சனி, 29 அக்டோபர், 2022

நான் படிச்ச கதை,


- செய்திகள் ஒன்றும் இல்லை! -


=======================================================================================================================================================

நான் படிச்ச கதை (JK)

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்


முன்னுரை

நடராசனின்  “ஆயிஷா” கதையை வாசித்தீர்கள். அதே போன்று ஒரு பத்தாம் வகுப்பு   மாணவியின் கதை தான் இது.  இந்த மரி என்கிற அற்புத மரி அழகில், குணத்தில், படிப்பில், நடத்தையில், என்று எல்லா விதத்திலும் ஆயிஷாவுக்கு நேர் எதிர். வயசும் ஆயிஷாவைக் காட்டிலும் கூடுதல். 18 வயசு.  சரி கதையைப் படியுங்கள்.

"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம்.

"எந்த அற்புத மரி?" என்றேன் நான்.

"இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்."

தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான்.

"என்னத்துக்கு சார் டி.சி?"

"என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?"

"ஆமாம். அப்பப்போ இஷ்டப்பட்டால், ஏதோ எனக்கு தயவு பண்ணுகிற மாதிரி கிளாசுக்கு வரும். போகும்."

"உம். நீரே சொல்கிறீர் பாரும்." என்று சொல்லிவிட்டு இரண்டாள் சேர்ந்து தூக்க வேண்டிய வருகைப் பதிவு ரிஜிஸ்டரையும், இன்னும் இரண்டு மூன்று ஃபைலையும் தூக்கி என் முன் போட்டார்.

"பாரும். நீரே பாரும். போன ஆறு மாச காலத்திலே எண்ணிப் பன்னிரண்டே நாள் தான் ஸ்கூலுக்கு வந்திருக்கிறாள். வீட்டுக்கும் மாசம் ஒரு கடிதம் எழுதிப் போட்டுக் கொண்டுதான் இருக்கேன். ஒரு பூச்சி, புழு இப்படி எட்டிப் பார்த்து, அந்த கடுதாசிபோட்ட கம்மனாட்டி யாருன்னு கேட்டுச்சா? ஊகூம். சர்தான் போடா நீயுமாச்சு உன் கடுதாசியுமாச்சுன்னு இருக்கா அவள். சரி ஏதாச்சும் மெடிக்கல் சர்டிபிகேட் கேட்டு வாங்கிச்சேர்த்துக்கலாம்னா, வந்தால்ல தேவலாம். நம்ம டி.இ.ஓ மாதிரியில்ல ஸ்கூலுக்கு இஷ்டப்பட்டால் வருகிறாள். வந்தாலும் ஸ்டூடண்ட் மாதிரியா வர்றாள்? சே…சே…சே… என் வாயாலே அத எப்படிச் சொல்றது? ஒரு பிரஞ்சு சைக்கிள்ளே, கன்னுக்குட்டி மேலே உட்கார்ந்து வர்ற மாதிரி பாண்ட் போட்டுக் கொண்டு வர்றாள். பாண்டுங்காணும்… பாண்ட்! என்ன மாதிரி பாண்ட்டுங்கறீர்? அப்படியே 'சிக்'குன்னு பிடிச்சிக்கிட்டு, போட்டோவுக்கு சட்டம் போட்ட மாதிரி, அதது பட்பட்டுன்னு தெறிச்சுடுமோன்னு நமக்கெல்லாம் பீதியை ஏற்படுத்தற மாதிரி டிரஸ் பண்ணிட்டு வர்றாள். சட்டை போடறாளே, மேலே என்னத்துகுங்காணும் இரண்டு பட்டனை அவுத்துவிட்டுட்டு வர்றது? அது மேலே சீயான்பாம்பு மாதிரி ஒரு செயின். காத்தாடி வால் மாதிரி அது அங்கிட்டும் இங்கிட்டும் வளைஞ்சு வளைஞ்சு ஆடறது. கூட இத்தினி பசங்க படிக்கறாங்களேன்னு கொஞ்சமாச்சும் உடம்பிலே வெக்கம் வேணாம்? இந்த இழவெடுத்த ஸ்கூல்லே ஒரு யூனிபார்ம், ஒரு ஒழுங்கு, ஒரு மண்ணாங்கட்டி, ஒரு தெருப்புழுதி ஒன்றும் கிடையாது. எனக்கு தெரியுங்காணும்… நீர் அதையெல்லாம் ரசிச்சிருப்பீர்!

"சார்…"

"ஓய் சும்மா இருங்காணும். நாப்பது வருஷம் இதுல குப்பை கொட்டியாச்சு. ஐ நோ ஹ்யூமன் சைக்காலஜி மிஸ்டர் டமிள்! தமிழ்சார், எனக்கு மனத்தத்துவம் தெரியும்பா. உமக்கு என்ன வயசு?"

"இருபத்தொன்பது சார்!"

"என் சர்வீஸே நாற்பது வருஷம்."

"பாண்ட் , சண்டை போடக்கூடாதுன்னு விதி ஒன்னும் நம்ம ஸ்கூல்ல இல்லையே சார்."

