நல்ல நகைச்சுவை. இதைத் தான் பதிவுலகம் மிஸ் செய்கிறது. சேட்டை அண்ணா தொடர்ந்து பதிவுகள் எழுதணும்.....

    பதிலளிநீக்கு
  6. சேட்டைக்காரன்... சரியாத்தான் பேர் வைச்சுருக்காரு....அருமையான கதை...செமையாக எஞ்சாய் செய்தோம்....ஏனோ எங்கள் சீனியர் (கல்லூரியில்) இப்போதெல்லாம் எழுதாமல் இருக்கிறார்!! எழுத வேண்டும்.. சேட்டைக்காரன் உங்களுக்கு ஒரு பொக்கே!!

    கீதா: சேட்டை அண்ணாவின் கதை செம சிரிச்சு முடில...மீண்டும் வரேன்..வந்தேன் ஐயா நு சொல்லியாச்சு....அண்ணாவ் உங்களுக்கு பொக்கே ந உடனே நல்லகாலம் பொக்கை நு (மலையாள அக்சென்ட்ல) சொல்லாம இருந்தீங்களே.. நான் இன்னும் இளமைதானு சொல்லி எங்களைக் கெக்கே பிக்கேனு ..ஹஹஹஹ்.. மீண்டும் வரேன்...

    பதிலளிநீக்கு
  7. சேட்டைகாரன் சொல்லவா வேண்டும் அவரின் கைவந்த கலை.சிரி.....சிரி.

    பதிலளிநீக்கு
  8. புரிஞ்சாப்புல இருக்கு..

    சில இடங்களில் வாய் விட்டு ரசித்துச் சிரித்தேன்..

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. தையின் முடிவு வரி சீதை ராமனை மன்னித்தாள் என்று இருக்க வேண்டும் என்று ஸ்ரீராம் சொன்னதும் பெரும்பாலும் எல்லோரும் உணர்வு பூர்வமாக சீதை ராமனை மன்னிப்பதையே (மனைவி கணவனை) கருவாக வைத்து எழுதி வரும் வேளையில் சேட்டை அண்ணா வித்தியாசமாக அதே முடிவை வைத்துக் கொண்டு இப்படியும் கதையை நகைச்சுவையுடன் எழுதலாம் என்று புகுந்து விளையாடிவிட்டார்....பெரும்பாலான தமிழ்நாட்டு மக்கள் சீரியல் பார்த்து கண்களில் நீர் பொங்க மூக்கைச் சிந்திக் கொண்டு சீரியல் நாயகிக்காக வேண்டிக் கொண்டிருப்பது போல ஒவ்வொரு செவ்வாயும், எ பியின் சீ ரா ம வும் நம்மை நாயகிக்காக உருக வைத்துக் கொண்டிருந்த வேளையில் இன்றைய செவ்'வாய்' வாய் விட்டுச் சிரிக்க வைத்ததற்கு சேட்டைக்கார அண்ணாவிற்கும், எங்கள் ப்ளாகிற்கும் மிக்க மிக்க நன்றி!!! சிரித்து முடிலைப்பா...இப்படிச் சிரிச்சுட்டே இருந்தால் நோய்விட்டுப் போகுமே!!! சிரிப்பு மன அழுத்தத்தைக் குறைக்கும்!! அதனால் ஒரு வேண்டுகோள் சேட்டை அண்ணா எங்கள் எல்லாருக்காகவுமாவது மீண்டும் எழுதுங்களேன்! பலருக்கும் சும்மானாலும் டாக்டர் பட்டம் கொடுக்கறாங்களே!! நாங்க உங்களுக்கு டாக்டர் பட்டம் வேணாலும் கொடுத்தடறோம்!!!!

    நன்றி மீண்டும் மீண்டும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. இந்தத் தொடரில் காணக்கிடைக்காதிருந்தது ஹாஸ்யம். அதனை அதிரடியாக வெளிப்படுத்தியிருக்கிறார் சேட்டை! Brilliant.

