திங்கள், 4 ஜூலை, 2022

"திங்க"க்கிழமை  :  குழி ஆப்பம் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 நம்ம ரங்க்ஸுக்குச் சாப்பாட்டில் ஒரே மாதிரி இருந்தால் பிடிக்காது. எப்போவுமே. மாத்தி மாத்திச் செய்யணும்னு சொல்லுவார். அதுவும் இப்போ இந்தச் சர்க்கரை நம்ம நாட்டு விலைவாசி போல ஏறி ஏறி ஏறி இறங்காமல் இருக்கவே, என்ன செய்யறதுனு யோசிச்சு எல்லோரும் சொல்றாங்களேனு சிறு தானியத்துக்கு மாறினார் சில ஆண்டுகள் முன்னால்.  அது ஒரு ஏழு, எட்டு வருடங்கள் முன்னால். அப்போ போட்ட பதிவு இது. ஶ்ரீராமின் "திங்க"ற பதிவுக்குச் சிறு தானியங்களின் சமையல் குறிப்புகள் அதிகம் வராததால் இதைத் தேர்ந்தெடுத்து அனுப்பலாம்னு எடுத்தேன். 

சிறு தானியங்கள் சாப்பிட ஆரம்பித்துச் சில நாட்கள் ஆனாலும் ஒவ்வொன்றாய் முயற்சி செய்தோம். அதில். கைக்குத்தல் அரிசியை ஒரு மாதிரியாய்ச் செலவு செய்து முடித்து விட்டேன். ப்ரவுன் அரிசி இன்னமும் மிச்சம் இருந்தது. அதையும் இட்லி, தோசைனு செய்து தீர்க்கணும்.  குதிரைவாலி அரிசியின் ருசி பிடித்திருப்பதால் அதைத் தொடரலாம் என்று ஓர் எண்ணம். நடுவில் செவ்வாய்க் கிழமையும், வெள்ளிக்கிழமையும் மட்டும் வெள்ளை அரிசி சமைச்சுப்பேன். இனி சர்க்கரை அளவை ஒரு நாள் சோதிக்க வேண்டும். பரவுன் அரிசியில் சாதம் வைத்ததோடு அல்லாமல் இட்லி, தோசையும் செய்தேன். தோசை அருமையாக இருந்தது. இட்லியும் நன்றாகவே இருந்தது என்றாலும் இட்லி புழுங்கல் அரிசி போட்டால் உப்பிக் கொள்வதைப் போல் உப்பவில்லை. ஆனால் மிருதுவாகவே இருந்தது.

வரகில் சாதம், பொங்கல், சோளத்தில் நேற்று மறுபடியும் கிச்சடி, சாமையில் பொங்கல், குதிரைவாலியில் பொங்கல், சாதம், கம்பில் அடை, வரகுப் புழுங்கல் அரிசியில் இட்லி, தோசை என்றெல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது. தினை ஒண்ணு தான் பாக்கி இருந்தது. ஆகவே  ஒரு நாள்  இரவு தினை+குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து நனைத்து மறுநாள் காலை குழி ஆப்பம் செய்தேன். அதான் மேலே படம். குழி ஆப்பம் நன்றாக வந்தது. திருப்பிப் போட்டு  எடுத்தது படம் எடுக்கிறதுக்குள்ளே தொலைபேசி அழைப்பு  வரவே பேசிட்டு வந்து மறந்து போச்சு! தொட்டுக்கத் தக்காளித் தொக்கு. என்ன சிவப்பா இருக்கேனு பார்க்காதீங்க. நல்லாப் பழுத்த சிவந்த நிறமுள்ள நாட்டுத் தக்காளிகள் எல்லாம். அதான்! இப்போத் தினையில் குழி அப்பம் பண்ணத் தேவையான பொருட்கள்.

தினை அரிசி அரைக்கிண்ணம் ஆனால் எனக்கு ஒரு வேளைக்குப் போதும் என்பதால் ஒரு குழிக்கரண்டி தான் போட்டேன்.

அதே போல் குதிரைவாலி அரிசியும் அரைக்கிண்ணம் என்பதற்கு ஒரு குழிக்கரண்டி தான் போட்டேன்.

உளுத்தம்பருப்பு அரைக்கிண்ணம் நான் கால் கிண்ணம் போட்டேன்.

