வியாழன், 31 டிசம்பர், 2020

நாளைப் பொழுது என்றும் நல்ல பொழுதாகுமென்று...

 

நண்பர்களுக்கு அட்வான்ஸ் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

ன்றிரவு 2021 மலர்கிறது.  என்னென்ன மர்மங்களை, துயரங்களை தனக்கான நேரத்தில் வைத்திருக்கிறதோ?  எல்லா வருடங்களும் போல எதிர்பார்க்கப்பட்ட 2020 இன்றுடன் முடிகிறது.   வரலாற்றில் மறக்க முடியாத வருடங்களில் ஒன்றாக 2020 ம் நினைவு கொள்ளப்படும் என்பதில் ஐயமில்லை.  நாளை பிறக்கும் புத்தாண்டில் 2021 சந்தோஷங்களை தராவிட்டாலும், துன்பங்கள், துயரங்கள் இல்லாமல் இருக்கப் பிரார்த்தனைகள்.


சாதாரணமாகவே மனிதர்கள் மனதில் சந்தோஷ தருணங்களை விட துயர நேரங்களையே மனதில் நினைவில் வைத்திருக்கிறோம்.  அதுபோல 2020 இல் சில சந்தோஷ சம்பவங்கள் நடந்திருந்தாலும் வருடத்தின் ஆறாத ரணங்கள் உண்டு.  கொரோனா எனும் அரக்கன் உலகை முடக்கிப் போட்ட ஆண்டு.  அதன் காரணமாகவும் வேறு காரணங்களாலும் மனதுக்கு இனிய சில உறவுகள், நட்புகளை இழந்தது இந்த வருடம். 

ஊபர் ஆட்டோவில் சென்ற வாரத்தில் வந்த ஒரு தினம் மாஸ்க் அணியாத அந்த வயதான ஆட்டோ ஓட்டுநர் என்னிடம், "தலைக்கு கேப் போட்டு, மாஸ்க் போட்டிருக்கீங்களே..  கொரோனான்னு ஒண்ணு இருக்குன்னு நம்பறீங்களா?" என்று கேட்டார்.  நான், 'கண்டிப்பாக..   ஆம்' என்ற உடன், "அப்போது உங்களிடம் பேசி பயனில்லை" என்று சொன்னாலும் கொரோனா என்பது ஒரு உடான்ஸ் என்கிற அளவுக்குப் பேசிக்கொண்டுவ வந்தது நினைவுக்கு வருகிறது.

எனது சந்தோஷ தருணங்களில் நான் சொந்த வீடு வந்ததது ஒன்று.  அது நன்மைதான் என்றாலும் தொல்லைகளும் உண்டு.  

அலுவலகத்திலிருந்து 10 கி மீ தொலைவு வந்துவிட்ட காரணத்தால் தினசரி போக்குவரத்துக்கே கன்னாபின்னா என்று செலவழிக்கும் நிலை.  கொரோனா லாக்டவுன் காரணமாகத் தொடங்கி அதுவே பழகி விட்டதற்கு பயமும் காரணம். 

பழைய வீட்டில் இருந்திருந்தால் கொரோனா வந்தபோது தனித்தனி அறைகளில் இருந்திருக்க முடியாது என்பது பாஸிட்டிவ் ஒன்று.  அதே சமயம் தனியான காம்பவுண்டுக்குள் இருந்த காரணத்தால் ஒருவேளை அங்கிருந்திருந்தால் கொரோனாவே எங்களுக்கு வந்திருக்காதோ என்பதும் ஒரு எண்ணம்.  2015 வெள்ளமே எங்களை அணுகவில்லை அப்போது என்பதும் நினைவுக்கு வருகிறது.

