வெள்ளி, 17 செப்டம்பர், 2021

வெள்ளி வீடியோ : சம்மதம் தருவதில் தொல்லை என்னவோ ; அதை தானாக கேளாது பெண்மை அல்லவோ...

 கேள்வி பதிலாய் அமையும் பாடல்கள் சில உண்டு தமிழில்.  அந்த வகையில் இரண்டு பாடல்களை இன்று பகிர உத்தேசம்.

'பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ' என்று ஒரு பாடல் உண்டு.  'விண்ணுக்கு மேலாடை' என்று தொடங்கும் நாணல் படப்பாடலில் இடையில் கேள்வி பதில் வரும்.  'ஆண் கவியை வெல்ல வந்த' பாடலிலும், இன்னொரு சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருக்கும் எம் ஜி ஆர் பாடலிலும் கேள்வி பதில்கள் உண்டு.

இன்று பகிரப்போவது இவற்றிலிருந்து மாறுபட்டது.  ஆரம்பத்திலிருந்தே கேள்விதான், பதில்தான்!

இரண்டுமே கே ஜே யேசுதாஸ்- வாணி ஜெயராம் பாடியது.  கண்ணதாசன் பாடல்.  இசை எம் எஸ் விஸ்வநாதன்.

முதல் பாடலுக்கு வருகிறேன். 

1969 ல் ஆராதனா, அப்புறம் 1971 ல் கட்டி பதங் என்கிற இரண்டு இமாலய வெற்றிப்படங்களை ராஜேஷ்கன்னாவை வைத்து எடுத்த பிறகு சக்தி சமந்தா 1972 ல் தயங்கித் தயங்கி ஒரு படம் எடுத்தார்.  அதுதான் அனுராக்.  ராஜேஷ்கன்னா அந்தப் படத்தை எடுக்க அவருக்கு ஊக்கமளித்து ஒரு கவுரவவேடத்திலும் வந்தார்.  வினோத் மெஹ்ரா - மௌஷ்மி சட்டர்ஜி ஜோடி.

தயங்கித் தயங்கி இப்படி எடுக்கப்பட்ட இந்தப் படம் அதன்பின் தெலுங்கில், மலையாளத்தில், கன்னடத்தில் என்று தழுவி எடுக்கப்பட்டது. 

தெலுங்கைப்பொறுத்தவரை ஸ்ரீதேவி கதாநாயகியாய் நடித்த முதல் படம் அது.  அனுராகாலு என்று பெயர்.  சிரஞ்சீவி கூட நடித்தார்.  இசை சத்யம்.  


ஹிந்தியில் எஸ் டி பர்மன் இசையமைத்த இந்தப் படத்துக்கு மலையாளத்தில் சலீல் சவுத்ரி இசையமைத்திருக்கிறார்.  சலீல் சவுத்ரி என்றால் இனிமை என்று பொருள் கொள்ளலாம்.  அப்புறம் சென்று அந்தப் படத்துப் பாடல்களை கேட்க எண்ணியுள்ளேன்.  படத்தின் பெயர் ராகம்.  ஏ பீம்சிங் இயக்கம்.

இந்தப் படம் 1979 ல் தமிழிலும் 'நீலமலர்கள்' என்று எடுக்கப்பட்டது.  தமிழிலும் ஸ்ரீதேவிதான் ஹீரோயின்.  ஜோடி கமல்,  இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு.

இந்தப் படத்திலிருந்து கே ஜே யேசுதாஸ் - வாணி ஜெயராம் குரலில் 'இது இரவா பகலா' என்கிற பாடலை பகிர வந்திருந்தாலும், தவிர்க்க முடியாமல் எஸ் பி பி பாடலொன்றையும் பகிரவேண்டிய நிலைமை... பற்றி சொல்கிறேன்.  காரணம் இரண்டு.  ஒன்று அது எஸ் பி பி பாடல், நன்றாயிருக்கும் என்பது.  இரண்டாவது அந்தப் பாடலின் பின்னணி.

1964 ல் வந்த ஆங்கில இசைப் படமான 'மேரி பாப்பின்ஸ்' என்கிற படத்தில் Dick Van Dyke and Julie Andrews, பாடிய Chim Chim Cheree   என்கிற பாடலை தமிழில் சம்சிக்கிசம் சம்சிக்கிசம் என்று போட்டார் எம் எஸ் விஸ்வவநாதன்.  அவருடைய விருப்பமோ, யாருடைய விருப்பமோ...  நீங்கள் விரும்பினால் அந்தத் பாடலை மேலே கொடுத்துள்ள லிங்க்கில் சென்று சென்று கேட்கலாம்.

ஓகே, இன்றைய நம் யேசுதாஸ் பாடலுக்கு வருவோம்.

