செவ்வாய், 4 அக்டோபர், 2022

சிறுகதை - சந்தனம் - துரை செல்வராஜூ

 சந்தனம்

- துரை செல்வராஜூ -

*** *** ***

விடியற்காலை.. சுப முகூர்த்தம்.. ஹோமப்  புகையின் ஊடாக பசுவும் கன்றும் மங்கலகரமாக புது வீட்டுக்குள் வந்தன.. வந்த நேரத்துக்கு ஒன்று இரண்டு வேலைகளைச் செய்ததும் எல்லாருக்கும் மகிழ்ச்சி.. 

" வீட்டுக்குள்ள சாணம் போடறது நல்ல சகுனமாச்சே!.. "

சந்தன பாண்டியன்.. சின்ன வயது தான்.. ஆனால் எல்லாருக்கும் அண்ணாச்சி..

அண்ணாச்சி அவரது மனைவி ரெண்டு பிள்ளைகள் - கழுத்தில் மாலைகளுடன் ஹோம குண்டத்தின் முன்பாக விழுந்து வணங்கினார்கள்..

பெரியவர்கள் அட்சதை தூவினார்கள்.. பெண்கள் குலவையிட்டனர்..

பக்கத்தில் ஆறேழு வருடங்களாக சும்மா கிடந்த மனை.. திடுதிப்பென்று முகூர்த்தம்.. மஞ்சள் குங்குமத்துடன் அஸ்திவாரக் கல்.. விறுவிறு.. என்று வேலைகள் நடந்தன.. இன்றைக்கு மாவிலைத் தோரணங்களுடன்  வண்ண மயமாக விளக்கொளியில் குளித்துக் கொண்டிருந்தது வீடு..

சந்தன பாண்டியன் அண்ணாச்சிக்கு  மார்க்கெட்டில் பெரிய மளிகை.. நாணயம் நம்பிக்கைக்கு பெயர் பெற்ற கடைகளில் அண்ணாச்சியின் மளிகையும் ஒன்று.. கடும் உழைப்பாளி.. நேர்மையான மனுஷன்..  வாடிக்கையாளர்கள் எல்லாருக்குமே அழைப்பிதழ்..
குடும்பத்தினருடன் வாசலில் நின்று கொண்டு அன்பான  வரவேற்பு.. நெல்லை மண்ணின் வாசம்..

சொந்தமும் நட்பும் விடியற் காலையில் இருந்தே குழுமியிருக்க - வண்ணத் துணிப் பந்தலின் கீழ் விருந்து உபசாரம்..

பழைமை பாரம்பர்யம், கலை கலாச்சாரம் - என்று, சத்தம் போட்டுக் கொண்டிருந்தாலும் ஆணோ பெண்ணோ வீட்டுக்கு ஒரே ஒரு பிள்ளை என்றாகிப் போன கால சூழ்நிலையில் முகம் பார்த்து உபசரிப்பதற்கான உறவு முறை என்ற வட்டம் இல்லாமல் போனதே அதற்கு எந்த ஒரு விடையும் இல்லை ..

இருந்ததையும்  சூறைத் தேங்காய் போல சிதற அடித்தாயிற்று..

இது போக வேறொரு பிரச்னை..

முன்பெல்லாம் தெருக்களில் அக்கம் பக்கத்து வீடுகளிலும் சரி.. உறவுமுறை வீடுகளிலும் சரி.. விசேஷங்கள் என்றால் - எல்லாரும் எல்லா வேலைகளையும்  இழுத்துப் போட்டுக் கொண்டு எந்த பேதமும் இன்றி செய்வார்கள்.. இப்போது அப்படி இல்லை..

" என் மகளை வாசல்ல நிக்க வச்சி சந்தனம் கொடுக்க சொன்னீங்களாமே?.. "

" எம் பிள்ளையக் கூப்பிட்டு தண்ணீர் கொடுக்கச் சொன்னீர்களாமே.. அவன் கிரேடு என்னான்னு தெரியுமா?.. "

இப்படியெல்லாம் வித விதமான வில்லங்கங்கள் வீட்டுக்குள் புகுந்து புயலைக் கிளப்பும் போது நல்ல மனங்கள் தளர்ந்தே விடுகின்றன..