    ஸ்ரீராம், கதாசிரியருக்கு இன்னுமொரு சான்ஸ் கொடுத்து விளையாடச்சொல்லுங்க! ரசிகர்கள் கூட்டமிருக்கு பாக்கறதுக்கு..I mean படிக்கறதுக்கு.

    பதிலளிநீக்கு
  12. //“எதுக்குக் கேட்கணும்? அதான் மூஞ்சியைப் பார்த்தாலே முப்பது முப்பத்திரெண்டு இருக்கும்னு பட்டுன்னு தெரியறதே!”//

    ஹாஹாஹா எங்கப்பன் குதிறுக்குள்ளே இல்லைனு சொன்ன உளறுவாயன்.
    பதிவை கடைசிவரை ரசித்தேன் நண்பரே - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  13. எந்த வரியை கோட் பண்ணுவது என்று கூடத் தெரியலை....அத்தனையுமே சிரிப்புதான்!!!

    //”அதுக்குத்தான் நானே எழுதி முடிச்சிருக்கிற இந்த ஸாஃப்ட்வேர்!”// அஹ்ஹஹஹஹஹ் அண்ணா உங்க ஹீரோ கூட அத்தனை சீரியலையும் விடாம பார்க்கிறார் போல!!! வசனத்துக்கும் சரியா கோட் எழுதணுமே!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. அக்மார்க் 'சேட்டை' கதை! ஹஹஹா.. கலக்கீட்டீங்க சார்!
    .
    சீதை ராமனை மன்னித்தாள் - சீரியலுக்கு டைட்டில் ராமாயணம் பார்ட் டூ வா?
    ;)

    பதிலளிநீக்கு
  15. நல்ல நகைச்சுவையா சேட்டை எழுதியிருக்கார். ஸ்ரீராமே எதிர்பார்த்திருக்கமாட்டார் 'சீதை ராமனை மன்னித்தாள்' கதை இப்படி இருக்கமுடியும்னு. ரொம்பவும் ரசித்தேன். (அது என்ன உங்களுக்கு கம்யூட்டர் கம்பெனி மேல காண்டு. மத்தவங்கள்லாம் 30 வருஷத்துல சம்பாதிக்கறதை, பெரும்பாலும் அவங்க 10 வருஷத்துக்குள்ளயே சம்பாதிச்சுட்டு, அப்புறம் வேலை போனப்பறம், என்ன செய்வது என்று யோசிச்சிக்கிட்டிருக்காங்களே தவிர, அவங்களும் பாவம்தான்) - த ம காலையிலேயே

    பதிலளிநீக்கு
  16. சேட்டைக்காரன் ஐயா பதிவு பத்தி நான் என்ன சொல்லுறது?! ரசிக்கும் கதையை தந்ததுக்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  17. சீதை ராமனை மன்னித்தாள் - சீரியலுக்கு டைட்டில் ராமாயணம் பார்ட் டூ வா?
    ;)// ஆவி!! ஹஹஹஹ் ராமாயணம் பார்ட் 2 தான் இருக்கே லவகுசா நு ஸோ இது பார்ட் 3 நவீன ராமாயணம்னு நு வைச்சுக்கலாமோ...

    கீதா

    பதிலளிநீக்கு
  18. அருமை, முதலிருந்து கடைசி வரை சிரித்து படித்தேன். மனம் லேசாகி விட்டது.
    நடிகர் சந்தானம் பேசுவது மாதிரியும், டெல்லி கணேஷ் ஆராமுதன் பேசுவது போலவும் கற்பனை செய்து கொண்டேன்.
    சூப்பர். தொடர்ந்து எழுதுங்கள் சேட்டை. மனக்கவலைகள் இருந்த இடம் தெரியவில்லை.
    தொலைக்காட்சி தொடர் செய்பவர்கள் படிக்க வேண்டும்.
    சேட்டை வாழ்த்துக்கள்.