"அதுக்காக, அவுத்துப் போட்டுட்டும் போகலாம்னு விதி இருக்கா என்ன? வயசு பதினெட்டு ஆகுதுங்காணும் அவளுக்கு! கோட்டடிச்சு கோட்டடிச்சு இப்பத்தான் டெந்த்துக்கு வந்திருக்கிறாள். எங்க காலத்துல பதினெட்டு வயசுல இடுப்பிலே ஒண்ணு, தோள்லே ஒண்ணு இருக்கும். போதாக்குறைக்கு மாங்காயைக் கடிச்சிட்டு இருப்பாளுக. போனவாட்டி, அதான் போன மாசத்திலே ஒரு நாள் போனாப் போவுதுன்னு நம்ம மேலே இரக்கப்பட்டு ஸ்கூலுக்கு வந்தாளே அப்போ, அவள் ஒரு நாள்லே, ஆறு மணி நேரத்துக்குள்ளாறே-ஹார்ட்லி ஸிக்ஸ் அவர்ஸ் சார்- என்ன என்ன பண்ணி இருக்காள் தெரியுமா? யாரோ நாலு தடிக்கழுதைகளோட - நீங்கள்ளாம் ரொம்ப கௌரவமா சொல்லிப்பேளே பிரண்ட்ஸ் அப்படீன்னு - நாலு தடிக்கழுதைங்களோட ஸ்கூல் வாசல்லே சிரிச்சு பேசிட்டு இருந்திருக்காள். நம்ம ஹிஸ்டரி மகாதேவன் இருக்கே… அது ஒரு அசடு. நம்ம ஸ்கூல் வாசல்லே, நம்ம ஸ்டூடண்ட் இப்படி மிஸ்பிஹேவ் பண்ணறாளேன்னு அவ கிட்ட போய் "இப்படி எல்லாம் பண்ணக்கூடாது அற்புத மரி, உள்ள வான்னு கூப்பிட்டு இருக்கான். அவள் என்ன சொன்னாள் தெரியுமா?

"சொல்லுங்க சார்"

"உங்களுக்கு பொறாமையா இருக்கா சார்ன்னு கேட்டுட்டாள். அந்தப்பசங்க முன்னால வெச்சு மனுஷன் கண்ணாலே ஜலம் விட்டுட்டு என்கிட்டே சொல்லி அழுதார். இந்த ஸ்கூல் காம்பசுக்குள்ளே நடக்கிறதுக்குதான் நீங்க பொறுப்பு. வெளியிலே நடக்கிற விவகாரத்துக்கெல்லாம் நீங்க என்னைக் கட்டுப்படுத்த முடியாது சார்னு மூஞ்சியிலே அடிச்ச மாதிரி சொல்றாள். யாருகிட்டே? இந்த நரசிம்மன்கிட்டே.”

எச்.எம்.முக்கு முகம் சிவந்து மூக்கு விடைத்தது.

“இந்த அநியாயம் இத்தோடு போகலே. சாயங்காலம், பி.டி. மாஸ்டர்கிட்டே சண்டை போட்டுக்கொண்டாள். அவன் இப்படிப் பண்ணப்படாது, இப்படி வளையணும், இந்த மாதிரி கையை வச்சுக்கணும்னு அவளைத் தொட்டுச் சொல்லிக்கொடுத்திருக்கான். தொட்டவன், எசகுபிசகா எங்கேயோ தொட்டுட்டான் போலிருக்கு. இவ என்ன கேட்டிருக்கா தெரியுமா?”

“என்னைத் தொட்டுப் பேசாதீங்கன்னு சொல்லியிருப்பாள்.”

“மனுஷ ஜாதின்னா அப்படித்தானே சொல்லியிருக்கணும்? இவள் என்ன சொன்னாள் தெரியுமா?”

எச்.எம். தலையைக் கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டார். அவர் முகம் வேர்த்து விட்டிருந்தது.

”சார்... உங்க பொண்டாட்டியோட நீங்க படுக்கறது இல்லையான்னு கேட்டுவிட்டாள். பாவம்! நம்ம பி.டி. பத்மநாபன் லீவு போட்டு விட்டு போய்விட்டான். முடியாதுப்பா முடியாது. நானும் நாலு பெத்தவன். இந்த ராட்சஸ ஜென்மங்களையெல்லாம் வச்சிக்கிட்டு, இரத்தக் கொதிப்பை வாங்கிக்கிட்டு அல்லாட முடியாதுப்பா. அந்தக் கழுதையைத் தொலைச்சுத் தலைமுழுகிட வேண்டியதுதான்.”

“இப்போ போய் டி.சி. கொடுத்துட்டால், அவள் எஸ்.எஸ்.எல்.சி. எழுத முடியாமல் போயிடும் சார். அவள் வாழ்க்கை வீணாகப் போய்விடும்.”

”அந்தக் கழுதைக்கே அதைப் பத்திக் கவலை இல்லை. உமக்கெதுக்கு?”

