வியாழன், 18 மே, 2023

நான் என்ன சொல்லி விட்டேன்...

 நம்மை அறியாமல், ஆனால் நம்மால் நிகழும் சில தர்மசங்கடங்கள். 

முன்பு இது சம்பந்தமாக ஒரு பதிவு கூட போட்டிருக்கிறேன்.  நான் மிகவும் கவனமாகவே இருப்பேன். அந்நியருக்கு எதிரில் உடன் இருப்பவர்களிடம் பேசும்போது கூட ஜாக்கிரதையாக இருப்பேன்.  மறைபொருளில் அவர்களை சொல்கிறேனோ என்கிற  அர்த்தம் வந்து விடக்கூடாது என்று!

ஒருமுறை ன்னுடன் வேலைபார்த்த நண்பர் அறையை விட்டு வெளியேறி அடுத்த அறைக்கோ எங்கோ சென்று விட்டு வந்தார்.  என்னைப் பார்க்க ஒரு நண்பர் வந்திருந்தார்.  அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.  நண்பர் அவர் மனைவியைப் பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, நான் அதை மையமாக ஆமோதித்து "ஆமாம்..  முகத்துல சிரிப்பே வராதவங்க கூட இருக்கிறது கஷ்டம்தான்.  எப்பவும் சிடுமூஞ்சி மாதிரி முகத்தை வைத்துக் கொண்டிருந்தால் நமக்கு எப்படி இயல்பாக இருக்கத்தோன்றும்?" என்று சொல்லிக்கொண்டிருந்த வேளையில் வெளியில் சென்ற அந்த நண்பர் என்ட்ரி.  இதெல்லாம் அவருக்கும் பொருந்தும்.  ஆனால் நான் அவரைச் சொல்லவில்லை.

இவரைப் பார்த்த ஒரு நொடியில் சுதாரித்து "உன் மனைவியைதான் சொல்கிறேன்" என்று நண்பருக்கு விளக்கமும் கொடுத்தேன்.  நண்பரோ உள்ளே வந்த இன்னொருவர் எதிரில் தன் மனைவியைப் பற்றி பேச விரும்பவில்லையோ என்னவோ, சுத்தமாக சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தைப் பற்றி பேசத் தொடங்கினார்.  அதுவும் எனக்குப் புரிகிறது!  என்ன செய்ய..  

என்னைப் பார்த்தவாறே தன் இருக்கைக்குச் சென்றவர், அப்புறம் கொஞ்ச நாள் என்னுடன் சரியாகப் பேசவில்லை.  காரணம் எனக்குத் தெரியும்.  கேட்கவும் முடியாது, விளக்கவும் முடியாது!  சமாளிக்கிறேன் என்று தோன்றும்!

பழைய அலுவலகத்தில் எனக்கு மேலதிகாரி அவர்.  அதிகாரி ஆகும் முன்னால் எனது நல்ல நண்பர்.  நட்பு இன்னமும் தொடர்கிறது.   அன்று அவருக்கு பிறந்த நாள்.  எங்களுக்கு ஒரு வழக்கம்.  கொஞ்சம் நெருங்கியவர்களை போனில் அழைத்து நேரில் சொல்லி விடும் வழக்கம்.  

வருடா வருடம் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து காலையிலேயே சொல்லி விடுவேன்.

அதே போல, ஆனால் சற்றே தாமதமாக இந்த வருடமும் அவருக்கு வாழ்த்து சொல்ல ஃபோன் செய்தேன்.  அவர் குரல் தெளிவாகக் கேட்கவில்லை. விட்டு விட்டு வந்தது.  

பெரும்பாலும் தமிழில்தான் வாழ்த்து சொல்வது என் வழக்கம்.  இன்றும் தமிழில் தொடங்கினாலும் ஆங்கிலத்திலும் சொன்னேன்.  "மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே.."

அலைபேசி தெளிவாகி இப்போது அவர் குரல் தெளிவாகக் கேட்டது.

"ஸ்ரீராம்..  நான் இப்போ ஒரு கருமாதில இருக்கேன். மனசே சரியில்ல..  அப்புறம் பேசறேன்..."

இப்போது என்னுடைய 'மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே' எனக்கே அபத்தமாக ஒலித்தது.

அவர் ஒன்றும் நினைத்துக் கொள்ள மாட்டார்தான்.  நமது பிறந்த நாளுக்கு ஸ்ரீராம் வழக்கம்போல வாழ்த்துகிறான் என்று தெரியும்தான்.  ஆனாலும் இருக்கும் இடம் தெரிந்ததும் வரும் நம் மன சங்கடம் இருக்கிறதே..   

சமயங்களில் ஸ்பீக்கரில் போட்டு பேசும் வழக்கம் உடையவர் அவர்.  ஜாக்கிரதையாகவே பேசுவேன்.  ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் நான் பேசியதை வேறு யாராவது கேட்டிருந்தால்...

வேண்டுமென்று பேசவில்லைதான்.  அவர் எங்கிருக்கிறார் என்று எனக்கெப்படி தெரியும்?  என் பக்கம் தவறில்லை என்றாலும் அந்த நிமிடம் அந்த இடத்தில் அந்த வாழ்த்து..  அது கொண்டுவரும் பொருள்...

சில சமயங்களில் சில சங்கடமான தருணங்கள்.

=============================================================================================================

நியூஸ் ரூம் 
பானுமதி வெங்கடேஸ்வரன் 


- காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்தான் அதிகமாக விவாகரத்து செய்கிறார்கள் - சுப்ரீம் கோர்ட் நீதிபதி கவாய் அறிவிப்பு. 

- உடல் எடையை குறைப்பதற்காக செயற்கை  சர்க்கரையை  பயன்படுத்த வேண்டாம். அது நீடித்த பயனைத் தராது  என்பதோடு தொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் அபாயம் உண்டு. - W.H.O. எச்சரிக்கை.

- முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கங்குலிக்கு Z பாதுகாப்பு.

- கரீன் என்னும் 23 வயதாகும் பெண் செயற்கை நுண்ணறிவை(artificial intelligence) பயன்படுத்தி  virtual girl friend ஐ உருவாக்கியிருக்கிறார். உயிரோடு இருக்கும் பெண்ணோடு பேசுவது போலவே இந்தப் பெண்ணோடு பேசலாம், அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம், செல்ஃபீ எடுத்துக் கொள்ளலாம். தனிமையிலிருக்கும் ஆண்களுக்கு உதவிகரமாக இருப்பாளாம் இந்த வெர்ச்சுவல் பெண். 

- தென்மேற்கு பருவமழை நான்கு நாட்கள் தாமதமாக ஜூன் 4ம் தேதி துவங்குமாம்.

- செயற்கை முறையில் இல்லாமல், இயற்கையாக பழுக்க வைக்கப் பட்ட, தோட்டங்களிலிருந்து நேராக தபால் மூலம் வரவழைக்கப்படும் மாம்பழங்கள் 45 நாட்களில் 19,000 கிலோ விற்பனை.   


==========================================================================================================================================================================================

 

நம்ம தமிழ்நாட்டுலதான் இவங்களும் இருந்தாங்க....