முடிவுக்கு வரும் நோயல்ல கொரோனா...  குறைந்தபட்சம் அதற்கான சக்திவாய்ந்த தடுப்பு மருந்தாவது இந்த வருடம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் அது சிரமமின்றி கிடைக்க வேண்டும்.  ஏனென்றால் யு எஸ், யு கே போன்ற இடங்களின் தட்பவெப்பமும் இந்தியா போன்ற வெப்ப நிலை நாடுகளின் தட்பவெப்பமும் வேறு வேறு.  அந்த மருந்துகளை இங்கு பாதுகாக்கும் வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுமா, முடியுமா என்றும் தெரியாத நிலை.  புதிய நோய்கள் அண்டாதிருக்க வேண்டும்.  மனக் கவலைகள் இல்லாதிருக்க வேண்டும்.  அல்லது அதைச் சமாளிக்கும் வழியை அறிந்திருக்க வேண்டும், கிடைக்க வேண்டும்.  அனைத்தையும் தாங்கும் மனோதிடம் வேண்டும்.   இழப்புகள் இல்லாதிருக்க வேண்டும். இப்போது பிரிட்டனில் கொரோனாவின் புதிய வடிவம் ஒன்று தாக்கி இருப்பது கவலை.  அதைக் கட்டுப்படுத்துவது கடினம் என்றும் சொல்கிறார்கள்.

வீட்டிலிருந்து வேலை திட்டம் பெரிய கம்பெனிகளுக்கு நிறைய அனாவசிய செலவுகளைத் தவிர்த்திருக்கிறது, எனவே அந்நிலை இனி வரும் காலங்களிலும் தொடரலாம் என்கிறார்கள்.  சரிந்துவிட்ட பொருளாதாரமும், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரமும் இந்த வருடம் உயரவேண்டும்.

வொர்க் பிரம் ஹோம் திட்டத்தினால் ப்ளஸ்ஸாக ஒன்று சொல்லவேண்டும் என்றால், இந்த லாக் டவுன் குடும்பங்களை பல மாதங்கள் ஒன்றாக வைத்திருந்திருக்கிறது.  என் மகன்கள் சொல்வதுபோல, இத்தனை மாதங்கள் வீட்டில் இருந்தால் ஒன்று மூன்று வயதுக்குள் இருக்கவேண்டும், அல்லது அறுபது வயதுக்குமேல் இருக்க வேண்டும்.  அப்படி இல்லாமல் எல்லா வயதினரும் சேர்ந்து ஒரு குடும்பமாக இருந்தது ஒரு ப்ளஸ்.  அரசியல்வாதிகளுக்கு அரசியல் செய்யக்கூட நேரம் இல்லாமல் ஒன்றையே பேசிக் கொண்டிருந்தோம்.  விதம் விதமாக யோசித்தோம்.  விதம் விதமாக சமைத்தோம்.  மொட்டை மாடிகளில் உடற்பயிற்சிகள் செய்தோம்.  பழங்கால சுத்த வழக்கங்களை மொத்தமாக எல்லோரும் கடைப்பிடிக்கத் தொடங்கினோம். 

தமிழகத்தில் தேர்தல் ஜுரம் விரைவில் பரவ ஆரம்பித்து விடும்.  அவரவருக்கு அவரவர் விருப்பம் இருக்கும்.  தேர்தல் என்று இல்லாமல், மதம், ஜாதி, சமூகப்பார்வை போன்ற விஷயங்களில் தன் மன விருப்பத்துக்கு ஒத்துவராதவர்களை வசைபாடும் வழக்கம் இந்த வருடத்திலாவது ஒழியவேண்டும்.  அழியக்கூடிய உலகில் அழியாதிருக்க வேண்டியது மனிதம் மட்டுமே என்றுணர்ந்து சக மனிதர்களை நேசிக்கப் பழகவேண்டும்.

======================================================================================================

வெளிநாட்டுக்காரர்கள் சொன்னால் வேதவாக்கு என்று ஆகிவிடும்!  எஸ் ரா தனது கட்டுரை ஒன்றில் கீழ்க் கண்டவற்றைப் பகிர்ந்திருக்கிறார்.  இந்தக் குழுமத்தில் பகிர்ந்தபோது கீதா அக்கா இஃகி இஃகி என்று சிரித்து, கால்டுவெல் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