ஒரு டீஸ்பூன் வெந்தயம், ஒரு கைப்பிடி பச்சரிசி, இல்லைனா செய்யும் போது அரைக்கரண்டி பச்சரிசி மாவைக் கலந்துக்கலாம். நான் சேர்த்தே நனைத்து விட்டேன்.

நேற்றிரவே எல்லாவற்றையும் களைந்து ஊறப்போட்டுவிட்டேன். காலையில் இவற்றோடு

மிவத்தல் நாலு அல்லது ஐந்து (அவரவர் காரத்துக்கு ஏற்றாற்போல்) நான் நாலு தான் போட்டேன்

உப்பு தேவைக்கு ஏற்ப, பெருங்காயம்

இவற்றைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொண்டேன். இரும்புக்கரண்டியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்துக் கொண்டு உபருப்பு, கபருப்பு சேர்த்துக் கருகப்பிலை கிள்ளிப் போட்டு ஒரு சின்னப் பச்சைமிளகாய நீள வாக்கில் வகிர்ந்து உள்ளே உள்ள விதைகளை நினைவாய் எடுத்துட்டு அதை நறுக்கிச் சேர்த்தேன். இஞ்சி ஒரு துண்டு. எல்லாவற்றையும் எண்ணெயில் போட்டு வதக்கி மாவில் சேர்த்தேன். தேங்காய் இருந்தால் பல்லுப்பல்லாகக் கீறிச் சேர்க்கலாம். வெங்காயம் சேர்க்கும் நாட்களில் வெங்காயத்தையும் வதக்கிச் சேர்க்கலாம். இப்போ வெங்காயம் சேர்க்க முடியாது என்பதால் சேர்க்கவில்லை. தேங்காயும் போடவில்லை.

மாவு ரெடி. என்னோட அப்பக்காரை எங்கேயோ பெட்டியில் மாட்டிக் கொண்டு பல மாதங்களாகின்றது. அதை எடுக்கவே இல்லை. ஆகவே ஒரு இரும்புக்கரண்டியில் குத்தலாம்னு நினைச்சேன். ஆனால் மாவு ஊற்றியதும் மேலே உப்பிக் கொண்டு வரும் என்பதால் இரும்புக்கரண்டி போல இருக்கும் நான் ஸ்டிக் கரண்டி ஒன்றில் எண்ணெயைக் காய வைத்து ஊற்றினேன் நினைத்தாற்போலவே நன்கு உப்பிக் கொண்டு வந்தது. அதைத் திருப்பிப் போட உபயோகிக்கும் இரும்புக் குச்சியும் அம்பத்தூரிலிருந்து வரும்போது எங்கே தவறி விட்டது. ஆகையால் ஒரு ஸ்பூன் முனையால் திருப்பிப் போட்டேன். திருப்பிப் போட்டு உள்ளே ஸ்பூன் முனையாலேயே குத்தி விட வேண்டும். அப்போது தான் உள்ளே நன்றாக வேகும்.  இது மேலே நன்றாகச் சிவந்து பொன்னிறமாக முறுமுறுவென்றும் உள்ளே கடற்பஞ்சு (sponge) போலவும் இருந்தது.  தட்டில் போட்டதைப் படம் எடுக்கிறதுக்குள்ளே வேறே கவனம்! :(


கரண்டியில் ஊற்றிய மாவு.

காலை ஆகாரத்துக்குப் பண்ணியதால் எல்லோருக்கும் இப்போவே சுடச்சுடக் கொடுத்தாச்சு! சாப்பிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்கப்பா! மதியம் குதிரைவாலி அரிசிச் சாதம், முருங்கைக்காய்க் குழம்பு, மிளகு ரசம், மோர். மாங்காய் ஊறுகாய். என்றெல்லாம் பண்ணிக் கொண்டிருந்தேன். அப்புறமா அந்த சீசன் முடிஞ்சு சிறு தானியக் கஞ்சிக்கு மாற்றினார். அது ஒரு நாலைந்து வருடங்கள் ஓடின. இப்போச் சில மாதங்கள் முன்னர் மாப்பிள்ளைச் சம்பா அரிசியில் கஞ்சி பண்ணிக் கொண்டிருந்தேன். இப்போ 2,3 மாசமா அதையும் மாற்றி விட்டுக் கறுப்புக் கவுனிக்கு மாத்தி இருக்கார். அடுத்து என்னனு அவருக்கே தெரியாதுனு நினைக்கிறேன். இப்போதைக்குக் கவுனி அரிசிக் கஞ்சி ஓடிட்டு இருக்கு.