***

நமக்கெதுக்கு என்று என்னால் இருந்து விட முடியாது. அது என் சுபாவமும் இல்லை. அத்தோடு, அந்த மரி என்ற ஆட்டுக்குட்டி, ஒரு சின்னப்பெண். அப்படி என்ன பெரும் பாவங்களைப் பண்ணிவிட்டாள்? அப்படியேதான் இருக்கட்டுமே. அதற்காக அவளைக் கல்லெறிந்து கொல்ல நான் என்ன அப்பழுக்கற்ற யோக்கியன்?

நான் சுமதியிடம் சொன்னேன். எச்.எம். மாதிரிதான் அவளும் சொன்னாள்.

”உங்களுக்கெதுக்கு இந்த வம்பெல்லாம்? நீங்க சொல்றதைப் பார்த்தால், அது ரொம்ப ராங்கி டைப் மாதிரி தெரியுது. உங்களையும் தூக்கி எறிஞ்சு ஏதாச்சும் பேசிட்டால்??” என்றாள்.

அவளை சம்மதிக்க வைத்து, அவளையும் அழைத்துக்கொண்டு மரி வீட்டுக்கு ஒரு நாள் சாயங்காலம் போனேன்.

என் வீட்டுக்கு ரொம்ப தூரத்தில் இல்லை அவள் வீடு. ரயில் நிலையத்துக்கு எதிரே இருந்த வரிசை வீடுகளில், திண்ணை வைத்த, முன்பகுதி ஓடு போட்டு, பின் பகுதி ஒட்டிய பழங்காலத்து வீடு அவளுடையது. விளக்கு வைத்த நேரம். திண்ணை புழுதி படிந்து, பெருக்கி வாரப்படாமல் கிடந்தது. உள்ளே விலை மதிப்புள்ள நாற்காலிகள் சோபாக்கள் இருந்தன. ஆனாலும் எந்த ஒழுங்கும் இன்றிக் கல்யாண வீடு மாதிரி இரைந்து கிடந்தன.

“மரி,” என்று நான் குரல் கொடுத்தேன். மூன்று முறை அழைத்தபிறகுதான், “யாரு?” என்று ஒரு குரல் உள்ளிருந்து வந்தது. கலைந்த தலையும், தூங்கி எழுந்த உடைச் சுருக்கங்களோடும், சட்டையும் கைலியுமாக வெளிப்பட்டாள் மரி.

என்னைப் பார்த்ததில் ஒரு ஆச்சரியம், வெளிப்படையாக அவள் முகத்தில் தோன்றியது. என் மனைவியைப் பார்த்ததில் அவளுக்கு இரட்டை ஆச்சரியம் இருக்க வேண்டும்.

“வாங்க சார்.. வாங்க, உட்காருங்க.” என்று எங்கள் இருவரையும் பொதுவாக வரவேற்றுவிட்டு நாற்காலிகளை ஒழுங்குபடுத்தினாள். சோபாவில் நானும் சுமதியும் அமர்ந்தோம். எதிரே இருந்த ஒரு நாற்காலியில் அவள் அமரச் சொன்னதும் அமர்ந்தாள்.

“தூக்கத்தைக் கலைச்சுட்டேனாம்மா?” என்றேன்.

”பரவாயில்லே சார்,” என்று வெட்கத்தோடு தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். முகத்தில் விழுந்த முடியை மேலே தள்ளிவிட்டுக் கொண்டாள்.

”நீங்க எப்படி இங்கே..?”

“சும்மாத்தான்.  பீச்சுக்குப் போய்க்கிட்டு இருந்தோம். வழியிலே தானே உங்க வீடு. பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு நுழைஞ்சிட்டோம். அழையாத விருந்தாளி. உடம்பு சரியில்லையா?”

”தைலம் வாசனை வருதா சார்? லேசாத் தலைவலி. ஏதாச்சும் சாப்பிடறீங்களா சார்?”

“எல்லாம் ஆச்சு. வீட்டிலே யாரும் இல்லையா?”

“வீடா சார் இது....? வீடுன்னா அப்பா, அம்மா இருக்கணும். அப்பா எப்பவோ போயிட்டார். போயிட்டாருன்னா செத்துப் போயிடலே. எங்களை விட்டு விட்டு போயிட்டார். அம்மா என்னைச் சுத்தமாக விட்டுடலை. அப்பப்போ நாங்க சந்திக்கிறோம். சமயத்திலே இரண்டு நாளுக்கு ஒரு முறை நாங்க பார்த்துக்கொண்டால் அது அதிகம். அதனால்தான் இது வீடான்னேன். எனக்கு ஏதோ லாட்ஜிலே தங்கற மாதிரி தோணுது.”

எனக்குச் சங்கடமாய் இருந்தது. இரவுகளில், நசுங்கிய அலுமினியப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பிச்சைக்கு வருகிற குழந்தையைப் பார்ப்பது போல இருந்தது.

”சாப்பாடெல்லாம் எப்படியம்மா?”

“பெரும்பாலும் பசி எடுக்கறப்போ, எங்க தோணுதோ அங்கே சாப்பிடுவேன். ஓட்டல்லேதான். அம்மா வீட்டிலே தங்கியிருந்தா ஏதாவது செய்வாங்க. அம்மா சமையலைக் காட்டிலும் ஓட்டலே தேவலை. நல்லாயிருக்காதுன்னு சொல்லலை. அம்மான்னு நினைச்சு சாப்பிட முடியலே. பொண்ணுன்னு நினைச்சு அவங்களும் பண்ணலை.”

