செவ்வாய், 30 மே, 2023

சிறுகதை (மொழிபெயர்ப்பு) : கொட்டாரத்தில் சங்குண்ணி - JKC

 

 

கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய

ஐதீக மாலை என்ற தொகுப்பிலிருந்து ஒரு கதை

மலையாளத்தில் இருந்து மொழிபெயர்ப்பு - JKC

 

ஆழ்வாஞ்சேரி தம்புரான்களும் மங்கலத்து சங்கரனும். 

 

ஆழ்வாஞ்சேரி தம்புரான்களுடைய இல்லத்திற்கு சமீபம் மங்கலத்து என்ற ஒரு நாயர் வீடு இருந்தது. அந்த வீட்டில் சங்கரன் நாயர் என்ற ஒரு நாயர் இருந்தான். அவனுடைய வேலை  ஆழ்வாஞ்சேரி வீட்டு மாடு கன்றுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு சென்று மாலையில் திரும்பக் கொண்டு வந்து சேர்ப்பது. 

ஆழ்வாஞ்சேரி வீட்டில் நிறைய மாடுகள் இருந்தன.  காலையில் மேய்ச்சலுக்குக் கொண்டு போகும்போது சில மாடுகள் அடங்காமல் வெவ்வேறு திசைகளில் செல்லும். அவற்றை அடக்க சங்கரன் பாடு படுவான். சத்தம்  போட்டும் அடங்காத ஒரு பசுவை சங்கரன் தடியால் ஒரு அடி அடித்தான். அடி  ஏதோ மர்ம ஸ்தானத்தில் பட்டு பசு கீழே விழுந்து செத்து விட்டது. சங்கரன் பசுவிற்கு எந்த இடத்தில அடி விழுந்தது என்பதை நோக்கிக் கொண்டான்.  பசுவானாலும் காளையானாலும் கட்டளைக்குக் கீழ்ப்படியாத அந்த மாட்டின் அந்த மர்ம ஸ்தானத்தில் தடியால் ஒரு அடி அடிப்பான். மாடு கீழே விழுந்து இறந்து விடும். அப்படி சிறிது காலம் சென்றபின் மாடுகளுடைய எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. சங்கரனுடைய வேலையும் சுலபமாகி விட்டது. 

ஒரு நாள் தம்புரான்கள் தங்களுடைய மாடுகள் எப்படி இருக்கின்ற்ன என்று காணவேண்டி தொழுவத்தில் வந்து பார்த்தனர். தொழுவம் பாதி காலியாக இருந்தது. சில பசுக்கள் இருந்தன. அவையும் மிகவும் மெலிந்து இறக்கும் தருவாயில் உள்ளது போல் இருந்தன. தம்புரான்கள் சங்கரனை விளித்து பசுக்கள் எல்லாம் எங்கே? என்று கேட்டனர். 

சங்கரன் “மாடுகள் ஆனாலும் சொல்வதைச் செய்ய வேண்டும். நான் சொல்வதை அவைகள் கேட்கவில்லை. அப்படித்தான் தம்புரான்களே.” 

தம்புரான் “நீ என்ன சொல்கிறாய்? எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நம்முடைய மாடுகள் எங்கே?” 

சங்கரன் “அவைகள் எல்லாம் அதிகப்பிரசங்கிகளாய் இருந்தன. சொல்வதைக் கேட்கவில்லை, செய்யவில்லை." 

தம்புரான்: “எல்லாம் சரி, அவை இப்போது எங்கே?" 

சங்கரன்: “அவை எல்லாம் செத்துவிட்டன”. 

தம்புரான்: “ஐயோ அது எப்படி?" 

சங்கரன் : “சொன்னால் சொன்னபடி கேட்கவில்லை என்று நான் ஒரு அடி கொடுத்தேன். அடி கொண்டு அவை எல்லாம் செத்து விட்டன. திமிர் பிடித்தவை, அவை நமக்கு வேண்டாம். போகட்டும்” 

தம்புரான்: “ஐயோ மஹா பாபி நீ என்ன காரியமடா செய்துவிட்டாய். முதல் போனது போகட்டும். நீ மஹா பாபம் எல்லாம் மூட்டை கட்டி வைத்திருக்கிறாய். இதில் ஒரு பாகம் நம்முடைய தரவாட்டிற்கும் தீராப்பழி உண்டாக்குமே. நீ எத்தனை காலம் நரகத்தில் உழன்றால் இந்த பாபம் எல்லாம் தீரும். தற்போது மிக்க சிக்கலாகி விட்டதே!” 

சங்கரன்: “ஐயோ அதை ஆலோசிக்கவில்லை. இதெல்லாம் எனக்குத் தெரியவும் தெரியாதே. பாவம் என்றால் என்ன? தாங்கள் பாவம், நரகம் என்றெல்லாம் சொல்கிறீர்கள். புரியவில்லை.” 

சங்கரன் ஒரு மூடன் என்று சொல்லத் தேவை இல்லை. அவன் பாபம், புண்ணியம், சொர்க்கம், நரகம் என்பதைக் கேட்டதேயில்லை. 

