செவ்வாய், 1 நவம்பர், 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: தன் குற்றம்




இந்த வார 'கேட்டு வாங்கிப் போடும் கதை' பகுதியில் இடம்பெறும் படைப்பு நண்பர் 'தளிர்' சுரேஷ் அவர்களுடைய படைப்பாகும்!

அவருடைய தளம் : தளிர்.


கற்பனை வளம் மிகுந்த, திறமையான எழுத்தாளர்.  'நொடியில் படிக்கும் கதைகள்' என்று நூற்றுக்கணக்கில் எழுதித் தள்ளுவார்.  'கொஞ்சம் சிரிங்க பாஸ்' என்றும் நூற்றுக்கணக்கில் ஜோக்ஸ் எழுதித் தள்ளுவார்.  அதைவிட 'ஹைக்கூ', 'சென்ரியு கவிதைகள்' எழுதுவார். குழந்தைகளுக்கான கதைகள் எழுதுவார்.  
 
 
எப்படி அவருக்கு இப்படி மடைதிறந்த வெள்ளம் போலக் கற்பனை கொட்டுகிறது என்பது பிரமிக்கத்தக்க ஒன்று.  பாராட்டுகளும் வாழ்த்துகளும் சுரேஷ்.  உங்களை நான்தான் முதலில் 'தளிர்' சுரேஷ் என்று அழைக்க ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன்!  சரியா?

வழக்கம்போல, எழுத்தாளரின் முன்னுரையைத் தொடர்ந்து அவர் படைப்பு தொடர்கிறது.


================================================================================


கதை பிறந்த கதை:  இந்த கதையில் வரும் பெண்மணி எங்கள் உறவுக்காரர். எழுபதைக் கடந்தவயது ஆனாலும் உழைப்பாளி. அஞ்சலக முகவர். நன்கு பேசுவார். அவர் வழக்கமாக செல்லும் வீட்டுக்கு தற்போது செல்வதில்லை. அவரிடம் பேசிய போது ஏன் செல்வதில்லை என்று கேட்டபோது அவர் சொன்னதை வைத்து நான் கொஞ்சம் கற்பனை கலந்து எழுதியது தான் இந்த கதை. கல்கி மற்றும் மங்கையர் மலருக்கு அனுப்பி பிரசுரம் ஆகவில்லை. நான் எழுதியதில் எனக்கு மிகவும் ஆத்ம திருப்தி தந்த கதை இது.
 
 
=============================================================================



தன் குற்றம்
 
 'தளிர்' சுரேஷ்



“ என்ன மாமி! சவுக்கியமா? இப்பல்லாம் நம்ம ஆத்து பக்கம் வர மாட்டேங்கிறீங்க?” என்ற குரலைக் கேட்டு முருகர் சன்னதியில் கொடிமரத்தில் சேவித்துக் கொண்டிருந்த வசந்தா மாமி நிமிர்ந்தாள்.
 
 
  “யாருடாப்பா அது? சங்கரனா? நன்னாயிருக்கியாடா கொழந்தை! ஆத்துல தோப்பனார், அம்மால்லாம் சவுக்கியமா? கொழந்தையை ஸ்கூல்ல சேர்த்திட்டியா?” விசாரித்துக் கொண்டே போனார்.
 
 
   இதுதான் வசந்தாமாமியிடம் உள்ள ஒரு நல்லப் பழக்கம்! பழகிவிட்டால் எல்லோரையும் நினைவில் வைத்துக் கொண்டு விசாரிப்பார். நாம் ஒரு வார்த்தை பேசிவிட்டால் பதிலுக்கு ஒருமணி நேரம் நம்மை விடமாட்டார். இதற்காகவே பார்த்தும் பார்க்காதது போல நழுவி விடுவது உண்டு. வயது எழுபதை நெருங்கிக் கொண்டிருக்கிறது. காப்பீடு முகவர், மல்டிலெவல்மார்க்கெட்டிங் என்று எதையாவது இன்னும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து கொண்டிருப்பார்.
 
