புதன், 28 ஜனவரி, 2015

ஸ்ரீரங்கப் பயணமும் (குறு) பதிவர் சந்திப்பும்!




உறவினர் இல்லத் திருமணம் ஜனவரி மாதம், ஸ்ரீரங்கத்தில் என்று டிசம்பரில் தெரிந்தது.  உடனே எதுவும் முடிவு செய்துவிட முடியவில்லை.  வெளியூர்த் திருமணங்களுக்கு அட்டெண்டன்ஸ் போடுவது என்பது கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது!  எனவே அவசரப்பட முடியவில்லை.

                                                   
கிளம்பும்வரை நிச்சயமில்லாத சூழல் என்பது எனக்கு மட்டும்தான்.  மற்ற மூன்று எங்கள் ஆசிரியர்கள் அட்டெண்டன்ஸ் உறுதி என்று ஆனது.  இருந்தாலும் ஸ்ரீரங்கம் வந்தால் சந்திக்க முடியுமா என்று கீதா மேடத்தின் வசதியைக் கேட்டு வைத்தேன்.  நல்லவேளை, முன்கூட்டியே நாங்கள் வருவது பற்றிச் சொல்லியும் அவர் தப்பித்துச் சென்று விடவில்லை.  பிழைக்கத் தெரியாதவர்!!


கௌதமன் வைகோ அவர்களிடமும்,  திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களிடமும் பேசி வைத்தார்.  ரிஷபன்ஜி அலைபேசி எண் எங்களிடம் இல்லாததால் ஸ்ரீரங்கம் சென்று பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டோம்.


ஜனவரி 24 ஆம் தேதி காலையே ஸ்ரீரங்கம் வந்துவிட்ட திரு கௌதமன் அலைபேசியில் தான் அங்கு வந்து சேர்ந்துவிட்டதைச் சொல்லி, எங்கள் பயண விவரமும் கேட்டுக் கொண்டார்.  நாங்கள் மதியம் மூன்று மணிக்கு சென்னையிலிருந்து கேஜியின் போலீரோவில் கிளம்பினோம்.  21 ஆம் தேதியிலிருந்து சென்னை அகில இந்திய டாக்டர்கள் மாநாட்டால் குலுங்கித் திணறிக் கொண்டிருந்தது.  காலையும், மாலை 5.30 க்கு மேலும் சென்னை டிராபிக்கில் சிக்கித் திணறுபவர்கள்,  இந்தத் தண்டனைக்குக் கருடபுராணத் தண்டனைகளே தேவலாம் என்று உணர்ந்து கொண்டிருந்தார்கள்!

 
அதற்கு முதல்நாள்தான் மதுரையிலிருந்து வந்திருந்த அண்ணன் மகனை, கோயம்பேடு அனுப்ப ஒன்பது மணி பஸ்ஸுக்கு 7 மணிக்கேக் கிளம்பியும் கடைசி நிமிடத்தில்தான் செல்ல முடிந்த அனுபவம் இருந்தது.  இத்தனைக்கும் எங்கள் இருப்பிடத்திலிருந்து கோயம்பேடு அரை மணிநேரப் பயணம்.



                                               


பெருங்களத்தூரை அதற்குண்டான நேரத்தில் அடைந்து விட்டோம்.  அங்கிருந்து வண்டலூர் தாண்டுவதற்குள் முழி பிதுங்கிப் போனது!  இன்ச் இன்ச்சாக நகர்ந்த வண்டிக்கூட்டங்கள் வெறுப்பேற்றின.

 
நடுவில் ஒரு இடத்தில் எரிபொருள் நிரப்பியதைத் தவிர, எங்கும் நிறுத்தாமல் ஸ்ரீரங்கம் அடைந்தபோது மணி இரவு 8.30.  நேராகச் சாப்பாட்டு ஹால் சென்று, ஏதாவது இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டோம்!