சுமதி என்னை முந்திக்கொண்டு கேட்டாள்.

”உன் அம்மாதானே அவங்க?”

“ஆமாங்க. இப்போ வேறு ஒருத்தரோட அவங்க இருக்காங்க. அவரை எனக்குப் பிடிக்கலை. என்னையும் அவருக்குப் பிடிக்கலை. சரி அவங்க வாழ்க்கையை அவங்க வாழறாங்க. என் வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டு தீர்க்கிறேன்.”

ஓர் இறுக்கமான மௌனம் எங்கள் மேல் கவிந்தது. நான், சாவி கொடுக்காமல் எப்போதோ நின்று போயிருந்த கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“மரி... ஸ்கூலுக்கு வந்தால், ஒரு மாறுதலாக இருக்குமில்லே?”

“நான் யாருக்காக சார் படிக்கணும்?”

“உனக்காக,”

“ப்ச்!” என்றாள் அவள். இதற்கு மேல் எதுவும் பேசக்கூடாது என்று எனக்குத் தோன்றியது.


”பீச்சுக்குப் போகலாம். வாயேன்.”

”வரட்டுமா சார்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“வா.”

“இதோ வந்துவிட்டேன் சார்,” என்று துள்ளிக் கொண்டு எழுந்தாள். உள்ளே ஓடினாள்.  நான் சுமதியைப் பார்த்தேன்.

“பாவங்க,” என்றாள் சுமதி.

“யாருதான் பாவம் இல்லே? இந்தப் பெண்ணை விட்டுவிட்டு எங்கேயோ இருக்கிற அந்த அம்மா பாவம் இல்லையா? இத்தோட அப்பா பாவம் இல்லையா. எல்லோருமே ஒருவிதத்திலே பாவம்தான்.” என்றேன் நான்.

அப்போதுதான் பூத்த ஒரு பூ மாதிரி, மழையில் நனைந்த சாலை ஓரத்து மரம் மாதிரி, ஓடைக் கூழாங்கல் மாதிரி, வெளிப்பட்டாள் மரி. பேண்ட்தான் போட்டிருந்தாள். சட்டையை டக் பண்ணியிருந்தாள். அழகாகவே இருந்தது அந்த உடை. உடம்புக்குச் சௌகரியமானதும், பொருத்தமானதும்தானே உடை.

“ஸ்மார்ட்!” என்றேன்.

“தேங்க்யூ சார்,” என்றாள், பரவசமான சிரிப்பில்.

நான் நடுவிலும், இரண்டு புறமும் இருவருமாக, நாங்கள் நடந்தே கொஞ்ச தூரத்தில் இருந்த கடற்கரையை அடைந்தோம்.

கடற்கரை சந்தோஷமாக இருந்தது. ஓடிப் பிடித்துக் கல் குதிரைகளின் மேல் உட்கார்ந்து விளையாடும் குழந்தைகள். குழந்தைகள் விளையாட்டைப் பார்த்து ரசிக்கும் பெற்றோர்கள். உலகத்துக்கு ஜீவன் சேர்க்கும் யுவர்களும் யுவதிகளும். கடலைகள், கடல் மணலில் சுகமாக வறுபட்டன.  குழந்தைகள் வாழ்வில் புதிய வர்ணங்களைச் சேர்த்துப் பலூன்கள் பறந்தன. ஸ்டூல் போட்டுப் பட்டாணி சுண்டல் விற்கும் ஐயரிடம் வாங்கிச் சாப்பிட்டோம்.

“கார வடை வாங்கிக் கொடுங்க சார்,” என்றாள் மரி, கொடுத்தேன். தின்றாள்.

”மத்தியானம் சாப்பிடல்லே சார். சோம்பேறித்தனமாக இருந்துச்சு. தூங்கிட்டேன்.”

“ராத்திரி எங்களோடுதான் நீ சாப்பிடறே,” என்றாள் சுமதி.

“இருக்கட்டுங்க்கா.”

”என்ன இருக்கட்டும். நீ வர்றே.”

வரும்போது, சுமதியின் விரல்களில் தன் விரல்களைக் கோத்துக்கொண்டு, சற்றுப்பின் தங்கி மரி பேசிக் கொண்டு வந்தாள். நான் சற்று முன் நடந்தேன்.

சாம்பாரும் கத்தரிக்காய் கறியும்தான். மத்தியானம் வறுத்த நெத்திலிக் கருவாடு இருந்தது.

“தூள்க்கா.... தூள்! இந்தச் சாம்பாரும் நெத்திலிக் கருவாடும் பயங்கரமான காம்பினேஷங்க்கா,” என்றாள் மரி.


*****


மரி இப்போதெல்லாம் காலையும் மாலையும் தவறாமல் எங்கள் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாள். காலை இட்டிலி எங்கள் வீட்டில்தான். வருஷம் 365 நாட்களும் எங்கள் வீட்டில் இட்டிலி அல்லது தோசைதான். 