தம்புரான்கள் அவனுக்கு இந்தக் காரியங்கள் எல்லாம் விரிவாக எடுத்துக் கூறினர். அவ்வாறு நரகத்தையும், நரகத்தில் அனுபவிக்கும் கொடுமைகளைப் பற்றியும் விவரமாக கேட்டறிந்த சங்கரன் பயத்தால் அழத் துடங்கினான். அவன் மூடனாக இருந்தாலும் தம்புரான்கள் பேரில் பக்தியும் விசுவாசமும் உள்ளவன். அவர்கள் கூறுவதை நம்புபவன். 

ஆகவே அவன் அழுதுகொண்டே “நான் அறிவில்லாதவன். இப்படிச் செய்துவிட்டேன். இந்த மஹா பாபம் தீர நான் என்ன செய்ய வேண்டும்? அதையும் தாங்கள் சொல்ல வேண்டும்.” என்று கூறினான். 

தம்புரான்: “இந்தப் பாபம் தீர கங்கா ஸ்நானம் அல்லாது வேறு ஒரு வழியும் இல்லை” 

சங்கரன்: “அப்படியானால் நான் இப்போதே காசிக்குப் புறப்படுகிறேன். இந்த பாபம் தீராமல் நான் வேறு எந்தக் காரியமும் செய்யமாட்டேன்.” இவ்வாறு கூறிவிட்டு சங்கரன் நாயர் தம்புரான்களைத் தொழுது காசிக்கு யாத்திரை புறப்பட்டான்.

 ஒரு நாள் தேவி பார்வதி காசி விஸ்வநாதரோடு “பகவானே ! கங்கா ஸ்நானம் செய்பவர்கள் எல்லோரும் பாபம் தீர்ந்து மோட்சத்தை அடைவார்கள் என்றல்லவா சொல்லப்படுகிறது. எல்லா தரம் ஆட்களும் இங்கு வந்து கங்கா ஸ்நானம் செய்கின்றனர். இவர்கள் எல்லோருக்கும் மோட்சம் கிடைக்குமா?” 

பகவான்: “அப்படி ஒன்றுமில்லை. பக்தியும் விசுவாசமும் தான் பிரதானம். அவை இல்லாமல் மோட்சப் பிராப்தி இல்லை. அப்படி உள்ளவர் இந்தக் காலத்தில் மிகவும் சுருக்கம். இவை இல்லாது கங்கா ஸ்நானம் செய்வது கொண்டு ஒரு பிரயோஜனமும் இல்லை. நாளை உனக்கு இதைக் காட்டுகிறேன்." 

இந்த உரையாடல் நடந்த அடுத்த நாள் காலையில் நம்முடைய சங்கரன் நாயர் காசிக்கு வந்து சேர்ந்தான். அப்போது நிறைய ஆட்கள் ஸ்நானம் செய்து கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் சங்கரனும் ஸ்நானம் செய்யத் தொடங்கினான். 


பகவான் விசுவநாதர் ஒரு கிழ பிராமணன் வேடம் பூண்டு, தேவியும் கிழ பிராமணத்தியாக வேடம் பூண்டு கங்கைக் கரைக்கு வந்தனர். ஸ்நானம் செய்ய கங்கையில் இறங்கும்போது பிராமணன் தடுமாறி கால் வழுக்கி கங்கையில் வீழ்ந்தான். அவனுக்கு நீந்தத் தெரியாது. அப்படி கங்கையில் தத்தளிக்கும் போது பிராமணத்தி சத்தம் போட்டு ஆட்களை விளித்தாள். அவர்களிடம் அவள் “பிராமணரைக் காப்பாற்றுங்கள். பாபம் முழுவதும் தொலையாத யாரேனும் அவரை தொட்டால் அவருடைய உயிர் தங்காது. ஆகவே பாபம் முழுதும் தீர்ந்தவர் பிராமணரைக் கரை ஏற்றவேண்டும். அப்படிப்பட்டவர் முன் வரவேண்டும்.” 

இதைக் கேட்ட எல்லோரும்  தயங்கினர்.

அப்போது நம்முடைய சங்கரன் “கங்கா ஸ்நானம் செய்தால் சகல பாவங்களும் தீரும் என்றல்லவா தம்புரான் சொன்னது. தற்போது கங்கையில் மூழ்கி எழுந்ததால் என்னுடைய பாபங்கள் எல்லாம் இல்லாதாகிவிட்டன.” என்று கூறிக்கொண்டு மூழ்கிக் கொண்டிருக்கும் பிராமணரைக் காப்பாற்றினான். கிழப் பிராமணனும் பிராமணத்தியும் நன்றி கூறி சென்றனர். 

பகவான் பார்வதியோடு “இன்று கங்கையில் ஸ்நானம் செய்தவர்களில் என்னைக் கரையேற்றிய ஒருவனுக்கு மாத்திரம் மோட்சம் உண்டு. அவனுடைய விசுவாசம் நீ பார்த்தாயல்லவா?” என்று அருளுகையும் தேவி அதை ஆமோதிக்கவும் செய்தாள்.  