காமராஜின் மருமகள் 

விருதுநகரில் காமராஜர் வாழ்ந்த அந்த எளிய வீட்டை – இந்திரா காந்தியிலிருந்து, லால்பகதூர் சாஸ்திரி வரை பலரும் வந்திருக்கிற வீட்டைப் பிறகு அரசுடமை ஆக்கியிருந்தார்கள்.
குமுதத்தில் எழுதுவதற்காக 1995ல் விருதுநகரில் உள்ள காமராஜரின் வீட்டுக்குப் போயிருந்தேன்.
அருகில் இன்னொரு வாடகை வீட்டில் காமராஜரின் தங்கை நாகம்மாளின் மகளான கமலாதேவி வசிப்பதாகச் சொன்னதும் அங்கு போனேன்.
மிக எளிய வீடு.
காமராஜர் மறைந்த பிறகு ‘பாரத ரத்னா’ கொடுக்கப்பட்ட போது அதைப் பெற்றுக் கொண்டவர்கள் நாகம்மாள் குடும்பத்தினர் தான்.
அறுபத்து மூன்று வயதான, காமராஜரின் மருமகளான கமலாதேவி வறுமையில் ஒடுங்கிப் போயிருந்தார். அவ்வளவு ஒடிசலான தேகம்.
கணவர் இறந்துவிட அவருடைய மகன்கள் தீப்பெட்டி ஆபிஸில் ஐநூறு ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். மிகக் குறைந்த வருமானம் குடும்பத்தைத் தவிக்க வைத்திருந்தது.
“நாங்க ஏழு பேர் இருக்கோம். சாப்பிடவே கஷ்டமா இருக்குப்பா. கஷ்டம் தாங்காம கலெக்டர் காலில் கூட விழுந்து அழுது கூடக் கேட்டுப் பார்த்துட்டேன். எந்த வேலையும் கிடைக்கலைப்பா…”
– எதிரில் இருந்த நாகம்மாளின் குரல் ஏறி இறங்கியது. பெருமூச்சு விட்டார்.
“இப்போ பக்கத்து வீடுகளில் வேலை செய்றேன்.. பெருக்கிக் கூட்டுறேன்.. இந்தா இருக்கு.. பாருப்பா (பக்கத்தில் இருக்கும் காமராஜரின் வீட்டைச் சுட்டிக்காட்டுகிறார்.)
எங்க மாமா வீட்டிலே பெருக்கிற வேலையாவது வாங்கிக் கொடுக்கச் சொல்லுப்பா.. உனக்குப் புண்ணியமா இருக்கும்..
அங்கே கூட்டினாலாவது கையில் ஐம்பதோ, நூறோ கூலியாக் கிடைக்குமில்லைப்பா.. நான் அங்கே போய்ப் பெருக்கினா அவமானம்னு சொல்றாங்க.. நம்ம நிலைமை இப்படி இருக்கிறப்போ எங்க மாமா வீட்டைக் கூட்டிப் பெருக்கிறதில என்ன அவமானம் இருக்குப்பா?”
– சொன்னபடி கசிந்து அழுதார் ஒரு முதல்வராக இருந்தவரின் மருமகள். சேலை முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.
“மாமா இருக்கிற வரை அவருக்கும் சேர்த்துக்கலை.. குடும்பத்துக்கும் சேர்த்துக்கலை.. இப்போ பாருப்பா.. விதவை பென்ஷனுக்கு மனுப் போடுற நிலைமையிலே இருக்கேன்” – சொல்லும் போது அவர் கைகூப்பிய காட்சி முள்ளாய் உறுத்தியது.
அடுத்த வாரம் 1996, மே மாதத்தில் குமுதம் வார இதழில் “வீட்டு வேலை செய்யும் காமராஜரின் மருமகள்” என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை வெளிவந்தது.
வெளிவந்த மறுவாரத்தில் ஆச்சர்யமானதொரு மாற்றம்!
அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. அவருடைய கவனம் விழுந்தது.
காமராஜரின் குடும்பத்திற்கு வீடும், வேலை வாய்ப்பும், வங்கியில் 11 லட்சம் ரூபாய் டெபாசிட்டும் பண்ணுவதாக அரசிடமிருந்து அறிவிப்பு வெளியானது.
அந்தத் தகவலைச் சொல்ல மறுபடியும் விருதுநகரில் உள்ள கமலாதேவி வீட்டுக்குப் போனேன். வீட்டுக்குள் நுழைவதற்குள் அரசின் செய்தி அந்த வீட்டுக்குள் நுழைந்திருந்தது. காமராஜரின் மருமகளான அந்த அம்மையார் நெருங்கி வந்து கையைப் பிடித்துக் கொண்டார்.
கண்கள் ததும்பின.
கனிந்த பார்வையில் நன்றி சொன்னார் கமலாதேவி அம்மாள்.
– மணா, நன்றி: தாய்

====================================================================================================

கெட்ட பொம்மன்!

கனக ராய முதலியார் அங்கிருந்தபடியே டூப்ளெக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அக் கடிதத்தில் தென்பாண்டி நாட்டில் பிரஞ்சு பேரரசை வளர்த்து பிரெஞ்சு கொடியை பறக்க விடுவதற்கு பாஞ்சாலங்குறிச்சி பாளையம் பெரிதும் உதவி புரியும். பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் ஆன பொல்லா பாண்டிய கட்டபொம்மன் பிரெஞ்சுக்காரர்கள் பக்கம் சாய்ந்து பல உதவிகளை  செய்ய காத்திருக்கிறார். ஆனால் அந்த உதவிகள் பிரெஞ்சுக்காரர்கள் முகமதலியையும் ஆங்கிலேயரையும் வென்று திருச்சி கோட்டையை கைப்பற்றிய பிறகுதான் வெளிப்படையாக இருக்க முடியும். அதுவரையில் அவை மிகவும் ரகசியமாக இருக்க வேண்டும் என்று கட்டபொம்மன் நாயக்கர் கேட்டுக்கொள்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார் கனக ராய முதலியார். அவர் எழுதிய இந்த கடிதம் இன்றைக்கும் எழும்பூர் ரெக்கார்டு ஆபீசில் இருக்கிறது. 'எல்லை இல்லா வீரம் கொண்ட  பொல்லா பாண்டிய கட்டபொம்மன்' என்று புகழ் பாடும் ம பொ சி இதற்கு என்ன பதில் சொல்வார்?

====================================================================================================

இங்கேயும் மனிதர்கள்... போர் என்பது ஆட்சியாளர்களின் பேராசை, திணிப்பு.. வீரர்கள் சொன்னதைச் செய்யும் அடிமைகள். அவர்களிடம் இருக்கும் மனிதம் விழித்த்துக்கொள்ளும்போது...



கல்நெஞ்சக்காரர்களும் இருந்திருக்கிறார்கள். அந்தக் குழந்தை மனதில் என்ன இருந்திருக்கும்? அதன் பார்வையைப் பாருங்கள்.. கொஞ்ச நேரத்தில் அவை உயிருடன் விடப்பட்டிருக்கும் என்று நம்புவோம். எனக்கு இது வேறொரு காட்சியை நினைவு படுத்துகிறது.

============================================================================================================



வந்து சென்றாயா எஜமானே?
பாராமல்
ஏன் சென்றாய்?
காட்டிக்கொடுத்த
உன் காலடித் தடங்கள்
என்
கண்ணீரால் நிரம்புகின்றன

========================================================================================

பொக்கிஷம் :-

விவேக் தனமான கேள்வி!


நல்ல வாய்!


எல்லாம் போறதுக்கு ஒண்ணு போனா பரவாயில்லையோ..!

இல்லீங்க.. அவ்வளவுதான் ஜோக்...


நம்ம தலீவர் உண்ணாவிரதம் (முன்)மாதிரி!

மாயா ஓவியம் எப்படி?

129 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. அந்நியருக்கு எதிரில் உடன் இருப்பவர்களிடம் பேசும்போது கூட ஜாக்கிரதையாக இருப்பேன். மறைபொருளில் அவர்களை சொல்கிறேனோ என்கிற அர்த்தம் வந்து விடக்கூடாது என்று!//

    டிட்டோ, ஸ்ரீராம். + 1

    நீங்கள் சொல்லியிருக்கும் அனுபவம் போல எனக்கும் நேர்ந்ததுண்டு. குடும்பத்தில். அதனால் இன்னும் கவனமாகவே இருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா.. இதுபற்றி முன்பே ஒரு பதிவும் நான் எழுதி இருக்கிறேன். பாஸையும் சம்பந்தப்படுத்தி.. வாங்க கீதா.