“ஆட்டுக்கல்லை ஒளித்து வைத்து விட்டால், சுமதிக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும். மரி,” என்பேன். மரி விழுந்து புரண்டு சிரிப்பாள். சாயங்காலங்களில் எங்கள் வீட்டில்தான் அவள் வாழ்க்கை கழிந்தது. பேண்ட் போட்ட அந்தப்பெண், சிரமப்பட்டுச் சம்மணம் போட்டு உட்கார்ந்து சுமதிக்கு வெங்காயம் நறுக்கித் தருவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.


“ஏம்மா... சைக்கிள்ளே ஊரைச் சுற்றுகிற பெண் நீ. இங்கே இவளுக்கு வெங்காயம் நறுக்கித் தர்றியோ?” என்றேன்.

“இதுதான் சார் த்ரில்லிங்கா இருக்கு. கண்ணிலே நீர் சுரக்கச் சுரக்க வெங்காயம் நறுக்கிறது பயங்கரமான எக்ஸ்பீரியன்ஸ்.” என்றாள். ஐயோ இந்தப் பயங்கரமே!

“சார், ஒண்ணு சொல்லட்டுமா?”

“ஊகூம். ரெண்டு மூணு சொல்லு.”

“சீரியஸாகக் கேட்கிறேன், சார். நான் இங்கே வந்து போறதிலே உங்களுக்குத் தொந்தரவு இல்லையே சார்?”

“சத்தியமாகக் கிடையாது.”

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு அவள் சொன்னாள்.

“ஏன் சார் - கெட்டுப் போனவள்னு எல்லோரும் சொல்கிற என்னை எதுக்கு உங்க வீட்டிலே சேர்த்து, சோறும் போடறீங்க?”

சிரிப்புத்தான் வந்தது.

“பைத்தியமே! உலகத்திலே யார் தான் கெட்டுப் போனவங்க? யாராலுமே கெட முடியாது, தெரியுமா? மனசுக்குள்ளே நீ கெட்டுப் போனவள்னு நினைக்கிறியாக்கும்? அதை விட்டுடு. நீயும் கெட்டவள் இல்லை, உங்க அம்மாவும், அப்பாவும் யாருமே கெட்டவங்க இல்லே.”

அவள் சொனாள்: “எங்க அம்மாவைப் பழி தீர்க்கணும்னுதான் அப்படியெல்லாம் நடந்துக்கறேன் சார்.”

“எனக்கும் தெரியும்.” என்றேன்.

பத்து நாள் இருக்குமோ? இருக்கும். ஒரு நாள் மரி என்னிடம் கேட்டாள்.

”சார்.. நான் ஸ்கூலுக்கு வர்றதே இல்லைன்னு நீங்க ஏன் கேட்கவில்லை?”

நான் அவள் முகத்தைப் பார்த்தேன். இரண்டு மணிகள் உருண்டு விழத்தயாராய் இருந்தன. அவள் கண்களில்.

“என்னை நீங்க கேட்டிருக்கணும் சார். ஏண்டி ஸ்கூலுக்கு வரலைன்னு என்னை அறைஞ்சு கேட்கணும் சார். அப்படி யாரும் என்னைக் கேட்க இல்லேங்கறதுனாலதானே நான் இப்படி விட்டேத்தியா இருக்கேன்? என் மேல் இப்படி  யாரும் அன்பு செலுத்தினது இல்லே சார். அன்பு செலுத்தறவங்களுக்குத்தானே அதட்டிக் கேக்கவும் அதிகாரம் இருக்கு?”

“உனக்கே அது தோணனும்னுதானே நான் காத்திருக்கேன். அதனாலே என்ன? ஒன்றும் முழுகிப் போய்விடவில்லை. இன்னைக்குப் புதுசா ஆரம்பிப்போம். இன்னைக்குத்தான் டென்த் கிளாஸ்லே நீ சேர்ந்தன்னு வச்சுக்க. நாளையிலேர்ந்து நாம் ஸ்கூலுக்குப் போறோம்.” என்றேன்.

மரி, முகத்தை மூடிக் கொண்டு விசும்பி விசும்பி அழுதாள்.

கதையின் சுட்டி   

கதை ஆய்வு.

  1. ஆயிஷா என்ற கதையின் ஆயிஷாவையும் இக்கதையின் மரியையும் ஒப்பீடு செய்து எழுதுக.

ஆம். நடராசன் எழுதிய ஆயிஷா என்ற பாத்திரத்திற்கும் மரி என்கிற அற்புத மரி என்ற இக்கதையின் பாத்திரத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை முதலில் பார்ப்போம்.

ஆயிஷா 10ஆம் வகுப்பு மாணவி.

மரியும் 10ஆம் வகுப்பு மாணவி.

ஆயிஷாவுக்கும் அப்பா அம்மா இல்லை.

மரிக்கு இருவரும் இருந்தாலும் இருவரும் அவளுடன் வாழவில்லை. மரி தனிமையில் வாழ்கிறாள். 

இருவரும் அன்புக்கு ஏங்குபவர்கள்.