விஜயநகரப் பேரரசு தன்னைக் கர்நாடக சாம்ராஜ்யம் என்று அழைத்துக்கொண்டது.  இதற்கும் இன்றைய கர்நாடகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  மாறாக, ஆந்திராவின் கோரமண்டல் கடற்கரைப் பகுதியை ஒட்டி விஜயநகரப் பேரரசு ஆட்சி செய்ததையே கர்நாடிக் என்று கூறுகிறார்கள்.  மொழியியல் அறிஞர் கால்டுவெல், "கர் என்றால் கறுப்பு, நாடு என்றால் தேசம்.  கரிசல் நிலம் உள்ள பகுதி என்பதால் கர்நாடகம் என்று கூறி இருக்கிறார்கள்" என்று விளக்கம் தருகிறார்.  

"விஜயநகர ஆட்சிக்கும், அவர்கள் வழிவந்த நாயக்கர் ஆட்சிக்கும் உட்பட்டு இருந்த காரணத்தால் தமிழகத்தின் சோழமண்டல கடற்கரை கர்நாடிக் கடற்கரை என்றானது.  அதன் தொடர்ச்சியாகவே தெலுங்கில் இருந்து உருவான இசை, கர்நாடக இசை என்று அழைக்கப்பட்டு வருகிறது"  என்கிறார் வரலாற்று அறிஞர் ரிச்சர்ட் ஸ்மித்.

- எஸ்ரா, தனது கட்டுரை ஒன்றில் -

======================================================================================================

2014 ல் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்த ஒரு கவிதை.   "தாண்டவக்கோனே பாட்டைக் கேட்டுவிட்டு அந்த இன்ஸ்பிரேஷனில் எழுதியது!  இதில் சில வரிகள் இன்றைய நிலைக்கு(ம்) பொருந்துகிறது.  

விசிறியடித்தது விதி
முத்துசாமி
வீணாப்போச்சு எல்லாம்
முத்துசாமி
காலம் செய்த சதி
முத்துசாமி
காரணம் வேற இல்லை
முத்துசாமி
பேன் பார்க்கப் போனா
முத்துசாமி - அங்க
பெருச்சாளியா மாட்டுது
முத்துசாமி
செவ்வாய் வரைக்கும் தேடினாலும்
முத்துசாமி
சொட்டு நீரைக் காணோம்
முத்துசாமி
மனிதம் செத்த இடத்தில்
முத்துசாமி
'மதம்' வந்து ஆடுறாங்க
முத்துசாமி
காலம் போன காலத்துல
முத்துசாமி
கள்ளக் காதல் பண்றாங்க
முத்துசாமி
ஆடி முடிஞ்ச வயசுல
முத்துசாமி
ஆட்டம் போடறாங்க
முத்துசாமி!
தர்மம் செத்துப் போச்சு
முத்துசாமி
கர்மம் பிடிச்சு ஆட்டுது
முத்துசாமி!
நாளைப்பொழுதாவது
முத்துசாமி
நல்ல பொழுதாகட்டும்
முத்துசாமி!








================================================================================================

அப்போ இதுதான் உச்சகட்ட பொழுதுபோக்கு! கலைந்து செல்லும் சிறுவர்கள் அநேகமாக ஆஸ்திரேலிய சிறுவர்களாக இருக்கவேண்டும்!!



"அந்த இடம்தான் ஸார் எனக்கு ரொம்பப் பிடிச்சது!"


தீட்டிய மரத்திலேயே கூர்!


===================================================================================

கோல்ட் ஸ்பாட் விளம்பரம் அப்போது இந்த 'ஜிங் திங்' வாசகத்தால் பிரபலம்!

                         

60 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. அன்பு ஸ்ரீராம் இன்னும் வரப்போகும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    கவலைகள் ஓடி ஒளிய நல்ல நாட்கள் தொடரட்டும்.
    புது வருடம் நன்மைகளை அள்ளித் தரட்டும்.
    வருக வருக புத்தாண்டே வருக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாக்கு பலிக்கட்டும்.  ஆண்டவன் அருள் கிட்டட்டும்.  வாங்க வல்லிம்மா...  வணக்கம்.