இது இரவா பகலா ; நீ நிலவா கதிரா 

முதல் கேள்வி பெண்குரல்.  இரண்டாவதாய் வருவது ஆணின் பதில் கேள்வி.  பதில்களும் கேள்வியாகவே இல்லாமல் பாடலில் பதிலும் வரும்.  கடைசியில் யேசுதாஸ் "உன் அழகே....   அழ...கு" என்று சொல்லும் அழகை மிஸ் பண்ண மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!

ஸ்டெப் கட்டிங் வைத்த கமல், இளமையான ஸ்ரீதேவி (மூக்கு ஆபரேஷனுக்கு முன்!)

இது இரவா பகலா 
நீ நிலவா கதிரா  
இது வனமா மாளிகையா 
நீ மலரா ஓவியமா  
இது வனமா மாளிகையா 
நீ மலரா ஓவியமா ஓ ஹோ ஓ  
இது இரவா பகலா 
நீ நிலவா கதிரா  

மேகம் என்பதும் மின்னல் என்பதும் அருகில் இல்லையா  
உன் கூந்தல் என்பதில் பூச்சரம் வைப்பது அறிவா இல்லையா   
மேகம் என்பதும் மின்னல் என்பதும் அருகில் இல்லையா  
உன் கூந்தல் என்பதில் பூச்சரம் வைப்பது அறிவா இல்லையா  
இது கனியா காயா 
அதை கடித்தால் தெரியும் 
இது பனியா மழையா 
எனை அணைத்தால் தெரியும்    

தென்றல் வந்ததும் வண்ணப்பூங்கொடி எதனால் அசைந்தது  
தன்னை மறந்து காதல் கனிந்து ஒன்றாய் இணைந்தது  
தென்றல் வந்ததும் வண்ணப்பூங்கொடி எதனால் அசைந்தது  
தன்னை மறந்து காதல் கனிந்து ஒன்றாய் இணைந்தது  
இது குயிலா குழலா 
உன் குரலின் சுகமே  
இது மயிலா மானா 
அவை உந்தன் இனமே  

பாலின் நிறமும் தேனின் நிறமும் ஒன்றாய் காணுமா  
பூவை கன்னமும் கோவை இதழும் ஒன்றாய் ஆகுமா  
இங்கு கிளிதான் அழகா 
உன் அழகே அழகு  
இந்த உலகம் பெரிதா 
நம் உறவே பெரிது  


நீலமலர்கள் வெளியாவதற்கு இரண்டு வருடங்கள் முன்பு, அதாவது 1977 ல் வெளியான  திரைப்படம் 'என்ன தவம் செய்தேன்'.  இதிலிருந்து  அழகான வரிகளுடன் தொடங்கும் ஒரு அருமையான எஸ் பி பி பாடலை முன்னரே பகிர்ந்து விட்டேன்.  'ஏதோ ஒரு நதியில்நான் இறங்குவதைப் போலே..'  இன்று கே ஜே யேசுதாஸ்-வாணி ஜெயராம் பாடிய கேள்வி பதில் பாடலான 'அந்தியில் சந்திரன் வருவதேன்...'

அந்தக் கேள்வியிலேயே குரலில் ஒரு ஏக்கம் தெரியுமளவு பாடியிருப்பார் வாணிம்மா.  யேசுதாஸ் குரலும் இந்தப் பாடலில் வெகு சுகமாயிருக்கும்.

படம் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை.  விஜயகுமார் சுஜாதா நடித்துள்ள படம் என்றாலும் காட்சியில் வருவது சுஜாதா அல்ல.

மறுபடியும் கிருஷ்ணன் பஞ்சு இயக்கம், கண்ணதாசன் பாடல், எம் எஸ் வி இசை, அதே குரல்கள்!

அந்தியில் சந்திரன் வருவதேன்
அது ஆனந்த போதையைத் தருவதேன்

சந்திரன் வருவது ஒளி தர
அது தமிழுக்கு ஆயிரம் கவி தர
இலைகளில் இளந்தென்றல் படிப்பதென்னவோ

