செவ்வாய், 12 நவம்பர், 2019

கேட்டுவாங்கிப் போடும் கதை :   பிரசாதம்  -  துரை செல்வராஜூ 



பிரசாதம்

துரை செல்வராஜூ 

*************

'' அப்பா... இதோ நீங்க படித்த ஊருக்கு வந்து விட்டோம்!... ''

நல்வரவு
பசுபதீஸ்வரம்
தேர்வுநிலை பேரூராட்சி
அன்புடன் வரவேற்கிறது.

பச்சை நிறப் பலகை மினுமினுத்துக் கொண்டிருக்க - கார்த்திக் ஸ்டியரிங்கைப் பிடித்தபடி என்னைத் திரும்பிப் பார்த்தான்...

இதற்கு மேல் என்ன செய்ய?.. - என்பதாகப் பார்வை...

'' ஹை.. வான்கோழி.. அங்கே பாரேன்...'' - இளையவள் ஸ்வேதாவுக்குக் குதுகலம்...

அவள் காட்டிய திசையில் இரண்டு வான்கோழிகள் சிறகை விரித்திருந்தன...  நகரத்தில் பிறந்து வளர்ந்த ஸ்வேதாவுக்கு அது அதிசயம்.. பேரதிசயம்...

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முந்தையது பசுபதீஸ்வரம்..
பிற்காலத்தில் கோட்டை கொத்தளம் அகழியுமாக இருந்த ஊர்..

இப்போது சற்றே பெரிதான கிராமம்... ஆனாலும் அதற்கே உரிய பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது...

அந்தக் காலத்து வண்டிகள் மாடுகளோடு மறைந்து போயிருக்க
குட்டி யானை எனப்பட்ட சிறு வாகனங்கள் புகை விட்டுக் கொண்டிருந்தன...

சைக்கிளில் குறுக்குப் பெடல் அடித்துக் கொண்டிருந்த பசங்கள் எல்லாம்
படுத்துக் கொண்டு போகும் இரு சக்கர வாகனங்களில் பாய்ந்து கொண்டிருந்தார்கள்..

நாற்பதாண்டுகளுக்கு முந்தைய நினைவுகள்...  கண்களில் தேங்கிட அப்படியே அந்தச் சாலையை அளந்தேன்...

வீதிகள் அகன்றிருக்க வீடுகளின் அடையாளங்கள் மாறியிருந்தன..
நிழல் தந்து விரிந்திருந்த தூங்கு மூஞ்சி வாகை மரங்கள் தொலைந்திருந்தன...

'' இந்த இடத்தில தான் ஏழாந்திருநாள் மண்டகப்படி.. '' - கதையை ஆரம்பிக்கையில்

'' இனிமே உங்க அப்பாவைக் கையில் பிடிக்க முடியாது!.. ''  - என்றாள் அன்புள்ள மான்விழி..

யாரென்று புரிந்திருக்கும்...

'' கார்த்தி... நேராவே போப்பா... அங்கே ஒரு போலீஸ் ஸ்டேஷன் இருக்கும்...  அதுக்கு எதிர்ப்புறம் சந்நிதி வீதி... அதுல கொஞ்ச தூரம் போனா...  ஹைஸ்கூல்.. பக்கத்திலயே பசுபதீஸ்வரர் கோயில்.. அந்தப் பக்கம் பெருமாள் கோயில்!... ''  - என்று, வழித்தடத்தைக் கூறினேன்....

'' நாப்பது வருசமா... போலீஸ் ஸ்டேசன் அங்கேயேவா இருக்கும்!... ''

'' அங்கேயே தான் இருக்கும்.. ஏன்னா அது ஜமீந்தார் கொடுத்த வீடு...
கட்டடம் வேணா மாறியிருக்கலாம்... இடம் மாறியிருக்காது!... ''

அதேபோல அங்கேயே இருந்தது போலீஸ் ஸ்டேஷன்...  சாலையின் வலது புறமாக காரைத் திருப்பி நேராகச் சென்றான் கார்த்தி...

அதோ சந்நதி வீதியின் வலது புறத்தில் இலுப்பை மரமும் ஆஞ்சநேயர் கோயிலும்!...

ஆஞ்சநேயர் கோயிலைக் கண்டதும் பற்பல நினைவுகள் மூண்டன..

வரத ஆஞ்சநேயர் என்பது பெயர்..  ஆனாலும் இலுப்பையடி ஆஞ்சநேயர் என்றால் தான் தெரியும்...

சில தினங்களுக்கு முன் தான் கும்பாபிஷேகம் நடந்திருக்கின்றது...
யாகசாலை இன்னும் பளபளப்புடன் மின்னிக் கொண்டிருந்தது....

'' நிறுத்துப்பா!... ''

- ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம் என - காரிலிருந்து இறங்கினேன்...
என்னைத் தொடர்ந்து மகளும் மகனும் கஸ்தூரியும் - இறங்கினார்கள்...

கஸ்தூரி - அன்புள்ள மான்விழியின் பெயர்...

கோயில் வளாகம் முழுதும் நறுமணம் கமழ்ந்து கொண்டிருக்க
ஆஞ்சநேயர் சந்நிதியை நோக்கி நடந்தோம்...

நாற்பது ஆண்டுகளுக்கு முன் கோயிலில் முன் மண்டபம் கிடையாது..
இப்போதோ இதற்கு முன்னோ கட்டியிருக்கிறார்கள் போலும்..

முன் மண்டபத்தில் துளசி மாலை மற்றும் அர்ச்சனைப் பொருட்களுடன் சிறு பெண் ஒருத்தி அமர்ந்திருந்தாள்...

வாங்கிக் கொண்டோம்...

எங்களைக் கண்டதும் இளம் பிராயமே உடைய பட்டர் வந்தார்...

மெல்லிய தேகம்.. கண்ணாடிகளைக் கடந்து தீர்க்கமான விழிகள்...
கழுத்தில் மெல்லிய மணிமாலை... இடது கையில் அழகான கடிகாரம்..
வலது சுட்டு விரலில் மோதிரம்...

எங்கோ பார்த்த மாதிரி இருந்தது...

வயதாகிக் கொண்டிருக்கையில் வாலிபப் பசங்களைக் கண்டால்
எங்கோ பார்த்தது போல் தான் இருக்கும்..

அர்ச்சனைத் தட்டை பெற்றுக் கொண்ட பட்டர் ஸ்வாமி சங்கல்பம் செய்தபடி வெள்ளிக் கவசத்துடன் விளங்கிய ஆஞ்சநேயரை அர்ச்சித்தார்...