      நீக்கு
  3. மருந்துகளை இந்தியாவிலிருந்து வரவழித்தும்
    டென்னசி மாகாணத்தில் இன்னும் நின்று
    கொண்டிருக்கிறது.
    அனைவரிடமும் பிரார்த்திக் கொள்ளுவது,
    என் மருந்துகள் பத்திரமாக வந்து சேர
    இறைவனிடம் சொல்லுங்கள்.
    இரண்டு வாரமாக இதே கவலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வேண்டுதலையே இறைவன் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்.!!   சீக்கிரம் பத்திரமாக வந்து சேர்ந்து விடும் அம்மா..  பிரார்த்தனைகள்.

      நீக்கு
    2. மருந்துகள் நிச்சயமாக உங்களை விரைவில் அடைந்துவிடும் வல்லிம்மா.... கவலை வேண்டாம். ப்ரார்த்தனைகள்...

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். வரப்போகும் புத்தாண்டு அனைவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும், அமைதியையும், ஆரோக்கியத்தையும் நிறையத் தரட்டும் எனப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  5. காலை மூன்று மணியிலிருந்து பெய்யும் மழை சிறிது நேரம் இடைவெளி விட்டுவிட்டு வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறது. காலம் இல்லாத காலத்தில் பெய்யும் இந்த மழையால் யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்கப் பிரார்த்திப்போம். ரேவதியின் மருந்துகள் அனைத்தும் பத்திரமாக அவருக்குப் போய்ச் சேரவும் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், இங்கும் நேற்று முதல் மழை.  படுத்துகிறதுதான்.

      நீக்கு
    2. Thank you Geetha ma. All my diabetic medicines are stuck there,.
      local doctor vacation.என்னால் எல்லாருக்கும் தொந்தரவு.

      நீக்கு
  6. சென்ற வருட அலசலும் வரும் வருட எதிர்பார்ப்புக்களும் நியாயமானவை. அவற்றை நிறைவேற்றித் தர ஆண்டவனைப் பிராத்திப்போம். நானும் முத்துசாமி யார்னு கேட்க நினைச்சேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், போனவாரம் வரலைனு இந்தவாரம் வந்துட்டாங்கப்பா! :)))))

    கால்ட்வெல்லுக்குக் "கர்நாடகம்" என்பதன் பொருளே சொல்லத் தெரியலை. இதிலே இவர் தமிழறிஞர். இவர் சொன்னதை எல்லாம் நாம் ஏத்துக்கணுமா? என்னவோ போங்க! நம் நாட்டுச் சொற்கள், நம் நாட்டுப் பழக்கங்கள், நம் மொழி ஆகியவற்றைப் பற்றி எங்கிருந்தோ வரும்/வந்த வெளிநாட்டுக்காரர் தான் சொல்ல வேண்டி இருக்கு. இப்படி மனதால் அடிமையாகும் புத்தி நமக்கு எப்போதிருந்து வந்தது என ஒரு ஆராய்ச்சி செய்யணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்துசாமி யார்னு முதலிலேயே ஒரு இன்ட்ரோ கொடுத்திருக்கேனே...!  வரும் காலம் வசந்தமாக, வளமாக பிரார்த்திப்போம்.

      நீக்கு
  7. அனைத்து நகைச்சுவைத்துணுக்குகளும் அருமையாக உள்ளன. முதல் துணுக்கு என்னிடம் இருந்த ஒரு புத்தகத் தொகுப்பில் இருந்த நினைவு. அந்தப் புத்தகமே எங்கேயோ போயிடுத்து. ஜிங் திங் கோல்ட் ஸ்பாட் நல்லா நினைவில் இருக்கு. எங்க குழந்தைங்க நான் வெளியே போனால் "அம்மா! வரச்சே ஜிங் திங் வாங்கிண்டு வா! கூடவே 5 ஸ்டாரும்!" என்று கேட்பாங்க. ஆனால் நான் குடித்ததில்லை. இந்த பாட்டில்களில் அடைத்த குளிர்பான வகைகளே என் வயிற்றுக்கு ஒத்துக்காது. பெப்சி, கோகோ கோலா, 7 அப், பொவொன்டோ போன்றவை கிட்டே வந்தாலே அலர்ஜி. ஒரு தரம் தம்பி வாங்கிக் கொடுத்து பொவன்டோ ஒரு வாய் விட்டுக் கொண்டு கண்ணால், மூக்கால், நீர் கொட்டி, பெரிது பெரிதாக ஏப்பங்கள் வந்து பட்ட அவஸ்தை! பெப்சி யாரோ வற்புறுத்திக் கொடுத்துக் குடித்ததில் ஜூரம் வந்து! போதும்டா சாமினு ஆயிடுத்து. நமக்கெல்லாம் நன்னாரியும், எலுமிச்சையும் தான் லாயக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு கூட ஜில் பானங்கள் அலர்ஜி.  நான் குடிக்கவே மாட்டேன்!