      நீக்கு
    2. அது என்ன பதிவு என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். வாசித்திருந்தால் கொஞ்சமேனும் நினைவிருக்கும். வாசிக்காமல் விட்ட பதிவோ?

      கீதா

      நீக்கு
    3. //அந்நியருக்கு எதிரில் உடன் இருப்பவர்களிடம் பேசும்போது// - என் அம்மா பஹ்ரைன் வந்தபோது, பசங்க கிக்கீ பிக்கீ என்று இங்கிலீஷில் பேசிச் சிரித்துக்கொண்டிருந்ததை, தன்னைத்தான் ஏதோ சொல்லிச் சிரிக்கிறார்கள் என்று நினைத்து என்னிடம் பத்த வைத்துவிட்டார். நான் பெண்ணிடம் கோபப்பட்டு கடுப்படித்தேன் (அல்லது ஒரு அடி போட்டேனா என்று நினைவில்லை). இதுபோல மனைவியைப் பற்றியும் என்னிடம் பத்தவைத்துவிட்டார். பலவருடங்களுக்குப் பிறகு இதனை நினைக்கும்போது, பொய் என்ற அலங்காரத்துடன் பேசினால்தான் பலருக்கு சந்தோஷம் என்று தோன்றுகிறது. இன்னொருவர் இருக்கும்போது பேசவும், சிரிக்கவுமே யோசித்துத்தான் செய்யணும்.

      நீக்கு
    4. இதிலெல்லாம் நம்மவருக்குக் காதுகள் அப்போதெல்லாம் வேலை செய்யாது. என் மாமியார்/மாமனார் என்ன சொன்னாலும், என்ன கேலி செய்தாலும் (எங்க வீட்டில் நாங்க 3 பேரும் தான் laughing stock of the family ) கண்டுக்கவே மாட்டார். சின்ன முக மாற்றம் கூட இருக்காது. அப்படியே நான் புகார் கொடுத்தாலும் நீ மூத்த மருமகள்/ இதை எல்லாம் தாண்டித் தான் வரணும். ம்ம்ம்ம், சரி, சரி, போய் வேலை இருந்தா பார்!" என்று சொல்லிடுவார்.

      நீக்கு
    5. //அது என்ன பதிவு என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். //

      எனக்கும் மிகச்சரியாய் நினைவில்லை. பக்கத்து வீட்டு பெண் சம்பந்தப்பட்டது என்று நினைவு. ஒரு பெண்ணைப் பற்றிய வர்ணனை!

      நீக்கு
    6. நெல்லை.   எல்லா அம்மாக்களும் தான் ஒரு மாமியார் என்பதை நிரூபிக்கும் நேரங்கள் உண்டு என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன்!

      நீக்கு
  3. இப்போது என்னுடைய 'மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே' எனக்கே அபத்தமாக ஒலித்தது.//

    இந்த மாதிரி சூழலும் உண்டு. தர்மசங்கடமான நிலைகள்/சூழல்கள் என்று ஒரு சில குறிப்பிட்டு குறிப்புகளாக வைத்திருக்கிறேன். பதிவிற்கு.

    சமயங்களில் ஸ்பீக்கரில் போட்டு பேசும் வழக்கம் உடையவர் அவர். ஜாக்கிரதையாகவே பேசுவேன்.//

    நான் ரொம்ப ஜாக்கிரதை ஸ்ரீராம் இதில். ஒன்று நீங்கள் சொல்லியிருக்கும் காரணம் மற்றொன்று ...நான் கேட்டே விடுவேன், ஸ்பீக்கரா என்று. ஏனென்றால் ஸ்பீக்கரில் நான் போட்டாலும் சரி எதிரில் பேசுபவர் போட்டாலும் சரி அலல்து காணொளி அழைப்புகள் என் காதில் சரியாகக் கேட்காது அதுவும் இந்த மூன்றாவது காது படுத்தும். நான் ஏதாவது புரிந்து கொண்டு ஏதாவது பேசிவிட....எதற்கு வேண்டாத மன உளைச்சல்? எனவே கேட்டுவிட்டு சொல்லியும் விடுவேன். சாராரணமான அழைப்பில் பேசுவோம் என்று.

    ஆனால் நெருங்கிய உறவுகளுக்கு என்னை நன்றாகத் தெரியும் என்பதால் பிரச்சனைகள் ஏற்பட்டதில்லை. //சில சமயங்களில் சில சங்கடமான தருணங்கள்./// அதே அதே

    கீதா

    பதிலளிநீக்கு
  4. செயற்கைச் சர்க்கரையை எந்தச் சூழலிலும் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. அதுவும் சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் பயன்படுத்தாமல் இருப்பது ரொம்ப நல்லது. அது போல Diabetic friendly இனிப்புகள், பிஸ்கோத்துகள், கேக்குகள் என்று தயாரிக்கப்படுபவை நீங்கள் குற்ற உணர்வு இல்லாமல் இதைச் சாப்பிடலாம் என்றும் சொல்லி விற்கப்படுபவை எதுவுமே நல்லதில்லை. அவை சர்க்கரை அளவைக் கூட்டத்தான் செய்யும் என்பதோடு வேறு விளைவுகளையும் ஏற்படுத்தும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எப்போதும் உபயோகிக்கும் சர்க்கரையை (குறைவாக) உபயோகிக்கிறேன்!

      நீக்கு
  5. செயற்கை நுண்ணறிவு பல அறிவியல் பயன்பாடுகளுக்குப் பயன்படுகிறது என்றாலும் இங்கு செய்தியில் குறிப்பிட்ட போன்றவை நல்ல கண்டுபிடிப்புகள்/உருவாக்கங்கள் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. செயற்கை நுண்ணறிவினால் எத்தனையோ ஆக்கபூர்வமான விஷயங்கள் இருக்கும் போது இப்படியான கண்டுபிடிப்புகளை இயற்கைக்கு முரணாக, எதிரியாகவே பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் இது காணொளியாகவே சில மாதங்களுக்கு முன் வந்ததது.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    உண்மைதான். இந்த மாதியான இக்கட்டான நிலைமைகள் சில சமயம் வாய்த்து விடுகிறது. வேறு ஏதாவது சொல்லி, பேச்சை திசை திருப்பினாலும் கஸ்டம். அவ்வளவு நேரம் வெளியில் சென்றவரை பற்றித்தான் நாம் பேசியிருக்கிறோமோ என்ற எண்ணம் அவருக்கு வந்து விடும். இந்த மாதிரி தர்மசங்கடமான நிலைகள் எனக்கும் வீட்டில் உருவாகியுள்ளது. /உருவாகிறது. இத்தனைக்கும் "பகலில் பக்கம் பார்த்து பேசு. இரவில் அதுவும் பேசாதே.. என்ற பழமொழியை அடிக்கடி நான் சொல்வேன்.

    இரண்டாவதில் உங்கள் தவறு எதுவுமில்லை. அவர் இருக்குமிடம் தெரரியாமல்தானே நீங்கள் வாழ்த்து சொல்லியிருக்கிறீர்கள். அவர் புரிந்து கொண்டிருப்பார் என்றே நம்புவோம்.

    கவிதை நன்றாக உள்ளது. அதுதான் அதனை நன்றி, விசுவாசத்துடன் ஒப்பிடுகிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் சந்தர்ப்பம் உண்மையிலேயே தர்மசங்கடமானது.  இரண்டாவது சம்பந்தப் பட்டிருப்பவர் தவறாகவே நினைத்துக் கொள்ள மாட்டார்.  அவருக்கும் அது அவர் பிறந்த நாள் என்பதும், நான் எப்போதும் வாழ்த்து சொல்பவன் என்பதும் தெரியும்.  நம் மனதில் படியும் அந்த அசந்தர்ப்பமான அசட்டுச் சூழ்நிலைதான் சங்கடம்!  நன்றி கமலா அக்கா..