ஆஞ்சநேய காயத்ரியுடன் -அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி..  - என்று கம்பராமாயணச் செய்யுளையும் சொல்லி -

'' பகவான் ஸ்ரீராமசந்த்ரனோட பட்டாபிஷேகம் முடிஞ்ச பிறகு சுக்ரீவன்
ஆஞ்சநேயர் இவாள்..லாம் கிஷ்கிந்தைக்கு திரும்பறச்சே சிவஹரி க்ஷேத்ரமான இங்கே ஒரு நாழிகை இருந்து பசுபதீஸ்வர ஸ்வாமியையும் வேணுகோபாலஸ்வாமியையும் தரிசனம் பண்ணினதா ஐதீகம்...
வாயுபுத்ரனைக் கண்ணார சேவிச்சுக்கோங்க!.. நல்லவழி காட்டுவார்!... ''
- என்றபடி தீப ஆராதனை நிகழ்த்தினார்...

கும்பாபிஷேக உபயதாரர்கள் வழங்கிய பையில் குங்குமம் துளசி ப்ரசாதங்களைவழங்கியதோடு தொன்னையில் வெண்பொங்கலும் வடையும் வைத்து நால்வருக்கும் கொடுத்தார்...

அன்னப்ரசாதத்துடன் திரும்பிய போது தான் கோயில் வாசலில் அந்த அதிசயம் ஸ்கூட்டியில் வந்து நின்றது...

வரதன்.. வரதராஜன்... என் கூடப் படித்தவன்!...

'' கோபி!.. நீ போய் சாப்டுட்டு வந்துடு... நான் பார்த்துக்கறேன்!..  இன்னிக்கு உபயதாரர் பேர அந்தப் போர்டுல எழுதி வெச்சுடு!..  இவாளுக்கு ப்ரசாதம் எல்லாம் கொடுத்தாயா!... ''

ஆசிரியராக வேண்டும் என்ற கனவுடன் இருந்தவன்... ஆஞ்சநேயர் கோயிலில் அர்ச்சகரா!?...

விறுவிறு என்று உள்ளே வந்த வரதன் எங்களை - குறிப்பாக என்னைக் கண்டதும் யோசனையுடன் நின்றான்..

'' ஸ்வாமிகளே!.. என்னைத் தெரியுதுங்களா!.. '' - என்றேன்...

வியப்பால் விரிந்தன விழிகள் ..

'' டே... சங்கர்!... ''

அப்படியே தழுவிக் கொண்டான் வரதன்...

'' உன்னை இங்கே பார்ப்பேன்...னு கனவிலயும் நெனைக்கலை..டா!.. ''

வரதனின் கண்களில் கண்ணீர்... என் கண்களிலும் ஆனந்தம் வழிந்து கொண்டிருந்தது...

'' கோபி .. இவன் யார் தெரியுமோ... சங்கர்... எங்கூட படிச்சவன்...
தஞ்சாவூர்க்காரன்.. இவங்க அப்பா யூனியன் ஆபீஸ்..ல வேல பார்த்தார்...
நாப்பது வருஷம் கழிச்சு ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கறோம்!...''

'' அந்த அத்தி வரதர் தரிசனம் மாதிரி ஆகியிருக்கு!...  எங்க செட்..ல இவன் ஒருத்தன் தான் வெளியூர்..ல இருந்து வந்தவன்...  ஒண்ணாச் சேர்ந்து சுத்தாத இடம்.. ன்னு ஊர்..ல ஒண்ணு பாக்கி கிடையாது!... ''

வரதனின் குரலில் சந்தோஷம் பொங்கி வழிந்தது..

'' நமஸ்காரம்!... ''  - என்றபடி இளம் பட்டர் பிரானின் முகம் மலர்ந்தது...

பட்டர் பிரானின் முகம் காட்டிய சாயலும் புரிந்தது..

குறிப்பறிந்து கொண்ட பூக்காரச் சிறுமி மண்டபத்தின் ஒரு பக்கத்தில்
ஜமக்காளம் ஒன்றை விரித்துப் போட்டாள் ... அதில் அமர்ந்து கொண்டோம்....

யாரிடமோ செல்லில் பேசிக் கொண்டிருந்த கோபி கோயிலுக்கு ஜனங்கள் வருவதைக் கண்டு சந்நிதிக்குள் செல்ல, நாங்கள் பேச்சைத் தொடர்ந்தோம்..

'' வரதா... என்ன பேசறது...ன்னே தெரியலை!...  உனக்கு ஞாபகம் இருக்கா.. நாம படிக்கறப்போ இந்த ஆஞ்சநேயர் கோயில் பக்கம் பசங்க வர்றதைப் பார்த்தாலே பெரியவங்க சத்தம் போடுவாங்க!... ''

'' ஏன்?... ஆஞ்சநேயர் உக்ரமா இருந்தாரா?... '' - என் மகனின் கேள்வி!...

'' அப்படியெல்லாம் இல்லை... மத்யானம் ஸ்கூல் விட்டதும் பெண் பிள்ளைகள் எல்லாம் இங்கே வந்து இந்த இலுப்ப மரத்து நிழல்..ல தான் கூடி உட்கார்ந்து சாப்டுவாங்க... ''

'' கோயிலுக்குப் பின்னால இலுப்பைத் தோப்புக்குள்ள பெரிய கேணி.... கை கால் கழுவறதுக்கு அங்கே நல்ல வசதி.. அதுனால... அவங்களுக்கு எடைஞ்சலா அந்தப் பக்கம் யாரும் வரக்கூடாது...ன்னு ஒரு கட்டுமானம்... அப்போ ஊருக்குப் பொதுவா இருந்தது இலுப்பைத் தோப்பு... ''

'' காலம் மாறுனதும் பத்து வருஷத்துக்கு முன்னால தோப்புக்குச்
சொந்தக்காராள் இலுப்பை மரம் எல்லாத்தையும் வெட்டிப் போட்டுட்டு வீடுகளாக் கட்டி வாடகைக்கு விட்டுட்டு மெட்ராஸ் பக்கம் போய்ட்டா!... ''

வருத்தம் வெளிப்பட்டது வரதனிடமிருந்து...