      நீக்கு
    2. எனக்கு ஜில் பானங்கள் ரொம்பப் பிடித்த காலங்கள் உண்டு. மதுரைல கல்லூரில படிக்கும்போது வாரத்தில் மூன்று நாலு தடவையாவது குளிர் பானம் பருகுவேன், மாப்பிள்ளை விநாயகர்,கோல்ட்ஸ்பாட் போன்று.

      சென்னையில் பயிற்சியாளரா வேலைபார்த்தபோது, தினமும் இரண்டு குளிர்பானங்கள் (லெஹர் பெப்சி உட்பட) மற்றும் இரண்டு கரும்புச்சாறு சாப்பிடுவேன்.

      துபாயில் இறங்கிய அன்று நள்ளிரவில் மூன்று மிராண்டா குடித்தேன்.

      டக் என்று ஒருநாள் இந்தப் பழக்கம் துபாயிலேயே என்னைவிட்டு அகன்றது. அதற்குப்பிறகு குளிர் பானங்கள் குடித்ததும் இல்லை, ஆசை வந்ததுமில்லை.

      இந்தியாவில் விற்கப்படும் குளிர்பானங்கள் லோ குவாலிட்டி. கார்ன்ஃ்ப்ளேக்சும். வெளிநாடுகளில் குவாலிட்டி மெயின்டெயின் செய்கிறார்கள். சாதாரண (கோலா, பெப்சி) குளிர்பானங்கள் 1 திராமா இருந்தபோது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிறிதான குளிர்பானங்கள் 1 1/2 திராம்.

      நீக்கு
    3. ஏனோ எனக்கு ஆரம்பத்திலிருந்தே குளிர்பானங்கள் மீது சுவாரஸ்யம் கிடையாது!   மிரிண்டாவோ, ஸ்ப்ரின்ட்டோ ஏதோ ஒன்று குடித்தால் நாக்கில் துளையிட்டது போல சுர்ரென்று இருக்கும்.  அதற்காக ஓரிருமுறை குடித்திருக்கிறேன்!

      நீக்கு
    4. கரும்புச்சாறு, இளநீர் நிறையக் குடிப்போம்.லஸ்ஸியும் வடக்கே போனால் வாங்கிக் குடிப்பது உண்டு.

      நீக்கு
  8. நாளைப்பொழுதாவது
    முத்துசாமி
    நல்ல பொழுதாகட்டும்இதுதான் என்றும் நம் பிரார்த்தனை. நல்ல கவிதை
    அன்பு ஸ்ரீராம். வாழ்க வளமுடன்.
    முத்துசாமி!/////////////////////////////////////////////////////////

    பதிலளிநீக்கு
  9. இரண்டு ஜோக்குகளும் சூப்பர். ''அப்ப நான் வரட்டுமா:) ''
    பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    கடந்து வரும் ஆண்டைப் பற்றி நல்ல அலசல். வரும் புத்தாண்டு அனைவருக்கும் மனக்கவலைகளை தராத ஆண்டாக அமைய வேண்டும். இருந்து வரும் மனக் கலக்கங்கள், குழப்பங்கள் அனைத்தையும் தீர்த்து, தினமும், இல்லை அவ்வப்போதாவது மகிழ்ச்சியை அதிக அளவில் இல்லாவிடினும், கொஞ்சமாவது தர வேண்டுமென நானும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    கவிதை அருமை. நல்ல வார்த்தை கோர்வைகள். பாராட்டுக்கள்.. நானும் முத்துசாமி யாரென யோசித்தேன்... பார்த்தால், என்னை முந்திக் கொண்டு அழகான அனுஷ்கா யோசிப்பது படமாகவே வந்து விட்டது. ஒருவேளை அவர் அழகாக யோசிப்பதை அறிந்துதான் முத்துசாமியும் அங்கு வந்திருக்கிறாரோ? ஹா..ஹா..ஹா