      நீக்கு
  7. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. காமராஜரின் தங்கை குடும்பத்தைப் பற்றிய செய்திகள் ஏற்கனவே அறிந்தவை தான்..

    உத்தமத் தலைவர்களுக்கு நமது மக்களும் நாடும் அளிக்கின்ற மாபெரும் சிறப்பு அறிந்தவை தானே!..

    உலகெங்கிலுமே அரசியல் வியாதிகளுக்கு மக்கள் அச்சப்பட்டு வாழ்கின்ற காலம் இது..

    அதனால் எதுவும் செய்யவோ சொல்லவோ முடியாது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரும் வரும் மறுபடி அந்தக்காலம் என்று நம்புகிறோம்.  வரவே வராது என்று முகத்திலறைந்து சொல்கின்றன நிகழ்வுகள்.

      நீக்கு
    2. நாகம்மாள் பற்றிய செய்திகளை முன்னரே நீங்களும் பகிர்ந்த நினைவு. நானும் நேரில் பார்த்து உதவி செய்திருக்கேன்.

      நீக்கு
    3. // நானும் நேரில் பார்த்து உதவி செய்திருக்கேன்.//

      ஆ....

      நீக்கு
  9. செயற்கை நுண்ணறிவு உடைய பொம்மைகளுக்கு முன்பாகவே இது போன்ற பல்நோக்குப் ப்துமைகள் மேற்கத்திய கடைத் தெருவுக்கு வந்து விட்டன.. நல்ல ஒழுக்கம் கலாச்சாரம் என்று எதுவும் அங்கு இல்லாததால் அந்தப் பொம்மைகளுக்கு நல்ல வரவேற்பு..

    இப்போது இங்கும் நிலைமை சீர்கெட்டுக் கொண்டிருப்பதால் கூடிய விரைவில் நமது சந்தைப் பேட்டைகளில் கிடைக்கக் கூடும்..

    ரெண்டு லட்சத்தில் இருந்து கிடைக்கின்றதாமே!..

    சுவிக்கி சாப்பாடு கிடைக்கும் காலத்தில் இதெல்லாம் நல்ல
    வசதி தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். இந்தியாவில் இரண்டு லட்சத்திலிருந்து என்று நானும் ஒரு காணொளியில் பார்த்த நினைவு.

      நீக்கு
    2. writer Sujatha mentioned about this once in his story, novel? I think.

      நீக்கு
  10. இன்றைய கவிதை நெஞ்சை உருக்குகின்றது..

    பதிலளிநீக்கு
  11. பாராமல்
    ஏன் சென்றாய்?//

    இதென்ன கேள்வி? அதான் உனக்காக சுவடை விட்டுட்டுப்போயிருக்கேன்ல! - என்று கேட்பவன் மனிதன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாட்டிக்கொண்டதையும் மனிதத்தனமாக சொல்கிறானா?!

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இன்றைய தலைப்பு நன்றாக உள்ளது. இது ஒரு பழைய பாடலை (சிவாஜி படம் என நினைக்கிறேன்.) நினைவுபடுத்தியதால் ஒரு வெள்ளி பாடலில் இதை முடிந்தால் பதியுங்கள். ஏற்கனவே பகிர்ந்து விட்டீர்களோ என்னவோ? நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருநாள்..   இனி ஒரு நாள்...

      பகிர்ந்து விடுவோம்!

      நீக்கு
    2. பகிர்வதற்கு நன்றி சகோதரரே. அந்த படத்தின் பெயர் "பலே பாண்டியா" என்பது அப்போது நினைவுக்கு வரவில்லை. ஒரு பாடலை சொன்னவுடன் திரைப் படங்களை சட்டென நினைவில் கொண்டு வரும் "பலே" க்ரூப்பில் நான் இல்லை.:))

      நீக்கு
    3. ஒரு நாள் இனி ஒரு நாள்

      இந்த வரியை வைத்து அன்புக்கோர் அண்ணி பாடலை நினைவு கூர்வீர்கள் என்று நினைத்தேன்!

      நீக்கு
  13. செநு.. அதாவது AI - இவனுக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும் !

    பதிலளிநீக்கு
  14. தென்மேற்கு பருவமழை நான்கு நாட்கள் தாமதமாக ஜூன் 4ம் தேதி துவங்குமாம்.//

    இப்ப நான்கு ஐந்து நாட்களுக்கு வெப்ப நிலை ரொம்பவே கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதே. அப்படி என்றால் மழை சீக்கிரம் வர வேண்டுமே...என்னவோ போங்க..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முந்தா நாள் சென்னையில் 113 டிகிரி... அலுவலகம் செல்லும் வழியில், அலுவலகத்தில், திரும்பும் வழியில் எல்லாம் கொடுமையோ கொடுமை. மழைக்கான அறிகுறியே காணோம்.  இதோ..  இப்போதும் கிளம்பி கொண்டிருக்கிறேன்.  வேர்வை வெள்ளம்.

      நீக்கு
    2. அக்னி நட்சத்திர இறுதியில் மழை பெய்யும். மழை வந்தாலும் "என்ன மழையோ ஓயாமல் " எனச் சொல்வோம். எதுவுமே அளவுக்கு அதிகமானால் நம்மால் தாக்குப் பிடிக்க இயலாது. அதுதான் உண்மை.

      நீக்கு
    3. வணக்கம் சகோதரரே

      இன்றைய மற்ற பகுதிகளும் நன்றாக உள்ளது.

      காமராஜரின் குடும்பம் பட்ட வேதனைகள் படிக்கையில் மனதுக்கு கஸ்டமாக இருந்தது. ஆனால், இறைவன் ஏதாவது ஓர் வழியில் உதவி செய்து விட்டான்.

      நீயூஸ் ரூம் பகுதிகளில் பல செய்திகளை தெரிந்து கொண்டேன். பகிர்ந்த சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுககு நன்றி.

      எபியிலும் இப்போது தொடர்ந்து வந்து கொண்டிருந்த செய்தி அறை பகுதிகளை காணவில்லையே?

      மனிதம் விழித்துக் கொண்டாலும், அந்த படங்கள் கலவரமூட்டுகின்றன.

      நகைச்சுவை பொக்கிஷ பகிர்வுகள் அனைத்தும் அருமை. எல்லாம் முதல் பகுதியை ஒட்டி பேச்சைப் பற்றி தேர்ந்தெடுத்த விதம் நன்றாக உள்ளது.

      மாயா அவர்களின் ஓவியம் அழகாக உள்ளது.

      இந்த வார நல்லதொரு கதம்ப பதிவுக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. //சென்னையில் 113 டிகிரி... அலுவலகம் செல்லும் வழியில், அலுவலகத்தில், திரும்பும் வழியில் எல்லாம் கொடுமையோ கொடுமை// - செங்கல் சூளை போன்ற சென்னை வெயிலுக்கே இப்படி அலுத்துக்கறீங்களே... குளிரா இருக்கும் பெங்களூரில் கடந்த இரண்டு மாதங்களாக, காலை 8 மணி தாண்டினால் வெயில் ஆரம்பித்துவிடுகிறது (இடை இடையே மழை குளிர் தவிர). இரவு ஏசி போட்டுக்கறேன் நான், அப்போ அப்போ. நாங்க எவ்வளவு அலுத்துக்கணும்?

      நீக்கு
    5. காணாமல் போன நியூஸ் ரூமைப் பற்றி நீங்கள் மட்டுமே கேட்டிருக்கிறீர்கள் கமலா அக்கா.

      நீக்கு
    6. இன்று காலை தொடக்கமே 30 டிகிரி..  போகப்போக கொளுத்தத் தொடங்கி விட்டது.  ஒரு லிட்டர் மோர், இரண்டு லிட்டர் தண்ணீர், ஒரு இளநீர், மறுபடி மாலை ஒரு ஒன்றரை லிட்டர் மோர்...   இன்றைய தினம் இப்படிப் போனது.  சாப்பிடவே பிடிப்பதில்லை தெரியுமா...