மறந்துட்டேனே! அன்னிக்குத்  தக்காளித் தொக்கு திடீர்னு நினைச்சுட்டுச் செய்ததால் பாரம்பரிய முறைப்படி செய்யாமல் தக்காளிகளைக் காம்புப்பக்கம் கீறி எடுத்துப் பின்னர் மிக்சி ஜாரில் மி,வத்தலோடு போட்டு அரைத்துக் கொண்டு, வாணலியில் கடுகு, பெருங்காயம் தாளித்து அரைத்த விழுதைக் கொட்டி உப்புச் சேர்த்துக் கிளறிவிட்டேன்

தக்காளித் தொக்கு படம் கீழே!


பத்து நாட்டுத் தக்காளிகள் நடுத்தர அளவுக்கு 5 மிளகாய் வற்றல், தேவையான உப்பு, தாளிக்க நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, பெருங்காயம். தக்காளிகள், மி.வத்தல், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு அரைத்துக் கொண்டு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, மஞ்சள் பொடி சேர்த்துத் தாளித்துத் தேவையானால் பெருங்காயப் பொடியும் போட்டுக் கொண்டு அரைத்த விழுதைப் போட்டு நன்கு சுருள எண்ணெய் பிரியும் வரை கிளறி எடுக்கணும். அம்புடுதேன்.

64 கருத்துகள்:

  1. குழி ஆப்பம் செய்முறை நன்றாக வந்திருக்கு.

    மெத்து மெத்தென்ற ஆப்பம் சூடாக இருக்கும்போது சாப்பிட சுகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். சூடாக சாப்பிட்டால் நான்கைந்து உள்ளே தள்ளலாம்!

      நீக்கு
  2. இந்த ஊரில் செட் தோசையும் (இங்க செட்னா மூணு போலிருக்கு) ரொம்பவே மெத் மெத் என்று இருக்கும். வீட்டுக்குப் பார்சல் வாங்கிவந்தால் அவ்வளவு நன்றாக இருப்பதில்லை (ஆறிவிடுவதால்). உங்க ஆப்பமும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செட் தோசையில் சென்னையில் ஆப்ப சோடா போடுவார்களா என்று எண்ணுமளவு மெத்துன்னுதான் இருக்கும்.  இங்கெல்லாம் செட் தோசைக்கு உடன்பாட்டு வடகறி!  சல்லுன்னு உள்ளே போகும்.

      நீக்கு
    2. என்ற்கு சாம்பார், சட்னிகள், மி பொடி தவிர வேறு எதுவும் பிடிப்பதில்லை. இங்கு பூரிக்குக் கொடுக்கும் சாஹு வும் பிடிக்காது. என்னைப்போல உள்ளவர்கள் குறைவுதான். பலர் புது உணவு வகைகளை ருசிப்பதில் ஆர்வம் காட்டுவர்.

      நீக்கு
    3. செட் தோசை நான் சாப்பிட்ட புதுசில் மஞ்சளாக இருக்கும். ஆழ்வார்ப்பேட்டையில் எண்பதுகளில் சாப்பிட்டிருக்கேன். தொட்டுக்கக் குருமாக் கொடுத்தாங்க அப்போ. பின்னர் மங்களூர் ரயில் நிலையக் கான்டீனில் உடுப்பி, சிருங்கேரி பிரயாணத்தின் போது சாப்பிட்டோம். வெந்தய தோசையைத் தான் (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) செட் தோசைனு இரண்டு தோசையை அடுக்கி மேலே சாம்பாரை ஊத்தி (நம்மவர் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) கொடுத்தாங்க. நல்லா இருந்தது. ஓகே. சென்னையில் சாப்பிட்டு ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டன. இங்கே திருச்சி/ஶ்ரீரங்கத்தில் செட் தோசை போணி ஆகிறதில்லைனு நினைக்கிறேன். ஒரே ஒரு காடரர் கொடுப்பார். தொட்டுக்கக் குருமா தான்.