'' வரதன் ... வாத்யாரா ஆகணும்..ன்னு ஆசைப்பட்டியே!... ''

’'' என்ன செய்றது சங்கர்!.. எனக்கு ப்ராப்தம் இல்லை...  ஐயங்கார் வீட்டுப் பையனுக்கு அந்த மாதிரி ஆசையெல்லாம் வரப்படாதுடா..  - ன்னு சொல்லிடுத்து சர்க்கார்!... ''

'' சரி... எல்லாம் பெருமாள் சித்தம்...ன்னுட்டு நானும் கோயில் சாவியக் கையில வாங்கிண்டேன்..  அதுவும் ஆச்சு நாப்பது வருசம்.... அந்த வேணுகோபாலனும் சரி...  இந்த வரத ஆஞ்சநேயரும் சரி... எந்த ஒரு குறையும் வைக்கலை... ''

'' நிம்மதியா போய்ட்டுருக்கு காலம்...  இப்போ நான் தாத்தா ஆயிட்டேண்டா... சங்கர்!..  பெரியவன் மதுரையில இருக்கான்... குழந்தை பிறந்து மூணு மாசம் ஆகறது.. ''

'' இவன் கோபி.. சின்னவன்.. பெங்களூர் வாசம்... ஐடி முடிச்சுட்டு கை நிறைய சம்பாதிக்கிறான்... கோயில் கும்பாபிஷேகத்துக்காக வந்துருக்கான்... ''

'' மனசுக்கு ரொம்பவும் சந்தோஷமா இருக்கு...  நாம பட்ட கஷ்டம் நம்ம குழந்தைகள் படலையே..ன்னு... ''  - வரதன் நெகிழ்ந்தான்..

'' வரதா.. என்னதான் நம்ம புள்ளைங்க கை நெறைய சம்பாதிச்சாலும்
ஒரு லட்சியம்..ங்கறது பிடிபடாமலே போகுது.. இல்லையா?... ''

'' அதுக்கு என்ன செய்றது சங்கர்?... லட்சியம்..ங்கறது ஒவ்வொரு கால
கட்டத்திலயும் ஒவ்வொரு மாதிரியாப் போச்சு !... நீ கூடத்தான்
டாக்டராகணும்.. ரோகிணியைக் கை பிடிக்கணும்...ன்னு இருந்தாய்!... ''

சட்டென நாக்கைக் கடித்துக் கொண்டான் வரதன்!...

பிள்ளைகள் இருவரும் - ஓ!... என்றார்கள்...

அந்தப் பக்கம் வரதனின் மகன் கோபியின் முகத்திலும் புன்னகை படர்ந்தது...

எதற்கும் அசராத கஸ்தூரி -  '' ம்ம்... இன்னும் என்னவெல்லாம் வருகிறது என்று பார்ப்போம்!... '' - என்றாள்...

வரதனின் முகத்தில் பதற்றம்... தவறாக சொல்லி விட்டோமே!.. என்று...

'' இதெல்லாம் முன்னமே தெரியும்!.. '' - என்று சிரித்தேன் நான்!..

'' ஆனா முடிஞ்சதா?... அப்போ பொண்ணுங்களைக் கண்ணாலப் பார்த்தாலே ஆத்துல உள்ளவா ரொம்பக் கவலைப்படுவா!..  இதுகள் எல்லாம் எப்படிக் கரையேறப் போறதோ!..ன்னு.. இத்தனைக்கும் நாம எந்த பொண்களோடயும் வாயத் தொறந்து பேசுனது கூடக் கெடையாது!... ''

'' இன்னைக்குக் காலம் அதி பயங்கரமா இருக்கு!...சரி.. அதெல்லாம் விடு...
நீ என்ன பண்ணிண்டு இருக்கிறாய்?.. நான் கேக்கவேயில்லை பார்!.. ''

'' பார்மஸி முடிச்சுட்டு மெடிகல் ஷாப் திறந்தேன்.... நல்லபடியா
போய்க்கிட்டு இருக்கு... கார்த்திக் எம்பிஏ முடிச்சுட்டு இருக்கான்...
ஸ்வேதா பிஎஸ்ஸி அக்ரி படிச்சுக்கிட்டு இருக்காள்... ''

'' வீடு, வாசல், கார்..  ஆனாலும் பிள்ளைகளுக்கு நல்லபடியா வாழ்க்கை
அமையணுமே..ன்னு!... ''

'' அதையெல்லாம் ஆஞ்சநேயர் பார்த்துப்பார்!... '' - சந்நிதியை நோக்கினான் வரதன்..

'' ஆனா.. வரதா என்னைய மன்னிச்சுடு...  இத்தனை நாள் ஆகியும் உன்னைப் பத்தின நெனைப்பு வராம இருந்ததுக்கு... ''

'' சங்கர்.. எதுக்குடா பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு...
நான் மட்டும் என்ன?.. உன் நெனைப்போடயா காலங்கழிச்சிட்டு இருந்தேன்!..  இதெல்லாம் இந்த வாழ்க்கையில சகஜம்... இந்தளவுக்கு இன்னும் பிரியம் மாறாம இருக்கே.. அதுவே பெரிய பாக்யம்!... ''

'' நம்மோட நட்பு ஆத்மார்த்தமா இருந்ததாலத் தானே ஆஞ்ச நேயர் ரெண்டு பேரையும் மறுபடியும் சந்திக்க வெச்சிருக்கிறார்...   அது சரி... என்ன திடீர் விஜயம் பசுபதீஸ்வரத்துக்கு?.. ''

'' ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருந்தேன்..  படிச்ச ஊரைப் போய் பார்த்துட்டு வரணும்...ன்னு...   அதுக்கு இப்போதான் நேரம் கூடி வந்திருக்கு...  சரி.. நம்ம செட்..ல மத்த பசங்க எல்லாம் என்ன ஆனானுங்க?..  வாத்யாரெல்லாம் எப்படி இருக்காங்க?... ''

'' நம்ம செட்.. ல ரோகிணி மட்டுந்தான் சொன்ன மாதிரி செஞ்சவ...   நர்ஸிங் கோர்ஸ் முடிச்சுட்டு வேலைக்குப் போனா!..  இப்போ மாயவரத்துல செட்டில் ஆகிட்டா!.. ''

'' ராகவன், மணி ரெண்டு பேருமே பேங்க் மேனேஜர் ஆகிட்டானுங்க...
வாத்யார் வீட்டு க்ருஷ்ணன் ஆட்டோமொபைல்ஸ் வெச்சிருக்கான்...
இந்த ஸ்கூட்டி அவங்கிட்ட எடுத்தது தான்... ''

'' வாத்தியார் தம்பி வசந்தன் ... அவங்க அப்பா ஞாபகார்த்தமா நல்லா
படிக்கிற ஏழைப் பிள்ளைகளுக்கு நிதி உதவி செஞ்சிக்கிட்டு இருக்கான்..''