இதையெல்லாம் பார்த்துப் பார்த்து அலுத்துப் போனவர்களுள் அண்ணாச்சி சந்தன பாண்டியனும் ஒருவர்..

பந்தல், சமையல்,  பரிமாறுதல்  என்று எல்லாவற்றையும் ஏஜென்சியிடம் கொடுத்து விட்டார்..

அவர்கள் அது அதற்கும் அதற்கேற்ற கட்டணம்  வைத்திருக்கின்றார்கள்.. கொடுத்து விட்டால் போதும்.. எல்லாம் கச்சிதமாக முடிந்து விடுகின்றன.. 

பன்னீர் தெளித்து சந்தனமும் ரோஜாப்பூவும் கொடுப்பதற்கு அளவெடுத்துச் செய்த மாதிரி ஆறு பெண் பிள்ளைகள்..

கிருஷ்ணனோடு ஆடும் கோகுலத்துக் கிளிகளைப் போல் அழகு.. பளபளப்பான பாவாடையும் தாவணியும் அழகின் அழகு ..

லட்சணமான பசங்கள் பத்து பேர்... இலையிடவும் தண்ணீர் வைக்கவும் பரிமாறவுமாக..

எல்லாரும் வட நாட்டில் இருந்து வேலை தேடி வந்தவர்கள்..

பந்தி உபசரிப்பு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த வேளையில்  பரபரப்பு..

இரண்டாவது பந்தியில் அசோகா வைத்துக் கொண்டிருந்தவன் திடீரென
நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்து விட்டான்..

" ஆம்புலன்ஸ்.. ஆம்புலன்ஸ்.. "

எல்லாரும் சத்தம் போட்டார்கள்.. மயங்கி விழுந்தவனைத் தூக்கிக் கொண்டு சிலர் வாசலுக்கு ஓடினார்கள்..

" எங்கேடா... அந்த ஏஜெண்டு?.. "

" அவந்தான் அப்பவே ஓடிட்டானே!.. "

விருந்துக்கு வந்திருந்தவர் அனைவரையும் பயம் பிடித்துக் கொண்டது.. நானும் எழுந்து ஓடினேன்...

வேலை செய்து கொண்டிருந்த பசங்களிடையே - " ஆ.. ஊ!.." - எனத் தவிப்பு.. 

என்ன மொழி!.. ஹிந்தி எனப் புரிந்தாலும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது..  

" நல்ல நேரத்தில் இது என்ன.. " - எல்லாரிடத்தும் கலக்கம்.. பந்தியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் குழப்பத்துடன் எழுந்தனர்... அவர்களை ஆசுவாசப் படுத்தியவாறு பரிமாறத் தொடங்கினேன்... ஏஜென்சி பசங்களும் வந்து சேர்ந்து கொண்டார்கள்..

சிறிது நேரத்தில் -  " பையன் நல்லா இருக்கின்றான்... பயப்படுறதுக்கு ஒன்னும் இல்லை!.. " - என்றபடி,  பந்தலுக்குள் வந்த அண்ணாச்சி என்னை நெருங்கி - " கொஞ்சம் வாங்களேன் சாமிநாதன்.." - என்றார்..

அவருடன் சென்றபோது அங்கே மருள மருள விழித்துக் கொண்டிருந்தாள் - வரவேற்பு மேஜையில் ரோஜாப்பூ கொடுத்த பெண்..


" சாமிநாதன்.. உங்களுக்குத் தான் இந்தி தெரியுமே.. என்ன.. ன்னு கேளுங்க!.. "

வளைகுடா நாட்டில் கற்றுக் கொண்ட பேச்சு வழக்கு பெரும் துணையாக இருந்தது..

விழிகளால் " என்ன?.. " - என்றேன்..

" ஜீ!.. ஆஜ் உஸ்கீ பெஹன் கே ஷாதி.. சிஸ்டர் கலியாணம்.. இஸ்லியே.. "

அண்ணாச்சியிடம் விவரித்தேன்..

அவரது முகம் மாறியது.. என்னை இழுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தார்..

அங்கே கட்டிலில் சோர்வாக படுத்திருந்தான் அந்தப் பையன்.. அவனுக்குத் துணையாக இன்னொருவன்..

" விவரம் கேளுங்க சாமிநாதன்!.. "

கேட்டேன்... சொன்னான்..