      நீக்கு
  15. காமரஜர் மருமகள் பற்றிய விஷயம் - இப்போது அவர் இல்லை என்று தெரிகிறது. இருந்தாங்க என்று சொல்லியிருப்பதால் - எப்படியான ஒரு தலைவர் தன் நலம் பார்க்காத ஒருவர் இருந்திருக்கிறார் என்றும்...இப்போதையவர்களையும் நினைக்க வைத்தது. ஏழேழு தலைமுறைக்கும் சேர்த்திருக்காங்களே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா என்று பாடவும்!

      நீக்கு
  16. @ கமலா ஹரிஹரன்..

    // அக்னி நட்சத்திர இறுதியில் மழை பெய்யும்.//

    பல்துணைக் கலாசாரம் (நவீன கணிகம்), சகல வசதிகளுடன் கூடிய செயற்கை நுண்ணறிவுப் பதுமை (நவீன வணிகம்)
    என்று பாழாய்ப் போய்க் கொண்டிருக்கும் ஊரில் வெயிலாவது மழையாவது!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவியாகிவிடாமல், தெர்மோகோல் போட்டு தண்ணீரை மூடியவர்கள், அவர்களை வென்ற பெருமிதத்துடன் ஆளும் மனிதர்கள் உள்ள நாட்டில்.. சூரியனை ஏதாவது பெரிய கருப்புப் படுதாவினால் மூடிவிட்டு, ஊருக்கு, நாட்டுக்குக் குளிரூட்டும் முயற்சிகள் நடக்கலாமோ என்னவோ..

      நீக்கு
    2. முயற்சி பண்ணி பாத்திருப்பாங்க. போர்வை பத்தலேனு விட்டிருப்பாங்க.

      நீக்கு
  17. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    /பல்துணைக் கலாசாரம் (நவீன கணிகம்), சகல வசதிகளுடன் கூடிய செயற்கை நுண்ணறிவுப் பதுமை (நவீன வணிகம்)
    என்று பாழாய்ப் போய்க் கொண்டிருக்கும் ஊரில் வெயிலாவது மழையாவது!../

    உண்மை....ஆனால் "நல்லார் ஒருவர் உளரெனில்" என்ற வாக்குப்படி மழை அந்த ஒருவருக்காக தன் வாக்கை காப்பாற்றும் என்ற நம்பிக்கைதான். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. //செயற்கை நுண்ணறிவு (artificial inteigence)  virtual giral friend..
    அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம், செல்ஃபீ எடுத்துக் கொள்ளலாம்.//

    இதென்ன பிரமாதம்?..

    சில வருடங்களுக்கு முன்பு தஞ்சை கலைக்கூடத்தில் கற்சிலைகளைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டபடி எடுக்கப்பட்ட செல்ப்பீக்களை சமூக வெளியில் பகிர்ந்து மாட்டிக் கொண்டான் ஒரு நாதாரி..

    அவன் மர்மநபர் என்பதால் மேல் விவரங்கள் வெளி வரவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆளுங்கட்சியில் அவசரமாக சேர்க்கப்பட்டிருப்பான். அடுத்ததாக இந்து அறநிலயத் துறை அமைச்சர் பதவியை ஏற்பதற்கு ஆளை உருவாக்கவேண்டாமா..

      நீக்கு
  19. கையில் பத்துலட்டசம் கொடுத்தால் யாரேனும் பிடிங்கிக்கொள்ளலாம் என நினைத்து பேங்கில் பதினொரு லட்சம் போட்டு அந்தக் குடும்பத்தில் பால் வார்த்திருக்கிறார் ஜெ.

    தள்ளுவண்டி தள்ளினவனுக்கு ஹைகிளாஸ் அரசுக் குடியிருப்பு கோடிக்கணக்கில், அப்புறம் சென்னையில் ஒரு தொகுதியில் அவனே வேட்பாளரை ரெக்கமன்ட் செய்யலாம் (அதன் மூலம் அவனுக்கு பத்து லட்சம் கிடைக்கும்) என்ற சலுகை.. இப்படி ஒரு முதல்வர்.

    கள்ளச் சாராயம் காய்ச்சியவனுக்கு 50,000 , அதில் செத்தவனுக்கு பத்து லட்சம்... இப்படி ஒரு முதல்வர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உருப்படாத அரசாங்கம்..   பேசியே இன்னும் எத்தனை காலம் ஏமாற்றுவாரோ...

      நீக்கு
  20. இன்று அதிகாலையிலிருந்து ரொம்ப பிசி. சமையல் இப்போ முடிந்தது. மத்தவங்க சாப்பிட்டாயிற்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமைத்தவர்கள் தாங்கள் சமைத்ததை தானே சாப்பிட ஆவல் பிறப்பதில்லை இல்லை?

      நீக்கு
    2. இப்போதான் வீட்டில் அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். என்னவோ தெரியவில்லை, நான் செய்து நான் சாப்பிடப் பிடிப்பதில்லை. இன்னொன்று நான் சுடச் சுட சாப்பிடும் ரகம். எப்படி நானே தோசை வார்த்து, நானே தட்டில் சாப்பிட்டு அடுத்த தோசை வார்க்கிறது? எச்சில் தட்டு கிச்சனுக்கு ஆகாது. எப்படா கிச்சன் வேலை முடியும்னு தோணுது.

      நீக்கு
    3. தோசை எத்தனை வேணுமோ அதை மொத்தமாக வார்த்துக்கொண்டு கடைசி தோசை வார்த்து முடித்ததும் எல்லாவற்றையும் பாதியாக மடக்கி தோசைக்கல்லில் ஒவ்வொன்றாக முக்கோண வடிவில் போட்டு வைத்துவிட்டு அடுப்பை அணைச்சுடுங்க. 2,3 நிமிடங்களில் எல்லா தோசைகளும் சூடாகக் கிடைக்கும். சாப்பிடும் தட்டில் எடுத்துப் போட்டுக்கொண்டு சூடு ஆறும் முன்னர் சாப்பிட்டுடலாம். நான் அப்படித்தான் செய்வேன். ஆனால் டிஃபன் சாப்பிடத் தனித்தட்டு. சாப்பாட்டுக்குத் தனித்தட்டு. . மேலும் இப்போது திருச்சி வந்தப்புறமாப் பனிரண்டு வருடங்களாக வாழை இலையில் தான் சாப்பாடு. நம்மவர் ராத்திரி கூட வாழை இலை போட்டுப்பார். நான் தனியாக இருக்கும் டிஃபன் தட்டில் எடுத்துப்பேன்.

      நீக்கு
    4. அடடே...  இது நல்ல ஐடியாவா இருக்கு.  ஆனால் தோசை எல்லாம் கம்பு கம்பா ஆகி விடாதோ...
      எனக்கும் கூட தொடர்ந்து வாழை இலையில் சாப்பிடும் ஆசை சில நாட்களாக வந்திருக்கிறது!

      நீக்கு
    5. அத்தனை நாழியா போட்டு வைப்பீங்க. அடுப்பை அணைச்சதுமே எடுத்துடலாம். நல்ல சூடாக ஆகிடும். ஓரமெல்லாம் மட்டும் முறுகலாக, நடுவில் மிருதுவாக, நேற்றுக் கூட அப்படித்தான் சாப்பிட்டேன். தோசை மிளகாய்ப்பொடி துணையுடன்.