'' பாலசுப்ரமண்யன்... ஞாபகம் இருக்கா... அவனோட மகனுக்கு அமெரிக்கா..வுல வேல கிடைச்சது....  இப்போ அவனும் அங்கே போயிருக்கான்... ''

'' மற்றபடி வெளியூர் வாத்யார்களப் பத்தி ஒண்ணும் தெரியலை..
நம்ம நாராயணன் சார் காலமாகி ஆறேழு வருஷங்களாகறது...
முழு சரீரத்தையும் மெடிக்கலுக்குத் தானமா கொடுத்துட்டார்...
முத்து டீச்சர் ரொம்பப் பாவம்... போன வருசம் தான் காலமானாங்க!... ''

பேசிக்கொண்டிருக்கும்போதே கோயில் வாசலில் ஆட்டோ வந்து நின்றது..

கோபி விருட்டென்று வெளியே செல்ல -

ஆட்டோவினுள்ளிருந்து சாப்பாட்டு கேரியர்களும் தூக்கு வாளியும்
வாழையிலைகளும் தண்ணீர் பாட்டில்களும் இறங்கின...

அவற்றின் பின்னே இறங்கியவள் - துளசி!...

நாங்கள் பதினொன்றில் இருந்தபோது பத்தாம் வகுப்பு படித்தவள்...

பள்ளியின் இலக்கிய மன்ற விழாக்களில் பாட்டு என்றால் இவள் தான்!..
முதல் பரிசை அடித்துக் கொண்டு போய் விடுவாள்...

பாட்டு மட்டுமல்ல... கோலம் போடறது, படம் வரையறது, கட்டுரை எழுதறது..ன்னு ஒண்ணு விடமாட்டா!...

'' வரதா!.. '' - என்றேன் ஆச்சர்யத்துடன்...

'' உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டுமே..ன்னு தான் சொல்லலை!.. '' -  புன்னகைத்தான் வரதன்..

'' அண்ணா... நல்லாருக்கேளா!..''

கால காலமாக நீந்திக் களித்த பாச வெள்ளமாக ஓடி வந்தாள் துளசி...

அடர் பச்சை மடிசார்.. அள்ளி முடித்த கூந்தல்.. தழையத் தழைய மல்லிகை.. தோடும் தொங்கலும்.. ஒற்றை முத்தாக மூக்குத்தி.. கழுத்தை ஒட்டிய அட்டிகை..  நெற்றியின் உச்சிவரை ஸ்ரீசூர்ணம்... ஸர்வ மங்கலமாக இருந்தாள்..

'' வாம்மா.. துளசி!... '' - என்று வரவேற்றேன்...

மலர்ந்த முகத்துடன் அருகில் வந்தாள் துளசி...

'' மன்னீ!.. இவ்ளோ நாளாச்சா நாமெல்லாம் பார்த்துக்குறதுக்கு...
டே.. அம்பி கார்த்தி!... நல்லா இருக்கயா?.. அண்ணா மாதிரியே வளர்த்தி...
இவ தான் ஸ்வேதா குட்டியா!?... மஹாலக்ஷ்மி மாதிரி..ன்னா இருக்கா!.. ''

ஸ்வேதாவின் கன்னங்களை வருடி முத்தமிட்டாள்..

மஹாலக்ஷ்மியே மஹாலக்ஷ்மி என்றதில் கஸ்தூரிக்கு ரொம்பப் பெருமை...

அதற்குள் பிள்ளைகளின் பேர் முதற்கொண்டு தெரிந்து கொண்டிருக்கிறாள்..

'' கோபி சொன்னான்... நீங்கள்..லாம் வந்திருக்கேள்...ன்னு!...  ஒரே சந்தோஷம்.. கையும் ஓடலை.. காலும் ஓடலை...  முதல்..ல கை அலம்பிண்டு...வாங்க... சாப்டலாம்!... பசியோட இருப்பேள்!... ''

துளசியின் உபசார மொழிகளைக் கேட்டு கஸ்தூரியின் கண்கள் கலங்கி விட்டன...  எனது கையைப் பற்றிக் கொண்டாள்..

'' வரதா... உனக்கேன் இத்தனை சிரமம்?... '' - நெகிழ்ந்திருந்தது என் மனம்..

'' பகவானே!.. என்ன இது இப்படியொரு கேள்வி?...  ஒம்பது பத்து பதினொண்ணு... ன்னு மூணு வருசம் சேர்ந்து படிச்சதில எத்தனை நாள் இந்த வரதனுக்கு பசியாற்றி இருப்பாய்?... ''

'' தயிர் ஸாதமும் நார்த்தங்காயும் தான் கொண்டு வருவேன்...
அதுவும் பல நாட்களுக்கு இருக்காது... அதெல்லாம் மறக்க முடியுமா சங்கர்!.. ''

'' இட்லியும் தக்காளிச் சட்னியுமா என்னை உபசரிச்ச உனக்கு ஒரு வாய் காஃபி கொடுக்க முடிந்திருக்கிறதா இந்த வரதனால!... ''

'' வரதா! பதிலுக்குப் பதில் பண்றதா நட்பு?... ''

'' அப்படியில்லே சங்கர்!... கொள்றதும் கொடுப்பதும் கூட நட்பு தாண்டா!...''

'' அப்போ... இந்த ஜாதி... மேல்.. கீழ்... ன்றதெல்லாம் இருந்ததில்லையா?...''
- கார்த்திக் வியந்தான்..

'' ஜாதிகள் இருந்துச்சு.. இருந்தாலும் அதனால துவேஷம் இருந்ததில்லை...  எங்களோட காலம்...லாம் பொற்காலம்..டா குழந்தே!...''

'' ராசேந்திரன்..னு ஒரு சிநேகிதன்.. திருப்பாணாழ்வார் குலம்...  மாவடு அரிஞ்சு உப்பு மொளகா போட்டு எடுத்துண்டு வருவான்!.. அதுல முதல் பங்கு யாருக்குத் தெரியுமா?... எனக்குத் தான்!...  யார் வீட்டு உப்பு?.. யார் வீட்டு மாங்கா?...ன்னா பார்த்தோம்!?..  அதெல்லாம் இல்லை.. மாசு மருவில்லாம பழகிக் கிடந்தோம்!..  அந்த மாதிரி நாளெல்லாம் இனிமே வரவே வராதுடா அம்பீ!.. ''

திருப்பாணாழ்வார்...ன்னா யாருப்பா?... - கார்த்திக்கிடம் இருந்து கேள்வி...