 
   தன்னுடைய பணி நிமித்தமாக அடிக்கடி வெளியே வருவார். அப்போதெல்லாம் மதிய வேளையில் எங்கள் ஊரில் உள்ள குருக்கள் வீட்டில் தான் ஆகாரம். வெளியே சுற்றிக் களைத்துப் போய் வருவார்.  நல்ல உச்சிவெயில் மண்டையை பிளக்கும். “ஏம் மாமி? இவ்ளோ கஷ்டப்படறேள்? உங்களுக்கு இருக்கிற வசதிக்கு இந்த தொழில் தேவையா? என்பார் குருக்கள் மாமா.
 
 
    “அதில்லே மாமா? இந்த உடம்பு இப்படியே சுத்தி சுத்தி பழகிறுச்சு! இப்படி சின்ன வயசுல இருந்து உழைச்சுத்தான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கேன். சட்டுன்னு விட்டுட முடியலை! ஏதோ உடம்புல தெம்பு இருக்கிறவரைக்கும் பார்ப்போம்! அப்புறம் விட்டுடலாம்” என்பார்.
 
 
    “ சொன்னா கேக்க மாட்டீங்க! இந்த வேகாத வெயில்ல எதுக்கு வீண் அலைச்சல்? நீங்க சம்பாதித்துதான் பொழுது விடியனும்னு இல்லே! இருந்தாலும் உங்களாலே சும்மா இருக்க முடியாதுன்னு சொல்றேள்! சரி உங்க இஷ்டம்!”  என்பதோடு முடித்துக் கொள்வார் குருக்கள் மாமா.
 
 
    ஒரு புன்னகையுடன் அவர் வீட்டில் நுழைபவர் சாயங்காலம்தான் வெளியில் வருவார். மதிய ஆகாரம் மாலை காபி எல்லாம் குருக்கள் வீட்டில்தான். மதியத்துக்கு மேல் மாமியை பார்க்க வேண்டும் என்றால் குருக்கள் ஆத்தில் பார்க்கலாம் என்று எல்லோருமே சொல்வார்கள். அப்படி ஒரு பிணைப்பு குருக்கள் வீட்டோடு மாமிக்கு இருந்தது.
 
 
   கால ஓட்டத்தில் குருக்கள் மாமா இறந்து போக, மாமி குருக்கள் ஆத்துக்கு வருவது குறைந்துவிட்டது. ஆனாலும் இன்னும் தொழிலை விடவில்லை! எங்கள் ஊருக்கு வருகிறார் போகிறார். ஆனால் குருக்கள்வீட்டுப் பக்கம் வருவது குறைந்துவிட்டது. வந்தாலும் தங்குவது இல்லை! மதிய சாப்பாடு கூட இப்போது கட்டி எடுத்து வந்துவிடுகிறார். அங்கேயே கோவிலில் அமர்ந்து சாப்பிட்டு கிளம்பி விடுகிறார்.
 
 
   இன்று கோவிலில் பார்த்ததும் இதைத்தான் கேட்க வேண்டும் என்று தோன்றியது சங்கரனுக்கு.  “ஏன் மாமி? நீங்க நம்ம ஆத்துக்குத்தான் வரது இல்லை! குருக்களாத்துக்கும் போறதில்லையாமே? தப்பா நினைச்சுக்காதீங்க! எனக்குத் தெரிஞ்சு நீங்களும் குருக்கள் மாமாவும் பழகின விதத்துக்கு இப்ப அங்க நீங்க போகாம இருக்கிறது என்னமோ மனசு கேக்கலை! அதான் கேட்கறேன்” என்றான் சங்கரன்.
 