    ஸ்ரீராம் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. உண்மையிலேயே சேட்டைக்காரன்தான் கதை அப்படி !

    பதிலளிநீக்கு
  20. இந்தக் கதையைப் படித்தபின் யாருக்கும் அந்த தலைப்பில் எழுத வராது சேட்டை என்றால் சேட்டைதான்பிடியுங்கள் பொக்கே

    பதிலளிநீக்கு
  21. நாய் வாலை வெட்டி நாய்க்கே சூப்பு வச்ச மாதிரி ,சேட்டைக் காரனின் கதையும் சூப்பர் :)

    பதிலளிநீக்கு
  22. சேட்டைக்காரன் சார், கதையில் ஒரு தவறு கண்டுபிடித்தேன்.

    “இந்த ஸாஃப்ட்வேருல கேரக்டர் பேரு, மத்த கேரக்டரோட என்ன உறவு, எத்தனை எபிசோட் உசிரோட இருக்கணும், எப்படி மண்டையைப் போடணும்னு எண்ட்ரி பண்ணிட்டாப் போதும். எத்தனை எபிசோட் வேணும்னு சொல்லிட்டு, பிரிண்டர்லே கனெக்ட் பண்ணினா, அதுபாட்டுக்கு வசனத்தோட அடிச்சுத் தள்ளிட்டே இருக்கும்"

    இப்படி எழுதிட்டு,

    "ஒரு எபிசோட் பத்தி மூணே மூணு வார்த்தை எண்டர் பண்ணினாப் போதும். அதுபாட்டுக்கு ஸீன் -பை -ஸீன் வசனத்தோட, எந்தெந்தக் கேரக்டர் என்னென்ன பேசணும்னு ஃபுல் ஸ்க்ரிப்டோட அடிச்சுத் தள்ளிடும்.”

    இப்படியும் எழுதிட்டு, மூணு வார்த்தை எண்டர் பண்ணின உடனேயே, சாஃப்ட்வேர், ஆயிரம் எபிசோடையும் அடித்துத் தந்தது என்று சொல்றீங்களே. சாஃப்ட்வேர் ஆசாமிகளுக்கு, bugs இல்லாம ஒரு சாஃப்ட்வேரும் எழுதத் தெரியாதுன்னு சொல்றீங்களா?

    பதிலளிநீக்கு
  23. கதை மிக நன்றாக இருக்கிறது. கதாசிரியருக்கு நகைச்சுவை இயல்பாக வருகிறது என்பது நம் அதிர்ஷ்டம்.

    பதிலளிநீக்கு
  24. இருவருக்கும் வாழ்த்துகள்! த ம 12

    பதிலளிநீக்கு
  25. ஹா ஹா சேட்டையான கதை தான்..... ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  26. இந்த வார சீதை கதை 15??
    சேட்டைக்காரை சேட்டை அபாரம்!! :-))

    பதிலளிநீக்கு
  27. சீதை ராமனை மன்னித்தாள் என்றால் செண்டிமெண்டலாக யோசிக்காமல் நீங்கள் பாட்டுக்கு நகைச்சுவையாக கதை எழுதினால் என்ன அர்த்தம்? வாரம் ஒரு கதை இப்படி எழுத வேண்டும், ஆமாம்! இது என் கட்டளை, என் கட்டளையே என் சாஸனம்!

    பதிலளிநீக்கு
  28. மனசு ரொம்ப லேசாகிட்டது வேணு ஜி. சிரிச்சு முகமெல்லாம் வலிக்கிறது.
    க்ரேசி மோகனோட டயலாகை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டது இந்தக் கதை.
    எத்தனை நன்றி சொல்லமுடியுமோ அத்தனை நன்றியும் சொல்லிக்கறேன். என்ன ஒரு கற்பனை வளம். மாஸ்டர் பீஸ் மா.வாழ்த்துகள் நிறைய எழுதுங்கோ ஜி.