கேள்வி கேட்டவனுக்கு விவரம் கூறிய வரதன் மேலும் தொடர்ந்தான்...

'' தான் சுவைத்த பழங்களையே தந்தனள் தாய் சபரி!.. ன்னு கேபிஎஸ்
பாடுவாங்க..சபரி கொடுத்த பழங்களை ராமன் சாப்பிட்டதா புராணம்..
அப்பேர்ப்பட்ட ராமனுக்கு தாசானுதாசன் பரம்பரையில வந்துட்டு பேதங்கள் பார்க்கிறதாவது?..மத்தவங்க எப்படியோ... சங்கரும் நானும் பேதமெல்லாம் பார்த்ததேயில்லை... ''

'' எங்கள மாதிரி பசங்களுக்காகவே பாலசுந்தரம் ஐயா வீட்டுச் சாப்பாடு
கொண்டு வருவார்!.. அவருக்கெல்லாம் எந்த ஜன்மத்துல கடன் தீர்க்கிறது?...''

வரதன் உருகினான்...

'' அதெல்லாம் பகவான் பார்த்துப்பார்... நீங்க வாங்கோ!.. சாப்பிடலாம்!.. ''

துளசி இலையை விரித்து இட்லியைப் பரிமாறினாள்...

இட்லியும் கிச்சடியும் கேஸரியும் பில்டர் காஃபியும் - ஆகா!...  துளசியின் கைவண்ணம் அருமை... அருமை...

'' இப்பவே மணி ஒம்பதரை ஆகிடுத்து...  பசுபதீஸ்வர ஸ்வாமிய முதல்..ல தரிசனம் பண்ணுங்க...  அதுக்கப்புறம் வேணு கோபாலனைச் சேவிச்சுக்கோங்க!...  தெப்பக் குளத்துல தான் தண்ணி குறைஞ்சி போய்ட்டது...  இது கல்யாண க்ஷேத்ரம்.. சீக்ரமே விவாஹப் ப்ராப்தம் கிடைக்கும்..  பெருமாள் சந்நிதியில எங்க அண்ணா ரங்கநாதன் தான்
கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கான்!..  நான் ஃபோன் பண்ணிச் சொல்லிடறேன்...

ஆற அமர தரிசனம் பண்ணிட்டு வாங்கோ!..  மத்யானம் நம்ம ஆத்துல.. தான் சாப்பாடு!... ''

'' அடடே.. துளசி.. உனக்கேன் வீண் சிரமம்... நாங்க திரும்பிப் போகறப்போ
கும்பகோணத்துல.... ''

'' அண்ணா... அந்தப் பேச்செல்லாம் பேசப்படாது!.. சொல்றதைக் கேட்கணும்!..  இவ்ளோ தூரம் வந்துட்டு கும்மோணத்துல போய் சாப்டுறாளாமே கும்மோணத்துல!... ''

'' உங்க தங்கைய எங்கே கல்யாணம் முடிச்சுக் கொடுத்திருக்கேள் அண்ணா?... ''

'' திருவாரூக்குப் பக்கத்தில!... ''

'' அவளா என்னை நினைச்சுக்க மாட்டேளா!?... ''

அதற்குமேல் ஒன்றும் மறுத்துப் பேச முடியவில்லை - துளசியிடம்...

இதெல்லாம் நடந்து மூன்று மாதங்களுக்குப் பின் ஒருநாள் மதிய வேளை...  ஸ்வேதாவுக்கு கல்யாணப்பேச்சு கூடி வந்து விட்டது...

துளசி எந்த நேரத்தில் விவாஹ ப்ராப்தம் என்று சொன்னாளோ பலித்து விட்டது..

மாப்பிள்ளை யார் என்று கேட்கிறீர்களா?...

வேறு யார்?..

வரதராஜன் - துளசி தம்பதியினரின் கனிஷ்ட குமாரனாகிய கோபி தான்!..

ஐடி படித்த - அந்த பட்டர் பிரான்!..

இன்றைக்குப் பேச்சு வரும்போது -  கஸ்தூரி கதை கதையாய்ச் சொன்னாள்...

அன்றைக்கே செல்போன் இலக்கப் பரிமாற்றத்திலிருந்து இதயப் பரிமாற்றம் வரை நடந்திருக்கிறது...

நான் தான் அறியாப் பாலகனாய் இருந்திருக்கிறேன்...

'' அவள் - ஸ்வேதா இல்லாமல் நானில்லை!..  நான் அவாளுக்குக் கொடுத்ததை விட அவாள் எனக்குக் கொடுக்கப் போறது தான் ப்ரசாதம்!.." - ன்னு கோபி சொல்லிட்டானாம்...

'' ஏன்டா.. கோபி இப்படி!?..'' - ன்னு கேட்டாளாம் துளசி..

'' இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம்!..''  - ன்னு பதில் சொன்னானாம்....

பொய்க்கோபம் காட்டலாம்..ன்னு முயற்சி பண்ணி மகன் கிட்ட வெற்றிகரமா தோத்துட்டாளாம் துளசி...

வரதன் காதுக்கு சேதி போனதும் -  '' ரொம்ப சந்தோஷம்.. கொழந்தைகள் க்ஷேமமா இருக்கட்டும்!.. '' - ன்னானாம்..

சரி.. ன்னு வரதனுக்கு போனைப் போட்டேன்.. துளசி தான் எடுத்தாள்...

'' அண்ணா.. ஸ்வேதாவைக் கொடுத்துடுங்கோ...  நான் கண்ணுல வைச்சி பார்த்துக்கறேன்!... ''

அப்படியே உருகி விட்டாள் துளசி...

அன்றைக்கு பசுபதீஸ்வரத்தில் இருந்து திரும்பும்போது வரத ஆஞ்சநேயர் படம் ஒன்றைக் கொடுத்திருந்தான் வரதன்...

அன்றிலிருந்து சட்டைப் பையிலேயே எப்போதும் இருக்கும்...  அந்தப் படத்தை எடுத்துப் பார்த்தேன்...

'' அன்னைக்கு மன்மதனையும் வரச்சொல்லியிருந்தேனே!... ''  - என்கிற மாதிரி வரத ஆஞ்சநேயர் சிரித்துக் கொண்டிருந்தார்...