 
   மாமி பெரிசாக ஒரு பெருமூச்சு விட்டார்.  “அதையேண்டா கேக்கறே சங்கரா? அந்த குருக்கள் மாமா என் அண்ணா மாதிரிடா! அவ்ளோ வாஞ்சையா பழகுவார்! பார்த்தா பேசாம போகமாட்டார். நான் முதல்ல இப்ப மாதிரி சாப்பாடு எடுத்துவந்து சாப்பிட்டுகிட்டுதான் இருந்தேன். ஆனா அந்த மாமாதான் நம்ம ஆம் இருக்க நீ ஏன் சாதம் கட்டிண்டு வந்துண்டு இருக்கே? உனக்கு ஒருவேளை சாதம் போட்டா நான் ஏழை ஆயிரமாட்டேன்! தினம் எங்காத்துலதான் சாப்பிடனும்னு சொல்லி பிடிவாதமா கூட்டிண்டு போய் சாதம் போட்டார். அப்புறம் அந்த மாமியையும் குறை சொல்ல முடியாது. ஒரு முகச்சுளிப்பு இல்லாம நடந்துக்குவா!”
 
 
    “அப்புறம் ஏன் மாமி இப்ப அந்த பக்கம் வரதே இல்லை?”
 
 
“டேய் சங்கரா? நோக்குத் தெரியாதது இல்லே? அழையா வீட்டுக்கு நுழையா விருந்தாளியா போகக்கூடாது! குருக்கள் மாமாவுக்கு மூணு பசங்க! இப்ப மூணு பேரும் தனித்தனியா வீட்ட கட்டிண்டு சவுக்கியமா இருக்கா? அப்ப குருக்கள் வீடு ஒண்ணுதான்! இப்ப மூணா பிரிஞ்சி போச்சு! யார் ஆத்துல போய் சாப்பிடுவேன் சொல்லு? அதுவும் இல்லாம இந்த பசங்க எல்லாம் மனுஷால விட பணத்த பெரிசா நினைக்கறானுங்க! ஒரு வார்த்தை என்ன கூப்பிட்டு இருப்பானுங்களா அவனுங்க? கோயில்ல நுழைஞ்சா கூட ஒரு துளி விபூதி கொடுக்க கூட யோசிக்கிறானுங்க!”
 
 
    “நான் உள்ளே நுழைஞ்சாலே ஏதோ வேண்டாத விருந்தாளி வந்தா மாதிரி மூஞ்சை திருப்பிக்கிறானுங்க! போகட்டும்! அதான் அந்த பக்கமே வர்றது இல்லை! அங்க வேலையும் இல்லை! அவனுங்க யாரும் என்கிட்ட பாலிசியும் போடலை! அப்புறம் எதுக்கு அந்த பக்கம் வரனும் சொல்லு?” என்னையே திருப்பிக் கேட்டார்.
 
 
    “ மாமி! எல்லோரும் ஒரே மாதிரி இருப்பாங்களா? குருக்கள் குணம் வேற அவங்க பசங்க அதே மாதிரி இருக்கணும்னு அவசியம் இல்லையே?”
 
 
      “நிஜம்தாம்பா! ஆனா வரவேற்க கூட வேண்டாம்! ஒரு மாதிரி முகத்த திருப்பிக்கிறது பிடிக்கலை! குருக்கள் போனப்புறம் ஒருநாள் சாப்பாட்டு வேளையிலே அந்த பக்கம் வந்தா மூணு ஆத்து கதவும் சாத்தி இருக்கு! நான் வாசல்ல வந்து நின்னு குரல் கொடுத்தா கதவை திறந்து, அடடே மாமியா? அவர் சாப்பிட்டிண்டு இருக்கார்! அப்புறமா வாங்க மாமின்னு மூஞ்சால அடிச்சமாதிரி  சொல்றா!  ஒரு பேச்சுக்கு ஒரு வாய் சாப்பிடறேளா மாமின்னு கேக்கவே இல்லைடா”
 
 
       “ இப்படி ஒரு  விஷயம் நடந்திருக்குன்னு எனக்கு தெரியாது மாமி!” ஆனாலும் ஒரு கேள்வி மாமி? நீங்க குருக்களாத்துக்கு பத்து வருசமா பழக்கம்! அவா ஆத்துல இந்த பத்து வருஷம் சாப்பிட்டு இருக்கேள்! நிஜம்தானே!
 