    பதிலளிநீக்கு
  29. பாராட்டியவர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்! நகைச்சுவையாக எழுதியதற்குக் காரணம், இதுவரை இந்தத் தலைப்பில் பல அருமையான கதைகளை அளித்தவர்களிடமிருந்து மாறுபட்டுக் காண்பிக்க வேண்டுமென்பதால் அல்ல. இந்த மாதிரி காமெடிக் கதை எழுதினால், ‘வந்தோம் படித்தோம், சிரித்தோம்(சிரிப்பு வந்தால்!)’ என்று போய் விடுவார்கள். சீரியஸாக எழுதினால், அதன் பாத்திரப்படைப்பு, கதையோட்டம், முடிவு என்று எல்லா அம்சங்களிலும் தென்படுகிற குறைகளை மறைத்து எழுதுகிற திறமையெல்லாம் எனக்குக் கிடையாது. இருந்தாலும், வாசித்து, கருத்தும் தெரிவித்து உற்சாகப்படுத்திய உங்கள் எல்லாருக்கும் மனமார்ந்த நன்றி! ஸ்ரீராம் சார், இதற்கெல்லாம் காரணம் நீங்கதான்; ஆகவே உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  30. துரை செல்வராஜூ சார்!

    மிக்க நன்றி! பெரியவா சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி!

    Geetha Sambasivam அம்மா!

    உங்கள் பாராட்டு ஆல்வேஸ் ஸ்பெஷல்! மிக்க நன்றி!!

    வெங்கட் நாகராஜ் ஜி!

    தொடர்ந்து எழுதணும்னு ஆசையிருக்கு! பார்க்கலாம்! மிக்க நன்றி!

    திண்டுக்கல் தனபாலன் சார்
    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  31. Thulasidharan V Thillaiakathu & Geetha

    உங்க சீனியர் அவரோட பிளாகில் ஒரு பதிவு போட்டு பத்து நாளாகப் போகுது. ஜூனியரா லட்சணமா, அதையும் படிச்சுடுங்க! :-)

    (எதுக்கு அனாவசியமா என் இளமையைப் பத்தி பப்ளிக்-லே பேசறீங்க? கண்பட்டுறப் போறது!) :-)

    மாதேவி
    மிக்க நன்றி!

    அப்பாதுரை
    மிக்க நன்றி!

    ஏகாந்தன் Aekaanthan !
    மிக்க நன்றி!

    KILLERGEE Devakottai
    மிக்க நன்றி!

    சமீரா said...
    மிக்க நன்றி!

    கோவை ஆவி said...
    மிக்க நன்றி!

    நெல்லைத் தமிழன்
    மிக்க நன்றி!

    ராஜி
    மிக்க நன்றி!


    கோமதி அரசு
    மிக்க நன்றி! எவ்வளவு நாட்கள் ஆச்சு உங்க பாராட்டு வாங்கி! மிக்க மகிழ்ச்சி!

    Asokan Kuppusamy
    மிக்க நன்றி!

    G.M Balasubramaniam said...
    பாராட்டுறதுல சார் மாதிரி யாரு? மிக்க நன்றி சார்!

    ராமலக்ஷ்மி
    மிக்க நன்றி!

    Bagawanjee KA said...
    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  32. நெல்லைத் தமிழன் said...
    //சேட்டைக்காரன் சார், கதையில் ஒரு தவறு கண்டுபிடித்தேன்.//

    ஒண்ணே ஒண்ணுதானா? தப்பிச்சேன் சாமி! :-)

    மிக்க நன்றி சார்!

    அப்புறம், ஸாஃப்ட்வேர் கம்பனி மேல எனக்கு ஒரு காண்டும் இல்லை சார்! இதுவரை அவங்களைத்தான் விட்டு வைச்சிருந்தேன். அதனால இதுல அவங்களைக் கொஞ்சம் பதம் பார்த்திருக்கேன். அவ்ளோ தான்.