      நீக்கு
    4. இந்தக் குழி ஆப்பம் ஓரங்களில் மொறுமொறுவெனவும் உள்ளே ஸ்பாஞ்ச் மாதிரியும் வரும். மேலே நன்றாக ஓட்டை போட்டுக்கொண்டு இருக்கும்/இருக்கணும்.

      நீக்கு
  3. எனக்கென்னவோ சிறு தானியங்கள் மீது ஆர்வம் வரவில்லை

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் கேட்பதுபோல், இன்னுமா எல்லாரும் தூங்கிக்கிட்டிருக்காங்கன்னு நான் கேட்கமாட்டேன்.

    பதிலளிநீக்கு
  5. தக்காளித் தொக்கில் கடுகு உ.பருப்பு கருவேப்பிலை தாளிக்கலையா என்று கேட்டால் தாளித்தபிறகு படம் எடுக்க மறந்துவிட்டேன் என்று சொல்லுவாரோ?

    பதிலளிநீக்கு
  6. நாங்கல்லாம் காலம்பரயே எழுந்திருப்போமாக்கும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். எழுந்து விளக்கேற்றி நமஸ்காரம் பாவனையாய்ப் பண்ணிட்டுக் கஞ்சி, காஃபி, நடுவில் வாசல் தெளித்தல் முடிச்சுண்டு வேறே அவசரம் இருந்தால் அதையும் பார்த்துட்டுக் காஃபியும் குடிச்சு முடிச்சுட்டுத் தான் இணையம் பக்கம் வருவேன். சில நாட்களில் வேலை இருந்தால் வர முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ.. அதிகாலையில் முதலில் படித்துக் கருத்துகள் எழுதறவங்க... வேலை எதுவும் செய்யாமல் இணையமே கதின்னு கிடக்கறாங்க என்று சொல்வதுபோல இருக்கே.. ஹா ஹா ஹா... நாங்கள்லாம் அதிகாலையில் அதாவது 4 மணிக்கே எழுந்துப்போமாக்கும்.... (தோசை மெத் என இருந்ததுன்னு அவர் சொல்றமை நாம நம்பறமாதிரி இதையும் நம்பிடணும்)

      நீக்கு
    2. முதல் வாக்கியத்துக்கு அதே, அதே. இரண்டாவதுக்கு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  7. வெறும் ஊத்தாப்பம் செய்துவிட்டு ஏன் குழி ஆப்பம் என்று பெயர் வைத்திருக்கிறார்? இலுப்புச்சட்டியில் செய்யாமல்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரும்புக் குழி ஆப்பச் சட்டித் தான் இருக்கு, எடுக்க முடியலைனு சொல்லி இருக்கேன். முதல்லே ஒழுங்காப் படிங்க. :)))))

      நீக்கு
    2. படிச்சேன். வார்க்கும் சாதனம் மாறினால் பெயர் மாறவேண்டாமா?

      நீக்கு
    3. என் அம்மா வெந்தய தோசை மாவை இரும்புக் கரண்டியில் ஊற்றிக் கொடுப்பார். குழி ஆப்பம்னு தான் சொல்வோம். தொட்டுக்கக் காரசாரமான சின்ன வெங்காயச் சட்னி. :))))

      நீக்கு
    4. பானுமதி வெங்கடேஸ்வரன்4 ஜூலை, 2022 அன்று AM 8:51

      இதை நாங்கள் இலுப்பகரண்டி தோசை என்போம். சூடாக சாப்பிட முடியாது. அது செட் ஆக வேண்டுமே?

      நீக்கு
    5. வாங்க பானுமதி! இரும்புக்கரண்டி, சின்ன இரும்புச் சட்டி எல்லாத்திலேயும் தோசை வார்ப்போம். சூடாகவும் சாப்பிடுவோம். முதலில் அந்த ஓரங்கள். மிளகாய்ப் பொடியும் இதற்கு நல்ல துணை.

      நீக்கு
  8. அனைவருக்கும் நற்காலை வணக்கம்.

    அருமையான குழி அப்பம்,அதுவும் தினுசு தினுசாகச் செய்தால்
    மாமாவுக்கு ருசிதான். கீதாமாவின் கைமணம்
    எல்லாமே பரிமளிக்கும்.
    என்னால் சாதத்தைத் தவிர வேறு எதற்கும் மாற
    இயலவில்லை.