அது இலையென்று தெரியாத குழப்பமல்லவோ
அது இலையென்று தெரியாத குழப்பமல்லவோ

மலைகளில் வெண்மேகம் விழுவதென்னவோ
மலைகளில் வெண்மேகம் விழுவதென்னவோ

அது மரியாதை பொன்னாடை தருவதல்லவோ
அது மரியாதை பொன்னாடை தருவதல்லவோ


பெண் மனம் ஒன்றோடு இணைவதென்னவோ
அது பிழையாக இருந்தாலும் இருக்குமல்லவோ

அது பிழையாக இருந்தாலும் இருக்குமல்லவோ

சம்மதம் தருவதில் தொல்லை என்னவோ
சம்மதம் தருவதில் தொல்லை என்னவோ

அதை தானாக கேளாது பெண்மை அல்லவோ
அதை தானாக கேளாது பெண்மை அல்லவோ


தலைவியின் சந்தோஷம் தலைவனல்லவோ
அது இருபேரும் நினைத்தால்தான் பிறக்குமல்லவோ

அது இருபேரும் நினைத்தால்தான் பிறக்குமல்லவோ

இதுவரை என் கேள்வி புரிந்ததல்லவோ
இதுவரை என் கேள்வி புரிந்ததல்லவோ

சரி இத்தோடு உன் கேள்வி முடிந்ததல்லவோ
சரி இத்தோடு உன் கேள்வி முடிந்ததல்லவோ


45 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும்..
    எல்லோரும் அமைதியுடனும் ஆரோக்கியமாகவும் இருக்க இறைவன்
    அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. இந்த உலகம் பெரிதா
    நம் உறவே பெரிது // மிக அழகான பாடல் .
    வாணி ஜெயராமின் குரல் மிக இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா. மிகவும் ரசிக்கும் பாடல்களில் ஒன்று. வரிகளுக்காக மட்டுமின்றி குரலினிமைக்காகவும்.

      நீக்கு
  3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  4. எம் ஜி ஆர், என் எஸ் கிருஷ்ணன் பாடும்
    ,சக்கரவர்த்தி திருமகள் பாடும் பாட்டுதான் நீங்கள் சொல்வது என்று
    நினைக்கிறேன்.
    கடைசியில் வரும் 'உலகத்திலே பயங்கரமான
    ஆயுதம் எது?
    நிலை கெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது!!!
    எனக்கு மிகப் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா. அதே பாடல்தான். எழுதும்போது சட்டென நினைவுக்கு வரவில்லை. 'பயங்கரமான' என்று சொல்லி விட்டு 'ஆயுதம்' ​ என்கிற வார்த்தைக்கு தனி வளைவு கொடுப்பார் சீர்காழி!

      நீக்கு
    2. ஆமாம் மா.
      கிருஷ்ணன் சாரும் தெரியாதது போலக்
      கதை அமைந்திருந்தாலும் நமக்குத் தெரியும்.
      விட்டுக் கொடுத்து வாழ்ந்த ஜோடி.

      நீக்கு
  5. கேள்வி பதிலாக அமைந்த பாடல்கள் வித்தியாசமாக
    அழகாக இருக்கிறது. கவிஞரின் வரிகள்
    கற்பனையின் உச்சத்தை அடைகின்றன.
    எப்படித்தான் படங்களின் கதைக் கேற்றார்ப்போல்
    பாடல்களை அமைத்தார்களோ!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதானே திறமை...  அதனால்தான் அவர்கள் அங்கே நிலைத்து நின்றார்கள்.  இன்றைய இரண்டு பாடல்களையும் ரசித்தமைக்கு நன்றி அம்மா.

      நீக்கு
  6. விஜய குமார் உடன் நடிப்பது ஜெய சுதா,.
    இந்தப் பாடலும் நன்றாக இருக்கிறது.
    இசையும் இனிமை. நல்ல பாடல்களாகத் தொகுத்துக்
    கொடுக்கிறீர்கள். மிக நன்றி மா.
    எங்க காலத்து'' கொடி அசைந்ததும் காற்று வந்ததா?'' எங்கள் காலத்து
    கேள்வி பதில் பாட்டு!!!!

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாடல்கள் தேர்வு அருமை. ஆரம்பத்திலேயே கேள்வி பதிலாக வருவது போன்ற பாடல்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும். பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களை விரும்பி கேட்டுள்ளேன். நீங்கள் தந்துள்ள விபரங்கள் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

    நீல மலர்கள் படம் ஒரே சோகமயம். அதிசயமாக தியேட்டரில் உறவுகளுடன் சென்று பார்த்தேன். இந்தப்பாடல் நன்றாக இருக்கும். யேசுதாஸ் குரல் இனிமைக்காக அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன்.

    இரண்டாவதும் அடிக்கடி கேட்டுள்ளேன். ஆனால் படம் பார்த்ததில்லை. நடிகை சுஜாதா நடிப்பு எனக்கு பிடிக்கும். அவர் படங்கள் சிலவற்றை விரும்பி பார்த்திருக்கிறேன். அதில் விஜயகுமாருடன் வரும் பெண் நடிகை சுஜாதா இல்லையே என பாடலைத் தேடப் போனதில், விஜயகுமார், பவானி என ஒரு பாடலில் போட்டிருக்கிறது. அந்த நடிகையையும்,பல பழையகால படங்களில் பார்த்திருக்கிறேன். படங்களின் பெயர்தான் நினைவுக்கு வரவில்லை.இன்று நல்ல இசையுடன் கூடிய பாடல்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே.. நீலமலர்கள் தியேட்டரில் சென்று பார்த்திருக்கிறீர்களா? நான் படம் பார்க்கவில்லை. ஆம், நானும் பவானி என்றொரு பெயர் பார்த்தேன்.