முன்னரே நாங்கள் மூவர் ஆளுக்கொருவரிடம் 5 சாப்பாடுகள் எடுத்து வைக்கச் சொல்லியிருந்தோம்.  மொத்தம் 15 சாப்பாடு காத்திருக்கப் போகிறது என்று பேசிச் சென்றோம்.  அதற்கெல்லாம் தேவையே இல்லாமல் அப்போதுதான் கடைசி பந்திக்கு முதல் பந்தி ஓடிக் கொண்டிருந்தது.

                                                          
சாப்பாட்டில் இரண்டு விஷயங்கள் நாக்கைக் கவர்ந்தன.  ஒன்று பாயசம்.  இரண்டாவது கிடாரங்காய் ஊறுகாய்..  பாயசம் பயங்கரப் பற்றாக்குறை போலும்.  முதல்முறை ஒரு கரண்டி ஊற்றியவர், இரண்டாவது முறை கேட்டதும் அரைக் கரண்டிதான் ஊற்றினார்!  ஊறுகாய், கேட்ட அளவு கிடைத்தது.  நாங்கள் காரத்தையும் ரசிப்போம்,   இனிப்பையும் ரசிப்போம்ல...   ரிசப்ஷனுக்கு வந்த கூட்டத்தின் அளவு சாப்பாட்டில் தெரிந்தது.  குறிப்பாக ரசத்தில்!!

                                                                                                                                      -  தொடரும்  -


22 கருத்துகள்:

  1. பந்தி விசாரிப்பு போல பந்தி விவரப்பு:). நல்ல ரசனை. குறுந்தொடரின் அடுத்த பாகத்துக்குக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. ரசித்தில் தெரிந்த கூட்டம்! :)

    நல்ல விளாவி இருந்ததோ?

    அடுத்த பாகத்திற்கான காத்திருப்புடன்.

    பதிலளிநீக்கு
  3. சாத்தமுது இல்லையா...அகையால்..தானோ

    பதிலளிநீக்கு
  4. ஆ ரம்பமே அருமை !

    தொடரட்டும் .... ஆவலுடன் ....
    காத்திருக்கிறோம் ....

    பாயஸம் போலவே கொஞ்சூண்டு ஊற்றி [எழுதி] ‘தொடரும்’ போட்டுட்டீங்கோ ....

    அதனால் ஊறுகாய் போல
    காரசாரமாக உணர்கிறோமாக்கும் ! :)

    பதிலளிநீக்கு
  5. அடுத்த பகுதியைப்படிக்க ஆவலைத் தூன்டி விட்டது இன்றைய பதிவு!

    பதிலளிநீக்கு
  6. ஹாஹாஹா, "ரச"மான வர்ணனை. அப்போ நான் ஊகிச்சது சரியாப் போச்சு. முதல்நாள் பாயசம் கிடைக்காத சோகத்திலும் மறுநாள் காலை ஸ்வீட் கிடைக்காத சோகத்திலும் தான் இருந்திருக்கீங்க! பார்த்தீங்களா! எப்படிக் கரெக்டாக் கண்டு பிடிச்சேன்! :)))))

    பதிலளிநீக்கு
  7. உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். நாங்க தஞ்சாவூரில் ஒரு கல்யாணத்துக்குப் போயிட்டு விளாவின ரசம் கூடக் கிடைக்காமல், மோர் சாதம், அதுவும் ஊறுகாய் இல்லாமல் சாப்பிட்ட கதை!

    ஆனால் ஒண்ணு, நீங்க எடுத்து வைக்கச் சொல்லியும் ரசம் சரியாக் கிடைக்காததும், பாயசம் இரண்டாம் முறை கொடுக்காததும் தப்புத் தான்! :))))

    பதிலளிநீக்கு
  8. உங்களை மாதிரி எத்தனை பேர் பாயாசத்தை இரண்டாவது,மூன்றாவது முறை கேட்டிருப்பார்கள்!!
    வெளிநாட்டில் இருக்கும் பதிவர்கள் எல்லோரும் இந்தியாவில் இருக்கும் பதிவர்களுக்கு ஒரு சட்டம் கொண்டுவரப்போகிறார்களாம்,
    அதாவது,யாரும் தங்களுடைய பதிவில் சாப்பாட்டு வகையறாக்களை போட்டோவாக போடக்கூடாது என்று.