ஆயிஷா அறிவியல் ஆசிரியையின் அன்பால் கவரப்படுகிறாள்.

மரி தமிழ் ஆசிரியரின் அன்பால் திருந்துகிறாள்.

இருவரும் ஆசிரியரை எதிர்கேள்வி கேட்பவர்கள்.

 ஆயிஷா கேட்பது அறிவு விருத்திக்காக.

 மரி கேட்பது ஆசிரியரை இழிவு படுத்துவதற்காக.

இனி வேற்றுமைகளையும் காண்போம்.

ஆயிஷா 15 வயது. அறிவுத் தாகம் அதிகம் உள்ளவள். எந்த ஒரு பாடமானாலும் ஏன் எதற்கு எப்படி என்று ஆசிரியர்களைக் கேள்வி கேட்பவள். அதன் காரணம் ஆசிரியர்களிடம் அடி வாங்குபவள்.

மரி 18 வயதுப் பெண். ஆயிஷாவைக் காட்டிலும்  உலக அனுபவம் கூடுதல் உள்ளவள். ஆசிரியர்கள் மட்டுமல்ல, யாருக்கும் அடங்காத முரட்டுப் பெண்.

ஆயிஷா வாழ்க்கைப் போராட்டத்தில் தோற்று இறந்து போகிறாள்.

மரி புதிய பாதையை தேர்ந்தெடுத்து திருந்துகிறாள்.

கதையின் முடிவில் ஆயிஷா இறந்தபின் நமக்கு ஒரு பரிதாப உணர்வு தோன்றுகிறது.

மரி அன்புக்கு ஏங்கி திருந்துவது நமக்கு ஒரு சமாதான உணர்வை ஏற்படுத்துகிறது.

  1. கதை பற்றியும் கதை ஆசிரியரைப் பற்றியும் தோன்றிய கருத்துக்களை சுருக்கமாகக் கூறுக.

மரி தனியாக வாழ்கிறாள் என்பது கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. செலவுக்குப்  பணம் எங்கிருந்து கிடைக்கிறது என்பது போன்ற பல கேள்விகள் பிறக்கின்றன..

//“இப்போ போய் டி.சி. கொடுத்துட்டால், அவள் எஸ்.எஸ்.எல்.சி. எழுத முடியாமல் போயிடும் சார். அவள் வாழ்க்கை வீணாகப் போய்விடும்.”

”அந்தக் கழுதைக்கே அதைப் பத்திக் கவலை இல்லை. உமக்கெதுக்கு?”//

இவ்வாறு தலைமை ஆசிரியர் சொல்லியும், தமிழ் ஆசிரியர் மரியை திருத்தும் பொறுப்பை ஏற்பது முரண் என்று தோன்றினாலும், அவருக்கு அது ஒரு சவாலாகத் தோன்றுகிறது. அன்பால் யாரையும் அடக்கலாம் என்று பக்குவமாக அவளைத் திருத்த முயன்று சவாலில்  வெற்றி பெறுவது ஒரு நல்ல முடிவுரை.

கதையைக்  கொஞ்சம் நீட்டி மரி தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெறுவதாக முடித்திருக்கலாம். பல நவீன சிறுகதை ஆசிரியர்களும் சில முடிவுகளை வாசகர்களுக்கே விட்டு விடுகிறார்கள். அது போன்றே இதுவும் என்று தோன்றுகிறது.  

“என் மேல் இப்படி  யாரும் அன்பு செலுத்தினது இல்லே சார். அன்பு செலுத்தறவங்களுக்குத்தானே அதட்டிக் கேக்கவும் அதிகாரம் இருக்கு?”

இவ்வாறு கூறவைத்து அன்பில்லாதவர் என்றும் மதிப்பில்லாதவர் என்று கூறுகிறார் ஆசிரியர். அதனால் தான் அன்பில்லாமல் மற்ற ஆசிரியர்களால் அதட்டப்படும் போது மரிக்கு எதிர்த்துப் பேசத்  தோன்றியது என்பதும் தெளிவாகிறது.

எஸ்ரா இக்கதையை சிறந்த 100 கதைகளுக்குள் ஒன்றாகத் தேர்ந்திருக்கிறார்.

நல்ல உளவியல் கதைகளாக ஆயிஷாவையும் இந்தக் கதையையும் எடுத்துக் கூறலாம்.

ஆசிரியர் பற்றிய குறிப்பு.

பிரபஞ்சன் (1945 -  2018) 1995 ஆம் ஆண்டு, தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

பிரபஞ்சன் பிறந்த ஊர் புதுச்சேரி. இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம்.

புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

35 கருத்துகள்:

  1. மிக அருமையான கதை. கெட்டவர்கள் என்று யாரும் கிடையாது , அதிலும் குழந்தைகள். ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் கதை. நல்ல பகிர்வு

    ஒப்பீடு, டிசெக்ஷன் ரசிக்கும்படி இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரபஞ்சன் கதைக்கு கேட்கவா வேண்டும்?