    ஸ்ரீரங்கம் சென்று ருசிக்கும் சந்தர்ப்பமும்
    லபிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி சிம்ஹன் சகோதரி

      நலமா? தங்களது பிராயணங்கள் எப்படி உள்ளது? பிரயாணங்களுக்கு நடுவே நீங்கள் இங்கு வந்ததில் மிகுந்த சந்தோஷமடைகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  9. மிக அருமையாகச் செய்திருக்கிறீர்கள் கீதாமா.
    தக்காளி சட்டினியும் வண்ண மயமாக
    இருக்கிறது.
    இங்கு தங்கும் இடத்தில் ,இருக்கும் பாத்திரங்களில்
    எங்கள் மூவருக்கும் பொங்கலும் உப்புமாவும் தான்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னவோ போங்க. எத்தனை நாட்கள் பொங்கல், உப்புமானு பண்ணுவது?

      நீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. சுவையான குறிப்புகள்.... சிறுதானிய உணவுகள் தற்போது மீண்டும் அதிக அளவில் மக்கள் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்..... எங்கள் வீட்டில் கூட சிறுதானிய உணவுகள் அவ்வப்போது உண்டு.

    செட் தோசை என்றால் மூன்று - ஹாஹா..... இங்கே தில்லியில் இந்த சனிக்கிழமை அப்படித்தான் அமைந்தது. தொட்டுக்கொள்ள குருமா! நான் சட்னி, சாம்பார் கேட்டு வாங்கிக் கொண்டேன். :)

    சனிக்கிழமை எங்கு சாப்பிட்டேன் என்பதை பதிவாக எழுதுகிறேன்! அதுவரை காத்திருங்கள்! 😊

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல சாப்பாடாக இருந்தால் சரி. செட் தோசை அங்கேயும் மூன்றா? சட்னி, சாம்பாருடன் நன்றாக இருந்ததா?

      நீக்கு
  12. பெரிய குழி ஆப்பம்...! சர்க்கரை அளவு "உப்பாமல்" கட்டுக்குள் இருந்தால் நல்லது...!

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி.

    இன்றைய திங்களில் அருமையான ரெசிபி குறிப்புகள். தினை அரிசியுடன் சேர்ந்த கலவை சிறுதான்யங்கள் தோசை பார்க்கவே நன்றாக உள்ளது. தொட்டுக் கொள்ள தக்காளி சட்னியும் பிரமாதம். பொருத்தமாக இருக்கும். மிக அருமையாக ஒவ்வொன்றின் பக்குவங்களை எடுத்து விளக்கமாக சொல்லியிருக்கிறீர்கள். தெரிந்து கொண்டேன். பாராட்டுக்கள்.

    நானும் குழி பணியார கல் தவிர்த்து சமயத்தில் இப்படி சிறு இரும்பு கரண்டியில் "பொங்கரமாக " (நாங்கள் அப்படிச் சொல்வோம்) சாதாரண தோசை மாவையே ஒரு வித்தியாசத்திற்காக முன்பெல்லாம் செய்வேன். இப்போது தோசைக்கல்லில் ரவை கோதுமை மாவு கரைத்த தோசைதான் அடிக்கடி வருகிறது. இந்த மாதிரி ஒரு நாள் வரகையும் அரைத்துச் செய்ய வேண்டும்.

    சிறுதானியத்தை வைத்து இப்போது சமீபங்களில் கொஞ்ச காலமாக இப்படி நானும் செய்கிறேன். /செய்தேன். இப்போது மறுபடியும் அரிசிக்கு வந்து விட்டேன்.எப்படி இருக்கிறதோ ச. அளவு. அதற்கான மாத்திரைகள் வேறு ஒத்துக் கொள்ளவில்லை. இனி இந்த மாதிரி சிறுதானியங்களுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டுமென மருத்துவரும் பரிந்துரைக்கிறார். பார்க்கலாம். காலை, மதியம், இரவென பார்த்துப்பார்த்து செய்யத்தான் சற்று சோம்பல் வருகிறது. நீங்கள் சோம்பலில்லாமல் செய்திருக்கிறீர்கள். உங்கள் அற்புதமான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா, உங்களுக்குப் போட வேண்டிய கருத்துரையைக் கீழே வரும்படி போட்டிருக்கேன் போல! அவை உங்களுக்குச் சொன்னது தான்! :)