    பதிலளிநீக்கு

  9. மிகச் சிறிய பதிவு, திருச்சியில் நானும் இன்னும் சில பதிவர்களை சந்தித்ததில்லை. சென்ற முறை எங்கள் பயணம் திட்டமிட்டபடி நடக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  10. திருமணத்தில் மிஸ் ஆனது எல்லாம் பதிவர்கள் வீடுகளில் கிடைத்திருக்கும், இல்லையா? அடுத்த பகுதி படிக்கக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. //இன்ச் இன்ச்சாக நகர்ந்த வண்டிக்கூட்டங்கள் வெறுப்பேற்றின.//

    இன்ச் இன்ச்சாக - இந்தப் பதிவும் தான். ஆனால் 'வெறுப்பேற்றின'க்கு பதில் ரசிக்க வைக்கிறது.

    கூந்தலை அள்ளி முடிகிற தொடர்பான ஒரு சொலவடை நினைவுக்கு வந்தது. 'எழுதத் தெரிந்தவர் எழுதுகிறார்' என்ற எண்ணம் மேலோங்கியது.

    கீதாம்மா எந்தப் பகுதியில் வரப் போகிறார்களோ என்ற ஆர்வமும் கூடுகிறது. அவர்களும் முந்திக் கொண்டதையும் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  12. இப்படியாகத் தானே ஸ்ரீரங்க யாத்திரை ஆரம்பித்தது.சரி.ரசத்தில் தண்ணீர் விரவி ஜலதரங்கம் வாசித்ததோ பாயாசமும் கம்மி. பாவம் ஸ்ரீராம்.உடானே அடுத்த போஸ்ட் வேணும்.

    பதிலளிநீக்கு
  13. எனது சமீபத்திய பிரசுரம்---- இனி.. தொடர்கதை 9-ம் அத்தியாயம்---- உங்கள் 'மேயற' லிஸ்டில் அப்டேட் ஆகவில்லை, பாருங்கள்!

    பதிலளிநீக்கு
  14. எப்படி அந்த 'ரச'வித்தை நடந்தது என்று சீக்கிரம் சொல்லுங்க ஜி :)

    பதிலளிநீக்கு
  15. வணக்கம்
    ஐயா.
    தொடருங்கள் அடுத்த பகுதியை...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  16. அடுத்த பதிவில் போட்டோவும் எதிர்பார்க்கிறேன்... இணையத்தில் எடுத்ததல்ல....

    பதிலளிநீக்கு
  17. ரசம் ரசமாக இல்லாமல் கூட்டம் அதிகமானதால் நீர்க்கப்பட்டதோ...இல்லையோ உங்கள் பதிவு ரசமாக இருக்கின்றது..வெயிட்டிங்க் ...எதுக்குனா? அடுத்தது என்ன சாப்டீங்கனு தெரிஞ்சுக்கத்தான்...

    இப்படி நிறைய போடுங்க....ஆஸ்திரேலியா சொக்கன் நண்பர் பாவம். சாப்பிடும் போது அட்லீஸ்ட் ஃபோட்டோ பார்த்துக்கிட்டே சாப்பிட்டு அப்படியாவது ஆசையைத் தீர்த்துக்கட்டும்.... ஹஹாஹ்

    பதிலளிநீக்கு
  18. பந்திக்கு முதல் ஆளாய் வந்து பாராட்டியதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

    வாங்க டிடி... பேதி ஆயிடும் என்கிறீர்களா!

    ஆமாம் வெங்கட்... சாம்பார் கூட கொஞ்சம் அப்படித்தான் மாறியிருந்தது. அவர்கள் எதிர்பார்த்ததை விட கூட்டம் வந்திருக்க வேண்டும்!

    சாத்தமுது என்பதால்தான் நீர்வளம் சாத்து சாத்துன்னு சாத்திட்டாங்களோ... நன்றி உமையாள் காயத்ரி.