ஃஃஃ

59 கருத்துகள்:

  1. ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் சந்நிதிக்கு வருகை தரும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  2. இன்று எனது கதையைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
  3. எங்கள் பிளாக்கில்
    இது இருபத்தைந்தாவது சிறுகதை...

    இத்தனையும்
    தங்களது அன்பினால் ஆயிற்று..

    கடன்பட்டிருக்கிறேன்..
    நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா...     அப்படியா?  இது எனக்கே செய்தி!     உங்கள் ஆதரவுக்கு நன்றி. வாழ்த்துகளும்,  பாராட்டுகளும் துரை ஸார்..     நம் நட்பு தொடரட்டும்.

      நீக்கு
    2. 25 ஆவது சிறுகதைக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் துரை!

      நீக்கு
    3. வாழ்த்துகள் துரை செல்வராஜு சார்... நீங்க கொழுக்கட்டையைப் போட்டு சேவை பிழியறமாதிரி சட் சட்னு கதையை லாவகமா எழுதறீங்க. நல்ல திறமை.

      நீக்கு
    4. கொழுக்கட்டை மாவு மிஞ்சினால் பலரும் அம்மிணிக்கொழுக்கட்டைனு சின்னதாக உருட்டிப் பண்ணுவாங்க, இல்லைனா உளுத்தம்பருப்புப் பூரணத்தை உசிலித்துக் கொண்டு உசிலிக் கொழுக்கட்டைனு பண்ணுவாங்க. நம்ம வீட்டில் இதெல்லாம் போணி ஆகாது என்பதால் முன்பெல்லாம் நான் சேவையாகவே பிழிந்து விடுவேன். இப்போல்லாம் மாவு மிச்சம் வரும்படி பண்ணுவது இல்லை.

      நீக்கு
    5. செவ்வாய் கிழமையில் கொழுக்கட்டை எங்கேயிருந்து வந்தது? அதுவும் இந்த வாரம் கொழுக்கட்டை யாரும் செய்யவில்லையே என்று ஒரு நிமிடம் குழம்பி விட்டேன். 

      நீக்கு
    6. ஓ... இது வேற இந்தப் பக்கம் நடந்து கொண்டிருக்கின்றதா!...

      இருபத்தைந்தாவது கதைக்கு வாழ்த்துரைத்த
      அன்பின் அக்கா அவர்களுக்கும் அன்பின் ஏகாந்தன் அவர்களுக்கும் அன்பின் நெல்லை அவர்களுக்கும் ஆஞ்சநேயர் சந்நிதியில் கொழுக்கடை பிரசாதித்த ஸ்ரீமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கும் நன்றி.. நன்றி...

      நீக்கு
    7. ஓ... இது வேற இந்தப் பக்கம் நடந்து கொண்டிருக்கின்றதா!...

      இருபத்தைந்தாவது கதைக்கு வாழ்த்துரைத்த
      அன்பின் அக்கா அவர்களுக்கும் அன்பின் ஏகாந்தன் அவர்களுக்கும் அன்பின் நெல்லை அவர்களுக்கும் ஆஞ்சநேயர் சந்நிதியில் கொழுக்கடை பிரசாதித்த ஸ்ரீமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கும் நன்றி.. நன்றி...

      நீக்கு
    8. துரை சார், என்னைப் போலவே நீங்களும் குழம்பி விட்டீர்களா? கொழுக்கட்டை ப்ரசாதித்தது நான் இல்லை, கீதா அக்கா. 

      நீக்கு
    9. ஆகா!...

      இருந்தாலும் நீங்களும் ஒரு தடவை சேவை செய்து விடுங்கள்..

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்நாள் இனிமை தரும் நாளாக இருக்கவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.

    இன்று சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் எழுதிய கதையாக இருக்குமென்று நினைத்து வந்தேன். அதன்படி துரை சகோ அவர்கள் எழுதிய கதை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.அதுவும் இந்தக் கதை எ. பியில் அவர்களின் 25வது சிறுகதை என்னும் போது மகிழ்ச்சி பன்மடங்காகிறது. வாழ்த்துக்கள். கதைப் படித்து விட்டு வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்களது வருகைக்கு மகிழ்ச்சி... நல்வரவு...

      இந்த மாதிரியான நம்பிக்கை தான்
      என்னை எழுதத் தூண்டுகின்றது...

      அன்பின் கருத்துரைக்குக் காத்திருக்கிறேன்...

      நீக்கு
    2. எங்கள் ப்ளாகின் சைட் பாரில் கமலா ஹரிஹரன் அவர்களின் சுட்டி பழைய பதிவுக்கே செல்கிறதே!

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      டிராப்டில் இருக்கும் போது தவறுதலாக பிரசுரத்தில் கைபட்டு (கைப் பேசியினால்) விட்டது சகோதரி. மன்னிக்கவும். உங்கள் பதிவும் இன்று வந்திருக்கிறதே..! கொஞ்சம் வேலைகளை முடித்து விட்டு படிக்க வருகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

      மன்னிக்க வேண்டுகிறேன்.. உங்கள் ஆவலை தூண்டுகிறேன்.. ஹா. ஹா. ஹா. மன்னிப்பு என்றாலே இந்த பழைய பாட்டுத்தான் நினைவுக்கு வருகிறது. புதிசில் இந்த மாதிரி பாட்டுக்கள் நான் அறியேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. புதுசில் இந்தமாதிரி பாட்டுக்கள் இருந்தால்தானே நீங்கள் அறிய !

      நீக்கு
    5. வணக்கம்சகோதரரே

      உண்மைதான்.. புது பாடல்கள் அவ்வளவாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், காலையில் சகோதரிக்கு பதில் கூறியதும் இந்த பாடலொன்றும் உடனே நினைவுக்கு வந்தது.

      "மன்னிக்க மாட்டாயா உன் மனமிரங்கி.." என்ற பாடல்.

      இப்போது தேடுதலில் விபரத்துடன் கிடைத்தது..

      எம். எஸ். வி யின் இசையமைப்பில் ஜனனி திரைப்படத்தில் K J யேஸுதாஸின் இனிய குரலில் அழகான பாடல் இது. இன்னும் இது போல் எத்தனை பாடல் இருக்கிறதோ சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்குத்தான் தெரியும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    6. விண்ணைத்தாண்டி வருவாயா? படத்தில் ஷ்ரேயா கோஷல் பாடியிருக்கும் 'முதல் நாள் சிரித்தேன், மறு நாள் வெறுத்தேன்,மன்னிப்பாயா..' நல்ல பாடலும் என் நினைவுக்கு வரும். கேட்டுப்பாருங்கள். 