 
   அதிலென்னடா சந்தேகம்? அந்த மாமா உசிரோட இருந்த வரைக்கும் எனக்கு மத்தியான ஆகாரம் அங்கதான்!
 
 
   இந்த பத்து வருசம் அங்க மத்தியானம் சாப்பிட்டு இருக்கீங்களே! ஒரு முறையாவது அவங்களுக்கு ஏதாவது பழம் பிஸ்கெட் ஹார்லிக்ஸ்னு வாங்கி தந்து இருக்கீங்களா?
  மாமி யோசனையில் ஆழ்ந்தார்!
 
 
 பெரியவங்களுக்கு வேண்டாம்! அந்த பெரியவரோட பேரன் பேத்திகளுக்காவது ஏதாவது தின்பண்டம் வாங்கி கொடுத்திருக்கேளா?
 
 
     “ இல்லைடா! நான் போற நேரம் கொழந்தைங்க ஸ்கூல் போயிருக்கும்! அதுங்க திரும்பறதுக்குள்ளே வந்துருவேன்! குருக்களோட பசங்களும் அவ்வளவா பேச மாட்டாங்க!”
 
 
   “ ஒரு இன்சூரன்ஸ் ஏஜெண்டா இருந்தும் மக்களோட மனசை புரிஞ்சிக்கலையே மாமி?”
 
 
   “ மாமி! பிரதி உபகாரம் பார்க்காம உதவி செய்யற மனசு இப்ப யாருக்கும் இல்லே! நீ இதை செஞ்சா நான் அதைச்செய்வேன்கிற மாதிரி ஆகிப் போச்சு! அந்த குருக்கள் மாமா அந்தக் காலத்து மனுஷர்! எதுவும் எதிர்பார்க்காம உங்களுக்கு ஆகாரம் போட்டிருக்கார்! ஆனா அவரோட பசங்க இந்தக் காலத்து மனுஷா இல்லையா? நீங்க அவங்க கிட்ட பழகினதும் கம்மிதான்! அவங்க உங்க கிட்ட பழகினதும் கம்மி! குருக்கள் கிட்ட கிடைச்ச மரியாதையை இவங்க கிட்டேயும் எதிர்பார்த்தா கிடைக்குமா?”
 
 
    “மாமி! பிறர் குத்தத்தை காணும்போது தன் குற்றத்தையும் நினைச்சுப் பார்க்கணும்! நீங்க அந்த பசங்களுக்கு எதுவும் செஞ்சது இல்ல! அப்ப அவங்க கிட்ட எதிர்பார்க்கிறதும் தப்புதானே?”
 
 
    “வயசுல சின்னவனா இருந்தாலும் சரியா சொன்னேடா? உண்மைதாண்டா சங்கரா? நானா ஏதோ கற்பிதம் பண்ணி குருக்களாத்து பசங்களை தப்பா நினைச்சிட்டேன்! இனிமே எதிர்பார்க்கிறது போல கொடுக்கவும் செய்யனும்கிறதையும் புரிஞ்சுகிட்டேன் என்றார் மாமி.
 
 
   “ தட்ஸ் இட் மாமி! வாங்களேன் ஒரு கப் காபி சாப்பிட்டு போலாம்” என்றேன்.
 
 
   ”கட்டாயமாடா! ஆனா அது எங்காத்துல வா! நானே உனக்கு பில்டர் காபி போட்டுத் தரேன்!” என்றார் மாமி தெளிவுடன்.