      நீக்கு
    2. நீங்கள் கூறிய கருத்து சரியே. ஆய்வு வேறு விதமாகச் செய்திருக்கலாம். பள்ளி, ஆசிரியர், மாணவி என்ற முறையில் கடைசியில் ஒரு பரீட்சை வினாத்தாள் போல கதையை ஆய்வு செய்யலாம் என்று முடிவெடுத்தேன். அது ஈர்க்கவில்லை. பாஸ் மார்க் கிடைக்கும் என நம்புகிறேன்.

      Jayakumar

      நீக்கு
  2. ஊரில் ஒரு நல்ல நிகழ்வும் கண்ணில் படவில்லையா இல்லை பிசியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிஸி இல்லை, தினசரி செய்திகளை மேய்ந்து விடுவதுண்டு.  எனினும் ஒன்றும் கிட்டவில்லை.  பொதுவான செய்திகளாய் கூட ஒன்றும் சிக்கவில்லை.  என்ன செய்ய!

      நீக்கு
  3. இந்தக் குழுவில் பள்ளி ஆசிரியர் யாராவது இருந்தால் அவரே இந்தக் கதை பற்றிக் கருத்துக் கூற தகுதியும் அனுபவமும் பெற்றவர் என்றே கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை.. மருத்துவர் பற்றிய கதையை விமர்சிக்க டாக்டருக்குப் படிச்சிருக்கணும், கீழ்ப்பாக்கம் டைப் கதைகளுக்கும் அப்படி இருந்த அனுபவம் வேணும்னு சொல்லி கதிகலங்கடிக்கலை ஜீவி சார்

      நீக்கு
    2. ஆயிஷா கதைக்கு நான் இப்படிச் சொல்லவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும். நெல்லை நான் சொல்வது மேம்போக்கான கருத்து இல்லை.

      நீக்கு
    3. கொஞ்சம் சிரித்துக் கொள்ளலாமா?

      நீக்கு
    4. எதுக்கு? நெல்லை சொன்னதுக்கா?

      நீக்கு
    5. நானும் இராய செல்லப்பா சார் போன்று ஒரு பள்ளி ஆசிரியனாக (10 A 1) எனது உத்தியோக வாழ்க்கையைத் தொடங்கியவன் தான்.
      Jayakumar

      நீக்கு
    6. // எதுக்கு? நெல்லை சொன்னதுக்கா //

      இருவரின் உரையாடலுக்கும்தான்.

      நீக்கு
    7. You could have explained the reasons Jeevee sir. Not many will be like this teacher, but there are. சுகாதாரத்துறை செயலர் சுனாமியின் போது இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து, until they were adults, fund பண்ணினார். இந்தக் கதையில் வரும் ஆசிரியரின் குணம் எனக்கில்லை. நான் உதவியிருக்கமாட்டேன் கெடுதலும் செய்திருக்க மாட்டேன்

      நீக்கு
    8. நெல்லை. இங்கு இப்போ தான் பொழுது விடிந்திருக்கு
      அங்கேயோ இரவு 7 மணி. இனி யார் வாசிக்கப் போகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? விட்டுத் தள்ளுங்கள்

      நீக்கு
    9. கரந்தை ஸார் ஒரு ஆசிரிய அனுபவத்தில் சொல்லியிருக்கிறார் என்றால் நான் ஒரு கதாசிரியர் அனுபவத்தில் இந்தக் கதையில் இருக்கிற ஓட்டை உடைசல்களை எடுத்துச் சொல்வேன். தம்பி துரையைத் தவிர வேறு யாருக்கும் அது சுவாரஸ்யப் படாது. அகவே----

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. அன்பின் வணக்கம்..

    நோய் நொடியின்றி
    அனைவரும் வாழ வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டும்... டும்... டும்... டும்... வாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய பகிர்வாக இங்கு பகிர்ந்த கதை அருமை. அன்பினால் சாதிக்க முடியாததும் உண்டோ என எண்ண வைத்த கதை. உண்மையான அன்புக்கு ஏங்கிக் கொண்டிருந்த மரியை தங்கள் அன்பினால் மாற்றிய தமிழாசிரியரையும், அவருக்கு பக்க பலமாக இருந்த அவர் மனைவியையும் எத்தனை முறை பாராட்டினாலும் போதாது என நினைக்க வைத்த முடிவு. திரு. பிரபஞ்சன் அவர்களின் கதைக்கு கேட்கவா வேண்டும். அருமையான எழுத்தாளர்.

    கதைப்பற்றிய விளக்கமும் நன்றாக இருந்தது. இதில் இதற்கு ஒப்பீடாக வந்த "ஆயிஷா" கதையை இங்கு வெளியான அன்று ஏதோ பல வேலை நேரங்களால் நான் படிக்கவில்லை. எனவே இப்போது அதையும் சென்று படித்து வந்தேன். அதைப் படித்தவுடன் மனது கனத்து விட்டது. கண்களில் கண்ணீர் பெருகியது. தடை செய்ய இயலவில்லை.

    அதில் அறியாமையால் ஒரு நல்ல அறிவுச் சுடர் அநியாயமாக அணைந்து விட்டது.