      நீக்கு
    2. https://sivamgss.blogspot.com/2012/08/blog-post_6562.html

      https://sivamgss.blogspot.com/2016/08/blog-post_24.html

      கமலா, உங்களுக்காகச் சுட்டி கொடுத்திருக்கேன். இரண்டுமே ஒரே மாதிரிச் செய்யப்பட்ட தோசை தான் முதல் பதிவு அப்பாதுரைக்காகப் போட்டது. அடுத்தது ரஞ்சனியின் சந்தேகத்தைத் தீர்க்கப் போட்டது.

      நீக்கு
    3. ஹிஹிஹிஹி இங்கே இருக்கா? அ.வ.சி.

      நீக்கு
    4. வணக்கம் சகோதரி

      தாங்கள் தந்த சுட்டிகளில் அவசியம் சென்று ரெசிபிகளை பார்க்கிறேன். படிக்கிறேன். எனக்காக தாங்கள் சுட்டிகளை தேடி தந்து இருப்பதற்கு நன்றி. எனக்கான பதிலை ஒரு படி கீழே சென்று படித்துக் கொண்டேன். மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம். சூட்டோடு சூடாக கருத்துகள் வந்து விட்டனவே..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோசை மாவில் சின்ன இலுப்பச் சட்டியில் இப்படி நீங்க சொல்றாப்போல் "பொங்கனம்" அல்லது "பொங்கரம்" அடிக்கடி உண்டு எங்க வீட்டிலே. நாங்க இலுப்பச்சட்டி தோசை என்போம். முந்தாநாள் கூட இரவுக்கு அது தான். காமாட்சி அம்மா இரட்டை விளிம்பு தோசை என்பார்கள். அதில் இரண்டு விளிம்பு வரும் அல்லவா! அதனால் முன்னால் ஒரு தரம் இதைச் செய்து பதிவும் போட்டேன். சுட்டி கிடைச்சதும் பகிர்கிறேன்.

      நீக்கு
    2. இதிலே என்னோட பழைய பதிவுகளுக்கான சுட்டி கொடுத்திருந்தேன். காணாமல் போயிருக்கு. மெயிலில் வந்திருக்கானு பார்க்கிறேன். :(

      நீக்கு
  15. நன்றாகத்தான் இருக்கிறது ருசிதான் அறியமுடியவில்லை.

    பதிலளிநீக்கு
  16. இன்று திங்களில் குழி ஆப்ப குறும் புராணம்..

    இது குழிப் பணியாரத்துக்கு அக்காவா.. தங்கையா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழிப்பணியாரத்தை விடப் பெரிசாவே இருக்கும். ஆகவே அக்கா!

      நீக்கு
  17. கீதாக்கா நன்றாக வந்திருக்கிறது. குழி ஆப்பம்/ஊத்தப்பம். வெளியில் மொறு மொறுவென்று உள்ளே பஞ்சாக வந்திருப்பது தெரிகிறது.

    ஆமாம் இது வெளியில் மொறு மொறுவென்று உள்ளே பஞ்சாய் இருக்கும்.

    நம் வீட்டிலும் சிறுதானியம் பயன்பாடு உண்டு. சிறுதானிய குழி ப்பணியாரமும் செய்வதுண்டு. சோளம், கம்பு, தினை...யிலிருந்து குதிரைவாலி பனிவரகு எல்லாமே பயன்படுத்துவதுண்டு. புட்டு, ஆப்பம் அடை செட் தோசை (ஹோட்டலில் செட் தோசை என்றால் மூன்று ஆனால் வீட்டில் செட் தோசை என்றால் இரண்டுதான்) என்றும்.
    செய்வதுண்டு.
    இங்கு எல்லாமே சாப்பிடுவதால் செய்வதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குழி ஆப்பம்/ஊத்தப்பம்.// - ஹல்லோ... ஊத்தப்பம் வேறு. இலுப்புச் சட்டி தோசை வேறு... சின்ன வயசுல இலுப்புச் சட்டி தோசை சாப்பிட்டும், அதை ஊத்தாப்பம் என்று சொல்ல எப்படித்தான் மனசு வருதோ.