 

சுய விபரம்:   நத்தம் கிராமத்தில் வசித்து வருகிறேன். கோயில் குருக்கள் பணி. நத்தம் ஸ்ரீ காரிய சித்தி கணபதி ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் பூஜை செய்து வருகிறேன்.1987 முதல் எழுதி வருகிறேன். சிறுவர் இளைஞர்களுக்கான கையெழுத்து பிரதிகள் நடத்தி உள்ளேன். 2011 முதல் வலைப்பூவில் எழுதி வருகிறேன். என் முதல் படைப்பு கோகுலம் சிறுவர் இதழில் வெளியானது. தற்போது பாக்யா இதழில் ஜோக்ஸ்கள் நிறைய எழுதி வருகின்றேன். பி.காம் பட்டதாரி. பத்திரிக்கைகளில் படைப்புக்கள் வர வேண்டும் என்பது என் கனவு.

36 கருத்துகள்:

  1. "ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கின் பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு....??"

    பதிலளிநீக்கு
  2. "ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கின் பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு....??"

    பதிலளிநீக்கு
  3. நண்பர் தளிர் சுரேஷ் அவர்களின் சிறு கதைகள் ஒவ்வொன்றும் வாழ்வியலை உணர்த்தும் கதைகள்
    போற்றுதலுக்கு உரிய படைப்பாளி
    வாழ்த்துவோம் போற்றுவோம்
    தம +1

    பதிலளிநீக்கு
  4. யதார்த்த உண்மையை 'பளிச்' என்று சொல்லும் கதை . சுரேஷிற்கு என் பாராட்டுக்கள். பகிர்விற்கு நன்றி ஸ்ரீராம் சார்.

    பதிலளிநீக்கு
  5. இது தான் உண்மை. வாங்குகிற கை கொடுக்கவும் வேண்டும்.

    நல்லதொரு உண்மை ..அழகான உண்மை. நன்றி சுரேஷ். நன்றி ஸ்ரீராம்.
    உலகமே இந்தக் கொடுக்கல் வாங்கலில் தான் நடக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. யதார்த்தம். கடவுளுக்கு 10 ரூ தேங்காய் உடைச்சு, 50 ஆயிரம் கேட்கும் உலகம்.

    பதிலளிநீக்கு
  7. அருமை. எதையும் எதிர்பார்க்காம செஞ்சவா அந்த காலத்து மனுஷா தான்.

    பதிலளிநீக்கு
  8. 'Put oneself in other person's shoes' - சரியான அணுகுமுறை!! அருமையான கதை!!

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கள், ஸ்ரீராம்! நல்ல தருணத்தில் தளிர் சுரேஷின் கதையைப் பிரசுரித்திருக்கிறீர்கள். பத்திரிகைகள் அவர் எழுதி அனுப்புவதைக் கண்டு கொள்ளும் தருணத்தில் நம் வலையுலக நண்பரையும் தெரியாதோருக்கு தெரியப்படுத்தி வைத்திருக்கிறீர்கள். அவர் ஜோக்ஸ், கேள்வி-பதில், ஒரு பக்க கதை எல்லாவற்றையும் தாண்டி நல்ல ஒரு இடத்தை அவரது கனவுப் பிரதேசத்தில் பிடிக்க வேண்டும்.

    நத்தம் எஸ்.சுரேஷ் பாபு என்றால் யாரோ மாதிரி இருக்கிறது.

    அதனால் வாழ்த்துக்கள், தளிர் சுரேஷ் சார்!

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துகள் சுரேஷ்! உங்கள் படைப்புகள் எல்லாப் பத்திரிகைகளிலும் வர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. எதுவுமே இலவசம் கிடையாது உண்மை.