" பெயர் ராம் சரண்..  கூட ஒரு தங்கை.. அப்பா இல்லாமல் வளர்ந்த பிள்ளைகள்.. அம்மாவுக்கு கிருஷ்ண மந்திர் கோசாலையில் சாணம் அள்ளும் வேலை... மூன்று வேளையும் சாப்பாடு... சம்பளமாக சொற்ப தொகை.. இத்துடன் கோசாலைக்கு வருபவர்கள் கொடுக்கும் தானம்... இவ்வளவு தான்.. இங்கே வந்த பிறகுதான் வீட்டு விளக்கு ஓரளவுக்கு நன்றாக எரிகின்றதாம்.. இப்போ கூட தங்கச்சிக்கு கன்யா தானம் கிருஷ்ணன் கோயில் நிர்வாகம் தான் செய்யுதாம்... "

கொசுறாக வேறொன்றும் வேண்டுகோள்..

" வேலை நேரத்துல மயக்கம் போட்டு விழுந்ததுக்காக சம்பளத்தைக் குறைச்சிடாதீங்க.. மகராஜ்!.. "

அண்ணாச்சியின் கண்கள் கலங்கி விட்டன..

இந்தப் பசங்களுக்கும் பொண்ணுகளுக்கும் சுப முகூர்த்த மாதங்கள் தான் கொண்டாட்டம்.. மற்ற மாதங்கள் பிரச்னையானவை..  ஊருக்குப் பணம் அனுப்பணும்.. சமைக்கணும்.. சாப்பிடணும்.. மற்ற தேவைகளும் இருக்கு.. இச்சமயங்களில் துப்புரவு வேலைகள் தான் கைக்கு வரும்..

" இப்போ ஊருக்குப் போய் தங்கச்சியப் பார்க்கிறானா?.. கேளுங்க!.. "

கேட்டேன்...

" ராம்.. ராம்!.." - என்றபடி, அண்ணாச்சியையும் என்னையும் தொட்டுத் தொட்டு கும்பிட்டான்.. விஷயத்தைப் புரிந்து கொண்ட மற்றவனும் கையெடுத்துக் கும்பிட்டான்..

அண்ணாச்சி உருகி விட்டார்.. அவரும் கஷ்டங்களை அனுபவித்தவர் அல்லவா!..

ராம் சரணுக்கு ரயிலில் டிக்கெட் போடும்படி அண்ணாச்சியின் செல்போனில் இருந்து செய்தி பறந்தது..

" ராம் சரணுக்கு வேற என்ன தெரியும்?.. "

" கம்ப்யூட்டர்.. ல கணக்கு வழக்கு எழுதத் தெரியும்.. "

" ஊருக்குப் போய்ட்டு வந்து என்னைப் பார்!.. "

" ஜீ.. ஜீ!..  என்க்கும் ஹெல்பு செய்ங்கோ!.."  - என்றான் மற்றவன்..

" இது மளிகைக்கடை வேலைடா.. கஷ்டமா இருக்கும்!.. "

" செய்றேங்க மகராஜ்.. இன்னிக்கே வந்து சேர்ந்துக்கறேன்!.. "

புன்னகையுடன் அவன் தோளைத் தட்டினார் அண்ணாச்சி..

ராம் சரண் - எனது கைகளைப் பற்றிக் கொண்டு காதருகில் பேசினான்..

" என்னவாம்?.. " - அண்ணாச்சியின் கேள்வி..

அவரிடம் தயங்கியபடி சொன்னேன்...

" ரோஜாப்பூ கொடுத்தாளே அந்த சிவத்த பொண்ணு... அவ மேல இவனுக்கு ஒரு இதுவாம்... அவளுக்கும் மகராஜ் இரக்கம் காட்டுங்க!... ன்னு சொல்றான்!.. "

அண்ணாச்சி பலமாகச் சிரித்தார்.. 

அன்பும் இரக்கமும் சந்தனமாகக் கமழ்ந்தன..

***

27 கருத்துகள்:

  1. வழக்கமா தம்பி கதைன்னா வாசிக்க வழ வழன்னு வழுக்கிக் கொண்டு ஓடும். இந்தத் தடவை இங்கே-அங்கேன்னு இழுத்துக் கொண்டு போய்... அட! கதைக்கு சுபமுடிவு கொடுக்க வேண்டும் என்ற அவர் எண்ணம் நிறைவேற அவரும் தான் எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கு என்று நினைத்துக் கொண்டேன்.
    அதற்காகவே அவரை வாழ்த்த வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. வேறென்ன தான் செய்வது!...