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுஷ்கா தன்னை அழைத்தது ஏன் என்று குழம்புகிறாரோ!!!

      நன்றி கமலா அக்கா

      நீக்கு
  11. அனுஷ்கா டியர் , இந்தப் பக்கத்தில் தான்
    இருக்கிறார் கண்டு பிடி:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா.. முன்னாள் அமைச்சர்னு குழம்பிட்டாங்களோ!

      நீக்கு
  12. துயர நினைவுகளை மறப்போம்.
    பாசிடிவ் நினைவுகளை வளர்த்துக் கொள்வோம்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    கர்நாடகத்தைச் பற்றிய எஸ்.ரா அவர்களின் கட்டுரைச் செய்திகள் தெரிந்து கொண்டேன். நகைச்சுவைகள் இரண்டுமே இன்று நன்றாக உள்ளது. சிலேடையான நகைச்சுவைகள் என்றுமே மனம் விட்ட சிரிப்பை மட்டுமே உருவாக்கும். இரண்டையும் ரசித்தேன். கிரிகெட் சிறுவர்கள் அப்போதெல்லாம் கமெண்டரி கேட்பதை மட்டுமே விரும்பினார்கள். அந்த ஜோக்கும் அருமை.

    குளிர்பான விளம்பரமும் அடிக்கடி கேட்டுள்ளேன். எங்களுக்கு இந்த பானங்கள் ஒத்துக் கொள்ளவில்லை. குழந்தைகள் நடுவில் விரும்பி வாங்கினார்கள். இப்போது அவர்களும் வாங்குவதில்லை. இன்றைய கதம்பம் அருமையாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. //புத்தாண்டில் 2021 சந்தோஷங்களை தராவிட்டாலும், துன்பங்கள், துயரங்கள் இல்லாமல் இருக்கப் பிரார்த்தனைகள்//

    பிரார்த்தனைகளின் கோணம் மாறிவிட்டதே....

    முத்துசாமி ஸூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறைந்த அளவிலாவது சலுகைகள் கேட்டு பிரார்த்தனை!!!

      நன்றி ஜி.

      நீக்கு
  15. ..- எஸ்ரா, தனது கட்டுரை ஒன்றில் -//

    நாம் (எழுத்தாளர்கள் உட்பட) இன்னும் வெளிநாட்டுக்காரன் நம்பளப்பத்தி என்ன சொல்லிருக்கான்னு படிக்கிறதுல, கேட்கறதுலதான் மும்முரமா இருக்கோம்! அவிங்களோட அங்கீகாரம், முத்திரதான் இன்னும் தேவப்படுது..

    பதிலளிநீக்கு
  16. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  17. நாளும் பொழுதும் நல்லதாக அமைய வேண்டிக் கொள்வோம்!...

    ஓம் ஹரி ஒம் நமோ நாராயணாய..
    ஓம் நம சிவாய சிவாய நம ஓம்...

    பதிலளிநீக்கு
  18. வருட அலசல் ரசிக்கவில்லை. சோக நினைவுகளையே கொண்டுவந்தது. இப்போதுமே சக மனிதர்கள் செருமினாலே முகம் சுளிக்க வைத்துவிட்டது இந்த வருடம். எனக்கு காய்ச்சல் மாதிரி இருக்கு, வீட்டுக்கு வராதே....என்றெல்லாம் எல்லோரையும் பயமுறுத்திவிட்டது

    எஸ்ரா கட்டுரை தவறானது

    இரண்டுமே இன்றைய பொழுதைச் சிறப்பாக்கவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா.. உங்களுக்கு இன்றுஇது மனதுக்குப் பிடிக்கவில்லை போல..