    பதிலளிநீக்கு
  12. மாமிக்கு சொன்னது ,எல்லா ஆசாமிகளுக்கும் பொருந்தும் :)

    பதிலளிநீக்கு
  13. விழுந்துவிழுந்து உபசாரம் செய்யும் குணம் எல்லோருக்கும் வராது. பிறருக்குச் சாப்பாடுபோட்டால் மஹா புண்யம் என்று ஒருகாலம் இருந்தது. நன்றியைக் காட்டுமுகமாக ஏதாவது செய்தால்தான் நல்லெண்ணம் நீடிக்கும்.
    கிஃப்ட் வாங்காமல் யாரும் எங்கும் போதில்லை என்பது தற்போதைய ஸம்பிரதாயம். தெளிவு பிறப்பதற்கும் ஏதோ ஒரு குரு அவசியமாகிறது. நல்ல கதை. எழுதினவர்,பதித்தவர் இருவருக்கும் பாராட்டுகள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  14. எழுதியவருக்கு பாராட்டு. பகிர்ந்தவருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. இச்சிறுகதை, இயல்பான ஓட்டம்... நன்று.

    பதிலளிநீக்கு
  16. ஸ்ரீராம் சார் மிக்க நன்றி! கதையை படித்து கருத்துரை தந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி! உங்களின் ஊக்கமிகு வார்த்தைகள் என் எழுத்தார்வத்தை நீரூற்றி வளர்க்கிறது. ஸ்ரீராம் சார் முன்னுரையில் என்னை ரொம்பவே புகழ்ந்து கூச்சப்பட வைத்துவிட்டீர்கள்! என்னைவிட திறமைசாலிகள் எத்தனையோ பேர் வலையுலகில் இன்னும் அடையாளம் காணப்படாமல் இருக்கின்றார்கள்! உங்களைப் போன்றவர்களின் வெளிச்சம் என் மேல் விழுந்தது என் பாக்கியம். மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  17. ji i do not understand why your story was not accepted in magazines...keep going...

    பதிலளிநீக்கு
  18. அருமையான பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  19. நண்பர் சுரேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள் இந்தக் கதையை அவரது தளத்தில் ஏற்கனவே படித்து இருக்கிறேன் மீண்டும் படித்தேன் நல்லதொரு வாழ்வியல் தத்துவத்தை தரும் கதை.

    பதிலளிநீக்கு
  20. மிகவும் சிம்பிளான சிறப்பான கதை. அர்த்தமுள்ள கதை. உலக யதார்த்தத்தையும், தலைமுறை இடைவெளிகளையும் உணர்த்தியுள்ள கதை.

    பத்திரிக்கைகளில் படைப்புக்கள் வர வேண்டும் என்ற அவரின் கனவு நனவாகிக்கொண்டு வருவது கேட்க மகிழ்ச்சியே. மேலும் மேலும் அது வளரவும் தொடரவும் என் வாழ்த்துகள்.

    கதாசிரியருக்குப் பாராட்டுகள். பகிர்ந்து படிக்கக்கொடுத்துள்ள ‘எங்கள் ப்ளாக்’க்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  21. தளிர் சுரேஷுக்கு நன்றாகவே எழுத வருகிறது இதுவே நான் படிக்கும் அவரது முதல் சிறு கதைசிறப்பாக எழுதும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு இன்னும் வரவில்லை. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  22. அருமையாக எழுதி இருக்கிறார் தளிர் சுரேஷ் . வாழ்த்துக்கள்.

    மாமிக்கு நடைமுறை உண்மையை விளங்க வைத்தமை அருமை.

    மேலும், மேலும் நிறைய எழுத வேண்டும். வாழ்த்துக்கள்.
    நல்ல கதை பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.


    பதிலளிநீக்கு
  23. அருமையாக எழுதி இருக்கிறார் தளிர் சுரேஷ் . வாழ்த்துக்கள்.

    மாமிக்கு நடைமுறை உண்மையை விளங்க வைத்தமை அருமை.

    மேலும், மேலும் நிறைய எழுத வேண்டும். வாழ்த்துக்கள்.
    நல்ல கதை பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.


    பதிலளிநீக்கு
  24. காலத்திற்கு ஏற்ற கருத்தைை சொல்லி இருக்கும் கதை.

    பதிலளிநீக்கு
  25. காலத்திற்கு ஏற்ற கருத்தைை சொல்லி இருக்கும் கதை.