      நல்லவேளை...'செட்' பற்றிச் சொல்லிட்டீங்க. எனக்கு ரெண்டு செட் தோசை தாங்கன்னு சொல்லிட்டு, நான் ஆறு தோசை எதிர்பார்த்துக் காத்திருந்திருப்பேன்.

      நீக்கு
    2. சின்ன வயசுல இலுப்புச் சட்டி தோசை சாப்பிட்டும், அதை ஊத்தாப்பம் என்று சொல்ல எப்படித்தான் மனசு வருதோ.
      //

      ஹாஹாஹா நெல்லை, அந்த வித்தியாசம் தெரியுமே. அது இவை எல்லாம்னு சொல்றதுக்குப் பதிலா ஒரு ஸ்லாஷ் போட்டுவிட்டேன் அம்புட்டுத்தான்....

      இலுப்புச் சட்டி தோசை ஆஹா.. என் பாட்டி இருந்தவரை அவர், இம்புட்டுகாணும் மாவு இருந்தா போறும் ஒண்ணே ஒண்ணு இலுப்பச்சட்டி தோசை குத்தித் தரியா என்று கையைக் காட்டிக் கேட்பார்.

      கீதா

      நீக்கு
  18. சிறுதானிய குழி ஆப்பம்,தக்காளி தொக்கு இரண்டுமே பார்க்கும்போது நன்றாக இருக்கிறது.

    எங்கள் அம்மா நாங்கள் சிறுவர்களாக இருந்த போது சாமை அரிசியில் சாதம் செய்வார் .
    நான் குரக்கன் ரொட்டி, புட்டு செய்வேன்.வேறு தானியங்கள் அவ்வளவாக உபயோகிப்பதில்லை.

    இன்று ரத்தினபுரியில் பலாக்காய் சுளை' மெலும் 'என்ற வறை, பலாக்கொட்டை சிப்ஸ் , பீர்க்கங்காய் காரக் குழம்பு, பீற்றூட் பால் கறி செய்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி. இந்தப் பால்கறி, பால் கூட்டு எல்லாம் எப்படிச் செய்வீர்கள் என்னும் செய்முறை அனுப்பி வைங்க. நாங்க பறங்கிக் கொட்டை (சின்னதாக இருக்கும்) பால் கூட்டு வெல்லமோ, சர்க்கரையோ போட்டுத் தேங்காய்ப்பால் ஊற்றிச் செய்வோம் வெல்லம் எனில் தேங்காய்ப்பால் தான். சர்க்கரை எனில் பசும்பால்.

      நீக்கு
  19. தக்காளித் தொக்கும் அருமையாக இருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
  20. குழி ஆப்பம், தக்காளி தொக்கு இரண்டும் நன்றாக இருக்கிறது.
    நானும் சிறு தானியங்களில் இட்லி, தோசை,பொங்கல் எல்லாம் செய்தேன் முன்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி. எங்க வீட்டில் ஒரு நிலையான மெனு எப்போவுமே கிடையாது. இப்போக் கவுனி அரிசி, புழுங்கல் அரிசி, கோதுமை ரவை, பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பு இன்னும் சில சாமான்கள் போட்டு வறுத்து அரைத்த கஞ்சி. அவர் மோர் விட்டுக் குடிக்கிறார். நான் சர்க்கரை இல்லாமல் பால் விட்டுப்பேன்.

      நீக்கு
    2. கவுனி அரிசி என்றால் கருப்பு அரிசிதானே ? -கில்லர்ஜி

      நீக்கு
    3. திணை அரிசி சேர்த்த செய்தால் நன்றாக இருக்கிறது பதிவு மிகவும் சுவாரஸ்யமான பதிவு அருமை

      நீக்கு
    4. ருசியான பதிவு அன்புடன்

      நீக்கு
    5. நன்றி அம்மா. நமஸ்காரங்கள்.

      நீக்கு
  21. ஆமாம் கில்லர்ஜி. கறுப்புக் கவுனி என்றே சந்தைகளில் கிடைக்கிறதே! அது தான்.

    பதிலளிநீக்கு
  22. இப்போதெல்லாம் "திங்க"ற கிழமைப் பதிவுகள் அதிகம் போணி ஆவதில்லை. எல்லோருக்கும் சாப்பிடுவதில் அலுப்பு வந்துவிட்டதோ?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!