      நீக்கு
    6. இப்போல்லாம் ஓட்டல்களில் தோசை கேட்டால் பொடிப்பொடியாக உதிருகிறாப்போல் கொண்டு வைக்கின்றனர். தோசையைத் தொட்டாலே உதிர்ந்து விடுகிறது. முறுகல் தோசையாம்! கண்ணராவி! ஆனியன் ஊத்தப்பம் எனில் அதை விட மோசம். மேலே ஏதோ பொடி தூவித் தான் தராங்க. வேண்டாம்னாலும் விடறதில்லை. பேசாமல் கான்சல் பண்ணிடுவேன். :(

      நீக்கு
    7. ஆமாம்.  இப்போதெல்லாம் ஹோட்டல்கள் தோசையின் தரத்தைத் தாழ்த்துகின்றன!  ஊத்தப்பம் ஸைஸைக் குறைத்து அதன் மீது சேர்ப்பதில் கன்னா  பின்னா என்று ஏற்றுகிறார்கள்!

      நீக்கு
  21. கட்டபொம்மன் ப்ற்றிய இந்தக் குறிப்பை தமிழ்வாணன் அவர்கள் எழுதிய கோப்பில் வாசித்த நினைவு. அது கட்ட பொம்மனின் மறுபக்கத்தைச் சொல்லியது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான்.  அந்தப் புத்தகம்தான்.  இணையத்தில் கிடைக்கிறது.

      நீக்கு
  22. போர்க்காட்சிகள் மனதைக் கலக்கும். போர் என்றாலே அச்சம் தான். எதுக்குச் சண்டை போட வேண்டுமோ?!! பேராசை.

    கீதா

    பதிலளிநீக்கு
  23. குழந்தையின் பார்வை மனதைத் துளைக்கிறது. இப்படியான போர்க்காட்சிகள்..மனதை என்னவோ செய்துவிடும்.

    போர் வேண்டாம் வேண்டாம் என்று அலற வேண்டும் சமீபத்திய ரஷ்யா உக்ரைன் போர் கூட எதற்காக இப்படி?

    கீதா

    பதிலளிநீக்கு
  24. செல்லத்தின் படம் மட்டும் போட்டிருந்தால் அது வேறு அர்த்தம் கொடுத்திருக்கும் இப்போது உங்கள் கவிதை மனதைக் கலக்கிவிட்டது, ஸ்ரீராம். கவிதையோடு பார்க்கும் போது படத்தின் அர்த்தமே மாறுகிறது. இப்படித்தான் நாம் பார்க்கும் கோணங்களில் ஒவ்வொன்றின் அர்த்தமும் மாறுகிறது இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு

  25. @ கமலாஹரிஹரன்

    // ஆனால் "நல்லார் ஒருவர் உளரெனில்" என்ற வாக்குப்படி மழை அந்த ஒருவருக்காக தன் வாக்கை காப்பாற்றும் என்ற நம்பிக்கைதான். நன்றி.. //

    நல்லாருக்காக மழை.. கெட்டாருக்காக வெயில்..

    நேற்று பதிவில் சொல்லியிருந்த மாதிரி இங்கேயும் நிம்மதி இல்லை.. அங்கேயும் நிம்மதி இல்லை..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  26. பொக்கிஷ ஜோக்குகள் எல்லாமே ரசித்தேன் ஸ்ரீராம். மாயா ஓவியம் அழகு. ஏதோ காதல் கதை அலல்து தொடர்கதையில் வரும் காதல் பகுதியோ?! அந்தக் காலத்துல கிணற்றடிக்காதல்/ஆற்றங்கரை காதல்...என்ன ஒரு அழகு இல்லையா....நடுவில் பீச், பூங்கா, பேருந்து, காதல், - இது கூட ஒரு அழகுதான்...உண்மையாக இருந்தால்

    இப்ப எல்லாம் காஃபி டே, பிஸா, தியேட்டர் பாய் ஃப்ரென்ட், கேர்ல் ஃப்ரென்ட்....பொதுவிலேயே...நோ வெக்கம்.....அடுத்த லெவலாக நான்கு சுவற்றுக்குள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அந்தக் கால காதல்!  சுவாரஸ்யம்தான்.

      நீக்கு
    2. நேற்று முகநூலில் நண்பர் ஒருவர் பகிர்ந்த வீடியோவில் கணவன், ம்னைவி எனத் தோன்றும் இருவர் கழுத்தில் மாலையுடன் நிற்கக்கணவன் சிகரெட்டோ, கஞ்சா பீடியோ எதுவோ புகைத்து உள்ளிழுத்துக் கொண்டு பின்னர் மனைவியிடம் நெருங்கி அவள் வாய் வழியாக முத்தம் கொடுப்பது போல் அந்தப் புகையைச் செலுத்தப் பின் இருவருமாகச் சேர்ந்து புகையை வெளியிட்டு மகிழ்கின்றனர். தமிழ்நாட்டில் தான் இந்த அவலம்.அரசு ஆதரவில் எல்லாமும் கிடைப்பதால் இப்படி எல்லாம் நடந்துக்கறாங்க போலும்.

      நீக்கு
  27. உங்களுடைய பலமும் பலவீனமும் வாயும் கையும் தான். வாய் ஓயாமல் வக்கணையாகப் பேசவும் எந்த தலைப்பிலும் தங்கு தடையின்றி எழுதவும் தெரியும். ஆனால் இதே சில சமயங்களில் இக்கட்டான முட்டுச் சந்தில் கொண்டு நிறுத்தும் போது .....!

    கமலா ஹரிஹரன் மேடம் கூறியபடி "பகலில் பக்கம் பார்த்து பேசு. இரவில் அதுவும் பேசாதே.." மற்றும் எழுதுவதை மூன்றாம் மனிதர் பார்வையில் ஒன்றுக்கு இரு தடவை திருத்தி வெளியிடுதல் பல அசடு வழிதல்களைத் தவிர்க்க முடியும்.

    உடல் உழைப்பு குறைய குறைய சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற பல வாழும் முறை வியாதிகள் பெருகுகின்றன. இன்றைய இயந்திர வாழ்க்கையில் இயந்திரங்கள் நம்முடைய வாழ்நாளைத் தீர்மானிக்கின்றன. இதுவரை உழைப்பில் மட்டும் உதவிய இயந்திரங்கள் தற்போது AI என்று மாறி சிந்திக்கும் திறனையும் மழுங்கடிக்க முயல்கின்றன. 60 களில் 2001 space odyssey என்று ஒரு படம் வெளிவந்தது, நினைவிருக்கிறதா? அதில் நிகழும் நிகழ்வுகள் உண்மையாகிவிடுமோ என்று தோன்றுகிறது.

    கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டிக்கொண்டிருந்தவர் தான். கப்பம் அதிகமானதாலும் அதைப்பற்றி பேச ஆங்கிலேயர் முன் வராது அவமானப் படுத்தியதாலும் தான் அவர்களை எதிர்க்கத் தூண்டியது. எதிரிக்கு எதிரியை நண்பனாக்கு என்ற முறையில் பிரெஞ்சுகாரர்களை அணுகியிருக்கலாம். சரி பாண்டி கடற்கரையில் காந்தி சிலை இருந்த இடத்தில் டூப்ளெ சிலை இருந்தது தெரியுமா?

    அனாதை தெருநாய்க்கு யார் எஜமான்? எல்லோரும் தான். கல்லால் அடிப்பவரும் கூட.

    சிகரட் ஜோக் என்னுடை வைராக்யத்தையும் நினைவூட்டியது. முயன்று முயன்று தோற்ற கதைகளும் கடைசியாக விட்டதும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC ஸார்..  காணோமே என்று பார்த்தேன்.  

      இது மாதிரி நிலைமைகள் தவிர்க்க முடியாதவை!  இதோ இன்று கூட ஏதோ சொல்லப்போக வேறு ஏதோ அர்த்தமாகி ஆனால் இன்று அதைச் சமாளித்து ஜோக்காக மாற்றி நிலைமையைச் சமாளித்து விட்டேன்.

      space odyssey படம் நான் பார்த்ததில்லை.  ஆனால் AI இயந்திரங்கள் சீக்கிரம் உலகாளுமோ என்ற எண்ணம் எனக்கும் வந்தது!