      நீக்கு
  9. அனைவருக்கும் காலை வணக்கம். புரட்டாசி மாத பிறப்பு. ஏகாதசி, திருவோணம் எல்லாம் இணைந்திருக்கும் இந்த நல்ல நாளில் கோவிந்தன் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா.. வணக்கம். புரட்டாசி வாழ்த்துகள்.

      நீக்கு
  10. சம்சிக்கிசம் சம்சிக்கிசம் // பாடல் நன்றாக நினைவிருக்கிறது. நிறைய கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். இலங்கை வானொலியில் பிறந்த நாள் பாடல்களில் இது ஒலித்துக் கேட்டிருக்கிறேன். எஸ்பிபியின் அருமையான குரலில் பாடல்...துள்ளலாக..

    இன்று கேள்வி பதில்கள் பாடல் என்றதும்...உடன் நினைவுக்கு வந்தது எஸ்பிபி ஜானகியின் சிப்பி இருக்குது முத்துமிருக்குது பாடல் இரண்டு பேருமே செமையா அதுவும் எஸ்பிபி கிமிக்ஸ் சூப்பரா இருக்க்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிப்பி இருக்குது பாடலை கேள்வி பதில் பாடலாக நான் நினைக்கவில்லை கீதா.

      நீக்கு
  11. ஸ்ரீராம் நீங்க பகிர்ந்திருக்கும் இரு பாடல்களுமே ரொம்ப அருமையான பாடல்கள் கேட்டிருக்கிறேன். படங்கள் பெயர் எதுவும்தெரியவில்லை என்றாலும் நிறைய கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் இலங்கை வானொலி உபயத்தில் டீக்கடை ரேடியோக்களிலும் ஒலிக்குமே. பேருந்திற்குக் காத்திருக்கும் சமயத்தில் (கூடிப் போனா 5 நிமிஷம்னு நினைக்கக் கூடாது....1 மணி நேரம் 1 1/2 மணி நேரம் ஏன் அதற்கும் மேலாகக் காத்து பேருந்து வரலைனா நடராஜா செர்வீஸ்தான்!!

    அதனால் நிற்கும் நேரத்தில் உதவியது இதுதான்

    கீதா

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    மூன்றாவது பாடலான பேசும் மணிமொட்டு ரோஜாக்கள் என்ற எஸ். பி. பி பாடலையும் விரும்பி அடிக்கடி கேட்டிருக்கிறேன். அதில் அவரது குரல் இசையோடு ஒன்றி அடிக்கடி கேட்க வைக்கும். "சம்சிக்கிசம் சம்சிக்கிசம்" என்று இடையில் வருவது பாடலில் சிறப்பு. என்ன அர்த்தமோ? . பாடலில் இசையின் ஈர்ப்புக்காக சேர்க்கப்பட்ட வரிகளோ? ஆனால் பாடல் பிடிக்கும்/பிடித்திருக்கிறது. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // சம்சிக்கிசம் சம்சிக்கிசம்" என்று இடையில் வருவது பாடலில் சிறப்பு. என்ன அர்த்தமோ? //

      சும்மா சந்த நயம் மட்டுமில்லை, ஒரிஜினல் பாடலில் வருவது போலவே இருக்க வேண்டி..

      நீக்கு
  13. பாடல்கள் அருமைதான் இருப்பினும் தங்களது தேடுதல் விடயங்கள் ஆச்சரியம் அளிக்கிறது வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
  14. இனிமையான பாடல்கள்... முதல் பாடல் கேள்விகளிலும் வென்று விடுகிறது...

    பதிலளிநீக்கு
  15. இன்றைய தேர்வுகள் இரண்டுமே அருமை..

    பலமுறை கேட்ட இனிமையான பாடல்கள்..

    பதிலளிநீக்கு
  16. இரண்டு பாடல்களில் நீல மலர்கள் பாடல் அடிக்கடி கேட்டிருக்கேன். படம் கூடப் பார்த்திருக்கேன் என நினைக்கிறேன். தூர்தர்ஷன் தயவில். ஶ்ரீதேவி கண் தெரியாதவராக வருவாரோ?

    பதிலளிநீக்கு
  17. இரண்டாவது படமும் தெரியாது. பாடலும் தெரியாது. பாடியவர்களைத் தவிர்த்து.

    பதிலளிநீக்கு
  18. பாடல் தேடல், விவரங்கள் அருமை.
    பாடல்கள் இரண்டும் இனிமை.

    பதிலளிநீக்கு
  19. இனிய பாடல்கள் கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. பாடல்களை கேட்டு ரசித்திருக்கிறேன். தகவல்களும் நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!