    இதில் ஒரு நல்ல இரு மனங்களின் அறிவானது மற்றொரு அறிவை சுடர் விட்டு பிரகாசிக்க துணையாய் இருந்தது.

    இரு கதைகளுமே மனதை விட்டு அகல மறுக்கும் கதைகள். பகிர்ந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான கருத்துரை. ஒப்பீடும் சரியாக உள்ளது. நன்றி. 

      நீக்கு
  7. இப்படி வழி தவறும் குழந்தைகள் நிறைய இடங்களில் இருக்கின்றனர்.
    மரி பரிதாபம்
    - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  8. கதை அற்புதம்,
    நிறைய ஆசிரியர்கள் இப்படி இருக்கிறார்கள். மாணவர்களுடன், மாணவிகளுடன் நல்முறையில் பழகி நல்வழிப்படுத்தும் ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் இதுபோன்ற ஆசிரியர்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அவர்களும் தாங்களாக வெளிப்படுத்திக் கொள்ளவும் மாட்டார்கள். காரணம் வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற ஆசிரியர்கள் செயல்படுவதில்லை.
    மாணவர்கள் முன்னேற்றம் ஒன்றினையே குறிக்கோளாய் கொண்டு செயல்படுவர்கள்.
    ஆனால் இந்த சமுகம் இதுபோன்ற ஆசிரியர்களைப் பற்றி அறிந்தாலும், அறிந்ததாகக் காட்டிக் கொள்ளாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதோ ஒரு ஆசிரியர் விமர்சனம். சிறந்த கருத்து.

      நீக்கு
    2. உண்மை கரந்தை சார். ஆசிரியர்கள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் பற்றி (பெரும்பாலானவர்கள்) மோசமாகப் பேசும் எல்லோரும் நல்லவரகளைப் பாராட்டத் தவறிவிடுகிறோம்

      நீக்கு
  9. நல்ல கதை. பிரபஞ்சன் கதைகள் எல்லாமும் படிச்சிருப்பேன். இதையும் படிச்சேனானு நினைவில் இல்லை. பல ஆசிரியர்கள் இப்படி அன்பாயும் ஆதரவாயும் நடந்து கொண்டாலும் வெளியே தெரியவில்லை. நல்ல ஆசிரியர். மாணவியும் புரிந்து கொண்டு திருந்தினாளே! அப்படியே பெற்றோரும் ஆதரவு காட்ட வேண்டும்

    பதிலளிநீக்கு
  10. ஆயிஷா கதைக்கரு முற்றிலும் வேறானது. அம்மாதிரி மாணவ/மாணவியர் எவராலும் புரிந்து கொள்ளப்படாமல் அதிகப் பிரசங்கி எனப் பெயர் எடுக்கும் வாய்ப்பே அதிகம். ஏதோ அந்த ஒரு அறிவியல் ஆசிரியருக்கு மட்டும் புரிந்ததே! என்றாலும் இளவயதில் இறக்க நேர்ந்தது வருத்தமாகவே இருக்கு. பல குழந்தை மேதைகள் அனைவராலும் கவனிக்கப்பட்டு முன்னேறியதைப் போல் இந்த மாணவியும் முன்னேறி இருந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  11. நாடும்/மாநிலமும் இப்போது இருக்கும் நிலையில் சட்டம் /ஒழுங்கைக்காப்பாற்றும் வகையிலான நல்ல செய்திகளுக்குப் பஞ்சம் ஏற்பட்டதில் வியப்பே இல்லை. எங்கே பார்த்தாலும் கொலை/கொள்ளை/சிசிடிவி ஆதாரங்களுடன் திருடர்களும்/கொள்ளையர்களும் பிடிபடுவது இவை தான் தொலைக்காட்சிச் செய்திகளே! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூட்டமான இடத்தில் குண்டுவெடித்து பலர் இறக்காதது நல்லசெய்திதானே

      நீக்கு
    2. ஆமாம், ஆனால் அதை நல்ல செய்தியாக எடுத்துக்கலையே! முக்கியமாக ஊடகங்கள்! :(

      நீக்கு
  12. கோமதிஅரசு அவர்கள் இன்றைய பதிவுக்கு வரவில்லையே!..

    பதிலளிநீக்கு
  13. கதையைப் பற்றியும், கதை விமரிசனம் பற்றியும் கருத்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
  14. எனக்கு மிகவும் பிடித்த பிரபஞ்சனின் கதை! குழந்தைகளை அவர்களின் மனநிலையில் இருந்து அணுகும் ஒரு ஆசிரியர். ஒரு ஆட்டுக்குட்டி போன்ற பாசம் நிறைந்த பெண், தாய் தந்தையின் அரவணைப்பு கிடைக்காமல் , படிப்பிலும் கவனமற்று, எதிலும் பிடிப்பு இன்றி வாழவை எந்த உத்தேசமும் இல்லாமல் வாழும் பொழுது , அன்பாய் நல்வழிப்படுத்த ஒரு நல்லாசியர் கிடைக்கிறார்.
    நல்லதொரு கதைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  15. அன்புக்காக ஏங்கும் மாணவிபின் கதை உதவும் ஆசிரியர் பாராட்டுக்கு உரியவர்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!