      நீக்கு
  19. கவிதையை ரசித்தேன். சந்தப் பிழை சரி செய்திருந்தால் சூப்பராக வந்திருக்கும். நாட்டார் பாடல் சந்தங்களை புதுக் கவிதை வடிவத்தில் எழுத முடியாது.

    காலம் செய்த சிம்பாங்க முத்துச்சாமி
    பேன் பார்க்கப் போனாத்தான் முத்துச்சாமி
    செவ்வாய்கோய்த் தேடினாலும். என்பதுபோன்று

    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும்"காலை வணக்கம். இந்த ஆண்டைப் பற்றிய ஆதங்கத்தோடு கூடிய அலசல் சிறப்பு. இந்த ஆண்டின் நினைவுகளில் சோக ரசம் சற்று தூக்கல்தான். உங்களைப் போலவேதான் என் மகனும் சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டோம் என்றான்.

    பதிலளிநீக்கு
  21. முத்துசாமி கவிதை சிறப்பு. அது சரி இதை எழுதும்போது கில்லெர்ஜீ நினைவுக்கு வரவில்லையா? கில்லெர்ஜீ எதிர்பாட்டு பாடுவார் என்று நினைக்கிறேன். இந்த கொரோனா ஒரு சூரபதுமன் ஆக இருக்குமோ? ஒவ்வொரு தலையாக மாறி வருவதற்கு.
      

    பதிலளிநீக்கு
  22. நகைச்சுவை துணுக்குகள் எல்லாமே ஏதோ ஒரு தொகுப்பில் படித்த நினைவு. அதனால் என்ன இன்னொரு முறை சிரிக்க முடியாதா?

    பதிலளிநீக்கு
  23. ஆ! மீண்டும் அனுஷ்!!:))
    இயக்குனர் லிங்குசாமியின் பேட்டியை யூ ட்யூபில் பார்த்தேன். அவரும் நம்மைப் போல அனுஷ்கா ரசிகராம். சற்று தீவிரம் என்று தோன்றுகிறது. ஒரு முறை லஞ்ச் பிரேக்கின் பொழுது அனுஷ்காவை பார்த்துக் கொண்டே கையிலிருந்த தட்டை கீழே போட்டு விட்டாராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி இருந்திருக்காது. அவர் கால் வழுக்கியிருக்கும்.

      நீக்கு
  24. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! இதுவும் கடந்து போகும் என 2020 உடன் நம் அனைவரின் கவலைகளும் கரைந்து போகட்டும்... நலமாய் வரும் வருடம் பிறக்க, சிறக்க பிரார்த்திக்கின்றேன்!
    ஜோக்குகள் அருமை! அது சரி அது சரி என சொல்லிடுவோம் அரசியல்வாதிகளிடம்...நம்மை முட்டாள்களாக பாவிக்காமல் இருந்தால் சரி...கவிதை சிறப்பு!

    பதிலளிநீக்கு
  25. மனதில் இருக்கும் எண்ணங்கள் அனைத்தும் அருமையாக ஆரம்ப பத்திகளில்...

    "அடுத்த வருடம் அவ்வாறு இருந்து விடுமா...?" என்று அனுஷ் கேட்கிறார்கள் போல...!

    பதிலளிநீக்கு
  26. தங்கள் சிந்தனையோட்டம் சிறப்பு. வரும் ஆண்டு அனைவருக்கும் நன்மை பயப்பதாக இருக்குமென நம்புவோம், பிரார்த்திப்போம்!

    தொகுப்பு அருமை.

    தங்களுக்கும் ஆசிரியர் குழுவினருக்கும் எங்கள் ப்ளாக் வாசகர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  27. வியாழனின் கதம்பம் பகிர்வு நன்று.

    2020 ஒரு வழியாக முடிந்தது. இந்த வருடம் (2021) அனைவருக்கும் சிறப்பாக இருக்க எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!