    பதிலளிநீக்கு
  26. nalla karuthu azhana nadai simple but very strong plot in the story .very nice

    பதிலளிநீக்கு
  27. அருமையான கதையொன்றைப்படைத்ததற்கு இனிய வாழ்த்துக்கள் சுரேஷ்!

    பதிலளிநீக்கு
  28. ஒரு பக்கம் மட்டுமே கேட்டும் பார்த்துமிருந்தால் இன்னொரு பக்கம் என்னவென்று விளங்காமலேயே போய்விடும். இருபக்கமும் சமமாக எடுத்தாளும் கதை. பாராட்டுகள் சுரேஷ்.

    பதிலளிநீக்கு
  29. யதார்த்தமான வாழ்வியல் கதை....
    வாழ்த்துகள் சுரேஷ்....
    நன்றி சகோ
    தம 7

    பதிலளிநீக்கு
  30. யதார்த்த வாழ்வில் பல வீடுகளில் நடக்கும் சம்பவத்தைக் கதையாக்கியிருக்கிறார். ஒன்றைப் பெற நாம் ஒன்றை இழக்க வேண்டும்; அடுத்தவரைக் குறை கூறுவதற்கு முன் நம் குறைகளையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்ற நீதியைக் கதையாக்கிய விதத்துக்குப் பாராட்டுக்கள் தளிர் சுரேஷ்!

    பதிலளிநீக்கு
  31. வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி!

    பதிலளிநீக்கு
  32. நல்ல கதை. பாராட்டுகள் தளிர் சுரேஷ்......

    நன்றி எங்கள் பிளாக்.

    பதிலளிநீக்கு
  33. உறவுகள் இரண்டு பக்கங்களிலிருந்தும் பேணிக் காக்கப்பட வேண்டிய ஒன்று. நாம் வாங்கும் நிலையிலேயே இருந்தால் எப்படி? இப்போதெல்லாம் இது ஒரு கட்டாயத்தேவை என்றாகிவிட்டது. யார் வீட்டிற்குப் போனாலும் ஏதாவது வாங்கிக் கொண்டு தான் போகவேண்டும். இப்போதெல்லாம் பெரியவர்கள் மட்டும்தான் தனியாக இருக்கிறார்கள். இருவருக்கும் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் இருக்கிறது. என்ன வாங்கிக் கொண்டு போவது என்பதே பெரிய யோசனை ஆகிவிடுகிறது. பழங்கள் வேண்டாம் என்பார்கள். நான் சிலர் அகங்களுக்கு ஓட்ஸ் பாக்கெட் வாங்கிக் கொண்டு போய்க் கொடுப்பேன். திருவல்லிக்கேணியில் இருப்பவர்களுக்கு முந்திரி, திராட்சை - தினமும் பெருமாள் வீதியில் எழுந்தருளுவார் - அவருக்கு அம்சி (அமுது செய்ய) பண்ண வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவேன்.

    எல்லோரையும் சிந்திக்க வைத்த தளிர் சுரேஷிற்கு நல்வாழ்த்துகள்! பேரும் புகழும் பெற நீங்கள் தினமும் பூஜிக்கும் நத்தம் ஸ்ரீ காரிய சித்தி கணபதி ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ வாலீஸ்வரர் அருளட்டும்.

    பதிலளிநீக்கு
  34. a...nna gurukkal ungatthu manushalo...nekku appaditthan thondrathu...

    பதிலளிநீக்கு
  35. நல்ல கதை... சகோதரர் சுரேஷ்க்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  36. November 3, 2016 at 6:56 PM
    Nat Chander said...
    a...nna gurukkal ungatthu manushalo...nekku appaditthan thondrathu...

    November 3, 2016 at 9:01 PM // குருக்கள் எனக்கு தெரிந்தவர் பக்கத்து ஊர்! அந்த மாமிதான் எனக்கு சொந்தம்! ஓரளவுக்கு நல்லாவே கணிக்கறீங்க! நன்றி!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!