      டூப்ளெ சிலை இருந்ததோ இல்லையோ, கெட்டபொம்மு பற்றி சொல்லபப்டுவதெல்லாம் கதை என்பதை தமிழ்வாணன் ஆதாரபூர்வமாக அன்றே நிரூபித்திருக்கிறார்.

      அந்த நாயை அனாதையாக்கியவனே அவன்தானே!

      நீக்கு
  28. //செயற்கை முறையில் இல்லாமல், இயற்கையாக பழுக்க வைக்கப் பட்ட// - இதுதான் சாக்கு என்று மிக மிக அதிகமாக காசு வாங்கறாங்க. 6 பழம், 2000-2500 ரூபாய். (4 கிலோ?)... மார்க்கெட்ல கிடைக்கும் பல பழங்கள் நியாயமா பழுத்ததா இல்லை கெமிக்கலா என்று கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கிறது அதனால் ரொம்ப ஜாக்கிரதையாப் பார்த்து வாங்குகிறேன். அப்படியும் ஏமாறுகிறேன். (என்னப்பா. வாங்கிவந்த பங்கனப்பள்ளி இனிப்பு இல்லாம வாட்டர் மெலன் மாதிரி இருக்கு என்கிறாள் மகள்). ஒரு வாரம் முன்பு கிலோ 100 ரூபாய்க்கு கேசரி மாம்பழம் வாங்கினேன். ரொம்ப நல்லா இருந்தது. இப்போல்லாம் 8-8 1/2க்குள் 10,000 ஸ்டெப்ஸ் முடித்துவிடுவதால், பிறகு வெயிலில் நடக்க கஷ்டமா இருக்கு. 12 மணிக்கெல்லாம் மார்க்கெட் போனால் நல்ல மாம்பழம் வாங்க நிறைய வாய்ப்பு உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  எனக்கும் இவை எல்லாமே ஏமாற்று என்று தோன்றும்.  எது அசல், எது போலி என்பதில் அவர்கள் மக்களைக் குழப்புகிறார்கள்!

      நீக்கு
  29. //"பகலில் பக்கம் பார்த்து பேசு. இரவில் அதுவும் பேசாதே.."// கோல்கொண்டா கோட்டையில், அரசரின் அறையைச் சுற்றியும் போடப்பட்டுள்ள சுவர் கொஞ்சம் ஸ்பெஷல். பக்கத்து அறை, மேலே உள்ள அறையில் உள்ளவர் என்ன பேசினாலும் கேட்டுவிடும். இந்த அறைல பேசினா எதுவும் கேட்காது. எப்படீல்லாம் உளவு பார்த்திருக்காங்க.

    பதிலளிநீக்கு
  30. செயற்கை சர்க்கரை போன்றதுதான் செயற்கை நுண்ணறிவும். காலத்துக்கும் உங்களை - அதாவது உங்களின் உடம்பை, மனதை- ‘பிஸி’யாக வைத்திருக்கும்!

    பதிலளிநீக்கு
  31. வீரபாண்டிய கட்டபொம்மனை உயர்த்திப் பிடித்ததில், தெலுங்கு பேசும் அரசியல்வாதிகளுக்கு உட்காரணம் இருந்திருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம பொ சி தான் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று இருந்தார்.  அவர் சொன்னதை அவர் திரும்பப் பெறுவதில் ஈகோ இருந்திருக்கும்!

      நீக்கு
  32. @ நெல்லை

    ஒட்டு ரகத்தில் செங்காய்களாக வாங்கிக் கொண்டு வந்து அரிசிக்குள் பொதிந்து வைத்தால் நல்ல வாசத்துடன் ஒட்டு மாம்பழம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜு சார்.... என்ன..அந்தக் காலம்போல மூட்டை அரிசி வீட்டில் ஒவ்வொருவரும் வைத்திருப்பார்கள் என்று நினைத்தீர்களா? இப்போல்லாம் 2-3 கிலோவுக்கு மேல் ஸ்டாக் இல்லை. இதுல மாங்காயை வாங்கி எங்க உள்ள வைப்பது?

      சென்னை அப்பா வீட்டில், மல்கோவா, பங்கனபள்ளி, ருமானி, நீலன் போன்ற மரங்கள் இருந்தன. இவற்றை அரிசி மூட்டைக்குள் வைத்து பழுத்தவுடன் சாப்பிடுவோம்..அவ்வளவு ருசி. அங்க ஒரு பலாமரம் இருந்தது. பலாச்சுளை மிகச் சிறியது. சுவையும் சொல்லிமாளாது.

      நீக்கு
    2. எங்க வீட்டில் பத்து கிலோ/பதினைந்து கிலோ மூட்டை அரிசி தான் வாங்கறோம். களஞ்சேரியில் இருந்து வருது. முன்னரே இதன் விபரம் பகிர்ந்திருக்கேன்.

      நீக்கு
    3. களஞ்சேரி... மறந்தே போன கிராமம்! ஒன்றிரண்டு நினைவுகள் லேசாகத் தட்டுகின்றன. ஒரு கதை எழுதிட வேண்டியது தான்.

      நீக்கு
    4. அங்கே உள்ள நிலத்தின் அரிசி தான் வந்து கொண்டிருக்கு. இயற்கை உரங்களால் பயிரிட்டு வளர்த்த நெற்பயிர் என்கின்றார் ஸ்ரீ சீதாராம சாஸ்திரிகள்.

      நீக்கு
    5. எங்கள் வீட்டில் 25 கிலோ அரிசி வாங்குகிறோம். பாஸுக்கு பிடித்த பழம் ஒட்டு மாம்பழம்.

      நீக்கு
    6. ஒட்டு மாம்பழம்னா கிளிமூக்கு மாம்பழத்தையா சொல்றீங்க? அது மாம்பழத்திலேயே சேர்த்தி கிடையாதே

      நீக்கு
  33. ஒட்டு மாம்பழம்
    உதட்டில்
    ஒட்டுமாம் பழம்!..

    ஒட்டு மாம்பழம்
    சுவையில்
    சொர்க்கமாம் பழம்!..

    பதிலளிநீக்கு
  34. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  35. மாயா ஓவியத்தைப் பகிர்ந்ததற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  36. கட்டபொம்மன் "கெட்ட பொம்மன்" என்பதை நான் பல முறை சொல்லி இருக்கேன். ஆரம்ப காலங்களில் பதிவும் போட்டேன். பின்னர் எட்டயபுரத்தில் எங்கள் அருமைச் சிநேகிதி எட்டப்பன் குடும்பத்தினரைப் பேட்டி கண்டு எழுதியதையும் பதிவாக்கினேன். எல்லாம் தேடணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seethalakshmi Subramaniam amma. donot know wthether she is existing or not. :(

      நீக்கு
    2. படித்த நினைவு.
      கட்டபொம்மனைத் தூக்கிப் பிடித்திருப்பதற்கு இன்னொரு காரணம் உண்டு என்று ராஜாஜி கூட கட்டபொம்மனைப் பற்றி எதையோ சொல்லி மபொசியோ அண்ணாவோ அவரைத் திட்டியது பற்றி என் வீட்டில் பேசிக்கொள்வார்கள்.

      நீக்கு
    3. அந்தப் புத்தகத்தின் லிங்க் க்ரூப்பில் நான் அனுப்பி இருந்தேனே..  அதைப் படித்திருக்கலாம்.  படித்தால் புரியும்.