    பாயசம் போல கொஞ்சமாய் எழுதியதை ஊறுகாய்ப் போல காரசாரமாய் உணர்கிறீர்கள்... ஆஹா! வைகோ ஸார்.. நன்றாய்ச் சொன்னீர்கள்.

    வாங்க மனோ சாமிநாதன் மேடம். அடுத்த பதிவு போட்டாச்சே...

    கீதா மேடம்.. ரசம் கிடைக்காட்டி என்ன? ஊறுகாய்ல வெளுத்து வாங்கிட்டோம்ல! அங்கே ஒன்றும் கிடைக்காட்டி என்ன? எங்களுக்குத்தான் உங்க வீடு இருந்ததே.. உடனே வந்திருந்தா ஒரு ரவா உப்புமாவாவது கிடைச்சிருக்காதா என்ன!

    சொக்கன் ஸார்.. நல்லவேளை ஞாபகப் படுத்தினீர்கள். இடம் பிடித்துதான் நாங்கள் அந்த பந்தியில் அமர்ந்தோம். இலையை எடுக்க முடியாதவாறு எழாமல் அமர்ந்திருந்தார். இல்லை எடுப்பவர்கள் பக்கத்தில் வந்து வந்து நின்றும் அசரவில்லை அவர். எங்களுக்கும் புரியவில்லை. அவர் எழுந்தால்தான் பழைய இலைகளை எடுத்து விட்டு, புதிய இலைகள் போடலாம்! எங்களுக்கா பொறுமை போய்க் கொண்டிருக்க, அவர் காத்திருந்தது இன்னொரு கப் பாயசத்துக்கு என்று அப்புறம்தான் தெரிந்தது. சாப்பிட்டு விட்டுத்தானே எழ்ந்ஹார் மனிதர்!!

    வாங்க ஜி எம் பி சார்... உங்களை இந்தமுறை சென்னையில் என்னால் சந்திக்க முடியவில்லை.

    வாங்க ரஞ்சனி மேடம்... திருமணத்தில் சாப்பிட்டதால் பதிவர்கள் இல்லத்தில் குறிப்பாக கீதா மேடம் வீட்டில் எதுவும் சுவைக்க முடியாமல் போனது வருத்தம்தான்!

    வாங்க ஜீவி ஸார்... நன்றி உங்கள் பாராட்டுக்கு! பதிவில் கீதாம்மா சீக்கிரமே வந்துடுவாங்க!

    ஹா ஹா ஹா வல்லிம்மா... ஆதௌ கீர்த்தனாம்பரத்திலே....!!

    ஜீவி ஸார்...பூவனம் பதிவு அப்டேட் இன்னமும்கூட சரியாகவில்லை என்று நினைக்கிறேன். மறுபடி முயற்சிக்கிறேன்.

    எல்லாம் காவிரித்தாயின் அற்புதம் பகவான்ஜி!

    வாங்க நன்றி ரூபன்.

    வாங்க கார்த்திக் சரவணன், அடுத்த பதிவு வெளியாகி விட்டது, அதில் படங்கள் இருக்கு பாருங்க... சொந்தமாக நாங்களே எங்கள் கேமிராவில் எடுத்த படங்கள்... யாரோ மண்டபத்தில் எடுத்து இணையத்தில் விட்டது அல்ல!

    வாங்க துளசிதரன்ஜி! ரசம் அப்படியும் ரசமாகவே இருந்தது! சொக்கன் ஸார் ஒரு முக்கியமான விவரத்தை நினைவு படுத்தினார். உண்மையில் அது பதிவிலேயே எழுதி இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  19. ஆரம்பமே ஜோர்... நான் தாமதமாக வந்ததால் உடனே அடுத்த பகுதி படிக்க கிடைத்துவிட்டது...:) இதோ செல்கிறேன்...:))

    பதிலளிநீக்கு
  20. பயண அனுபவம் அருமை.
    அடுத்த பதிவை படித்து விடுகிறேன்.
    ஊரிலிருந்து இன்று தான் வந்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!