பூர்ண விசுவாசத்துடன், பூர்ண பக்தியுடன் கங்கா ஸ்நானம் செய்து விசுவநாதனை தரிசித்து, அதிலும் சிறப்பாக உலக நாயகனான பகவானின் கைகளைத் தொடும் பாக்கியம் கிடைத்த சங்கரனுக்கு மோட்சம் கிடைக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. 

அதன் பின் சங்கரன் காசியிலேயே தங்கி பகவத் சேவையில் ஈடுபட்டான். 

சங்கரன் காசிக்குப் போனபின் ஆழ்வாஞ்சேரி மனையில் சந்தான பாக்கியம் குறையத் தொடங்கியது. ஆகவே காரணம் அறிய வேண்டி தம்புரான்கள் ஆள் அனுப்பி பாழூர் படிப்புறையில் ப்ரச்னம் வைத்துப் பார்த்ததில், பசுவதை செய்தது சங்கரன் ஆனாலும் தம்புரான்கள் அடிக்கடி பசுக்களைப் பார்க்காததால் அவன் அப்படி செய்தான் எனவும், ஆகவே அவர்களுக்கும் பசு வதை குற்றத்தில் பங்குண்டு என்றும் அது குடும்பத்தைப் பாதிக்கிறது என்றும் தெரிய வந்தது. 

பரிகாரம் என்ற நிலையில், ஆண்டுதோறும் ஏழரை முறி பரம்பில் பயறு விதைக்கவேண்டும். பின்னர் பயறு விளைந்து பூவும் காயும் நிறைந்து நிற்கும் சமயத்தில் வேலி திறந்து மாடுகளை மேய விடவேண்டும். அப்படிச் செய்தால் தோஷம் எல்லாம் நீங்கி சுப பலன் கிடைக்கும்.” என்று பிரவசனம் கிடைத்தது. 

இவ்விதிப் பிரகாரம் மூன்று வருடம் சென்றபின் மனையில் சந்தான பாக்கியம், மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்து நின்றன.  

—--------------------------------------------------------------------------------------------------------------------------- 

இதையும் பாருங்கள்.  சுட்டி யோவான் 8

 

13 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும்.

    காலையிலேயே பசுவதை கதையா?

    பதிலளிநீக்கு
  2. எண்ணம்போல்தான் வாழ்வு.

    விசுவாசம் பக்தி இருந்தால்தான் எதுவுமே என்பதை கதை சொல்கிறது. வித்தியாசமான கதை

    பதிலளிநீக்கு
  3. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. கதை பக்தியும் விசுவாசமும் தான் பிரதானம் என்பதை சொல்கிரது. அருமை.
    பொறுமையும், நம்பிக்கையும் வேண்டும் இறைவனிடம்.

    //பயறு விளைந்து பூவும் காயும் நிறைந்து நிற்கும் சமயத்தில் வேலி திறந்து மாடுகளை மேய விடவேண்டும். //

    நல்ல பரிகாரம்.

    பதிலளிநீக்கு
  6. கதை சுவாரஸ்யமாக இருந்தது

    பதிலளிநீக்கு
  7. பொதுவான நம்பிக்கைகள், இப்படியான கதைகள், புராணங்களுக்கு அப்பாற்பட்டு இந்தக் கதையின் மூலம் தெரியவருவது....தத்துவம், இறைவனைப் பற்றி இறை சக்தியைப் பற்றிப் பேசுவது அறிந்துகொள்வது தத்துவார்த்த ஆழத்தைப் பேசுவது, ஆராய்ச்சி என்பதை எல்லாம் விட ஆத்மார்த்த நம்பிக்கையே சிறந்தது. கேள்விகள் எழுந்தால் அறிவு என்பதாகிவிடும்....கேள்விகள் கேட்காத நம்பிக்கையே முக்கியம் என்பதான கருத்து.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வி கேட்காத நம்பிக்கை கொள்வது தவறில்லை. ஆனால் அது யாரிடம் என்பது தான் முக்கியம். கடவுளிடம் எந்த கேள்வி கேட்டாலும் பதில் கிடைக்காது. சில சகுனங்களை பதிலாக எடுத்துக்கொண்டு திருப்தி அடைய வேண்டியது தான்.

      அதே சமயம் பல நம்பிக்கைகளும் கேள்வி கேட்கப்படாமல் இருந்ததால் எதிர்மறை விளைவுகள் ஏற்படுத்துவதும் உண்மை என்பதையும் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

      Jayakumar​​

      நீக்கு
    2. ஏற்கிறேன். அண்ணா எனக்கும் கேள்விகள் எழுவதுண்டு....இது கதைக்கான கருத்து.!!!!!

      கீதா

      நீக்கு
  8. கதை இறை நம்பிக்கையும் பக்தியும் விசுவாசமும் தான் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  9. நல்ல கதை. நம்பிக்கை தானே எல்லாம்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    கதை நன்றாக உள்ளது. பிராயசித்தங்களினால் பலன் உண்டு என்ற நம்பிக்கை சமயத்தில் வீண் போகாது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!