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். மடிக்கணினியில் சார்ஜ் இல்லைனு அப்போப் போயிட்டேன். சாப்பிட்டப்புறமா நேரத்தைப் பார்த்தால் ஏழரை தான். சரினு மறுபடி உட்கார்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  6. துரையின் கதையாகத் தான் இருக்குமோனு நினைச்சு வந்தேன். அருமையாகச் சரளமான நடையில் சம்பாஷணைகளிலேயே கதையை நகர்த்தி இருக்கார். முடிவு கொஞ்சம் எதிர்பாராதது. ஏனெனில் திடீரென நண்பர்கள் சந்திப்பு ஏன் என யோசிக்கையிலேயே முடிவு ஓர் இன்ப அதிர்ச்சியாக வந்து நின்றது. நல்ல முடிவு. ஏற்கக் கூடியதும் கூட!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக.. வருக..

      தான் படித்த பள்ளியீ நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு பார்ப்பதற்கு ஆசைப்பட்டு பிள்ளைகளுடன் செல்வதாக ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேனே...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    2. /// பள்ளியை../// என்று திருத்திக் கொள்க...

      நீக்கு
  7. சொந்தக்காராள் இலுப்பை மரம் எல்லாத்தையும் வெட்டிப் போட்டுட்டு வீடுகளாக் கட்டி வாடகைக்கு விட்டுட்டு மெட்ராஸ் பக்கம் போய்ட்டா!.../ஏறத்தாழ இந்த மாதிரி அனுபவம் எனக்கு இருந்தது நாங்கள் அப்பர் கூனூரில் ஒரு பேரிக்காய் தோப்புக்கு நடுவெ குடியிருந்தோம் இண்ட பேரிக்காய் தோப்புதான் ச்'அடையாளம் வெகு நாட்களுக்குப்பின் அந்த வசித்த இடம்தேடிப்பொன போது தோப்பே இல்லாமல் இருந்ததுஅத்தனை பெரியதோப்பு எங்குதான் போச்சோ பழகிய மனிதர்கள் மூச் ......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...

      தாங்கள் சொல்வதைப் போலவே தோட்டங்களும் தோப்புகளும் அடையாளம் தெரியாமல் போயின...

      எல்லாம் காலம் செய்த மாயம்....

      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. இனிமையான நட்பு மிளிரும் கதை... அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. கதை மிக அருமை.
    நட்பு மிக உண்மையான நட்பு .

    25 ஆவது சிறுகதைக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
    அனைத்து கதைகளும் முத்திரை கதைகள்.
    அன்பு, பாசம், நட்பு என்று அனைத்தையும் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      பள்ளி நாட்களையும் அன்புத் தோழர்களையும் மறக்கவும் முடியுமோ..

      கருத்துரையும் வாழ்த்துரையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. மஹாலக்ஷ்மியே மஹாலக்ஷ்மி என்றதில் கஸ்தூரிக்கு ரொம்பப் பெருமை...//

    மஹாலக்ஷ்மியை கொண்டு வந்து விட்டார் தன் வீட்டுக்கு துளசி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஹாலக்ஷ்மி..

      அவளே அழகு.. அவளே அனைத்தும்...

      வாழ்க நலம்..

      நீக்கு
  12. கோவில் குளக்கரையில், ஜிலுஜிலுவென்று வீசும் அரச மரக்காற்றை அனுபவித்தபபடி அமர்ந்திருப்பதை போல சுகானுபவம் தந்த கதை. வாழ்த்துக்கள் துரை சார். எ.பி.யில் 25வது கதைக்கும் வாழ்த்துக்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> கோயில் குளக்கரையில், ஜிலுஜிலுவென்று ..<<<

      தங்களது ரசனையே தனி...

      அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துக்களும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு

  13. ஆஞ்சநேய காயத்ரியுடன் -அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி.. - என்று கம்பராமாயணச் செய்யுளையும் சொல்லி -/ மன்னிக்கவும் இந்தச் செய்யுள் கம்பராமாயணத்தில் இல்லை என்றே தோன்று கிறதுபெரும்பாலாவர்களி தவறானபுரிதல் என்றே தோன்றுகிறது பகவத் கீதையில் இல்லாதவற்றைச்சொல்வதுபோல் இதுவுமொன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. GMB ஐயா! அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி என்ற வாழ்த்துப்பாடல் கம்பனுடையது இல்லை கம்பன் படைப்புக்கு வாழ்த்துப்பாயிரம் பாடிய பெயர் தெரியாத 20 பேர்களில் ஒருவருடையது என்பது வரை உண்மைதான்! இதை கம்பராமாயணத்தில் ஈடுபாடு உள்ள எழுத்தாளர் கவிஞர் ஹரிகிருஷ்ணன் எப்போதோ சொன்னது கூட நினைவுக்கு வருகிறது.

      சந்தடி சாக்கில் கீதையில் சொன்னது சொல்லாதது என்று இன்னொரு சமாசாரத்தையும் செருகியிருக்கிறீர்களே! என்ன சமாசாரம்?

      நீக்கு
    2. @krishnamurthi
      please see ....http://gmbat1649.blogspot.com/2014/11/blog-post_20.html

      நீக்கு
    3. நான் இதுநாள்வரை கம்ப ராமாயணச் செய்யுள் என்றுதான் நினைத்திருந்தேன்..

      மேலதிகத் தகவல்களை வழங்கிய ஐயா அவர்களுக்கும் அன்பின் திரு கிருஷ்ண மூர்த்தி அவர்களுக்கும் நன்றி..

      நீக்கு
    4. GMB ஐயா!

      உங்களுடைய பதிவையும் தொடர்ந்து வந்த 47 பின்னூட்டங்களையும் வாசித்தேன். அதற்குப் பிறகும் நான் எழுப்பிய கேள்வி தனித்தே நிற்கிறது.

      கீதாசாரமாக கண்ணதாசன் சொல்லிவிட்டுப் போனதை, யோசிக்காமல் அட்டையில் ஒட்டித் தொங்கவிடுகிறவன் இல்லை. கீதையை வெவ்வேறு இடங்களிலிருந்து பாடம் கேட்டிருக்கிறேன், அது ஒரு யுகம் முடிகிற தருணத்தில் பிறக்கப்போகிற கலியுகத்துக்காகச் சொல்லப்பட்டது. புரிந்துகொள்வதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான வேறுபாடு இருக்கலாம்.