      நீக்கு
  37. என்னைப் பொறுத்தவரை இந்த தர்மசங்கடம் வேறே ரூபத்தில் வரும். என்னைக்கானும் எண்ணெய் பக்ஷணம் பண்ணும்போது 3-00PM 3- 30 PMக்குள் தான் பண்ணும்படியா இருக்கும். அந்த நேரம் வீட்டு வேலைகளில் உதவும் பெண் வரும் நேரம். எங்க வீட்டு அமைப்பின்படி சமையலறை வழியாத்தான் பாத்திரம் தேய்க்கும் இடத்துக்குப் போகணும். நான் பக்ஷணம் பண்ணிண்டு அவருக்குச் சாப்பிடக் கொடுக்கையில் கஷ்டமாக இருக்கும். மனசு பொறுக்காமல் அந்தப் பெண்ணிற்கும் கொஞ்சம் கொடுப்பேன். ஆனால் நம்மவருக்கோச் சிரிப்பாக வரும். நான் அந்தப் பெண்ணைப் பார்த்துப் பயப்படுகிறேன் என்பார். கண்டுக்கறதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டிலும் இந்த நிலை உண்டு.  பாஸும் சங்கடப்படுவார்.

      நீக்கு
  38. அதே போல் அந்தப் பெண் லீவ் எடுத்தால் சம்பளம் கட் பண்ணணும் என்பார்.நான் அதுக்கும் ஒத்துக்க மாட்டேன். எத்தனை நாள் வரலையோ அத்தனை நாள் சம்பளம் கட் பண்ணு எனக் கோபமாகச் சொல்லுவார். அதையும் க்ண்டுக்க மாட்டேன். இது சரியா, தப்பா தெரியாது. கோவிட் பரவ ஆரம்பித்த 2020 ஆம் ஆண்டில் ஒரு நாள் கூட வராமல் முழுச் சம்பளம் 2,3 மாசம் கொடுத்தோம். ஆகவே இது பரவாயில்லை என்பது என் கருத்து. மற்றபடி எப்போதுமே நான் எதையானும் அசட்டுப் பிசட்டென்று சொல்லிட்டு மாட்டிண்டு முழிக்கும் ரகம் என்பதால் தனியாக வருத்தப்பட எதுவும் இல்லை. :)))))) நல்லது நினைத்துச் சொல்லி அது நேர்மாறாகப் புரிந்து கொண்ட சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டிலும் இந்நிலை உண்டு.  மாதத்தில் மூன்று நாட்கள் அந்தப் பெண்ணை வர வேண்டாம் என்று சொல்லி விடுவார் பாஸ்.  அதைத்தவிர அவராக எப்போதாவது லீவு எடுப்பார்.  சம்பளம் எல்லாம் கட் செய்வதில்லை!

      நீக்கு
  39. செல்லத்தின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட கவிதை நன்று. செய்திகள் படித்தாலும் மீண்டும் படித்துக் கொண்டேன். மாயா ஓவியம் அபாரம். சிகரெட்டை நிறுத்தாதவர்களைக் கண்டால் என் நாத்தனார் கணவர்/பெரிய நாத்தனார் பெண்ணின் கணவர் நினைவில் வருகின்றனர். ஒருத்தர் 52 வயசுக்கெல்லாம் போய்ச் சேர்ந்துட்டார். இன்னொருத்தர் கடவுள் அருளால் ஒவ்வொரு கண்டத்திலும் பிழைத்து வருகிறார்.

    பதிலளிநீக்கு
  40. பிஞ்சுக் குழந்தைகள்! பிழைத்திருக்குமா? கல் மனது! :(

    பதிலளிநீக்கு
  41. //காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்தான் அதிகமாக விவாகரத்து செய்கிறார்கள் - சுப்ரீம் கோர்ட் நீதிபதி கவாய் அறிவிப்பு.
    முக்கியமான ஆராய்ச்சி.

    பதிலளிநீக்கு
  42. இதே போன்ற அனுபவம் உண்டு... இப்போதெல்லாம் "பேசலாமா" என்று கேட்டு விடுவது உண்டு...

    பதிலளிநீக்கு
  43. @ ஏகாந்தன்..

    //அடுத்ததாக இந்து அறநிலயத் துறை அமைச்சர் பதவியை ஏற்பதற்கு//

    அவன் மர்மநபர்..
    இந்து அறநிலயத் துறை அமைச்சர் பதவிக்கு பொருத்தமானவன் தான்..

    இதற்குக் கூட உரிமை இல்லையா இந்த நாட்டில்?..

    பதிலளிநீக்கு
  44. பதிவின் தலைப்பும், சொன்ன செய்திகளும் எல்லோர் வாழ்விலும் நடந்து இருக்கும். மிகவும் கவனமாக கையாளவேண்டிய விஷயம் தான்.
    என்ன செய்வது சில நேரம் இப்படி ஆகி விடுவது உண்டு. மற்றவர்கள் முக குறிப்பு அறிந்து வார்த்தைகளை தவறாக புரிந்து கொண்டார்கள் என்பது தெரியவரும்.

    பொதுவெளியில் நண்பர்கள் கூடி இருக்கும் இடத்தில் இரண்டு பேர் தங்கள் மொழியில் பேசிக் கொள்வதும் தவறு. அவர்கள் நல்லதாக பேசினாலும் தவறாக எடுத்து கொள்ள வாய்ப்பு உண்டு.

    நண்பர்கள் கூடி இருக்கும் இடத்தில் எல்லோருக்கும் தெரிந்த மொழியில் பேசுவது நல்லது.

    பதிலளிநீக்கு
  45. பானுமதி வெங்கடேஸ்வரன் நியூஸ் ரூம் பகிர்வு படித்தேன்.
    //கரீன் என்னும் 23 வயதாகும் பெண் செயற்கை நுண்ணறிவை(artificial intelligence) பயன்படுத்தி virtual girl friend ஐ உருவாக்கியிருக்கிறார்.//
    இது தேவை இல்லை என்றாலும் பெண்களுக்கு நல்லது என்று கண்டு பிடித்து இருப்பார் போலும்.

    உங்கள் கவிதை செல்லத்தின் சோகத்தை சொல்கிறது. காலடி தடத்தை மோப்பம் பிடிப்பது போல பொருத்தமான படம். படக்கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  46. “மாமா இருக்கிற வரை அவருக்கும் சேர்த்துக்கலை.. குடும்பத்துக்கும் சேர்த்துக்கலை.. இப்போ பாருப்பா.. விதவை பென்ஷனுக்கு மனுப் போடுற நிலைமையிலே இருக்கேன்” – சொல்லும் போது அவர் கைகூப்பிய காட்சி முள்ளாய் உறுத்தியது.//

    காமராஜர் உறவினர் சொன்னது போல கக்கன் அவர்கள் உறவினர் சொன்னதையும் அவர்களையும் படத்தோடு பதிவு செய்து இருக்கிறேன். அவர்கள்தான் கக்கன் அவர்கள் நினைவு இடத்தை கூட்டி பெருக்கி கொண்டு இருக்கிறார்.

    நேர்மையோடு வாழ்ந்து மறைந்த தலைவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கக்கன் மகன் பற்றி ஒரு செய்தி இன்றும் படத்துடன் உலவுகிறது, அவர் மன நல ஆஸ்பத்திரியில் இருக்கிறார் என்று... உண்மையோ, பொய்யோ..

      நீக்கு
  47. பொக்கிஷபகிர்வு அருமை. மாயா ஓவியம் அருமை. நடிகை சரோஜாதேவியை நினைவு படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  எனக்கும் அவர் சாயல்தான் தெரிந்தது!  நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  48. சில நேரங்களில் சில தர்ம சங்கடங்கள்... நம் கைமீறி நிகழ்வன! News Room பகிர்வுக்கு நன்றி. கவிதை உருக்கம். போர்க்கால படங்கள் மனதை பதற வைக்கின்றன. பெருந்தலைவர் மருமகளுக்கு ஆவன செய்த அரசும், அவர்களது கவனத்திற்கு எடுத்துச் சென்றவரும் பாராட்டுக்குரியவர்கள். தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!