    பதிலளிநீக்கு
  33. ராமன்

    மிக்க நன்றி!

    புலவர் இராமாநுசம்
    மிக்க நன்றி ஐயா!


    poovizi
    மிக்க நன்றி!

    middleclassmadhavi
    மிக்க நன்றி!

    Bhanumathy Venkateswaran
    மிக்க நன்றி!

    வாராவாரம் எழுதணுமா? ஸ்ரீராம் சார்! :-))))))))))

    வல்லிசிம்ஹன்

    மிக்க நன்றி! உங்கள் ஆசிர்வாதம் தொடரணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேணுஜி... நீங்கள் எவ்வளவு எழுதினாலும் வெளியிட நாங்கள் தயார். எங்களுக்கும் ஆவல்தான்.

      நீக்கு
  34. உங்க சீனியர் அவரோட பிளாகில் ஒரு பதிவு போட்டு பத்து நாளாகப் போகுது. ஜூனியரா லட்சணமா, அதையும் படிச்சுடுங்க! :-)

    பார்த்துட்டோம் சீனியர்!!!!!

    //(எதுக்கு அனாவசியமா என் இளமையைப் பத்தி பப்ளிக்-லே பேசறீங்க? கண்பட்டுறப் போறது!) :-)// ஹஹஹஹஹஹ்ஹ்

    பதிலளிநீக்கு
  35. செம சேட்டை பேருக்கேத்தா மாதிரியே

    ரசித்து படித்தேன்.

    பதிலளிநீக்கு
  36. வரிக்குவரி ஹாஸ்யரஸம் சொட்டிக்கொண்டே போகிறதே எங்கே சீறிப்பாயும்னு யோசனைப் பண்ணிண்டேபோக 2000 எபிஸோடு கொட்ட, சீதைராமனை மன்னித்துவிட்டாள் என்று சீறிப் பாய்ந்துவிட்டது. ஆச்சரியமான புனைவாகப் பட்டது எனக்கு.. வாழ்த்துகள். இன்னும் சேஷ்டைபுனையுங்கள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  37. சீதை ராமனை மன்னித்தாள்!
    கதையை இப்படி எழுதி இத்தனை வாரங்கள் எழுதி வந்த எழுத்தாளர்களை டென்ஷன் இல்லாமல் வாய்விட்டுச் சிரிக்க வைத்துவிட்டீர்கள், சேட்டைக்காரரே! சிரித்துச் சிரித்து நாங்களும் உங்களை மன்னித்துவிட்டோம்.
    தொடர்ந்து எழுதுங்கள்,ப்ளீஸ்!
    ஸ்ரீராம், இத்துடன் சீதை ராமனை மன்னித்தாள் கதைக்கு மங்களம் பாடி விடுங்கள்.

    பதிலளிநீக்கு
  38. //ஸ்ரீராம், இத்துடன் சீதை ராமனை மன்னித்தாள் கதைக்கு மங்களம் பாடி விடுங்கள். //

    இரண்டு மாதங்களுக்கு முன்பே சீதை ராமனை மன்னித்தாள் என்று எழுதி அனுப்பி, தங்கள் படைப்பு வெளியாகும் நாளுக்காகக் காத்திருக்கும் நண்பர்களை நினைத்துப் பாருங்கள் ரஞ்சனிக்கா... நியாயமா இந்தக் கோரிக்கை!

    பதிலளிநீக்கு
  39. Wow, சான்சே இல்ல சார், what a வார்த்தை விளையாட்டு, laughing out loud for every line and expression. கண் முன்னாடி நாகேஷ் சார் and தங்கவேலு சார் இந்த டயலாக் பேசின effect. Miss ur write ups சேட்டைக்காரன் சார். Thanks to எங்கள் பிளாக்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!