      தங்கள். அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி அண்ணா...

      நீக்கு
  2. கதை நன்று..... ஆனால் காலம் இப்படி மாறிவிட்டதா?

    அண்ணாச்சி கடைன்னா ஊரிலிருந்து பசங்களைக் கூட்டிக்கொண்டுவந்து, தங்க இடம் கொடுத்து, ஆனால் நல்ல உழைப்பை வாங்கி, அவங்க நல்லா வளர்ந்தபிறகு ஆசைப்படுபவனுக்கு ஒரு கடையை வைத்துக்கொடுத்து (எதுக்க இல்லை.. வேறொரு இடத்தில்)... இப்படி சமூகம் பிழைக்க வழி செய்தவர்கள்..

    இப்போ அடுத்த தலைமுறை படிப்பில் முன்னேற்றம் காணும்போது நிலைமை மாறுகிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஆசைப் படுபவனுக்கு ஒரு கடையை வைத்துக் கொடுத்து (எதுக்க இல்லை.. வேறொரு இடத்தில்)... இப்படி சமூகம் பிழைக்க வழி செய்தவர்கள்.. //

      நியாயம் தான்..

      ஆனால வந்தவர்க்கு வாழ்வு கொடுக்கின்றார்..

      தங்கள். அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. கேடர்ர்களின் கூத்துகள்..... வடநாட்டவர்கள் மாத்திரம் தமிழகம் வரலைனா இங்கு வேலை செய்ய ஆட்களே இல்லாமல் போகும் அபாயம் இருக்கிறது.

    அதே நேரத்தில் NIA சில பகுதிக்குள் வரும்போது, எந்தக் கடைகளிலும் பசங்க இல்லாமல் வெறிச்சோடும் அபாயமும் வெளிப்பட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடநாட்டவர்கள் மாத்திரம் தமிழகம் வரலைனா இங்கு வேலை செய்ய ஆட்களே இல்லாமல் போயிருக்கும்..

      சென்ற வருடத்து அறுவடையின் போது பீகாரிகளுடன் வங்கதேசிகளும் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வேலை செய்திருக்கின்றனர்..

      NIA பணி தொடரட்டும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    அனைவருக்கும் அன்னை ஸ்ரீ சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. // நல்ல நாளாக மலர வேண்டும் என இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்..//

    நமது பிரார்த்தனையும்..

    பதிலளிநீக்கு
  6. இறுதியில் சந்தனம் மணத்தது அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  7. அனைவருக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. கதை நன்றாக இருக்கிறது.

    அன்பும் இரக்கமும் சந்தனமாகக் கமழ்ந்தன..//

    அன்பும் இரக்கமும் மதம், மொழி கடந்து சந்தனமாக மனம் வீசுகிறது.
    ரோஜா கொடுத்த பெண்ணுக்கும் அண்ணாச்சி உதவுவார் . அன்பு விரிந்து கொண்டே போகும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ரோஜா கொடுத்த பெண்ணுக்கும் அண்ணாச்சி உதவுவார் . அன்பு விரிந்து கொண்டே போகும் .//

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. பானுமதி வெங்கடேஸ்வரன்4 அக்டோபர், 2022 அன்று AM 11:21

    அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை வாழ்த்துகள்!🙏🙏

    பதிலளிநீக்கு
  10. இன்று கதைக் களத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் அன்பின் நன்றி...

    இன்று எனது படைப்பினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் அழகிய சித்திரத்தால் செய்த அன்பின் சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    மகிழ்ச்சி.. நன்றி..

    மீண்டும் சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  11. வந்தவர்களுக்கு வாழ்வுகொடுக்கும் தமிழ் நெஞ்சங்கள் வாழ்க.

    அன்பும் இரக்கமும் ஓங்கி வளரட்டும். இல்லாதோர் வாழ்க்கை மகிழ்ச்சியாக விடியட்டும் .

    நல்ல கருத்தை எடுத்து சொல்லும் கதை . வாழ்த்துகள். .

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துகள்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!