      இங்கே பேச வந்தது அஞ்சிலே ஒன்று பெற்றான் பாடலைப் பற்றி. அது வாழ்த்துப் பாயிரம். கம்பன் எழுதியதில்லை என்பதோடு முடிந்து விடுகிற விஷயம். இப்போது சொல்லுங்கள் கீதையை அவரவர் அர்த்தப்படுத்திக் கொள்வதற்கும் இடைச் செருகலுக்கும், நீங்கள் சுட்டிய பதிவுக்கும் என்ன சம்பந்தம்?

      நீக்கு
  14. அந்தக் காலத்தில் நட்புகளுக்கு இடையில் யார் சாதி எல்லாம் பார்த்தா? இப்போதும் நகரங்களில் அப்படித்தானே?

    அருமையான கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதானே..

      அந்தக் காலத்தில் நட்புகளுக்கு இடையில் சாதி எல்லாம் யார் பார்த்தது?...

      அன்பின் திரு ஜோசப் அவர்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. ஆஜர் வச்சுட்டேன். கதை பிறகு படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    அருமையான கதை. படித்த ஊரை பள்ளி நாட்களை மறக்க முடியாது குடும்பத்துடன் ஊரைப்பார்க்க ஊருக்குள் நுழையும் போதே சங்கர் அவர்களின் உற்சாகம் நம்க்குள்ளும் தொற்றிக் கொள்கிறது.

    இயல்பான நடையுடன் வரத ஆஞ்சநேயர் கோவிலில் நண்பர்கள் சந்திக்கும் போதும், பாசங்களுடன் உணவையும் போட்டியிட்டு பரிமாறிக் கொள்ளும் போதும் அவர்களின் நட்பின் ஆழம் கண்ணில் நீரை வர வைத்தது. முடிவும் சுபமாக முடித்து நட்பின் வேரை நகர முடியாதபடிக்கு நிலம் ஊன்ற வைத்து விட்டீர்கள். அழகான அளவான வார்த்தைகள்.. கதை மிகவும் அருமையாயிருந்தது. கதையாக நினைக்க முடியவில்லை. நம் சொந்த மனிதர்களின் பாசங்களை நேரடியாக பார்த்து ரசிப்பது போன்ற உணர்வை தந்து, அவர்களை நெருக்கமாக உணர வைத்து விட்டீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. >>> நம் சொந்த மனிதர்களின் பாசங்களை நேரடியாக பார்த்து ரசிப்பது போன்ற உணர்வைத் தந்து.. <<<

    இந்தக் கதைக்குள் எனது பள்ளித் தோழர்களும் தோழியும் இருக்கின்றார்கள்....

    தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  18. நாற்பது வருடம் என்பது பெருவெளி. அதற்கப்புறம் கிராமத்துக்குப்போய் பார்ப்பது என்பது வேதனையை காசுகொடுத்து வாங்கிக்கொள்வது போன்றது. ஆலும், அரசும், வேம்பும், புளியும் இன்னபிறவும் காணாமற்போய் அந்த இடத்தில் இப்போது வந்து உட்காந்திருக்கும் கண்றாவிகளையும் பார்க்கவேண்டியிருக்கும். கோவில்கள் இருக்கும். அந்தக்கால அரசர்கள், சிற்றரசர்கள் பக்தியோடு கட்டிப் போற்றியது.. இருக்கும். உள்ளே சிலைகள்? சொல்வதற்கில்லை..
    கிட்டத்தட்ட இதுபோன்ற கால இடைவெளிக்குப்பின் நான் கிராமம் போக ஆசையாகிறேன். உள்ளுக்குள் அஞ்சுகிறேன், என்ன பார்க்கக் கிடைக்குமோ என. சாலையின் இருமருங்கிலும் அப்போதெல்லாம் அணைகட்டி ஆடிய தென்னைமரங்கள், இன்னொரு சாலையில் ஒருபுறமாக உயிர்த்து உயர்ந்திருந்த புளிய மரங்கள், குளத்தங்கரை அரச மரம் (வ.வே.சு.ஐயரும், கந்தர்வனும் ஞாபகத்தில் வருகின்றனர்), ஆலமரங்கள் இவையெல்லாம் காணாமற்போயிருந்தால், அதைக் கிராமம் என அழைக்கமாட்டேன். அந்நியனாய் உணர்வேன்.
    இப்போதிருக்கும் மனிதர்களுக்கும் அதெல்லாம் ஒன்றும் புரியப்போவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் திரு ஏகாந்தன்..

      பசுமைச் சூழ்நிலையை மிக அருமையாகச் சொல்லியிருக்கின்றீர்கள்...
      இந்தக் கதையில் வரும் ஊரின் பெயரை கோயிலின் பெயரால் மாற்றியிருக்கின்றேன்..

      இந்த ஊருக்குப் பத்து வருடங்கள் முன்பு சென்றிருந்தபோது
      நீங்கள் சொன்னவாறே கண்டு மனம் வருந்தினேன்...

      இதில் அவற்றையெல்லாம் விரிவாகச் சொல்லாமல் தொட்டுச் சென்று விட்டேன்...

      >>> இப்போதிருக்கும் மனிதர்களுக்கும் அதெல்லாம் ஒன்றும் புரியப்போவதில்லை..<<<

      மிக அருமையான வார்த்தைகள்... இதை வேறொரு சமயத்தில் பயன்படுத்திக் கொள்வேன்..

      மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  19. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா..

      நீக்கு
  20. பல வருடங்களின் பின்னர் ஊருக்குத் திரும்பினால் இப்படித்தான் இருக்கும், கவலை கலந்த மகிழ்சி வரும். அழகாக இருக்கு கதை, போனதோடு மட்டுமில்லாமல் சம்பந்தமும் கலந்தாச்சுப் போல இருக்கே:))..

    //அவற்றின் பின்னே இறங்கியவள் - துளசி!...//
    ஹா ஹா ஹா இப்படி ஒரு திருப்பமில்லாமல் ஊருக்கு திரும்பும் கதை எழுத முடியாதே:) பழைய காதலியாக இருக்குமென நினைச்சேன்ன் ஆனா தங்ங்ங்ங்கை என்றிட்டீங்க கர்ர்ர்:) ஹா ஹ ஹா.

    பதிலளிநீக்கு
  21. 25 கதைகளா அவ்வ்வ்வ்வ்வ்:) என்னுடையது இங்கு 3 என நினைக்கிறேன் ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!